30 September 2013

பிரபா ஒயின்ஷாப் – 30092013


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒயின்ஷாப் திறக்கப்படுகிறது. இனி வாராவாரம் திறக்கப்படும் என்று நம்புவோமாக !

555 பார்த்தேன். படம் வெளிவந்த சமயத்தில் சொல்லி வைத்தாற்போல பல வலைப்பதிவர்கள் உண்மையில் அப்படி ஒரு காதலி இருந்தாரா ? இருந்தார் என்றால் ஏன் அந்த உண்மை நாயகனிடம் இருந்து மறைக்கப்படுகிறது ? என்பதை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்று எழுதி முடித்திருந்தார்கள். அதுவே படத்தின் மீது ஒரு ஆர்வ குறுகுறுப்பை ஏற்படுத்திவிட்டது. விக்கிபீடியாவை நாடி கதையின் ‘ப்ளாட்’ என்னவென்று தெரிந்திருக்கலாம் எனினும் நான் எழுத்து வடிவமாக தெரிந்துக்கொள்ள விரும்பாமல் காத்திருந்து பார்த்துவிட்டேன். உண்மையாகவே வித்தியாசமான படம். க்ளைமாக்ஸில் வழக்கமான தமிழ் சினிமா போல வரும் பாழடைந்த குடோன் சண்டைக்காட்சியை மட்டும் வேறு மாதிரி செய்திருக்கலாம். கதையை ஏதேனும் உலக சினிமாவிலிருந்து உருவியிருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. பரத் கதைக்கு தேவையே இல்லையென்றாலும் சும்மாக்காட்டி பழநி படிக்கட்டு வளர்த்து காட்டியிருக்கிறார். ஹீரோயின் மிர்த்திகா செதுக்கி வைத்தாற்போல முக அமைப்பு. பிஹைண்ட்வுட்ஸில் பேட்டி பார்த்தேன். கேரள பிறப்பு. ஆனால், சிக்கலில்லாமல் தமிழ் பேசுகிறார். என்ன, சில சமயங்களில் உயர்திணை / அஃறினை குழப்பம் செய்கிறார். 

49O என்பது அரசாங்கத்திற்கும், அனைத்து வேட்பாளர்களுக்கும் காட்டுகிற நடுவிரல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். திருவாளர். ஞாநி போன்றவர்கள் அதனை அப்படித்தான் முன்னிறுத்தினார்கள். ஆனால் அது அப்படியில்லை என்று சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது தேர்தல் கமிஷன். வாக்குச்சீட்டு முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட சின்னத்தின் மீது முத்திரை இருப்பின் அது செல்லாத வாக்கு என்று கணக்கில் கொள்ளப்படும். 49Oவும் செல்லாத வாக்கைப் போலவே கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிகிறது. அதாவது ஒரு தொகுதியில் எல்லா வேட்பாளர்களை விடவும் 49O வாக்குகள் அதிகமிருந்தாலும் கூட எஞ்சியிருக்கும் வாக்குகளில் அதிகம் பெற்றவர் வென்றவராக அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது. எனவே இது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, புரட்சியின் ஆரம்பம் என்றெல்லாம் புளங்காகிதம் அடையத்தேவையில்லை. வேண்டுமென்றால் மாற்றத்தின் ஒரு சிறிய தொடக்கமாக கருதி அதே சிறிய அளவில் அகமகிழ்ந்து கொள்ளலாம்.

தி.பி நான் எனக்காக செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. குறைந்துவிட்டது என்ற வருத்தத்தை விட முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதே ஆறுதலாக இருக்கிறது. அரிதாக எனக்காக கிடைக்கும் நேரத்தை செயலூக்கம் உடையதாக பயன்படுத்த முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன். அதன் ஒரு பகுதியாக என்னுடைய பையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரண்டு பக்கங்கள் புரட்டுவேன். இப்போது பையிலிருப்பது எப்போதோ கிழக்கு பதிப்பக தள்ளுபடியில் வாங்கிய ராயர் காப்பி கிளப். இணையத்தில் தமிழ் அடியெடுத்து வைத்த புதிதில் யாஹூ குரூப்ஸ் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் ராயர் காப்பி கிளப் என்னும் குழுவில் இரா.முருகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. படிக்கும்போது இதனை பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வாசித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மனம் யோசிக்கிறது. கூடவே நான் என்னுடைய கன்னி கணினியை எப்படியெல்லாம் வீணடித்திருக்கிறேன் என்கிற நினைப்பு தோன்றி கவலையூட்டுகிறது.

2005ம் ஆண்டு எங்கள் வீட்டில் கணினி வாங்கினோம். அப்போது இணைய வசதி கொடுக்கவில்லை. மொத்தமே 40GB கொள்ளளவு தான் ! அதிலும் முழுக்க கேம்ஸ் நிறைந்து கிடக்கும். நாளொன்றில் இருபத்தி இரண்டு மணிநேரம் கேம் விளையாடுவதற்கு செலவிடுவேன். அப்புறம் சில வருடங்களுக்குப் பின் இணைய வசதி கொடுக்கப்பட்டது. இந்தமுறை கேம்ஸின் இடத்தை எது நிரப்பியது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அறைக்குள் யாரேனும் நுழைந்தால் கணினித்திரை உடனடியாக தெரியாதபடி திருப்பி வைத்திருப்பேன். நாளொரு மேனி ! பொழுதொரு வண்ணம் !! புகைப்படங்கள், காணொளிகள், PDF வடிவில் கதை புத்தகங்கள் என்று ஒரு கலெக்ஷனே வைத்திருந்தேன். வைத்திருக்கிறேன். 2009க்கு பின்னர் தான் வலைப்பூ ஆரம்பித்து, பதிவுலக அறிமுகம் எல்லாம். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் இன்னுமொரு இரண்டு வருடங்களுக்கு முன்பாவது நமது இணையச்சேவையை தொடங்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சத்யம் திரையரங்கில் படம் போடுவதற்கு முன்பு காட்டிய விளம்பரங்களினால் தோன்றிய எண்ணங்கள். சென்னையை பொறுத்தவரையில் சத்யம் தான் சிறந்த திரையரங்கம். ஆனால் டிக்கெட் விலையை பொறுத்தவரையில் பெரும்பாலும் அரசு நிர்ணயித்த தொகையையே வாங்குகிறார்கள். சில புறநகர் திரையரங்குகளில் மட்டும் மாஸ் ஹீரோக்கள் படங்கள் வெளிவரும்போது அதிக விலைக்கு டிக்கெட் விற்று போங்காட்டம் ஆடுகிறார்கள். எனவே திரையரங்கை பொறுத்தவரையில் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சத்யம் திரையரங்கில் படம் பார்ப்பவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்ல. ஆனால் அங்கே காட்டப்படும் விளம்பரங்களை பார்க்கும்போது ஏதோ தமிழகத்தில் பாலும் தேனும் ஓடிக்கொண்டிருப்பது போலவும், நாமெல்லாம் நிறைய பணத்தை கையில் வைத்துக்கொண்டு அதை வைத்து என்ன செய்வதென்று திண்டாடுவது போலவும் இருக்கிறது. தங்கமுங்கறான், வைரமுங்கறான் அய்யா அதுகூட பரவாயில்லை மருத்துவமனைக்கெல்லாம் விளம்பரம் வருகிறது. எப்படி மருத்துவமனை விளம்பரம் பார்த்து ஈர்க்கப்பட்டுவிட்டால் உடனடியாக ஒரு மாரடைப்பை வரவழைத்துக்கொண்டு அங்கே போய் சேர்ந்து விடுவார்களோ என்னவோ ? மேற்படி விளம்பரங்களை பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் புரிகின்றன. ஒன்று, பணம் படைத்தவர்கள் அதனை தங்கம் வாங்கியும், அபார்ட்மெண்ட் வாங்கியும் முதலீடு செய்கிறார்கள். இரண்டு, பணம் அதிகம் சேர்ந்துவிட்டாலே நோய்களும் வந்து சேர்ந்துக்கொள்கின்றன.

இமான் இசை, ஷ்ரேயா கோஷல் குரல், பிந்து மாதவி கண்கள் மூன்றும் ஒன்றுகூடி அடிவயிற்றில் ஒரு பந்தினை உருட்டுகிறது !

பாடலை கேட்டுக்கொண்டே பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன :-
1. ஷ்ரேயா கோஷல் நன்றாக தமிழ் உச்சரிக்க பழகிக்கொண்டார்.
2. பிந்து மாதவியை 'சுமார் மூஞ்சி' என்று எழுதிய கைகளை கருக்கிவிட வேண்டும்.

சின்ன வயதில் நஸ்ஸுக்குட்டி !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 September 2013

இதழில் எழுதிய கவிதைகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்த இடுகையை என்னுடைய வரைவிலிருந்து ஒருமுறை படித்துப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பேசாமல் எல்லாக் கோட்டையும் அழித்து விடலாமா என்றுகூட யோசித்தேன். இருப்பினும் எவ்வளவு வேண்டுமானாலும் கழுவி கழுவி ஊத்துங்க என்று புத்தக ஆசிரியரே முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் பிரசுரிக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் சில பதிவர்களின் படைப்புகள் புத்தகங்களாக வெளிவந்தபோது அது எனக்கு மிகவும் வியப்பை தருவதாக அமைந்திருந்தது. கொஞ்சம் பொறாமையையும். எப்படியாவது ஒரு புத்தகம் எழுதிவிட வேண்டும் என்பதை என்னுடைய வாழ்நாள் லட்சிய பட்டியலில் சேர்த்திருந்தேன். நாளடைவில் சில உண்மைகள் புரிய ஆரம்பித்தன. பதினைந்தாயிரம் பணம் இருந்தால் யார் வேண்டுமானால் புத்தகம் வெளியிடலாம் என்று தெரிந்துக்கொண்டேன். கிழக்கு பதிப்பக ஃபார்மேட்டில் கொஞ்சம் தரமான தாளில் அச்சிடுவதென்றால் இருபத்தைந்தாயிரம். அவ்வளவுதான் வாழ்க்கை !

அப்படியொரு புத்தகம் இதழில் எழுதிய கவிதைகள் (!!!) என்கிற பெயரோடு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. நல்ல நகைச்சுவை புத்தகம். அணிந்துரையில் இருந்தே நகைச்சுவை துவங்கிவிடுகிறது. சரக்கடிக்க சிறிதளவு சைட் டிஷ் இல்லாதபோழ்து பயன்படுத்தி கொள்ளக்கூடிய பயனுள்ள புத்தகம். நிற்க. மொக்கை விஷயங்களை வைத்து புத்தகம் எழுதுவது, அதனை சொந்தக்காசில் வெளியிடுவது, வெளியீட்டு விழாவிற்கு ‘வைரமுத்து’ ஜிப்பா அணிந்து வருவது, புத்தகக்காட்சியில் போவோர் வருவோரையெல்லாம் கைபிடித்து இழுத்து புத்தகம் வாங்கச்சொல்லி மிரட்டுவது, ஏதோ நண்பர் என்ற முறையில் ஆட்டோகிராப் வாங்கினால் அதற்காக வருடக்கணக்கில் ஃபீல் பண்ணுவது, புத்தகத்திலிருந்து ஒவ்வொரு வரியாக எடுத்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் விடுவது – இவை எல்லாமே அவரவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் ‘செய்வன திருந்தச்செய்’ என்றொரு பொன்மொழி இருக்கிறது. அதாவது ‘நாதாரித்தனம் செஞ்சாலும் நாசூக்கா செய்யணும்’. அந்த மாதிரி என்னளவில் தோன்றிய சில விஷயங்களை அடுத்த சில பத்திகளில் பார்க்கலாம்.

சொந்தக்காசில் புத்தகம் வெளியிடுவது என்று முடிவாகிவிட்டது. அதை ஏன் அற்ப தொகைக்கு பாடாவதி தாளில் அச்சிட வேண்டும்...? இதில் பேரம் வேறு பேசி அச்சீட்டாளருக்கு ஏன் நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும்...? ஒரு இருபத்தைந்தோ முப்பதோ செலவிட்டு, நல்ல தாளில், கலர் படங்களுடன் வெளியிட்டு தொலைக்கலாம...?

சங்கவி தன்னுடைய புத்தகத்திற்கு “இதழில் எழுதிய கவிதைகள்” என்று மட்டும் தலைப்பிடாமல் இருந்திருந்தால் நிறைய கலாய்ப்புகளை தவிர்த்திருக்கலாம். சுருங்கச் சொல்வதென்றால் கவிதைகள் என்ற சொல்லையே தவிர்த்திருக்க வேண்டும். புத்தக தலைப்பிற்கு என்னுடைய பரிந்துரை: முத்தம் செய்...!

விசைப்பலகையில் எண்டர் பட்டன் மட்டும் இல்லையென்றால் இது கவிதை புத்தகம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. உள்ளேயிருக்கும் சில வரிகளை படித்தால் அரசியல் தலைவர்களின் அறிக்கைகளை போல சப்பென்று இருக்கிறது.

சில உதாரணங்கள் :-

- என்னோடு இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள். இப்போது இல்லத்தரசியாக இருக்கிறாள்.
- என்னவள் அழகு என்று சொல்லிட முடியாது. இல்லை என்று மறுக்கவும் முடியாது.
- உன்னைப் பார்க்க, பேச, கொஞ்ச, சண்டை போட சத்தியமாய் ஆசை இல்லை.

பதின்ம வயதில் காதலிப்பவர்கள் ஏதாவது நான்கைந்து வார்த்தைகளை சேர்த்துப்போட்டு ஃபிகர் மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்வார்கள். சங்கவியின் சில கவிதைகளில் வரிகளில் அப்படியொரு தொனி தெரிகிறது. குறிப்பாக ஃபேஸ்புக்கில் ஏதோவொரு சுமார் மூஞ்சி / ஃபேக் ஐடி ஃபிகரை உஷார் செய்யும் நோக்கில் எழுதியது போலவே தோன்றுகிறது. கூடவே சில சம்பவங்களையும் அவதானிக்க முடிகிறது.

சில அவதானிப்புகள் (கவனிக்க: இவை வெறும் கற்பனையே !) :-

- தொலைந்து போ என்று சொல்லிவிட்டாய். எனது மொத்த உலகமும் நீ தான் என்று உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (சாட்டில் சு.மூ ‘கெட் லாஸ்ட்’ என்று சொன்னபோது எழுதியது).
- முத்தம் கேட்டேன். நீ மின்னஞ்சலில் அனுப்பினாய். வெட்கத்தில் வேலை செய்ய மறுக்கிறது என் மெயில் ஐடி. (ஃபேக் ஐடியிடம் முத்தம் கேட்டு, அது மெயிலில் ஸ்மைலி அனுப்பி சமாளித்த போது).
- “சரி” என ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லடி. செய்கூலி சேதாரமில்லாமல் உன்னை அற்புதமான அணியாக்குகிறேன். நான் அணிந்துக் கொள்ள. (ஃபேக் ஐடி ஃபிகரு ஓகே சொல்லாமல் சதாய்க்கும் போது எழுதியது).
- கோவைப்பழ இதழில் இடைப்பட்ட ஈரமாய் இருக்க ஆசை. உன் இதழ்சுளை கண்டநாள் முதல். (சு.மூ.வை நேரில் கண்டபிறகு போட்ட ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ். இதைப் போட்டுவிட்டு சு.மூவின் உள்டப்பிக்கு போய் உன்னைப்பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்).

கவிதை எழுதும்போது வார்த்தைகளை கூடுமானவரை குறைக்க வேண்டும் என்று சொல்வார்கள். சங்கவி அப்படியொரு குறைந்தபட்ச முயற்சி கூட எடுக்காமல் ஏனோ தானோ என்று எழுதியிருப்பதாக தோன்றுகிறது. ஒரு வாசகனான நான் படிக்கும்போதே சில மாற்றங்கள் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றுகிறது.

சில மாற்றங்கள் (சிகப்பில் நான் எழுதியது) :-

- உன்னுடன் விளையாடும்போது மட்டும் வேண்டுமென்றே தோற்றுப் போகிறேன். நீ வேண்டும் என்பதற்காக...!

உன்னிடம் மட்டும்
வேண்டுமென்றே தோற்கிறேன்...
நீ வேண்டுமென்றே...!

- கத்தியின்றி ரத்தமின்றி சத்தமில்லா யுத்தமொன்று நடக்குது...! தோல்வியே இல்லாத போர்...!!

கத்தியின்றி 
ரத்தமின்றி
சத்தமின்றி
யுத்தம் – உன் முத்தம்...!

- முத்தமிழில் கை தேர்ந்தவள் என்றிருந்தேன். உன் முத்தத்திற்கு பின்தான் தெரிந்தது. நீ முத்தத்தமிழும் அறிந்தவள் என்று...!

முத்தமிழ் அறிந்தவள் நீ ! 
உன் முத்தத்தமிழ் அறிந்தவன் நான் !!

- மழை பெய்து ஓயலாம்... ஆனால், உனக்கான என் முத்த மழை ஓயாத அலை...

மழையில் முத்தமிடத் துவங்கினோம்... 
சிறிது நேரத்தில் ஓய்ந்துவிட்டது !
மழை மட்டும் !

மொத்த புத்தகத்திலும் ஒரேயொரு கவிதை மட்டும்தான் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருப்பதாக தோன்றியது. அந்த ஒரு உருப்படி :-

உன்னை  
மகிழ்ச்சியாக வைத்திருக்க
வாழ்வில்
பாதி தொலைத்த
பைத்தியக்காரன் நான்...!
பிறகுதான் தெரியும்
என்னை
சந்தோஷமாக வைத்திருக்க
நீ
பைத்தியக்காரியானாய் என்று...!!

இதைக்கூட இன்னும் கொஞ்சம் மடக்கி எழுதியிருக்கலாம். இது தவிர்த்து ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், சுமாரான பேப்பர் குவாலிட்டி, சம்பந்தமில்லா புகைப்பட தேர்வுகள். சிலவற்றிற்கு சங்கவி காரணமில்லை என்றாலும் கூட ஒரு மேற்பார்வையாவது பார்த்து சரி செய்திருக்கலாம்.

இனியாவது புத்தகம் வெளியிடும் பதிவர்கள் கொஞ்சம் அர்ப்பணிப்போடு செயல்படுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதழில் எழுதிய கவிதைகள்
சங்கவி
அகவொளி பதிப்பகம்
விலை ரூ.70

ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 September 2013

அங்கவை சங்கவை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

2007க்கு முன்பு “அங்கவை சங்கவை” பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. எதிர்மறை விளம்பரம் கொடுத்தேனும் அங்கவை சங்கவையை தமிழர்களுக்கு அடையாளம் காட்டியமைக்காக இயக்குநர் ஷங்கருக்கு ஒரு நன்றி சொல்லிக்கொள்ளலாம். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவேளின் மகள்கள் தான் – அங்கவை & சங்கவை. அவர்களுடைய பெயர் அங்கவை – சங்கவை என்பதற்கு சங்கநூல்களில் ஆதாரம் ஏதுமில்லை. எனினும், பிற்கால வரலாற்று ஆய்வாளர்கள் காரணமாக அங்கவை, சங்கவை என்ற பெயர் நிலைத்துவிட்டது. அங்கவை, சங்கவை இருவரும் அன்பும், அழகும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்றிருந்தனர். அவ்விருவரும் இரட்டையராய்ப் பிறந்தனரோ என்று ஐயுறும்படி அங்க அழகில் ஒற்றுமை உடையவர்களாய் இருந்தனர்.

சித்தரிக்கப்பட்ட படம்
கடையேழு வள்ளல்கள் சீரிஸின் கடந்த பதிவின் இறுதியிலிருந்து சில வரிகள் :- பாரிவேளை சூழ்ச்சியின் மூலம் கொல்ல முடிவெடுத்த மூவேந்தர்கள் ஒரு பெளர்ணமி நாளில் முதிய புலவர்போல வேடம் பூண்டனர். ஆளுக்கோர் யாழினைக் கையிலேந்தி பாரியை அணுகினர். பாரி அவர்களை அன்புடன் வரவேற்று தக்க ஆசனங்களிட்டு அமர்த்தி வழக்கம்போல் நல்லுரை பல புகன்றான். அப்போது மூவேந்தர்கள் சால அன்புடையவர்கள் போல நடித்து பாரியை மிகவும் புகழ்ந்து பாடி, அவன் உயிரையே தமக்குப் பரிசிலாகத் தரவேண்டினார்கள். அதனைக் கேட்ட பாரி உள்ளங்கொள்ளா மகிழ்ச்சிகொண்டு அவர்கள் வயமாகி மரணம் எய்தினான். சிலர் மேற்கூறிய வரிகளில் மூவேந்தர்கள் வேடமணிந்து சென்றது வரைக்கும் தான் உண்மை என்றும் அவர்கள் பாரியின் உயிரை பரிசிலாக கேட்காமல் அவன் அசந்த சமயத்தில் கூர்வாளை அவன்மீது பாய்ச்சினார்கள் என்றும் கூறுகின்றனர். எப்படியோ மூவேந்தர்களின் வஞ்சத்திற்கு பாரி பலியாகிவிட்டான். பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் தவித்தது.

தங்களுடைய தந்தையின் மரணத்தில் அங்கவையும் சங்கவையும் வேதனையால் துடித்தனர். அவர்களுடன் ஊர்மக்களும் ஒன்றுகூடி ஓலமிட்டனர். செய்தியறிந்து விரைந்து வந்த கபிலர் கதறினார். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ ? தன்னைத் தேற்றிக்கொண்ட கபிலர், பாரிமகளிரை ஆறுதல்படுத்தினர். அத்துடன் நில்லாமல் பருவம் எய்திய அந்நங்கைகளுக்கு மணம் முடித்துவைக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். பறம்புமலையிடம் பிரியா விடைபெற்றுப் புறப்பட்டார் கபிலர் பாரிமகளிருடன். அன்று, பாரி கொலையுண்ட முன்னாள் போலவே நிலவு ஒளி வீசிக்கொண்டிருந்தது. பாரிமகளிருக்கு தந்தையின் நினைவு மேலோங்கியது. அப்போது அவர்கள் பாடிய பாடல் :-

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
(புறம் 112)

விளக்கம்: மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்த அந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்.

பாரிவேள் முல்லைக்கொடிக்கு கொழுக்கொம்பாக தேரை கொடுத்தது போல அவ்விரண்டு பெண்கொடிகளுக்கு கொழுக்கொம்பாக தக்கார் யாரையேனும் கண்டு ஒப்படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தார் கபிலர். தனக்குத் தெரிந்த கோமான்களையெல்லாம் எண்ணிப்பார்த்தார். கண்மணி போன்ற பெண்மணிகளுக்கு ஏற்ற பொன்மனச் செம்மல்களாக இருக்க வேண்டுமே ! அதன்படி அவருக்கு முதலில் நினைவுக்கு வந்தவன் விச்சிமலைக்கு அதிபதியான விச்சிகோன் என்ற சிற்றரசன். கபிலர் பாரிமகளிருடன் அவனிடம் சென்றார். அவனை முறைப்படி வாழ்த்தி, அங்கவை சங்கவையை அறிமுகப்படுத்தி அவர்களை மணந்துகொள்ளுமாறு வேண்டினார். எனினும் மூவேந்தர்கள் பாரி மகளிரை விரும்பிப் போர் செய்ததை அறிந்தவனான விச்சிகோன் அவர்களின் பகைமைக்கு அஞ்சி மறுத்துவிட்டான்.

அடுத்து யாரை நாடுவது ? ஹொய்சள வம்சத்தில் பிறந்தவனும் ‘வேள் எவ்வி’ என்ற வள்ளலின் வழி வந்தவனுமாகிய இருங்கோவேள் என்ற குறுநில மன்னன் இன்னும் மணமாகாதவன் என்று தெரிந்தது. உடனே புறப்பட்டார். இருங்கோவேளின் அரண்மனையை அடைந்த கபிலர் பாரியின் சிறப்பைக்கூறி அவரது மகளிரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அவனோ, “எங்கோ பிறந்த பெண்களை ஒரு தொடர்பும் இல்லாத நீர்தர நான் மணந்து கொள்வதா ?” என்று எடுத்தெறிந்து பேசினான். இருங்கோவேளின் வார்த்தைகள் கபிலருக்கு வலியூட்டியது, அவருக்கு உள்ளம் சலித்துவிட்டது. திருமண பாரத்தை யாரிடமாவது ஒப்புவித்துவிட அவருடைய தன்மான உணர்வு தவித்தது. யாரிடம் விடுவது ?

அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அவர்களை அன்போடு உபசரித்து வந்த அந்தணரான முதியவரிடமே ஒப்படைத்தால் என்ன என்று தோன்றியது. தனக்குள்ள நெடுநாள் விருப்பமாகிய யாத்திரை இருபெண்களால் தடைபடுவதாகவும், எனவே அவர்களை அம்முதியவரிடம் விட்டுச்செல்ல விரும்புவதாகவும் நயம்படக் கூறினார். முதியவர் ஒப்புக்கொண்டார். ஆறுதல் கொண்ட கபிலர் அங்கிருந்து புறப்பட்டு செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற ஈகையிற்சிறந்த சேர மன்னனிடம் பழமரம் நாடும் பறவைபோல் சென்றடைந்தார். சேரமானுடன் சிலகாலம் தங்கியிருந்த கபிலர் அவனைப்போற்றி பத்துப்பாடல்களை பாடினார். பின்பு அங்கிருந்து விடைபெற்றபோது பொன்னும் பொருளும் சில ஊர்களையும் அளித்து வழியனுப்பினான் சேரமன்னன். அவற்றைப் பெற்றுக்கொண்ட கபிலர் பாரிமகளிரிடம் வந்தார். சேரனிடம் பெற்ற அனைத்தையும் அந்தணரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவருக்கு உலகவாழ்க்கை வெறுத்துப் போனதால் விரதமிருந்து உயிர்விட முடிவு செய்தார். உயிர் விடும் முன்பு நண்பர் பாரியை நினைத்து கபிலர் பாடிய கடைசி புறநானூற்றுப் பாடல் :-

இனையை யாதலி னினக்கு மற்றியான்
மேயினே னன்மை யானே யாயினும்
இம்மை போலக் காட்டி யும்மை
இடையில் காட்சி நின்னோடு
உடனுறைவு ஆக்குக வுயர்ந்த பாலே !
(புறம் 236)

விளக்கம்: நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில் நீ நடந்துகொண்டாய். பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும், நீ என்னை வெறுத்தாய் போலும். பெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில், "இங்கே இருந்து வருக" எனக்கூறி என்னைவிட்டுப் பிரிந்து சென்று என்னை வருத்தினாய். ஆகவே, உனக்கு நான் ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும், இப்பிறவிபோல் மறுபிறவிலும் நாம் இடைவிடாமல் சேர்ந்து இருப்பதற்கு வழி செய்யுமாறு உயர்ந்த நல்வினையை வேண்டுகிறேன்.

பாரிவேளைப் பற்றியும் கபிலரைப் பற்றியும் நன்கு அறிந்திருந்த ஒளவைப் பிராட்டியாருக்கு அச்சமயம் பாரிமகளிர் ஒரு அந்தணர் பொறுப்பிலிருப்பது தெரியவந்து அங்கு சென்றார். ஒளவையைக் கண்டதும் அங்கவையும் சங்கவையும் ஆற்றாமையால் அழுது புலம்பினர். தங்களால் கபிலர் பட்ட இன்னல்களையும் தற்போது தாங்கள் அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் இருப்பதையும் கூறித்தேம்பினர். அதைக்கேட்ட ஒளவை “கண்மணிகளே ! கலங்காதீர்கள். எல்லாம் வல்லான் வகுத்தபடிதான் நடைபெறும். கவலைப்பட வேண்டாம். பாரியையும் கபிலரையும் எம்மால் மீண்டும் கொண்டுவர இயலாது. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற உங்களை நான் நல்லறமாம் இல்லறத்தில் நிலை நிறுத்துவேன்” என்று அன்பொழுக ஆறுதல் கூறினார். சில நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்த ஒளவை, அவ்விரு நங்கைகளுக்கும் மணமகன் தேடி வருவதாக புறப்பட்டார்.

அந்நாளில் திருக்கோவலூரைத் தலைநகராய்க் கொண்ட மலாடு என்கிற மலையமான் நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த தெய்வீகன் என்பவன் மணமாகாதவன், நல்ல பண்பாளன் என்றறிந்த ஒளவையார் அங்கு சென்றார். குறுநில மன்னனான அவனை வாழ்த்தி தன் எண்ணத்தைக் கூற அவ்வரசனும் பழுதிலாப்புகழ் பாரியின் இரு பெண்களையும் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டான்.

பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலிருந்தது ஒளவையாருக்கு ! அவரே முன்னின்று சேர, சோழ, பாண்டியர் உட்பட அனைத்து அரசர்களுக்கும் திருமண ஓலை அனுப்பினார். அவர்கள் முன்னிலையில் செல்விகள் அங்கவை சங்கவைக்கும் மலாடு நாட்டரசனான மலையமான் தெய்வீகனுக்கும் சீருற சிறப்புற திருமணம் நடைபெற்றது. பாரியின் பெற்ற கடமை, கபிலரின் நட்புகொண்ட பொறுப்பு இரண்டும் ஒளவையாரால் நிறைவேற்றப்பட்டது.

முந்தய பதிவுகள்:


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment