29 August 2013

கவர்ச்சிநடிகையும் கரப்பான்பூச்சிகளும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நானும் குமாரும் பல படிநிலைகளை கடந்து அந்த அறைக்குள் நுழைந்திருந்தோம். அது ஒரு சிறிய பாழடைந்த அறை. தனியார் மதுக்கூடங்களில் படர விட்டிருப்பதை போல மங்கலான மஞ்சள் ஒளி. ஆறுக்கு நான்கு அளவில் ஒரு ஸ்டீல் கட்டில், அதன் மீது தூசி படிந்த பழைய மெத்தை. உபயோகமற்ற பழைய பொருட்கள் சில சிதறிக்கிடக்கின்றன. சுவற்றோரமாக ஒரு பழைய டேப் ரெக்கார்டர், ரசனை வாழ்க ! ரசிகன் வாழ்க !! என்ற சித்ராவின் குரலை சன்னமாக அறையில் பரப்பிக்கொண்டிருந்தது. கீழே ஒரு சிகரெட் துண்டு பொசுக்கப்பட்டு புகைந்துக்கொண்டிருந்தது. இன்னும் நான்கைந்து இழுப்புகளாவது இழுக்கலாம். அதற்குள் அவசரப்பட்டு பொசுக்கியிருக்கிறார்கள். யார் ? தெரியவில்லை. நான்கைந்து கரப்பான்கள் விமானிகள் சாகசம் செய்துக் காட்டுவதைப் போல குறுக்கமறுக்க பறந்துக்கொண்டிருந்தன.

முதலில் என்னையும் குமாரையும் பற்றி சொல்லிவிடுகிறேன். நானும் குமாரும் பிறந்ததிலிருந்தே நண்பர்கள். அதற்காக ஒத்த சிந்தனை உடையவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். அப்படியே எதிர்மறையானவர்கள். நான் உன்னால் முடியும் தம்பி பார்த்துவிட்டு ச்சே நாமளும் நாட்டுக்காக ஏதாவது பண்ணனும்டா’ன்னு உணர்ச்சிகரமாக பேசும்போது அவன் மைக்கேல் மதன காமராஜன் பார்த்து குபுகுபுவென சிரித்துக்கொண்டிருப்பான். நான் வறுமையின் நிறம் சிவப்பு என்றால் அவன் சிகப்பு ரோஜாக்கள். ஆனால் அவனுக்கு ஸ்ரீப்ரியா தான் பிடிக்கும். எனக்கு ஸ்ரீதேவி. உன் ஆளுக்கு மூக்கு மட்டும்தான்டா பெருசா இருக்கு’ன்னு சொல்லி கெக்கேபிக்கே’ன்னு சிரித்து தொலைப்பான். அரிதாக எங்களுக்கென சில ஒருமித்த குணங்களும் உள்ளன. அப்படியொன்று தான் Katsaridaphobia. அது ஒரு மனநோய் என்று சொன்னால் மிகையாகத் தோன்றக்கூடும். அது ஒரு பயம். கரப்பான்களை கண்டால் ஏற்படக்கூடிய பயம். அதீத பயம். கரடியோடு அறையில் தங்கச்சொன்னால் கூட தங்கிவிடுவோம், ஆனால் கரப்பான்களோடு தங்க மாட்டோம். கரப்பான்களில்லாத வீடு ஏது ? இருக்கலாம். ஆனால் அவைகளுக்கும் எங்களுக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருந்தது. அவை எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க பகலில் வெளிவராது, நாங்கள் இரவில் அவற்றை தொந்தரவு செய்யமாட்டோம். சில பின்னிரவுகளில், முட்டிக்கொண்டு வந்தால் கூட விடியும் வரை அடக்கி விடுவது உண்டு. தப்பித்தவறி என்றாவது ஒருநாள் ஒப்பந்தம் மீறப்பட்டு பகலில் அவை வெளிவந்தால் அவ்வளவுதான் ! நானாவது பரவாயில்லை. மூன்றாவது ஆள் யாராவது இருந்தால் பயப்படாதது போல காட்டிக்கொள்வேன். பயமில்லாத மாதிரி நடிப்பதுதான் தைரியம் என்று கமலே சொல்லியிருக்கிறாரே. ஆனால் அவனோ அலறித் துடித்திடுவான். அடுத்த இரண்டு நாட்களுக்கு கரப்பான்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுவான்.

எதற்காக இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால் முதல் பத்தியில் விவரித்த அந்த பாழடைந்த அறையில் கரப்பான்கள் பறந்துக்கொண்டிருக்கின்றன. அதுவும் பாரதியார் கவிதை பூனைக்குட்டிகளை போல வெவ்வேறு நிறங்களில் - பச்சை, மஞ்சள், நீலம். நீளமும் அதிகம். ஒவ்வொன்றும் சுமார் ஆறு அங்குல நீளம் இருக்கக்கூடும். ஏனோ அறையை விட்டு வெளியேறத் தோன்றவில்லை. குண்டு வெடித்தால், துப்பாக்கிச்சூடு நடந்தால் எல்லோரும் தரையில் குப்புற படுப்பார்களே, அதுபோல அந்த ஸ்டீல் கட்டிலிற்கு அடியில் படுத்துக்கொண்டோம். கரப்பான்கள் கொஞ்ச நேரம் பறந்துவிட்டு ஓய்ந்துவிடும் என்பது எங்கள் எண்ணம் அல்லது அவை ஒன்றோடு ஒன்று புணர்ந்துக்கொள்ள துவங்கலாம். குப்புற படுப்பதில் இன்னொரு நன்மையும் இருந்தது. அந்த கேடுகெட்ட கரப்பான்களை கண்ணால் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நிமிடங்கள் நகர்ந்தன. கரப்பான்கள் ஓய்வதாக தெரியவில்லை. மாறாக கட்டிலுக்கு அடியிலும் பறந்து வரத்துவங்கின. அவை உண்மையிலேயே பறந்து வந்தனவா அல்லது எங்கள் பிரமையா என்று தெரியவில்லை. பிரமையாகத்தான் இருக்கக்கூடும். இதை டைப்படித்துக் கொண்டிருக்கும் கூட என் கால்களில் ஒரு கரப்பான் ஊர்ந்துக்கொண்டிருப்பதை போல உணர்கிறேன்.

பொறுத்தது போதும் பொங்கியெழு என்ற கண்ணாம்பாள் வசனத்தை பேசிக்கொண்டே குமார் எழுந்துவிட்டான். அவனது பயம் எல்லை கடந்துபோய் தைரியமாக மாறியிருந்தது. கீழே சிதறிக்கிடந்த கழிவுப்பொருட்களில் எதையோ தேடினான். நவநாகரிக பெண்கள் அணியும் உயர்-குதிகால் காலணி ஒன்று அவன் கைகளில் கிடைக்கிறது. அதை எடுத்து கரப்பானின் முகத்தில் கடுங்கோபத்துடன் அறைகிறான். கரப்பானை கவிழ்த்திப் போட்டது போல கரகரவென ஒரு கன்னிப்பெண்ணின் சிரிப்பு சப்தம். ஒரு பிரபல சினிமா நடிகையின் சாயல். அதுவும் கவர்ச்சி நடிகை. கண்களை கசக்கிக்கொண்டு எழுந்தேன். அவளேதான் ! அரைஜான் செருப்பை வைத்து அறைந்தால் நான் இறந்துவிடுவேனா என்ன ? சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்கிறாள். இம்முறை கலகலவென. இறக்கத்தான் இல்லையே தவிர அவளுடைய இடது கன்னம் செருப்படியால் பழுத்திருந்தது. எனக்கு புரியவில்லை. குமாரா கவர்ச்சி நடிகையை அறைந்தான். அவன் அவளுடைய பரம ரசிகன் ஆயிற்றே. அந்த நடிகை அறிமுகமான திரைப்படம். ஆமாம் அப்போது அவள் வெறும் நடிகை. ‘கவர்ச்சி’ அடைமொழி இல்லை. அந்த படத்தில் ஒரு காட்சி, நடிகை சில கோப்புகளோடு கதாநாயகனிடம் வருவார். அப்போது அதிலிருந்து காகிதங்கள் காற்றில் பறக்கும். நடிகை குதித்து குதித்து காகிதங்களை பிடிப்பார். குட்டைப் பாவாடை அணிந்திருப்பார். அந்தக் காட்சியை திரையரங்கில் பார்த்தபோது குமார் ஸ்க்ரீனுக்கு முன்னால் போய் நின்றுக்கொண்டு, ஸ்க்ரீனை தூக்கிப் பார்த்தால் புதிதாக ஏதாவது தெரியுமா என்று யோசித்தவன். அதுகூட பரவாயில்லை. தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் ஒரு பாடல். நடிகை கவர்ச்சி நடிகையாகியிருந்தார். அந்த பாடலில் நம்ம நடிகை, அனுஷ்காவுடன் போட்டி போட்டுக்கொண்டு ஆ(ட்)டுவார். அதில் நடிகை இடுப்பை ஆட்டும்போது அவளுடைய தொப்புளில் ஏற்படும் அதிர்வையும் முனியாண்டி விலாஸில் ஹாப்பாயில் போட்டு எடுத்துவந்து மேசையில் வைக்கும்போது அதன் மஞ்சள்கருவில் ஏற்படும் அதிர்வையும் ஒப்பிட்டு வர்ணிப்பான். ரசனைக்காரன். அவனா அவளை அறைந்தான் ?

இப்போது நடிகையின் மீதான குமாரின் விசுவாசத்தை சோதிக்கவோ யோசிக்கவோ நேரமில்லை. உடனடியாக அவளை ஏதாவது செய்தாக வேண்டும். அதாவது கொன்றாக வேண்டும். சுற்றிமுற்றி ஆயுதங்களை தேடுகிறேன். விரைவாக செயல்பட்டு அந்த அறைக்குள்ளிருந்து இன்னொரு அறைக்கு செல்லக்கூடிய கதவை திறக்கிறேன். அங்கேயும் ஒரு கட்டில். அதன்மீது ஒரு வெள்ளைக்கார ஜோடி அமர்ந்தபடி புணர்ந்துக்கொண்டிருக்கிறது. அறைக்குள் பறந்துக்கொண்டிருந்த மற்ற கரப்பான்களாக இருக்கலாம். ஏற்கனவே சிறுவயதில் ஒருமுறை பல்லிகள் புணர்வதை பார்த்த பாவம் என்னிடம் சேர்ந்திருந்தது. இது வேறயா என்று கதவை அவசர அவசரமாக அடைத்துவிட்டு திரும்புகிறேன்.

குமாருக்கு குழப்பம் உச்சத்திலிருந்தது. குறிப்பாக விவரிக்கப்பட்டுள்ள சம்பவம் எந்த காலகட்டத்தில் நடைபெற்றது ? அல்லது இனிமேல் நடைபெற போகிறதா ? சில கமல் படங்களின் பெயரையும், ஸ்ரீப்ரியாவையும், ஸ்ரீதேவியையும் அவன் குறிப்பிட்டிருப்பதை படிக்கும்போது சம்பவம் எழுபதுகளிலோ எண்பதுகளிலோ நிகழ்ந்திருக்கக்கூடும். ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டழகி கவர்ச்சி நடிகை வருகிறாளே ?

சிந்தித்துக்கொண்டே திரும்பியபோது நடிகை மின்விசிறியின் உதவியோடு தலைகீழாய் தொங்கிக்கொண்டிருக்கிறாள். மேசையின் மீது கத்திரிக்கோல் இருக்கிறது. அதை வைத்து அவளைக் கொல்வதற்கு ஏதேனும் சாத்தியங்கள் இருக்கிறதா ? என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே அதனருகிலிருந்த புத்தம் புதிய வில்கின்சன் ஸ்வார்ட் ப்ளேடு கண்ணில் படுகிறது. தப்பு – பார்வையில் படுகிறது. கண்ணில் பட்டால் ரத்தம் குபுகுபுவென கொட்டிவிடாது. ப்ளேடை கொண்டுவந்து தொங்கிக்கொண்டிருக்கும் அவளுடைய கைகளில் கோடுகள் இழுக்கிறேன். ரத்தம் கசிகிறது. மணிக்கட்டில் ஆழமாக ஒரேயொரு கீறலிட்டால் ஆளு க்ளோஸ் என்று மூளை சொல்கிறது. ஆனால் மனது மறுக்கிறது. முன்ன பின்ன கொலை செய்திருந்தால் தானே !

இப்பொழுதும் என்னுடைய அறைக்குள் அந்த கவர்ச்சி நடிகை சலனமில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கிறாள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 August 2013

பதிவர் சந்திப்பு: சில கேள்விகளும் பதில்களும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில், வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி (01.09.2013) பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அதுகுறித்த ஒரு கேள்வி – பதில் பகுதி. (புதியவர்களுக்கானது).

பதிவர் சந்திப்பு எங்கே, எப்போது நடைபெறுகிறது ?
01.09.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை சென்னை, வடபழனி கமலா திரையரங்கத்திற்கு அருகிலுள்ள இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெறுகிறது.

யாரெல்லாம் கலந்துக்கொள்ளலாம் ?
வலைப்பதிவர்கள், ஃபேஸ்புக் பயனாளர்கள், ட்விட்டர்கள், ப்ளஸ்ஸர்கள், வேறு ஏதேனும் சமூக வலைத்தளம் விட்டுப் போயிருந்தால் அதனுடைய பயனாளர்கள், வாசகர்கள். சுருங்கச் சொல்வதென்றால் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்.

பதிவர் சந்திப்பில் அப்படி என்னதான் நடக்கும் ?
வழக்கம் போல, பதிவர்கள் சுய அறிமுகப்படலம். சிறப்பு விருந்தினர்களின் (எழுத்தாளர்கள் திரு.பாமரன் மற்றும் திரு.கண்மணி குணசேகரன்) உரை. சில புத்தக வெளியீடுகள். நிறைய அரட்டை.

என்னென்ன புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன ?
மொட்டைத் தலையும் முழங்காலும் – சேட்டைக்காரன்
இதழில் எழுதிய கவிதைகள் – சதீஸ் சங்கவி
வெற்றிக் கோடு – மோகன்குமார்
அவன் ஆண் தேவதை – யாமிதாஷா

சாப்பாடு உண்டா ?
நிச்சயமாக. சைவம், அசைவம் இரண்டும் கொண்ட மதிய உணவு உண்டு. அதுபோக இடையிடையே டீ, சூஸ் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், உணவு ஏற்பாட்டிற்காக முன்பே வருகையை உறுதிப்படுத்திவிடுவது நல்லது.

யாரிடம் உறுதிப்படுத்த வேண்டும் ?
வரவேற்புக் குழுவில் இடம் பெற்றுள்ள கே.ஆர்.பி.செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார், அஞ்சா சிங்கம் செல்வின், காணாமல் போன கனவுகள் ராஜி, தென்றல் சசிகலா, ஆரூர் மூனா செந்தில் ஆகியோரில் யாராவது ஒருவரிடம் மெயில் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.

மொத்தம் எத்தனை பேர் வருவார்கள் ?
இதுவரையில் கிட்டத்தட்ட 250 பேர் தங்களுடைய வருகையை உறுதி செய்திருப்பதாக தகவல். இன்னமும் கூடலாம். வருகையை உறுதி செய்தவர்கள் லிஸ்ட்.

இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது ?
விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமான பணம் வசூலாகும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் பணத்தில் ஏதேனும் நற்செயல்கள் செய்யலாம் என்பது திட்டம்.

பதிவர் சந்திப்பை யார் ஏற்பாடு செய்கிறார்கள் ? இதனால் அவர்களுக்கென்ன லாபம் ?
இதற்கென ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஒன்று இயங்குகிறது. அதன் விவரங்களை இந்த சுட்டியில்  காணலாம். இதுபோன்ற சந்திப்புகளால் அவர்களுக்கு எதுவும் நன்மை இருப்பதாக தெரியவில்லை.

அப்ப யாருக்குத்தான் லாபம் ?
லாபம், நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை, இது நம் உணர்வு, ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம்.

புதுப்பதிவர்கள் இது மாதிரி சந்திப்புக்கு வர தயங்கறாங்களாமே ?
இருக்கலாம். அவர்களுக்கு ஆரம்ப காலத்தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் புதுப்பதிவர்கள் கட்டாயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் தான் தமிழ்வலைப்பதிவுகளின் எதிர்காலம். அவர்களை இழந்தால் வலைப்பதிவுகளில் தமிழ் மெல்லச்சாகும்.

எல்லாம் சரி, சும்மா பதிவு போட்டா ஆச்சா ? எனக்கான அழைப்பிதழ் எங்கே ?
மன்னிச்சிக்கோங்க பாஸ். இதோ உங்களுக்கான அழைப்பிதழ்.

மேலதிக தகவல்களுக்கு:
மதுமதி kavimadhumathi@gmail.com 9894124021
பட்டிகாட்டான் ஜெய் pattikattaan@gmail.com 9094969686
சிவக்குமார் madrasminnal@gmail.com 9841611301
ஆரூர்மூனா.செந்தில்குமார் senthilkkum@gmail.com 8883072993
அஞ்சாசிங்கம் செல்வின் selwin76@gmail.com 9444125010
பாலகணேஷ் bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 August 2013

கேப்டன்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இணையவெளியில் அதிகமாக கேலி செய்யப்படுபவர்களில் ஒருவர். சமகாலத்தில் அவருடைய ரசிகர் என்று யாரேனும் சொன்னால், சொன்னவர் சர்வநிச்சயமாக எள்ளி நகையாடப்படுவார். அவருடைய உருவம், வசன உச்சரிப்பு, சண்டைமுறை, ஆங்கிலம் பேசும் முறை என்று அரசியல் வரைக்கும் எல்லா வகையிலும் அவரை ஜாலியாக கிண்டலடிப்பதில் துவங்கி சீரியஸாக விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனாலும் போகிறபோக்கில் எல்லாம் அவரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. தமிழகத்தில் மிமிக்ரி கலைஞர் என்றால் கண்டிப்பாக அவருக்கு நாக்கை மடித்து, “ஆங்...!” என்று சொல்லும் அவருடைய ஸ்டைல் தெரிந்திருக்க வேண்டும். சிகப்புநிற தோல் இல்லை, புஜபல பராக்கிரமசாலியும் இல்லை, சினிமாவில் பெரிய பின்புலம் இல்லை. ஆனாலும், ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில், குறிப்பாக பி, சி செண்டர்களின் பேராதரவை பெற்று பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர். கேப்டன் விஜயகாந்த் !

யாரிந்த விஜயகாந்த் ?

விஜயகாந்த் அறுபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு ஆகஸ்ட் இருபத்தி ஐந்தில் நாராயணனாக பிறந்தார். ஆண்டாள் அழகர் தம்பதியர் ஈன்றெடுத்தனர். பிறந்த மண் மதுரை. நாராயணன் என்பது அவருடைய தாத்தாவின் பெயர். அந்த பெயரைச் சொல்லி அழைக்கும் சங்கடத்தை தவிர்ப்பதற்காக விஜயராஜ் என்ற கூப்பிடுபெயரையும் சூட்டி வைத்தனர். சினிமா அவரை காந்தம் போல ஈர்த்து ராஜ் என்பதற்கு பதிலாக ‘காந்த்’ என்ற பின்னொட்டை சேர்த்துக்கொண்டது. பின்னாளில் இயக்குநர் விஜயன், அமிர்தராஜ் என்ற புதுப்பெயரை சூட்டினாலும் கூட விஜயகாந்த் என்பதே நிலைத்துவிட்டது.

விஜயகாந்தின் குடும்பம் பெரியது. உடன்பிறப்புகளில் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று எல்லோரையும் வாய்க்கப்பெற்றவர் விஜயகாந்த். ஆண்டாள் – அழகர் தம்பதியருக்கு விஜயகாந்துடன் சேர்த்து மொத்தம் எட்டு குழந்தைகள். விஜயகாந்துக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. மூன்றாவதாக விஜயகாந்த். ஒரு தங்கை, நான்கு தம்பிகள். கேட்கவே மலைப்பாக இருக்கிறது. விஜயகாந்த் அவருடைய வீட்டில் ஒரு ஆறிலிருந்து அறுபது வரை ரஜினிகாந்த். தங்கை, தம்பிகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்துவிட்டு திரைப்படத்துறையிலும் முத்திரையை பதித்துவிட்டு தன்னுடைய முப்பத்தி ஏழாவது வயதில் தான் அண்ணியாரை கை பிடித்தார்.

விஜயகாந்தின் தந்தையார் மதுரையில் ரைஸ்மில் முதலாளி. விஜயகாந்தும் பத்தாம் வகுப்போடு பள்ளிக்கு நிரந்தர விடுப்பு எடுத்துக்கொண்டு ரைஸ்மில்லை கவனித்து வந்தார். அப்போது விஜயகாந்தின் நண்பர் எம்.ஏ.காஜா மதுரையில் சினிமா கம்பெனி வைத்திருந்தார். 1979ம் ஆண்டு சினிமா பிரவேசம் செய்த எம்.ஏ.காஜா நட்பின் அடிப்படையில் தன்னுடைய இனிக்கும் இளமை திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். விஜயகாந்த் என்ற பெயரும் அவர் சூட்டியது தான். அப்படித்தான் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கை துவங்கியது.

சராசரியாக போய்க்கொண்டிருந்த அவருடைய சி.வா.யில் திருப்புமுனை ஏற்படுத்தியது யாரென்று நினைக்கிறீர்கள் ? தி ஒன் அண்ட் ஒன்லி – எஸ்.ஏ.சி ! பஸ்.ஏ.சியின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை மாபெரும் வெற்றி பெற்றது. எஸ்.ஏ.சி.க்கு அதுதான் முதல் படம். கிடைத்த நடிகரை கப்பென பிடித்துக்கொண்டு தொடர்ந்து விஜயகாந்தை வைத்தே படங்கள் எடுக்கலானார். எஸ்.ஏ.சி, விஜயகாந்தை வைத்து இதுவரையில் பதினேழு படங்களை இயக்கியிருக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். எஸ்.ஏ.சி.யைப் போலவே விஜயகாந்துடன் இணைந்து வளர்ந்த இன்னொரு இயக்குநர் ராம.நாராயணன். அவரும் விஜயகாந்தை வைத்து அதே எண்ணிக்கையில் படங்களை இயக்கியிருக்கிறார்.

புகழின் படிகளில் முன்னேறிய விஜயகாந்த், ஒரு கட்டத்தில் ரஜினிகாந்துக்கு மாற்றாக இருந்திருக்கிறார். ரஜினியை வைத்து படம் பண்ண முடியாதவர்கள் எல்லாம் நேரே வண்டியை விஜயகாந்த் வீட்டிற்கு செலுத்தியிருக்கிறார்கள். சிறு முதலீட்டாளர்களின் பொன் முட்டையிடும் வாத்தாக வாழ்ந்திருக்கிறார் விஜயகாந்த். 1984 மற்றும் 1985 ஆண்டுகளில் விஜயகாந்த் தன்னுடைய புகழின் உச்சத்தில் இருந்திருக்கிறார். இரண்டே ஆண்டுகளில் முப்பத்தி ஐந்து படங்கள். யோசித்துப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. சராசரியாக இருபது நாட்களுக்கு ஒரு படம். அவற்றில் நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் போன்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களும் அடங்கும். தமிழ் சினிமா தன்னை முதன்முதலில் விஜயகாந்த் மூலமாகத்தான் முப்பரிமாணத்தில் வெளிக்காட்டிக்கொண்டது. திரைப்படம்: அன்னை பூமி. 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில… சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் எழுதி தயாரித்த ஊமை விழிகள். 1984ல் மதுரை சூரன் முதல் ஜனவரி 1 படம் வரை 18 படங்களும் 1985ம் ஆண்டில் மட்டும் அலை ஓசை முதல் நானே ராஜா நானே மந்திரி வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். வேறு எந்த ஹீரோவும் செய்யாத சாதனை இது. விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம் இனிக்கும் இளமை.

அந்த சமயத்தில் நடந்த ஒரு பட விழாவில் தான் கலைஞர் முன்னிலையில் புரட்சிக்கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது. சூட்டியவர் கலைப்புலி தாணு.

நிறைய துணை நடிகர்களை தன்னுடன் சேர்த்து வளர்த்துவிட்டிருக்கிறார் விஜயகாந்த். ஆனந்த் ராஜ், அருண் பாண்டியன் (என்கிற துரோகி), மன்சூர் அலிகான் போன்றவர்களை நிறைய விஜயகாந்த் படங்களில் பார்க்கலாம். போலவே விஜய்யுடன் செந்தூரப்பாண்டி, சரத்குமாருடன் கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் நடித்து அவர்களை ஆரம்பகாலத்தில் உயர்த்தி விட்டிருக்கிறார். இதனை விஜய்யே பல மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தந்த காலக்கட்டங்களில் திரைப்பட கல்லூரி மாணவர்களின் திறமைகளை தட்டிக் கொடுத்து தானும் வெற்றிக் கண்டவர் நம்ம கேப்டன். அப்படி வெளிவந்த படங்களில் முக்கியமான படங்கள் செந்தூரப்பூவே மற்றும் ஊமை விழிகள்.

விஜயகாந்தின் நண்பர் அ.செ.இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர் (இப்போது இல்லை). வேற்றுமொழிப்படங்களே நடிக்கக்கூடாது என்ற கொள்கையோடு இருந்த விஜயகாந்த் அவருக்காக மே டே என்னும் ஆங்கிலப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பூஜையும் போடப்பட்டது. அசம்பாவிதமாக அதுவும் வெளிவரவில்லையாம். 

புகழின் உச்சியில் இருந்தபோதும் மற்ற மொழிப் படங்களில் நடிக்க சம்மதிக்காத விஜயகாந்த் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார், அது 1975ல் வெளிவந்த Zakhmee. படத்தைப் பற்றிய செய்திகள் இணையத்தில் எங்கும் கிடைக்கப்பெறவில்லை. விஜயகாந்த் நடித்த படங்களில் முக்கியமான படம் சின்ன கவுண்டர். 1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டு ஓடியது. சின்ன கவுண்டரை பார்த்த ரஜினி, உதயகுமாரை அணுகி அதுபோன்றதொரு படம் தனக்கு வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கேட்டு வெளிவந்தது தான் எஜமான். 

நடனம் ஆடுவதிலும் தலைவர் கில்லி. இதை ஏனோ பல இயக்குனர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. பரதன் படத்தில் வரும் புன்னகையில் மின்சாரம், மாநகர காவல் படத்தில் வரும் வண்டிக்காரன்  சொந்த ஊரு மதுரை இவரது நடனத்திறமையை வெளிக்கொண்டு வந்த பாடல்கள்.

விஜயகாந்த்துடைய கால்கள் உதைத்து பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவருடைய கைகள் கொடுத்து பழக்கப்பட்டவை. பொன்மனச் செம்மலை பார்த்து வளர்ந்த அவருக்கும் அந்த குணம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய அலுவலகத்தில் குறைந்தது நூறு பேராவது சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (விஜயகாந்த் ஆபீசுல எப்போ கறிசோறு போடுறாங்க என்பதை டைரியில் குறித்து வைத்திருக்கும் அன்னவெறி கண்ணையனை நினைவுகூரவும்).

தமிழ் சினிமாவில் துரிதமாக நூறாவது பட இலக்கை எட்டியவர்களில் ஒருவர் விஜயகாந்த். அவருடைய நூறாவது படம் கேப்டன் பிரபாகரன். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் படத்திற்கு அப்பெயரை சூட்டினார். படம் இமாலய வெற்றி. அன்றிலிருந்து புரட்சிக்கலைஞருடன் கேப்டன் என்கிற புனைப்பெயரும் இணைந்துக்கொண்டது. கேப்டன் பிரபாகரன் என்பது சமகாலத்தில் சிலர் செய்வது போல வணிக நோக்கத்திற்காக சூட்டிய பெயரல்ல. FYI, விஜயகாந்த்துடைய மூத்த மகனின் பெயர் விஜய பிரபாகரன் !

விஜயகாந்த்தின் அரசியல் நிலைப்பாட்டின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் மற்றவர்களைப் போல வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்என்று சொல்லி யாரையும் ஏமாற்றவில்லை. இதுவரை, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில், இவர் மட்டும் தான் எடுத்த எடுப்பிலேயே கட்சி ஆரம்பித்தவர். மற்றவர்கள் எல்லாம், ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் இருந்து பின் பிரிந்து கட்சி ஆரம்பித்தவர்கள். தன்னுடைய படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டால் உடனே பம்மிக்கொண்டு ஓடி ஒளியும் கோழையும் அல்ல. ச்சும்மா Time to Lead என்று கேப்ஷன் போட்டாலே துரத்தியடிக்கும் கேவலமான அரசியல் சூழல் கொண்ட தமிழகத்தில், கட்சி துவங்கி, சில தேர்தல்களை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருக்கும் அவருடைய துணிச்சல், தன்னம்பிக்கை சர்வநிச்சயமாக பாராட்டுக்குரியது தான் ! ஆங் !

ஓவியம்: விஜய்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment