29 December 2012

கனவுக்கன்னி 2012 - பாகம் 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பாகம் 1


5. மீனாட்சி தீட்சித்
“தொட்டுக் கொள்ளவா... தொட்டுக்கொள்ள வா...” என்ற சைட் டிஷ் விளம்பரத்தில் தோன்றிய மெயின் டிஷ். பில்லாவின் மதுரை பொண்ணு பாடலில் ஆட்டம் போட்ட மும்பை பொண்ணு. மூன்று நிமிட பாடலில் நம்மை மூச்சுத்திணற வைத்துவிட்டார். தொடர் வாய்ப்புகள் கிடைக்காதது நமது துர்பாக்கியம்.


4. தன்ஷிகா
கட்டைக்குரலழகி, குரலில் மட்டுமல்ல. அரவமில்லாமல் வெளிவந்த அரவான் படத்தில் ரவிக்கையில்லாமல் தோன்றி விய(ர்)க்க வைத்தவர். பாலா பட கெட்டப்பில் கூட அழகாகத் தெரியும் பேரழகி.


3. மனிஷா யாதவ்
வழக்கு எண் படத்தில் பள்ளி சீருடையுடன் தோன்றிய குட்டி தேவதை. சமகாலத்தில் பக்கத்து வீட்டுப்பெண் என்ற பதத்திற்கு மிகச்சரியாக பொருந்துபவர். முதல் படமே கலைப்படமாக அமைந்துவிட்டதால் குட்டியின் கலைகளை இனிவரும் படங்களில் எதிர்பார்க்கலாம்.


2. சமந்தா
இளைஞர்களின் ஏகோபித்த ஓகோ பித்த ஆதரவு பெற்றவர். காஜலை, அஞ்சலியை, அனுஷ்காவை பிடிக்காதவர்கள்  கூட இருக்கலாம். ஆனால் சமந்தாவை பிடிக்காதவர்கள் யாருமில்லை. சந்தேகமிருந்தால் நான்கு பேரில் யாருக்கு உதடுகள் ஒட்டுகிறது என்று உச்சரித்து பாருங்கள்.


1. காஜல் அகர்வால்
காஜல் ரசிகர்களுக்கு அக்டோபரில் ஒன்று, நவம்பரில் ஒன்று என இரட்டை தீபாவளி. படங்களை விட்டுத்தள்ளுங்கள், ஒரு ஆறு பாடல்களில் தோன்றி இன்ப ஆறு ஓட வைத்தவர். மாற்றான் என்ற மொக்கை படத்திற்கு கிடைத்த பக்க விளைவுகள் இல்லாத எனர்ஜியான் - காஜல். ரசிகர்களின் மனதில் ஸ்லீப்பர் செல்.

தொடர்புடைய சுட்டிகள்: 2011 - I, 2011 - II, 2010 - I, 2010 - II


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 December 2012

கனவுக்கன்னி 2012 - பாகம் 1

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பத்துக்கு பத்து பட்டியலில் இடம்பெற தவறியவர்கள் :-
“லீலை” மான்சி பரேக், “கழுகு" பிந்து மாதவி, “மதுபான கடை” தியானா.



10. ரம்யா நம்பீசன்
ஒரு படம், சில காட்சிகள். பீட்சா சாப்பிடுவது போல ரசிகர்கள் மனதை லபக்கென்று கவ்விக்கொண்டார். முகப்பரு கூட ஒரு அழகுதான் ரம்யாவின் முகத்தில். “என்ன கண்ணுடே...!” என்று சொல்பவர்கள் கூட ரம்யாவை பார்த்தால் “என்ன மூக்குடே...!” என்று சொல்லக்கூடிய தனித்துவ அழகி.


9. மம்தா மோகன்தாஸ்
தடையற தாக்கு தாக்கென்று தாக்கிவிட்டு மீண்டு வந்திருக்கிறார். முக அழகு, புற அழகு, பிற அழகு தாண்டி தன்னுடைய விஸ்கி வாய்ஸாலேயே வசீகரித்தவர். நல்ல பாடகியும் கூட. மல்லுக்களுடன் மட்டும் மல்லு கட்டாமல் தமிழர்களுக்கும் கொஞ்சம் தயவு காட்டலாம்.


8. நிஷா அகர்வால்
காஜலின் தமிழ்ப்படங்கள் தாமதமான போது இஷ்டம் படத்தில் நடித்து நம் கஷ்டத்தை போக்கியவர். நிஷா தரிசனத்தில் தேவி பேரடைஸ் திரை வாழை இலையாகி நம் கண்களுக்கு விருந்து வைத்தது. ஒரே படத்தோடு நிறுத்தியவர், மீண்டும் எம்.பி.ஏ படித்துவிட்டு எம்பி குதித்து வருவார்.


7. சுனைனா
“அழகு சாத்தானே இப்பால வா...!” என்று அழைக்கத்தூண்டும் அழகி. பா.ஒ.நி, திருத்தணி என்று சுனைனாவின் மற்ற படங்கள் நிஜத்திலும் சாத்தானாக அமைந்துவிட்டாலும், கடந்த வாரம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய காதலில் விழுந்தேன் இன்னமும் கூட நம்மை விழ வைக்கிறது.


6. அமலா பால் (2011: 6, 2010: 3)
ஆண்டு ஆரம்பத்திலேயே பெப்பே பெப்பே ஆட்டம் போட்டு ரசிகர்களை வேட்டையாடிவிட்டார். கா.சொ.எ? தலைமுடி பின்னலலங்காரம் கவன ஈர்ப்பு போராட்டம் செய்தது. அதன்பிறகு நாம் முப்பொழுதும் இவர் கற்பனைகளில் மிதந்தாலும் தமிழில் தலைகாட்டவில்லை. அடுத்த ஆண்டில் நிமிர்ந்து நிற்பார்.

முதல் ஐந்திடங்கள் அடுத்த பாகத்தில்...!

தொடர்புடைய சுட்டிகள்: 2011 - I, 2011 - II, 2010 - I, 2010 - II

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 December 2012

நான் ரசித்த சினிமா 2012

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிகழ் வருடத்தில் தோனி, மெரினா, கழுகு, நான் ஈ, நீர்ப்பறவை, கும்கி போன்ற சில நல்ல படங்களை தவற விட்டிருக்கிறேன். அதே சமயம், அரவான், 3, சகுனி, பில்லா 2, முகமூடி, மாற்றான் போன்ற மாஸ் மொக்கைகளில் சிக்கியிருக்கிறேன், தாண்டவம் தவிர்த்து. எனினும், ஹரிஷ் நாராயண், பாலாஜி மோகன், கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி தரணிதரன் போன்ற படித்த இளைஞர்கள் கைவண்ணத்தில் சில நல்ல படங்கள் பார்த்த மனநிறைவு கிடைத்திருக்கிறது. ஆண்டு முழுமைக்கும் நான் பார்த்து ரசித்த படங்களை மட்டும் வரிசை படுத்துகிறேன்.


12. அட்டகத்தி
தனித்தனி காட்சியாக பார்க்கும்போது அட்டகத்தி பளபளப்பாக இருப்பது போல தோற்றமளிக்கிறது. ஆனால் முழுப்படமாக பார்க்கும்போது டல்லடிக்கிறது...! மொத்தத்தில் படத்தினுடைய டைட்டிலையே அதற்குரிய விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம்.

11. சுந்தர பாண்டியன்
ஒருவேளை படத்தினுடைய கதை முன்னதாகவே தெரிந்திருந்தாலோ அல்லது எ சசிகுமார் ஃபிலிம் என்ற எதிர்பார்ப்போடு சென்றிருந்தால் படம் பிடிக்காமல் இருந்திருக்கக்கூடும். மற்றபடி மனதிற்கு டூலெட் போர்டு மாட்டிக்கொண்டு சென்றால் சுந்தரபாண்டியன் வசதியாக குடியமர்ந்துவிடுகிறார்.

10. ஒரு கல் ஒரு கண்ணாடி
கருத்து, கத்திரிக்காய் ஈர வெங்காயமெல்லாம் இல்லையென்றாலும் ஓகே ஓகே ஓட்டுமொத்தமாக ஒரு ஃபீல் குட் சினிமா, சினிமாவை சினிமாவாக பார்ப்பவர்களுக்கு மட்டும்.

9. துப்பாக்கி
துப்பாக்கி - ஒரு பக்கா கமர்ஷியல் / மசாலா / டைம்பாஸ் படம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறது. மற்றபடி கில்லியை சாப்ட்ருச்சு, விஜய்'ஸ் பெஸ்ட் ஆக்குசன் மூவி எவர் என்றெல்லாம் அடித்து விடுவது டூ மச்...!

விஜய்யின் ஃபேமிலி, காஜல் காட்சிகளை அதிகப்படுத்திவிட்டு, ஆக்குசனை குறைத்திருந்தால் படம் கில்லியா இருக்கிறதென பாராட்டியிருக்கலாம்.

8. ஆரோகணம்
இரண்டு முக்கியமான விஷயங்களை ஆரோகணம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. முதலாவது, “உங்க இமேஜ் என்னாகும்...?” என்று அங்கலாய்க்கும் உதவியாளரிடம் “என்னடா பெரிய இமேஜ் ? இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா !” என்கிறார் அரசியல்வாதி வி.ஐ.பி. இரண்டாவது அளவுக்கு மீறி ஏற்படும் கோபமும் வைராக்கியமும் அல்லது எந்த ஒரு உணர்ச்சியும் ஆபத்தானது தான், ஆனால் அதையே பாஸிடிவ் எனர்ஜியாக மாற்றிக்கொண்டால் நீங்கதான் பாஸ்...!

ஆரோகணம் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனநோயாளியை தட்டிக்கொடுத்து, உங்களுக்கு ஒன்னுமில்லை பாஸ்... நீங்க நார்மலா தான் இருக்கீங்க....! என்று ஆறுதலூட்டுகிறது.

7. தடையறத் தாக்க
ஆண்டின் சிறந்த ஆக்ஷன் படம் என்று சொல்லலாம். படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்று எதுவும் இல்லை. கடைசி நிமிடம் வரைக்கும் த்ரில்.

6. மதுபான கடை
நில அபகரிப்பு, குழந்தை தொழிலாளிகள், சாதி ஏற்றத்தாழ்வுகள், தொழிலாளர் நலன் என்ற பல சமூக அவலங்களை ஊறுகாயாக தொட்டுக்கொண்டாலும் கூட, படம் முடிந்தபிறகும் கூட “ம்ம்ம் சரி அப்புறம்... இதனால் தாங்கள் கூற விரும்புவது...?” என்று இயக்குனரை நோக்கி கேள்விக்கணை தொடுக்க தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நிற்க, அதான் கதை இல்லையென்று அவர்களே சொல்லிவிட்டார்களே என்று கேட்கலாம். ஆனால் நிறைய கருத்துகளை சொல்ல வாய்ப்பிருக்கும் அருமையான கதைக்களனை வீணடித்துவிட்டார்களே என்று ஒரு சினிமா ரசிகனாக என்னுடைய வருத்தத்தை பதிவு செய்துகொள்கிறேன்.

5. அம்புலி 3D
படம் முழுக்க அடுத்து என்ன நடக்கும், குறிப்பாக அம்புலியை எப்ப காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தியது இயக்குனர் இணைக்கு மிகப்பெரிய வெற்றி. ஹாரர் படங்களில் இம்மி பிசகினாலும் செம காமெடி ஆகிவிடும். அதாகப்பட்ட Paranormal Activityக்கே விழுந்து விழுந்து சிரித்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அப்பேர்ப்பட்டவர்களை இரண்டாம் பாதி முழுக்க கப்சிப் என்று அமர வைத்திருக்கிறார்கள்.

4. நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்
கதைப்படி நாயகன் தன் பெரியப்பா மகனோடு சண்டைப்போட்டுக்கொள்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் நாயகனுக்கு மறந்துவிட்டது. தயங்கி தயங்கி மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கிறார் பெரியப்பா மகன். நாயகன் அவரைக் கண்டதும் முகமலர்ந்து, கட்டியணைத்து, நலம் விசாரிக்கிறார். பெரியப்பா மகனும் ச்சே பழைய விஷயத்தை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் பாசமாக நடந்துக்கொள்கிறானே என்று நெகிழ்கிறார். படத்தில் இது நகைச்சுவையாகவே சொல்லப்பட்டிருந்தாலும் நாம் தத்துவார்த்தமாக புரிந்துக்கொள்ளுதல் நலம். ஞாபகம் என்பதே ஒரு நோய். சில மனக்கசப்புகளை, கவலைகளை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் மாதிரி மறந்துவிட்டால் வாழ்க்கையை எளிதாக அணுகலாம் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

தர்க்க ரீதியாக யோசிக்க முற்படும்போது இது ஒன்றும் அவ்வளவு அருமையான படம் இல்லையே என்று தோன்றினாலும் மூன்று மணிநேரம் முழுக்க நம்மை அறியாமல் நாம் சிரித்திருக்கிறோம் என்பது ந.கொ.ப.கா குழுவினருக்கு கிடைத்த வெற்றி.

3. காதலில் சொதப்புவது எப்படி ?
திரையுலகமே பார்க்காத அதிசயம், இதுவரை யாருமே தொடாத சப்ஜெக்ட், ஹாலிவுட்டையே மிரட்டும் தொழில்நுட்பம் இப்படியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் முப்பத்தி ஆறே நாட்களில் சொதப்பாமல் எளிமையாகவும் அழகாகவும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரத்தை தந்திருக்கிறார்கள். சுரேஷ் – சுரேகா வாணி காதலோடு சேர்த்து, திருமணத்திற்கு முன் காதலிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் திருமணத்திற்கு பின் காதலிப்பவர்களுக்கும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இது படமல்ல பாடம்...!

2. வழக்கு எண்: 18/9
“இதான்யா எங்க நாடு... இங்க இப்படியெல்லாம்தான் நடக்கும்...” என்று எடுத்துச்சொல்லியிருக்கும் வழக்கு எண்: 18/9 திரைப்படத்தை உலக சினிமாவாக கொண்டாடி இருக்கலாம் கடைசி பத்து நிமிடங்களை கத்தரித்திருந்தால்...! கமர்ஷியல் வெற்றிக்காகவும், நம்மூர் ரசிகர்களுக்காகவும் இயக்குனர் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்திருப்பார் போல தெரிகிறது.

வழக்கு எண்: 18/9 – மையப்புள்ளிக்கு மிக அருகாமையில் எய்யப்பட்டிருக்கும் அம்பு...!

1. பீட்சா
உண்மையிலேயே தமிழில் ஒரு ஹாரர் படம் என்று சொல்லலாம். மிகவும் எதிர்பார்த்து காத்திருந்து மாஸ் ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு எரிச்சலில் யாரும் படத்தை பார்த்துடாதீங்க’ன்னு பத்து நண்பர்களுக்காவது எஸ்.எம்.எஸ் அனுப்பிவிடுவோம். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு யாரும் மிஸ் பண்ணிடாதீங்க'ன்னு குரூப் எஸ்.எம்.எஸ் அனுப்ப வைத்திருக்கிறது பீட்சா...!

Paranormal Activity மூன்று பாகங்களையும் சேர்த்தால் கூட பீட்சாவிடம் நெருங்க முடியாது...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 December 2012

ஆதினங்களின் ஆன்மிக சுற்றுப்பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணி. கோயம்பேடு பேருந்து நிலையம் கபளீகரமாக இருக்கிறது. எக்கச்சக்க கைகளில் பயணப்பைகள் இடம்பெற்றிருக்கின்றன. வருகிற பேருந்துகளையெல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்த முன்ஜாக்கிரதை முத்தன்னாக்கள் ரொப்பி விடுகிறார்கள். “சார்... தஞ்சாவூர் போற பஸ் இங்கதான நிக்கும்...” என்று கேட்பவரின் சட்டையைப் பிடித்து உலுக்கி நாலு அப்பு அப்பலாம் போல தோன்றுகிறது. அஞ்சாசிங்கம் வேறு போனில் “இந்தா அரும்பாக்கம் வந்துட்டேன்... இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்...” என்று அப்டேட்டுகிறார். மனிதர் சமயங்களில் அரக்கோணத்தில் இருந்துக்கொண்டு அரும்பாக்கம் வந்துட்டேன் என்று கதை விடுவார். வெரி டேஞ்சரஸ் ஃபெலோ. பேருந்துகள் உள்ளே நுழையும்போதே சீட் பிடிக்கும் ஆசாமிகள் எதை எதையோ தூக்கி உள்ளே போடுகிறார்கள். பேசாமல் சிங்கம் வரும் வரைக்கும் டைம்பாஸை புரட்டலாம் என்று முடிவெடுத்தேன்.


மூத்த ஆதினம் வந்தபோது மணி பத்தாக பத்து நிமிடங்கள் இருந்தன. வந்ததும் வராததுமாக மனிதர் நம்மை துரிதப்படுத்தினார். கடையை சாத்திடுவாங்களாம். யோசித்துப் பாருங்கள், பேருந்து நிலையத்திற்குள் இருப்பவர்கள் பத்து நிமிடத்திற்குள் வெளியே வந்து டாஸ்மாக்கை தேடி உள்ளே நுழைய வேண்டும். அய்யகோ, டைட்டானிக் கப்பலை பிடிக்க ஜேக் ஓடியது போல முடியை சிலுப்பிக்கொண்டு டைட்டு டானிக் தேடி ஓடினோம். பேருந்து நிலைய வாசலில் டைடல் பார்க் ரக வாலிபர் ஒருவர் நம்மை மடக்கி நிறுத்தினார். “சார்... நான் கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க... நான் நிறைய படிச்சிருக்கேன்... வீட்டுல இருந்து கோவிச்சிக்கிட்டு வந்துட்டேன்... பஸ்ஸுக்கு காசில்லை...” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே “போடா ங்கொய்யாங்கோ...” என்று சிதறி ஓடினேன். அந்த படிச்ச தம்பி மருந்து உள்ளே சென்றதும் நம்மிடம் சிக்காதது அவர் செய்த பூர்வ ஜென்மத்து புண்ணியம்.

அதோ டாஸ்மாக். கவுன்ட்டரை சுற்றி கூட்டமாக வாலிப, வயோதிக அன்பர்கள். அத்தனை கூட்டத்திலும் துள்ளி குதித்து உள்ளே தலையை சொருகினேன். ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதில்தான் எத்தனை வசதி. கடை மூடும் நேரம், ஒசத்தியான சரக்கு எதுவும் கிடைக்காத கவலையுடன் ஹாஃப் எரிஸ்டாபை வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

“எரிஸ்டாப் ஒன்னும் எரியாதுடா...” ஆறுதலூட்டுகிறார் ஆதினம்.

சிங்கத்தின் கூற்றில் உள்ள உண்மையை உள்ளத்தால் உணர்ந்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் செல்வின் அந்த உண்மையைச் சொன்னார், “அது என்னன்னே தெரியல.... வருஷாவருஷம் தவறாம வேளாங்கன்னிக்கு போயிடுவேன்... எனக்கு அது ஒரு செண்டிமெண்ட்...”. எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ரைட்டு. பெரியவருக்கு திருவண்ணாமலை, சிங்கத்துக்கு வேளாங்கன்னி. எல்லாம் ஒரு "மார்க்கமா" தான் திரியிறாய்ங்க. எரிஸ்டாப் தன்னுடைய வேலையை காட்டிக்கொண்டிருந்து. வெளியே வந்து வண்டிக்கடை அக்காவிடம் இட்லியும், பீப் ப்ரையும் சாப்பிட்டோம். டிவைன்.

எந்த கடவுளின் கருணை என்று தெரியவில்லை. நாகப்பட்டினம் போகக்கூடிய பேருந்தில் கடைசி இரண்டு இருக்கைகள் எங்களுக்காகவே காலியாக இருந்தன. இரவு ஏறத்தாழ பதினொன்றரை மணிக்கு எங்களுடைய சுற்றுப்பயணம் இனிதே தொடங்கியது.

காலை ஏழு மணியளவில் சுப்ரபாதம் ஓடிக்கொண்டிருந்த ஏதோ ஒரு டீக்கடையில் பேருந்து நின்றிருந்தது. அதுவரை தூங்கிக்கொண்டு வந்தவர்கள் முனக ஆரம்பித்தார்கள், “நைட்டுல இருந்து உருட்டிக்கிட்டே வர்றான்”, “இந்நேரம் ஊருக்கே போயி சேர்ந்திருக்கலாம்”, “வண்டி வச்சிருக்குறான் பாரு ஓட்ட வண்டி". எப்போதோ ஒருமுறை SETCயில் பயணிக்கிற நானே மேற்படி வசனங்களை எல்லாம் வாடிக்கையாக கேட்கிறேன். அடிக்கடி ஊருக்கு போகும் நண்பர்கள் பாவம். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் ஒட்டுனருடைய தாயின் கற்பை பழிக்கிறார்கள்.

நாகப்பட்டினத்தை சென்றடைந்தோம். பேருந்து நிலையங்களுக்கு அருகிலிருக்கும் கட்டண கழிப்பறைகளை பயன்படுத்தியிருக்கிறீர்களா ? மாட்டுசாணம், பொதுவாக எனக்கு வீட்டு கழிப்பறை தவிர வேறு எங்கு அமர்ந்தாலும் வராது. கடமைக்காக கனநேரம் அமர்ந்துவிட்டு எழுந்தேன். குளியலறையில்  தாழ்ப்பாள் இல்லை. மற்றபடி ஓகே. எதிரிலிருந்த உணவகத்தில் சிற்றுண்டி முடித்துவிட்டு மணமகன் மயிலனுக்கு போன் அடித்தேன். அண்ணன்... தங்குறதுக்கு நீங்க எங்க ஏற்பாடு பண்ணி வச்சிருக்கீங்கன்னு கேட்கச் சொன்னாருன்னு குழைந்தேன். இடவசதி உறுதிபடுத்தப்பட்டது.

ஆன்மிக சுற்றுப்பயணத்தின் முதல் அடியை வேளாங்கன்னியை நோக்கி எடுத்து வைத்தோம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 December 2012

நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வித்தியாசமான தலைப்பு. படத்தைப் பற்றிய செய்தி வெளியானபோதே பார்க்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.  குறுகியகால நினைவிழப்பு பற்றிய கதை என்று  தெரிந்திருந்தாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் திரையரங்கிற்குள் நுழைந்தேன்.


சென்சார் சான்றிதழில் படத்தின் நீளம் 176 நிமிடங்கள் என்று பார்த்ததும் சற்றே பதற்றமானேன். இத்தனைக்கும் சுவாரஸ்யம் கருதி இருபத்தி ஐந்து நிமிடங்கள் கத்தரிக்கப்பட்டதாம்.

“இவருதாங்க நம்ம ஹீரோ" என்று வாய்ஸ் ஓவரில் கேட்டு வெறுத்துப்போன நமக்கு, டைட்டில் பாடலிலேயே ஹீரோ யார் ? எப்படிப்பட்டவர் ? அவருடைய நண்பர்கள் எப்படி ? என்று புரியவைப்பது புதுமை. டெம்ப்ளேட்டா சொல்லனும்னா “அடிச்சான் பார்யா மொத பால்லயே சிக்ஸர். தவிர குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை மூன்றே முக்கால் நிமிடங்களிலேயே சொல்லி விடுகிறது டைட்டில் பாடல்.

நாயகன் விஜய் சேதுபதி. தற்போதைய லோ பட்ஜெட் படைப்பாளிகளின் நாயகனாக உருவெடுத்திருக்கிறார். பீட்சாவில் பார்த்த மாதிரியே சிரத்தை எடுக்க தேவையில்லாத கேரக்டர். ஒரு செட் வசனங்களையும், முகபாவனைகளையும் சலிக்காமல் படம் முழுக்க தொடர்ந்திருக்கிறார். எனினும் தானும் சலிப்படையாமல் பார்ப்பவர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தாமல் நடித்திருக்கிறார்.


நாயகி காயத்ரியை பார்த்ததும் “ப்பா... யார்றா இந்தப்பொண்ணு...? பேய் மாதிரி இருக்குறா...” என்று சொல்லத்தோன்றுகிறது. காயத்ரியை போட்டோஷூட்டில் தான் அதிகமாய் பயன்படுத்தியிருப்பார்கள் போலத் தெரிகிறது. முக்கால்வாசி படம் முடிந்தபிறகு தான் வருகிறார். நடிப்பையும் எதையும் காட்ட வாய்ப்பில்லாத கேரக்டர். பாவம்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் பக்ஸ், பஜ்ஜி, சரஸ். இவர்களுடைய முழுப்பெயரை இவ்வாறு சுருக்கி அழைப்பதே ஒரு சுவாரஸ்யம். மூவரும் நம்மைச் சுற்றியிருக்கும் நிஜ நண்பர்களை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். பஜ்ஜியுடைய உடல் மொழி, வசன உச்சரிப்பு நம்மை அநியாயத்திற்கு சிரிக்க வைக்கிறது. ஒவ்வொரு நண்பர்கள் குழுவிலும் பஜ்ஜி மாதிரி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உறவுக்காரர்களாக வருபவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாகவே இருப்பதுகூட நமக்கு ஒருவித எதார்த்த உணர்வை தந்து படத்தின் பலத்தை கூட்டுகிறது.

மதுபான கடைக்கு இசையமைத்த வேத் சங்கர் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அது தேவைப்படவும் இல்லை. பின்னணியிசையில் குறைவில்லை. வசனம் எழுதியவருக்கு அதிக வேலைகள் இல்லை. நான்கைந்து வசனங்களை வைத்து படம் முழுவதையும் ஓட்டி விடுகிறார் :) கேலிகள் ஒருபுறம். போங்காட்டம் ஆடுறான், அல்லு கெளம்புது என்று கிடைத்த இடைவெளிகளில் நேட்டிவிட்டி நிறைந்த வசனங்கள்.

தேவையில்லாத காட்சிகள் படத்தில் இல்லையெனினும், கலைப்படங்கள் போல படியிறங்குவதையெல்லாம் காட்டுவது, ஆழமான விளக்கமளிக்கும் வசனங்கள் போன்றவற்றை தவிர்த்து இன்னுமொரு இருபத்தைந்து நிமிடங்களையாவது குறைத்திருக்கலாம். லோ பட்ஜெட் படம் என்பதால் திருமண மண்டபத்தில் சுமார் முப்பது, நாற்பது நாற்காலிகள் மட்டும் போடப்பட்டிருப்பதெல்லாம் லொள்ளு சபா விளைவு தருகிறது.


இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்று சொல்வதை மட்டும் முழுமையாக நம்ப முடியவில்லை. based on a true story என்று போட்டுக்கொள்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர் உண்மை சம்பவம் என்று சொல்லி சினிமா எடுத்தார். படம் எடுத்து, ஓடி முடித்து வெகு நாட்கள் கழித்து அது உண்மை சம்பவமெல்லாம் இல்லை, சுவாரஸ்யம் கூட்டுவதற்காகவே அப்படிச் சொன்னேன் என்றார். (அநேகமாக காதல் படமெடுத்த பாலாஜி சக்திவேல் என்றே நினைக்கிறேன்). இந்த பாலாஜியும் அப்படி நினைத்திருக்கலாம். ஏனென்றால் மணமகனுக்கே தெரியாமல் ஒரு திருமணம் நடந்தது என்று சொன்னால் நம்பவா முடிகிறது.

கதைப்படி நாயகன் தன் பெரியப்பா மகனோடு சண்டைப்போட்டுக்கொள்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் நாயகனுக்கு மறந்துவிட்டது. தயங்கி தயங்கி மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கிறார் பெரியப்பா மகன். நாயகன் அவரைக் கண்டதும் முகமலர்ந்து, கட்டியணைத்து, நலம் விசாரிக்கிறார். பெரியப்பா மகனும் ச்சே பழைய விஷயத்தை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் பாசமாக நடந்துக்கொள்கிறானே என்று நெகிழ்கிறார். படத்தில் இது நகைச்சுவையாகவே சொல்லப்பட்டிருந்தாலும் நாம் தத்துவார்த்தமாக புரிந்துக்கொள்ளுதல் நலம். ஞாபகம் என்பதே ஒரு நோய். சில மனக்கசப்புகளை, கவலைகளை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் மாதிரி மறந்துவிட்டால் வாழ்க்கையை எளிதாக அணுகலாம் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

தர்க்க ரீதியாக யோசிக்க முற்படும்போது இது ஒன்றும் அவ்வளவு அருமையான படம் இல்லையே என்று தோன்றினாலும் மூன்று மணிநேரம் முழுக்க நம்மை அறியாமல் நாம் சிரித்திருக்கிறோம் என்பது ந.கொ.ப.கா குழுவினருக்கு கிடைத்த வெற்றி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 November 2012

பேருந்து தோழி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


உனக்கான நிறுத்தத்தை கடந்தபிறகு
பேருந்து ஊர்ந்து செல்கிறது

நீ அமர்ந்த ஜன்னலோர இருக்கைக்கு
ஜன்னி வந்துவிட்டதாம் #ஐஸ்

மழை நாட்களில் வேண்டுமென்றே
குடையை மறக்கிறேன்

திருடி ஜாக்கிரதை
என்றுதானே எழுதியிருக்க வேண்டும்


பிடித்திருந்தது - நீ என் கை
பிடித்திருந்தது

வேகத்தடைகளில் விரதம் கலைகிறது

காலேஜ் ஸ்டூடன்ட்ஸின் டப்பாங்குத்து கூட
உன்னிருப்பில் கண்ணே கலைமானே

உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
அசிங்க அசிங்கமாக திட்டினேன்


அனுஷ்கா அப்படியொன்றும் அழகில்லை

அந்த லாங் சைஸ் நோட்டுக்கு மட்டும்
மன்னிப்பே கிடையாது

குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த
குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தேன்

ஸ்டெர்லிங் ரோடும் வண்ணாரப்பேட்டையும்
ஒரு ஆயிரம் மைல் தொலைவில் இருந்திருக்கலாம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 November 2012

துப்பாக்கி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சமீப காலங்களில் வெளிவந்த முகமூடி, பில்லா 2, தாண்டவம், சகுனி, மாற்றான் வகையறாக்களை நினைத்தால் திரையரங்கிற்கு செல்லவே திகிலடிக்கிறது. அந்த வரிசையில் துப்பாக்கி நம்மை மிரட்டினாலும் காஜலுக்காக நமது சமூக கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை. அதிக எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ஏதோ காஜல் நான்கு பாடல்களில் தோன்றினால் சரி என்றே சென்றேன்.


ராணுவ அதிகாரியாக வித்தியாச விஜய். குத்து வசனங்கள் கிடையாது, ஒலிம்பிக் சாகசங்கள் இல்லை, பாடல்காட்சிகளில் எப்போதுமிருக்கும் நடன துள்ளலும் குறைவு. அறிமுகக்காட்சி, பாடல் தவிர்த்து விஜய் முழுக்க முழுக்க இயக்குனரின் கதாநாயகனாக மாறியிருக்கிறார்.

காஜல் - அகர்வால் ஸ்வீட்ஸ் காஜூ கத்லி. காஜல் மணப்பெண்ணாக அறிமுகமாகும் காட்சியிலேயே ப்ளாக்கில் கொள்ளை விலை கொடுத்து டிக்கெட் வாங்கிய கவலை நம்மை நீங்கிச்செல்கிறது. பொசுக்கென்று குத்துச்சண்டை வீராங்கனையாக மாறி இளைஞர்களின் இதயத்தை மணல்மூட்டையாக்கி குத்து குத்தென்று குத்துகிறார். அண்டார்டிகா பாடல்காட்சியில் ரக்பி பந்தை தூக்கிக்கொண்டு காஜல் ஓடிவரும்போது ரசிகர்களின் நெஞ்சங்கள் மகிழ்ச்சியில் பூத்து குலுங்குகின்றன. இரண்டாம் பாதியில், காஜல் கண்கலங்கும்போது, “உனக்கு நான் இருக்குறேன் தாயி... அழாதடா தங்கம்...”ன்னு கட்டியணைத்து சமாதானம் செய்யத்தோன்றுகிறது. சின்மயியுடைய பின்னணிக்குரல் சலிப்பு.

பில்லா வில்லன் வித்யுத் ஜம்வால் நடித்திருக்கிறார். சத்யனுடைய மாடுலேஷன் கடுப்படிக்கிறது. அரிதாக நல்ல ஜோக்ஸ் எட்டிப்பார்க்கிறது. ஜெயராம் கேரக்டரை பார்க்கும்போது ஏனோ ஏகன் படம் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.


தீப்தி, சஞ்சனாவை பார்க்கும்போது விஜய்யை உரிமையோடு ‘மச்சான்' என்றழைக்க தோன்றுகிறது. ஐட்டத்தை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று யோசித்தால், அடடே அக்ஷரா கவுடா...!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கூகுள் கூகுள் குதூகலிக்கிறது. பாடல் தொடங்கியதிலிருந்து முடியும்வரை திரையரங்கமே உற்சாக கூப்பாடு போடுகிறது. அலேக்கா, அண்டார்டிகா பாடல்கள் காஜலின் விஷுவல் ட்ரீட். பின்னணி இசை ஹாரிஸின் முந்தய படங்களோடு ஒப்பிடும்போது தேவலை.

சிற்சில குறைகள் தவிர்த்து வெகுஜன மக்கள் விரும்பும் வகையில், திரையரங்குகளில் நிஜமாகவே வெற்றிநடை போடும் வகையில் வெடித்திருக்கிறது துப்பாக்கி...!

குறைகளில் ரெண்டு சாம்பிள்:
- நான்கைந்து தீவிரவாதிகள் ஏ.கே 47 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு டுப்பு டுப்புன்னு சுடுறாங்க. ஆனா, விஜய் ஒரே ஒரு பிஸ்டலை வச்சே அம்புட்டு பேரையும் காலி பண்றாரு...!
- ஹீரோ ராணுவ வீரருன்னா காஷ்மீர்ல இருந்து வரும்போது கூட சீருடையிலேயே வருவாங்கன்னு இன்னமும் நம்மாளுகள நம்ப வைக்கிறீங்களே... நீங்க திறமைசாலிகளய்யா...!


உச்சக்கட்ட காட்சியில் என்ன நடக்குமென்று அவதானிக்க முடிந்தபிறகும் நீட்டி முழக்கி மொக்கை போடாமல் இருந்திருக்கலாம். படத்தின் நீளம் கருதி, ஜெயராம் காட்சிகளையும், க்ளைமாக்ஸில் சிறுபகுதியையும் சில நாட்களில் கத்தரிக்கலாம். அது ரிப்பீட் ஆடியன்ஸை வரவழைக்கும் யுக்தியாகவும் இருக்கலாம்.

துப்பாக்கி - ஒரு பக்கா கமர்ஷியல் / மசாலா / டைம்பாஸ் படம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறது. மற்றபடி கில்லியை சாப்ட்ருச்சு, விஜய்'ஸ் பெஸ்ட் ஆக்குசன் மூவி எவர் என்றெல்லாம் அடித்து விடுவது டூ மச்...!

விஜய்யின் ஃபேமிலி, காஜல் காட்சிகளை அதிகப்படுத்திவிட்டு, ஆக்குசனை குறைத்திருந்தால் படம் கில்லியா இருக்கிறதென பாராட்டியிருக்கலாம்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 November 2012

மேற்கிந்திய தீவுகளில் தீபாவளி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் மேலோங்கியிருந்த சமயம், மேற்கிந்திய தீவுகளின் கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய இந்தியர்களையும் சீனர்களையும்
கொத்தடிமைகளாக ஏற்றுமதி செய்தது ஆங்கிலேய அரசு. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். ஆரம்பத்தில் ஐந்தாண்டு, பத்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் சென்ற இந்தியர்கள் அங்கேயே தொடர்ந்து வாழ வேண்டிய சூழல். விளைவு - தற்போது ட்ரினிடாட் & டொபாகோ தீவுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் நாற்பது சதவிகிதத்திற்கு மேல் இந்தியர்கள், அவர்களில் பாதி ஹிந்துக்கள். அண்டை நாடுகளில் ஒன்றான கயானாவின் நிலையும் அதுவே.



தீபாவளி, தீப ஒளி, தீவாளி, திவாளி, டிவாலி, விடுமுறை தினம் - என்று பலவகையில் இந்தியாவில் உச்சரிக்கபட்டாலும் மேற்கிந்திய தீவுகளில் தீவாளி / திவாளி என்றே சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்பெல்லிங் மட்டும் DIVALI...! கயானா, டி & டி நாடுகளில் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தீபாவளி தேசிய விடுமுறை தினமாக இருந்து வருகிறது.

மேற்கிந்திய தீவுகளில் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது என்று பார்ப்போம். தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே மக்கள் தத்தம் வீடுகளை சுத்தப்படுத்தி, புது வண்ணங்களை பூசி லக்ஷ்மி பூஜைக்கு தயார் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். நாட்கள் நெருங்கியதும் தோரணங்கள், ரங்கோலி கோலங்கள் அன்று கலைநயத்தோடு அழகுபடுத்துகின்றனர்.

தீபாவளியன்று அதிகாலை எண்ணைக்குளியல் போட்டுவிட்டு, கோழிக்கறி குழம்பில் இட்லியோ தோசையோ பெனஞ்சு அடிப்பது தான் தமிழ்நாட்டு வழக்கம். ஆனால் மேற்கிந்திய தீவு மக்கள் வட இந்திய பாணியில் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்று அவர்களின் உணவுமுறையில் இருந்தே புரிந்துக்கொள்ள முடிகிறது. தீபாவளியன்று மே.தீ வாழ் இந்தியர்கள் அசைவத்தை தொடுவதே இல்லை. சொல்லப்போனால் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே நோன்பிருக்க ஆரம்பித்து விடுகின்றனர். ரொட்டி, பட்டாணி - உருளைக்கிழங்கு, பருப்பு சாதம், பூசணிக்காய் என்று இவர்களின் தீபாவளி மெனு உப்பு சப்பில்லாமல் இருக்கிறது. குளோப் ஜாமூன், ஜிலேபி, கச்சோரி என்று பலகாரங்கள் கூட வட இந்திய கலாசாரத்தை பறைசாற்றுகின்றன.



தீபாவளியின் பின்பகுதியில் ராமர், கிருஷ்ணர், நரகாசுரன் என்று ஏராளமான புராணக்கதைகள் இருப்பினும் மே.தீ மக்கள் பெரும்பாலும் தீபாவளியன்று பொருளாதார கடவுளான லக்ஷ்மியையே வணங்குகின்றனர். அங்கிருக்கும் ஹிந்துக்கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதன்பிறகு முன்பத்தியில் குறிப்பிட்ட உணவுவகைகளோடு தங்களுடைய நோன்பை நிறைவு செய்கின்றனர். மாலை ஐந்து மணிக்கு மேல் வீடுகளில், தெருக்களில், கதவோரங்களில், படிக்கட்டுகளில் என தீபங்களை வைத்து நகரெங்கும் ஒளிமயமாக்குகின்றனர். குறிப்பாக மூங்கில்களை வளைத்து செய்யப்படும் விளக்குகள் மே.தீவுகளில் பிரசித்தி.


மேற்கு இந்திய தீவுகளில் கார்னிவல், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு அடுத்தப்படியாக நிற்பது தீபாவளி தான். சென்னையில் தீவுத்திடல் இருப்பது போல மேற்கிந்திய தீவுகளில் சகுவானாஸ் என்றொரு இடம் இருக்கிறது. இங்கே வருடாவருடம் தீபாவளிக்கு முந்தய இரு வாரங்களில் “தீபாவளி நகர்” என்ற பெயரில் திருவிழா நடக்கிறது. கலை நிகழ்ச்சிகள், இந்திய புராணக்கதைகளை ஒத்த நாடகங்கள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், பொருட்கண்காட்சி என்று களேபரமாகி தீபாவளிக்கு முந்தய நாள் இரவோடு நிறைவுபெறுகிறது. 


ரம்ஜான் சமயத்தில் நம்மூர் அரசியல்வாதிகள் குல்லா அணிந்து இப்தார் கஞ்சியடிக்கும் ஸ்டில்களை ஃப்ளெக்ஸ் பேனர்களில் பார்த்திருப்போம். அதே போல மே.தீ. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் தீபாவளி நகர் திருவிழாவில் மக்களோடு மக்களாக பிணைந்து, இந்திய பாரம்பரிய உடை, அதாவது குர்தா பைஜாமா அணிந்து நம்மவர்களை மகிழ்விக்கிறார்களாம். 


தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக நடைபெறும் “மிஸ் தீவாளி நகர்” அழகிப்போட்டி தீபாவளி கொண்டாட்டங்களின் ஹைலைட். இந்திய - ஆப்பிரிக்க கூட்டுமுயற்சியில் படைக்கப்பட்ட அழகிகள் சேலை தரிசனம் தருவது கண்கொள்ளா காட்சி. இதே பாணி அழகிப்போட்டி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலும் நடைபெறுவது கூடுதல் செய்தி. மிஸ்டர் தீவாளி நகர் போட்டியும் நடைபெறுகிறது என்ற செய்தியை நமக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்.

கார்னிவல் மற்றும் தீபாவளியை முன்னிறுத்தி T&T, கயானா போன்ற நாடுகள் மிகப்பெரிய அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதாக சொல்லப்படுகிறது. 



தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிக்கும் கலாசாரம் மேற்கிந்திய தீவுகளில் இருப்பதாக தரவுகள் எதுவும் காணப்படவில்லை. எனினும் பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் விளையாடப்படும் சாகச வெடி விளையாட்டை காணொளியில் பார்க்கலாம்...!




படங்கள் & தகவல்கள் www.triniview.com, விக்கிபீடியா மற்றும் பல தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 November 2012

ஆரோகணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏதோ பைபோலார் டிஸார்டர் பற்றிய படமாம் என்று சொன்னபோதே எனக்குள் எதிர்பார்ப்பு எகிறியது. டைட்டில் தான் என்ன எழவென்று புரியாமல் உறுத்தியது. ஆனால் நம் அனைவருக்கும் விருப்பமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆண்ட்டி இயக்கியிருக்கும் முதல் சினிமா என்பதால் பார்க்க முடிவு செய்திருந்தேன். சிலபல காரணங்களால் இப்போது தான் பார்க்க முடிந்தது. தாமதமாக பார்த்ததாலோ, அயர்ச்சியின் காரணமாகவோ ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்பு குறைந்திருந்தது.



பிரதான வேடத்தில் விஜி, பழைய நடிகை சரிதாவின் தங்கை. இவரை இதற்கு முன்பு விஜய் டிவி நிகழ்ச்சியொன்றில் பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே அவரா இது, அவரா இது என்று பலமுறை சரிபார்த்துக்கொள்ளும்படி தோற்ற மாற்றம். நிஜத்தில் கூட விஜி படிக்காத ஏழை காய்கறி வியாபாரியாக இருப்பாரோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது. தப்பாட்ட குத்தாட்டத்தில் விஜி பாறைகள்...!

நாயகிக்கு அடுத்தாற்போல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் இயக்குனர் மாரிமுத்து. (பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் படத்தின் இயக்குனராம்). விஜியின் மகளாக நடித்திருக்கும் புதுமுகம் பழைய நடிகை மாதவியை நினைவூட்டுகிறார். உமா பத்மநாபன், ராஜி (எந்திரனில் சனா தாயார்), ரித்திகா ஸ்ரீநிவாஸ் (வழக்கு எண் 18/9) என்று தன் சகவயது தோழிகளுக்கு வாய்ப்பு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் இயக்குனர். ராஜியும் உமாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் சாமான்ய ரசிகனுடைய கடுப்பை கிளப்புகின்றன. ஜே.பியும் கவிதாலயா கிருஷ்ணனும் லேசான புன்முறுவலை வரவழைக்க முயற்சிக்கிறார்கள்.

முதல் பாதி முழுக்க தாயை காணாமல் ஏங்கும் குழந்தைகளின் பரிதவிப்பு நமக்குள் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இரண்டாம் பாதியில் சட்டென கதை வேறேதோ பாதையில் பயணிக்க முற்பட்டு நாய் பெற்ற தெங்கம்பழத்தை நினைவூட்டியது. இறுதியில் சொல்ல வந்த கரு(ம)த்தை படம் பார்ப்பவர்கள் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாதபடி சொல்லி முடித்திருக்கிறார்கள்.

கே’யின் இசையில் தப்பாட்ட பாடல் கொலவெறி மாதிரி மிகப்பெரிய சென்சேஷனை ஏற்படுத்தியிருக்க வேண்டியது. சொல்லப்போனால் படத்தின் மையக்கருவே அந்த பாடல் தான். வழக்கமாக படம் நிறைவடைந்ததும் திரையரங்கில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்களாம் என்ற நினைப்புடனேயே சிதறும் தமிழ் சினிமா ரசிகர்கள் இறுதியில் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட தப்பாட்ட பாடலை பொறுமையாக நின்று ரசிக்கிறார்கள்.



சராசரி ரசிகர்களை பொறுத்தமட்டிலும், “கடைசியா என்னதான்டா சொல்ல வர்றீங்க...?”, “இந்தமாதிரி ரெண்டு படம் பார்த்தா நானே மெண்டலாயிடுவேன்” போன்ற புலம்பல்களையும், இளைஞர்களின் கண்ணோட்டத்தில் படுமொக்கையான படமாகவும், கலைப்படமாகவும் வகைப்படுத்த முடியாமல் எந்த மாதிரியும் சொல்ல முடியாமல் வந்த மாதிரியே முடங்கிவிட்டது ஆரோகணம். இனி நீங்களே திரையரங்கம் சென்று ஆரோகணம் பார்க்க நினைத்தாலும் பார்ப்பது சிரமம் தான்.

மொத்தமே ஒன்றரை மணிநேரம் ஓடிய படத்திலிருந்து உருட்டி திரட்டி பார்க்கும்போது இரண்டு முக்கியமான விஷயங்களை ஆரோகணம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. முதலாவது, “உங்க இமேஜ் என்னாகும்...?” என்று அங்கலாய்க்கும் உதவியாளரிடம் “என்னடா பெரிய இமேஜ் ? இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா !” என்கிறார் அரசியல்வாதி வி.ஐ.பி. இரண்டாவது அளவுக்கு மீறி ஏற்படும் கோபமும் வைராக்கியமும் அல்லது எந்த ஒரு உணர்ச்சியும் ஆபத்தானது தான், ஆனால் அதையே பாஸிடிவ் எனர்ஜியாக மாற்றிக்கொண்டால் நீங்கதான் பாஸ்...!

ஆரோகணம் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனநோயாளியை தட்டிக்கொடுத்து, உங்களுக்கு ஒன்னுமில்லை பாஸ்... நீங்க நார்மலா தான் இருக்கீங்க....! என்று ஆறுதலூட்டுகிறது.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment