26 June 2017

பிரபா ஒயின்ஷாப் – 26062017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பாலாஜி மோகனின் இணையத் தொடர் பார்த்தேன். தலைப்பு: As I’m Suffering from Kadhal. தலைப்பே இது யாருக்கான தொடர் என்பதை சொல்லிவிடுகிறது. அப்படியும் இல்லையென்றால் ப்ரொமோ வீடியோ அல்லது முதல் எபிஸோட் சில நிமிடங்கள் பார்த்தால் போதும். 

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, சாந்தனு பாக்யராஜ் நடிப்பில், கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் சக்கரக்கட்டி என்றொரு படம் வெளிவந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை. பாடல்கள் எல்லாம் பயங்கர ஹிட். குறிப்பாக டாக்ஸி டாக்ஸி. ஆனால் படம் அப்போதைய விமர்சகர்களால் கழுவிக் கழுவி ஊற்றப்பட்டது. எனக்கு தனிப்பட்ட முறையில் சொதப்பலான க்ளைமாக்ஸ் தவிர சக்கரக்கட்டியை மிகவும் பிடித்திருந்தது. இன்னும் சொல்வதென்றால் அந்த சமயத்தில் சக்கரக்கட்டி பட வசனங்கள் எனக்கு மனப்பாடம். (ராஹுல் டிராவிட், லேட் பிக்கப்). அது ஹாஸ்டல் தினங்கள். ஏதாவது படம் கிடைத்தால் லேப்டாப்பில் தேயத்தேய பார்ப்போம். அப்படி சக்கரக்கட்டியை பத்து முறைக்கு மேலே பார்த்திருப்பேன். அத்தனை முறை பார்த்ததற்கும், படம் அவ்வளவு பிடித்ததற்கும் காரணம் அதில் காட்டப்பட்ட எலைட் வாழ்க்கைமுறை. பணக்காரத்தனம் என்பதை நாம் சினிமாவில் காலம் காலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவற்றில் ஒரு செயற்கைத்தனம் இருக்கும். சக்கரக்கட்டியில் அது ஒப்பீட்டளவில் இயல்பாக அமைந்திருந்தது. என்னவென்று சரிவர சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த எலைட் வாழ்க்கைமுறையை திரையில் பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு. (கலாபிரபு கெளதம் கார்த்திக்கை வைத்து தனது அடுத்த படத்தை முடித்துவிட்டார். படத்தின் பெயர் இந்திரஜித். அட்வென்ச்சர் ஃபேண்டஸி. இன்னும் வெளிவரவில்லை. வரவே வராது போலிருக்கிறது).

அதுபோல கொஞ்ச வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒரு குறும்படம் வெளிவந்தது. குறும்படங்களில் மூன்று வகை. ஒன்று, தண்ணி, பொண்ணுங்க, கடலை, காதல் என்று ஜல்லியடிக்கும் வகைகள். இரண்டாவது, அவசர அவசரமாக சினிமாவை அடுத்த கட்டத்திற்கு பெயர்த்துச் செல்லத் துடிக்கும் நவீன முயற்சிகள். மூன்றாவது, சமூக விழிப்புணர்வு படங்கள். நான் சொல்கிற குறும்படம் மூன்றாவது வகை. விழிப்புணர்வு என்றாலே பெரும்பாலும் குழந்தை தொழிலாளி, குடிப்பழக்கம், பெண்ணடிமைத்தனம் என்று ஒரு சில டெம்ப்ளேட்டுகள் உள்ளன. ஆனால் அந்த குறும்படத்தில் வித்தியாசமாக விந்தணு தானத்தை எடுத்து கையாண்டிருந்தார்கள். (என்னைக் கேட்டால் இதெல்லாம் நூறு வருடங்களுக்குப் பின்பு யோசிக்க வேண்டிய பிரச்சனை. இப்போதைக்கு வேலையை முடித்துவிட்டு சுத்தமாக ஃப்ளஷ் செய்தாலே போதும்). தமிழ் குறும்படம்தானா என்றே சந்தேகிக்கிற வகையில் பாதிக்கு மேலே ஆங்கில வசனங்கள். அதிலேயும் சக்கரக்கட்டியைப் போலவே மேல்தட்டு வாசனை. பிடித்திருந்தது. (யூடியூபில் முழுக்க தேடிவிட்டேன். குறும்படத்தின் இணைப்பு கிடைக்கவில்லை. அதன் பெயரும் மறந்துவிட்டது).

அதனால் பாலாஜி மோகனின் இணையத் தொடர் பற்றி அறிந்ததும் அது எனக்கான கப்கேக் என்று புரிந்துவிட்டது. மொத்தம் பத்து எபிஸோடுகள். தினசரி இரண்டு அல்லது மூன்று எபிஸோடுகளாக பார்த்து முடித்தாயிற்று. கிட்டத்தட்ட இயக்குநரின் முதல் படம் போலவே இருக்கிறது. மொத்தம் ஒன்பதே கதாபாத்திரங்கள். முதலில் வேடிக்கையாக ஆரம்பித்து, நடுவில் இரண்டு எபிஸோடு மொக்கை போட்டு, இறுதியில் எமோஷனலாக முடியாமல் முடிகிறது. அடுத்த சீசனில் தொடரும் போல. நடுவில் ரோபோ சங்கர் வரும் பகுதியைத் தூக்கிவிட்டு, தரமாக எடிட் செய்தால் இரண்டரை மணிநேர சினிமாவாகக் கூட வெளியிட்டிருக்கலாம். இணையத் தொடர்களுக்கு சென்ஸார் கிடையாது போலிருக்கிறது. ஓத்தா, ஃபக் கூட பரவாயில்லை. அதைவிட அபஸ்வர வார்த்தைகள் ஒன்றிரண்டு இடங்களில் வருகிறது. விட்டுத்தள்ளுங்கள்.

முன்னே சொன்ன மேல்தட்டு வாழ்க்கைமுறையைத் தாண்டி, நடிகர்களின் சின்னச் சின்ன உடல்மொழி அதிகம் ஈர்க்கிறது. குறிப்பாக சனந்த், சுந்தர் ராமு, சஞ்சனா மற்றும் நக்ஷத்ராவின் உடல்மொழி பிரமாதம். பாலாஜியும், தன்யாவும் கொஞ்சம் ஓவராக்டிங். (தன்யா தொடரின் அசோஸியேட் ரைட்டரும் கூட). படைப்பாளியையும் அவரது படைப்பையும் சம்பந்தப்படுத்தி பார்ப்பது தவறு என்பார்கள். ஆனால் காதல், கல்யாணம், டைவர்ஸ் என்று தொடர் சுற்றிச் சுற்றி வருவதை பார்க்கும்போது பாலாஜி மீது சந்தேகமாக இருக்கிறது.

இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இது மாதிரியான படங்கள், வெப் சீரிஸ் யாருக்காக எடுக்கப்படுகிறதா அவர்கள் இதை மயிரா கூட மதிக்க மாட்டார்கள். என்னைப்போன்ற மிடில்கிளாஸ் ஆர்வக்கோளாறுகள் பார்த்தால்தான் உண்டு.

தொடரில் தன்வியாக வரும் நக்ஷத்ராவிற்கு தன்னுடைய திருமணம் பற்றி பெரிய கனவு இருக்கிறது. திருமணம் என்றால் திருமண வாழ்க்கை பற்றியதல்ல. திருமண நிகழ்வு பற்றியே பெரிய கனவு. ப்ரீ-எங்கேஜ்மென்ட், எங்கேஜ்மென்ட், மெஹந்தி, சங்கீத், திருமணம், ரிசப்ஷன் இப்படி நீள்கிறது தன்வியின் பட்டியல். இதையெல்லாம் அறிவிப்பதற்கு ஒரு பார்ட்டி. டயர்டாக இருக்கிறதா ? பொறுங்கள்.

நிஜத்திலேயே ஒரு உதாரணம் தருகிறேன். எழுத்தாளர் கயல் தன்னுடைய வலைப்பூவில் தனது திருமணத்திற்கு நூறு நாட்களுக்கு முன்பிலிருந்து, கவுண்டவுன் போட்டு, தினசரி ஒரு சிறுகுறிப்பு எழுதி வருகிறார். ஃபோட்டோகிராபி, ஷாப்பிங் என்று திருமண தயாரிப்பு வேலைகள், இடையிடையே கவிதைகள் என்று அற்புதமான டாக்குமென்டேஷன். நிறைய இடுகைகள் படிப்பதற்கு சுகமாகவும், பிரமிப்பாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கின்றன. ஒரு சில இடுகைகள் அசூயை தரவும் செய்கின்றன. உதாரணம், பட்டுப்புடவை ஷாப்பிங் பற்றிய இடுகை. கயல் தன்னுடைய நூறு நாள் இடுகைகளை புத்தகமாக வெளியிட்டால் திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களுக்கு உதவியாகவும், விருப்பமானதாகவும் இருக்கும்.

ஆண்களைப்.... Well, பெரும்பாலான ஆண்களைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது ஒரு சங்கடமான சடங்கு. முக்கியமாக சில விஷயங்கள்..

1. கோட் சூட் அணிவது. இது இப்போது மிடில் கிளாஸ் திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. தொண்ணூறு சதவிகித ஆண்கள் திருமணம் / ரிஷப்ஷனில் அணியும் கோட்டை அதன்பிறகு வாழ்நாளில் அணிவதே இல்லை என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மீதமுள்ள பத்து சதவிகித ஆண்கள் (மனைவியின்) தம்பி, தங்கை திருமணத்தில் கட்டாயத்தின் பெயரில் அணிகிறார்கள்.

2. வேண்டியவர் / வேண்டாதவர் பாரபட்சமில்லாமல் எல்லோர் முன்பும் சென்று ஒரு வழிசலான புன்னகையோடு திருமண அழைப்பு வைக்க வேண்டும். அதன் நீட்சியாக கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவு குஷ்டு வந்து கல்ட்டா செய்யும் நண்பர்களை பொறுத்துக்கொள்ளவும் வேண்டும்.

3. ஷாப்பிங் – இது பக்கா பொண்ணுங்க ஏரியா. பயங்கரமான பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை உள்ளவர்களால் மட்டும்தான் இதனை கடந்து வர முடியும்.

4. ஃபோட்டோகிராஃபி – நல்லவேளையாக உலகம் நவீன மயமாவதற்குள் எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. இப்பொழுதெல்லாம் ஹனிமூனுக்கு கூட மூன்று பேராகத்தான் டிக்கட் எடுக்கிறார்கள். போஸ் கொடுப்பதற்கு தனியாக யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் பயில வேண்டும் போலிருக்கிறது.

5. ரிசப்ஷன், திருமணம் இரண்டு நிகழ்வுகளுக்கும் சேர்த்து குறைந்தது பத்து மணிநேரங்களாவது நின்றுக்கொண்டே இருக்க வேண்டும், புன்சிரிப்பு மாறாமல். 

இவை தவிர்த்து, அங்கிளை ஞாபகமிருக்கா என்று கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருப்பவரிடம் குழைந்து சமாளிப்பது, திடீரென மணமகளின் தோழிகள் அவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று செல்ஃபி எடுத்துக்கொள்ளும் சமயம் பைத்தியம் போல மேடையில் தனியாக நிற்பது, ஆரத்தி தட்டு எடுக்கும் மணமகளின் மூன்று டஜன் உறவினர்களுக்கு பொறுமை காப்பது, மணப்பெண்ணுக்கு லட்டு ஊட்டுவது போல போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என்று அது ஒரு பெரிய லிஸ்ட்.

புரோகிதர்கள் வைத்து செய்யப்படும் திருமணங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு படத்தில் சத்யராஜ் சொல்வது போல, புகை அலர்ஜி, சைனஸ் பிராப்ளம், கண்ணு எரியும் அதனால யாராவது தாலிய கட்டினா கூட்டிட்டு போயிடலாம். 

ஆண்களின் நீண்ட கால கனவு, ஏக்கம், தவம் எல்லாம் திருமணத்திற்கு பிறகு நடக்கும் விஷயங்கள் தான். நான் திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையைப் பற்றி சொல்கிறேன் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 June 2017

பிரபா ஒயின்ஷாப் – 19062017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

­தமிழ் சினிமாவில் எடுப்பதற்கு சிரமமான ஜான்ரா ஆக்ஷன்தான் என்பேன். காலம் காலமாக பார்த்து. பார்த்து, பார்த்து, பார்த்து, சலித்த வகையறா. அதனாலேயே பார்வையாளர்கள் இப்ப அவனை கொன்னுடுவாங்க பாரேன் என்று எளிதாக காட்சிகளை கணித்துவிடும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு ஆக்ஷன் படம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று முன்முடிவு செய்யும் பழக்கம் உண்டு. காரணம் சலிப்புதான். ஆக்ஷன் படங்களில் குறிப்பாக கேங்ஸ்டர் படங்களுக்கென ஒரு டெம்ப்ளேட் இருப்பதை கவனியுங்கள். 

வில்லன் அதிபயங்கர டானாக இருப்பார். டிம்லைட்டில்தான் வாசம் செய்வார். அதிகம் பேசமாட்டார். பயங்கர கோபக்காரராக இருப்பார். யார் மீதோ உள்ள கோபத்தை அடியாட்களிடம் காட்டுவார். உதாரணமாக, செஸ் விளையாட்டிலோ, சீட்டுக்கட்டிலோ அடியாள் வில்லனை ஜெயித்துவிட்டால் அடியாளை டொப்பென சுட்டுத்தள்ளிவிடுவார், அடியாள் கெட்டசெய்தி கொண்டுவந்து சொன்னால் உடனே ஒரு டொப். எதிர் கேங் ஆசாமி வில்லனிடம் சிக்கிக்கொண்டால் உண்மையைச் சொல்லாவிட்டால் கொன்றுவிடுவேன் என்று டார்ச்சர் செய்வார். உண்மையைச் சொன்னதும் டொப். பார்ப்பவர்களை எல்லாம் டொப், டொப், டொப். சுருக்கமாக சொல்வதென்றால் வில்லன் ஒரு அரைகிறுக்கன். இப்படி யாரைப் பார்த்தாலும் சுட்டுவிடும் பைத்தியக்கார வில்லன், ஹீரோவை மட்டும் டக்குன்னு சுட்டு சாகடிக்க மாட்டார். தன் அடியாட்களை ஒவ்வொருவராக விட்டு அடிவாங்க வைப்பார். அப்படியும் ஹீரோ வில்லன் குரூப்பிடம் வசமாக மாட்டிக்கொண்டால் ஹீரோவை மொத்தமாக முடிக்காமல் கொஞ்சம் உயிரை மீதி வைத்து விட்டுவிடுவார்கள். அதிலிருந்து மீண்டுவந்து ஹீரோ வில்லன் ஆட்களை புரட்டி எடுப்பார். வில்லன் துப்பாக்கி எத்தனை முறை சுட்டாலும் ஹீரோ மீது படாது. ஹீரோ துப்பாக்கி முதல்முறையே வில்லனை சுடும். லாஜிக் என்பது துளியும் இருக்காது. ஆக்ஷன் படங்களை எதார்த்தமாக எடுப்பது என்பது சாத்தியமே இல்லை என்றாலும் ஒரு முப்பது சதவிகிதமாவது முயற்சிக்கலாம்.

இவ்வளவையும் தாண்டி சுவாரஸ்யமான ஆக்ஷன் படம் தருவதென்றால் அது ஒரு சாகசம். அதனை மகிழ் திருமேனி இரண்டாவது முறையாக நிகழ்த்திய மீகாமன் பார்த்தேன். மேலே சொன்ன டெம்ப்ளேட் சமாச்சாரங்கள் மீகாமனில் நிறைய வருகின்றன. ஆனால் அவற்றையும் தாண்டி ரசிக்க முடிகிறது. மீகாமனை விட அவரது தடையறத் தாக்க எனக்கு அதிகம் பிடித்திருந்தது. அதிலே ஒரு காட்சியில், செல்வா கறிக்கடை சேகரை தேடிச் செல்கிறார். அந்த சமயத்தில் சேகர் (செல்வாவிற்கு பயம் காட்டுவதற்காக) தன் அடியாள் வாங்கி வந்த தேநீர் பன்றி மூத்திரம் போல இருப்பதாக சொல்லி கோபம் கொள்கிறார். அந்தக் காட்சியில் நடிகர் அருள் தாஸ் பிரமாதப்படுத்தியிருப்பார். இம்மாதிரி சின்னச்சின்ன நகாசு வேலைகளில் தான் மகிழ் திருமேனி தனித்து தெரிகிறார். மீகாமனிலும் அப்படி அங்கங்கே சில காட்சிகள் ஒரு கவிதை அல்லது சிறுகதையைப் போல ஒரு நொடி வந்துவிட்டுப் போகிறது. அடுத்த மகிழ் திருமேனி படம் வெளிவரும்போது திரையரங்கில் பார்க்க வேண்டும்.

ஆக்ஷன் படங்களில் இயக்குநர்கள் கவனமாக இருக்க வேண்டியது வில்லன் கதாபாத்திரத்திற்கு தரும் வெயிட்டேஜ். சொத்தையான வில்லன் கதாபாத்திரம் கொண்ட எந்தப் படமும் வெற்றி பெறாது. மீகாமன் வில்லன் கதாபாத்திரமான ஜோதியைப் பற்றிய வர்ணனை இப்படி போகிறது. அவன் எங்க இருப்பான், எப்படி இருப்பான்னு கூட யாருக்கும் தெரியாது. ஒரு செல்போனை ஒரு நாளைக்கு மேல யூஸ் பண்றதில்லை. பொம்பள ஆசை, ஆடம்பரம் கிடையாது. சம்பாதிக்கிற பணத்தை செலவு பண்றதும் கிடையாது. எனக்கு இதைக் கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும் இல்லையென்றால் என்ன இதுக்கு ஒருவன் டானாக இருக்கவேண்டும். தாளமுத்து நடராசன் மாளிகையில் குமாஸ்தாவாக வேலை பார்க்கலாம். 

சரியான இன்புட்ஸ் கொடுத்தால் ஹன்சிகா கூட அழகுதான் ! மீகாமன் சமயத்தில் சவிதாவுக்கும் ஹன்சிகாவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எம்.எம்.மானசி டப்பிங் கொடுத்திருக்கிறார். செக்ஸியான குரல். ஆனால் சொல்லி வைத்தாற்போல விமர்சகர்கள் எல்லோரும் டப்பிங் பொருந்தவில்லை என்று சொல்லிவிட, மீண்டும் சவிதாவுடன் சமரசமாகிவிட்டார் ஹன்சிகா. விமர்சகர்கள் தான் சினிமாவை கெடுக்கிறார்கள்.

சினிமாவில் ஹீரோயின்களுக்கென ஒரு காலாவதி தேதி இருக்கிறது. எத்தனை திறமையான, அழகுள்ள நடிகையாக இருந்தாலும் அதிகபட்சம் பத்து வருடங்கள். அதன்பிறகு அவர்கள் பெண்ணியவாதிகளாக உருமாறி நடிகைகள் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென அடுத்த தலைமுறை கதாநாயகிகளுக்கு வகுப்பெடுப்பார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். வில்லன்களின் ஆயுள் அதைவிட மோசமாக இருக்கிறது. ஹிந்தியில் அல்லது தெலுங்கில் ஒரு சுற்று முடித்துவிட்டு தமிழுக்கு வருகிறார்கள். முதல் படத்தில் பேசப்பட்டால் அடுத்த வாய்ப்பு. அதன்பிறகு எத்தனை பெரிய வஸ்தாதாக இருந்தாலும் நான்கைந்து படங்களுக்குப் பிறகு, துணை வில்லன், உப வில்லன், அடியாள், குணச்சித்திரம் என டீமோட் ஆகி காணாமல் போய்விடுகிறார்கள். மீகாமனில் மட்டும் அப்படி அரை டஜன் வில்லன்கள் வருகிறார்கள். ஆஷிஷ் வித்தியார்த்தி (தில்), அவினாஷ் (திருமலை), மகாதேவன் (பிதாமகன்), சுதான்ஷு பாண்டே (பில்லா 2). எல்லோருக்கும் துண்டு வேடங்கள்.

ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்காக கண்ணீர் விட்டு அழவெல்லாம் செய்திருக்கிறேன். ஜவகல் ஸ்ரீநாத்தும் அணில் கும்ளேயும் விளையாடும்போது கூட நம்பிக்கையாக உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஒரு சின்ன நெருடலைத் தாண்டி வேறெதுவும் செய்யவில்லை இந்தியாவின் தோல்வி. வீட்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வரவில்லை. கொஞ்ச நேரம் ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். RJ பாலாஜிக்கு நிரந்திரப்பணி கிடைத்துவிட்டது. சமீபத்தில் தமிழ் வர்ணனை மீள்வருகை புரிந்தபோது பிராமண ஸ்லாங் வருவதாக நிறைய கிண்டல்கள் எழுந்தன. உண்மையில் கிரிக்கெட் வர்ணனையைப் பற்றி நம்முடைய மனங்களில் ஒரு ஆழமான பிம்பம் பதிந்துள்ளது. அதனை மாற்றுவது கடினம். பிராமண ஸ்லாங் மட்டுமல்ல. லூஸ் மோகன் ஸ்லாங், நெல்லை சிவா ஸ்லாங் அல்லது கிருபானந்த வாரியாரின் கதாகாலட்சேப ஸ்லாங் (அளவோடு வந்த பந்து... ஆஃப் சைடில் வந்த பந்து...) என்று எந்த ஸ்லாங்கில் வந்தாலும் நாம் தமிழ் வர்ணனைகளை கிண்டலடித்துக் கொண்டுதான் இருப்போம். ஆங்கில வர்ணனையைக் கேட்பது என்பது நம் கிரிக்கெட் பார்க்கும் கலாசாரத்தின் ஒரு பகுதி. சந்தேகமிருந்தால் முந்தைய தலைமுறை அங்கிள்களை கேட்டுப் பாருங்கள். இத்தனைக்கும் ஆங்கில வர்ணனை ஒன்றும் புரிந்து தொலையாது. ஆனாலும் தூர்தர்ஷனின் ஹிந்தி வர்ணனையை சபித்துவிட்டு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வராதா என்று டியூன் செய்து பார்ப்போம். ரவி சாஸ்திரியும், ஜெஃப்ரி பாய்காட்டும் கத்தும்போது வரும் ஒரு குதூகலம். புரியும்படி சொல்வதென்றால் பெருமைக்கு எருமை மேய்ப்பது. ஹாலிவுட் சினிமாவில் பேசும் ஆங்கிலம் நமக்கு மருந்துக்கும் புரியாது. அதே சமயம் தமிழ் டப்பிங் பார்க்கவும் பிடிக்காது. ஹாலிவுட் படங்களை மிகவும் தொழில்முறையாக மொழிபெயர்த்தால் கண்றாவியாக இருக்கும். ஆனால் பழைய விஜய் டிவி ஜாக்கி சான் பட மொழிபெயர்ப்புகளுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் வர்ணனைக்கும் அதுதான் பாதை. முடிந்தவரை நகைச்சுவை உணர்வுடன், க்வெர்க்கியாக பேசினால் பார்வையாளர்களை கவரலாம். ஸ்டார் நிறுவனம் என்பதால் விஜய் டிவியின் ஆஸ்தான ஆட்கள் நண்டு ஜகன், படவா கோபி போன்றவர்களை களமிறக்கலாம். மாயந்தி லாங்கருக்கு ஈடு செய்யும் வகையில் ஜாக்குலின் அல்லது ப்ரியா பவானிசங்கரை கொண்டு வரலாம். மா கா பா ஆனந்த், தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ்,பாவனா போன்றவர்களை கிட்டக்கவே சேர்க்கக்கூடாது. 

பீச்சாங்கை, மரகத நாணயம், உரு, வெருளி என்று மே பி லிஸ்ட் படங்கள் நான்கு வந்திருக்கின்றன. பீச்சாங்கை மற்றும் வெருளியை செயினில் இருந்து நீக்கியாயிற்று. சனி மாலை வேலை சீக்கிரம் முடிந்தால் தேவியில் உரு அல்லது மரகத நாணயம் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். கறார் விமர்சகர் ஐந்துக்கு நான்கு கொடுத்ததால் மரகத நாணயத்திற்கு சென்றேன். அட்வென்ச்சர், ஃபேண்டஸி, காமெடி, த்ரில்லர் என்று எல்லாவற்றையும் போட்டு மிக்ஸியில் அடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நிறைய அச்சு பிச்சு நகைச்சுவைகள். முதல் முப்பது நிமிடப்படத்தை தவறவிட்டால் கூட ஒரு பாதகமுமில்லை. அதன்பிறகு படம் நம்மை உள்ளிழுத்து விடுகிறது. ஆனந்தராஜும், முனிஷ்காந்தும் ரகளை செய்கிறார்கள். ஆனந்தராஜ் தீவிர வில்லனாக இருந்தபோது கூட இவ்வளவு ரசிக்க வைத்திருக்கமாட்டார். முனிஷ் நமக்குக் கிடைத்திருக்கும் அட்டகாசமான நடிகர். (ஆனால் தமிழ் சினிமா கொஞ்ச நாளில் அவரை சிதைத்துவிடும் பாருங்கள்). காளி வெங்கட்டின் டப்பிங்கிற்கு நிக்கியின் நடிப்பு செம க்யூட் ! ஏதாவது படம் பார்ப்பதாக இருந்தால் மரகத நாணயம் பாருங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 June 2017

பிரபா ஒயின்ஷாப் – 12062017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆட்டோஃகிராபின் வெற்றிக்குப் பிறகு சேரன் தடதடவென பொக்கிஷம், டூரிங் டாக்கீஸ், மாயக்கண்ணாடி என்று படங்களை அறிவித்தார். அவற்றில் டூரிங் டாக்கீஸ் மட்டும் வெளியாகவில்லை. அதுதான் தவமாய் தவமிருந்து என்கிறார்கள். த.த.வின் கதைக்கும் டூரிங் டாக்கீஸ் தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. அத்தலைப்பை எஸ்.ஏ.சி தன்வசப்படுத்தியிருக்கிறார். ஒரு சினிமாவில் இரண்டு கதைகள் என்பதால் இப்படியொரு தலைப்பு.

முதல் கதையின் நாயகனாக எஸ்.ஏ.சி.யே நடித்திருக்கிறார். இறப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு எழுபத்தைந்து வயது முதியவர் (மனதளவில் இளைஞர் என்று அவரே அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்) தனது ஐம்பது வருட காதலியைத் தேடி வட இந்தியாவில் (காதலி ஒரு சேட்டு ஃபிகர்) ஊர் ஊராக அலைகிறார். இறுதியில் காதலியைக் கண்டுபிடித்து அவருடைய மடியில் உயிர் துறக்கிறார்.

இரண்டாவது கதை ஒரு கிராமத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அது சார்ந்த அவலங்கள் பற்றிய கதை, கிராமத்து சேர்மனின் மகன் மற்றும் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த ரோபோ சங்கரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அவர்களுடைய மணல் கொள்ளையை தடுக்க முனையும் (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த) தாசில்தாரரை கொல்கிறார்கள். தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மறுக்கிறார்கள். அதனை எதிர்க்கும் பத்து வயது சிறுமியை... வேண்டாம் விடுங்கள்.

ஒரு சினிமாவில் இரண்டு கதைகள், ஒன்று பொழுதுபோக்குக்கு, ஒன்று சமூக பிரசாரத்திற்கு என்பது நல்ல கான்செப்ட். டெக்ஸ்ட் ஃபார்மட்டில் எழுதிப் பார்த்தால் இரண்டும் அற்புதமான கதைகள். முதல் கதை ஒரு வகையில் ப.பாண்டிக்கு உந்துதலாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் திரைக்கதையில் சொதப்பி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக முதல் கதை இரண்டாவது கதையை படுகொலை செய்துவிடுகிறது. ஐம்பது வருடத்திற்கு முன்பு நடைபெறும் கதையில் பீரியட் படங்களுக்குண்டான சங்கதிகள் துளி கூட கிடையாது. எஸ்.ஏ.சி.க்கு என்று சில வக்கிரமான சிந்தனைகள் உள்ளன. ரசிகன் படத்தில் விஜய் அம்பிகாவின் முதுகுக்கு சோப்பு போடும் காட்சி நினைவிருக்கிறதா ? அது போக ரேப் காட்சிகளுக்கு பிரசித்தி பெற்றவர் இயக்குநர். அது படத்தின் சில இடங்களில் துருத்திக்கொண்டு தெரிகிறது. டூரிங் டாக்கீஸ் பார்த்ததிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். ஹார்ட் டிஸ்க்கில் இருக்கிறது என்பதற்காக கண்ட படங்களையும் பார்க்க வேண்டுமென்று அவசியமில்லை. 

குழந்தைகளின் கோடை விடுமுறையை குறிவைத்து ஊர் சுற்றிய கும்பல் ஓய்ந்த சமயத்தில் குடும்பத்துடன் ஏற்காடு சென்றிருந்தோம். ஏரியைச் சுற்றி அமைந்துள்ள காடு ஏரிக்காடு. அதுவே மருவி ஏற்காடு ஆனதாக சொல்கிறார்கள். மிக விரைவில் அதுவும் மருவி எர்காட் ஆகப்போகிறது. ஊர்களின் பெயர்களை இதுபோல ஸ்டைலிஷாக மாற்றிக் கொள்வதில் சமகால இளைஞர்கள் மத்தியில் ஒரு மேம்போக்குத்தனம் தெரிகிறது. பெசன்ட் நகர் பீச்சை பெஸ்ஸி என்பதில் ஒரு குதூகலம். மகாபலிபுரத்தை மஹாப்ஸ் என்பதில் ஒரு குதூகலம். இதனால் என்னவென்றால் இன்னொரு நூறு வருடங்களுக்குப் பிறகு யாருக்கும் மகாபலிபுரம் என்றால் தெரியாது. ஏற்காடு மலைக்கு சேர்வராயன் மலை என்றொரு பெயர் இருக்கிறது. லோக்கல் தெய்வம். அதையும் ஷேர்வராய் என்று மாற்றிவிட்டார்கள். அதனால் ஊரெங்கும் ஹோட்டல் ஷேர்வராய்ஸ், ஷேர்வராய்ஸ் ரெஸ்டாரன்ட், ஷேர்வராய்ஸ் சூப்பர் மார்க்கெட் என்று நிறைந்திருக்கின்றன. 

மொத்தம் இருபது கொண்டையூசி வளைவுகள். இரண்டு தாண்டும்போதே சீதோஷ்ண மாற்றம் தெரியத் துவங்குகிறது. மலையுச்சியில் சேர்வராயன் கோவில் உள்ளது. சமீபத்தில் திருவிழா நடந்து முடிந்தது போலிருக்கிறது. ராட்டினங்கள், குதிரை சவாரி, பொம்மைக் கடைகள், இன்ஸ்டன்ட் புகைப்படக் கடைகள் என்று களை கட்டியிருக்கிறது.

சேர்வரயான் கோவில்
கோவில் என்பது ஒரு குகையைப் போல இருக்கிறது. தொண்ணூறு டிகிரி கோணத்தில் குனிந்து, பத்து பதினைந்து அடிகள் நடந்து சென்றுதான் பெருமாளை தரிசிக்க வேண்டியிருக்கிறது (பெருமாள் தானே ?). அதற்குள் நிற்கும் அர்ச்சகர் எப்படி சலிக்காமல் நாள் முழுக்க நிற்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. வெளியே உலவிக்கொண்டிருந்த போது ஒருத்தர் தன்னுடன் வந்தவர்களுக்கு ஏற்காடு மலையிலிருந்து மலையின் இன்னொரு புறத்தைப் பார்த்தால் பெருமாள் படுத்திருப்பது போல தெரியும் என்றார். நான் அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. இந்த வயதில் பெருமாள் படுத்திருப்பதைப் பார்த்து என்ன செய்யப் போகிறேன். 

படகு இல்லம்
சேர்வராயன் கோவில் தவிர்த்து, படகு இல்லம், பாப்பி ஹில்ஸ் (சிறிய பொழுதுப்போக்கு பூங்கா), ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, ஜெண்ட்ஸ் சீட் (மற்றும் லேடீஸ் சீட், சில்ரன்ஸ் சீட்) நோக்குமுனைகள், மஞ்சக்குட்டை நோக்குமுனை, பகோடா பாயின்ட், மான் பூங்கா, கிள்ளியூர் அருவி, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா என்று அட்டகாசமான ஃபேமிலி சுற்றுலா மற்றும் கோடை வாசஸ்தலம். ஆனால் டிராவல் ஏஜென்ட்டுகள் யாரைக் கேட்டாலும் இங்க சுத்திப் பாக்குறதுக்கெல்லாம் பெருசா ஒன்னுமில்லைங்க என்றே பதில் சொல்கிறார்கள்.  

இண்டெக்கோ விடுதியின் முகப்பு
க்ளப் மஹேந்திராவின் இண்டேக்கோ ரிசார்ட் பழங்கால ஆங்கிலேயே கட்டிடங்களின் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்புநிற பழைய மாடல் ஸ்விட்ச்சுகள், ஃபர்னிச்சர்கள், மின்விளக்குகள் என்று மனதைக் கொள்ளை கொள்கின்றன. கூடவே பில் தொகையையும் தீட்டி கொள்ளை அடிக்காமல் இருந்தால் ஆறு மாதங்கள் தங்கியிருந்து விழாவை சிறப்பித்துவிட்டு வரலாம். 

மலையுச்சியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லிங் விடுதி
க்ளப் மஹேந்திரா ஒரு பிரமிப்பு என்றால் மலையுச்சி சரிவில் கட்டப்பட்டிருக்கும் ஸ்டெர்லிங் ஒரு பிரமிப்பு. என்ன ஒன்று, நடுத்தர மக்களுக்கெல்லாம் எட்டாதபடி மிக உயரத்தில் அமைந்திருக்கிறது ஸ்டெர்லிங். 


ஊர்ப்பெயர்களை ஸ்டைலிஷாக மாற்றிக்கொள்வது ஒரு ஃபேஷன் என்றால் சில பேர் தங்களுடைய சொந்தப்பெயரையே சங்கடமாக உணர்ந்து ஸ்டைலாக மாற்றிக்கொல்கிறார்கள். குறிப்பாக ஐ.டி.யில் பணிபுரியும் மத்திய வயதினர். உதாரணமாக சண்முகம் – ஷம்மு, தட்சிணாமூர்த்தி – தக்ஷின், பத்மநாபன் – பேடி (Paddy). நல்லவேளையாக என் பெற்றோர் நான் பெருமைப்பட்டுக்கொள்ளும் சிறப்பான பெயரை சூட்டியிருக்கிறார்கள். நான் தான் அப்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 June 2017

சங்கட காண்டம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் தொண்ணூறுகளின் குழந்தை. ஜங்கிள் புக், சக்திமான், அலிஃப் லைலா, பேதாள் பச்சிஸி, ஜுனூன், விழுதுகள், சூப்பர்ஹிட் முக்காபுலா என்று நிறைய ஞாபகமிருக்கிறது. விளம்பரங்களும் அப்படித்தான். அப்போதெல்லாம் நிறைய விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்புவார்கள். அவற்றில் இரண்டு மட்டும் எனக்கு மர்மமாகவே இருந்தன. ஒன்று, நிரோத். இப்போது வரும் விளம்பரங்கள் போல அப்பட்டமாக இருக்காது. ஒரு திறந்த முதுகை இரண்டு கைகள் தழுவிக்கொண்டிருப்பதைக் காட்டிவிட்டு பின்னணியில் பாதுகாப்பான உடலுறவுக்கு நிரோத் பயன்படுத்த வேண்டும் என்பார்கள். அந்த வயதில் அது எனக்கு புரிந்திருக்க சாத்தியமில்லை. ஆனால் ஏதோ தப்பு சமாச்சாரம் என்பது மட்டும் புரியும். இன்னொரு விளம்பரம் அதைவிட மர்மம். மாலா-டி எனும் கருத்தடை மாத்திரைகளுக்கான விளம்பரம் அது. அப்பொழுதெல்லாம் விளம்பரத்தில் / சீரியல் டைட்டிலில் வரும் பாடல்களை ஹிந்தியில் இருந்தாலும் பாடிக்கொண்டிருப்போம். ஜங்கிள் ஜங்கிள் பாத் சலியே பத்தா சலாயே... துருரு துருரு... (இப்போது கூட தனியாக இருக்கும்போது நிஜாம் பாக்கு விளம்பரத்தை பாடி, நிஜாம் பாக்கு என்று குழந்தை குரலில் முடிக்கும்போது என் மனைவி பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்துவிட்டு பைத்தியம் என்று போய்விடுவாள்). அந்த மாதிரி மாலா-டி விளம்பரப்பாடலை பாடினால் மட்டும் வீட்டில் சத்தம் போடுவார்கள். நிரோத்துக்கு சத்தம் போட்டால் கூட ஓகே. இது மாத்திரைதானே என்று தோன்றும். நீண்ட காலத்திற்குப் பிறகுதான் விஷயம் தெரிந்தது. 

இதுபோன்ற விஷயங்களால் தான் இந்தியாவை பழமைவாத சமுதாயம் என்கிறார்கள். ஒரு வகையில் நான் சொன்ன உதாரணங்கள் எவ்வளவோ பரவாயில்லை, தமிழக கிராமத்து இல்லங்களில் சிறுவர்கள் காதல் என்ற வார்த்தையை உச்சரித்தாலே கெட்டவார்த்தை பேசாதே என்று வீட்டில் திட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக நம் தேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் முழுமையாக இல்லை. இப்பொழுதும் இந்தியாவில் காண்டம் வாங்குவதென்றால் கொஞ்சம் சங்கடமான விஷயம்தான்.

சில பொருட்களுக்கு அப்பொருளுக்கு பிரபலமாக விளங்கிய நிறுவனங்களின் பெயரே அமைந்துவிடுவதை கவனித்திருப்பீர்கள். உதாரணத்திற்கு, நூடுல்ஸ் – மாகி, வனஸ்பதி – டால்டா. அதுபோல ஒரு காலத்தில் காண்டம் என்றாலே நிரோத்து தான். கொஞ்சம் வளர்ந்த பிறகு எனக்கு நிரோத் என்ற பெயரைக் கேட்டாலே நடிகை நிரோஷா ஞாபகத்துக்கு வருவார். நிரோத்துக்குப் பின் இந்திய சந்தைக்கு கோஹினூர் வந்தது. வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னையைச் சேர்ந்த டி.டி..கிருஷ்ணமாச்சாரி (TTK) நிறுவனம் உறைகளை தயார் செய்யத் துவங்கியது. ஒரு சமயம், திடீரென தூங்கி எழுந்ததும் ஒருநாள் எல்லா பெட்டிக்கடை கதவுகளிலும் மஸ்தி என்று குதிரை படம் வரைந்து வைத்திருந்தார்கள். இப்பொழுது ஆணுறை சந்தை நீளமாக விரிவடைந்திருக்கிறது. இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மெடிக்கல் ஷாப் சென்று ஆணுறை வாங்குவது என்பது ஒரு சாதனை தான்.

நிற்க. இந்த மாதிரி விஷயங்களில் நான் கொஞ்சம் ப்ரோ-ஆக்டிவான ஆள்தான். கரு.பழனியப்பனின் நகைச்சுவை காட்சி கூட ஒரு காரணம் என்று சொல்லலாம். (ஒரேயொரு காட்சி ! எவ்வளவு பெரிய தாக்கம்). ஆனால் நம் கடைக்காரர்களும் மக்களும் அப்படி நம்மை சுதந்திரமாக விட்டுவிட மாட்டார்கள். நம்மை குற்ற உணர்வில் தள்ளிவிடுவதில் ஒரு அற்ப சந்தோஷம். மற்ற நாட்களில் எல்லாம் கூட்டமே இல்லாத மெடிக்கல் ஷாப்புகளில், நாம் போகும் சமயத்தில் மொத்தக் கூட்டமும் நின்றுத் தொலைக்கும். காண்டம் என்றதும் பக்கத்தில் நிற்கும் அங்கிள் கண்டிப்பாக திரும்பி நம் முகத்தைப் பார்ப்பார். கடைக்காரர்களுக்கு இந்த காண்டம் என்ற வார்த்தை மட்டும் முதல்முறை காதில் விழுந்தே தொலைக்காது. 

ஒருமுறை மதிய வேளையில் கடைக்கு போனபோது இரண்டு பணியாளர்கள் மட்டும் இருந்தார்கள். வாடிக்கையாளர்கள் ஒருவரும் இல்லை. ஒரு பணியாளர் அலமாரியில் மருந்துப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். நான் நேரே போய் இன்னொரு பணியாளரிடம் காண்டம் கேட்டேன். இன்னொரு பணியாளர் மருந்துப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார் இல்லையா ? அவர் அந்த வேலையை நிறுத்திவிட்டு திரும்பி என் முகத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டார். அந்தப் பார்வையை என்னால் மறக்கவே முடியாது. 

இன்னொரு சமயம், இன்னொரு கடையில், முழுக்கவே பெண் பணியாளர்கள். முதலில் ஒரு பெண்ணிடம் கேட்டேன். ஏதோ அப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தது போல அப்பால் சென்று வேறு வாடிக்கையாளரை கவனிக்கத் துவங்கிவிட்டார். அடுத்த பெண் வருகிறார். சொல்கிறேன். அவரும் அதையே செய்கிறார். இப்படி நான்கைந்து பேரிடம் சொல்லிவிட்டேன். இப்போது அவர்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொள்கிறார்கள். அப்புறம் ஒரு பிரவுன் நிற கவரில் பொருள் வந்தது. 

பொருளை கேட்டு வாங்குவதற்கே இவ்வளவு சங்கடம் என்றால் அப்புறம் எப்படி அய்யா ஃப்ளேவர் எல்லாம் பார்த்து தேர்ந்தெடுப்பது ? சென்னையில் உள்ள பெரும்பாலான மருந்துக்கடைகளில் காண்டம் என்று கேட்டாலே KS தான் கொடுக்கிறார்கள். (ஏதாவது டையப் இருக்குமோ ?) ஒருமுறை ஒலிம்பியாவில் 3ஸ் பேக் வாங்கிவிட்டு வெளியே வந்து சில்லறை குறைவாக இருப்பதை கவனித்தால் இருபது ரூபாய் பொருளுக்கு அறுபது ரூபாய் எடுத்திருக்கிறான் ராஸ்கல். போய்க் கேட்டதும் ஸாரி என்கிறான்.

இன்னொரு சமயம், லேட் நைட். மெடிக்கல் ஷாப்புகள் கூட சாத்தியாயிற்று. அவசரம் என்பதால் கதவை மூடப்போன மளிகைக்கடை, பெட்டிக்கடைகளிளெல்லாம் கேட்டுக்கொண்டே போகிறேன். எங்கும் இல்லை. ஒரு பெட்டிக்கடைக்கார தாத்தா மட்டும் அப்படின்னா என்ன என்கிற தொனியில் என்னையே பார்க்கிறார். சிவ சிவா குடும்பக் கட்டுப்பாடு என்றொரு விஷயம் இருப்பதே உங்களுக்கு தெரியாதா ? 

இப்போது நவீன சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டன. நாமாகவே ட்ராலியை தள்ளிக்கொண்டு போய் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள் கடையில் எல்லாமே நம் கண்ணுக்கு தெரியுமிடத்தில் இருக்கும். காம்ப்ளான் இருக்கும், காப்பித்தூள் இருக்கும், காராசேவு இருக்கும், கா...வுல வேற என்ன இருக்கோ எல்லாம் இருக்கும். காண்டம் மட்டும் இருக்காது. முழுக்கடையையும் அலசிவிட்டு கவுண்ட்டருக்கு வந்தால் பில் போடும் பெண்ணிற்கு பின்னால் உள்ள ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருப்பார்கள். ஹாரி பாட்டர் ஆல்ஸோ ஃபேஸிங் சேம் ப்ராப்ளம், இன் திஸ் சேப்டர்.

சங்கடங்களைத் தவிர்ப்பதற்காக தானியங்கி காண்டம் மெஷின்களை மேலை நாடுகளில் வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலும் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் லிஃப்டும், காண்டம் மெஷினும் மட்டும் வேலை செய்ததாக சரித்திரமே கிடையாது.

இதுபோன்ற சிக்கல்களில் இருந்து என்னைக் காப்பாற்றுவதற்காகவே முன்பு ஸ்பென்சர் பிளாஸாவில் ஒரு கடை இருந்தது. ஹெல்த் அண்ட் க்ளோ. கிட்டத்தட்ட சூப்பர் மார்க்கெட் பாணி. அங்கே நேராக காண்டம் செக்ஷனுக்கு போய் கீழே உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு பிராண்டிலும் ஒன்று, ஒவ்வொரு ஃப்ளேவரிலும் ஒன்று என்று தேர்ந்தெடுத்து வாங்கி வருவேன். இப்பொழுது ஸ்பென்சரில் ஹெல்த் அண்ட் க்ளோவை மூடிவிட்டார்கள். ஈ.ஏ.விலிருக்கும் ஹெல்த் அண்ட் க்ளோ அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. 

இப்போது ஆன்லைனில் கூட காண்டம் கடைகள் வந்துவிட்டன. அவசரத் தேவை இருந்தாலொழிய ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். காண்டம் பஸார், ஷைகார்ட் என்று இரண்டு தளங்கள் உள்ளன. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் பாக்கிங்கில் உள்ளே இருக்கும் பொருள் பற்றி எந்த விவரமும் இருக்காது. கம்பெனி பெயர் கூடத் தெரியாது. டெலிவரி கொடுக்கும் ஆசாமி கவனித்துவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதற்கு கூட வாய்ப்பில்லை. 

நேற்று நண்பர் ஒருவர் காண்டமில் சிக்கன் டிக்கா மசாலா ஃப்ளேவர் வரப்போவதாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். விசாரித்தபோது அது ஏதோ ஏப்ரல் ஃபூல் சமாச்சாரம் (ஃக்கை கவனிக்கவும்). ஒருவேளை இனிவரும் காலங்களில் அதுபோன்ற ஃப்ளேவர்கள் வந்தால் ஆச்சர்யமில்லை. அப்படி வந்தால் அதிலும் பீஃப் ஃப்ளேவரை அரசாங்கம் தடை செய்யும். இந்தியாவில் ஸ்பெஷலாக 'கெளமுத்ரா' ஃப்ளேவர் அறிமுகப்படுத்தப்படும். தொலைக்காட்சியில் மாமி காண்டமை முகர்ந்து பார்த்துவிட்டு ஏன்னா இது நம்மாத்து சாம்பார் மாதிரின்னா இருக்கு ! என்று வியந்தாலும் வியப்பார் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 June 2017

பிரபா ஒயின்ஷாப் – 05062017

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

தம்பதியருக்கு பரிசளிக்க உகந்த நூல்கள் தமிழில் இருக்கிறதா ? நான் சொல்வது ஆங்கிலத்தில் பிரசித்தி பெற்ற மார்ஸ் – வீனஸ் வகையறா. எப்போதாவது வாட்ஸப்பிலோ / ஃபேஸ்புக்கிலோ இக்கேள்வியைக் கேட்டால் நமக்கு கிடைக்கும் பெரும்பான்மை பதில் தமிழ்மகன் எழுதிய ஆண்பால் பெண்பால். முதல்முறை கேள்விப்பட்ட போது உண்மையென்று நம்பி ஆண்பால் பெண்பால் வாங்கிப் படித்தேன். ஆண்பால் பெண்பால் நல்லதொரு நாவல் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆண்பால் பெண்பாலில் வரும் மனைவிக்கு சருமத்தில் மெலனின் குறைபாடு ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் உடலியல், உளவியல் சிக்கல்கள், திருமண உறவு விரிசல்கள் போன்றவற்றைப் பற்றி நாவலில் வருகிறது. இதுபோக, எம்.ஜி.ஆர் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார். இவற்றைத் தாண்டி நாவலின் உட்கரு என்னவோ ஆண் – பெண் உளவியல் வேறுபாடுகளைப் பற்றியது தான் என்றாலும் கூட புதிதாக மணமானவர்கள் இதனையெல்லாம் உட்கார்ந்து, படித்து, புரிந்துக்கொள்ளும் அளவிற்கெல்லாம் அவர்கள் வெட்டியாக இருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம். 

இடைப்பட்ட ஒரு காலத்தில் யாருக்கு பிறந்தநாள் / மணநாள் பரிசுகள் கொடுப்பதென்றாலும் புத்தகங்கள் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அது ஒரு கேவலமான முடிவு என்று எனக்கு கொஞ்ச நாட்களில் தெரிந்து போனது. கேவலமான முடிவு மட்டும் அல்ல. இப்படி செய்வதால் புத்தகத்தையும், அதனை பெற்றுக்கொள்ளும் நபரையும் நாம் ஒருசேர அவமதிக்கிறோம். ஏனென்றால் நாம் தேடிக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர் விரும்பும் டாபிக் என்று வாங்கினால் கூட தொண்ணூறு விழுக்காடு ஆசாமிகள் அதனை படிப்பதே இல்லை என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது. படிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. பல பேர் அதனை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை.  

சமீபத்தில் ஒரு புத்தகக் கடையில் நடிகை சில்க் ஸ்மிதா (மதி நிலைய வெளியீடு) பற்றிய புத்தகத்தினைக் கண்டேன். அதைக் கண்டதும் எனக்கும் பல்வேறு நினைவுகள் கிளர்ந்தெழுந்தன. பொறுங்கள். லயனத்தில் சில்க் ஸ்மிதாவின் முகபாவங்களையும், வெள்ளைக் குதிரையொன்று துள்ளி வருவதையும் மாற்றி மாற்றி காட்டுவதைப் பற்றி சொல்லவில்லை. இந்த மதி நிலைய சில்க் ஸ்மிதா புத்தகத்தை நான் முன்பொரு சமயம் வைத்திருந்தேன் (இறந்த காலம்). சக ஊழியர் ஒருமுறை படிப்பதற்கு நல்ல புத்தகங்கள் இருந்தால் இரவல் தருமாறு கேட்டார். பொதுவாக இதுபோன்ற சக வாசிப்பாளர்களை குறிப்பாக ஆரம்பக்கட்ட வாசிப்பாளர்களைக் கண்டால் ஒரு உவகை தோன்றுமில்லையா ? அவருக்கு படிப்பதற்கு இலகுவாக, சுவாரஸ்யமான விஷயமாக இருக்கட்டும் என்று சில்க் ஸ்மிதாவைக் கொடுத்தேன். கொடுத்ததுதான். படித்தீர்களா என்று கேட்பது அவ்வளவு நாகரிகமில்லை என்றாலும் புத்தகம் திரும்பிவருவதற்காக அடிக்கடி அந்தக் கேள்வியை கேட்கத் துவங்கினேன். எப்போது கேட்டாலும் அந்த புத்தகத்தை இன்னும் படிக்கவே இல்லை என்றும், படிப்பதற்கு நேரமில்லை (ஓழ் பஜனை) என்றும் சலிப்பான தொனியில் பதிலளிப்பார். ஒரு கட்டத்தில் புத்தகம் திரும்ப வரவே வராது என்று தெரிந்து கேட்பதை நிறுத்திக்கொண்டேன். ஆனால் அவரோ கேட்காமலே இதோ அதோ அவராகவே முன்வந்து அப்டேட் கொடுப்பார். எட்டி இரண்டு மிதி மிதிக்கலாம் போல தோன்றும். என்ன செய்வது ! நாம் காந்தி பிறந்த நாட்டில் அல்லவா வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.  

இன்னொரு (வாசிப்புப் பழக்கம் அறவே இல்லாத) நண்பர். திடீரென ஒருநாள் வந்து எனக்கு புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்றார். ஏற்கனவே பட்ட அனுபவத்திற்கு எனக்கு புத்தி வந்திருக்க வேண்டும். ஆனால் வராது. உயிர்மையில் வாங்கிய பாக்கெட் சைஸ் சுஜாதா நாவல்கள் ஏழெட்டு கொடுத்தனுப்பினேன். அது திரும்ப வராது. வராது என்பது கூட பிரச்சனையில்லை. அதை அந்த நண்பர் தொட்டிருக்கக் கூட மாட்டார், மேலும் இப்போது அந்த புத்தகங்கள் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் போய் ஒளிந்துக்கொண்டிருக்கின்றன என்பது கூட நண்பருக்குத் தெரியாது. கேட்டால் நேரமில்லை என்று பதில் வரும். நேரமில்லை என்பவர்களுக்கு ஒரு கேள்வி: தினசரி காலைக்கடன் முடித்துவிட்டு கழுவிக்கொள்வதற்காவது உங்களுக்கு நேரமிருக்கிறதா ? 

ஒரு நண்பருக்குத் திருமணம். மேலே சொன்ன அனுபவங்களை எல்லாம் தாண்டி அவருக்கு புத்தகங்கள் பரிசளிக்க வேண்டுமென்று தோன்றியது. ஏனென்றால் அவர் ஒரு முன்னாள் வலைப்பதிவர். நீண்ட அலசலுக்குப் பிறகு விஜய் நாகஸ்வாமி (உளவியல் நிபுணர்) எழுதிய 24X7 Marriageம், 69 Things I Wish I Knew Before Getting Marriedம் (பெண் எழுத்தாளரின் சொந்த அனுபவங்கள்) வாங்கினேன்.  

என்னுடன் படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக திருமணம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். (அட்லீஸ்ட் இந்த ஒரு விஷயத்திலாவது அவர்களை விட ஒரு நான்கைந்து வருடங்கள் முந்தியிருக்கிறேன் :)) இன்னும் சில பேர் சிங்கிள் தடிமாடாகவே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். (பேராண்டிகளா, மேட்ரிமோனி சைட்ல இருபத்தி ஒன்பது வயச தாண்டிட்டா யாரும் சீண்டமாட்டாங்கடா. நைஞ்சு போயிடுவீங்கடா, தாத்தா சொல்றேன் கேளுங்கடா !) 

மிகுந்த களைப்பு மற்றும் பசியுடன் வீடு திரும்பும்போது வீட்டில் சுவையான பிரியாணி சமைத்து வைத்திருந்தால் எப்படி இருக்கும். அதுபோல நண்பருடைய திருமண விழாவிற்குள் நுழைந்த சமயம், கானா பாலா (இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்) நான் ஓராயிரம் முறை மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்ட ஒரு பாடலின் வரிகளைப் பாடிக்கொண்டிருந்தார் :- 

வத்திப்பெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டித்தான 
வாழும் நம்ம வாழ்க்கையில   
ஏ இன்பம் வரும், துன்பம் வரும், காதல் வரும், கானம் வரும்.
எப்பொழுதும் கவலையில்ல 
காலத்தான வாரிவிட்டு நாங்க மேல ஏறமாட்டோம் 
கோடிக்குத்தான் ஆசப்பட்டு
ஏ காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும்
போகமாட்டோம் மண்ணவிட்டு ! 

அடுத்த பாடலின் இடையே :- 

காதல் பண்ணும் சோக்குல, கட்டுமர கேப்புல, 
காசிமேட்டு கடலு மண்ணுல வீடு கட்டுறா
அலையில்லா கடலுல, துடுப்பில்லா படகுல, 
ஆடுபுலி ஆட்டம்தானே ஆடிக் காட்டுறா
(ஹாய் பிட்ச்சில்) 
அடக்கிப்புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஆக்டோபஸு மீனப்போல வந்துட்டாடா எதுர ! 

அடுத்து :- 

கோயம்பேடு மார்க்கெட்டுல வந்து பாருடி, 
நான் கோணி மூட்ட தூக்குறவன். ஆனா என்னடி
அப்பு டவுன் வாழ்க்கையில வந்து போகும்டி, 
நான் அப்பக்கூட உன்னவிட்டு போகமாட்டேன்டி ! 

கானா பாலா, You’ve made my day ! இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் தொடர்ந்து பாலாவின் பாடல்களில் வரும் சென்னை நேட்டிவிட்டிதான். கானா பாலா காலங்கள் கடந்து பேசப்படுவார்.  

இதே நிகழ்ச்சியில் இன்னொரு பாடகி, முதலில் வைக்கம் விஜயலட்சுமி பாடலையும் அடுத்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடலையும் பாடுகிறார். இரண்டும் அந்தப் பாடகிகளுடைய அதே குரலில் தத்ரூபமாக. அவருடைய வெர்ஸடைலிட்டி பிரமிக்க வைத்தது. ஆனால் எல்லா வயதினரும் கலந்துகொள்ளும் ஒரு விழாவில், சொப்பனசுந்தரி நான்தானே என்றோ, (ஹாஆஆஆஆன்) என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக என்றோ பாடுவதெல்லாம் எனக்கு கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது. சில விஷயங்களில் நான் இன்னமும் பிற்போக்காளனாகவே இருகிறேன்.  

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 June 2017

ஒரு கோடி தூலிப் மலர்கள் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சஞ்சனா அவளது அறையிலிருந்து வெளிவந்தபோது ஒரு கோடி தூலிப் மலர்கள் ஒருசேர பூத்துக் குலுங்கியதைப் போலிருந்தது !

சஞ்சனா ஊரிலிருந்து சென்னையிலிருக்கும் அக்கா வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஊர் என்றால் அரசம்பட்டியோ, ஆண்டிப்பட்டியோ அல்ல. அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைந்தகரையிலிருந்து (சென்னை பாஷையில் அமிஞ்சிக்கரை) மேற்படிப்புக்காக போனவள்தான். ஆனால் அங்கேயே பிறந்து வளர்ந்தவள் போல ஆளே மாறிவிட்டாள். 

© Nithin Barath Photography
சஞ்சனா வந்ததிலிருந்தே ஷ்யாமுக்கு அவள் மீது ஒரு கண். ஒருவேளை நம் தேசியப் பறவைக்கு இருக்கும் கண்கள் ஷ்யாமுக்கு இருந்திருந்தால் சஞ்சனாவை கர்ப்பவதி ஆக்கியிருப்பான். இந்த ஷ்யாம் என்பவன் யாரோ அனாமதேயன் என்று நினைத்துவிடாதீர்கள். சஞ்சனாவின் அக்கா சந்தியாவின் கணவன். சந்தியாவுக்கும் ஷ்யாமுக்கும் மாங்கல்யம் தந்துனா பாடி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆணொன்று பெண்ணொன்று என இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறார்கள். ஷ்யாம் சந்தியாவை பெண் பார்க்கச் சென்றிருந்தபோது சஞ்சனா புதிதாக பூத்த மலரைப் போலிருந்தாள். திரைச்சீலைக்கு பின்னாலிருந்து சிரிக்கலாமா கூடாதா என்று தயங்கியபடி ஷ்யாமையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதே ஷ்யாமுக்கு மனதிற்குள் கவுளி கத்தியது. ஒருவேளை இன்னும் கொஞ்சம் வளர்ந்தவளாக இருந்திருந்தால் ரோஜா படத்தில் வரும் அரவிந்தசாமியைப் போல எனக்கு அந்தப் பொண்ணதான் பிடிச்சிருக்கு என்று கூச்சப்படாமல் கை நீட்டியிருப்பான். திருமணமான புதிதில் ஷ்யாமத்தான் ஷ்யாமத்தான் என்று சுற்றிச் சுற்றி வருவாள். இவனோ கட்டின மனைவியைக் கூட முழுப் பெயரிட்டு அழைப்பான். இவளிடம் மட்டும் சஞ்சு, சஞ்சு என்று குழைவான். மாட்னி ஷோவுக்கு கூட்டிட்டு போறீங்களா அத்தான் என்று விகல்பமில்லாமல் கேட்பாள். கணக்கு பாட சந்தேகங்களை தீர்த்துக்கொள்வாள். எட்டு ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டாள்.

சஞ்சனா இப்பொழுதெல்லாம் ஷ்யாமைக் கண்டுகொள்வதே இல்லை. ஊரிலிருந்து வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டன. ஃபேஸ்டைம் போக அவளுடைய நேரமெல்லாம் குழந்தைகளுக்கு தான். குழந்தைகள் இரண்டிற்கும் கோடை விடுமுறை என்பதால் சித்தி, சித்தி என்று சஞ்சனாவையே சுற்றிக் கொண்டிருக்கின்றன. சந்தியா ஒரு மருத்துவர் என்பதால் அவளுக்கு பொழுது போக்குவதற்கான அவசியமில்லை. தினசரி பன்னிரண்டு மணிநேரம் டாக்டர், மீதி பன்னிரண்டு மணிநேரம் இல்லத்தரசி என்று சுழன்றுக்கொண்டிருக்கிறாள். ஷ்யாம்தான் ஒருவாரமாக வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்து கொள்கிறான். தினசரி காலையில் குளித்து முடித்துவிட்டு சுபிட்சமாக வந்து நடுஹாலில் லேப்டாப்புடன் உட்கார்ந்து கொள்வான். ஒட்டுமொத்த ராஜீவ்காந்தி சாலையும் அவன் ஒருவனை நம்பி மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் பாவனையில் அலைபேசியில் யார் யாருக்கோ உத்தரவுகள் போடுவான். ஐரோப்பிய கிளையன்ட்டிடம் ஆங்கிலத்தை சுழற்றிச் சுழற்றிப் பேசிக் காட்டுவான். சஞ்சனா அதற்கெல்லாம் அசருவதாக தெரியவில்லை. அமெரிக்காவில் படிப்பவளாயிற்றே. அப்படியும் விடமாட்டான். அமெரிக்கர்கள் பேசுவதெல்லாம் ஆங்கிலமே இல்லை என்றும், என்னதான் சூடு போட்டுக்கொண்டாலும் ஐரோப்பியர்கள் போல வராது என்பான். அப்படிச் சொல்லும்போது ஷ்யாம் தான் சென்னையின் புறநகர் ஒன்றில் பிறந்தோம் என்பதையே முற்றிலும் மறந்துவிட்டு, ஐரோப்பிய நாகரிகத்திலேயே ஊறித்திளைத்தவன் போல பேசுவான். இந்த நாட்களில் அவளும் சளைக்காமல் பதில் படம் காட்டுகிறாள். ஸியாடிலிலிருந்து நூறு மைல் தூரம் கடந்து சென்று தூலிப் மலர்களை பார்த்ததாக சிலாகித்தாள். ‘ஏன் வீட்டில் கண்ணாடி இல்லையா சஞ்சு ?’ என்றதும் எட்டு வருடங்களுக்குப் பிறகு கொஞ்சம் வெட்கப்பட்டாள்.

அன்றைய தினம் சந்தியா மருத்தவமனையிலிருந்து கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டாள். ஒரு வாரமாக அக்காவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தவள் கேட்டுவிட்டாள். நீங்கள் நினைப்பது போல விபரீதமாக எதுவும் கேட்கவில்லை. தங்கையை எப்போது ஊர் சுற்றிக் காட்டுவாய் என்றுதான் கேட்டாள். அத்தானிடம் கேட்கமாட்டாயா சஞ்சு என்று மனதிற்குள் கறுவிக்கொண்டே, கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாதவனாய், அதுக்கென்ன இன்னைக்கே போலாமே என்று மங்களம் பாடிவிட்டான். சஞ்சுவோடு சேர்த்து மூன்று குழந்தைகள் குஷியானார்கள். 

ஷ்யாம் காரை எடுக்கப் போனபோது ஆட்டோவில் போகணும் போல ஆசையா இருக்கு அத்தான் என்று தடுத்துவிட்டாள். அவள் ஆசையா இருக்கு என்று சொன்னதை கேட்டிருந்தால் உங்களுக்கும் ஆசையாக இருந்திருக்கும். மங்களகரமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தொடங்கினார்கள். செளகார்பேட்டையில் ஷாப்பிங் போனார்கள். சஞ்சுவுக்கு ரஜினி என்றால் பிடிக்கும். துரதிர்ஷ்டவசமாக தலைவர் படம் எதுவும் நகரத்தில் அப்போது வெளியாகாததால், வேறு வழியில்லாமல் மா.கா.பா.ஆனந்த் நடித்த சினிமாவிற்கு போகும்படி ஆகிவிட்டது. மெரினாவுக்கு சென்று ஒரு தியானத்தையும் போட்டாயிற்று. எல்லாம் நல்லபடியாக நடந்தால் கூட வெய்யிலின் சீற்றம்தான் தாள முடியவில்லை. இன்னொருபுறம் எங்கு பார்த்தாலும் தூசு, மாசு. சென்னையிலேயே கிடந்து உருளும் தடியர்களுக்கே முடியவில்லை என்றால் சஞ்சுவின் நிலையை யோசித்துப் பாருங்கள். ஒருபுறம் தனது நாளை அத்தானின் அருகாமையில் மகிழ்வாக செலவிட்டாலும், அவளுடைய முகமெல்லாம் வாடிய மலரைப் போல ஆகியிருந்தது. வீட்டுக்கு திரும்பும்போது காய்ந்து கருவாடாக மாறியிருந்தாள். ஷ்யாமுக்கு சென்னையின் மீதே கோபமாக இருந்தது. வெளியூர்க்காரர்கள் எப்போதும் இம்மாநகரத்தை கரித்துக் கொட்டுவதில் நியாயம் இருப்பதாக நினைத்துக்கொண்டான்.

சஞ்சனா மட்டும் ஷ்யாமையும், சந்தியாவையும், குழந்தைகளையும் நினைத்து ஆச்சரியப்பட்டாள். எப்படி இவ்வளவு தூசுக்கும், மாசுக்கும் நடுவில் ஆரோக்யமாக வாழ்கிறார்கள். அக்காவிடம் நேரடியாக கேட்டேவிட்டாள். சந்தியா பதிலேதும் சொல்லாமல் ஒரு வழலையைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள். மருத்துவரின் பரிந்துரை. வழலை என்றால் என்ன என்பதை மதன் கார்க்கியிடம் கேளுங்கள். வழலை நுரை அணியும் மழலை ! வளையல் அணியும் ஒரு வானவில் ! என்ற வரிகளுக்குள் சஞ்சுவை பொருத்திப் பார்த்து கற்பனை செய்துகொண்டான் ஷ்யாம்.

சஞ்சனா அவளது அறையிலிருந்து வெளிவந்தபோது ஒரு கோடி தூலிப் மலர்கள் ஒருசேர பூத்துக் குலுங்கியதைப் போலிருந்தது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment