Showing posts with label corporate. Show all posts
Showing posts with label corporate. Show all posts

2 November 2016

தயிர் சாதம் சாப்பிடுவது எப்படி ?

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நானொரு மாமிச பட்சினி. சிறு வயதிலிருந்தே எனக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாது. குறிப்பாக தயிர் என்று யாராவது சொல்லிவிட்டால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கமாட்டேன். ஆனால் நாம் எதை மனதின் அடியாழத்திலிருந்து வெறுக்கிறோமோ அதுவே நம் கண் முன்னே அடிக்கடி வந்து போவது தானே வாழ்க்கையின் வடிவமைப்பு !

எனக்குத் தெரிந்த ஒருவர் (எதற்கு வம்பு ?) இருக்கிறார். சிவகாசிக்காரர் என்பதால் பால் சோறு விரும்பி. தயிர் சோறும் சாப்பிடுவார். அவர் தயிர் சோறு சாப்பிடுவதை பார்த்துவிட்டால் நமக்கு சோறு இறங்காது. சோற்றின் மீது தயிரை தலைகுப்புற தள்ளிவிடுவார். அதன்பிறகு அவருடைய உள்ளங்கையைக் கொண்டு தயிர் சோற்றை ஜென்ம விரோதியின் கழுத்தை நெரிக்கும் பாவனையில் அழுத்துவார். அதுவரை தனித்தனியாக இருந்த தயிரும் சோறும் தயிர் சோறாக அவருடைய ஆக்டோபஸ் விரலிடுக்குகள் வழியாக வெளியேறும் ! அதற்கு மேல் அந்தக்காட்சியை பார்க்க முடியாமல் நான் திரும்பிக்கொள்வேன்.

இது பரவாயில்லை. தனிப்பட்ட முறையில் சந்திக்கும் சிக்கல் என்பதால் நமக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடலாம். பொது இடத்தில் நடக்கும் கூத்துகள் நம்மை விடாமல் துரத்தி வந்து வன்புணர்வு செய்யும் ரகம். சென்ற மாதத்தில் ஒருநாள் மேனேஜர் ஒருவருக்கு மூட் வந்ததால் உருப்படிகளை புஹாரிக்கு அழைத்துச் சென்றிருந்தார். எல்லோரும் மெனுவை மேய்ந்து இதுவரை வாழ்நாளில் முகர்ந்து கூட பார்த்திராத வித்தியாச உணவுவகைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். எனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ஆந்திர நண்பர் சர்வரின் காதில் கிசுகிசுப்பாக ‘கர்ட் ரைஸ்’ இருக்கா ? என்று கேட்டார். எனக்கு வெலவெலத்துப் போய்விட்டது. அநேகமாக தமிழ்நாட்டில் புஹாரிக்கு சென்று யாருமே இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். புஹாரியின் நிறுவனருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் மின் சரடை கடித்து தற்கொலை செய்துகொள்வார். ஆந்திர நண்பரிடம் 'ஏங்க இப்படி ராவடித்தனம் பண்றீங்க' என்றால் வவுறு சரியில்லை என்கிறார். நல்லவேளையாக சர்வர் புஹாரியில் தயிர் சோறு நன்றாக இருக்காதென்று அவராகவே வேறு உணவை பரிந்துரைத்து என்னைத் தப்புவிக்கச் செய்தார்.

அலுவலகத்திற்கு வெளியே நடப்பது இப்படியென்றால் உள்ளே நடப்பது எல்லாம் நம்மை ரூம் போட்டு செய்யும் ரகம். கார்ப்பரேட் அலுவலகங்களைப் பொறுத்தவரையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஏதாவது மின்னஞ்சல் வரும். அதாவது வாட்டர் டிஸ்பென்ஸரில் கை கழுவாதீர்கள், வாஷ் பேஸினில் பப்பிள் கம் துப்பாதீர்கள் போன்ற மின்னஞ்சல்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒருமுறை, ஆண் ஊழியர்கள் யூரிணல் தாண்டி தெறிக்காமல் கவனமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மின்னஞ்சல் வந்தது. கூடவே, இந்த மின்னஞ்சல் ஆண் ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பியிருப்பதால் யாரும் சங்கடப்பட வேண்டாம் என்ற பின்குறிப்புடன் வந்தது. பின்குறிப்பை பார்த்ததும் தான் இன்னும் சங்கடமாக இருந்தது. தமிழ் சினிமாவில் வெளிவரும் மாஸ் படங்களை பார்த்து பார்த்து பழக்கப்பட்ட ஆசாமிகள் யாரோ தான் இப்படி தெறிக்க விட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். 

ஒழுங்கு நடவடிக்கை மின்னஞ்சல்கள் வரிசையில், 'பணிபுரியும் மேசையில் யாரும் உணவருந்த வேண்டாம்' என்று அவ்வப்போது வரும். மின்னஞ்சல் வந்து சில நாட்கள் வரை எல்லோரும் உத்தரவை ஒழுங்காக கடைபிடிப்பார்கள். அப்புறம் ஒருநாள் சாதாரணமாக எவ்வித குற்றவுணர்வுமின்றி இவ்விதியை மீறி பிள்ளையார் சுழி போடுவார் ஒருவர். இப்படி பி.சு போட்டு தொடங்கி வைப்பவர் பெரும்பாலும் மேனேஜராக இருப்பார். ஏனென்றால் மேனேஜர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து நேரடியாக குதித்து வந்தவர்கள். அவர்களுக்கென்று விதிகள் எல்லாம் இல்லை.

அடுத்த சில நாட்களில் பணிமேசையில் உணவருந்துவது சகஜமாகிவிடும். ஐம்பது மீட்டர் தூரத்திலிருக்கும் கேண்டீனுக்கு போய் சாப்பிடுவதில் சோம்பேறித்தனம். கேட்டால் ‘லைட் ஃபுட்’ வேண்டுமானால் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மின்னஞ்சலிலேயே போட்டிருக்கிறது என்று வியாக்கியானம் பேசுவார்கள். இந்த ‘லைட் ஃபுட்’ என்பதில் தயிர் சாதமும் சேர்த்தி.

பணிமேசையில் வைத்து தயிர் சாதம் சாப்பிடுவது ஒரு தனிக் கலை ! முதலில் அவுட்லுக்கில் ஒரு நியூ மெயில் விண்டோவை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும். தயிர் சாதத்திற்கும் அவுட்லுக்கிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். சில விஷயங்களை ஆராயக்கூடாது. அனுபவிக்க வேண்டும். மெயிலில் யாரையாவது யாரிடமாவது கோர்த்துவிடும் வகையில் நான்கைந்து புல்லட் பாயின்ட் கேள்விகள் கேட்க வேண்டும். ஸீஸீயில் டீம் லீடர், ப்ராஜெக்ட் மேனேஜர், மேனேஜர் தொடங்கி மேனேஜருடைய சித்தப்பா வரை வைக்க வேண்டும். நீங்கள் இந்த மெயிலை அனுப்பி கோர்த்து விடப்போகிற நபர் உங்கள் புறமுதுகிற்கு பின்னாலேயே அமர்ந்திருக்கலாம். அவரிடம் நேரிலேயே கேட்டுவிட்டால் உங்களுக்கு அடுத்த நிமிடமே வேண்டிய பதில் கிடைத்துவிடலாம். ஆனால் உங்களுக்கு உணவு செரிக்க வேண்டுமில்லையா ? அதனால் மேற்கூறியபடி மின்னஞ்சலை தயார் செய்துவிட்டு உங்கள் டப்பர்வேரை எடுக்கவும்.

ஒரு கையில் டப்பர்வேரையும் இன்னொரு கையில் ஸ்பூனையும் பிடித்துக்கொண்டு பிட்டுப்படம் பார்க்கும் பாவனையில் வெறிக்க வெறிக்க நீங்கள் தயார் செய்துவைத்த மின்னஞ்சலை பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டும். முக்கியமான விஷயம், நீங்கள் சாப்பிடும் போதும் வினோத சப்தங்களை எழுப்ப வேண்டும். அப்போதுதானே உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எரிச்சல் மூளும். முதலில் நீங்கள் உட்கொள்ளும் தயிர் சாதத்தை நாவிற்கும் மேலண்ணத்திற்கும் இடையே கசக்கி ‘பச்யேக்... பச்யேக்...’ என்று ஒலியெழுப்ப வேண்டும். உங்கள் வீட்டில் தயிர் சாதத்திற்கு சைட் டிஷ்ஷாக காராபூந்தி கொடுத்திருப்பார்கள். அதனை அள்ளி வாயில் போட்டு மெல்லும்போது ‘கருக்கு... முறுக்கு...’ என்று சத்தம் வரும். இப்படி நீங்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத ஏப்பம் ஒன்று வரும். அந்த சனியனை ஏன் கட்டுப்படுத்த வேண்டும். ‘ஏவ்வ்வ்வ்...’ !. அருகில் அமர்ந்திருப்பவர்கள் சாவட்டும். 

இப்படி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு திடீரென பணி சம்பந்தமான சந்தேகமொன்று எழும். கவலைப்பட வேண்டாம். ஒரு கவளம் தயிர் சாதத்தை எடுத்து வாயில் இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள். அதனை விழுங்கிவிடாமல் கவனமாக வாயில் அதக்கியபடி பக்கத்தில் உள்ள ஆசாமியிடம் உங்கள் சந்தேகத்தை கேட்டுவிடுங்கள். இந்த சாகசத்தை நிகழ்த்தும்போது உங்கள் வாயிலிருந்து சில எச்சில் பருக்கைகள் அந்த நபர்மீது சிதறக்கூடும். அதற்கெல்லாம் கலங்காமல் உங்கள் சந்தேகம் முற்றிலுமாக நிவர்த்தியாகும் வரை அவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். இப்போது உங்கள் டப்பர்வேரில் தயிர் சாதம் கிட்டத்தட்ட காலியாகியிருக்கும். ஆனால் டப்பாவில் கொஞ்சம் ஒட்டியிருக்கும் அல்லவா. அதனை ஸ்பூன் வைத்து, ‘வரட்டு, வரட்டு’ என்று பக்கத்து ஆளுக்கு பல் கூசும் வரையில் சுரண்டியெடுத்து ஸ்பூனை சப்ப வேண்டும். 

என்னது வாந்தி வருகிறதா ? கொஞ்சம் பொறுங்கள் பாஸ். இனிமேல் தான் ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது. சாப்பிட்டு முடித்தாயிற்று. வாட்டர் பாட்டிலில் உள்ள தாகஷமணியை எடுத்து ஒரு மிடறு உட்கொள்ள வேண்டும். விழுங்கி விடக்கூடாது. ‘குப்ளிக்... குப்ளிக்... குப்ளிக்...’ என்று சுமார் இரண்டு நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்கும் பாவனை காட்டி.......... குடித்துவிட 

உவ்வேக் ! உவ்வேக் !!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 July 2013

சாஃப்ட்வேர்க்காரன் சம்பளத்திற்கு எதிர்வினை !

அன்புள்ள வலைப்பூவிற்கு,


நான் பிழைப்பிற்காக தகவல் தொழில்நுட்ப துறையை அண்டியிருந்தாலும் கூட, இன்னமும் கலாசார ரீதியாக என்னுடைய சக பணியாளர்களுடன் ஒன்ற முடியாத நடுத்தர வர்க்க சாதாரணனாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். ஆறாயிரம் ரூபாய்க்கு கூலர்ஸ் வாங்குவது, இரண்டாயிரம் ரூபாய்க்கு சென்ட் பாட்டில் வாங்குவது என சில த.தொ பணியாளர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்த்து கடுகடுப்பானாலும் கூட இணையவெளியில் அதனை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவ்வாறு வெளிக்காட்டுவது மல்லாக்க படுத்துக்கொண்டு உமிழ்ந்துக் கொள்வதற்கு சமம் அல்லது நம்முடைய பதிவை தெரியாத்தனமாக மேனேஜர் படித்துவிட்டு “வொர்க் கல்ச்சருன்னா என்னன்னு தெரியுமாய்யா உனக்கு ? என்று லெக்ச்சர் எடுக்கக்கூடும் என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

அதையும் தாண்டி வா.மணிகண்டனுடைய சமீபத்திய பதிவை படித்ததும் ஒரு வயிற்றுக்கடுப்பு கிளம்பியது. கூடை வச்சிருக்குறவங்களுக்கெல்லாம் லைட்டு கொடுக்குறதில்லை என்பது போல பின்னூட்டப்பெட்டியை மூடி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கருத்து / எதிர்வினை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் வா.மணியின் பதிவை படிக்கும் பொது தரப்பு ஆட்கள், த.தொ பணியாளர்களை பார்த்து அய்யோ பாவம் என்று உச்சு கொட்டுவதற்குள் என்னுடைய கருத்தை பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

வா.மணியின் பதிவை நான் முழுமையாக எதிர்க்கவில்லை. பிள்ளைகள் பெற்ற ஒரு குடும்பத்தலைவராக அவர் அவருடைய கவலைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள சில சால்ஜாப்பு காரணங்களை படிக்கும்போது தான் எதைக்கொண்டு சிரிப்பது என்று தெரியவில்லை. தவிர, பிற துறைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் த.தொ ஆட்களை விட அதிகம் சம்பாதிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். த.தொ பணியாளர்களும் எல்லோரைப் போலவும் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மற்ற வேலைகளோடு ஒப்பிடும்போது த.தொ பணியாளர்கள் அதிகம் உழைக்கிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதை ஒப்புக்கொள்ள இயலாது.

அவருடைய சாஃப்ட்வேர்க்காரன் பற்றிய பதிவு – “என்னத்த சம்பாதிக்கிறோம் ? வேன் ஹியூசனில் சட்டை வாங்குவதற்கும், கே.எப்.சியில் கோழிக்கறி சாப்பிடுவதற்கும், பிள்ளைக்குட்டிகளை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்வதற்கே மொத்த பணமும் காலியாகிவிடுகிறது. ஆச்சு பார்த்தீங்களா ? மாசக்கடைசியில் நாங்களும் கடன் வாங்கித்தான் பொழப்பை ஓட்டுறோம். நாங்களும் உங்களை மாதிரி அன்றாடங்காய்ச்சிகள் தான் !” என்கிற ரீதியில் செல்கிறது.

மணிகண்டனின் பதிவுடைய முதல் சில பத்திகள் பொருளாதார வீழ்ச்சிக்கு பிந்தைய த.தொ பணியாளர்களின் வாழ்க்கையைப் பற்றி புலம்புகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் த.தொ ஆட்களின் சம்பளம் கணிசமாக குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால் திறமை உள்ளவர்கள் யாரும் தெருவுக்கு வந்துவிடுவதில்லை. “ஆடி” காரில் போய்க்கொண்டிருந்தவர்களை திடீரென அம்பாஸடருக்குள் அமர வைத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது இவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு, “என்னய்யா பெருசா காசை வாங்கிட்டோம் ? மிஞ்சி மிஞ்சிப்போனா பிச்சைக்காசு ஐம்பதாயிரம். அதை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா ?” என்று தொடர்கிறார்.

// ஐ.டி கம்பெனிகள் என்ன கரட்டடிபாளையத்திலும், வள்ளியாம்பாளையத்திலுமா இருக்கின்றன? பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை பன்னிரெண்டாயிரத்துக்கு குறைவாக வாடகைக்கு பிடிக்க முடிவதில்லை- அதுவும் கூட ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் இந்த வாடகையில் கிடைக்கும். //

பெருநகரங்களில் சொந்தவீடு இல்லாமல் தங்கி பணிபுரிவது என்பது சிரமமான விஷயம் தான், அதிலும் குடும்பம் குட்டியோடு இருப்பதென்றால் ரொம்ப கஷ்டம் தான். ஆனால் பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் அனைவருமே பன்னிரெண்டாயிரம் கொடுத்து தான் வசிக்கிறார்களா ? ஏன் ஆறாயிரம், எட்டாயிரத்திற்கெல்லாம் வாடகை வீடுகள் கிடைப்பதில்லையா ? நிச்சயமாக கிடைக்கும். ஆனால், பகட்டாக வாழ்ந்து பழக்கப்பட்ட நம் ஆட்கள் கொஞ்சம் விசாலமாக, கார் பார்க்கிங்குடன் கூடிய, பால்கனி வசதி கொண்ட போன்ற சில சொகுசுக்களை எதிர்பார்ப்பதால் பன்னிரெண்டாயிரம் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது. (வீட்டு வாடகையை பொறுத்தவரையில் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமே பொருளாதார வீழ்ச்சிக்கு முந்தய த.தொ சமுதாயம் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்). அப்புறம் பெட்ரோல் செலவு, இன்டர்நெட் செலவு (!!!), பிள்ளைகளின் படிப்புச் செலவு போன்ற சில நியாயமான காரணங்களை சொல்லியிருக்கிறார்.

// இது போக பெரும்பாலான கம்பெனிகளில் திங்கள், செவ்வாய் ஃபார்மல் ட்ரஸ்’, புதன், வியாழன் செமி ஃபார்மல்’, வெள்ளியன்று கேசுவல்என்ற நடைமுறை உண்டு. வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக்க முடிகிறதா? அதுவும் டீம் பாலைவனமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஒன்றிரண்டு ஃபிகர்கள் இருந்துவிட்டால் அவர்களுக்கு வேண்டியாவது மாதம் ஒரு செட் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஆக இதுக்கு சராசரியாக மாதம் ஒரு ஐந்திலிருந்து நான்காயிரம் வரை. //

கவுண்டர் வாய்ஸ்: அவனவனுக்கு ஒன்னுக்கு வரலைன்னு வருத்தப்படுறான். இவனுக்கு இளநியில தண்ணி வரலையாம் !

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், சென்னை / பெங்களுருவில் வேன் ஹியூசன், பீட்டர் இங்க்லேண்ட் தவிர வேற ஜவுளிக்கடைகளே இல்லையா ? ஒருவேளை பிராண்டட் சட்டை அணியாவிட்டால் உடலில் அரிப்பெடுக்குமா ? (ஃபிகர்களுக்காக புதுத்துணி எடுக்க வேண்டியிருக்கிறது என்பது நகைச்சுவைக்காக எழுதிய வரிகளாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்).

// இந்தச் செலவை எல்லாம் செய்து முடித்தாலும் சம்பளப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது அல்லவா? அதுக்கு வினை வைக்கத்தான் கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன் EMI என்று ஏதாவது வந்து சேர்ந்துவிடுகிறது. //

ஏதோ செய்யாத பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கும் தொனியில் எழுதியிருக்கிறார். நீ ஏன் மேன் லோன் வாங்குற ? எதுக்கு EMI கட்டுற ? பகட்டான வாழ்க்கையைத் தேடி வாங்கிய கடனைத்தானே ஓய் அடைக்கிறீர்கள் ?

// இத்தனையும் போக கே.எஃப்சி, பீட்ஸா கார்னர் என்று வாயைத் திறந்து கொண்டிருக்கும் பூதங்களுக்கு கிள்ளியும் அள்ளியும் போட வேண்டியிருக்கிறது. //

கே.எப்.சி, பீட்சா கார்னரில் சாப்பிட்டுத் தொலைக்காமல் பெருநகரங்களில் வாழவே முடியாதா ? எனக்குத் தெரிந்து எல்லா மென்பொருள் நிறுவன வளாகங்களின் சுற்று வட்டாரங்களிலும் ஓரிரு தள்ளுவண்டிக்கடைகள், ஃபாஸ்ட் ஃபுட் நிச்சயமாக இருக்கும். நம்மவர்களும் கரட்டடிபாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்த புதிதில் அந்த மாதிரி கடையில் எல்லாம் சாப்பிட்டிருப்பார். இப்பொழுது கொஞ்சம் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் அதுபோன்ற ரோட்டுக்கடைகளை பார்த்தால் முகம் சுழிப்பதும் ஸ்டோமக் அப்செட் ஆகிடும் என்று சொல்லி சீன் போடுவதுமாக பொழுதைக் கழிக்கின்றனர்.

// அரசு ஊழியர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் சம்பளம் எந்தவிதத்திலும் குறைவில்லை. இப்பொழுதெல்லாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளமே நாற்பது ஐம்பதைத் தொடுகிறது. அவர்களுக்கு சம்பளமா முக்கியம்? கிம்பளம்தானே மெயின் மேட்டர். சேனல்களில்  எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன பாவம் செய்தான்? //

பிற துறையினர் எல்லாம் நோகாமல் நோம்பி கும்பிடுவது போல அல்லவா இருக்கிறது. கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிறார்களாம். என்னடா இது சோதனை ? ஒருவேளை வயதை குறிப்பிடுகிறாரோ ? யாரும் வேலைக்குச் சேர்ந்ததும் போய் பேராசிரியராக அமர்ந்துவிட முடியாது. பேராசிரியராக முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், விரிவுரையாளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் மணிகண்டனுக்கு தெரியாதா என்ன ? முனைவர் பட்டம் எல்லாம் ஒரு விஷயமா என்று வெளியிலிருந்து பார்ப்பவர்கள் வெகுசாதாரணமாக சொல்லிவிடலாம், த.தொ தொழிலாளர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதாக வெளியாட்கள் நினைக்கிறார்களே அது போல.

பொதுவாகவே மணிகண்டனின் வரவு செலவு கணக்கு தப்புக்கணக்காக தோன்றுகிறது. கணக்கு பாடத்தில் அவரு கொஞ்சம் வீக் போல. இருவரும் சம்பாதிக்கிறோம் என்றபடி ஆரம்பித்த அவருடைய பதிவு போகப் போக இருவருக்கும் பொதுவான செலவுகளை அவருடைய சம்பளத்திலிருந்து மட்டும் குறைத்துக்கொண்டு ஆச்சு பார்த்தீங்களா ? ஐம்பதாயிரம் காலி என்று கணக்கை முடித்துவிட்டார். தவிர, மணிகண்டன் போல பிள்ளைக்குட்டிகள் பெற்றெடுத்த த.தொ பணியாளர்கள் இந்நேரம் சொந்த வீடு, கார், சுவற்றில் மாட்டுகிற தொலைக்காட்சி என்று செட்டில் ஆகியிருப்பார்கள்.

// ஒருவேளை ப்ரோமோஷன் கிடைத்து சம்பளம் லட்ச ரூபாயைத் தொட்டாலும் எதுவும் மிச்சம் ஆகாது. கார் வாங்கி அதற்கு EMI, பெட்ரோல், ஒருவேளை டிரைவர் வைத்தால் அவர் சம்பளம் பன்னிரெண்டாயிரம் ரூபாய். //

இதுதான் ஃபினிஷிங் டச். ஆக, ஒரு லட்சமில்லை எத்தனை லட்சங்கள் வாங்கினாலும் கூட எல்லாவற்றையும் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ / பகட்டான வாழ்க்கைக்கோ செலவு செய்துவிட்டு மாசக்கடைசியில் எங்க பர்ஸும் காலியாத்தான் இருக்கு, நாங்களும் ஏழைங்க தான் என்று புலம்புவார்கள். மனிதர்கள் அவரவர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வது இயல்புதான். ஆனால் புலம்பக்கூடாது. நாய் வேஷம் போட்டா குரைச்சுதான் ஆகணும்னு தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல த.தொ வேலை என்பது நாமாகவே வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட நாய் வேடம். குரைத்து தான் ஆகவேண்டும். விருப்பமில்லையென்றால் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிற பேராசிரியராக பணிபுரியலாமே ? பொறியியல், MCA முடித்தவர்களுக்கு நிச்சயமாக கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்துவிடும். அதுவும் இல்லையென்றால் த.தொ இளைஞர்கள் அடிக்கடி ஃபேஷனுக்கு சொல்வதைப் போல ஊருக்கு போயி வெவசாயம் பார்க்கலாம் அல்லது கரட்டடிபாளையத்திற்கோ வள்ளியாம்பாளையத்துக்கோ போய் எருமை மாடு மேய்க்கலாம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment