14 February 2026

வீனஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வீனஸ். பா.கண்மணி எழுதியிருக்கும் சிறிய நாவல்.

எழுத்தாளர் பெயரை முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். புதிய புத்தகம். இதுவரை புத்தகம் குறித்து பெரிய அறிமுகங்கள் வெளிவரவில்லை. இருப்பினும் முதல் பார்வையிலேயே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது வீனஸ். இதுகுறித்து சிந்திக்கும்போது ஒரு எழுத்தாளனாக புத்தகத்தின் தலைப்பு, அட்டைப்படம், பின்னட்டை வாசகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறேன்.

வீனஸ் மீது நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

இந்த வருடம் முதல் நாவலாக பீச் வாசித்தேன். இரண்டாவதாக வாசித்திருக்கும் வீனஸ் கிட்டத்த்தட்ட பீச் நாவலின் பெண் வெர்ஷன் என்று சொல்லலாம்.

ரஞ்சனி பெங்களூரில் ஒரு அழகு நிலையம் (அதனுடன் ஜிம் மற்றும் ஸ்பா) வைத்திருக்கிறார். அதையும் அதைச் சார்ந்திருக்கிற சிலரைப் பற்றியும் excerptதான் இந்த நாவல். ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆறு சிறுகதைகள் என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் பெண்களைப் பற்றியது. ஆண்களுக்கு முப்பத்தி மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.

இந்நாவலின் பெரிய ஆச்சர்யம், பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் சொற்கள். நவீன கதைக்களம். பியூட்டி பார்லர், ஜிம், ஸ்பா - இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நிறைய அழகான தமிழ்ச் சொற்களோடு நாவல் எழுதியிருக்கிறார் கண்மணி. தரிப்பிடம், செல்வழி, துவாலை, நகப்பூச்சு, வைப்பறை, வட்டணை, வெளுப்பான், குளிரூட்டி, பசுந்தேநீர், புளகம் இப்படி ஏராளமான சொற்கள். ஒரு கட்டத்தில் இது மொழிபெயர்ப்பு நாவலாக இருக்குமோ என்று சந்தேகமே வந்துவிட்டது. அதே சமயம், தேவைப்படும் இடங்களில் ஆங்கில, வடமொழி சொற்களையும் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்.

வர்ணனைகள் எல்லாம் அப்படியே காட்சியாகக் கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறார் எழுத்தாளர். Absolute pleasure of text ! மொஹிதோ பற்றிய வர்ணனை ஒன்று - மேஜையில் தூளாக்கப்பட்ட புதினாவோடு மொஹீடோ கிளாஸ், மழைக்காடாக வந்து அமர்ந்தது. வெள்ளை ரம் கலந்த சோடாவுக்குள்ளே நீள் சுருளாக நறுக்கப்பட்ட எலுமிச்சங்காய் அனகொண்டாவாக அமிழ்ந்திருந்தது. மேலே ஐஸ் கட்டிப்பாறைகள். அதனுச்சியில் முளைத்து நின்ற புதினாக் கொத்தின் மரம். இதனைக் கூட்டியவன் சிறந்த கலைஞன்தான் என எண்ணிக்கொண்டாள். எடுத்து அருந்திட மனம் திறந்துக்கொண்டது.

அவ்வப்போது எராடிகாவின் வாசனை வருகின்றன. அவை வெறும் வாசனைதான் என்றாலும் அவற்றை ஒரு பெண் எழுதியிருக்கிறார் என்பதால் கூடுதல் கவனம் ஏற்படுகிறது.

ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவின் தாயார் ஜோதிடரிடம், "சாமி, இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் வேற'யாரால பண்ண முடியும்" என்று சிலாகிப்பார். அந்த மாதிரி பெண்களைப் பற்றிய சில விஷயங்களைப் பெண்களால் மட்டுமே எழுத முடியும். உதாரணமாக, நாவலின் ஒரு பகுதி இப்படி போகிறது - ரஞ்சனி மல்லாந்து படுத்து இமைகளின் மேல் கைகளை வைத்துக்கொண்டாள். குளிரூட்டியின் மெல்லொலியும் பச்சிலை வாசமும் ரீங்கரிக்க, துருத்திய முலைக் காம்புகள் குத்திட்டு நின்றன. நிகிக்கு ஒன்றரை வயது வரை இரவில் முலையூட்டுவதை நிறுத்த இயலாததால் வந்த வினை. பேடட் கச்சை அணியாவிடில் மானம் போகும்.

இன்னொரு இடத்தில் சந்தியா என்கிற பணக்கார பெண்மணி. வயது நாற்பத்தைந்து இருக்கலாம், எனினும் இளமை குன்றாதபடி தன்னை கவனித்துக்கொள்பவள். அவள் காரில் போகிறாள். வண்டி சிக்னலில் நிற்கிறது. அப்போது - உள்ளுணர்வு உந்த பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். ஸ்டியரிங்கில் தலை  சாய்த்திருந்த இளைஞன், சந்தியாவையே பார்த்துக்கொண்டிருந்தான். மீசையில்லாத முகத்தில் விரிந்த புன்னகை சந்தியாவையும் தொற்றிக்கொண்டது. துணிச்சல் பெற்ற அவன், ஆள்காட்டி விரலைக் கண்ணின் கீழும், நடுவிரலை மேலுமாக வைத்து மீன் வடிவில் கோடிழுத்துக் காண்பித்தான். அவனுக்குத் தன் மகனின் வயதிருக்கலாம். இதனை எதிர்கொள்ளும் விதத்தை சந்தியா தீர்மானிப்பதற்குள் ஓட்டுநர் வந்தமர, சந்தியா வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். நரம்புகளுக்குள் புளகம் ஓடி விளையாடியது.

அடிக்கோடிடத் தகுந்த ஏராளமான ஒன்லைனர்ஸ் நாவல் முழுக்க விரவிக் கிடக்கின்றன - 

கண்ணியமானவர்களோடு லட்சுமி தங்க மாட்டாள்.

இலையுதிர் காலத்திற்காக எந்த மரமும் வசந்தப் பூக்களை ஒளிப்பதில்லை.

Being a lone wolf is better than being a sheep in a herd.

பசித்த புலிக்குத்தான் வேட்டையில் வேகமிருக்கும். உள்ளே எரியும் நெருப்பானது அணைந்துவிட்டால் சாம்பல்தான் மிஞ்சும்.

பீச் நாவலில், சில விஷயங்களை தமிழில் சொல்லும்போது கொச்சையாகவும் அதே விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்லும்போது அது அந்த உணர்ச்சியை மட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்பட்டிருக்கும். இதிலும் அதே போல ஒரு விஷயம் வருகிறது. நீல் என்கிற நபர் மாடலிங் துறையில் இருக்கும் காதலி நிஷாவுடன் உரையாடுகிறார் - உனக்கு அவுத்துப் போட்டுட்டு ஆடணும். உதடு வரை வந்ததை ஆங்கிலத்தில் நீர்க்கச் செய்த நீல், "You like to exhibit yourself. Is that all ?"

இந்த மாதிரி இன்னும் பல பகுதிகளை இந்நாவலில் இருந்து குறிப்பிட்டு எழுத முடியும். நாவலை படிக்க இருப்பவர்களுக்கான நேரடி அனுபவத்தை கெடுக்காமல் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். சாலார்ஜங்க் மியூசியத்தில் பல அற்புதமான ஆளுயரப் பளிங்குச் சிலைகள் உண்டு. அவற்றில் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பது - இத்தாலிய Veiled Rebecca பெண் சிலையே. மறைக்கப்பட்ட பொருளுக்கு எப்போதுமே ஈர்ப்பதிகம்.

128 பக்கங்கள்
180 ரூபாய்
எதிர் வெளியீடு

என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்

Post Comment

15 January 2026

பீச்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பீச். புத்தாண்டில் வாசித்த முதல் நாவல். ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியது. தலைப்பையும் அட்டைப்படத்தையும் பார்த்ததும் வேறெந்த யோசனையுமின்றி தீர்மானித்து வாங்கிய நாவல்.
நான்கு இளைஞர்கள். இரண்டு ஆண்கள். இரண்டு பெண்கள். ஒருவன் மட்டும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறான். மற்ற மூவரும் ஊடகத்தில். நால்வரும் ஒரே வீட்டில் குடியிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு சிறுபகுதிதான் பீச் !


நேரம் கிடைக்கும்போதெல்லாம் அரை மணிநேரம் என அமர்ந்து, ஆறு சிட்டிங்கில் (சுமார் மூன்று மணிநேரம்) படித்து முடித்துவிட்டேன். சிக்கலில்லாத எளிமையான எழுத்து.

நிறைய இடங்களில் ரசித்துப் படித்தேன். அதே சமயம், நாவல் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் இல்லை. அதற்குக் காரணம், நான் இந்த நாவலின் வெளியீட்டு விழாவிற்கு சென்றதுதான். விழாவில் பேசியவர்கள் பாயாசத்தில் உள்ள முந்திரியை மட்டும் பொறுக்கித் தருவது போல இந்நாவலில் உள்ள நுண்ணுணர்வுகளை தொகுத்து தங்கள் பேச்சில் பட்டியலிட்டுவிட்டார்கள். அது மட்டுமில்லாமல் சில யூடியூப் சேனல்களில் சினிமாக்களில் வரும் குறியீட்டுக் காட்சிகளை டீகோட் செய்து விளக்குவார்கள் இல்லையா. அதுபோல ஏற்கனவே நிறைய விஷயங்களை விளக்கிவிட்டார்கள்.

அதையும் தாண்டி நான் ரசித்த சில விஷயங்களை, எனக்கு தனிப்பட்ட முறையில் கனெக்ட் ஆன சிலவற்றை பகிர்கிறேன். என் பங்குக்கு கொஞ்சம் முந்திரி :)

// இருவரும் தமிழர்கள்தான். ஆனால் அங்கு ஆங்கிலம் ஒரு மூன்றாவது நபரைப் போலப் பயன்பட்டது. எந்த உணர்ச்சியையும் அது சுமந்துகொள்வதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் நின்றபடி சொல்வதற்கு வேற்றுமொழிதான் சிறந்தது //

இதை பணிச்சூழலில் உணரவும் முயலவும் செய்திருக்கிறேன். ஆங்கிலத்தில் பேசும்போது அங்கே இயல்பாகவே ஒரு ஆதிக்கம் கிடைத்துவிடுகிறது. தமிழில் பேசும்போது நம்மை ஏய்க்க முயல்பவர்களால் ஆங்கிலத்தில் பேசும்போது அது எளிதில் முடியவில்லை. இதற்குக் காரணம் நம்மவர்களின் சிந்தனை மொழி ஆங்கிலமில்லை என்பதுதான். ஆங்கிலத்தில் சட்டென கோபமாகப் பேச முடிவதில்லை. கூடுதலாகத் தமிழில் சொல்லும்போது நாராசமாக ஒலிக்கக்கூடிய சில விஷயங்களை ஆங்கிலத்தில் நாசூக்காகக் கடத்த முடிகிறது.

கதையில் வரும் ரோஹிணிக்கு ஒரு எண்ணம். அவள் நள்ளிரவு தூக்கத்திலிருந்து விழிக்கும்போதெல்லாம் அது முழுமையான நேரமாகவே இருக்கிறது. அதாவது 3:30, 4:00 இப்படி. 3:35, 4:10 இப்படி இல்லாமல். நீங்களும் இதுபோல உணர்ந்திருக்கிறீர்களா?

// தூக்கமின்மை எப்போதும், நாம் காயம் பட்ட பழைய நினைவுகளையே கிளர்த்துகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கையில் அவமானப்பட்டது முதல் சென்ற வாரம் எதற்காவது அதிருப்தியடைந்தது வரை கொண்டு வந்து வெளியில் கொட்டுகிறது //

இதைக் கடக்காதவர் யாரும் இருக்க முடியாது.

// நீங்க மட்டும்தான் பொண்ணுங்கள்ல டீ கேக்குறது. மீதி எல்லாரும் காஃபிதான் //

ஒரு பெண் கதைமாந்தரைப் பார்த்து சொல்லப்படுகிற வசனம் இது. யோசித்துப்பார்த்தால் பெண்களில் பெரும்பான்மை காபி பிரியர்களாகவே இருக்கிறார்கள். உடனே எனக்கெல்லாம் டீதான் பிடிக்கும் என்று முண்டியடித்துக் கொண்டு வரக்கூடாது. ஃபேஸ்புக்கில் புழங்கும் பெண்கள் விதிவிலக்குகள்.

மேனேஜர்களை பற்றி சில நுட்பமான விஷயங்கள் இந்நாவலில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் வியக்க வைத்த இரண்டு -

// சில தொழில்நுட்பத் தகவல்களைக் கூட, அதன் அறிமுகத்தை மட்டும் வைத்துக்கொண்டு - அதுவும் செந்தில் சொல்லித்தருவதுதான் - அந்த விவகாரம் தமக்கு முழுக்கவும் தெரியும் என்பதைப் போல அந்தச் சூழலைத் தனது கட்டுக்குள் கொண்டு வரும் அவரது ஆளுமைத்திறனைக் காண செந்திலுக்கு வியப்பாக இருக்கும். எல்லாத் தொழில்நுட்ப விவகாரங்களிலும் தலைமையில் இருப்பவர் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு நுட்பமான விஷயத்தின் முனையை மட்டும் பற்றிக்கொண்டு முழு விவரத்தையும் கிரகித்து அதை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லும் திறன் இருக்க வேண்டும். //

இதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர் கூட அவருக்குத் தெரியாத இன்னொரு தொழில்நுட்பத்தைப் பற்றி பேசும்போது அடக்கி வாசிக்கிறார் அல்லது அவருக்குத் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் உயர் பதவியில் இருக்கும் அ-தொழில்நுட்ப ஆட்களுக்கு தெரியாது என்பதே தெரியாது. மேலோட்டமாக ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டு அதுகுறித்து நிபுணர்கள் போல பேசுவது மேனேஜர்களுக்கே உரித்தான ஒரு ஸ்கில்செட்.

// திவாரிக்கே அலைபேசியில் அழைத்தான். அவன் ஒருமுறை கூட அதைத் தொந்தரவாக எடுத்துக்கொண்டதில்லை. கேட்கும் விஷயங்களுக்கு ஃபோனிலேயே பதில் சொன்னான். ஸ்மோக்கிங் ஷெல்டரில் இருந்து பேசுபவன் போன்ற அதே நிதானம். அலைபேசியில் அவரது குரலை வைத்து, அவர் எங்கேயிருக்கிறார், என்ன மனநிலையில் இருக்கிறார், யாருடன் இருக்கிறார் என்பதையெல்லாம் அனுமானிக்கவே முடியாது. மேலாண்மை என்பதும் மேலாளர் என்பதும் இத்தனை நுட்பமான குணாதிசயங்களை உள்ளடக்கியது //

உள்ளே எத்தனை பிரஷர் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடந்துகொள்வது மேலாளர்களுக்கு அவசியமான பண்பு. மேலே இருந்து எப்படிப்பட்ட வசைகள் வந்தாலும் கீழே அதனை அப்படியே கடத்தாமல், அதே சமயம் சமநிலை தவறாமல் காத்துக்கொள்பவன் நல்ல மேனேஜர்.

இதுபோல நாவல் முழுக்க இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கின்றன. இந்நாவலின் தொனி விநாயக முருகனுக்கும் அராத்துவுக்கும் இடைப்பட்ட ஒரு தொனி.

ஆனால் அராத்துவின் எழுத்தில் எப்போதும் ஒரு அலட்சியம் இருக்கும். நான் எழுதுவதுதான் எழுத்து. படித்தால் படி, இல்லையென்றால் ஓடு என்கிற தொனி. பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல் போகிறபோக்கில் எதையாவது எழுதிவிடுவார். அதை ஒப்புக்கொள்ளாத வாசகர்களுக்கு நுட்பங்களைப் புரிந்துகொள்ளும் திறனில்லை என்று அவராகவே தீர்ப்பு எழுதிவிடுவார். கார்லிடம் அது இல்லை. வாசகர்களை மனதில் வைத்து பொறுப்போடு எழுதியிருக்கிறார்.

280 பக்கங்கள்
399 ரூபாய்
எதிர் வெளியீடு

என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்

Post Comment