13 July 2016

அந்தமானில் அருணகிரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த அருணகிரி – உலகம் சுற்றிய வாலிபன். தன்னுடைய உலக நாட்டு பயண அனுபவங்களைக் கொண்டு பதினைந்து நூல்கள் எழுதியிருக்கிறார். குறிப்பாக, ஜப்பானை பற்றி இதுவரை யாரும் எழுதியிராத தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். மேலும் விகடன் பிரசுரமாக வெளியான ‘கட்சிகள் உருவான கதை’ உட்பட ஐந்து அரசியல் நூல்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய படைப்புகளில் ஒன்று – அந்தமானில் அருணகிரி ! புத்தகத்தின் பெயரைக் கேட்டதும் அதனை வாங்கியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.

புத்தகத்தின் தலைப்பிலிருந்தே நீங்கள் ஒரு விஷயத்தை யூகித்திருக்கலாம். முன்னுரையை படிக்கும்போது ஊர்ஜிதமாயிற்று. அது என்னவென்றால் பெரிய எழுத்தாள தொனியோடு, படாடோப அலங்காரங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு சாமானியன் பார்வையில் இருக்கிறது புத்தகத்தின் உள்ளடக்கம். கையில் ஒரு வாழைக்காய் பஜ்ஜியை வைத்துக்கொண்டு, அது எந்த எண்ணையில் தயாரிக்கப்பட்டது, எண்ணெய்களின் மூலம் எந்த நாடு, எண்ணெய் இந்தியாவிற்குள் நுழைந்த அரசியல் பின்னணி என்ன, மேலும் பஜ்ஜியை சுற்றியிருக்கும் தினத்தந்தி எந்த தேதியில் அச்சிடப்பட்டது, அதன் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு என்றெல்லாம் வளவளவென்று மொக்கை போடாமல் நேரடியாக பஜ்ஜியின் சுவை தரும் பரவசத்தை விளக்கத் துவங்கிவிடுகிறார். பஜ்ஜியின் சுவை தொண்டைக்குழிக்குள் இறங்கியபிறகு சாவகாசமாக இடையிடையே அரசியல், வரலாறு பேசுகிறார்.

சிறு வயதிலிருந்தே அந்தமான் மீதும், கப்பல் பயணம் மீதும் தனக்குள்ள பேராவலை விவரித்து புத்தகத்தை துவங்குகிறார். கப்பல் பயணம் குறித்த இவருடைய முப்பது வருட கனவு அந்தமானுக்கு ஸ்வராஜ்தீப்பில் பயணம் செய்யும்போது பூர்த்தியடைகிறது. அருணகிரியின் இந்த இச்சைகளையும், அவரது முதல் கப்பல் அனுபவத்தையும், அவருடைய விவரணைகளையும் படிக்கும்போது அப்படியே என்னை நானே படித்துக்கொள்வது போல இருக்கிறது. பல இடங்களில் அச்சு அசலாக எனது வலைப்பூவையே வாசிப்பது போல இருந்து என்னை புத்தகத்துடன் நெருக்கமாக உணரச் செய்தது.

இருப்பினும் வலைப்பூவில் / ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கும் புத்தகம் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உங்கள் வலைப்பூவை படிப்பவர்கள் பெரும்பாலும் உங்களுடன் நட்பு பாராட்டுபவர்களாகவும், குறைந்தபட்சம் உங்களுடைய குணாதிசயங்களை புரிந்து வைத்திருப்பவராகவும் இருப்பர். வலைப்பூவில் எழுதும்போது நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை (பயணத்தில் சைட்டடித்த ஃபிகர் பற்றியோ, குறட்டைவிட்டு தூக்கத்தை கெடுத்த சகபயணி குறித்தோ) எழுதலாம். நண்பன் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கப்பலில் போக பயந்தது பற்றியும் அவனை எப்படி சமாதானப்படுத்தினீர்கள் என்றும் எழுதலாம். பெங்களூரில் போயிறங்கியதும் காஜல் அகர்வால் போஸ்டரை பார்த்தேன் என்று ஜொள் விடலாம். ஆனால் புத்தகத்தில் இதுபோன்ற அசட்டுத்தனங்கள் கூடாது. புத்தகத்தை வாங்கி படிப்பவர்கள் நம் மீது துளி கூட அக்கறை இல்லாதவராகவும், புத்தகத்தின் உள்ளடக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டும் வாங்கியிருக்கலாம். அவருடைய நம்பிக்கையை கெடுக்காத வண்ணம் பொறுப்புணர்ச்சியுடன் எழுத வேண்டும். அது இந்த புத்தகத்தில் நிறைய இடங்களில் தவறுகிறது.

தேசிய இளைஞர் திட்டம் என்கிற அமைப்பின் மூலம் அருணகிரி அவர்கள் அந்தமான் சென்றிருக்கிறார். அதனால் அந்த அமைப்பு, செயல்பாடுகள், முந்தைய முகாம்கள் போன்ற விவரணைகள் வருகின்றன. இடையிடையே அந்தமானில் படப்பிடிப்பு நடத்திய திரைப்படங்கள், அந்தமானில் வாழ்ந்த தமிழறிஞர்கள், தமிழர் சங்கம், அந்தமான் பொதுக்கூட்டத்தில் மறைந்த (அப்போதைய) வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி (தி.மு.க.), அந்தமான் ஹிந்துக் கோவில் திருவிழாக்கள், பயணத்தில் சந்தித்த வெளி மாநிலத்தவர் / வெளிநாட்டவர், ஈழத்தமிழ் பாடகி மாதங்கி அருள்பிரகாசம் என்று கலந்துகட்டி பல தகவல்களை அளிக்கிறார். கூடவே, கடலில் காகங்கள் பறக்குமா ? கப்பலில் காகத்தை கொண்டுவந்து நடுக்கடலில் பறக்க விட்டால் அது என்ன செய்யும் ? போன்ற கேள்விகளால் அவரது குழந்தைத்தனம் கொண்ட மறுபக்கத்தையும் காட்டுகிறார். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து குறைந்தது ஒரு புத்தகமாக எழுதிவிட வேண்டுமென தீவிரமாக பரிந்துரைக்கிறார்.

கப்பல் போர்ட் ப்ளேர் துறைமுகத்திற்கு சென்றடைந்ததும் கொஞ்சம் தரைதட்டத் துவங்குகிறது. அது மட்டுமில்லாமல் அருணகிரி அவர்கள் தன்னுடைய பத்துநாள் பயணத்தில் போர்ட் ப்ளேர் மற்றும் அதற்கு அருகே அமைந்துள்ள ஒன்றிரண்டு தீவுகளுக்கு மட்டும் போய் வந்திருப்பதாக தெரிகிறது. அவற்றில் கூட படிக்கும்போது இதனோடு பல தகவல்கள் சேர்த்து எழுதியிருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு சாத்தம் தீவில் அமைந்துள்ள மர அறுவை தொழிற்சாலைக்கு பின்னால் சுவாரஸ்யமான ஜப்பானிய போர் வரலாறு ஒன்று இருக்கிறது. ராஸ் தீவு ஒருகாலத்தில் ராணுவத் தலைமையிடமாக விளங்கியது. வைப்பர் தீவின் கதையைக் கேட்டால் மிரட்சியாக இருக்கும். மிக முக்கியமாக, வெளிநாட்டு கடற்கரைகளுக்கு இணையான ஹேவ்லாக் கடற்கரை இருக்கிறது. இதுகுறித்தெல்லாம் சிறிய சிறிய பத்திகள் எழுதிவிட்டு அந்தமான் காதலி படத்தில் சிவாஜி சுஜாதாவுடன் ரொமான்ஸ் செய்வதைப் பற்றி விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்தமான் ஆதிவாசி இனங்களில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள் சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகள். அவர்களைப் பற்றி ஒரு பத்தி கூட எழுதாதது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.

இது ஒருபக்கம் என்றால் நூற்றி நாற்பது பக்க புத்தகத்தில் எண்பத்திஐந்து பக்கங்களுடன் அந்தமான் அனுபவங்கள் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு நெல்லூர் ஞாயிறுச்சந்தை, மூணாறு, கழுகுமலை, யானைமலை போன்றவற்றை குறித்து எழுதியிருப்பதில் சில தகவல்கள் கிடைத்தாலும் கூட அவை அவுட் ஆப் சிலபஸ் என்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. உச்சபட்ச வன்முறை எது தெரியுமா ? கடைசி பதினைந்து பக்கங்களை நூலாசிரியர் பற்றி நடிகர் ராஜேஷ், லேனா தமிழ்வாணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் நிறைத்திருக்கின்றன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட எனது பயண அனுபவங்களை மீண்டும் நினைவூட்டும் விதமாகவும், மீண்டுமொரு முறை பயணிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளதாலும் அந்தமானில் அருணகிரியை ரசித்து வாசித்தேன். ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் வாங்கிப் படிக்கலாம்.

அந்தமானில் அருணகிரி
மங்கையர்க்கரசி பதிப்பகம்
140 பக்கங்கள்
விலை ரூ.100/-

எழுத்தாளரின் அலைபேசி எண்: 94443 93903


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 July 2016

பெங்களூரு தினங்கள் – 5 (கடைசி பகுதி)

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெங்களூர் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக இணக்கமாகி வரும் சமயத்தில், அலுவலகத்தில் உயரதிகாரி அழைத்து அநேகமாக அடுத்த வாரத்தில் நீங்கள் சென்னைக்கு மாற்றலாகி விடுவீர்கள் என்றார். ஒரு கணம் மனதில் ஒரு கனம். சென்னைக்கு மாற்றலாவது நான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகிழ்ச்சிதான் என்றாலும் அதனை கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாம் அல்லது முன்கூட்டியே அறிவித்திருக்கலாம். பெங்களூர் வந்து ஒரு பெயருக்காக கூட லால் பாக், கப்பன் பார்க் சுற்றிப் பார்க்கவில்லை. பப் இருக்கும் திசையை நோக்கி நடந்துகூட செல்லவில்லை. இவ்வளவு ஏன் ? கண் எதிரிலேயே இருந்த சந்தியா தியேட்டர் காம்பவுண்டில் கூட நுழைந்ததில்லை. இது போதாதென்று கடைசி வாரத்திற்கு கடுமையான வேலைப்பளுவை சுமத்தி, “Take your own time. ஆனா நீங்க சென்னை போறதுக்குள்ள முடிச்சிட்டு போங்க” என்று கெடு ஒன்றை விதித்திருந்தார் டேமேஜர். ஆமாம், மாநிலம் மாறலாம், மொழி மாறலாம், டொமைன் மாறலாம், ஆனால் டேமேஜர்கள் மாறுவதில்லை !


ஏதேதோ திட்டமிட்டு வைத்திருந்தேன். கெடுவின் காரணமாக கடைசி வாரம் எதுவும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. நண்பர்களை சந்தித்து விடைபெற, ஹெய்னகென் அருந்த, சந்தியா தியேட்டரில் காஞ்சூரிங் 2 நைட் ஷோ பார்க்க என்று எதுவுமே முடியவில்லை. சென்னை கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு தன்மையான ஆந்திர நண்பரொருவரின் உதவியால் எனது வேலைகளை முடிக்க (முடிந்தது போல பாவனை செய்ய) முடிந்தது. பெங்களூரு நினைவுகளை அசை போட்டபடி பிருந்தாவன் விரைவு ரயிலில் சென்னை திரும்பினேன்.

பெங்களூரில் இருந்த இந்த கொஞ்ச நாட்களிலேயே அதன் வாழ்க்கைமுறை சில சமயங்களில் என்னை திகைக்க வைத்திருக்கின்றன. கடைசி நாள் இரவு. கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியில் வயிற்றுக்கு சற்று ஈய்வதற்காக ஆந்திர நண்பருடன் வெளியே வந்திருந்தேன். சுமார் பத்து மணி இருக்கும். அந்த சாலையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. சாலையோரத்தில் மூடியிருந்த ஒரு வங்கியின் படிக்கட்டுகளில் ஒரு ஜோடி நெருக்கமாக அமர்ந்திருந்தது. எனக்கு அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்க கூச்சமாக இருந்தது. ஆனால் அவர்கள் காதல் புரிந்துக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் நிச்சயம். இதுபோன்ற ஒரு காட்சியை, நீங்கள் சென்னையில் இரவு வேளையில் பார்ப்பது கடினம். பொதுவாகவே, இங்குள்ள பெண்கள் கொஞ்சம் கூடுதல் சுதந்திரத்துடன் இருப்பது போல தெரிகிறது. ஆண்களைப் போலவே பல பெண்களும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கி பணிபுரிவதால் கட்டுப்பாடுகள் தளர்ந்து சுதந்திரமாக இருக்கின்றனர். சென்னையில் புகை பிடிக்கும் பெண்கள் அரிது. அப்படியே யாரேனும் பிடித்தால் அவரை கடந்து செல்லும் ஆண்கள் அவளை குறுகுறுவென பார்த்து, அது சிகரெட் தான் என்பதை உறுதி செய்து சக ஆண்களிடம் அதுபற்றி வசைப்பாங்குடன் கருத்துரைப்பார்கள். பெங்களூரில் பெண்கள் புகைப்பிடித்தல், கவர்ச்சியுடை அணிதல், க்ளீவேஜ் தரிசனம் தருதல் எல்லாம் சாதாரண விஷயங்கள்.

தொடரை முடிக்கும் முன் பெங்களூருக்கு என சில பிரத்யேகமான இனிப்பு வகைகள் உள்ளன. அதுகுறித்து சொல்லிவிடுகிறேன். தமிழகத்தில் ஆவின் எப்படியோ அப்படி கர்நாடகத்தில் இந்த நந்தினி பார்லர்கள். பால் மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்கள், இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் கூட்டுறவு நிறுவனம். இதன் விற்பனை நிலையங்கள் பெங்களூரில் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக ரயில் / பேருந்து நிலையங்களுக்கு அருகில் அதிகம் இருக்கின்றன. நீங்கள் பெங்களூர் அல்லது கர்நாடக மாநிலத்தின் பிற ஊர்களுக்கு சென்றாலோ இந்த கடைகளில் கண்டிப்பாக வாங்க வேண்டிய இரண்டு இனிப்பு பண்டங்கள் உள்ளன. ஒன்று, தர்வத் பேதா. இரண்டாவது, பேஸான் லட்டு!

தர்வத் பேதா என்பது உத்திர பிரதேசத்தில் இருந்து கர்நாடக மாநில ‘தர்வத்’ என்ற ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு வணிகரின் கண்டுபிடிப்பு. ஆரம்பத்தில் அவருடைய குடும்ப ரகசியமாக வைத்துக் காப்பாற்றப்பட்ட தர்வத் பேதா செய்முறை. நாளடைவில் கர்நாடகம் முழுவதும் பிரபலமாகி, தற்போது மற்ற மாநிலங்களில் கூட விற்பனையாகிறது. பிரத்யேகமான சுவையுடன் விளங்கும் இந்த தர்வத் பேதா கால் கிலோ 70ரூவில் கிடைக்கிறது. அடுத்தது, பேஸான் லட்டு. இதனை நம்முடைய வீடுகளில் கூட நீங்கள் சாப்பிட்டிருக்கலாம். கடலை மாவுடன் நெய், சர்க்கரை, ஏலக்காய் இத்யாதிகளை கலந்து உருண்டையாக திரட்டி வைத்திருக்கிறார்கள். இதனுடைய சுவை நம்மை விடேன் விடேன் என்கிறது. கால் கிலோ 80ரூ. இவை இரண்டையும் தவிர்த்து, நான் கேள்விப்பட்டு ஆனால் நந்தினி பாலகத்தில் கிடைக்காத ஒரு பண்டம் பெல்காம் குண்டா. இதுவும் பால் பொருட்களின் கூட்டுறவில் தயாராகும் இனிப்பு வகையே.

சென்னை திரும்பியாயிற்று. கொஞ்ச நாட்கள் எனது வலைப்பூவில் முன்பு போல எழுத வாய்ப்பளித்த நாட்கள் இத்துடன் (தற்காலிகமாக) நிறைவு பெறுகிறது. இனி வரும் காலங்களில் நான் மீண்டும் பெங்களூர் வரலாம், சிறிது காலம் தங்கலாம். அப்போது புதிய தகவல்களுடன், அனுபவங்களுடன் மீண்டும் எழுதுகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 July 2016

பெங்களூரு தினங்கள் – 4


அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு போகப்போகிறோம் என்றதும் அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் உற்சாகமூட்டிய ஒரு விஷயம், அங்கு நல்ல சரக்கு கிடைக்கும் என்பது. குறிப்பாக வெளிநாட்டு பியர் வகைகள். தமிழ்நாட்டு மதுக்கடைகளில் திரும்பிய திசையெல்லாம் கிங்ஃபிஷர்தான் பிரதானமாக கிடைக்கும். அதிலேயும் ‘லாஹர்’ கிடைக்காது, கூலிங் இருக்காது. வேண்டாம் என்றால் 6000, 12000 என்ற பெயரில் உள்ள மட்டமான பியர்தான் கிடைக்கும். டாஸ்மாக்குகளின் ஒரேயொரு ஆறுதல் ப்ரிட்டிஷ் எம்பயர் பியர்தான். பெங்களூரில் அப்படியில்லை. கால்ஸ்பர்க், பட்வெய்ஸர், ஹெய்னகென், ஃபாஸ்டர்ஸ் உட்பட நல்ல பியர்கள் டின்னிலும், பாட்டிலிலும் MRP விலைக்கே கிடைக்கின்றன. 

முதல்முறை பெங்களூரில் உள்ள ஒரு மதுபான ஷோரூமுக்கு சென்றோம். ஏறத்தாழ தமிழக எலைட் கடைகளைப் போல காட்சியளித்தது. ஆனால் சாய்ஸ் மட்டும் ஏராளம்.

தமிழகத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். டாஸ்மாக்கில் மற்ற பானங்களை விட பிராந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். புதிய சரக்குகளை அறிமுகப்படுத்தும்போது அதில் பிராந்தி பிரதான இடம் வகிக்கும். ஒருமுறை அலுவலக டீம் அவுட்டிங் சென்றிருந்தோம். வந்திருந்தவர்கள் அவரவர் விருப்ப சரக்குகளை கொணர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர்கூட பிராந்தி கொண்டு வரவில்லை. மேலும் என் பையில் இருந்து பிராந்தியை எடுத்ததும் என்னை ‘டிபிக்கல் டமில்நாடு கய்’ என்று ஏளனம் செய்தார்கள். சென்னையின் விருப்ப பானம் பிராந்திதான் என்று ஒரு பிரபல நாளிதழே சூடமேற்றி சத்தியம் செய்கிறது. மற்ற (பியரல்லாத) பானங்களோடு ஒப்பிடும்போது டாஸ்மாக்குகளில் எண்பது சதவிகிதம் பிராந்தி விற்பனையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பிராந்தியை குதிரைக்கு கொடுக்கும் சரக்கு என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதனால்தான் தங்களை கட்டுக்கடங்காத குதிரையாக கருதும் தமிழர்கள் பிராந்தியை அருந்துகிறார்களோ ? இன்னொரு பக்கம், தமிழர்கள் வேறு வழியில்லாமல் தான் பிராந்தி அருந்துகிறார்களோ என்ற ஐயப்பாடும் எனக்கு எழுவதுண்டு. உண்மையைச் சொல்வதென்றால் தமிழக குடிகாரர்கள் பெரும்பாலோனோருக்கு பானங்களின் பெயரோ, வகையோ தெரிவதில்லை. இருப்பதிலேயே மலிவாக எது கிடைக்கிறதோ அதனை அவர்கள் உட்கொள்கிறார்கள். டாஸ்மாக்குகளில் வெறுமனே பணத்தை மட்டும் நீட்டி எழுபது ரூபாய் சரக்கு, எண்பது ரூபாய் சரக்கு என்று கேட்பவர்கள் அதிகம். எதற்காக இந்த பிராந்தி கதையை சொல்கிறேன் என்றால் பெங்களூரில் ஒப்பீட்டளவில் பிராந்தி குறைவு. அதே சமயம் ரம், விஸ்கியில் அதிக வெரைட்டி கிடைக்கின்றன. 

பெங்களூரில் உள்ள விதவிதமான மதுக்கடைகளுக்கும், மதுக்கூடங்களுக்கும், க்ளப் / பப் வகையறாக்களுக்கு சென்று ஆராயும் அளவிற்கு எனக்கு நேரம் கிடைத்ததில்லை. ஒருமுறை அங்குள்ள மோர் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். அங்குள்ள பலசரக்கு பொருட்களுக்கு இடையே ஓரமாக ஒரு பிரிவை மதுபானங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு நான் கண்டு உவந்த சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.
  • குவார்ட்டர் அளவு பானங்கள் ஃப்ரூட்டி பாணியில் டெட்ரா பேக்குகளில் கிடைக்கின்றன. இதுபோக பாண்டிச்சேரி போல சாம்பிள் பானங்கள் குட்டிக்குட்டி புட்டிகளில் கிடைக்கின்றன.
  • மலிவான பானங்கள் முதல் விலையுயர்ந்த ‘ஒசந்த சாதி’ பானங்கள் வரை பாரபட்சமின்றி கிடைக்கின்றன. குறைந்த பட்சமாக ஒரு ஃபுல் பாட்டில் ரம் வெறும் 254 ரூபாய்க்கு கிடைக்கிறது.
  • பகார்டியில் லெமன், ஆப்பிள், ஆரஞ்சு, பீச், கொய்யா, டிராகன் ஃப்ரூட், ராஸ்பெர்ரி உள்ளிட்ட சுவைகள் கிடைக்கின்றன. இதுபோக இறக்குமதி செய்யப்பட்ட காபோ, மலிபு தேங்காய் சுவையூட்டப்பட்ட வெண்ணிற ரம் கிடைக்கின்றன.
  • வொட்காவில் ஸ்மிர்னாஃப், எரிஸ்டாஃப், ரோமொனோவ் போன்ற உள்ளூர் பானங்களில் துவங்கி அப்சொலூட், க்ரே கூஸ் வரை கிடைக்கின்றன.
  • ஜின்னில் டாஸ்மாக்கில் கிடைக்குமே அந்த லோக்கல் பிராண்ட் (ப்ளு டைமண்ட் ?) தொடங்கி 8400 ரூபாய் மதிப்புள்ள டேன்க்வெரி (Tanquery) நம்பர் 10 ஜின் வரை கிடைக்கின்றன. அநேகமாக, அங்குள்ள விலையுயர்ந்த பானம் இதுவாகத்தான் இருக்கும்.
  • பியர்களில் முந்தைய பத்தியில் சொன்னது போல கால்ஸ்பர்க், பட்வெய்ஸர், ஹெய்னகென், ஃபாஸ்டர்ஸ் உட்பட நல்ல பியர்கள் டின்னிலும், பாட்டிலிலும் MRP விலைக்கே கிடைக்கின்றன. இதுபோக சில உள்ளூர் பியர்வகைகளும், ப்ரீசர்களும் கிடைக்கின்றன.
  • விஸ்கியில் பேக்பைப்பர் ரேஞ்சில் ஆரம்பித்து ப்ளாக் டாக், ஜேக் டேனியல், க்ளென்ஃபிடிச் வரை கிடைக்கின்றன. ஒரு ஃபுல் பாட்டில் க்ளென்ஃபிடிச்சின் விலை ஏழாயிரத்து எழுநூற்றி சொச்சம்.
  • ரெட் மற்றும் ஒயிட் ஒயின்கள் வெவ்வேறு விலையில் கிடைக்கின்றன. போர்ட் ஒயின் எனப்படும் காட்டமான ஒயின் வகையின் மிகக்குறைவான விலை என்னவென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒரு ஃபுல் பாட்டில் வெறும் 86 ரூபாய். 
ஐடி துறையில் பணிபுரிபவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இவர்கள் பெரும்பாலும் தாங்கள் ஐரோப்பாவிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக கற்பனையில் இருப்பவர்கள். எங்கும், எதிலும் ஆடம்பரமாக இருப்பதை விரும்புவார்கள். ஆனால் குடி என்று வந்துவிட்டால் இவர்கள் பெரும்பாலும் விரும்பிக் குடிக்கும் பானம் எது தெரியுமா ? ஓல்ட் மாங்க் ! முதலில் இதனை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவேளை ஓல்ட் மாங்க் என்ற பெயரில் இறக்குமதியாகும் பானம் ஒன்றிருக்கிறது போலும் என்றுதான் நினைத்தேன். பின்னாளில் அது அதே அடிமட்ட ஓல்ட் மாங்க் என்பதை தெரிந்துகொண்டேன். ஓல்ட் மாங்க்கை சிலாகித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பல கட்டுரைகளை நீங்கள் கூகுளில் தேடிப் படிக்கலாம். அத்தகைய பெருமைகள் கொண்ட ஓல்ட் மாங்க் பெங்களூரில் சல்லிசாக கிடைக்கிறது. ஒரு ஃபுல் 305 ரூபாய். இதே பாணியில் விஸ்கியில் கிளாஸிக்கான பேக்பைப்பரும் மலிவாக கிடைக்கிறது. இவையிரண்டையும் பார்த்தபிறகு எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. பிராந்தியில் குரியர் நெப்போலியன் என்றொரு அடிமட்ட அற்புதம் உள்ளதே அது எங்கே அய்யா ? அதே போல டக்கீலா பானங்களை பார்த்ததாக நினைவில்லை. ஒருவேளை வேறு கடைகளில் இருக்கலாம். 

பெங்களூரில் ஆங்காங்கே உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் (Restobar) உள்ளன. இவற்றில் ஒன்றில் நுழைந்து கால்ஸ்பர்க் கேட்டோம். தமிழக பார்களைப் போலவே கிங்ஃபிஷர் கொண்டு வரட்டுமா என்று மதுக்கூட ஊழியர் காலில் வெந்நீர் ஊற்றியதைப் போல துடியாய் துடித்தார். (என்ன மாயம் செய்தாய் மல்லய்யா ?) அதெல்லாம் முடியாது என்றதும் வெவ்வேறு பியர்களின் பெயரைச் சொல்லி கடைசியாக கில்லரோ, புல்லட்டோ ஏதோ ஒரு பெயர்கொண்ட பியரைக் கொணர்ந்து இது கால்ஸ்பர்கை போலவே இருக்கும் என்று திறக்கப் போனார். ‘குடித்தால் கால்ஸ்பர்க், இல்லையேல் விஷம்’ என்ற கொள்கையோடு அங்கிருந்து உக்கிரமாக வெளிநடப்பு செய்து மற்றொரு மதுக்கூடத்திற்கு சென்று கால்ஸ்பர்கை அடைந்தோம். இந்த மதுக்கூடங்களில் உள்ள இன்னொரு விசேஷம் பன்றிக்கறி. எனக்கு நினைவிருக்கிறது, நான் சின்ன வயதிலிருந்தபோது தமிழக துரித உணவகங்களில் பன்றிக்கறி கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னர் என்ன காரணத்தினாலோ அவை கிடைப்பதில்லை. இப்போது மாட்டுக்கறி கூட பெரும்பாலும் கிடைப்பதில்லை. பெங்களூரில் பன்றி மற்றும் மாட்டிறைச்சியை பாரபட்சமில்லாமல் விற்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம், ஒரேயொரு முறை பெங்களூரு மதுக்கூடங்களுக்கு சென்றுவிட்டு வந்து டாஸ்மாக்குகளுக்குள் நுழைந்தால் உங்களுக்கு வாழ்ந்துகெட்ட வீடு நினைவுக்கு வரும் ! 

பன்றிக்கறி வறுவலுடன் கால்ஸ்பர்கை பருகிய உற்சாகத்தில் வெளியேற முற்பட்டபோது ஒரு குடிமகன் அவருடைய பில்தொகையை குறுகுறுவென உற்றுப்பார்த்துவிட்டு பணியாளர் தன்னை ஏமாற்ற முயல்வதாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். மாநிலம் மாறலாம், மொழி மாறலாம், மதுபானங்களும் மாறலாம். ஆனால் மக்கள் மாறுவதில்லை ! 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment