Showing posts with label shop. Show all posts
Showing posts with label shop. Show all posts

9 July 2013

ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அது ஒரு மாலை நேரம். வெறுமனே மாலை நேரம் என்றெல்லாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. கார்மேகங்கள் சூழ்ந்து மழை பொழிவதற்காக காத்திருந்த மிக மிக ரம்மியமான மாலைப்பொழுது. அலுவலகத்தில் அரக்க பறக்க மின்னஞ்சலொன்றை தட்டச்சிக் கொண்டிருந்தேன். இதை மட்டும் அனுப்பி முடித்துவிட்டால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் முந்தானை முடிச்சு சீரியல் பார்க்கலாம், ஜொள்ளு வடிய வடிய சேட்டுக்கடை ஜிலேபி இரண்டை உள்ளே தள்ளலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக ரமாவின் தினசரி வசையருவியிலிருந்து தப்பிக்கலாம். “ஸ்லர்ப்” – அன்றைய தினத்தின் ஆறாவது டீயின் கடைசி மடக்கை குடித்தேன், கூடவே மின்னஞ்சலையும். ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வெளியேறத் தயாரானேன். ரிசப்ஷனில் பாலா தன்னுடைய கணினித்திரையில் எதையோ வெறித்துப்பார்த்தபடி இருந்தாள். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் மிரட்சியுடன் எழுந்து நின்றாள். நான் அவளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தப்பித்தவறி அவள்மீது பார்வை பட்டுவிட்டால் ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் படுத்தியெடுத்து விடுவாள் ராட்சசி. இருப்பினும் அவளைக் கடந்துவந்த பின், பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது.

Thanks: gapingvoid.com

பாலாவை காணத்தவறிய விழிகளின் மீதுள்ள கோபத்தை பைக்கின் கிக் ஸ்டார்ட்டர் மீது காண்பித்தேன். அது உறுமியபடி வேகமெடுத்தது. அதிகபட்சம் இரண்டு சிக்னல்களை கடந்திருக்க மாட்டேன், ஒரு கவிதைத்துளி என் மீது சிந்திய உணர்வு. அதெல்லாம் இருக்காது என்றெண்ணியபடியே வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். அடுத்ததடுத்து கவிதைத்துளிகள் என்னை சீண்டிக்கொண்டிருந்தன. சில நிமிடங்களில் வானிலிருந்து அதீத கவிதைகள் பொழிய ஆரம்பித்தன. ஆம், பெருமழை. அடடே முந்தானை முடிச்சு பார்க்க முடியாதே ! ம்ம்ம் பரவாயில்லை ரமாவிடம் கதை கேட்டுக்கொள்ளலாம். மொத்தமாக நனைந்து முடிவதற்குள் டீக்கடையின் ஓரமாக வண்டியை செலுத்திவிட்டு ஒதுங்கினேன்.

அது நாயர் டீக்கடை என்று சொன்னால் க்ளேஷேவாக இருக்கும். தாராளமாக நின்றால் ஐந்து பேர் நிற்கக்கூடிய அந்த டீக்கடையின் வெளிப்பகுதியில் மழையின் காரணமாக சுமார் இருபது பேர் நின்றுக்கொண்டிருந்தோம். அதாவது அடைந்திருந்தோம். நான்கைந்து ஐ.டி. பணியாளர்கள், ஒருவன் கையில் டீ கிளாஸும் ஒருத்தியின் விரலிடுக்கில் கிங்ஸும் அகப்பட்டது. ஒரு தாத்தா அவருடன் அழைத்து வந்திருந்த சிறுமிக்கு ஜாம் பன் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அது அவரை சட்டை செய்யாமல் குர்குரே கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருந்தது. ஒருத்தி சுற்றியிருந்த காடா துணிக்கிடையே இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது. அவளுடைய ஸ்கூட்டி என்னுடைய ஸ்ப்ளெண்டருடன் சேர்ந்து நனைந்துக்கொண்டிருந்தது. எனக்கு எதிரில் ஒருத்தன் வாழைக்காய் பஜ்ஜியை தினத்தந்தியில் வைத்து பிதுக்கி கொடுமைபடுத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்த எனக்கு சற்றே அயர்ச்சியான காரணத்தினால் “மாஸ்டர்... ஒரு டீ...!” என்று அலறினேன்.

பட உதவி: கூகிள்
டீ சொல்லிவிட்டு சட்டென திரும்பியபோது தான் அந்த காக்கி நிற வஸ்து என் கண்களில் பட்டது. அதற்கு கஜூரா என்று பெயர். முதலில் கஜூராவின் குணநலன்களை ஒப்பித்துவிடுகிறேன். கஜூரா கிட்டத்தட்ட சதுர வடிவத்தில் இருக்கும், சமயத்தில் மாஸ்டரின் கைவண்ணத்தை பொறுத்து வடிவம் மாறுபடும். போண்டாவை போலவே கஜூராவும் ஒரு இனிப்பு பண்டம். எனினும் போண்டாவைக் காட்டிலும் திடமானது. ஒரு கஜூராவை கையில் எடுத்தால் சாப்பிட்டு முடிக்க பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். நிற்க. என்னைப் போன்ற திறன் படைத்தவர்கள் இரண்டு நிமிடங்களிலேயே கூட தின்று முடிக்கலாம். என்னுடைய நினைவுக்குவியலிலிருந்து அரைக்கால் சட்டை அணிந்திருந்த நான் தேன்மொழியிடமிருந்து கஜூராவை அபகரித்துத் தின்ற காட்சியை “சார்... டீ...” என்ற பாழாய்ப்போன மாஸ்டரின் குரல் கலைத்து தொலைத்தது.

ஒரு கையில் டீ கிளாஸை வாங்கியபடி மறு கையில் கஜூரா ஒன்றினை எடுத்து வாயில் வைத்தேன். அய்யுய்யோ ! நான் கஜூராவையா சாப்பிடுறேன்... கடவுளையே சாப்பிடுறேன். நான் கடைசியாக கஜூரா சாப்பிட்டது எப்போது என்று நினைவில்லை. ஆனால் நிச்சயமாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். கஜூரா சாப்பிடுவதில் ஒரு மிகப்பெரிய நன்மை உள்ளது. வயிறு துரிதமாக நிரம்பிவிடும். கஜூராவை கடித்தபடியே உலகத்தைப் பற்றி சிந்திக்க துவங்குகிறேன். உலகம் ஏன் கஜூராவைப் போல சதுரமாக அல்லாமல் போண்டாவை போல உருண்டையாக இருக்கிறது. ஆனால் அத்தகைய உலகத்தில் வாழக்கூடிய வாழ்க்கை மட்டும் போண்டாவை போல மென்மையாக அல்லாமல் கஜுராவைப் போல கடினமானதாக இருக்கிறதே ! போண்டாவின் சுவை போண்டாவில் இல்லை, அதன் இடையிடையே தென்படும் மிளகில் தான் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அதுபோலத்தான் கஜூராவும். கஜூராவின் சுவை கஜூராவில் இல்லை, அதனை மெல்லும் வாயில்தான் இருக்கிறது. அடுத்ததடுத்து கஜூராக்களை லபக்கிக்கொண்டிருந்தேன். கடைசியாக ஒரேயொரு கஜூரா மட்டும் பலகார பலகையில் எஞ்சியிருந்தது.

பட உதவி: கூகிள்
ஒரு புதிய மனிதர் டீக்கடைக்குள் நுழைகிறார். உடைந்து விழுந்து விடுவாரோ என்று அச்சப்படுகின்ற வகையில் ஒல்லியான தேகம், வழுக்குப்பாறை போன்றதொரு சொட்டைத்தலை, தன்னுடைய அளவிற்கு பொருந்தாத முழுக்கை சட்டை, பாலைவனச்சோலை காலத்து பேண்ட், கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை. கணநேரம் கஜூராவை மறந்து கண்ணசைக்காமல் அந்த மனிதரை பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன வாங்க வந்திருப்பார் ? மாஸ்டரிடம் ஒற்றை விரலைக்காட்டி சைகையில் ஏதோ சொன்னார். ரெகுலர் கஷ்டமராக இருக்கக்கூடும். பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அது புகையை கக்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவர் சைகையில் குறிப்பிட்ட பானம் அவருடைய கைகளுக்கு வந்தது. அது டீ ! டீயை ஒரு மிடறு குடித்துவிட்டு சிகரெட்டை இழுத்தார். அதுவே சில நிமிடங்களுக்கு தொடர்ந்தன. சிகரெட் தன்னுடைய கடைசி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தது. திடீரென ஒரு சுதாரிப்பு. நான் ஏன் அவரையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் ? உண்மையில் எனக்கு என்ன பிரச்சனை ? ஏதோவொரு உண்மை உரைக்க அவர் மீதிருந்து என்னுடைய பார்வையை விலக்கிக்கொண்டேன். கடைசி கஜூராவை எடுக்க கையை நீட்டினேன். என்னை முந்திய ஒரு கை அதனை அபகரித்துவிட்டது. அது அவருடைய கை. அவருக்கும் கஜூரா பிடிக்கும் போலிருக்கிறது. வந்த கோபத்திற்கு அவரை நாலு மிதி மிதிக்கவேண்டும் போல தோன்றியது. எனக்கொரு தேன்மொழி இருந்தது போல அவருக்கொரு கனிமொழி இருந்திருக்கலாம் என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மழை குறைந்திருந்தது.

சாலையில் வாகனங்கள் நகர ஆரம்பிக்கின்றன. நான் என்னுடைய நந்தவனத்தேரை நகர்த்தி அதன் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முற்படுகிறேன். அதற்குள் பாலைவனச்சோலை கடைசி கஜூராவை விழுங்கிவிட்டு அவருடைய வாகனத்தை எடுக்கிறார். அவரைக் கண்டதும் எனக்குள் சிறு அதிர்ச்சி. அவர் என்னைக்கண்டு லேசாக புன்னகைக்கிறார். கஜூராவை அபகரித்ததற்காக மன்னிப்பு கேட்கும் புன்னகை. புது உற்சாகத்துடன் வண்டியை கிளப்பி வேகமெடுக்கிறேன். அவரும் வண்டியை எடுத்துக்கொண்டு எனக்கு நேரெதிர் திசையை நோக்கி தன்னுடைய பயணத்தை துவங்குகிறார். சிறு தூறலுக்கிடையே தொடர்கிறது எங்கள் பயணம்... சாலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் கூட !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 April 2013

பிரபா ஒயின்ஷாப் - 15042013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திரையரங்கங்களில் ஒளிபரப்பப்படும் புகையிலை விழிப்புணர்வு செய்திப்படத்தை பற்றி எழுதியிருந்தேன். அது உண்மையில் பார்க்க சகிக்கவில்லை, உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் என்கிற ரீதியில் சில நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். உண்மையில் அப்படி யாரும் மின்னஞ்சல் அனுப்பவில்லை என்றாலும் எழுதிக்கொண்டிருக்கும் பத்தியின் தொடுப்புக்காக அப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. முதலில், சிகரெட் பாக்கெட்டின் மீது புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று அச்சடித்தார்கள். அப்படி போட்டால் மட்டும் புகை பிடிப்பவர்கள் உணர்ந்து நிறுத்திவிடுவார்களா என்று எகத்தாளம் பேசினார்கள். அடுத்தது நெஞ்சாங்கூட்டின் நெகடிவ் படத்தை சிகரெட் அட்டையில் பொறித்தார்கள். அதுவும் எடுபடவில்லை. இப்போது முகேஷ் ஹரானே புகை பிடிப்பவர்களை அதிர வைக்கிறார். நண்பர்கள் குழுவாக திரையரங்கிற்கு வந்திருக்கும் பட்சத்தில் புகை பிடிக்கும் பழக்கமுள்ள நண்பனை மற்றவர்கள் உனக்காக தான்டா போடுறாங்க என்று சொல்லி கிண்டலடிக்கிறார்கள். புகை பிடிப்பவர்களும் கூட மனதளவில் மிரளத்தான் செய்கிறார்கள். அது நல்ல அறிகுறி தானே ! நூற்றில் ஒருவர் கைவிட்டால் கூட நல்ல விஷயம். அதற்காக மற்ற தொண்ணூற்றி ஒன்பது பேரும் அந்த செய்திப்படத்தை சகித்துக்கொள்ளலாம்.

அண்ணா சாலை எல்.ஐ.சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தேவி திரையரங்கம் நோக்கி நடந்துக்கொண்டிருந்த போது, ஒரு மூதாட்டி சாலையை கடப்பதற்காக காத்திருந்தார். அடியேனைக் கண்டதும் முகம் மலர்ந்தார். மறுக்க முடியுமா ? தமிழர்களையும் ஆயா செண்டிமெண்ட்டையும் அவ்வளவு எளிதாக பிரித்துவிட முடியாது. ஒளவையார் காலத்திலிருந்து மயக்கம் என்ன தனுஷ் வரைக்கும் அப்படித்தான். அந்த நேரம் பார்த்து இரண்டு இள வயது பெண்கள் எங்களை கடந்து சென்றார்கள். அந்த சுமார் மூஞ்சிகளை இம்ப்ரஸ் செய்வதற்கு நான் ஆயாவை பயன்படுத்துவதாக அவர்கள் நினைத்து கொள்ளக்கூடும் என்பது அச்சுறுத்தலாக இருந்தது. அதைவிட எனக்கு தனியாக சாலையை கடப்பதில் எப்போதுமே ஒரு மிரட்சி உண்டு. சமயங்களில் வாகன ஒட்டிகளையும் மிரள வைத்துவிடுவேன். கிண்டி தாமரை - ஒலிம்பியா சந்திப்பிற்கு வார நாட்களில் மதியம் ஒரு மணி வாக்கில் வந்தால், நான் யாரிடமாவது சாவுகிராக்கி என்று திட்டு வாங்கும் காட்சியை ரசிக்கலாம். ஆயாவோடு கடக்க இருப்பது அண்ணா சாலை, அதுவும் காலை பதினோரு மணி. கடைசியில் ஆயாவின் துணையோடு பத்திரமாக சாலையை கடந்துவிட்டேன். அந்த ஆயாவிற்கு என்னுடைய நன்றிகள் !

சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தையல் கடைக்கு ஏற்கனவே சிலமுறை சென்றிருக்கிறேன். அங்கு பணிபுரியும் தையற்காரரை எங்கேயோ பார்த்த மாதிரி ஞாபகம் உறுத்திக்கொண்டே இருந்தது. மேஜையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவருடைய விசிட்டிங் கார்டில் தையல் துறையில் குறிப்பாக சினிமா கலைஞர்களுக்கு தைப்பதில் இருபது வருட அனுபவம் உள்ளவர் என்று தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டதும் பொறி தட்டியது. நீங்க சினிமாவுல நடிச்சிருக்கீங்க தானே சட்டென்று கேட்டுவிட்டேன். ஆமாம் நிறைய படத்துல நடிச்சிருக்கேன்... நீ எந்த படத்துல பாத்த’ன்னு கேட்டார். கள்ள பருந்து என்கிற அந்த கேடு கெட்ட படத்தின் பெயரை தயங்கியபடியே சொன்னேன். சிரித்தார். அந்த மாதிரி படங்கள் கருப்பு பணத்தை வெளுப்பதற்காக, வேண்டுமென்றே ஓடக்கூடாது என்கிற நோக்கத்தோடு எடுக்கப்படுகின்றன என்று விவரித்தார். அப்படியும் எங்களை மாதிரி ஆட்கள் பார்க்கிறார்களே என்று சிரித்து வைத்தேன். நீ ஸ்டில்லை பார்த்து ஏமாந்திருப்ப என்றதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. வீராசாமி தொடங்கி லத்திகா, மேதை என்று அடுத்தவாரம் பார்க்கவிருக்கிற திருமதி தமிழ் வரைக்குமான என்னுடைய வரலாற்றைச் சொன்னதும் வெலவெலத்துப் போய்விட்டார். அப்புறம் ஆசுவாசமாகி அந்தமாதிரி படமெல்லாம் நீ நினைக்கிற மாதிரி இல்லை சிஷ்யா... சுத்தி நூறு பேரு பார்த்திட்டு இருப்பாங்க... தப்பான எண்ணம் எதுவும் தோணாது என்று விளக்கினார். நீ கூட சீன் பட ஹீரோ மாதிரி தான் இருக்குற. சான்ஸ் வாங்கித்தர்றேன். நடிக்கிறியா ? என்றதும் கள்ளபருந்தாக மாறி அங்கிருந்து பறந்தேன்.

நான் டைம் மெஷினை கண்டுபிடித்துவிட்டேன் - என்று ஈரானிய விஞ்ஞானி அலி ரசெக்கி அறிவித்திருக்கும் செய்தி எனக்கு கொஞ்சம் ஆர்வத்தீயை கிளப்பத்தான் செய்தது. அதாவது என்னுடைய எண்ணத்தில் டைம் மெஷின் என்பது லிஃப்ட் மாதிரியான ஒரு அறை. அதற்குள் சென்று அமர்ந்துக்கொண்டு பட்டனை தட்டினால் நாம் விரும்பிய வருடத்திற்கு நேரே சென்றுவிடலாம். அதாவது இறந்தகாலத்திற்கு சென்று ஏவாளுக்கு இன்னொரு ஆப்ஷன் கொடுக்கவோ, மன்னர்களிடம் சென்று நீங்கள் ஒரே அம்பில் சிங்கம், மான், கரடி, காட்டுப்பன்றியை கொல்வீர்கள் என்று கப்ஸா விட்டு பரிசில் பெறவோ செய்யலாம். அல்லது எதிர்காலத்திற்கு சென்று ரஜினி ஐஸ்வர்யா ராய் மகளைப் பார்த்ததும் பாடி ஸ்டெடியா இருந்துச்சு; மைண்ட் ஆஃப் ஆயிடுச்சு என்று பேட்டி கொடுப்பதையோ, ஜூன் மாதத்திற்கு மேல் தமிழகத்தில் மின்தடை இருக்காது என்று அப்போதைய முதலமைச்சர் குஷ்பூ அறிக்கை விடுவதையோ கண்டு களிக்கலாம். நாம் பார்த்த சினிமாக்களில் டைம் மெஷின் என்றாலே அப்படித்தானே காட்டுகிறார்கள். ஆனால் ஈரானிய விஞ்ஞானி என்ன சொல்கிறார் என்றால் அவர் உருவாக்கிய மெஷினில் அமர்ந்து ஒரு பட்டனை தட்டினால் அது நம்முடைய எதிர்காலத்தை கிட்டத்தட்ட துல்லியமாக கணித்து ஒரு தாளில் அச்சிட்டு கொடுக்குமாம். இதைக் கேட்டதும் நம்ம கன் பவுடர் ஷண்முகராஜன் என்ன சொல்றாரு தெரியுமா ? - “நீ டோண்ட் வொரி பண்ணிக்காத... நான் சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியக்காரன் கிட்டயே கேட்டுக்குறேன்...”

கிழக்கத்திய கழிவறையில் கக்கா போவது எப்படி ?, லுங்கி கட்டுவது எப்படி ? என்றெல்லாம் யூடியூபில் பார்த்திருக்கிறோம். அந்த மாதிரியெல்லாம் நமக்கு நடைமுறை வாழ்க்கையில் பயன்படாத, ஆனால் தகவல் உள்ளடக்கிய காணொளி - விண்வெளியில் பல் தேய்ப்பது எப்படி ? இவருடைய விண்வெளி சம்பந்தப்பட்ட மற்ற காணொளிகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.


படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment