30 September 2011

முரண் – Strangers on a Train


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இப்படி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை தனிமையில் சந்திக்கிறீர்கள். ஒருவேளை அங்கே நீங்கள் அவரை காரணமே இல்லாமல் கொலை செய்தால் கொலை செய்தது நீங்கள்தான் என்று எப்படி கண்டுபிடிக்க முடியும். மோட்டிவேஷனே இல்லாமல் கொலை செய்தால் நம்மை கண்டுபிடிக்க முடியாது என்ற ஒன்லைனை எப்போதோ ஒரு சிறுகதையில் படித்ததாக ஞாபகம். (அநேகமாக சுஜாதா எழுதியது). கற்றது தமிழ் படத்தில் கூட இப்படியொரு கருத்து சொல்லப்பட்டிருக்கும். அதுதான் இந்தப்படத்தின் உயிர்நாடி.

- Title: Strangers on a Train
- Country: United Kingdom
- Language: English
- Year: 1951
- Genre: Crime, Thriller
- Cast: Farley Granger, Ruth Roman, Robert Walker
- Direction: Alfred Hitchcock
- Cinematography: Robert Burks
- Editing: William H. Zeigler
- Music: Dimitri Tiomkin
- Produced By: Alfred Hitchcock
- Length: 101 Minutes

டென்னிஸ் வீரர் கய். அவருடைய மனைவி ஒரு... எப்படி சொல்வது... கமல்மொழியில் லோலாயி. மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று காதலியை கரம்பிடிக்க நினைக்கிறார் கய். ஆனால் அவரது மனைவி அவருக்கு விவாகரத்து தருவதாக இல்லை. இப்போது அவருக்கு மனைவியை கொல்லனும் போல இருக்கு.

புருனோ ஒரு அதிபுத்திசாலி. ரசனைக்காரன். அதிகம் பேசுவான். அவனுக்கு சின்ன வயதிலிருந்தே அவனது தந்தையை பிடிக்காது. பிடிக்காதென்றால் தந்தையை கொன்றுவிட வேண்டும் என்னுமளவிற்கு ஒரு வெறி.

“முரண்” கொண்ட, முன்பின் அறிமுகமில்லாத இவர்கள் ஒரு ரயில்பயணத்தில் சந்திக்கிறார்கள். (Strangers on a Train). டென்னிஸ் வீரனிடம் ரசிகனாக அறிமுகமாகும் புருனோ, கய்யின் விருப்பம் இல்லாமலே அவனது பர்சனல் விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்கிறான். ஒரு கட்டத்தில் உனக்கு உன் மனைவியும் எனக்கு என் தந்தையும் கொல்லப்பட வேண்டும். நாமிருவர் கொலையை பரிமாறிக்கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பலாம் என்று கய்யிடம் கூறுகிறான். அவன் செவிசாய்ப்பதாக இல்லை.

பிறிதொரு நாளில் கய்யின் மனைவியை பின்தொடர்ந்து செல்லும் புருனோ, ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் வைத்து அவளை கொலையும் செய்கிறான். பதிலுக்கு கய் தனது தந்தையை கொல்ல வேண்டுமென்பது அவன் எதிர்பார்ப்பு. கய் போலீசிடம் செல்ல நினைத்தும் முடியவில்லை, ஏனென்றால் அனைவரின் சந்தேகமும் அவன்மீதுதான். தொடர்ந்து புருனோ தனது தந்தையை கொல்லும்படி தொல்லை கொடுக்க கய் என்ன முடிவெடுத்தான், இறுதியில் யார் சட்டத்தின் பிடியில் சிக்கினார்கள் என்பதே மீதிக்கதை.

70 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் இந்த அளவிற்கு பிரமிக்க வைக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு காட்சியில் டென்னிஸ் போட்டியையும், சிகரெட் லைட்டரையும் வைத்து நம்மை சீட் நுனிக்கு வர வைக்கிறார். அந்தகாலத்துப் படம் என்பதால் செல்போன், டிவி என்று எதையும் படத்தில் காண முடியவில்லை. அதிகபட்ச விஞ்ஞானம் ரயிலும் தரைவழி தொலைபேசியும் தான்.

இவர்தான் படத்தின் ஹீரோயின். நம்மூர் எம்.என்.ராஜம் மாதிரி. இப்போது உயிரோடு இருந்திருந்தால் 89 வயது இருக்கும். 89 வயது கிழவியைப் போய் ஏன் சைட்டடிப்பானேன்.


இதன் இயக்குனர் ஹிட்ச்காக் உலக சினிமாவிற்கு ஒரு உன்னதமானவர். மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ் என்று பெயரெடுத்தவர். தம் சினிமாக்களில் பல வித்தியாசமான ஷாட்டுகளையும் இன்னபிற புதுமைகளையும் புகுத்தியவர். கிட்டத்தட்ட 80 படங்களை இயக்கியிருக்கிறார். 1960ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் உலகப்புகழ் வாய்ந்தது. மேலே பார்க்கும் புகைப்படம் அவரது புதுமையான முயற்சிகளில் ஒன்று.

இதுதான் தமிழில் முரண் என்பது உளவுத்துறை செய்தி. (வில்லன் சேரனா...? பிரசன்னாவா...?). ஆனால் வழக்கம் போல இயக்குனர் இது தழுவல் மட்டுமே, படத்தின் ஒன்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கிறோம் என்று டக்கால்டி விட்டிருக்கிறார். (இந்தப்படத்தை எடுக்க ஆறு மாசமா தூங்கலை. ஏழு மாசமா பல் தேயக்கலைன்னு சொல்லாம இருந்தா சரி). ஹிட்ச்காக்கை போலவே சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருந்தால் இது ஹிட் படம். பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்தில் எழுதியது: வாகை சூட வா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 September 2011

பால்கனி – 29092011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

உதட்டழகி ஏஞ்சலினா ஜோலியின் ஜோடி பிராட் பிட் ஜோலிக்காக லண்டன் சென்றிருக்க, தனியாக இருக்கும் நேரத்தை வீணடிக்க வேண்டாமென்று ஏஞ்சலினா ஜோலி விமானம் ஓட்ட கற்றுக்கொண்டிருக்கிராராம். கூடிய விரைவில் அவர்களின் தத்து குழந்தைகள் பிறந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்திருக்கிறாராம். அந்த வகையில் வியட்னாமுக்கும் செல்வார் என்று தெரிகிறது. (விக்கி மாம்ஸுக்கு ஜாலிதான்).

உக்ரைன் நாட்டில் நடந்த கொழுக்கட்டை தின்னும் போட்டியில் 77 வயது முதியவர் ஒருவர் அரை நிமிடத்தில் பத்து கொழுக்கட்டைகள் தின்று முதல் பரிசை வென்றிருக்கிறார். ஆனால் பரிசைப் பெற்றுக்கொண்ட சில நிமிடங்களில் உடல்நிலை மோசமடைந்து இறந்துவிட்டாராம். (இனிமே நீங்க கொழுக்கட்டை சாப்பிடுவீங்க...?)

வெளிநாட்டு ஜொள்ளு:
படர்ந்திருக்கும் அல்லி... மிங்கா கெல்லி...
ஆஸ்திரியா நாட்டில் ஒருவர் இறந்துபோன தனது 88 வயது ஆண்ட்டியின் சடலத்தை சில மாதங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு புகார் கொடுக்க, இப்போது இவரை கைது செய்திருக்கிறார்கள். விசாரித்தபோது ஆண்ட்டிக்கு மாதாமாதம் கிடைக்கும் பென்ஷன் தொகையை அனுபவிக்கவே இப்படி செய்ததாக கூறியிருக்கிறார். (இறந்துபோன ஆண்ட்டிக்கு காரியம் செய்றதை விட்டுட்டு இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்கான்).

மலைக்க வைத்த புகைப்படம்:
பிரிட்டனில் நடந்த காட்டுவிலங்குகள் பற்றிய புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்ற புகைப்படங்களுள் ஒன்று
எழுத்தாளர்கள் என்றாலே சண்டைபிடித்துக்கொள்வது சகஜம்தான். இப்போது ட்விட்டர் ஊடாக உலகளவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்கள் சல்மான் ருஷ்டியும், தஸ்லிமா நஸ்ரினும் சண்டை போட்டிருப்பதுதான் லேட்டஸ்ட் நியூஸ். இவர்கள் இருவருமே டவுசரை கிழிப்பதில் பெயர்போனவர்கள். மேட்டர் இதுதான், ட்விட்டரில் 72 வயது சல்மான் ருஷ்டிக்கு யாரோ ஒரு இளம்பெண் ரூட்டு விட்டிருக்கிறார். அதைப் பார்த்த தஸ்லிமா அந்தாளுக்கிட்ட ஜாக்கிரதையா இருந்துக்கோம்மா என்ற ரீதியில் அட்வைஸ் செய்ய பிரச்சனை கிளம்பியிருக்கிறது. (#சல்மான் கானுக்கு கூட இப்படிப்பட்ட ரசிகைகள் இருக்கமாட்டார்கள்).

கலாச்சார சுற்றுலா:
இன்றைய ஸ்பெஷல்: சிங்கப்பூர்

பரந்த மனப்பான்மை கொண்ட பமீலா ஆண்டர்சன் சமீபத்தில் ஒரு மாத இதழ் பேட்டியில் “எனக்கு மைக்கேல் ஜாக்சன் மீது ஒரு “இது” இருந்தது” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் மட்டும் ப்ரோபோஸ் செய்திருந்தால் ஓகே சொல்லியிருப்பாராம். பதினைந்து வயதில் ஒரு மகனும், பன்னிரண்டு வயதில் ஒரு மகனும் இருக்கும் பமீலாவுக்கு இந்த பேச்செல்லாம் தேவையா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 September 2011

ஏழாம் அறிவு – இசையா..? இரைச்சலா..?


அன்புள்ள வலைப்பூவிற்கு,

செல்வராகவன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி போலவே மற்றுமொரு பலமான, அதிக எதிர்பார்ப்புகள் கொண்ட கூட்டணி என்று ஏ.ஆர்.முருகதாஸ் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியை சொல்லலாம். பொதுவாக நான் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை அதிகம் விரும்புவதில்லை. இந்தமுறை படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு கொஞ்சம் பாடல்களுக்கும் தொற்றிக்கொண்டதால் கேட்டேன்...

ரிங்கா ரிங்கா...
பதறியடிக்கும் ஒரு குரலுடனும், மிரட்டலான இசையுடனும் ஆரம்பமாகும் பாடல், இருபது நொடிகள் கடந்த பின்னர் அடப்பாவிகளா டாக்சி டாக்சி பாடலை இப்படியா காப்பி அடிப்பீங்கன்னு நினைக்க வைக்கிறது. பாடல்வரிகளும் இது தமிழ் தானா என்று சந்தேகிக்க வைக்கிறது. இது ஹீரோ அறிமுகப்பாடலாக இருக்கும் என்று தெரிகிறது. சென்னையின் முக்கிய இடங்களை காட்டுகிறார்களாம். (அதைத்தான் அயன் படத்துலேயே காட்டியாச்சே...)

முன் அந்திச்சாரல் நீ...
ஹாரிஸ் ஜெயராஜுக்கே உரித்தான அக்மார்க் மெலடிப்பாடல். நா.முத்துக்குமார் வரிகளை கார்த்திக் பாட அநேகமாக இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஃஎப்.எம் ரேடியோக்களிலும், இசையருவி, சன் மியூசிக்கிலும் இதுதான் கொண்டாட்டப் பாடலாக இருக்கும். பாடலை கண்டிப்பாக ஏதாவது பாலைவனத்திலோ, அல்லது வெளிநாட்டு மலைப்பிரதேசத்திலோ தான் படம் பிடித்திருப்பார்கள். மெலடி ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரையில் ஓகே ரகம்.

எல்லே லாமா...
டூயட் பாடல்தான் என்றாலும் பார்ட்டிகளில் ஒலிபரப்பும் தகுதிபெற்ற பாடல். ஸ்ருதி ஹாசன் தனது கட்டைக்குரலில் கலந்துகட்டி அடித்திருக்கிறார். (குரலும் செமகட்டை தான்). நடுவில் ஒரு ஹம்மிங், அடேங்கப்பா செம்மொழி பாடலில் இழுத்ததை விட அதிகமாக இழுத்திருக்கிறார். நடுநடுவே அவசர அவசரமாக வந்து பாடிவிட்டுப் போகும் ஆண்குரலும் வசீகரிக்கிறது. 

யம்மா யம்மா...
இங்கேயும் ஒரு சோகப்பாடல். எஸ்.பி.பி. குரலில் ஒலிப்பது செம கிளாசிக். அதென்ன சோகப்பாடல் என்றாலே கடம் இசையை கசிய விடுகிறார்கள். (அஞ்சலை எபக்ட். மயக்கமென்ன படத்தில் வரும் காதல் என் காதல் பாடலிலும் கூட). பாடல் மனதை ஈர்ப்பது என்னவோ உண்மைதான். ஆனால் சோகப்பாடலை ஆறு நிமிடங்கள் நீட்டியிருக்க வேண்டுமா...? சுருக்கமாக மூன்றரை நிமிடங்களில் முடித்திருந்தால் இன்னும்கூட அதிகம் ரசித்திருக்கலாம்.

இன்னும் என்ன தோழா...
ஈழ மக்களுக்காக அர்பணிக்கப்பட்ட பாடல் என்று சொல்லப்படுகிறது. (புளி வியாபாரம்...?) பா.விஜய் கைவண்ணத்தில் வரிகள் எல்லாம் உணர்ச்சி மயமாக இருக்க, அதற்கு தகுந்தபடி இசையமைக்க தவறியிருக்கிறார் ஹாரிஸ். உணர்ச்சிகரமான பாடலுக்கு இப்படியா மென்மையாக இசையமைப்பது...? பாடல்வரிகள் நிறைய இடங்களில் கருத்தாழமிக்கதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கின்றன. பாடலின் இடையே வரும் ட்ரம்ஸ் இசை ரசிக்க வைக்கிறது.

Rise of Damo
வழக்கமாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் புரியாத வரிகளை அறிமுகப்படுத்துவார். அந்தமாதிரி போல என்று நினைத்தால் பாடலே சீனமொழிப்பாடலாம். வரிகள் புரியாவிடினும் அழகான மெலடி. இது கிறிஸ்தவ ஆலயங்களில் பாடப்படும் துதிப்பாடலின் மெட்டு என்று கேள்விப்பட்டேன். இடையிடையே சிவாஜி கணேசனின் “மனிதன் மாறிவிட்டான்...” பாடலையும், எம்.ஜி.ஆரின் “புதிய வானம்... புதிய பூமி...” பாடலையும் நினைவூட்டுகிறது. பாடல் வரிகளின் தமிழாக்கம் – மதன் கார்க்கி வலைப்பூவில்.

எனக்குப் பிடித்த பாடல்: எல்லே லாமா...

எனக்குப் பிடித்த வரிகள்:
பூ பூத்த சாலை நீ... புலராத காலை நீ...
விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ...

இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா...?
இரவோன்றே போதுமென்று பகலிடம் சொல்வோமா...?

பனிமூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா...?
அந்த பகைமூட்டம் வந்து பனியாமல் எங்கள் இருவிழி உறங்குமா...?

என்னுடைய ரேட்டிங்: 6.5 / 10

ஏற்கனவே, நிறைய பேர் சொன்னது போல ஹாரிஸ் ஜெயராஜின் பழைய பாடல்களை நினைவூட்டுகின்றன பாடல்கள். ஆனால் பொதுவாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


சமீபத்தில் எழுதியது: மயக்கம் என்ன...? - போதும்டா மச்சான்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 September 2011

மயக்கம் என்ன...? – போதும்டா மச்சான்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வளர்ந்துவரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளிவந்துள்ள “மயக்கம் என்ன...?” பாடல்களை முதல்நாளே கேட்டதற்கு முதல் காரணம், இது செல்வராகவன் படம். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு வரும் செல்வராகவனின் படம் என்பதால் படத்தின் மீதும் பாடல்கள் மீதும் எக்கச்சக்கச்சக்க எதிர்பார்ப்பு. பாடல்கள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா...?

நான் சொன்னதும் மழை வந்துச்சா...
மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் கலந்துகட்டி ஒரு காக்டெயிலாக படைத்திருக்கிறார் ஜிவி. நரேஷின் உற்சாகமான குரலுடன் பயணிக்கும் பாடலின் இடையே ஒரே ஒரு வரிக்காக வழி மரிக்கிறது ஒரு பெண்குரல், அந்த இடம் அருமை. பாடியவர் யாரென்று தெரியவில்லை. (சைந்தவி...?) இந்தப்பாடல் படத்தில் இடம்பெறுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் மாலை நேரம் பாடலைப் போல ஆகிவிடக்கூடாது.

பிறை தேடும் இரவிலே...
மென்மையான பியானோ இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல். ஜிவி இசை – சைந்தவி குரல் இரண்டும் கலந்தால் வேறென்ன லவ்ஸ்தான். சைந்தவி குரல் வழக்கத்தை விட இனிமையாக இருக்கிறது. காரணம் ஜிவி பிரகாஷோ...? பாஸ், இப்படியெல்லாம் பாட வைத்தால் அப்புறம் நாங்களும் ஷைந்தவியை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவோம். பாடலின் வரிகள் காதல் கொண்டேன் படத்தின் நெஞ்சோடு கலந்திடு பாடலை அப்படியே நினைவூட்டுகிறது.

இசைக்கு அப்பாற்பட்டு இந்த பாடலை பற்றிய என் கருத்து, இது காதலா...? இல்லை காமமா...? இல்லை இரண்டுக்கும் நடுவிலான உறவா...? இந்த மாதிரி மேட்டரெல்லாம் கேட்டு, பார்த்து போர் அடிச்சிடுச்சு சாமிகளா... தயவு செஞ்சு புதுசா ஏதாவது யோசிங்க.

ஓட ஓட ஓட தூரம் குறையல...
இது ஒரு வசனப்பாடல். அதாங்க, திருடா திருடி படத்தில் உன்னை பார்த்த பிறகுதான்னு ஒரு பாட்டு வருமே... அந்த வகையறா. பாடலை பாடியிருப்பவர்... ச்சே பேசியிருப்பவர்... அப்படியும் சொல்ல முடியாது... சரி குரல் கொடுத்திருப்பவர் தனுஷ்...! வழக்கமான தனுஷ் கேரக்டரில் ஒரு வடை கிடைக்காத வருத்தம் தெரியுமே... அது இந்தப்படத்திலும், இந்தப்பாடலிலும் தொடர்கிறது போல. பாடலின் இறுதியில் வரும் விசில் ரீங்காரம் ரிங்டோனாக ஒரு வலம்வரலாம்.

என்னென்ன செய்தோம் இங்கு...
அட, செல்வராகவன் படத்தில் பக்திப்பாடலா என்று வியக்க வைக்கிறது இந்தப்பாடல். பக்திப்பாடல்களுக்கே உரிய கம்பீரமான குரலுடன் கம்பேக் கொடுத்திருக்கிறார் ஹரீஷ் ராகவேந்திரா. கர்நாடக இசைப்பிரியர்களுக்கு விருந்தாக அமையலாம். மற்றபடி சாமான்ய ரசிகனுக்கு பிடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. இது படத்தில் எந்த சூழ்நிலையில் வரும், எங்கே சொருகப்பட்டிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. 

காதல் என் காதல்...
காதல் தோல்வி, கூடவே சரக்கு இரண்டும் இணைந்தால் புலம்பல்கள். அதையே பாடலாக உருவாக்கியிருக்கிறார்கள். அட, செல்வராகவனும், தனுஷும் இணைந்து பாடியிருக்கிறார்கள். செல்வராகவன் குரல் கேட்பதற்கு இனிமையாக இல்லையென்றாலும் புதுமையாக இருக்கிறது. பாடலில் புகுந்து விளையாடும் கடம் இசை, அஞ்சலை பாடலை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை.

மயக்கமென்ன தீம் மியூசிக்
வழக்கமாக செல்வா படங்களில் இரண்டு தீம் இசையாவது இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற Celebration of Life இசையை மறக்க முடியுமா...? இந்தப்படத்தில் ஒன்றுதான். ஆனால் ஏமாற்றம் தராத வகையில் ஒலிக்கிறது. கிடார் இசை பின்னி பெடலெடுக்கிறது. மூன்று நிமிடப்பாடலில் முதலிரண்டு நிமிடங்கள் அசத்தல், மூன்றாவது நிமிடம் இரைச்சல்.

எனக்குப் பிடித்த பாடல்: பிறை தேடும் இரவிலே...

எனக்குப் பிடித்த வரிகள்:
கருவாட்டு குழம்பா நீயும் ருசி ஏத்துற...
ஒருவாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற...

ஃபியூஸ் போனபின் பல்புக்கான சுவிட்சை தேடுறேன்...

சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீருல...
படுத்துக்க படுத்துக்க ஒடனே தெளிஞ்சிடும் காலைல அடிக்கிற மோரினில...

என்னுடைய ரேட்டிங்: 7.5 / 10

இந்த ஆல்பத்தின் வாயிலாக ஜிவி பிரகாஷ் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதை நிரூபித்தது மட்டுமில்லாமல், தனுஷ் ஒரு நல்ல பாடகராகவும், செல்வராகவன் ஒரு நல்ல பாடலாசிரியராகவும் உருவெடுத்திருக்கிறார்கள். வழக்கமான செல்வராகவன் படங்களின் பாடல்கள் போல வசீகரிக்கவில்லை என்றாலும் இது போதும்டா மச்சான்...!


சமீபத்தில் எழுதியது: ஏழாம் அறிவு - இசையா...? இரைச்சலா...?


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 September 2011

பிரபா ஒயின்ஷாப் – 26092011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில் திடீர் திடீரென மழை பெய்வது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் கவலை அளிக்கிறது. பின்னே, பேருந்தில் தினசரி தரிசனம் தரும் SIET சிட்டுக்கள் லீவ் எடுத்துக்கொண்டால் அந்தநாள் எப்படி இனிய நாளாக அமையுமாம்.

கேபிள், ஜாக்கியெல்லாம் என்னங்க சினிமா விமர்சனம் எழுதுறாங்க. புதுப்படம் ரிலீசானதும் பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் பயணித்துப்பாருங்கள். படத்தை அலசி ஆராயுறாங்க பசங்க. சென்ற வாரம் பேருந்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் “வந்தான் வென்றான்” படத்தை அக்குவேராக ஆணிவேராக பிரித்துக்கொண்டிருந்தார்கள். திருவொற்றியூரிலிருந்து தேனாம்பேட்டை செல்வதற்குள் கிட்டத்தட்ட முழுப்படத்தையும் பார்த்த திருப்தி கிடைத்துவிட்டது. நடிகர் ஜீவா மட்டும் அவர்கள் பேசியதை கேட்டிருந்தால் ஒரு முழம் கயிற்றை தேடியிருப்பார்.

ரஜினி ஒரு மாமனிதர், சகாப்தம், நல்லவருக்கு நல்லவர். இப்படியெல்லாம் இருக்கும்போது ரஜினி வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுப்பதை ஏன் தடுக்க முயற்சிக்கிறார்கள். ரஜினி வாழ்க்கை வரலாற்றை பார்த்து நாலு நாதாரிப்பசங்க திருந்தினால் நாட்டுக்கு நல்லதுதானே. என்ன நாஞ்சொல்றது...?

என்னுடைய வலைப்பூ சரிவர திறக்க மறுக்கிறது என்று நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். அப்படியே திறந்தாலும் பிரவுசர் க்ராஷ் ஆகிவிடுவதாக சிலர் சொல்கின்றனர். எனக்கு புரிகிறது. ஆனால் இந்த சிக்கலை எப்படி சரிகட்டுவது என்றுதான் தெரியவில்லை. யாராவது உருப்படியான ஆலோசனை சொல்லுங்களேன். டாட் காமாக மாற்றவும் தயாராக இருக்கிறேன். ஆனால் என் கேள்வி அப்படி மாற்றிவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடுமா...?

ஜொள்ளு:
நீ ஹார்மோனிய கட்டையம்மா...
என் ஹார்மோன் செய்யுது “சேட்டை”யம்மா...
ட்வீட் எடு கொண்டாடு:
ஆறுதல் சொல்ல உண்மையான நண்பன் இருந்தால்.."காதல் தோல்வி" கூட "காமடி படம்தான்"#மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன்..

பெரியார் ஒரு நாய் வளர்த்தார் என்று கேள்விப்பட்டேன்! அதனுடைய ப்ரீட்தான் ஈவிகேஎஸ் என்று தெரியாமல் போய்விட்டது!

பணியாளர்களை வாட்டி வதைத்து... பணம் பண்ணும் மொதலாளிகளைக் கண்டால், பொணம் பண்ணத் தோன்றுகிறது... #என்னிக்கு எங்க பாஸப் போடப்போறேன்னு தெரில!

லஞ்ச்டைம் ஆயிட்டா "ஜெஸி ஜெஸி"னு சொல்ற வாய்கூட "பசி பசி"னு சொல்லுது # காதலிக்கு அவ்வோலோதான் மதிப்பு

அறிமுகப்பதிவர்: சைக்கிள்காரன்
ஆனந்த விகடன் வலைபாயுதேவில் பார்த்து, டிவிட்டரில் தொடர்ந்து அப்படியே அங்கிருந்து நூல் பிடித்து இவருடைய வலைப்பூவிற்கு சென்றேன். கொஞ்சம் பழைய ஆள்தான். ஆனால் ஓட்டரசியலில் சிக்காதவர். நம்ம கடைல காண்டம் கவிதைகள் போட்டாமாதிரி இவர் செருப்புக் கவிதைகள் எழுதியிருக்கார். மங்காத்தா படம் பார்த்துவிட்டு இவர் அஜித்துக்கு கொடுத்த அட்வைஸ் என்னவென்று பாருங்கள். சமீபத்தில் எழுதியது, பணம் தின்னும் பிணங்கள்.

கேட்ட பாடல்:
பன்னிக்குட்டியார் அறிமுகப்படுத்திய ஒரு பலான வீடியோவில் முதல்முறையாக இந்தப்பாடலை கேட்டேன். அதே பாடலை விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் மறுமுறை கேட்டு ஈர்க்கப்பட்டேன். ஒருவழியாக யூடியூபில் தேடிக்கண்டுபிடித்த அந்த பாடல் ஆர்யா 2 என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ரிங்க ரிங்கா பாடல். யாருங்க இந்த அல்லு அர்ஜுன் இந்த ஆட்டம் ஆடுறார். I’M IMPRESSED.
மயக்கம் என்ன, ஏழாம் அறிவு பாடல்கள் பற்றிய இடுகைகள் தனியாக வரும்.

பார்த்த வீடியோ:
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க...

நேற்று பிசாசுக்குட்டி வலைப்பூவில் பார்த்த வீடியோ...

ரசித்த புகைப்படம்:
படத்தை பெரிதாக பார்க்க தனி விண்டோவில் திறக்கவும்
கடைசியா ஒரு தத்துபித்துவம்:
இரண்டு சொட்டு போட்டா அது போலியோ...
நாலு சொட்டு போட்டா அது உஜாலா...
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்...
இதுதான் இன்னைக்கு மேட்டர்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 September 2011

பேசும் ஊமைகள்


அன்புள்ள சாந்திலால் அவர்களுக்கு,

“நான் அனுப்பிய புத்தகங்கள் வந்து சேர்ந்ததா...?” என்று அக்கறையுடன் விசாரித்திருந்தீர்கள். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்பதற்காக “ஆம். நன்றி..” என்ற ஒற்றை வரி பதிலை தவிர்த்து வந்தேன். புத்தகங்கள் வந்துசேர்ந்தது பேசும் ஊமைகளை படித்தும் முடித்துவிட்டேன்.


ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு என்னுரை, முன்னரையெல்லாம் படிப்பது அவசியமா என்று தெரியவில்லை. இனி வரும் காலங்களில் அவற்றை தவிர்க்க விரும்புகிறேன். ஏனென்றால் என்னுரையிலேயே நீங்கள் ஒரு நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட் என்றும் சீரிய(ஸ்) கதைகள் எழுத முயற்சித்திருப்பதாகவும் குட்டை வெளிப்படுத்திவிட்டீர்கள்.

அடுத்தது, கதைகள் அனைத்தும் 1999ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டிற்குள் கல்கி, தேவி, சாவி, ஆ.வி, அ.வி (அவள் விகடன்) போன்ற இதழ்களில் வெளியானதாக சொல்லியிருந்தீர்கள். அப்படியென்றால் அனைத்தும் பத்து வருடத்திற்கு முந்தய அவுட்டேட்டட் கதைகள். இந்த இரு ஏமாற்றங்களையும் கடந்துதான் புத்தகத்திற்குள் நுழைந்தேன். இனி பேசும் ஊமைகளை பற்றி பேசுகிறேன்.
(நான் கொஞ்சம் உண்மைகள் சொல்வேன் அதிகப்பிரசங்கித்தனம் என்று நினைக்க வேண்டாம்).

முதலில் ஒரு விஷயம், இந்த புத்தகத்தை நான் படித்தது உங்கள் கதைகளை படித்து மனிதநேயத்தை கற்றுக்கொள்வதற்கு அல்ல. இந்த புத்தகத்தின் மூலம் நான் உங்களைத்தான் படித்தேன். (இதை எனது ப்ரோபைல் பக்கத்தில் உள்ள வரிகளை படித்தால் புரிந்துக்கொள்ளலாம்). அதற்கு தகுந்தாற்போல உங்கள் கதைகளும் உங்களைப் பற்றி தெளிவாக எடுத்து சொல்லிற்று.

நீங்கள் தொழில்ரீதியாக ஒரு மருத்துவர் என்பது தெரியாதவர்கள் கூட உங்கள் கதைகளை படித்தால் இதை எழுதியவர் ஒரு மருத்துவர் என்று கண்டுபிடித்துவிடுவார். பதினைந்தில் கிட்டத்தட்ட நான்கைந்து கதைகள் மருத்துவம் சார்ந்தவை. அதென்ன நான்கைந்து, இரண்டு கதைகள் மேலோட்டமாக மருத்துவம் சார்ந்தவை. அதான் குத்துமதிப்பாக சொன்னேன். ஒரு மருத்துவராக நீங்கள் நிறைய அனுபவப்பட்டிருப்பீர்கள். நிறைய சுகதுக்கங்களை பார்த்திருப்பீர்கள். அவை உங்கள் கதைகளில் பிரதிபலித்தன. அதிலும் பாதி மட்டுமே உங்கள் நோயாளிகளின் அனுபவம் மிச்சத்தை நீங்களே உங்கள் கற்பனையில் தொடர்ந்திருப்பது போல தெரிகிறது. என்ன சரிதானே....?

ராஜபாளையத்தில் பிறந்ததாலோ என்னவோ உங்களுக்கு தாய்ப்பாசத்திற்கு இணையாக நாய்ப்பாசமும் இருக்கிறது. நாய்ப்பாசம் மட்டுமல்ல மற்ற உயிரினங்கள், ஏன் மரங்களின் மீதும் கூட. அந்த வகையில் உங்களுடைய “ஷிவாவின் திருவிளையாடல்” சிறுகதை செம டச்சிங். அந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. சீரியஸ் கதைகளில் நாய்கள், மாடுகள் பேசுவது போல எழுதியிருக்கும் ஃபேண்டஸி ரசிக்க முடியவில்லை. ஒருவேளை நகைச்சுவை கதைகளாக இருந்தால் பொருந்தியிருக்கும்.

நான் மூன்றாவது பத்தியில் குறிப்பிட்டது போல நிறைய கதைகள் அவுட்டேட்டட். அதையும் மீறி அவற்றை ரசிக்க வைத்தது உங்கள் எழுத்து நடை என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்காங்கே கொஞ்சம் சமூகச்சாடல்கள். குறிப்பாக, மதுக்கடைகளில் ஒரிஜினல் லேபிளை ஒட்டி விற்கப்படும் போலி சரக்குகளை பற்றிய உங்கள் நியாயமான கோபத்தை ரசித்தேன். நீங்கள் ஆதிசேஷன் – அல்சேஷன் என்று எழுதியிருந்த வரிகள் “சிவாஜி” படத்தில் இடம்பெற்றது தெரியும்தானே. 

சில கதைகளில் உள்ள கிராமம் சார்ந்த விஷயங்களை நகரவாசியான என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. கிராமங்களில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நினைக்க தோன்றியது. “பொதர்”, “ஒரே கல்லில் மூணு மாங்கா” கதைகளைப் பற்றிதான் சொல்கிறேன். மற்ற கதைகள் அதிகம் ஈர்க்கவில்லை.

சரி மேட்டருக்கு வர்றேன். உங்கள் புத்தகத்தின் பதினைந்து கதைகளில் மூன்று முத்தான கதைகளைப் பற்றி சொல்கிறேன், கவுன்ட்டவுன் ஆர்டரின்படி. மூன்றாவது, வானவில் கனவு என்ற மனநலம் குன்றிய பெண் அல்லது முதியவர் பற்றிய கதை. கதையின் இறுதியில் ஒரு மரணம் இருக்குமென எண்ணினேன். அதை மாற்றி வேறு திசையில் கொண்டு சென்று கதையை முடித்த உங்கள் யுத்தி கவர்ந்தது.

இரண்டாவது, குழந்தையும் தெய்வமும். இந்தக்கதையை பற்றி எனக்கு இரண்டு மாற்றுக்கருத்துகள். ஒன்று கதையின் தலைப்பு சரியான தேர்வல்ல. (பெரும்பாலான கதைகளுக்கு அப்படித்தான்). இந்தக்கதைக்கு “ஊஸ்” என்று பெயர் வைத்திருக்கலாம். அப்புறம், கதையை பாதியிலேயே முடித்திருக்கலாம். இரண்டாம் பாதி தேவையற்றது. அந்த மாறுதல்களோடு இந்தக்கதைக்கு இரண்டாவது இடம்.

முதலிடம் பெற்ற அல்டிமேட் கதை – பொன்குஞ்சு. சான்ஸே இல்லை. ஒருசில கதைகளை படித்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு நினைவில் கிடந்தது பாடாய்ப்படுத்தும். அப்படிப்பட்ட கதைதான் இது. அப்படி ஒரு சிறுவனை நான் நெருக்கமான முறையில் சந்தித்திருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் அந்த வலி எனக்கு புரிந்தது. 

மொத்தத்தில் இவை சீரியஸ் கதைகள் தான். ஆனால் சீரிய கதைகள் என்று சொல்லமாட்டேன். அப்புறம் முழு புத்தகத்தையும் படித்தபிறகு தான் பின் அட்டையில் உங்கள் பக்கத்தில் நிற்கும் நாய்க்குட்டியை பார்த்தேன். உங்கள் நாய்ப்பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 September 2011

INCEPTION – நுட்பமான கிரியேட்டிவிட்டி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்செப்ஷன் படம் பார்க்கலைன்னா நீயெல்லாம் இருக்குறதே வேஸ்டுன்னு யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் சொல்லியிருந்தா பரவாயில்லை. அநேகமாக உலக சினிமா பார்க்கும் நண்பர்கள் எல்லோரும் சொல்லிவிட்டார்கள். பார்த்தே தீர வேண்டிய படம் என்று பலரும் பறைசாற்றியதால் பார்த்துவிடலாமென்று பதிவிறக்கினேன். ஆனால் பார்க்கச் சொல்லி வலியுறுத்திய அதே நண்பர்கள் இதெல்லாம் “ஏழாம் அறிவு” படைத்த அதிபுத்திசாலிகளுக்கு மட்டுமே புரியும் என்று கிலியை கிளப்பிவிட்டனர். எனவே, படத்தை புரிந்துக்கொண்டு நானும் அதிபுத்திசாலிதான் என்று நிரூபிக்கும் ஆர்வத்தில் யாரையும் கூட்டு சேர்க்காமல் தனியாக அமர்ந்து படம் பார்த்தேன்.

பதிவை ஆரம்பிப்பதற்கு முன்பு சில விஷயங்களை சொல்லி முன்ஜாமீன் வாங்கிக்கொள்கிறேன்...
- நான் இதுவரை ஒருசில உலகப்படங்கள் / ஆங்கிலப்படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
- நான் மேட்ரிக்ஸ் சீரியஸ் படங்கள் எதையுமே பார்த்ததில்லை.
- சில நாட்களுக்கு முன்புவரை எனக்கு கிறிஸ்டோபர் நோலனைப் பற்றி எதுவுமே தெரியாது.

அப்ப, என்ன டேஷுக்கு இந்தப்படத்தை பாத்தன்னு கேட்டால், எனக்கு கனவுகள் மீது நிறைய ஆர்வம் உண்டு. கனவுகள் குறித்து நிறைய சிந்தித்திருக்கிறேன். முன்பொரு காலத்தில் தூங்கும்போது பக்கத்தில் பேப்பர், பேனா வைத்துக்கொண்டு கனவு கலைந்து விழித்ததும் கனவை நினைவில் கொண்டுவந்து எழுதி வைத்திருக்கிறேன். சும்மா பதிவுக்காக டக்கால்ட்டி விடுறேன்னு நினைச்சீங்கன்னா என்னுடைய கனவுதுரத்தி குறிப்புகள் பாகம் 1, பாகம் 2 போன்ற பழைய இடுகைகளை படிக்கவும்.

- Title: Inception
- Tagline: Your mind is the scene of the crime
- Country: United States, United Kingdom
- Language: English
- Year: 2010
- Genre: Sci-Fi, Adventure
- Cast: Leonardo DiCaprio, Joseph Gordon-Levitt, Marion Cotillard
- Director: Christopher Nolan
- Cinematographer: Wally Pfister
- Editor: Lee Smith
- Music: Hans Zimmer
- Producers: Christopher Nolan, Emma Thomas
- Length: 148 Minutes


ஹீரோ ஒரு கனவு திருடன். அதாவது மற்றவர்களின் கனவில் புகுந்து அவர்களின் ரகசியங்களை திருடுபவன். மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் ஹீரோவிடம் ஒரு வேலையை ஒப்படைக்கிறார். அதாவது அவரது போட்டி தொழிலதிபரின் கனவில் புகுந்து அவரது எண்ண ஓட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதன் மூலம் அவரை தொழில் போட்டியில் வீழ்த்திவிடலாம் என்பது அவரது திட்டம். (இதுக்கு பேசாம கூலிப்படையை வச்சி எதிராளியை போட்டு தள்ளியிருக்கலாம்). ஹீரோ அவரது குழுவினர் உதவியோடு இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே மீதிக்கதை.

இதற்கு நடுவில் ஹீரோவின் இறந்துபோன மனைவி, அவருடைய குழந்தைகள், அவர்களது ஞாபகங்கள் என்றொரு கிளைக்கதையும் உண்டு.

கனவு, கனவுக்குள் கனவு, கனவுக்குள் கனவுக்குள் கனவு என்று நான்கு லெவல் வரை பயணிக்கின்றனர். பசங்க சொன்னதுபோலவே, முதல் ஒருமணிநேரம் படத்தில் ஒன்றும் புரியவில்லை. மாஸ்டர் ப்ளான் ஆரம்பமானதும் தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. இரண்டாவது முறை பார்க்கும்போது மிகவும் பிடித்திருந்தது.

இந்தப்படத்திற்கு எப்படித்தான் திரைக்கதை அமைத்தார்கள் என்று எக்கச்சக்கச்சக்கமா வியந்துக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்டோபர் நோலன் பயங்கர மூளைக்காரர் என்று உணர்ந்துக்கொண்டேன். அவரது முந்தய படங்களான Memento, Prestige போன்றவற்றை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. அதைவிட அவரது அடுத்த படம் எப்போது வரும் என்று ஏங்க ஆரம்பித்துவிட்டேன்.

இன்செப்ஷன் நான்கு ஆஸ்கர் விருதுகள், நான்கு கோல்டன் க்ளோப் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் வாங்கி குவித்திருக்கிறது. இந்தப்படத்தை ஆங்கிலத்தில் சப்-டைட்டில்களுடன் தான் பார்த்தேன். தமிழில் கனவு வேட்டை என்ற பெயரில் வெளியானதாக கேள்விப்பட்டேன். தமிழில் பார்த்திருந்தால் இன்னும்கூட தெளிவாக புரிந்திருக்கும், பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்செப்ஷன் படத்தை பார்த்தபிறகு தமிழ் சினிமாவில் வரும் மசாலா குப்பைகளை பார்த்தால் புழுவைப் பார்ப்பதுபோல இருக்கிறது. அப்படியே, ஏதாவது நல்ல படங்கள் வந்தாலும் அவை காப்பி அடிக்கப்பட்டவையாக இருக்கின்றன. இனி கேபிள் சங்கர் படம் எடுத்தால்தான் தமிழ் சினிமாவுக்கு விடிவுகாலம் பிறக்கும்போல.

இந்தப்படத்தை பார்த்தபிறகு கனவுகள் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. Sigmund Freud எழுதிய Interpretation of Dreams என்ற புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதையும் படிப்பதற்காக மின்னூல் வடிவில் பதிவிறக்கி வைத்திருக்கிறேன்.

இப்போது, என் நண்பர்கள் சொன்னது போலவேதான் நானும் சொல்கிறேன். நீங்கள் இதுவரைக்கும் இன்செப்ஷன் பார்க்கவில்லை என்றால் கீழே உள்ள இணைப்புகள் மூலம் பதிவிறக்கி பார்க்கவும்.

பதிவிறக்க லிங்குகள்:
(சப்-டைட்டில் இணைக்கப்பட்டுள்ளது. நேரடி லிங்குகள் கிடைக்கப்பெறவில்லை.)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment