அன்புள்ள வலைப்பூவிற்கு,
முஸ்கி: பி.எஸ்.என்.எல் கனெக்ஷன் நேரம் காலம் புரியாமல் பெப்பே காட்டுவதால் நேற்று வெளிவர வேண்டிய ஒயின்ஷாப் இடுகை இன்று...
நாட்டுநடப்பைப் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத நண்பர் ஒருவர் திடீரென டைம்ஸ் ஆப் இந்தியா, என்.டி.டி.வி என்று செய்தி இணையதளங்களை பார்வையிட்டபடி இருந்தார். என்னவென்று விசாரித்தேன். மனிதர் வார இறுதியை கோவாவில் கொண்டாடுவதாக முடிவு செய்து டிக்கெட் எடுத்து வைத்திருந்திருக்கிறார். இப்போது விமானிகள் ஸ்ட்ரைக் காரணமாக விமானம் பறக்குமா பறக்காதா...? பறக்கவில்லை என்றால் டிக்கெட் பணம் மீண்டும் கிடைக்குமா...? என்று தவித்திருக்கிறார். பாவம்யா...
சில படங்களைத் திரையரங்கம் சென்று மூன்று மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியாது. ஆனால் அதே படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது வசீகரிக்கும். அப்படி ஒரு படம்தான் “பதினாறு”. சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்ப, அரைத்த மாவுதான் என்றாலும் கிராமத்துக்காதல் சம்பந்தப்பட்ட போர்ஷன் முடியும்வரை படத்தில் இருந்து கவனம் சிதறவில்லை.
ஞாயிறு இரவு எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் சர்வதேச சூப்பர்ஸ்டார் வில்பர் சற்குணராஜின் பேட்டி ஒளிபரப்பானது. மனிதர் சீரியசாக பேசியே சிரிக்க வைக்கிறார். முழு நிகழ்ச்சியையும் கண்டு”கழித்தேன்”.
கிழக்கு பதிப்பகத்தின் டிஸ்கவுண்ட் சேல் இந்தமுறை ராயபுரம் வரை பாய்ந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சுஜாதாவின் மாயா, தீண்டும் இன்பம், ஹாய் மதன் இரண்டு பாகங்கள் ஆகியவைகளை கண்டதும் லபக்கினேன். பின்னர், “ரஜினி – சப்தமா..? சகாப்தமா...?” உள்ளிட்ட மேலும் சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். ஒருகாலத்தில் 100, 150 ரூபாய் கொடுத்து வாங்கிய புத்தகங்கள் இப்போது 10, 20 ரூபாய்க்கு கிடைப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது.
இணைய நண்பர் ஒருவர் அவரது குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருந்தார். ஏற்கனவே அவரது திருமணத்திற்கு அழைத்தும் செல்லாததால் இந்தமுறை கட்டாயம் சென்றுவிட வேண்டுமென்று கிளம்பினேன். உள்ளே நுழைந்ததும் நண்பர் என்னை அடையாளம் கண்டுகொண்ட விதமாக சிரித்தமுகத்துடன் வரவேற்று உட்கார வைத்தார். சுமார், அரைமணிநேரம் கழித்து என்னிடம் வந்து “ஓ... நீங்கதான் பிரபாகரா...?” என்று கேட்க செம பல்பு வாங்கினேன்.
ட்வீட் எடு கொண்டாடு:
ராதா மகளிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது! # இது வளர்த்த புருவமா முன்னூறு ரூவா குடுத்து வரைஞ்ச புருவமா!
ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: கலைஞர் பேட்டி #யாருய்யா சொன்னா, எங்க முதல்வர் மக்கள் நல மேம்பாட்டுக்கு உழைப்பதில்லை என்று. வாழ்க முதல்வர்
முதல்முறையாக படம் பார்ப்பவனை சாகடிக்காமல், தான் செத்துப் போவதுபோல ஒரு படம் செய்திருக்கிறார் சொம்பு # வானம்
மே டே வாழ்த்து சொன்னவங்களை விட அஜீத் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவங்க தான் அதிகம் போல. ஹ்ம்ம்
பதிவுலகில் புதியவர்: விஜய்கோபால்சாமி
பழைய பதிவர்தான், ஆனாலும் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. இன்ட்லியில் உலவிக்கொண்டிருந்தபோது கிடைத்தார். லேட்டஸ்டாக கருணாநிதி டுவிட்டர் கணக்கு வைத்திருந்தால்...? எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறார் பாருங்கள். பாராட்டுவிழா நடத்துபவர்களுக்கு மத்தியில் பாசத்தலைவனுக்கு டெம்ப்ளேட் வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்.
இந்த வார பாடல்:
உத்தமபுத்திரன் படத்தில் “இடிச்ச பச்சரிசி...” என்றொரு கொண்டாட்டப்பாடல். வழக்கமாக இந்தப்பாடலை தொலைக்காட்சியில் பார்த்ததுமே டபக்கென்று சேனல் மாற்றிவிடுவேன். சில நாட்களுக்கு முன்பு வேறு வழியில்லாமல் கேட்டேன். “நெனச்ச கனவு ஒன்னு நெஜமா நடந்திருச்சு...” என்று ஆரம்பிக்கும் சரணம் வசீகரித்தது. அந்த பெண்குரல் செவிக்கினிமை. பாடியவர் பெயர் சந்கீதாவாம்.
இந்த வார புகைப்படம்:
இந்த போட்டோ உண்மையானது தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அந்த வண்டிகள் விழாமல் செல்லும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
இந்த வார புதிர்:
ம்ம்ம்... எவ்வளவு கஷ்டமான புதிரைக் கேட்டாலும் பத்து பதினைந்து பேர் சரியான பதிலை சொல்லிவிடுகிறீர்கள். அப்புறம், மின்புத்தகம் வரலைன்னு சலிப்பு வேறு. இனி புதிர் போடுவதாக இல்லை.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|




