Showing posts with label devan. Show all posts
Showing posts with label devan. Show all posts

15 February 2015

அனேகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

அனேகனை பொறுத்தவரையில் முதல் ஈர்ப்பு தங்கமாரி பாடல். தனுஷுக்கு மட்டும் எப்படி சென்சேஷனல் ஹிட்ஸ் அமைகின்றன ? அதற்காக படம் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை, சில நாட்கள் முன்பு வரை. ட்ரைலரை பார்த்தால் ஏதோ ஃபேண்டஸி இத்யாதிகள் இருக்கும் போல தோன்றியது. அங்கே தான் சரண்டர் ஆகிவிட்டேன்.

வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறும் (ஒரே ஜோடியின்) காதல் கதைகள். காதல் என்றதும் எல்லா படங்களிலும் செய்வது தானே என்று சலித்துக்கொள்ள வேண்டாம். இது வேற லெவல். என்னைக் கேட்டால் இங்கேயே நிறுத்திக்கொண்டு திரையரங்கிற்கு செல்வது உத்தமம் என்பேன். மற்றவர்கள் தொடர்க.

தனுஷுக்கு தன்னுடைய பன்திறனை வெளிப்படுத்தக்கூடிய அட்டகாசமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜஸ்ட் லைக் தட் அஸால்ட் பண்ணியிருக்கிறார். குறிப்பாக காளி கதாபாத்திரம்.

அமைராவை முதலில் பார்க்கும்போது சவசவ என்று ஒரு மாதிரியாக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஒரு அழகான குழந்தை போல நம் மடியில் வந்து சமத்தாக அமர்ந்துகொள்கிறார்.

அமைராவை விடுங்கள். ஐஸ்வர்யா என்று ஒருவர் நடித்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் ‘தேவன் மகிமை’ என்பார்களே, அது என்னவென்று உணர்ந்துகொண்டேன். முன்னவர் சாத்வீகம் என்றால் இவர் ப்ரச்சோதகம். சங்க இலக்கிய வர்ணனைகளுக்கு ஒப்பான புருவங்கள், கூரான மூக்கு, வரைந்து வைத்த ஓவியம் போன்ற வசீகரமான முகம். தென்னக சினிமாவுக்கு ஒரு பிபாஷா கிடைத்துவிட்டார்.

கார்த்திக் ஒரு MNCயின் பாஸ் என்கிற வகையில் தோரணையாக நடித்திருக்கிறார், ஆனால் வில்லனாக கொஞ்சம் கடுப்படிக்கவே செய்கிறார். ஜகன் போன்ற ஆட்களை ஏனோ தமிழ் சினிமா தொடர்ந்து வீணடிக்கிறது. சும்மா உல்லுல்லாயிக்கு இரண்டு பழைய வில்லன் நடிகர்கள்.

அனேகனுடைய பெரும்பான்மையான பாராட்டுகள் சுபாவிற்கு. குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் கதையை வில்லென வளைத்திருக்கிறார்கள். எவ்வளவு டீடெயிலிங் ? அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். வருடத்தின் துவக்கத்திலேயே சுபாவிடமிருந்து இரண்டு அட்டகாசமான கதைகள் வந்திருக்கின்றன. இன்னும் நிறைய வர வேண்டும் என்கிற ஆர்வம் எழுகிறது.

தங்கமாரி பாடல் பார்வையாளர்களை ஒரு தெய்வீகநிலைக்கு அழைத்துச் செல்கிறது. அனேக மக்கள் இந்த ஒரு பாடலுக்காகவே திரையரங்கிற்கு வருகிறார்கள். கொண்டாடுகிறார்கள். உண்மையில் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படி தரைக்குத்து பாடலை இசைத்திருப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. எனக்கென்னவோ இது மரணகானா விஜிக்கு போகவேண்டிய க்ரெடிட்ஸ் என்று தோன்றுகிறது. கூடவே பாடலை பாடிய மற்றவர்களுக்கும், எழுதியவர்களுக்கும். எல்லா பாடல்களும் தரமாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஆத்தாடி ஆத்தாடி பாடலில் பவதாரணியின் குரல் இதமளிக்கிறது. ஒரு தெளிவான நீரோடையை போல நிதானமாக இருக்கிறது தெய்வங்கள் இங்கே பாடல். அது மட்டுமில்லாமல் விஷுவலில் விர்ச்சுவலாக பர்மாவை பார்த்த பரவசம் கிடைக்கிறது. YOLO பாடல் வேறு வகையான விஷுவல் பரவசம். ஒன்றிரண்டு ஷாட்டுகளில் வந்தால் கூட ஐஸ்வர்யாவின் விளைவுகள் செம ஹாட்.

முதலில் படத்தின் குறைகள். பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் தர்க்க ரீதியாக நிறைய கேள்விகள் எழுப்பலாம் தான். ஃபேண்டஸி படம் என்பதால் அவற்றைப் பற்றி பெரிதாக கவலைப்பட தேவை இல்லை. ஆனால், படம் முடிந்தபிறகு எதற்காக அய்யா ஒரு அரை மணிநேர க்ளைமாக்ஸ். அப்புறம், அந்த கத்தி சொருகும் காட்சி உச்சக்கட்ட பேத்தல்.

சமீப படங்களில் டுஸ்டுகள் எளிதில் யூகிக்கக்கூடிய வண்ணம் இருந்தது இல்லையா ? அந்த விஷயத்தில் அனேகன் ஆறுதலாக இருக்கிறது. குருஜி கொடுத்த டேப்லட், ஒரு கையை பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்திருக்கும் மாமா கேரக்டர் என்று நம்மை சாமர்த்தியமாக திசை திருப்பிவிட்டு டுஸ்டு கொடுத்திருக்கிறார்கள்.

புனைவு என்ற வார்த்தைக்கு ஒரு அட்டகாசமான உதாரணமாக வெளிவந்திருக்கிறது அனேகன். பர்மாவிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையும் கற்பனையும் கலந்த கச்சிதமான காக்டெயில் அது. அனேகனில் உள்ள ஒரு வசதி. கதையை நமக்கு பிடித்தமான பர்ஸப்ஷனில் புரிந்துக்கொள்ளலாம். மறு ஜென்மம் குறித்த கதையாகவும் நம்பலாம். அல்லது ELOPOMINE என்கிற மாத்திரையால் ஏற்பட்ட மனக்குறைபாடு என்றும் புரிந்துக்கொள்ளலாம். உண்மையில் காளி – கல்யாணி கதை தவிர்த்து மற்றவை (முருகப்பா, இளமாறன்) வெறுமனே கதாநாயகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம். பார்வையாளர்களாக மட்டும் அல்லாமல் கதையில் பங்கெடுத்துக்கொள்ளும் ரசிகர்களுக்கு பல கதவுகளை திறந்து வைத்து காத்திருக்கிறது அனேகன்.

மற்றொரு வசதி, ஒரு தேர்ந்த நாவலில் வருவது போல ஆங்காங்கே குறிப்புகள் கொடுத்துக்கொண்டே போயிருக்கிறார்கள் கதாசிரியர்கள். பர்மா அரசியல், எஸ்.எஸ்.ரஜூலா, மிங்குன் பகோடா (6174 நினைவிருக்கிறதா ?), அமைராவின் டேபிளில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், தலைவாசல் விஜய் வரைந்துக் கொண்டிருக்கும் ஓவியம் இப்படி நிறைய. விருப்பமுள்ளவர்கள் இவற்றை தேடித் தெரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் வெறும் பொழுதுபோக்காகவும் எடுத்துக்கொள்ளலாம். தரை லோக்கல் காட்சிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது காளி எபிசோட்.. ஹை-டெக் ஆட்களுக்கு கேமிங் அலுவலக காட்சிகள். பாடல்கள், ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள், க்ளாஸ், மாஸ். சுருங்கச் சொல்வதென்றால் ஃபுல் மீல்ஸ்.

தமிழில் எல்லாம் இதுமாதிரி படங்கள் வராதா என்று ஏங்குபவர்களுக்கு செமத்தியாக வந்திருக்கிறது அனேகன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 March 2013

சென்னையில் ஒரு நாள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


சென்னையில் ஒரு நாள் - படம் பார்க்கும் ஆவலை பெரிதாக ஏற்படுத்தவில்லை. நண்பர் ஒருவர் டிக்கெட் எடுத்துவிட்டு அழைத்ததால் சென்றேன். சிலசமயங்களில் எதிர்பார்ப்பின்றி பார்க்கும் படங்கள் அதிகம் பிடித்துவிடுகிறது.

சென்னையில் ஒரு இளைஞன் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைகிறான். அதேசமயம், வேலூரில் ஒரு சிறுமிக்கு உடனடியாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். ஒன்றரை மணிநேரத்திற்குள் இதயத்தை கொண்டு செல்லவேண்டிய கட்டாயம். அது எப்படி சாத்தியமானது என்பதை மற்றும் சில கிளைக்கதைகளோடு சொல்லியிருக்கிறார்கள்.


மலையாள ட்ராபிக்கின் மறுபதிப்பு என்பதால் படம் பார்க்கும்போது நியாயமாக நமக்கு ஏற்படவேண்டிய த்ரில் தவறிவிடுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை விட எப்படி நடக்க போகிறது என்ற எண்ணமே மேலிடுகிறது.


பல்முனை பயண திரைக்கதையில் கிட்டத்தட்ட மையப்புள்ளி சேரனுடைய வேடம் என்று நினைக்கிறேன். ஒரே அடியில் பத்து பேரை தூக்கி வீசவில்லை, ஆனால் அப்படியொரு ஹீரோயிசம் சேரனுடைய வேடத்தில். ஆனால் சேரனுடைய நடிப்பு ? திங்கட்கிழமை காலை அலுவலகம் செல்வது போலொரு முகபாவனை. சகல உணர்ச்சிகளுக்கும் அதே தான்.


பூ படத்தில் நடித்த கருவாச்சி பார்வதியா ? பளீரென இருக்கிறார். கதையின் போக்கு அவரை அழவைப்பது துயரம். பிரசன்னாவின் மனைவி வேடத்தில் சினேகாவே நடித்திருக்கலாமே என்று முதலில் தோன்றியது. ஏன் நடிக்கவில்லை என்று படம் பார்த்தபின் தெரிந்துக்கொண்டேன். வெள்ளித்திரை நட்சத்திரமாக பிரகாஷ்ராஜ். அவருடைய மனைவியாக ராதிகா. ராதிகாவின் வேடம் லலிதகுமாரியின் பிரதிபலிப்பாக இருக்கலாம். காவல்துறை அதிகாரியாக சரத்குமார். ஆட்டோகிராப் மல்லிகா, மனோ பாலா, ப்ளேடு தினா, கிருஷ்ணன் பஞ்சு என்று நிறைய நடிகர்களுடன் சில அறிமுகங்கள். யார்றா இவன் என்கிற மாடுலேஷனுடன் ஒரே ஒரு காட்சியில் பாலா சிங் ரசிக்க வைக்கிறார்.


ஒரு தாய் - தந்தை, தன்னுடைய மகனின் காதலியை முதன்முதலாக சந்திக்கும் தருணம் எத்தகைய உணர்வுப்பூர்வமானது. ஆனால் கதையின் சூழ்நிலைப்படி அது அதற்கு எதிர்மறையான தருணமாக அமைந்துவிடுகிறது. அந்த உணர்வை ஜேபியும், லக்ஷ்மி ராமகிருஷ்ணாவும் கண்களில் காட்டிய விதம் அபாரமான நடிப்பு. அடுத்த காட்சியில் காருக்குள் அமர்ந்து மகனுடைய மரணத்தை நினைத்து உடைந்து கதறுவது நடிப்பை கடந்தநிலை. ஒட்டுமொத்த படத்தில் சிறந்த நடிப்பு ஜே.பி லக்ஷ்மி ஜோடியுடையது.


படத்தின் மொத்தக்கதையையும் இருபது நிமிட குறும்படத்தில் சொல்லிவிடக்கூடியது தான். அதை இரண்டு மணிநேர சித்திரமாக சொல்லியிருப்பது முதல் பாதியில் பல இடங்களில் சலிப்பூட்டுகிறது. தவிர, பல காட்சிகளில் செயற்கைத்தனம் இழையோடுகிறது. மிஷன் இஸ் ஆன் என்று சரத்குமார் சொன்னதும் காவல்துறையினர் வெற்றிக்குறி போட்டுக்கொள்வதெல்லாம் டூ மச். ஜிந்தா காலனிஎபிசோடு முழுவதும் உச்சக்கட்ட சினிமாத்தனம். மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்; ராதிகா அவரது கணவரின் பொறுப்பற்ற தன்மையை அழுத்தம் திருத்தமாக கடிந்துக்கொள்கிறார்; அழுது அரற்றியிருக்க வேண்டாமா ?


படத்தின் இறுதியில் இனியா - பிரசன்னா ஜோடியின் மனமுடிவை சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்துக்கொள்கிறார்கள் என்பது வரைக்கும் மட்டுமே புரிகிறது. இனியாவும் பிரசன்னாவின் நண்பரும் சேர்ந்து பிரசன்னாவிற்கு சின்ன ஷாக் கொடுப்பதற்காக விளையாடினார்கள்; அதை புரிந்துக்கொள்ளாமல் பிரசன்னா அவரசப்பட்டுவிட்டார் என்று வைத்திருந்தால் பெண்மைக்கு பொடலங்காய் கூட்டு வைத்து பெருமை சேர்த்திருக்கலாம். போலவே, பிரகாஷ்ராஜ் அவருடைய மனைவி, மகளை புரிந்துக்கொண்டாரா ? சேரனுக்கு மீடியாவின் கவனத்தை தாண்டி வேறென்ன பெருமைகள் கிடைத்தன ? முதலில் மகனின் இதயத்தை தர மறுத்த ஜேபி - லக்ஷ்மி தம்பதி இன்னொரு உயிர் காப்பாற்ற பட்டதை நினைத்து எப்படி உணர்ந்தார்கள் ? என்று பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் நிறைய இருந்தும் அவசர அவசரமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.


திரையரங்கை விட்டு வெளியே வந்தபிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ நல்ல படமாகவே தோன்றுகிறது. பெண் வாகன ஓட்டிகளுக்கு தரவேண்டிய மரியாதை, தன்னுடைய மகன் தன் உதவியின்றி தானே காலூன்றி எழ விரும்பும் தந்தையின் மனப்பான்மை, தன்னுடைய தவறை உணர்ந்து கலங்கும் போக்குவரத்து காவலாளி, புகழ் போதையில் மயங்கிக்கிடக்கும் நடிகர், எந்த ஒரு செயலையும் முடியும் என்று நினைக்கவேண்டிய தன்னம்பிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய மகன் உயிரைப் போல இன்னொரு பெற்றோருக்கு அவர்களுடைய மகள் உயிர் எவ்வளவு முக்கியம் என்கிற புரிந்துக்கொள்ளுணர்வுடன் கூடிய தியாகம் என்று படம் முழுக்க நெகிழ்ச்சிகளின் குவியலாகவும், கலியுக மனிதர்களுக்கு பாடமெடுக்கும் வகுப்பறையாகவும் விளங்குகிறது. பொழுதுபோக்கு படம் என்கிற வகையில் அந்த தரப்பினரையும் திருப்திப்படுத்திவிடுகிறது. இருப்பினும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று உரிமையுடன் கூடிய ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment