28 February 2015

எஸ்.எஸ்.ரஜூலா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சிறு வயதிலிருந்தே கப்பல்கள் மீது எனக்கு ஒரு ‘க்ரேஸ்’ உண்டு. நான் அந்தமானுக்கு கப்பலில் செல்ல முடிவு செய்தபோது அனுபவஸ்தர்கள் எச்சரித்தார்கள். சில மணிநேரங்களில் கப்பல் போரடித்துவிடும் என்றார்கள். அப்படியெல்லாம் நடக்காது என்று நான் உறுதியாக நம்பினேன். யாருடைய பேச்சையும் கேட்காமல் கப்பலில் பயணித்தேன். கப்பல் என்னை ஏமாற்றவில்லை. குறிப்பாக, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு தம்முடன் நண்பர்களுடன் அரட்டை அடித்த அந்த இரண்டு நாட்களை நினைத்தால் இப்போதும் கூட இன்னொரு முறை கிடைக்காதா ஏக்கமாக இருக்கிறது. முழுமையாக இரண்டரை தினங்கள் நம்மைச் சுற்றி வெறும் கடல் மட்டும் என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பரவச அனுபவம்.

அப்போதிலிருந்தே கப்பல் மீதான எனது ஆவல் ஒரு சுற்று கூடுதலாகிவிட்டது. பின்பொரு நாள் எதார்த்தமாக ஆயிரத்தில் ஒருவன் (புதியது) படம் பார்த்தபோது அதில் இடம்பெற்ற கப்பல் நான் பயணம் செய்தது என்று நினைவுகூர்ந்து சிலாகித்துக்கொண்டேன். துப்பாக்கி க்ளைமாக்ஸ் நினைவிருக்கிறதா ? அது படமாக்கப்பட்ட கப்பலின் பெயர் சாகர் சந்தானி. ஆராய்ச்சிக் கப்பல். சமீபத்தில் பார்த்த அனேகன் படத்தில் ஒரு கப்பல் காட்சி வருகிறது. பக்கா இந்திய பயணிகள் கப்பல். பார்த்ததும் பரவசமாகி கப்பலின் பெயரை திரையில் தேடினேன். நான் எதிர்பார்த்த கப்பல் இல்லை. கப்பலின் பெயர் எஸ்.எஸ்.ரஜூலா. (உண்மையில் ரஜூலா கப்பல் தற்சமயம் அழிக்கப்பட்டுவிட்டது என்று பின்னர் தெரிந்துக்கொண்டேன். எனவே படத்தில் இடம்பெற்றது என்ன கப்பல் என்று தரமான பிரதி வந்ததும் கண்டுபிடிக்க வேண்டும்).

எஸ்.எஸ்.ரஜூலா. வரலாற்று சிறப்புமிக்க கப்பலாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டு தான் கூகுள் செய்தேன். அவ்விதமே. டாக்டர் எஸ்.ஜெயபாரதி என்கிற பேராசிரியர் ரஜூலா கப்பலைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். 

ரஜூலா கப்பல் 1923ம் ஆண்டு பார்க்லே நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. கப்பலின் பெயரில் உள்ள எஸ்.எஸ் என்பது ஸ்டீம் ஷிப் (நீராவிக் கப்பல்) என்பதை குறிக்கிறது. 

முந்தைய தலைமுறை மலேசிய / சிங்கை வாழ் இந்தியர்களுக்கு ரஜூலா கப்பலை கண்டிப்பாக நினைவிருக்கும். சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாக பர்மா, பினாங்கு (மலேசியா), சிங்கப்பூர், அந்தமான், நிகோபர், இந்தோனேசியா பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் கப்பல். மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாய்மரக்கப்பல்களில் பயணம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட நீராவிக்கப்பல்கள் அறிமுகமாயின. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் லட்சக்கணக்கான கூலிகள் மலேசியா, சிங்கப்பூருக்கு (அப்போது பிரிட்டிஷ் மலாயா) அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் போக்குவரத்துக்காக ரஜூலா உட்பட சில கப்பல்கள் செயல்பட்டு வந்தன. இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் கல்கத்தா இந்திய தலைநகராகவும், பர்மா பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு அங்கமாகவும் செயல்பட்டு வந்தது. 

தினசரி அலுவலகத்திற்கு பேருந்திலோ ரயிலிலோ பயணிப்பவர்கள் வாடிக்கையான சக பயணிகளின் முகங்கள் பரிட்சயம் ஆகியிருக்கும் அல்லவா ? இதே போல கப்பலிலும் ஒருவருக்கு ஒருவர் பரிட்சயமான பயணிகள் உண்டு என்றால் நம்ப முடிகிறதா ? கப்பலின் கடைசி வகுப்பில் இதுபோன்ற வாடிக்கையான ஆசாமிகளை காண முடியும். பெரும்பாலும் வியாபாரிகளாக இருப்பார்கள்.

இன்றைய இந்திய பயணிகள் கப்பல்களில் டீலக்ஸ், இரண்டாம், மூன்றாம் மற்றும் பங்க் வகுப்புகள் உள்ளன. பங்க் என்பது ரயிலில் உள்ளது போல மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட ஒரு நீண்ட அறை. ரஜூலாவில் இவை தவிர்த்து ‘டெக்’ என்ற வகுப்பும் இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட ரயிலில் உள்ள முன்பதிவு செய்யாதவர்களுக்கான பகுதியைப் போன்றது. தனியாக இடம் ஒதுக்கப்பட மாட்டாது. சீக்கிரமாக ஏறி கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான். இது குறித்து உற்சாகமாக குறிப்பிடுகிறார் ஜெயபாரதி. அந்தக்கால திரையரங்குகளில் முக்கால்வாசி தரை டிக்கெட்டுதான், அப்புறம் பெஞ்ச் வரிசைகள், கடைசியாக இருக்கைகள். இருக்கை ஆட்கள் எல்லாம் இறுக்கமாக அமர்ந்து படம் பார்க்கும்போது தரை டிக்கெட் பகுதியில் கொண்டாட்ட மயமாக இருக்கும். அதுபோல டெக்கில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவும், வியாபாரிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்குள் பயண நேரத்திற்குள் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டு ஆடிப் பாடிக்கொண்டு இருப்பார்களாம்.

ரஜூலா போக்குவரத்து காரணமாக நாகப்பட்டினத்தில் அந்திக்கடை என்ற சந்தை பிரபலமாக இருந்தது. சென்னையின் பர்மா பஜார் போன்றது. சாக்லேட்டுகள், சிகரெட்டுகள், சிறிய ட்ரான்ஸிஸ்டர்கள் உட்பட நம்மவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் பல வெளிநாட்டு பொருட்கள் அந்திக்கடையில் விற்பனையாகும்.

இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவை ஜப்பான் கைப்பற்றியது. அந்த சமயத்தில் பர்மாவை மீட்கும் பொறுப்பு லார்ட் மவுண்ட் பேட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தனது கடற்படைக்காக ரஜூலாவை பர்மாவிற்கு வரவழைத்துக்கொண்டார். அது மருத்துவ கப்பலாக செயல்பட்டது.

ரஜூலாவை பழுதாகாத கப்பல் என்று அன்றைய காலகட்டத்தில் சொல்வார்கள். 1966ல் ஏற்பட்ட புயலையும் பேரலைகளையும் தாக்கு பிடித்தது ரஜூலா. ‘ரங்கத்’ என்ற பெயரில் சிலகாலம் ஓடிய ரஜூலா இறுதியாக 1974ம் ஆண்டு மஹாராஷ்திர கப்பல் உடைக்கும் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு உடைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

அனேகன் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் காட்சி அது. மேலோட்டமாக பார்த்தால், அந்த காட்சிக்கு கப்பலை பற்றிய டீடெயிலிங் தேவையே இல்லை. எனினும், ரஜூலாவையும், ரஜூலாவிற்கும் பர்மாவுக்கும் இடையேயான தொடர்பையும் நினைவுகூர்ந்து அதனை காட்சிப்படுத்திய படக்குழுவினரை வியக்காமல் இருக்க முடியவில்லை.

உதவிய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 February 2015

சென்னைக்கு மிக அருகில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜீவ்காந்தி சாலை எழுதிய விநாயக முருகனின் இரண்டாவது நாவல். தயக்கத்துடன்தான் படிக்கத் துவங்கினேன். ஏனென்றால் என்னிடம் உள்ள ஒரு கெட்டபழக்கம், ஒரு புத்தகத்தை பாதி படித்துக்கொண்டிருக்கும்போது பிடிக்காமல் போனால் உடனே தூக்கி கடாசிவிட மாட்டேன். எப்பாடு பட்டாவது அந்த புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட முயற்சி செய்வேன். இது எங்கே போய் முடியும் என்றால் நான்கைந்து நாட்களில் முடித்துவிட வேண்டிய புத்தகம் ஒன்றிரண்டு மாதங்கள் வரை நீளும். தேவையில்லாத மன உளைச்சல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே ராஜீவ் காந்தி சாலை படிக்கும்போது இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டேன் என்பதால் ஏற்பட்ட தயக்கம்.

சென்னைக்கு மிக அருகில் அப்படியில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சித்திரை என்கிற பெரியவர் தான் கதையின் ஹீரோ. சென்னைக்கு மிக அருகில் உள்ள மணிமங்கலம் என்கிற கிராமத்தைச் சுற்றி கதை நகர்கிறது. அக்கிராமத்தில் வசித்துவரும் நில உரிமையாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சித்திரை மட்டும் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க மனம் ஒப்பாமல் சிறிய அளவில் விவசாயம் செய்துவருகிறார். அப்படியொரு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருபவரை இந்த சமூகம் எப்படியெல்லாம் நெருக்குகிறது என்பதுதான் பிரதான கதை.

இதனோடு நூல் பிடித்தாற்போல சில கிளைக்கதைகளும் வருகின்றன. எப்படியென்றால் மணிமங்கலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மருதம் பில்டர்ஸ், அதனுடைய விளம்பரப் படங்கள் ஒளிபரப்பாகும் கேலக்ஸி டிவி, அந்த விளம்பரங்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை, அந்த சின்னத்திரை நடிகைக்கும் ஒரு சாமியாருக்கும் இடையே நடந்த சல்லாபம்... இப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல கிளைக்கதைகள். இதிலுள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், நித்தியானந்தா – ரஞ்சிதா விவகாரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள், பள்ளி பேருந்து விபத்தில் சிறுமி பலியான விவகாரம், ஆழ்துளை கிணற்றில் சிறுவர் / சிறுமியர் விழுந்து பலியாகும் விபத்துகள் உள்ளிட்ட பல உண்மைச் சம்பவங்களை புனைந்து எழுதியிருக்கிறார் விநாயக முருகன்.

முந்தைய நாவலில் காணப்பட்ட குறைகளை கவனமாக களைந்தெடுத்திருக்கிறார் விநாயக முருகன். கூடவே சுவாரஸ்யத்தை சேர்ப்பதற்காக எதை எந்த இடத்தில் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று குறிப்பறிந்து கச்சிதமாக சேர்த்திருக்கிறார். 

எனினும் விநாயக முருகனின் இரண்டு நாவல்களுடைய தொனி மட்டும் ஒன்றுதான் – காலம் கெட்டுப்போய்விட்டது. அதாவது வயதானதும் மனிதர்கள் சமகால மாற்றங்களை சலித்துக்கொள்வார்கள் இல்லையா ? இந்த காலத்து பசங்க பெரியவங்க பேச்சை கேக்குறதில்ல, அரைகுறை துணியை உடுத்திக்கிட்டு திரியுதுங்க, சினிமாவே கதின்னு கெடக்குறாங்க, டிவியில போடுற கண்ட கருமத்தையும் பாக்குறாங்க இப்படி நிறைய. கூடவே, நாங்கள்லாம் அந்த காலத்துல என்று தொடங்கக்கூடிய வியாக்கியானங்கள். இப்படி நாவல் முழுவதும் பழமைவாதம் விரவிக் கிடக்கிறது. இது சில இடங்களில் ஈர்ப்பும் ஏற்பும் உடையதாக இருந்தாலும் பல இடங்களில் எரிச்சலையே தருகிறது. இத்தனைக்கும் நானே ஒரு பழமைவாதி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம், மக்களுக்கு எல்லாமே செய்திதான், இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கத் துவங்கிவிடுவார்கள் என்பது போன்ற வசைகள். இவற்றை படிக்கும்போது ‘உங்கொப்பன் செத்தப்ப எத்தன நாள் அழுத ?’ என்கிற ராஜனின் ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. தயவு செய்து அப்டேட் ஆகுங்கள் விநாயக முருகன்.

விநாயக முருகனின் எழுத்தில் ஆச்சரியமூட்டிய ஒரு விஷயம், இடையிடையே சில இடங்களில் கனவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். தூக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி தான். இதற்கு முன்பு சுஜாதாவின் சில நாவல்களில் இதுபோன்ற கனவுகளை படித்திருக்கிறேன். அவற்றை படிக்கும்போது நிஜமாகவே கனவு காணும் ஓர் உணர்வு ஏற்படும். விநாயக முருகன் எழுதியிருக்கும் கனவுகள் வேறு வகையானது. குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தின் சூழ்நிலையை வாசகர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் பொருட்டோ அல்லது உருவகப்படுத்தி சொல்லும் பொருட்டோ வரும் கனவுகள். மொத்தத்தில், படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

இறுதியாக, சென்னைக்கு மிக அருகில் போரடிக்காமல் படிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு நாவல். ஆனால், அதில் எழுத்தாளர் மிகவும் சீரியஸாக சொல்ல முயன்றிருக்கும் விஷயங்கள் மனதில் சிறிய பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கிறதா ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய சொற்றொடரை ‘என்னளவில்’ என்ற முற்சேர்க்கையுடன் படித்துக்கொள்ளுங்கள். ஐ.டி.யில் பணிபுரியும் சிலர், ‘இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானெல்லாம் வெவசாயம் பார்க்கப் போயிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் வேண்டுமானால் சென்னைக்கு மிக அருகில் நாவலை படித்துவிட்டு தங்கள் வாய்ச்சவடாலுக்கு ஒரு வாய் அவலாக சேர்த்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 February 2015

அனேகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

அனேகனை பொறுத்தவரையில் முதல் ஈர்ப்பு தங்கமாரி பாடல். தனுஷுக்கு மட்டும் எப்படி சென்சேஷனல் ஹிட்ஸ் அமைகின்றன ? அதற்காக படம் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை, சில நாட்கள் முன்பு வரை. ட்ரைலரை பார்த்தால் ஏதோ ஃபேண்டஸி இத்யாதிகள் இருக்கும் போல தோன்றியது. அங்கே தான் சரண்டர் ஆகிவிட்டேன்.

வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறும் (ஒரே ஜோடியின்) காதல் கதைகள். காதல் என்றதும் எல்லா படங்களிலும் செய்வது தானே என்று சலித்துக்கொள்ள வேண்டாம். இது வேற லெவல். என்னைக் கேட்டால் இங்கேயே நிறுத்திக்கொண்டு திரையரங்கிற்கு செல்வது உத்தமம் என்பேன். மற்றவர்கள் தொடர்க.

தனுஷுக்கு தன்னுடைய பன்திறனை வெளிப்படுத்தக்கூடிய அட்டகாசமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜஸ்ட் லைக் தட் அஸால்ட் பண்ணியிருக்கிறார். குறிப்பாக காளி கதாபாத்திரம்.

அமைராவை முதலில் பார்க்கும்போது சவசவ என்று ஒரு மாதிரியாக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஒரு அழகான குழந்தை போல நம் மடியில் வந்து சமத்தாக அமர்ந்துகொள்கிறார்.

அமைராவை விடுங்கள். ஐஸ்வர்யா என்று ஒருவர் நடித்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் ‘தேவன் மகிமை’ என்பார்களே, அது என்னவென்று உணர்ந்துகொண்டேன். முன்னவர் சாத்வீகம் என்றால் இவர் ப்ரச்சோதகம். சங்க இலக்கிய வர்ணனைகளுக்கு ஒப்பான புருவங்கள், கூரான மூக்கு, வரைந்து வைத்த ஓவியம் போன்ற வசீகரமான முகம். தென்னக சினிமாவுக்கு ஒரு பிபாஷா கிடைத்துவிட்டார்.

கார்த்திக் ஒரு MNCயின் பாஸ் என்கிற வகையில் தோரணையாக நடித்திருக்கிறார், ஆனால் வில்லனாக கொஞ்சம் கடுப்படிக்கவே செய்கிறார். ஜகன் போன்ற ஆட்களை ஏனோ தமிழ் சினிமா தொடர்ந்து வீணடிக்கிறது. சும்மா உல்லுல்லாயிக்கு இரண்டு பழைய வில்லன் நடிகர்கள்.

அனேகனுடைய பெரும்பான்மையான பாராட்டுகள் சுபாவிற்கு. குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் கதையை வில்லென வளைத்திருக்கிறார்கள். எவ்வளவு டீடெயிலிங் ? அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். வருடத்தின் துவக்கத்திலேயே சுபாவிடமிருந்து இரண்டு அட்டகாசமான கதைகள் வந்திருக்கின்றன. இன்னும் நிறைய வர வேண்டும் என்கிற ஆர்வம் எழுகிறது.

தங்கமாரி பாடல் பார்வையாளர்களை ஒரு தெய்வீகநிலைக்கு அழைத்துச் செல்கிறது. அனேக மக்கள் இந்த ஒரு பாடலுக்காகவே திரையரங்கிற்கு வருகிறார்கள். கொண்டாடுகிறார்கள். உண்மையில் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படி தரைக்குத்து பாடலை இசைத்திருப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. எனக்கென்னவோ இது மரணகானா விஜிக்கு போகவேண்டிய க்ரெடிட்ஸ் என்று தோன்றுகிறது. கூடவே பாடலை பாடிய மற்றவர்களுக்கும், எழுதியவர்களுக்கும். எல்லா பாடல்களும் தரமாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஆத்தாடி ஆத்தாடி பாடலில் பவதாரணியின் குரல் இதமளிக்கிறது. ஒரு தெளிவான நீரோடையை போல நிதானமாக இருக்கிறது தெய்வங்கள் இங்கே பாடல். அது மட்டுமில்லாமல் விஷுவலில் விர்ச்சுவலாக பர்மாவை பார்த்த பரவசம் கிடைக்கிறது. YOLO பாடல் வேறு வகையான விஷுவல் பரவசம். ஒன்றிரண்டு ஷாட்டுகளில் வந்தால் கூட ஐஸ்வர்யாவின் விளைவுகள் செம ஹாட்.

முதலில் படத்தின் குறைகள். பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் தர்க்க ரீதியாக நிறைய கேள்விகள் எழுப்பலாம் தான். ஃபேண்டஸி படம் என்பதால் அவற்றைப் பற்றி பெரிதாக கவலைப்பட தேவை இல்லை. ஆனால், படம் முடிந்தபிறகு எதற்காக அய்யா ஒரு அரை மணிநேர க்ளைமாக்ஸ். அப்புறம், அந்த கத்தி சொருகும் காட்சி உச்சக்கட்ட பேத்தல்.

சமீப படங்களில் டுஸ்டுகள் எளிதில் யூகிக்கக்கூடிய வண்ணம் இருந்தது இல்லையா ? அந்த விஷயத்தில் அனேகன் ஆறுதலாக இருக்கிறது. குருஜி கொடுத்த டேப்லட், ஒரு கையை பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்திருக்கும் மாமா கேரக்டர் என்று நம்மை சாமர்த்தியமாக திசை திருப்பிவிட்டு டுஸ்டு கொடுத்திருக்கிறார்கள்.

புனைவு என்ற வார்த்தைக்கு ஒரு அட்டகாசமான உதாரணமாக வெளிவந்திருக்கிறது அனேகன். பர்மாவிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையும் கற்பனையும் கலந்த கச்சிதமான காக்டெயில் அது. அனேகனில் உள்ள ஒரு வசதி. கதையை நமக்கு பிடித்தமான பர்ஸப்ஷனில் புரிந்துக்கொள்ளலாம். மறு ஜென்மம் குறித்த கதையாகவும் நம்பலாம். அல்லது ELOPOMINE என்கிற மாத்திரையால் ஏற்பட்ட மனக்குறைபாடு என்றும் புரிந்துக்கொள்ளலாம். உண்மையில் காளி – கல்யாணி கதை தவிர்த்து மற்றவை (முருகப்பா, இளமாறன்) வெறுமனே கதாநாயகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம். பார்வையாளர்களாக மட்டும் அல்லாமல் கதையில் பங்கெடுத்துக்கொள்ளும் ரசிகர்களுக்கு பல கதவுகளை திறந்து வைத்து காத்திருக்கிறது அனேகன்.

மற்றொரு வசதி, ஒரு தேர்ந்த நாவலில் வருவது போல ஆங்காங்கே குறிப்புகள் கொடுத்துக்கொண்டே போயிருக்கிறார்கள் கதாசிரியர்கள். பர்மா அரசியல், எஸ்.எஸ்.ரஜூலா, மிங்குன் பகோடா (6174 நினைவிருக்கிறதா ?), அமைராவின் டேபிளில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், தலைவாசல் விஜய் வரைந்துக் கொண்டிருக்கும் ஓவியம் இப்படி நிறைய. விருப்பமுள்ளவர்கள் இவற்றை தேடித் தெரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் வெறும் பொழுதுபோக்காகவும் எடுத்துக்கொள்ளலாம். தரை லோக்கல் காட்சிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது காளி எபிசோட்.. ஹை-டெக் ஆட்களுக்கு கேமிங் அலுவலக காட்சிகள். பாடல்கள், ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள், க்ளாஸ், மாஸ். சுருங்கச் சொல்வதென்றால் ஃபுல் மீல்ஸ்.

தமிழில் எல்லாம் இதுமாதிரி படங்கள் வராதா என்று ஏங்குபவர்களுக்கு செமத்தியாக வந்திருக்கிறது அனேகன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 February 2015

என்னை அறிந்தால்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

பரமசிவன் காலத்திலிருந்து அஜித்தின் எல்லா படங்களையும் FDFS பார்த்துவிடும் பரம விசிறி. இந்தமுறை கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டதால் டிக்கெட் கிடைக்கவில்லை. அங்கே, இங்கேயென்று அலைந்து கடைசியில் படம் பார்க்க முடியாது என்று கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்ட நிலையில் ஒரு ஆபத்பாந்தவர் எக்ஸ்ட்ரா டிக்கெட்டோடு வந்தார். அவருக்கு நன்றி கூறி துவங்குகிறேன்.

கதையை பொறுத்தவரையில் ஐ படத்திற்கு எழுதியதையே டிட்டோ போட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இணையத்தில் வெளியான அதே கதை தான். பழைய கதையும் கூட. அதனாலேயே சஸ்பென்ஸ், ட்விஸ்ட் போன்ற பெரிய சுவாரஸ்யங்கள் இல்லை.

சமீப படங்களில் கூலர்ஸ், நடை, பஞ்ச் வசனம் என்றே பார்த்துப் பழகிய அஜித் சற்றே (சற்று தான்) வேறுபட்டிருக்கிறார். இன்னொரு பெரிய ஆறுதல் துணை நடிகர்கள் அஜித்துக்கு முகஸ்துதி போடும் காட்சிகள் வைக்காதது. அஜித் – அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் பது மலர்ச்சியாக இருக்கிறது.

அருண் விஜய்யின் பாத்திர படைப்பில் இன்னொரு டேனியல் பாலாஜியை பார்க்க முடிகிறது. பழைய படங்களில் எல்லாம் வில்லன் நடிகர்கள் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் நான்கைந்து தலைமுறைகளை தோண்டி எடுத்து வசைமொழி பேசுவார்கள். வில்லன் நடிகர்களை பொறுத்தவரையில் வசை தான் பாராட்டு என்று கொள்ளலாம். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களிடம் கேவலமாக திட்டு வாங்கியிருக்கிறார் அருண் விஜய். அஜித்தை மிஞ்சியிருக்கிறார் என்கிற காழ்ப்புணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். வே டூ கோ அருண் விஜய் !

பேரிளம்பெண் என்ற பதத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய இரு கதாநாயகிகள். கெளதம் மேனனின் கேமரா வழியாக பார்க்கும்போது மட்டும் ஒரு சுற்று கூடுதல் அழகியாக தெரிகிறார் த்ரிஷா. அனுஷ்கா அந்தோ பரிதாபம். சிகையலங்காரம் வேறு சகிக்கவில்லை. 

பேபி அனிகா செம க்யூட். பாந்தமாக முகத்தை வைத்திருப்பது ஒருவித அழகு என்றால், சிரிக்கும்போது தெரியும் தெத்துப்பல் அதைவிட அழகு. அனிகாவிடம் அனுஷ்காவை பார்த்துக்கொள்ளுமாறு ஒப்படைக்கும்போது “Of course, அப்பா” என்று ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார். அது க்யூட்நெஸ்ஸின் உச்சம்.

ஏறத்தாழ ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை போன்ற வேடத்தில் நடித்திருக்கும் விவேக்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது. சில காட்சிகளில் மட்டும் தலை காட்டினாலும் நாசரின் வேடம் நேர்த்தியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் வரமாட்டாரா என்று ஏங்க வைத்துவிட்டு இறக்கிறார். பார்வதி நாயர் வேடத்தில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்; நடிகைகளுக்கா பஞ்சம்.

திரைக்கதை சூத்திரங்களில் முக்கியமானதாக ‘SHOW, DON’T TELL’ என்ற விதியை சொல்வார்கள். ஆனால் இயக்குநர் ஆங்கிலத்தில் பேசிவிட்டு பின்பு அதையே தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லும் மேஜர் சுந்தர்ராஜன் போல இரண்டையும் செய்கிறார். செய்கிறார் என்றால் செய்துகொண்டே இருக்கிறார். இது சில இடங்களில் ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வை தந்தாலும்கூட ஒரு கட்டத்திற்கு மேல் சலித்துவிடுகிறது.

அதாரு உதாரு, மாயா பஸார் பாடல்கள் ரிப்பீட் மோட் வகையறா. வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடும் மின்னல்கள். வடிவேலு, விவேக் பேசிய நகைச்சுவை வசனங்களை சீரியஸான காட்சிகளில் அஜித் பேசுகிறார். அப்படியும் நமக்கு வேடிக்கையாக தோன்றா வகையில் காட்சியாக்கியிருக்கின்றனர்.

அஜித், த்ரிஷா, அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. பெண்கள் விரும்பக்கூடும். மற்றவர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் அஜித்துக்கும் அருண் விஜய்க்கும் இடையே நடைபெறும் அந்த சேஸ், நிஜமாகவே நகம் கடிக்க வைக்கும் சிலிர்ப்பான நிமிடங்கள். திரைக்கதைக்காக மட்டும் சொல்லவில்லை. வேறு யாருடைய படமாக இருந்தாலும் எப்படியும் சுபம் தான் போடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஈவு இரக்கமில்லாமல் மாயாவையே சாகடித்த இயக்குநர் என்பதாலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

வழக்கமாக சினிமா ரசிகர்கள் ஏதோ ஒன்று தெறிக்குது, தெறிக்குது என்பார்களே அது இந்த படத்தில் குறைவாகவே தெறித்திருக்கிறது. சரி, critically acclaimed படமாக இருக்குமா என்றால் அதுவும் கிடையாது. படத்தில் வரும் ஒரு வசனத்தின் பாணியிலேயே சொல்வதென்றால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்தப்பக்கம் மாஸ், அந்தப்பக்கம் க்ளாஸ். இரண்டிற்கும் இடையே என்னை அறிந்தால்.

அஜித் தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்திற்குள் இருந்து கொஞ்சூண்டு எட்டிப் பார்த்திருக்கிறார். அவர் அதனை விட்டு முழுமையாக வெளிவர வேண்டும். ஆனால் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை நினைக்கும்போது அவர் மறுபடியும் அதே வட்டத்திற்குள்ளேயே சென்று அடைந்துகொள்வார் என்றே உறுதியாகக் தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 February 2015

இரவல் காதலி + கொட்டு மொழக்கு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு விஷயத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்போது ஒரு கட்டத்தில் நம்மையறியாமல் அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. நாட்டின் நிலைமை அறிந்துகொள்ள சிகப்பு நா.....டா ! என்கிற விளம்பரப் பாடல் போல குருத்தோலை, இரவல் காதலி, கொட்டு மொழக்கு, செல்லமுத்து குப்புசாமி போன்ற பதங்கள் பரிட்சயமாகிவிட்டது. எழுத்தாளர் மென்பொருள் துறையில் பணிபுரிபவர் என்பதாலும் ஒரு ஆர்வம். அவருடைய இரண்டு நாவல்களை புத்தகக்காட்சியில் வாங்கினேன்.

முதலில் இரவல் காதலி. கமாக்கதை தளங்களில் விரவிக்கிடக்கும் UNSATISFIED WIFE கதையொன்றில் காதல் மற்றும் பிற உணர்ச்சிகளை சேர்த்து மானே தேனே போட்டு எழுதினால் இரவல் காதலி ரெடி.

முதல் ஐம்பது பக்கங்கள் சும்மா ஜிவ்வென்று பறக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் போரடித்தது. SMS, Gtalk சம்பாஷனைகளை பார்த்ததும் ஒருவேளை ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாக இருக்குமோ என்று பதிப்பிக்கப்பட்ட வருடத்தை அவசரமாக திருப்பிப் பார்த்தேன். புதுசுதான். SMS இடத்தை வாட்ஸப்பும், GTalk இடத்தை ஃபேஸ்புக் சாட்டும் எப்போதோ நிரப்பியாயிற்றே அய்யா. மைக்ரோஸாஃப்ட் வேர்டில் ஸ்மைலி போட்டால் அது J என்று மாறிக்கொள்வதை கவனித்திருப்பீர்கள். அது வினையாகி, சம்பாஷணைகளின் இடையே அடிக்கடி J, L என்று வருகிறது.

ஐ.டி.துறை சார்ந்த நாவல் என்பதால் அதன் வகையைச சேர்ந்த ‘ராஜீவ் காந்தி சாலை’யுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. ராகாசா’வில் பூர்வக்குடி மக்களின் விவசாய நிலங்களை பறித்தது, மாறிவரும் கலாசாரம், ஐடி ஊழியர்களின் வாழ்க்கைமுறை, கேப் டிரைவர்களின் கிளைக்கதைகள் என்று பலவற்றையும் தொட முயற்சி செய்திருப்பார் விநாயக முருகன். நிறைய கதாபாத்திரங்கள். சில சமயங்களில் குழப்பவும் கூட செய்தது. இரவல் காதலியில் அதுபோன்ற சிக்கல்கள் இல்லை. நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்கள். கொஞ்சம் ஐ.டி. கொஞ்சம் விமன் ஸைக்காலஜி. கொஞ்சம் செக்ஸ் என்று பிரமாதமான ப்ளெண்ட்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எழுத்தாளர், “நான் எழுதுவதை எல்லாம் என் மனைவி படிக்க வேண்டும். பாராட்ட வேண்டும்” என்று ஆசைப்படுவதாக கூறினார். நியாயம்தான். என்னதான் ஆடவர்கள் ஆயிரம் பேர் பாராட்டினாலும் கூட பெண்ணின் பாராட்டு என்பது சிலிர்ப்பை தரக்கூடியது. அதுவும் நமக்கு உற்றவளுடைய பாராட்டு என்பது மிகவும் உன்னதமானது. அந்த வகையில் எழுத்தாளருடைய மன உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளரின் மனைவி என்ன சொன்னார் தெரியுமா ? “நான் நான்கு பக்கங்கள் படிப்பதற்குள் தூங்கி விடுவேன்” என்று ஒரே போடாக போட்டார். என்னைக்கேட்டால் அதுவே சாலச் சிறந்தது என்பேன். இரவல் காதலி போன்ற கதையினை எழுத்தாளரின் மனைவி படித்தால் என்ன நடக்கும் என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. நாளடைவில் எழுத்தாளர் எழுதுவதையெல்லாம் மனைவி உட்கார்ந்து மட்டறுத்துக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும் ?

இரண்டாவது கொட்டு மொழக்கு.

கொட்டு மொழக்கின் பின்னட்டை பத்தி இப்படிச் செல்கிறது – கார்ப்பரேட் வாழ்க்கையின் அழுத்தங்களில் மூச்சுத்திணறும் ஒருவன்.... கொட்டு மொழக்கு மட்டுமல்ல. இந்த ஆண்டு வெளியான வேறு சில நாவல்களின் பின்னட்டைகளில் கூட ஏறத்தாழ இதே போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

சமீபத்தில் நடந்த புத்தகக்காட்சியில் ஒரு போட்டோக்கார நண்பர் ஸ்டால்களை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நித்யானந்தா ஸ்டாலில் பலமான வரவேற்பு கிடைத்தது. அங்கே வீற்றிருந்த ரெடிமேட் சாமியார் போட்டோக்கார நண்பரை அமர்த்தி கபாலத்தில் கை வைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை ? என்று கேட்டாராம். உடனே நண்பர் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட சாமியார் ஷாக் ஆகியிருக்கிறார். பின்னட்டை வாசகங்கள் எழுதும் ஆசாமிகளும் அந்த சாமியாரைப் போன்றவர்கள் தான். மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒரு மனக்குறையோடு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களாகவே கற்பிதம் செய்துகொள்கிறார்கள். ரைட்டு.

மரண வீடுகளை எதிர்கொள்ளத் தெரியாத ஒரு நகர நாகரிக மனிதன் என்ற கதைக்கரு பிடித்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாவலின் வட்டார மொழிநடை என்னை விழி பிதுங்க வைத்துவிட்டது. வட்டார மொழிநடை என்பது விருப்பத்திற்குரிய ஒன்றுதான். உரையாடல்கள் வட்டார மொழிநடையிலும், விவரணைகள் எழுத்துத் தமிழிலும் மாறி மாறி வரும்போது படிப்பதற்கு தொய்வில்லாமல் இருக்கும். இந்த நாவலை பொறுத்தவரையில் வட்டார மொழிநடை கொஞ்சம் ஓவர்டோஸ். குறிப்பிட்ட வட்டார மக்கள் விரும்பக்கூடும்.

சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் நாவலின் இடையே யாரோ ஒருவரை குத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் எடிமலை கதாபாத்திரம் எல்லாம் ரிட்டன் ஃபார்மட் சூரி என்றுதான் சொல்ல வேண்டும். முடியல. 

அப்புறம், மரண வீட்டு சடங்குகள் பற்றிய டீடெயிலிங். இதன் பின்னாலுள்ள எழுத்தாளரின் உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது. நிறைய விவரங்களை தேடித் தேடித் தொகுத்திருக்கக்கூடும். சில இடங்களில் ‘எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்கு செய்யுறது தாம்பா’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போவதை எளிமையாக கடந்துபோக முடியவில்லை. எதற்காக ஒரு எழுத்தாளர் சடங்காச்சாரங்களை பற்றியெல்லாம் எழுத வேண்டும் ? அந்த சடங்குகளுக்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை தெளிவு படுத்தினாலன்றி அதனை எழுதுவதால் என்ன பயன் ? என்று புரியவில்லை.

இரண்டு நாவல்களைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்வதென்றால் நகர்புறத்து கதைகளை விரும்புபவர்கள் இரவல் காதலியையும், கிராமத்து கதைகளை விரும்புபவர்கள் கொட்டு மொழக்கினையும் வாசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment