10 March 2017

மசினகுடி – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மசினகுடி – கொஞ்சமாக சூறையாடப்பட்ட வனப்பகுதி ! ஊட்டியை மலைகளின் அரசி என்பார்கள். மசினகுடி அரசியின் தங்கை. தமிழக – கர்நாடக – கேரள எல்லைப்பகுதியில் தமிழகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது மசினகுடி. இயற்கை, காடு, விலங்குகள் (குறிப்பாக யானை) – இவையெல்லாம் மசினகுடியின் சிறப்பம்சங்கள். சென்னையிலிருந்து தோராயமாக 600 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மசினகுடி.

கட்டுரையின் உள்ளே செல்வதற்கு முன் என்னுடன் பயணித்த, பயணிக்கப் போகிற, என் தளபதிகள் இருவரை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

ஜெய்ரமேஷ். மஹேந்திரா மோஜோவின் உரிமையாளர். பைக் ஓட்டுவதில் பேரார்வம் கொண்டவர். இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘அயர்ன் பட்’ எனப்படும் 24 மணிநேரத்தில் ஆயிரம் மைல்கள் பைக்கோட்டும் சாகஸத்தை நிகழ்த்திவிடும் முனைப்பில் இருக்கிறார்.

பிரகாஷ். யமஹா R15யின் உரிமையாளர். ஒப்பீட்டளவில் பைக் ஆர்வம் இல்லையென்றால் கூட சளைக்காமால் முன்னூறு சிசி மோஜோவுடன் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டக்கூடியவர். மாரத்தான், சைக்லிங், என பிற சாகசங்களில் அதிக ஈடுபாடுடையவர்.

குடியரசு தினத்திற்கு மறுநாள். முந்தைய பயணங்களை விட தொலைவு அதிகம் என்பதால் விடியும் வரை காத்திராமல் நள்ளிரவே கிளம்பிவிடலாம் என்று திட்டம். தயாராகி வெளியே வந்தபோது இரண்டு சாகசக்காரர்களும் R15யின் பெட்ரோல் டேங்கின் உள்ளே தலையை விட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். பெட்ரோல் டேங்க் சாவித்துவாரத்தில் ஏதோ கோளாறு, திறக்க முடியவில்லை. மாற்றுச்சாவியையும் முயன்று பார்த்தாயிற்று. பெட்ரோல் இல்லாமல் ட்ரிப் எப்படி ? ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் போராடியும் பலனில்லை. இருக்கிற பெட்ரோலில் இருநூறு கி.மீ. வரை ஓடும் என்றார் பிரகாஷ். சரி, அப்படியே உருட்டிக்கொண்டு போவோம். போகிற வழியில் ஏதாவது நெடுஞ்சாலை ஒர்க்ஷாப் கிடைக்கும். அங்கே சரி செய்துக்கொள்ளலாம் என்று ஏதோவொரு குருட்டு நம்பிக்கையில் கிளம்பினோம். பயணத்தின் துவக்கத்தில் இருக்கும் எந்த உற்சாகமும் இல்லை. வழியில் உள்ள கடைகளை எல்லாம் கழுகாக நோட்டமிட்டு, பஞ்சர் கடையில் தூங்கிக்கொண்டிருந்த ஹிந்திவாலாவை எழுப்பி கலவரப்படுத்தி, பெட்ரோல் பங்க் அண்ணாக்களிடமெல்லாம் ஆலோசனை கேட்டு எதுவும் பலனளிக்கவில்லை. 

அதிகாலை மூன்றரை மணி. மெதுவாக ஸ்ரீபெரும்புதூர் தாண்டியிருந்தோம். திட்டமிட்டபடி பயணம் தொடங்கியிருந்தால் எங்கள் மனநிலையே வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும். சாவித்துவார சிக்கலின் காரணமாக தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. அதிகபட்சம் ஆம்பூர் வரை செல்ல முடியும். பேசாமல் எங்கேயாவது ரூம் போட்டு தூங்கிவிட்டு, காலையில் நிதானமாக எழுந்து பயணத்தை தொடங்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். எதுவுமே வேலைக்காகவில்லை என்றால் ப்ளானை ஏற்காடுக்கு சுருக்கிக்கொள்ளலாம் என்று மனதிற்குள் ஒரு ரகசியத்திட்டம் போட்டு அதனை ஆறுதல் படுத்தி வைத்திருந்தேன். ஸ்ரீபெரும்புதூர் தாண்டி ஒரு பெரிய பெட்ரோல் பங்க். அங்கே பணிபுரிபவர்களிடம் கேட்டுப் பார்த்தோம். வழக்கம் போல பலனில்லை. வெறுப்புடன் பெட்ரோல் பங்க் வாயிலில் நின்று அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டிருந்தோம். கடுப்பில் இருந்த பிரகாஷ் சாவியை துவாரத்தில் விட்டு கோபமாக முறுக்கியிருக்கிறார். வெளியே எடுக்கும்போது சாவி மிகவும் பலவீனமாக இருந்தது. கை பட்டதும் பாதி சாவி உடைந்து கீழே விழுந்துவிட்டது. தூக்கிப் போடப்போன மீதிச்சாவியை சும்மா போட்டுப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, க்ளிக் !

ஸ்ரீபெரும்புதூர் பெட்ரோல் பங்க் வாசலில்...
பயணம் தொடங்கியது. ஆற்காடு, ஆம்பூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரை அணைத்தபடி கடந்து, மண்டியா, மைசூரு தாண்டி, மாலை மூன்று மணிக்கு குண்டுலுபேட்டை செக் போஸ்ட் வந்து சேர்ந்தோம். கடைசி ஸ்ட்ரெச் ! முப்பது கிலோ மீட்டரில் மசினகுடி. இடையில் பந்திப்பூர் வனப்பகுதி. 

கடைசி நேர பயணத்திட்ட மாற்றம், சாவித்துவார சர்ச்சை எல்லாம் தந்த மன உளைச்சலில் மசினகுடி பயணத்தைப் பற்றி மட்டும் எழுதவே கூடாது என்று நினைத்திருந்தேன். பந்திப்பூர் வனத்தில் கரடி ஒன்றைக் காணும் வரை, சிகூர் அருவி மற்றும் மோயர் பள்ளத்தாக்கின் பிரம்மாண்டத்தை காணும் வரை...

அடுத்த பகுதி: பந்திப்பூர் வனச்சாலை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: