30 December 2016

கொல்லிமலை – பயணக்குறிப்புகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலை ஒரு பேச்சுலர்’ஸ் பேரடைஸ் என்றுதான் சொல்லவேண்டும். கொல்லியில் நீங்கள் கோவில்களைத் தவிர மற்ற போக்கிடங்களுக்கு சென்றால் அங்கே குழுவாக மது அருந்திக்கொண்டிருக்கும் ஆடவர்களை சாதாரணமாக பார்க்கலாம். மேலும் ஆங்காங்கே காலி மது புட்டிகள் வீசப்பட்டிருக்கும். இதனாலும் வேறு சில காரணங்களாலும் இங்கே குடும்பமாக அதிகம் பேர் செல்வதில்லை. செல்லக்கூடாது என்றில்லை. சில கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொள்பவர்கள் செல்லலாம்.

எப்படி செல்வது...?
சென்னையிலிருந்து சுமார் 400 கி.மீ. பெங்களூரிலிருந்து சுமார் 300 கி.மீ. சொந்த வாகனத்தில் சென்றால் எட்டிலிருந்து ஒன்பது மணிநேரத்திற்குள் சென்றுவிடலாம். சென்னையிலிருந்து செல்பவர்கள் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ராசிபுரம் வழியாக செல்லலாம். ஒரு ஐம்பது கி.மீ கூடுதலாக சுற்ற தயாராக உள்ளவர்கள் வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக வரலாம். இந்த வழியில் சிறப்பம்சம் ரோடு அட்டகாசமாக இருக்கிறது. 

பேருந்தில் அல்லது ரயிலில் செல்பவர்கள் நாமக்கல் சென்று அங்கிருந்து செம்மேடு அல்லது நேரடியாக அறப்பளீஸ்வரர் கோவில் செல்லும் பேருந்தை பிடிக்கலாம். ஆனால், மலை மீது உள்ள இடங்களை சுற்றிப்பார்க்க தனி வாகனம் இருந்தால் தான் சரியாக இருக்கும். எனவே நாமக்கல்லிருந்து தனியார் வாகனத்தை வாடகைக்கு பிடித்துக்கொள்ளலாம்.

எங்கே தங்குவது...?
பெரும்பாலான தங்கும் விடுதிகள் செம்மேட்டையும் அதனை ஒட்டியும் அமைந்திருக்கின்றன. முன்பே ஒருமுறை சொன்னது போல கொல்லியில் ரிஸார்ட் என்கிற வார்த்தையே ஒரு மாயை. குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் பாங்கான விடுதியில் தங்க விரும்பினால் P.A.Holiday Innல் தேர்ந்தெடுக்கலாம். ஓரளவிற்கு கெளரவமான இடத்தில் தங்க விரும்பும் நல்ல தம்பிகள் நல்லதம்பியில் தங்கலாம். தண்ணிவண்டி தம்பிகளுக்கு ஏரோ மேன்ஷன், SKGV லாட்ஜ். இவற்றில் SKGV லாட்ஜ் மட்டும் செம்மேட்டில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. இதில் சாதக, பாதகங்கள் உண்டு. ஒரு அவசரத்திற்கு பிளாஸ்டிக் கிளாஸ் வாங்கக்கூட கடை இருக்காது. ஆனால் மனித நடமாட்டம் குறைவான பகுதியில் தனிமையாக பொழுதைக் களிக்கலாம். 

எத்தனை நாட்கள்...?
மூன்று நாட்கள். வெள்ளி காலை கிளம்பி மாலை சென்றடைந்து, சனி சுற்றிப் பார்த்து, ஓய்வெடுத்து, ஞாயிறு திரும்புவது கச்சிதமான திட்டம். நேரமில்லாதவர்கள் இரண்டு நாட்களில் பயணத்திட்டத்தை சுருக்கிக்கொள்ளலாம்.

என்ன பார்க்கலாம்...?
கொல்லியில் என்னென்ன இடங்களை பார்க்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. கூடவே அவற்றை எந்த வரிசையில் பார்ப்பது என்றும் ஒரு முறை இருக்கிறது. நானே பிரத்யேகமாக தயாரித்த இந்த வரிசைமுறையை பின்பற்றினால் உங்கள் நேரத்தை சேமிக்கலாம். 


10. நம்ம அருவி (வரைபடத்தில் இல்லை)


முதல் நான்கு இடங்களை போகும் வழியிலேயே / தினத்திலேயே பார்த்துவிடலாம். அடுத்த எட்டு இடங்களை மறுநாள் காலை துவங்கி ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு இறங்கலாம். கடைசி எட்டை மூன்றாவது நாள் அல்லது திரும்பும்போதோ பார்க்கலாம்.

எப்போது செல்லலாம்...?
ஆகாயகங்கையில் வருடம் முழுக்க நீர்வரத்து இருக்கிறது. குறிப்பிட்டு சொல்வதென்றால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்றால் தட்ப வெப்பம் செமத்தியாக இருக்கும். எல்லா அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கோவில்கள் மீது விருப்பம் உள்ளவர்கள், கொங்கலாய் அம்மன் கோவில் திருவிழாவை காண விழைபவர்கள் ஏப்ரலில் செல்லலாம். வருடாவருடம் நடைபெறும் வல்வில் ஓரி திருவிழாவை பார்க்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் செல்லலாம்.

எங்கே வாங்கலாம்...?
கொல்லி செல்லும்போது ஒரு முழு பகார்டி பாட்டிலை இங்கிருந்து சுமந்துச் சென்றோம். அங்கே சென்று பார்த்தால் செம்மேட்டில் அழகாக, அளவாக ஒரு டாஸ்மாக் இருக்கிறது, அங்கே பகார்டி கிடைக்கவும் செய்கிறது. பொதுவாகவே கொல்லிமலை குடிகாரர்களின் சொர்க்கம் போல தோன்றுகிறது. எந்த மூலைக்கு திரும்பினாலும் சுற்றுலாவாசிகள் மறைவாக உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் காலி புட்டிகள். குடித்துவிட்டு பாட்டில்களை பாறைகளின் மீது வீசி சிதறடிப்பது இங்குள்ளவர்களின் கைப்பழக்கம் போலிருக்கிறது. 

முடிந்தவரைக்கும் சுற்றுச்சூழலை, இயற்கையை நாசம் செய்யாமல், சக சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் கொல்லியைக் கொண்டாடுங்கள். இத்துடன் கொல்லிமலை பயணக்கட்டுரைகள் அதிகாரப்பூர்வமாக நிறைவுபெறுகிறது. 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 December 2016

லெனின் உறங்குகிறார் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மம்மியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எகிப்திய மம்மியைச் சொல்கிறேன். காலத்தால் அழிக்கமுடியாதபடி பாதுகாக்கப்படும் உயிரினங்களின் சடலங்களை மம்மி என்கிறார்கள். சில வேதிப்பொருட்களின் உதவியாலும், கடுங்குளிரான உஷ்ணநிலையை பேணுவதின் மூலமும் சடலங்களை பாதுகாப்பது பண்டைய எகிப்தியர்களின் பழக்கம்.

பண்டைய காலத்தில் மட்டுமில்லாமல் நவீன யுகத்தில் கூட சடலங்கள் தற்காலிகமாகவோ / நிரந்தரமாகவோ பராமரிக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஊட்டுகிறது. ‘எம்பால்மிங்’ என்கிறார்கள். மேலை நாடுகளில் எம்பால்மிங் என்பது ஒரு வழக்கமான நடைமுறை போலாகிவிட்டது. இதற்கென தொழில்முறை ஆட்கள் இருக்கிறார்கள். யாரேனும் இறந்தால் சடலத்தை இவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். சடலம் எளிதில் கெடாமல், துர்நாற்றம் வீசாமல், காயங்கள் ஏதேனும் இருந்தால் வெளியே தெரியாமல், தசைகள் இறுகிப்போய்விடாமல், முக அமைப்பை சீராக்கி சிரித்த முகத்துடன் இருப்பது போல தயார் படுத்தி இறுதிச்சடங்கிற்கு அனுப்புவது இவர்களுடைய வேலை. இதற்கென பிரத்யேக வேதியியல் திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலே சொன்னது தற்காலிகமாக சில மணிநேரங்களோ, சில நாட்களோ தாக்குப்பிடிக்கக்கூடியது. மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ கூட சடலத்தை எம்பால்மிங் செய்து பாதுகாக்க முடியும். இதன் வழிமுறையை கேட்டால் பயங்கரமாக இருக்கிறது. உடலில் துளையிட்டு ரத்தம் முழுவதையும் வெளியேற்றிவிட்டு, அதே துளைகள் மூலம் எம்பால்மிங் ரசாயனங்களை உள்ளே செலுத்துவதே அந்த முறை. இம்முறையை பயன்படுத்தி மறைந்த சோவியத் யூனியன் தலைவர் லெனினின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 92 ஆண்டுகளாக !

லெனின் 1924ம் ஆண்டு தன்னுடைய ஐம்பத்தி நான்காவது வயதில் மரணமடைந்தார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் லெனின். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பக்கவாதத்துடன் பேசவும், எழுதவும் கூட பழகிக்கொண்டார். இருப்பினும் 1924 ஜனவரி மாதம் இருபத்தியோராம் தேதியன்று லெனின் மூளையில் தமணி வெடித்து, கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தார். அடுத்த நாள்தான் சோவியத் அரசாங்கம் அவருடைய மரணச்செய்தியை பொதுமக்களுக்கு அறிவித்தது. 

முதலில் லெனின் சடலத்தை பாதுகாக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்கிறார்கள். சொல்லப்போனால் லெனினை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அதிலிருந்த சில ரத்தக்குழாய்களை நீக்கியிருக்கிறார். ஒருவேளை சடலம் இத்தனை காலம் பதனிட்டு வைக்கப்படும் என்று தெரிந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ‘எம்பால்மிங்’ முறையில் சீரமைக்கப்பட்ட பிணங்களில் ரத்தக்குழாய்கள் வேதிய ரசாயனங்களை தசைகளுக்கு கடத்தும் வேலையைச் செய்யும்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு லெனின் உடல் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக நான்கு தினங்கள் வைக்கப்பட்டது. ஆனால் நான்கு தினங்கள் கடந்தபின்னரும் லெனினின் உடலைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து தொடர்ந்து மக்கள் குவிந்தபடி இருந்ததால் அரசாங்கம் அதனை செஞ்சதுக்க அருங்காட்சியகத்திற்கு மாற்றியது. இயல்பாகவே ரஷ்யா குளிர்பிரதேசம் என்பதால் அவருடைய உடல் குலையாமல் ஐம்பத்தியாறு நாட்கள் வரை இருந்தது. அதன்பிறகு அங்கே கோடைக்காலம் தொடங்கியபோது லெனினை நிரந்தரமாக பராமரிக்க அரசாங்கம் முடிவு செய்தது.

அப்போதும் எம்பால்மிங் முறை குறித்து அரசாங்கம் யோசிக்கவில்லை. உறைபனி உஷ்ணநிலையில் உடலை பதமாக வைத்திருப்பது தான் திட்டம். இதற்காக ஜெர்மனியிலிருந்து குளிர்பதன உபகரணங்கள் வரவழைக்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்த வேளையில் ரஷ்யாவின் புகழ்பெற்ற வேதியியல் ஆய்வாளர்கள் இருவர் ‘எம்பால்மிங்’ முறையை பரிந்துரைத்திருக்கின்றனர். எம்பால்மிங் செய்தால் உடல் கெடாமல், நிறம் மாறாமல், உருக்குலையாமல் பாதுகாக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம். பல்வேறு விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் பிறகு அரசாங்கம் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டது.

இதற்குள் காலத்தின் கோலத்தால் லெனினுடைய தோல் கறுத்திருந்தது. அதனை பழைய நிறத்திற்கு கொண்டு வருவதற்காக வேதியியல் ஆய்வாளர்கள் இரவு பகலாக உழைத்தனர். இறுதியாக லெனின் இறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு எம்பால்மிங் செய்யப்பட்ட அவருடைய உடல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது. உருக்குலையாமல் இருந்த அவருடைய உடலைக் கண்டு மக்கள் நிஜமாகவே வியந்திருக்கிறார்கள்.

அதன்பிறகு தொடர்ந்து அவருடைய உடலை பராமரிப்பதற்காக இரண்டாயிரம் வல்லுநர்கள் உழைத்திருக்கிறார்கள். அவருடைய எலும்புக்கூடு, தசைகள், தோல் ஆகிவற்றை பாதுகாக்கப்பட்டன. அதே சமயம், உள்ளுறுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. அவருடைய மூளை மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கப்பட்டுவிட்டது. 

ரஷ்ய விஞ்ஞானிகள் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் உலகெங்கிலும் பேசப்பட்டது. அதன்பிறகு வியட்நாம் தலைவர் ஹோ சி மின் உட்பட பல உலகத்தலைவர்கள் இறந்தபிறகு எம்பால்மிங் முறை கையாளப்பட்டது. சோவியத்தை சேர்ந்த மற்றொரு தலைவரான ஸ்டாலினின் உடலும் அவர் இறந்தபிறகு எட்டு ஆண்டுகள் வரை பாதுகாக்கப்பட்டது.

தற்போது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனாலும் லெனின் உடலை பராமரிப்பது நுட்பமான பணியாகவே இருந்து வருகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை ஆய்வாளர்கள் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியிருக்கிறது. உடல் வைக்கப்பட்டிருக்கும் அரங்கத்தின் உஷ்ணநிலை, ஒளியமைப்பு, ஈரத்தன்மை போன்றவற்றை கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை உடலை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது. அவருடைய உடலில் செயற்கை கண்ணிமைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மூக்குப்பகுதி செயற்கையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

சோவியத் யூனியன் சிதறியபிறகு சில ஆட்சியாளர்கள் அருங்காட்சியகத்தை நிரந்தரமாக மூட முயற்சித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் மக்கள் பெருந்திரளாக அருங்காட்சியகம் முன்பு கூடி, தங்கள் தலைவரை காப்பாற்றியிருக்கிறார்கள். இன்னொரு சமயம் லெனின் உடலை பராமரிப்பதற்கு தேவைப்படும் நிதியை காரணம் காட்டி அருங்காட்சியகத்தை மூட முயன்றிருக்கிறது அரசு. அப்போதும் கம்யூனிஸ இயக்கம் மக்களிடம் பணம் வசூலித்துக் கொடுத்து தன் எதிர்ப்பைக் காட்டி அருங்காட்சியகத்தை காப்பாற்றியிருக்கிறது.  

இவற்றைப் பற்றியெல்லாம் கவலையேதும் இல்லாமல் லெனின் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார், 92 ஆண்டுகளாக !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 November 2016

கொல்லிமலை – வீரகனூர்பட்டி சமணர் கோவில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் சீண்டாத, தனித்துவமான இடம் ஒன்றினைப் பற்றி சொல்லப்போகிறேன். வீரகனூர்பட்டி என்ற மலை கிராமம். அங்கே அமைந்திருக்கும் கொங்கலாய் அம்மன் கோவில். தொன்மையான சமணர் (?!) உருவச்சிலை. இவற்றைப் பற்றியெல்லாம் தமிழில் இதற்குமுன் எழுதியிருக்கும் ஒரே நபர் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் தானென நினைக்கிறேன். கூடவே, எதிர்காலத்தில் கொல்லிமலை செல்லும் நண்பர்கள் வீரகனூர்பட்டிக்கும் செல்வதற்கு தோதாக மேலதிக தகவல்களும் தருகிறேன்.

நாங்கள் வீரகனூர்பட்டிக்கு சென்ற கதையை மட்டுமே தனிக்கட்டுரையாக எழுத வேண்டும். கொல்லிமலைக்கு ஸ்கெட்ச் போடும்போதே கூகுள் மேப்பில் பார்க்க வேண்டிய சில இடங்களை பார்த்து குறிப்பெடுத்து வைத்திருந்தேன். முன்பே சொன்னது போல மேப்பில் குத்துமதிப்பாக கொல்லிமலை பக்கம் உலவினால் கூட ஆங்காங்கே ‘Ancient Jain Temple’, ‘Ancient Jain Idol’ போன்றவை கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, நெகனூர்பட்டி சமணர் கோவில். ஒதுக்குப்புற கிராமம் என்பதால் ஆர்வம் அதிகமானது. 

கொல்லியில் சென்று இறங்கியதிலிருந்து ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரிடமும் சித்தர் குகைகள் பற்றியும் நெகனூர்பட்டியைப் பற்றியும் விசாரித்தபடி இருந்தோம். நெகனூர்பட்டி என்று ஊர் இருப்பதே அங்கே யாருக்கும் தெரியவில்லை. இணைய அணுகல் (ஏர்டெல்) வேறு துண்டிக்கப்பட்டு விட்டதால் மறுபடியும் மேப்பில் அவ்விடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. திட்டமிட்ட மற்ற இடங்களை எல்லாம் பார்த்தாயிற்று. மறுநாள் காலை கிளம்புவதாக முடிவு செய்திருந்தோம். இன்னும் நெகனூர்பட்டி சமணர் கோவிலை மட்டும் பார்க்கவில்லை. கடைசி முயற்சியாக அன்றிரவு எனது டோகோமோ எண்ணை மீள்நிரப்பி 2G வேகத்தில் நெகனூர்பட்டியை கண்டுபிடித்து ஆஃப்லைனில் சேமித்தேன். விடிந்ததும் அங்கே சென்று வந்து பிறகு சென்னைக்கு கிளம்பலாம் என்று முடிவானது.

மழையுடன் விடிந்தது. இன்னொரு அரை மணிநேரம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று காத்திருந்து, காத்திருந்து எட்டு மணிக்கு மழை நின்றது. பத்து மணிக்காவது கொல்லியிலிருந்து கிளம்பினால் தான் மாலையிலாவது சென்னை வர முடியும். இப்போது போய் நெகனூர்பட்டிக்கு போகலாம் என்றால் என் உடன் வந்தவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அமைதியாக மோட்டுவளையை பார்த்தபடி படுத்திருந்தேன். என் மனக்குறையை குறிப்பால் உணர்ந்துகொண்ட என் தளபதி என்னை நெகனூர்பட்டிக்கு அழைத்துச் செல்ல அவராகவே மனமுவந்து ஒப்புக்கொண்டார்.

செம்மேட்டிலிருந்து வாசலூர்பட்டி வழியாக தின்னனூர்நாடு செல்லும் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி சுமார் ஐந்து கி.மீ தூரம் சென்றால் இலக்கை அடைந்துவிடலாம். இது செம்மேட்டிலிருந்து பத்து கி.மீ. கிலோமீட்டர் கணக்கை பார்த்தால் குறைவு போல தோன்றினாலும் மலைச்சாலை என்பதால் இந்த இடத்தை சென்றடைய அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிறது. அங்கே சென்றதும்தான் அந்த ஊரின் பெயர் நெகனூர்பட்டி அல்ல வீரகனூர்பட்டி என்று தெரிந்தது. யாரோ கூகுள் மேப்பில் தவறுதலாக கொடுத்திருக்கிறார்கள். ஊர்க்காரர்களிடம் சமணர் கோவில் என்றதும் அம்மன் கோவில் தான் உள்ளது என்று மலையுச்சியை கை காட்டினார்கள். அங்கே வாகனத்தில் செல்ல முடியாது என்பதால் நடந்தே சென்றோம்.

 
பனிமூட்டமான வீரகனூர்பட்டி
அப்போது நேரம் காலை ஒன்பது மணி சுமார் இருக்கும். ஆனால் நாங்கள் நடந்து சென்ற பகுதி முழுக்க பனிமூட்டம். பத்து அடிக்கு முன்னால் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. இதையெல்லாம் தவற விட்டுவிட்டு சென்னை செல்லப் பார்த்தோமே என்று என்னை நானே கடிந்துகொண்டேன். 

அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை
சிறிது தூரம் நடந்து மலையுச்சியை அடைந்தோம். அங்கே கேட்பாரற்று அமைந்திருக்கிறது கொங்கலாய் அம்மன் கோவில். 

கொங்கலாய் அம்மன்
அம்மனைக் கண்டதும் எனக்கு செந்தூரதேவி படம்தான் நினைவுக்கு வந்தது. பாழடைந்த கோவில், பார்வையால் பயம் காட்டும் அம்மன் உருவம். ஒருபுறம் திருப்பதிக்கும், சபரிமலைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று முண்டியடிக்கிறார்கள். வெவ்வேறு அடுக்கில் பணம் கொடுத்து, கொடுத்த காசுக்கேற்ப தரிசனம் செய்கிறார்கள். இன்னொருபுறம் எங்கேயோ மலை மீது, ஒதுக்குப்புறமாக உள்ள கிராமத்தில் அம்மன் கோவில் ஒன்று தனியாக இருக்கிறது. 

அம்மன் கோவிலின் முகப்புப் பகுதி
வருடத்திற்கு ஒருமுறை (சித்திரை மாதம்) திருவிழா சமயத்தில் மட்டும் கோவிலை திறப்பார்கள் என்று ஊர்க்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். 

கொங்கலாய் அம்மனை பார்த்தாயிற்று. ஆனால் நாம் தேடி வந்தது சமணர் கோவிலாயிற்றே... மேப்பை கையில் வைத்துக்கொண்டு போக்கிமான் விளையாட்டைப் போல இங்கும் அங்கும் அலைந்தோம். கொஞ்ச நேரத்தில் ஊர்க்காரர்கள் இருவர் அந்தப்பக்கம் வந்தனர். இம்முறை சமணர் என்ற வார்த்தையை அவர்களிடம் பிரயோகிக்காமல் பழங்கால சிலை ஏதேனும் உள்ளதா என்றோம். அதோ அங்கே என்று வாழைத்தோப்பிற்குள் கை காட்டினார்கள். 

வாழைத்தோப்புக்குள் சமணர் (தெரிகிறாரா ?)
முதலில் அங்கிருக்கும் உருவம் எங்கள் கண்களுக்கே தெரியவில்லை. நாங்கள் சாமி கும்பிடுவதற்கு தான் வந்தோம் எங்களோடு வாருங்கள் என்று அழைத்துச் சென்றனர் அவ்விருவர். உள்ளே சென்றால் மோனலிஸா புன்னகையுடன், இடைப்பகுதி வரை மண்ணில் புதையுண்டு இருக்கிறது ஒரு சமணர் சிலை. ஜெயமோகன் இச்சிலையை 24 தீர்த்தங்காரர்களில் ஒருவர் என்றும், மகாவீரராக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

சமணர் உருவச்சிலை
எங்களை அங்கே அழைத்துச் சென்ற கிராமவாசிகள் பயபக்தியுடன் கற்பூரம் கொளுத்தி சமணரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சாமியின் பெயரென்ன என்றேன். இருவரில் இளையவர், முதியவரின் முகத்தை பார்த்தார். முதியவர் முனிவர் சாமி என்றார். அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்தபிறகு சமணரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். (பெரும்பாலும், கிராமவாசிகள் கோவில்களில், கடவுள் உருவச்சிலைகளை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை). 

வீரகனூர்பட்டி பயணம் ஒருவாறு எனது கொல்லிமலை பயணத்தை முழுமையடையச் செய்தது போல உணர்ந்தேன். வீரகனூர்பட்டிக்கு என்னை அழைத்துச் சென்றதற்காகவும், ஒட்டுமொத்தமாக கொல்லிமலை பயணத்தில் முகம் கோணாமல், கோபப்படாமல், கால தாமதங்களையும், கரடுமுரடான சாலைகளையும் பொறுத்துக்கொண்ட எனது போர்ப்படை தளபதிகள் பிரகாஷ் மற்றும் ஜெய் ரமேஷ் இருவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

ஏறத்தாழ கொல்லிமலை பயணக்கட்டுரைகளின் முடிவுக்கு வந்துவிட்டோம். கடைசியாக கொல்லிமலை சென்றடைவது எப்படி..?, பார்க்க வேண்டிய இடங்கள், எங்கே தங்கலாம்..?, எவ்வளவு செலவாகும்..? போன்ற விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். தொடர்ந்து இந்த பகுதியை படித்து வந்த நண்பர்களுக்கு ஏதேனும் (விவகாரமில்லாத) சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்.

கூகுள் மேப்பில்:
(நண்பர்கள் நேரமிருந்தால் மேப்பில் உள்ள தகவல் பிழைகளை சரி செய்யலாம்)

கடைசி இடுகை: பயணக்குறிப்புகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 November 2016

கொல்லிமலை – நோக்குமுனைகளும் பிற இடங்களும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: அருவிகள்
 
கொல்லிமலை தொடரில் அடுத்து நோக்குமுனைகள் பற்றியும் வேறு சில போக்கிடங்கள் குறித்தும் பார்க்கலாம். நோக்குமுனை என்றதும் என்னவோ ஏதோ என்று பயந்துவிட வேண்டாம். ‘வியூ பாயின்ட்’ என்பதைத்தான் நம் மொழியில் எழுதியிருக்கிறேன். மலை வாசஸ்தலங்களுடைய சிறப்பம்சங்களில் ஒன்று நோக்குமுனைகள். தனிப்பட்ட முறையில், நோக்குமுனைகள் எப்போதும் எனக்கு பரவச உணர்வை தரக்கூடியவை. கொல்லிமலை சென்றபோது மொத்தம் மூன்று நோக்குமுனைகள் கண்டோம்.

சீக்குப்பாறை நோக்குமுனையிலிருந்து
முதலாவது சீக்குப்பாறை நோக்குமுனை. கொல்லியில் உள்ள பிரதான நோக்குமுனை இது. கொல்லி சென்ற எவரும் சீக்குப்பாறைக்கு செல்லாமல் திரும்பியிருக்க மாட்டார்கள்.

மாலை வேளையில்
செம்மேட்டிலிருந்து வெறும் 2 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கிறது சீக்குப்பாறை. இங்கிருந்து மலையடிவார கிராமங்கள் குட்டிக்குட்டியாக அழகாக தெரிகின்றன.

சீக்குப்பாறையிலிருந்து இரவு
இங்கே காணக்கிடைக்கும் காட்சி பகல் வெளிச்சத்தில் ஓரழகு என்றால் இரவிருளில் பேரழகு.

இரண்டாவது டெம்பிள் கட் ரோடு நோக்குமுனை. இந்த நோக்குமுனை எங்கள் லிஸ்டிலேயே இல்லை. ஆகாயகங்கையிலிருந்து மாசிலா அருவிக்கு போகும் வழியில், தனியாக பிரியும் பாதையைக் கண்டு உள்ளே நுழைந்தால் ஓர் அற்புதமான நோக்குமுனை கிடைத்தது. இங்கிருந்து பார்த்தால் ஆகாயகங்கைக்கு அப்பாலிருக்கும் மலைப்பகுதி தெரிகிறது. 

டெம்பிள் கட் ரோடு நோக்குமுனையிலிருந்து
நாங்கள் இங்கே சென்றபோது நான்கைந்து இளைஞர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வழக்கம் போல சித்தர்களைப் பற்றி விசாரித்தோம். உடனே ஒருவர் சித்தர்கள் இங்கிருப்பது உண்மைதான் என்றார். மேலும் சித்தர்கள் இரண்டடி உயரம் தான் இருப்பார்கள், ஒருமுறை தான் அவர்களுடைய குகைப்பக்கம் போனபோது மார் முழுக்க ரோமங்களுடன், சட்டை அணியாத சித்தர் கக்கத்தை சொறிந்தபடி வெளியே வந்ததாகவும், அவரைக் கண்டதும் உள்ளே ஓடிப்போய்விட்டதாகவும் கதை சொல்லலானார். கேட்பதற்கு ஸ்வாரஸ்யமாக இருந்தது.

மூன்றாவது சேலூர் (கஸ்பா) நோக்குமுனை. இதனுடைய சிறப்பம்சம் – இங்கிருந்து பார்த்தால் ஸ்ரீரங்க கோபுரம், திருச்சி மலைக்கோட்டை, தலைக்காவிரி ஆகியவை தெரியும் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு சிறப்பம்சம் இது மனித நடமாட்டம் அதிகமற்ற பகுதி. சேலூரிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் நுழைந்தபிறகு கிராமவாசிகள் நம்மை வித்தியாசமாக பார்க்கத் துவங்கிவிடுகின்றனர். 

சேலூர் கிராம வீடுகள்
ஜோத்பூர் நகரத்தில் உள்ளதைப் போல நெருக்கமாக கட்டப்பட்ட சின்னச்சின்ன வீடுகளை கடந்து மலையுச்சிக்கு சென்றோம். அங்கே காவல்துறை கண்ட்ரோல் ரூம் ஒன்று மட்டும் இருந்தது. நோக்குமுனை கட்டுமானம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. 

சேலூர் நோக்குமுனையிலிருந்து
உள்ளே இருந்த ஒரு காவலரை விசாரித்து, இங்கே நோக்குமுனை கட்டுமானம் ஏதுமில்லை. இந்த இடமே ஒரு நோக்குமுனை என்று தெரிந்துக்கொண்டோம். தூரத்தில் தெரிந்த மலைக்குன்று திருச்சி மலைக்கோட்டையாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டோம்.

இவை தவிர்த்து சோளக்காட்டில் ஒரு நோக்குமுனையும், தமிழக அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு நோக்குமுனையும் உள்ளன. 

புலியிடம் பால் கறக்கும் சிங்கம் (கோப்பு படம்)
தாவரவியல் பூங்கா குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் இளைப்பாறவும் தோதாக அமைந்திருக்கிறது.

வாசலூர்ப்பட்டியில் படகுத்துறை அமைந்திருக்கிறது. படகு சவாரியில் பெரிய ஆர்வமெதுவும் இல்லாததாலும், நேரமின்மையாலும் படகுத்துறையை தவிர்த்துவிட்டோம். ஆனால், வாசலூர்ப்பட்டி படகு இல்லத்திற்கு பக்கவாட்டிலுள்ள ஒற்றையடிப் பாதையில் நடந்து போனால் சோழர் காலத்து சிவன் கோவில் ஒன்று காணக்கிடைக்கிறது. 

தொன்மையான சிவன் கோவில்
இவற்றைத் தவிர்த்து பார்க்க வேண்டிய இடங்கள் என்றால் சோளக்காடு சந்தை, வல்வில் ஓரி சிலை. சோளக்காடு சந்தையில் பிரதானமாக பல்வகை வாழைப்பழங்களும் பலாப்பழமும் கிடைக்கின்றன.

வல்வில் ஓரி சிலை மலையின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே அமைந்திருக்கிறது. குதிரையின் மீது வீற்றிருக்கிறார் வல்வில் ஓரி. குதிரையோடு இருக்கும் சிலைகளைப் பற்றி ஒரு சுவையான குறிப்பு உண்டு. சிலையில் குதிரை முன்னிரண்டு கால்களை தூக்கியபடி இருந்தால் அந்த மன்னர் போரில் வீர மரணம் அடைந்திருக்கிறார் என்று பொருள். குதிரை ஒரு காலை மட்டும் தூக்கியபடி இருந்தால் மன்னர் போரில் விழுப்புண் பெற்று சில காலம் கடந்து இறந்திருக்கிறார் என்றும், குதிரையின் நான்கு கால்களும் தரையில் இருந்தால் மன்னர் இயற்கை மரணம் அடைத்திருக்கிறார் என்றும் அர்த்தம். 

முன்னிரண்டு கால்களைத் தூக்கியபடி கம்பீரமாக நிற்கிறது ஓரியின் குதிரை !

ஆங்கிலத்தில் சேவ் தி பெஸ்ட் ஃபார் லாஸ்ட் என்பார்கள். அதுபோல, கொல்லியில் இதுவரை மக்கள் கால்தடம் அதிகம் பதிக்காத ஒரு பிரத்யேக இடம் குறித்து அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

(தொடரும்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 November 2016

கொல்லிமலை - அருவிகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலையில் முக்கிய போக்கிடம் மற்றும் பிரதான அருவியான ஆகாயகங்கையை பற்றி ஏற்கனவே முந்தைய கட்டுரையொன்றில் பார்த்தோம். ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில அருவிகளும் கொல்லிமலையில் உண்டு.

முதலாவது, மாசிலா அருவி. மாசிலா அருவி சென்றடைய சுலபமான, சிறிய அருவி. ஆகாயகங்கை படிக்கட்டு இறங்கி ஏற முடியாதவர்கள், அத்தனை உயர மலையிலிருந்து பாயும் அருவியின் சீற்றத்தை தாங்க இயலாதவர்கள், உடல் பருமனானவர்கள், வயோதிகர்கள், இதய நோயாளிகளுக்கான பாதுகாப்பான அருவி ! ஆகாயகங்கை அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. அருவியைச் சுற்றி பூங்கா ஒன்றினை அமைத்து நன்றாக பராமரித்து வருகின்றனர். பூங்காவில் சிறுவர்களுக்கான ஊஞ்சல், ஸீஸா போன்றவை இருக்கின்றன.

மாசிலா அருவியில்...
நாங்கள் மாசிலா அருவிக்கு சென்றடைந்தபோது உச்சி வெயில். ஆமாம் வெயில். மலை வாசஸ்தலம் என்றாலும் மதிய வெயில் காட்டமாக இருக்கிறது. அருவியை பார்த்ததும் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. வெயில் கால ஒன்னுக்கு போல கொஞ்சமாக ஊற்றிக்கொண்டிருந்தது அருவி. தொப்பையுள்ள ஒரு நபர் மட்டும் குளிக்கும் வகையில் தான் அருவி நீர் வழிந்துக்கொண்டிருந்தது. ஆனால் அதிலேயே ஆண்களும், பெண்களுமாக ஈஷிக்கொண்டு ஒரு பத்து பேர் குளித்துக்கொண்டிருந்தனர். இக்காட்சியை பார்த்ததும் எனக்கு அந்த அருவியில் தலைகாட்டும் ஆர்வமே நீர்த்துப்போனது. மேலும் உடைமாற்றும் அறை போன்ற செளகரியங்கள் பெண்களுக்கு மட்டும் இருக்கிறது. ஆண்களுக்கென ஒரு கழிவறை மட்டும் இருக்கிறது. அதனை கடைசியாக வல்வில் ஓரி காலத்தில் கழுவி விட்டிருக்கிறார்கள். பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடி சிறிதுநேரம் இளைப்பாறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

அடுத்த அருவி நம்ம அருவி. பெயரே அதுதான் ! இதுவும் மாசிலா அருவியைப் போலவே கொஞ்சமே கொஞ்சம் நீர்வரத்து கொண்ட சிறிய அருவி. ஆனால் இது அமைந்துள்ள இடம் ஒரு விஷுவல் ப்ளிஸ் !

நம்ம அருவியின் எழில் தோற்றம் !
சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளத்தாக்கு. வெளியிலிருந்து பார்த்தால் அந்த இடமே தெரியாது. பள்ளத்தில் இறங்க, இறங்க அருவியும் அதனைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களும் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. இன்னொரு ஆச்சர்யம், நாங்கள் அங்கே சென்றபோது ஒரு சிலரைத் தவிர வேறு யாருமில்லை. அவர்களும் சிறிதுநேரத்தில் கிளம்பிவிட அருவியை கொஞ்ச நேரத்திற்கு சொந்தம் கொண்டாடினோம்.

நம்ம அருவி
நம்ம அருவியின் அருகே அமைந்துள்ள இடம்
மனதை தளர்வாக்கவும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் தோதான இடம். 

மூன்றாவது, சந்தன அருவி, இப்படியொரு அருவி இருப்பதாக ஏதோவொரு வழிகாட்டி பதாகையில் பார்த்த ஞாபகம். ஆனால் அருவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதோ இன்னொரு கி.மீ நேராக போனால் வந்துவிடும் என்கிறார்கள். இரண்டு கி.மீ தாண்டியும் அருவியேதும் வராததால் சந்தேகப்பட்டு கேட்டால் ஒரு கி.மீ பின்னோக்கி செல்ல வேண்டும் என்கிறார்கள்.

சந்தனப்பாறை
இப்படியே முன்னும் பின்னும் அலைந்து கடைசியாக ஒருவர் எங்களுடன் வந்து சந்தன அருவி எனும் சொல்லப்படும் இடத்தைக் காட்டி இதுதான் சந்தனப்பாறை. இதைத்தான் சந்தன அருவி என்று யாரோ உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள் என்றார். சந்தன அருவியை தேடிய நேரத்தில் வேறு உபயோகமான காரியங்கள் செய்திருக்கலாம்.

அடுத்த இதுவரையில் கொல்லிமலையில் உள்ள அருவிகள், கோவில்கள் பற்றி பார்த்தோம். அடுத்த கட்டுரையில் கொல்லிமலையில் உள்ள நோக்குமுனைகள் மற்றும் பிற போக்கிடங்கள் பற்றி பார்க்கலாம்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 November 2016

தயிர் சாதம் சாப்பிடுவது எப்படி ?

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நானொரு மாமிச பட்சினி. சிறு வயதிலிருந்தே எனக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாது. குறிப்பாக தயிர் என்று யாராவது சொல்லிவிட்டால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கமாட்டேன். ஆனால் நாம் எதை மனதின் அடியாழத்திலிருந்து வெறுக்கிறோமோ அதுவே நம் கண் முன்னே அடிக்கடி வந்து போவது தானே வாழ்க்கையின் வடிவமைப்பு !

எனக்குத் தெரிந்த ஒருவர் (எதற்கு வம்பு ?) இருக்கிறார். சிவகாசிக்காரர் என்பதால் பால் சோறு விரும்பி. தயிர் சோறும் சாப்பிடுவார். அவர் தயிர் சோறு சாப்பிடுவதை பார்த்துவிட்டால் நமக்கு சோறு இறங்காது. சோற்றின் மீது தயிரை தலைகுப்புற தள்ளிவிடுவார். அதன்பிறகு அவருடைய உள்ளங்கையைக் கொண்டு தயிர் சோற்றை ஜென்ம விரோதியின் கழுத்தை நெரிக்கும் பாவனையில் அழுத்துவார். அதுவரை தனித்தனியாக இருந்த தயிரும் சோறும் தயிர் சோறாக அவருடைய ஆக்டோபஸ் விரலிடுக்குகள் வழியாக வெளியேறும் ! அதற்கு மேல் அந்தக்காட்சியை பார்க்க முடியாமல் நான் திரும்பிக்கொள்வேன்.

இது பரவாயில்லை. தனிப்பட்ட முறையில் சந்திக்கும் சிக்கல் என்பதால் நமக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடலாம். பொது இடத்தில் நடக்கும் கூத்துகள் நம்மை விடாமல் துரத்தி வந்து வன்புணர்வு செய்யும் ரகம். சென்ற மாதத்தில் ஒருநாள் மேனேஜர் ஒருவருக்கு மூட் வந்ததால் உருப்படிகளை புஹாரிக்கு அழைத்துச் சென்றிருந்தார். எல்லோரும் மெனுவை மேய்ந்து இதுவரை வாழ்நாளில் முகர்ந்து கூட பார்த்திராத வித்தியாச உணவுவகைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். எனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ஆந்திர நண்பர் சர்வரின் காதில் கிசுகிசுப்பாக ‘கர்ட் ரைஸ்’ இருக்கா ? என்று கேட்டார். எனக்கு வெலவெலத்துப் போய்விட்டது. அநேகமாக தமிழ்நாட்டில் புஹாரிக்கு சென்று யாருமே இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். புஹாரியின் நிறுவனருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் மின் சரடை கடித்து தற்கொலை செய்துகொள்வார். ஆந்திர நண்பரிடம் 'ஏங்க இப்படி ராவடித்தனம் பண்றீங்க' என்றால் வவுறு சரியில்லை என்கிறார். நல்லவேளையாக சர்வர் புஹாரியில் தயிர் சோறு நன்றாக இருக்காதென்று அவராகவே வேறு உணவை பரிந்துரைத்து என்னைத் தப்புவிக்கச் செய்தார்.

அலுவலகத்திற்கு வெளியே நடப்பது இப்படியென்றால் உள்ளே நடப்பது எல்லாம் நம்மை ரூம் போட்டு செய்யும் ரகம். கார்ப்பரேட் அலுவலகங்களைப் பொறுத்தவரையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஏதாவது மின்னஞ்சல் வரும். அதாவது வாட்டர் டிஸ்பென்ஸரில் கை கழுவாதீர்கள், வாஷ் பேஸினில் பப்பிள் கம் துப்பாதீர்கள் போன்ற மின்னஞ்சல்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒருமுறை, ஆண் ஊழியர்கள் யூரிணல் தாண்டி தெறிக்காமல் கவனமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மின்னஞ்சல் வந்தது. கூடவே, இந்த மின்னஞ்சல் ஆண் ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பியிருப்பதால் யாரும் சங்கடப்பட வேண்டாம் என்ற பின்குறிப்புடன் வந்தது. பின்குறிப்பை பார்த்ததும் தான் இன்னும் சங்கடமாக இருந்தது. தமிழ் சினிமாவில் வெளிவரும் மாஸ் படங்களை பார்த்து பார்த்து பழக்கப்பட்ட ஆசாமிகள் யாரோ தான் இப்படி தெறிக்க விட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். 

ஒழுங்கு நடவடிக்கை மின்னஞ்சல்கள் வரிசையில், 'பணிபுரியும் மேசையில் யாரும் உணவருந்த வேண்டாம்' என்று அவ்வப்போது வரும். மின்னஞ்சல் வந்து சில நாட்கள் வரை எல்லோரும் உத்தரவை ஒழுங்காக கடைபிடிப்பார்கள். அப்புறம் ஒருநாள் சாதாரணமாக எவ்வித குற்றவுணர்வுமின்றி இவ்விதியை மீறி பிள்ளையார் சுழி போடுவார் ஒருவர். இப்படி பி.சு போட்டு தொடங்கி வைப்பவர் பெரும்பாலும் மேனேஜராக இருப்பார். ஏனென்றால் மேனேஜர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து நேரடியாக குதித்து வந்தவர்கள். அவர்களுக்கென்று விதிகள் எல்லாம் இல்லை.

அடுத்த சில நாட்களில் பணிமேசையில் உணவருந்துவது சகஜமாகிவிடும். ஐம்பது மீட்டர் தூரத்திலிருக்கும் கேண்டீனுக்கு போய் சாப்பிடுவதில் சோம்பேறித்தனம். கேட்டால் ‘லைட் ஃபுட்’ வேண்டுமானால் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மின்னஞ்சலிலேயே போட்டிருக்கிறது என்று வியாக்கியானம் பேசுவார்கள். இந்த ‘லைட் ஃபுட்’ என்பதில் தயிர் சாதமும் சேர்த்தி.

பணிமேசையில் வைத்து தயிர் சாதம் சாப்பிடுவது ஒரு தனிக் கலை ! முதலில் அவுட்லுக்கில் ஒரு நியூ மெயில் விண்டோவை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும். தயிர் சாதத்திற்கும் அவுட்லுக்கிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். சில விஷயங்களை ஆராயக்கூடாது. அனுபவிக்க வேண்டும். மெயிலில் யாரையாவது யாரிடமாவது கோர்த்துவிடும் வகையில் நான்கைந்து புல்லட் பாயின்ட் கேள்விகள் கேட்க வேண்டும். ஸீஸீயில் டீம் லீடர், ப்ராஜெக்ட் மேனேஜர், மேனேஜர் தொடங்கி மேனேஜருடைய சித்தப்பா வரை வைக்க வேண்டும். நீங்கள் இந்த மெயிலை அனுப்பி கோர்த்து விடப்போகிற நபர் உங்கள் புறமுதுகிற்கு பின்னாலேயே அமர்ந்திருக்கலாம். அவரிடம் நேரிலேயே கேட்டுவிட்டால் உங்களுக்கு அடுத்த நிமிடமே வேண்டிய பதில் கிடைத்துவிடலாம். ஆனால் உங்களுக்கு உணவு செரிக்க வேண்டுமில்லையா ? அதனால் மேற்கூறியபடி மின்னஞ்சலை தயார் செய்துவிட்டு உங்கள் டப்பர்வேரை எடுக்கவும்.

ஒரு கையில் டப்பர்வேரையும் இன்னொரு கையில் ஸ்பூனையும் பிடித்துக்கொண்டு பிட்டுப்படம் பார்க்கும் பாவனையில் வெறிக்க வெறிக்க நீங்கள் தயார் செய்துவைத்த மின்னஞ்சலை பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டும். முக்கியமான விஷயம், நீங்கள் சாப்பிடும் போதும் வினோத சப்தங்களை எழுப்ப வேண்டும். அப்போதுதானே உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எரிச்சல் மூளும். முதலில் நீங்கள் உட்கொள்ளும் தயிர் சாதத்தை நாவிற்கும் மேலண்ணத்திற்கும் இடையே கசக்கி ‘பச்யேக்... பச்யேக்...’ என்று ஒலியெழுப்ப வேண்டும். உங்கள் வீட்டில் தயிர் சாதத்திற்கு சைட் டிஷ்ஷாக காராபூந்தி கொடுத்திருப்பார்கள். அதனை அள்ளி வாயில் போட்டு மெல்லும்போது ‘கருக்கு... முறுக்கு...’ என்று சத்தம் வரும். இப்படி நீங்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத ஏப்பம் ஒன்று வரும். அந்த சனியனை ஏன் கட்டுப்படுத்த வேண்டும். ‘ஏவ்வ்வ்வ்...’ !. அருகில் அமர்ந்திருப்பவர்கள் சாவட்டும். 

இப்படி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு திடீரென பணி சம்பந்தமான சந்தேகமொன்று எழும். கவலைப்பட வேண்டாம். ஒரு கவளம் தயிர் சாதத்தை எடுத்து வாயில் இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள். அதனை விழுங்கிவிடாமல் கவனமாக வாயில் அதக்கியபடி பக்கத்தில் உள்ள ஆசாமியிடம் உங்கள் சந்தேகத்தை கேட்டுவிடுங்கள். இந்த சாகசத்தை நிகழ்த்தும்போது உங்கள் வாயிலிருந்து சில எச்சில் பருக்கைகள் அந்த நபர்மீது சிதறக்கூடும். அதற்கெல்லாம் கலங்காமல் உங்கள் சந்தேகம் முற்றிலுமாக நிவர்த்தியாகும் வரை அவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். இப்போது உங்கள் டப்பர்வேரில் தயிர் சாதம் கிட்டத்தட்ட காலியாகியிருக்கும். ஆனால் டப்பாவில் கொஞ்சம் ஒட்டியிருக்கும் அல்லவா. அதனை ஸ்பூன் வைத்து, ‘வரட்டு, வரட்டு’ என்று பக்கத்து ஆளுக்கு பல் கூசும் வரையில் சுரண்டியெடுத்து ஸ்பூனை சப்ப வேண்டும். 

என்னது வாந்தி வருகிறதா ? கொஞ்சம் பொறுங்கள் பாஸ். இனிமேல் தான் ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது. சாப்பிட்டு முடித்தாயிற்று. வாட்டர் பாட்டிலில் உள்ள தாகஷமணியை எடுத்து ஒரு மிடறு உட்கொள்ள வேண்டும். விழுங்கி விடக்கூடாது. ‘குப்ளிக்... குப்ளிக்... குப்ளிக்...’ என்று சுமார் இரண்டு நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்கும் பாவனை காட்டி.......... குடித்துவிட 

உவ்வேக் ! உவ்வேக் !!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment