13 May 2019

பிரபா ஒயின்ஷாப் – 13052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரம் இரண்டு படங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் இரண்டு இடங்களைப் பற்றி பார்க்கலாம். இரண்டும் சென்னையிலிருந்து சுமார் நூறு, நூற்றியைம்பது கி.மீ. தொலைவில் உள்ள இடங்கள். 

முதலாவது பிரம்மதேசம் ! தமிழ்மகன் எழுதிய வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலின் வழியாக பிரம்மதேசம் குறித்த அறிமுகம் ஏற்பட்டது. பல்வேறு காலகட்டத்தில் பயணிக்கும் நாவலில் முதலாம் ராஜேந்திர சோழர் ஒரு பாத்திரமாகவே வருகிறார். ராஜேந்திர சோழரின் கல்லறை திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு அருகேயுள்ள பிரம்மதேசத்தில் அமைந்திருப்பதாக குறிப்பிடுகிறார் தமிழ்மகன்.

தமிழகத்தில் களப்பிரர்கள் காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு, சோழர்கள் மீண்டு வந்ததும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடை செய்யப்பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இதனை செயல்படுத்த பார்ப்பனர்கள் தேவைப்பட்டார்கள். பார்ப்பனர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. கோவில்களுக்கு அருகே பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் என்கிற பெயரில் நிலம் / குடியிருப்புகள் வழங்கப்பட்டன. அப்படியொரு பிரம்மதேயம் தான் மருவி பிரம்மதேசம் என்று ஆகியிருக்கக்கூடும். தமிழகத்தில் வேறு சில பிரம்மதேசங்கள் கூட உள்ளன. குறிப்பாக நெல்லை அம்பாசமுத்திரம் அருகே ஒரு பிரம்மதேசம் உள்ளது. அங்கே புகழ்பெற்ற கோவில் ஒன்றும் உண்டு.

ஒரு நிறைந்த நன்னாளில் பிரம்மதேசத்தை நோக்கி புறப்பட்டோம். பிரம்மதேசம் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வாரநாட்களில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணிக்குள் அங்கே செல்வது உகந்தது. மற்ற நாட்களில் கோவிலின் உள்கட்டமைப்பை பார்க்க முடியாது. சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் தாண்டி, ஆற்காடு செல்லும் வழியில் சிறுகரும்பூர் என்கிற சிற்றூர் வருகிறது. அங்கிருந்து இடதுபுறம் ஒடித்து திருப்பி பத்து கி.மீ. உள்ளே சென்றால் பிரம்மதேசம். சொல்லி வைத்தாற்போல அங்கே ராஜேந்திர சோழர் என்று ஆரம்பித்தால் யாருக்கும் அப்படியொரு இடம் இருப்பதாக தெரியவில்லை. கூகுள் மேப்பை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டே பயணமானோம். பிரம்மதேசம் என்கிற அந்த சிறிய கிராமத்தை கடந்து கொஞ்ச தூரம் சென்றபிறகே கோவில் கண்களுக்கு தெரிகிறது.

துரதிர்ஷ்டவசமாக நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமை. பக்கத்தில் விசாரித்தபோது தொல்லியல் அதிகாரி சில மாதங்களாகவே வருவதில்லை என்றார். நுழைவுவாயிலில் பலமாக பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே சென்றோம். (எப்படி என்று கேட்காதீர்கள். பார்க்க படம்). தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியை இப்படி அத்துமீறி நுழைந்திருக்கிறோம் என்பதால் எங்களுக்கு கொஞ்சம் பதற்றம். ஆனால் அங்கே யாரும் எங்களை சட்டை செய்ததாக தெரியவில்லை. உள்ளே உள்ளூர் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். (சோழர்கள் காலத்தில் கிரிக்கெட் இருந்திருக்குமா ?) கோவிலின் கோபுரத்தின் அருகே சென்றோம். நிறைய சிதைந்த நிலையில், சில இடங்களில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருந்தது மண்டபம். அதிகாரி யாருமில்லாததால் கோவிலின் கர்ப்பக்கிரகம் அல்லது உள்ளறைக்கு சென்று பார்க்க முடியவில்லை. பராமரிப்பில்லாமல் உள்ள பகுதி என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நம்மவர்களுக்கே உரிய ஒரு பழக்கம் மறைவான ஒரு இடம் கிடைத்தால் அங்கே மது அருந்துவது. அப்பழக்கத்திற்கு ராஜேந்திர சோழரும் விலக்கல்ல என்று அங்கிருந்த நீரற்ற கிணற்றில் கிடந்த மதுக்குப்பிகளே சாட்சி. 

கோபுரத்தின் பின்புறம் உள்ள நிலத்தில் பராமரிப்பின்றி ஒரு கல்லறை உள்ளது. ஒருவேளை அது சோழருடைய கல்லறையாக இருக்கலாம்.

தமிழர் வரலாற்றின் மீதோ / தொல்லியல் மீதோ மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தால் நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாத இடம் இது. 

இரண்டாவதாக நாங்கள் சென்ற இடம் ஒரு திரையரங்கம். திரையரங்கில் ஸ்பெஷல் என்னவென்றால் அது டென்ட் கொட்டாய் என்பதுதான். தமிழ்நாட்டின் கடைசி டென்ட் கொட்டா ! இத்திரையரங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரையை நியூஸ் மினிட் இணையதளத்தில் வாசிக்க நேர்ந்தது. 

சோழனைப் பார்க்கச் சென்ற அதே NH48ல் ஆற்காடுக்கும், வேலூருக்கும் இடையே பூட்டுத்தாக்கு என்ற சிற்றூரில் அமைந்துள்ளது கணேஷ் திரையரங்கம் என்கிற இந்த டென்ட் கொட்டாய். கூகுளில் போன் நம்பர் எல்லாம் முறையாக அளிக்கப்பட்டிருந்ததால் முதலில் அலைபேசினோம். கனிவுடன் பேசிய அரங்கின் உரிமையாளர் படம் பார்ப்பதென்றால் மாலை நேரத்திற்கு மேல் வரும்படியும், மற்றபடி அரங்கை பார்ப்பதென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்றும் சொன்னார்.

நாங்கள் பூட்டுத்தாக்கை சென்றடைந்தபோது அங்கே பயங்கரக்கூட்டம். நேரத்தைப் பார்த்தோம். மதியம் பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் புரிந்தது. டாஸ்மாக் திறப்பதற்காக காத்திருந்த கூட்டம்தான் அது. இங்கேயும் ஒரு வாயில், இங்கேயும் ஒரு பூட்டு. ஆனால் அத்துமீற முடியவில்லை. உரிமையாளரை அலைபேசியில் கூப்பிட்டோம். இரண்டு நிமிடங்களில் வருவதாகச் சொல்லி, சொன்னபடி வரவும் செய்தார். சும்மா வேடிக்கை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்றில்லாமல் எங்களை நல்ல மரியாதையுடன் நடத்தினார் திரையரங்க உரிமையாளர் கிட்டத்தட்ட பிரஸ் அந்தஸ்து என்று வைத்துக்கொள்ளுங்களேன். 

நாங்கள் போன சமயம் திரையரங்கில் கஜினிகாந்த் ஓடிக்கொண்டிருந்தது. டென்ட் கொட்டாய் என்பதால் பகல், மேட்னி காட்சிகள் திரையிட முடியாது. தினசரி மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணிக் காட்சிகள் மட்டும். மேலே ஆஸ்பெட்டா கூரை, ஒருபுறம் திரை, மறுபுறம் ப்ரொஜெக்ஷன் அறை. பக்கவாட்டில் சுற்றுச்சுவரெல்லாம் கிடையாது. திரைக்கு முன் ஆண்கள், பெண்கள் என்று பிரித்து விடப்பட்ட மண் பகுதி, அதன்பிறகு பென்ச் பகுதி (இங்கும் ஆண்கள் / பெண்கள் தனித்தனி பகுதி). பென்ச் பகுதி சமீபத்தில் புனரமைக்கப்பட்டு மர நாற்காலிகள் அமைத்திருக்கிறார்கள். அதன்பிறகு பர்சனல் ரூம், அதாவது பாக்ஸ். இங்கே பஞ்சு பொதிக்கப்பட்ட நாற்காலிகள் உள்ளன. டிக்கட் விலை தரைக்கு பத்து, பென்ச் இருபது, பாக்ஸ் முப்பது.

உரிமையாளர் கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் பக்கம் என்று நவீன நுட்பங்களை தெரிந்து வைத்திருக்கிறார். நவீன ஒலியமைப்பு செய்து வைத்திருக்கிறார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளை விட இங்குள்ள ஒலியமைப்பு அபாரமாக இருக்கும் என்றார். துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அங்கே இருந்து மாலைக்காட்சி பார்க்கும் அளவிற்கு நேரமில்லை. 

தொடர்ந்து உரிமையாளருடன் பேசுகையில் திரையரங்கை தொடர்ந்து நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும், மற்ற திரையரங்கினர் மத்தியில் நிலவும் அரசியல் குறித்தும் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதனாலேயே பல சமயங்களில் செகண்ட் ரிலீஸ் படங்களையே வெளியிட நேர்வதாகக் குறைப்பட்டுக் கொண்டார். அதே சமயங்களில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், எங்களைப் போல அவ்வப்போது சிலர் விசாரித்து வருவதாகவும் சொன்னார். டாஸ்மாக்கிற்கு நேரெதிரில் திரையரங்கம். அமர்ந்து இளைப்பாற தோதாக மண்தரை. இதனால் உங்களுக்கு நிறைய தொந்தரவுகள் வந்திருக்குமே என்று கேட்டோம். பொதுவாக இங்கு வருபவர்கள் உள்ளூர்க்காரர்கள் தான். அவர்கள் பிரச்சனையெல்லாம் செய்ய மாட்டார்கள். அப்படியே செய்தாலும் போலீஸிடம் தகவல் சொன்னால் போதும் என்றார். 

திரைப்படங்கள் பற்றி பேசும்போது சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கில ஹாரர் படம் அமோக வசூலை அள்ளியதாக சந்தோஷப்பட்டுக்கொண்டார். நான் அந்த ஹாரர் படத்தை பார்த்திருக்கிறேன். இரவுக்காட்சி, அந்த திறந்தவெளி திரையரங்கில் அந்த ஹாரர் படத்தைப் பார்த்தால் பீதி நிச்சயம்.

இன்னொரு நன்னாளில் ராஜேந்திர சோழரின் உள்ளறையையும், பூட்டுத்தாக்கு கணேஷ் திரையரங்கில் இரவுக்காட்சி ஹாரர் திரைப்படத்தையும் பார்க்கும் வாய்ப்பு அமைய வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 May 2019

பிரபா ஒயின்ஷாப் - 06052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

41 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபா ஒயின்ஷாப் !

இவ்வார ஒயின்ஷாப்பில், தமிழில் வெளியான இரு மெடா-சினிமாக்களைப் பற்றி பார்க்கலாம். மெடா-சினிமா என்றால் சினிமாவைப் பற்றிய சினிமா. இரண்டும் ஒரு வகையில் மாய எதார்த்த படங்கள். 

முதலாவது நாசர் நடிப்பில் வெளியான முகம். பெரும்பான்மை மக்கள் முகம் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள், ஆனால் மறந்திருப்பீர்கள். சற்று நினைவூட்டுகிறேன். முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்களை உடனுக்குடன் ஒளிபரப்பும் வழக்கம் கிடையாது. அப்போது சன் தொலைக்காட்சி திடீரென ஒரு புரட்சியை செய்தது. அச்சமயத்தில் திரைக்கு வந்து ஐம்பது, அறுபது நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த சங்கமம் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாக அறிவித்தது. ஒருவேளை இப்போது சங்கமம் திரைப்படம் வெளிவந்து, அதனை அறுபது நாட்கள் கழித்து ஒளிபரப்பினால் பார்ப்பதற்கு ஆளிருக்காது. அப்போதோ தொலைக்காட்சியில் புதிய படம் என்கிற கவர்ச்சியின் காரணமாக மக்கள் சங்கமத்தை பார்த்துத் தீர்த்தார்கள். அடுத்து கொஞ்ச நாள் கழித்து ‘திரைக்கு வந்து சில நாட்களே ஆன’ அடைமொழியுடன் முகம் படத்தை ஒளிபரப்பினார்கள். சங்கமமாவது பரவாயில்லை, முகம் என்று ஒரு படம் திரையரங்கில் வெளியானதே பலருக்கும் தெரியாது. ஆனாலும் புதுப்படம் என்பதால் பார்த்தார்கள். 

முகம் படத்தின் நாயகன் அவனது கோரமான முகத்தின் காரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறான். ஒரு சமயத்தில் அவனுக்கு சினிமா சான்ஸ் கிடைக்கிறது, யூனிட்டில் இருந்து வீட்டு வாசலுக்கு காரெல்லாம் அனுப்புகிறார்கள். ஆனால் படத்தில் அவனுக்கு மிகச்சிறிய வேடம். அது மட்டுமில்லாமல் படம் வெளிவந்தபிறகு அவனது முகத்தை திரையில் பார்க்கும் ரசிகர்கள் கொந்தளித்து ஸ்க்ரீனை எல்லாம் கிழிக்கிறார்கள். இன்னொரு பக்கம் கதாநாயகி ரோஜாவால் உதாசீனப்படுத்தப்படுகிறான். வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் அவனிடம் ஒரு முகமூடி கிடைக்கிறது. அதனை அணிந்து கொண்டதும் அழகான தோற்றம் பெறுகிறான். அதன்பிறகு அவனுக்கு அதுவரையில் கிடைக்காததெல்லாம் கிடைக்கிறது. சினிமாவில் பெரிய ஸ்டார் ஆகிறான். முன்பு அவனை உதாசீனப்படுத்திய ரோஜா இப்போது தர்ணா இருந்து அவனையே திருமணம் செய்துகொள்கிறாள். அவனது முகத்துக்காக திரையைக் கிழித்தவர்கள் இம்முறை திரை முன் ஆரத்தி எடுக்கிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போனாலும் கொஞ்ச நாட்களில் அவன் ஒரு போலியான வாழ்க்கையை வாழ்வதாக உணர்கிறான். பேசாமல் பழைய முகத்திற்கே போய் விடுவதென தீர்மானித்து முகமூடியை கழட்டுகிறான். உடனடியாக அவனது சொந்த வீட்டிலிருந்தே திருடன் என்று வெளியில் துரத்தப்பட்டு, அவனது ரசிகர்களிடமே அடி வாங்குகிறான். பழைய முகத்திற்கு மாற நினைத்த அவனது முடிவை தவறு என்று உணர்கிறான். உலகத்தில் யாரும் யாருடைய நிஜ முகத்தையும் விரும்புவது கிடையாது. எல்லோருக்கும் ஒரு போலி முகம் தேவைப்படுகிறது. (தத்துவார்த்தமாக இருக்கிறது அல்லவா ?) அவன் மீண்டும் முகமூடி அணிந்துகொண்டு தன் போலி வாழ்க்கைக்கு திரும்புவதுடன் படம் நிறைவுறுகிறது. 

இப்படம் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரை மனதில் வைத்து இயக்கப்பட்டது என்று ஒரு காட்சியிலிருந்து புரிந்துகொள்ளலாம். முகமாற்றத்திற்குப் பிறகு பிரபல கதாநாயகனாகும் நாசர், தன்னுடைய படங்களில் தொடர்ந்து ஏழைகள் நல்லவர்களாகவும், பணக்காரர்கள் மோசமானவர்களாகவும் சித்தரிக்கப்படுவதை நினைத்து வருந்துகிறார். இதனால் படம் பார்க்கும் மக்கள் மனதில் பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள் என்ற எண்ணம் தோன்றிவிடும் என்றும். அவர்கள் பணம் சம்பாதிக்கும் ஆசையற்று போய்விடுவார்கள் என்றும் தீவிரமாக சிந்திக்கிறார். அருகிலிருக்கும் எடுபிடி பெரிய ஸ்டாரான பிறகு இவ்வளவெல்லாம் சிந்திக்கக் கூடாது என்று அவரை சமாதானப்படுத்துகிறார். இதுபோன்ற ஒரு கான்வர்சேஷன் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பதாக ஆஃப் த ரெக்கார்ட்ஸ் செய்தி. 

நாம் பார்க்கப்போகும் இரண்டாவது படம் – சீதக்காதி. சீதக்காதியை விலாவரியாக விவரிக்க வேண்டிய அவசியமிருக்காது. ‘அய்யா’ ஆதிமூலம் அபாரமான நாடக நடிகர். ஆனால் சினிமா யுகத்தில் நாடகம் எடுபடவில்லை. மக்கள் நாடகங்களை புறக்கணிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அய்யா ஆதிமூலம் இயற்கை எய்துகிறார். அதன்பிறகு அவர் ஆவியாக வந்து அவரது நாடகக்குழுவில் உள்ள ஒவ்வொருவர் உடலின் வழியாக நடிப்பைத் தொடர்கிறார். ஒருமுறை அய்யா அவரது குழுவில் உள்ள ஒரு இளைஞன் மூலம் நடிப்பதைப் பார்த்து இயக்குநர் ஒருவர் அந்த இளைஞனை சினிமாவில் கதாநாயகனாக்குகிறார். அய்யா இளைஞன் மூலமாக ஆவியாக சினிமாவில் நடிக்கிறார். அய்யாவின் அபார நடிப்பால் அவர் பெரிய ஸ்டாராகிறார். பெரிய ஹீரோ ஆனதும் இளைஞன் அய்யாவின் ஆவியை அவமதிக்கிறான். அதன்பிறகு வெவ்வேறு உடல்கள் மூலமாக அய்யா தொடர்ந்து நடிக்க, மக்களும் அவர்களது நடிப்பிற்கு பின்னாலிருப்பது அய்யாதான் என்பதை உணர்ந்து அதுவரை இளைஞனைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் அதன்பிறகு அய்யாவைக் கொண்டாடத் துவங்குகிறார்கள். பின்னர் திரைத்துறையினர் செய்யும் சீரழிவுகளைக் கண்டு மனம் நொந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்கிறார் அய்யா. அவர் தொலைதூர கிராமத்துப் பள்ளியொன்றின் ஆண்டுவிழாவில் ஒரு சிறுவன் உடல் வழியாக நடித்துக்கொண்டிருப்பதாக படம் நிறைவுறுகிறது. 

இந்த இரண்டு படங்களும் ஏறத்தாழ ஒரே பாணி, ஆனால் இரண்டு எக்ஸ்ட்ரீம் விஷயங்களை முன் வைக்கிறது. முதலாவது படத்தின் படி, சினிமாவுக்கு லட்சணமான முகம் அவசியம், அது மட்டுமிருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிறது. இரண்டாவது படம், முகமெல்லாம் அவசியமே இல்லை. அபார நடிப்பாற்றல் மட்டுமிருந்தால் போதும் மக்கள் ஒரு அருவத்தைக் கூட கொண்டாடுவார்கள் என்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இவை இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள்.

அழகான முகத்திற்கு கிடைக்கும் வெற்றியைக் கூட ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம். அந்தக்கால எம்.ஜி.ஆர் துவங்கி அர்ஜுன் தேவரகொண்டா வரைக்கும் நிறைய உதாரணர்கள் உளர். ஆனால் அவர்கள் முகத்துக்காக மட்டும் வெற்றியடையவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதைவிட நடிப்பாற்றலுக்காக மட்டும் ஒருவர் வெற்றியடைகிறார் என்பது சுத்த பேத்தல். ஒரு பேச்சுக்கு நடிப்பாற்றலை மட்டும் வைத்துதான் சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து முடிவாகிறது என்று வைத்துக்கொள்வோம். இங்குள்ள சில ஸ்டார்களின் நிலைமைகளை நினைத்துப் பாருங்கள். நான் பெயர்களைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்ள விரும்பவில்லை. நீங்களாகவே யூகித்துக்கொள்ளுங்கள்.  

தமிழ் சினிமாவின் கதாநாயக அந்தஸ்துக்கு தேவையானது அழகான முகம் மட்டுமோ, அபார நடிப்பு மட்டுமோ கிடையாது. அது பெப்ஸி, கோக், கே.எப்.ஸி. மாதிரி யாருக்கும் புரியாத ஒரு ரகசிய ஃபார்முலா. இதுவரையில் இங்கே கொண்டாடப்பட்ட நாயகர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு ஒரு அனாலிஸிஸ் செய்தால் அதிலிருந்து ஒரு பேட்டர்னையும் கண்டுபிடிக்க முடியாது. 

ஒருவேளை முக அழகுதான் நாயக அந்தஸ்தை தீர்மானிக்கிறது என்றால் வித்யுத் ஜம்வாலும், நடிப்பாற்றல் தான் தீர்மானிக்கிறது என்றால் குரு சோமசுந்தரமும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்கள். 

என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்

Post Comment