அன்புள்ள வலைப்பூவிற்கு,
அறிவிப்பில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். அதுவும் கட்டாயம் எதிர்கால தங்க்ஸை அழைத்துச்செல்ல வேண்டும் என்பது திட்டம்.
ஏற்கனவே குறும்படத்தில் பார்த்த அதே கதைதான். சித்தார்த்தும், அமலா பாலும் காதலிக்கிறார்கள், தவறான புரிதல்களால் பிரிகிறார்கள். மறுபடியும் இணைகிறார்களா என்பதே மீதிக்கதை. கிளைக்கதைகளாக அமலா பாலின் பெற்றோர், சித்தார்த்தின் நண்பர், நண்பரின் நண்பர் ஆகியோரது காதல்களும் இருக்கின்றன.
சித்தார்த் ஜாலியான கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்துபவர். இவருடைய வரலாற்றை திரும்பிப்பார்த்தால் இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் ஒன்றுபோலவே இருக்கும். இதிலும் அப்படியொரு ஜாலியான கேரக்டரை அசால்ட்டாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழி நாயகனாக வலம்வந்தவர் இந்தப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து முதல் பந்திலேயே சிக்சர் அடித்திருக்கிறார்.
அமலா பால் (இந்தமுறை கன்னுக்குட்டி, ஆட்டுக்குட்டின்னு எழுதினா தங்க்ஸ் வருத்தப்படுவார்) 2012 ஆரம்பிச்சதுல இருந்து வதவதன்னு அம்மணி நடிச்ச படமா வந்துட்டு இருக்கு. எதை பாக்குறது எதை விடுறதுன்னு தெரியல. ஆனா இந்த படத்துல எதையும் பார்க்க விடாம இழுத்து போர்த்திட்டு நடிச்சிருக்கார். அம்மணியின் சிகையலங்காரமும், உடையலங்காரமும் அட்டகாசம்ன்னு தங்க்ஸ் சொல்லிக்கொண்டே இருந்தார்.
குறும்படத்தில் நடித்த அதே நண்பர்கள். இருவருமே பெஸ்ட் செலக்ஷன். குறிப்பாக குண்டு கம் குறும்பு நண்பர் சொல்லும் வசனங்களும் செய்யும் முகபாவனைகளும் ஒரிஜினல் நண்பர்களை பார்த்த அனுபவம் கிடைத்தது.
சித்தார்த்தின் அப்பா அம்மாவாக ரவி ராகவேந்திரா – ஸ்ரீரஞ்சனி. தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் பெற்றோர்கள். நிஜத்துல இந்தமாதிரி அப்பா அம்மா எங்கேயாவது இருந்தா கூரியர்ல அனுப்பி வையுங்கப்பா. அமலா பாலின் பெற்றோராக சுரேஷ் – சுரேகா வாணி. உண்மையிலே சித்தார்த் – அமலா பாலை விட இந்த இணைதான் செம ரொமாண்டிக். அந்த லவ் லெட்டர் பிரமாதம்.
எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நண்பன் படத்தில் சில நொடிகள் வந்ததற்கே சிலிர்த்தது. இந்தப்படத்தில் நிறைய காட்சிகளில் வந்து நிமிர வைத்துவிட்டார். (நோ டபுள் மீனிங்).
தமன் இசையில் பாடல்கள் அனைத்துமே வழவழ கொழகொழ. எதுவுமே மனதில் ஒட்டவில்லை. “அழைப்பாயா... அழைப்பாயா...” பாடல் மட்டும் ஓகே ரகம்.
வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. “பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்டுற அளவுக்கு பசங்களால என்னிக்குமே காட்ட முடியாது” என்று ஆரம்பமே அமர்க்களம். “ஒரு பொண்ணு கேள்வி கேட்கும்போது உண்மையை தான் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. அவங்க என்ன பதில் எதிர்பார்க்குறாங்களோ அதை சொன்னாலே போதும்” என்பது போன்ற வசனங்கள் வாழ்க்கைக்கல்வி.
முதல் பாதி முழுவதுமே கிண்டலும் சிரிப்புமுமாக ஜாலியாக நகர்ந்தது. இரண்டாம் பாதியில் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று யோசித்தபோது நண்பனின் திருமணம், வெளியூர் பயணம் என்று சற்றே போரடித்தாலும் அவ்வப்போது சில நல்ல காட்சிகள் வந்து அந்த குறையை போக்கிவிட்டன. திரையுலகமே பார்க்காத அதிசயம், இதுவரை யாருமே தொடாத சப்ஜெக்ட், ஹாலிவுட்டையே மிரட்டும் தொழில்நுட்பம் இப்படியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் முப்பத்தி ஆறே நாட்களில் சொதப்பாமல் எளிமையாகவும் அழகாகவும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரத்தை தந்திருக்கிறார்கள். சுரேஷ் – சுரேகா வாணி காதலோடு சேர்த்து, திருமணத்திற்கு முன் காதலிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் திருமணத்திற்கு பின் காதலிப்பவர்களுக்கும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இது படமல்ல பாடம்...!
டைட்டில் உதவி: ஜேம்ஸ் கேமராமேன்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|


