29 April 2020

கன்னித்தீவு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கன்னித்தீவு – மனதிற்கு நெருக்கமான நாவல்.

2004ம் ஆண்டு. சுனாமி வந்து சில நாட்களுக்குப் பிறகு “தி ஹிந்து” நாளிதழின் முகப்புப் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. சுனாமிக்குப் பிறகு அந்தமானை சுற்றியுள்ள தீவுகளை மேற்பார்வையிட, இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து சென்றிருக்கிறார்கள். அப்போது வடக்கு சென்டினல் தீவை கடக்கையில் அங்கிருந்த ஒரு பழங்குடி தனது ஈட்டி போன்ற ஆயுதத்துடன் ஹெலிகாப்டரை குறிபார்த்து ஓடிவரும் புகைப்படம் அது. தனிப்பட்ட முறையில் எனக்கு வியப்பையும் நிறைய அதிர்ச்சியையும் கொடுத்த புகைப்படம் அது.

© இந்திய கடற்படை
இதுகுறித்து ப்ளாகில் ஒன்றிரண்டு முறை எழுதவும் செய்திருக்கிறேன். அதன்பிறகு, குறிப்பாக 2012ல் நான் அந்தமான் சென்றுவந்த பிறகு வடக்கு சென்டினல் மக்களைப் பற்றி நிறைய தகவல்களைத் தேடித் தேடி படித்திருக்கிறேன். சென்டினிலியர்களைப் பற்றி படிப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. இதுதான், இப்படித்தான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக இல்லாமல் கொஞ்சம் ரகசியமாக உள்ள விஷயங்களுக்கே உரித்தான கவர்ச்சி. ராமாவரம் சம்பவத்தையோ, ஆட்டோ சங்கர் வரலாறில் உள்ள நடிகைகளின் பெயர்களையோ, ஜெயலலிதாவின் மரண ரகசியத்தையோ தெரிந்துகொள்ள விழைவதற்கு இணையான கிக் அது. ஒருவேளை நீங்கள் இதனை நம்பாமல் கூட போகலாம். புனைவு எழுதும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால் அதில் வடக்கு சென்டினிலியர்களை எங்கேனும் புகுத்த வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். சி.எஸ்.கே முந்திக்கொண்டார்.

நாவலின் அட்டைப்படமே ஒரு பரிபூரண உணர்வைத் தருகிறது. ஒரு முன்னூறு பக்க நாவலின் உயிரைக் குழைத்து அப்படியொரு ஓவியத்தை வரைந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். 

நாவலின் கதை இதுதான் என்று ஓரளவிற்கு யூகித்து வைத்திருந்தேன். In fact, யாராக இருந்தாலும் யூகித்துவிடலாம். வெளியீட்டு விழாவிற்கு வேறு சென்று வந்திருந்தேன். இருந்தாலும் முதல் பர்வம் ஒரு இனிய வியப்பு. அது எங்கள் முதல் கர்ப்ப காலத்தை நினைவூட்டியது. Intimate விஷயங்களை பொதுவில் எழுத வேண்டாம் என்று யோசிக்கிறேன். சில பகுதிகள் அச்சு அசலாக எங்களுடன் பொருந்திப் போனது. அநேகமாக எல்லா மகிழ்ச்சியான தம்பதிகளுக்கும் கன்னித்தீவு சில நினைவுகளை மீட்டெடுக்கும்.

எனது மனைவி ஒரு budding reader. அவர் தனது முதல் வாசிப்பை  தன்னிச்சையாக தேர்ந்தெடுத்தார் (பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்). அதனை படித்து முடித்ததும் அத்தோடு விடாமல் தொடர்ந்து புத்தகம் வாசிக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். பார்வதி பற்ற வைத்த நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னிடம் வந்தது போலிருந்தது. அவர் வாசிப்பதற்கான இரண்டாவது நாவலாக கன்னித்தீவை நான்தான் தேர்ந்தெடுத்தேன். எனது தேர்வு நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும், திருப்திகரமாகவும் அமைந்தது.

நாவலில் உள்ள தர்க்கப்பிழைகளை வைத்து நிறைய எழுதிவிட்டார்கள். நிறைமாத கர்ப்பிணியை தேர்தல் பணிக்கு அனுப்ப மாட்டார்கள், பார்வதி எப்படி நாள் முழுக்க கடல்நீரில் மிதக்கிறாள், எப்படி சாகசங்கள் செய்கிறாள் என. திரைக்கதையில் மூன்று அங்க அமைப்பு என்பார்கள். அதன் முதல் பகுதி செட் அப். ஒரு குறிப்பிட்ட சூழலை நோக்கி கதையை நகர்த்திச் செல்வது செட் அப் பகுதியின் வேலை. டைட்டானிக் கப்பலின் மாலுமிகள் ஜாக்கும் ரோஸும் ரொமான்ஸ் செய்வதை பராக்கு பார்க்காமல் ஒழுங்காக கப்பலை செலுத்தியிருந்தால் அது பனிப்பாறையில் மோதாமல் இருந்திருக்கும் இல்லையா ? ஆனால் அப்படி அவர்கள் சூதானமாக நடந்திருந்தால் டைட்டானிக் படம் சாத்தியமில்லை. பிரகாஷ் ராஜ் சுவலட்சுமியை அடைய விரும்பினால் தான் ஆசை. விஜய் ஜோதிகாவின் இடுப்பைப் பார்த்தால் தான் குஷி ! 

சி.எஸ்.கே.விடம் நான் வியந்து ரசிக்கும் விஷயம் பெரியப் பெரிய விஷயங்களை ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிடுவது. இந்நாவலின் இடையே இப்படியொரு வரி வருகிறது – கல்பனா-1 ஏவப்பட்ட அதே நாளில் பார்வதியின் அப்பா அவள் ஜாதகத்தைக் கையில் எடுத்தார். எவ்வளவு சுருக்கம் பாருங்கள். ஒரு பக்கம் நாடு விண்வெளிக்கு செயற்கைக்கோளை ஏவும் அளவிற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணியில் பங்காற்றிக்கொண்டிருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட கதாநாயகன். இன்னொரு பக்கம் அதே விண்வெளியில் உள்ள கோள்களின் மீது மூடநம்பிக்கை கொண்ட கதாநாயகியின் அப்பா. இதே மாதிரி நாவல் முழுக்க நிறைய சுவையான, சுருக்கமான வாக்கியங்கள். சில உதாரணங்கள் - காமத்தை விட மனிதனுக்கு உத்வேகமூட்டக்கூடிய ஒன்று இருக்குமானால் அது உயிராசை தான் - பெண்களும் காதலும் இல்லாவிடில், பூமி நிர்வாணமாகவே இருந்திருக்கும் - கொதித்துப் பேசும் கணவன் தலையணையில் அடங்குவது போல் - ஓர் ஆண் யோனியிலிருந்து ஜனித்த கணம் முதல் அவன் போராடுவதெல்லாம் மீண்டும் ஒரு யோனிக்குள் புகுவதற்குத்தான்.

அந்தமானின் புவியியல் அமைப்பு, போர்ட் ப்ளேர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அந்தமானின் பழங்குடியின மக்கள், இந்தியாவின் தென்முனை குமரி அல்ல, இந்திரா முனை, அடல் பிஹாரி வாஜ்பாய் அறிவித்த நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் என்று ஏராளமான தகவல்கள். நிறைய உழைத்திருக்கிறார் எழுத்தாளர். 2004 லோக்சபா தேர்தலில் இந்த வாக்குச்சாவடியில் இரண்டு ஓங்கே இன மக்கள் வந்து வாக்களித்திருந்தார்கள். ஒரு 75 வயதுக் கிழவரும், ஒரு 32 வயதுப் பெண்ணும் - என்று போகிறபோக்கில் எழுதிவிடவில்லை. அது ஐம்பது சதவிகித உண்மைச்செய்தி. கதைக்காகவும், அதன் புவியியலுக்காகவும் பாதித் தகவலை மாற்றியிருக்கிறார். பார்வதியின் கதாபாத்திரமே கூட கால்வாசி உண்மைதான். படிக்க. அதே சமயம் சென்டினிலியர்கள் என்றே நேரடியாக எழுதாமல் ஏன் லெமூரியர்கள் என்கிற புனைவு பழங்குடியினத்தை தேர்வு செய்தார் என்பது புரியவில்லை. எப்படியும் சென்டினிலியர்கள் அவதூறு வழக்கு போட மாட்டார்கள், எழுத்தாளர் அவர்களை மதம் மாற்றும் நோக்கில் அங்கே பயணிக்காத பட்சத்தில் உயிருக்கும் ஆபத்தில்லை. அப்புறம் ஏன் ? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் ஒரு விமர்சனத்தில் இந்த புத்தகத்தைப் படித்ததால் தெரிந்துகொண்ட தகவல்கள் என்று கீழே லெமூரியர்களை அந்தமான் பழங்குடியினர் என்று பட்டியலிட்டுள்ளார்கள்.

பொதுவாக படைப்பாளிகள் தங்களுடைய படைப்புகளில் தங்களையே ஒரு கதாபாத்திரமாக சிருஷ்டித்துக் கொள்வதுண்டு. பாய்ஸ் ஐவரில் யார் ஷங்கர் என்ற கேள்வியைக் அவரிடம் கேட்டபோது ஐவரிடமும் நான் கொஞ்சம் இருக்கிறேன் என்றார். மிஷ்கின் படத்தில் எல்லோரும் மிஷ்கின் என்று ஒரு வரி இந்நாவலிலேயே வருகிறது. தமிழ் நாவல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கணேஷ் – வசந்த் துவங்கி பிரபாகரன் வரை எழுத்தாளரின் சாயலை பரவலாகப் பார்க்கலாம். ஆனால் இந்நாவலோ ஒரு பெண்ணைப் பற்றியது. எழுத்தாளர் ஆண். இருப்பினும் எழுத்தாளர் விடுவாரில்லை. பார்வதி அவளது கணவனைப் பற்றி நினைப்பதாக, தன்னைப்பற்றியே நிறைய எழுதித் தீர்த்துவிட்டார். முருகன் இருந்திருந்தால் அப்படி செய்திருப்பான், முருகன் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பான், முருகன் அது, முருகன் இது, முருகன் ஒரு திருட்டுப்பயல், முருகன் ஒரு முரடன், முருகன் ஒரு பொறுக்கி இப்படி நீள்கிறது. ஒரு கட்டத்தில் எழுத்தாளரே மறந்துவிட்டால் கூட ச்சே முருகன் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பான்ல என்று நமக்கே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.

கன்னித்தீவு நாவலை படிப்பவர்கள் அதன் கடைசி அத்தியாயத்தை மட்டும் படிக்காமல் விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். அது மட்டும் எனக்கு பிடிக்காமல் போயிற்று. அல்லது புரியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கதையின் இறுதிப்பகுதி என்பதால் அதுகுறித்து இன்னும் விரிவாக எழுதுவதை தவிர்க்கிறேன். மனைவியிடம் என்ன கடைசியில் இப்படி முடிந்துவிட்டது என்றேன். அவருக்கும் அந்த முடிவு பிடிக்கவில்லை. சினிமாக்களில் எல்லாம் இறுதியாக ஒரு ட்விஸ்ட் அல்லது இரண்டாம் பாகத்திற்கென ஒரு நுனியை வைப்பார்கள் இல்லையா அது மாதிரி போலிருக்கிறது. பார்வதி பற்ற வைத்த தீ ! 

இதில் இன்னொரு கோணமும் உண்டு. தற்போது வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தோற்று மனிதர்களுக்கு எப்படி முதன்முதலில் தொற்றியது என்று இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. வவ்வால்கள் மற்றும் பாங்கோலின்கள் என்று சொல்லப்படும் எறும்புத்தின்னிகள் மூலம் அவை பரவியிருக்கலாம் என்கிறார்கள். லெமூரியர்களோ பாரபட்சமின்றி சகல விலங்குகளையும் வேட்டையாடி உண்பதாக சொல்லப்படுகிறது. ஆக, கன்னித்தீவின் கடைசி அத்தியாயத்திலிருந்தே ஒரு புதிய நாவலை துவங்குவதற்கான சாத்தியங்கள் பிரகாசமாக உள்ளன.

கன்னித்தீவு
சி.சரவண கார்த்திகேயன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 276
விலை: ரூ.280

தொடர்புடைய சுட்டி: அந்தமான் பழங்குடியினர்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment