13 March 2017

பிரபா ஒயின்ஷாப் – 13032017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

டர்மரின் 384 படித்தேன். சுதாகரின் நாவல்கள் மூன்றும் ஆனந்த் ஷங்கரின் படங்கள் போன்றவை. ஒரு ஹை-டெக் க்ரைம் திரில்லராய் எடுக்கக்கூடிய தகுதிகள் கொண்டவை. அவருடைய நாவல்களுக்கென ஒரு டெம்ப்ளேட் அமைந்துவிட்டது போல தெரிகிறது. நாயகனுக்கும் நாயகிக்கும் காதலில் சிக்கல்கள். இருவரும் கதைக்கருவான ப்ராஜெக்ட்டில் உள்ள புதிரை அவிழ்க்க பங்கெடுத்துக் கொள்கிறார்கள். கதையினூடே இவர்கள் காதல் கதையும் வந்து போகிறது. இறுதியில் எல்லாம் முடிந்து சுபம். 

சுதாகரின் முந்தைய நாவலிலும் சுனந்தாவைப் போல ஒரு கதாபாத்திரம் கடைசி வரை கோமாவில் இருக்கும் என்று நினைக்கிறேன். உயிரியல் பரிசோதனைத் துறையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய மூலக்கூறையும், இருபெரும் உயிரியல் நிறுவனங்களையும் மையமாகக்கொண்டு நகர்கிறது கதை. சுதாகரின் கதைகளை கண் முன்னே கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று 7.83 Hz படிக்கும்போதே உணர்ந்தேன். அது ட.384லிலும் தொடர்கிறது. வெயிட்டான கதை, ஆனால் லைட்டாக சொல்லியிருக்க வேண்டும்.

கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்கிற வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது நள்ளி மல்க்கம்மாள் கோவில். இதனை குறிப்பிட்டு எழுதுவதற்கு மல்க்கம்மாளின் சுவாரஸ்ய ஸ்தல வரலாறு ஒரு காரணம். வெள்ளையர் காலத்தில் நள்ளியில் ஒரு வெற்றிலை வணிகர் இருந்தார். தன் பொதிமாடுகளுடன் சாத்தூர் அருகே உள்ள ஆவுடையார்புரம் சென்று வெற்றிலை வாங்கி வருவது அவருடைய வழக்கம். ஒருமுறை அப்படிச் சென்றபோது நிறைமாத கர்ப்பவதியான ஒரு இஸ்லாமியப் பெண்ணை சந்திக்க நேர்கிறது. அந்த பெண்ணின் பெயர் மலுக்கம்மா. தன் கணவரையும், பெற்றோர்களையும் எதிரிகள் கொன்றுவிட்டதால், ஆதரவில்லாமல் இருப்பதாகவும், தனக்கு அடைக்கலம் தரச்சொல்லியும் வணிகரிடம் கேட்கிறார் மலுக்கம்மாள். இரக்கப்பட்டு தன்னுடைய பொதிமாடுகளுள் ஒன்றில் மலுக்கம்மாளை அமர்த்தி நள்ளிக்கு அழைத்து வருகிறார் அந்த வணிகர். 

மூலம்: malukkamma.blogspot.in
அக்கால வழக்கத்தின்படி, பேறு காலத்திற்கான பிரத்யேக குடிசையமைத்து மலுக்கம்மாளை குடியிருக்க வைத்தார் அந்த வணிகர். சில தினங்களில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துவிட்டு இறந்து போனார் மலுக்கம்மாள். அவர் இறப்பதற்கு முன் அவருடைய மகனை வளர்க்கும் பொறுப்பை அந்த வணிகரிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார். வருடங்கள் உருண்டோடின. வளர்ந்த மலுக்கம்மாளின் மகனுக்கு தன்னுடைய மகளையே மணமுடித்து வைத்தார் வணிகர். அந்த இணைக்கு ஏழு மகன்கள் பிறந்தனர். பல்கிப் பெருகிய இவர்களுடைய வழித்தோன்றல்கள் தற்போது மலுக்கம்மாளையும் அந்த வணிகரை கருப்பசாமியாகவும் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.

கோலிவுட் சரிவர பயன்படுத்தாமல் விட்ட திறமைகளில் ஒன்று ப்ரியா சுப்ரமணியனின் குரல். ஒருமாதிரி நம்மை மயக்கத்தில் ஆழ்த்தும் வல்லமை கொண்டவர் ப்ரியா. பொதிகை காலத்தில் இருந்து நான் ப்ரியாவை கவனித்து வருகிறேன். 

அப்போது ஒரு இசைக்குழு பங்கேற்கும் நிகழ்ச்சி (பெயர் துள்ளாத மனமும் துள்ளும் ?). முதல்முறையாக அதில்தான் ப்ரியாவை கண்டேன் / கேட்டேன். அவர் பாடும்போது எனக்கு டி.ஆர்.ராஜகுமாரி நினைவுக்கு வரும். சொக்க வைக்கும் குரல், டி,ஆர்.ரா.வைப் போலவே சொக்க வைக்கும் கண்கள். அதன் பிறகு ஜெயா தொலைக்காட்சியில் சொக்குதே மனம் என்ற நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்து இவர் சினிமாவில் பாடிய முதல் பாடல் பரமசிவன் படத்தில் இடம்பெற்ற ‘ஆசை தோசை...’. இவருடைய முதல் பாடல் ஒரு தரைக்குத்து பாடலாக அமைந்தது ஒரு துரதிர்ஷ்டம். அடுத்து பெரியார் படத்தில் ‘இடை தழுவிக்கொள்ள...’ பாடினார். (இதன் காணொளி இணையத்தில் கிடைக்காதது பெரும்சோகம்). இந்தப்பாடலும் மக்கள் பார்க்க விரும்பாத ஒரு படத்தில் போய் சிக்கிக்கொண்டது. (இரு பாடல்களிலும் நடித்தவர் ரகஸ்யா என்பது ஒத்திசைவு). கோ படத்தில் இடம்பெற்ற ‘அகநக...’ பாடலில் இடையே வரும் தெலுங்கு பிட்டை பாடியவர் ப்ரியா தான். சமீபத்தில் என்னை அறிந்தால் படத்தில் மாயா பஸார் பாடலின் ஒரு பகுதியை பாடியிருக்கிறார். தற்போது ப்ரியாவுக்கு ஒரு நாற்பது வயதிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன்பே சினிமாவில் கோலோச்சியிருக்க வேண்டியவர் ப்ரியா. இப்போதும் தமிழ் சினிமா இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் மனது வைத்தால் ப்ரியாவை கவனிக்கலாம்.

கொஞ்ச நாட்களுக்கு முன் மீனாவைப் பற்றி எழுதியிருந்தேன். மீனாவைப் போன்ற இன்னொரு மேஜிக் தேவயானி. முதலில் கிளாமராக நடிக்கும் எண்ணத்தில் சினிமாவுக்கு வந்தவர் தேவயானி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காலப்போக்கில் காதல் கோட்டை, சூர்ய வம்சம் போன்ற அவரது படங்கள் வெற்றி பெற்று அந்த தன்மையை மாற்றியிருக்கக்கூடும். கதாநாயகிகளை பொறுத்தவரையில் இம்மாதிரி அரிதான ஆட்களை இனம் காணும் சேவையை நீண்டகாலமாக செய்து வருகிறார் கமல்ஹாசன். கமல் இல்லாவிட்டால் வசுந்தரா தாஸ், அபிராமி போன்ற நடிகைகள் எல்லாம் நமக்கு கிடைக்காமலே போயிருப்பார்கள். தெனாலியில் இடம்பெற்ற அத்தினி சித்தினி பாடலை கவனியுங்கள். 

குறிப்பாக தேவயானி, ஜோதிகா இருவரும் தாவணியில் வரும் பகுதி. இதைப்பார்த்த பல அறிஞர்கள் ஜோதிகாவை விட தேவயானிக்கு தான் கிளாமர் அதிகம் என ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

Ponmahes said...

மலுக்கம்மாள் பற்றிய பதிவு அருமை.....தம்பி..
வாழ்த்துகள்...............

Niroash Gnanachelvam said...

அருமை!
http://niroashg.blogspot.com