10 November 2010

கனவுதுரத்தி குறிப்புகள் - பதிவுலகில் புதுமுயற்சி

வணக்கம் மக்களே...

பதிவுலகில் இதுவரை யாரும் முயற்சி செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். சிலருக்கு பிடிக்கலாம் மற்றவர்கள் முட்டாள்தனமாக நினைக்கலாம். எனக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. தூங்கும்போது கனவுகள் ஏதேனும் வந்தால் உடனடியாக நோட்டையும் பேனாவையும் எடுத்து அந்த கனவை எழுதிவிடுவேன். ஆனால் எல்லாக் கனவுகளையும் இதுபோல எழுத முடிவதில்லை. பெரும்பாலான கனவுகள் எழுந்து நோட்டு பேனாவை எடுப்பதற்குள் மறந்துவிடுகின்றன. பெரும்பலான கனவுகளை நோட்டில் எல்லாம் எழுதி வைக்க முடிவதில்லை. மேற்கண்ட இரண்டு தடைகளையும் தகர்த்து எறிந்த கனவு ஒன்றினை இந்தப் பதிவில் புனைவுகள் ஏதுமின்றி கண்டதை கண்டபடி எழுதுகிறேன். பிடித்திருந்தால் தொடர்ந்து இதுபோல பல விசித்திர கனவுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

கனவு கண்ட தேதி: ஜூலை 4, 2010
கனவு கண்ட நேரம்: காலை 10.30 (!!!)

நேற்றிரவு நைட் ஷிப்ட் செய்துவிட்டு வந்து படுத்தபோது கண்களுக்குள் நுழைந்த சின்னஞ்சிறிய கனவு. ஆனாலும் ரொம்ப பவர்புல்லான கனவு. கெட்ட கனவாகவே இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஷங்கர் படம் போல மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.


கனவில், மணி அப்போது தோராயமாக இரவு 8 இருக்கும். ஒரு வயல்வெளி போன்ற நிலத்தில் நானும் என் தங்கையும் கைகளை கோர்த்தபடி நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னும் பின்னும் சில மனிதர்கள் தென்பட்டனர். அப்போது ஒரு மிகப்பெரிய ஜெட் விமானம் அபரிமிதமான நெருப்பை கக்கிக்கொண்டு வானில் பல்டியடிப்பதும் செங்குத்தாக பரப்பதுமாக பல சாகசங்களை நிகழ்த்திய வண்ணம் இருந்தது. அது சக்திமான் தொடரில் காட்டப்படும் வேற்றுக்கிரக மனிதர்களின் விண்கலம் போல இருந்தது என்றும் சொல்லலாம். அது தரைமட்டத்திற்கு மிகவும் அருகில், அதே சமயம் எங்கள் தலைக்கு நேரே அல்லாமல் சில கிலோமீட்டர்கள் தள்ளியே பறந்தது. திடீரென அந்த ஜெட் விமானம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழுவது போல தெரிந்தது. நாங்கள் சற்று தொலைவில் இருந்தாலும் அவ்வளவு பெரிய விண்கலம் விழுந்தால் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர முடிந்தது. பேரழிவு வரப்போகிறது என்று உணர்ந்த போதிலும் என் மனம் அந்த பிரம்மாண்டமான காட்சியை ரசித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் எப்படியாவது தங்கையை மட்டும் காப்பாற்றி விட வேண்டுமென துடித்தேன். அந்த வயல்வெளியில் ஓடினாலும் பயனில்லை என்ற காரணத்தினால் நாங்கள் அசையாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தோம். சில நொடிகளில் பலமான சத்தத்தோடு அந்த விண்கலம் தரையில் விழுந்து அதன் சுற்றுவட்டாரத்தை நாசமாக்கியது. நல்லவேளையாக அதன் தாக்கம் எங்களை நெருங்கவில்லை. கீழே விழுந்த விண்கலம் அத்தோடு நில்லாமல் பூமியில் இருந்த கார், பஸ், லாரி போன்ற வாகனங்களை எல்லாம் தூக்கி வீசிக்கொண்டிருந்தது. வானத்தில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் போல ஏதோ வெடித்துக்கொண்டிருக்கின்றன. அப்படியே வயல்வெளியில் அண்ணாந்து படுத்துக்கொண்டு வானத்தில் நடக்கும் வேடிக்கைகளை ரசிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்குள்ளாக கனவு கலைந்துவிட்டது.

இந்தப் பதிவிற்கு நீங்கள் பெரும் வரவேற்பை கொடுப்பீர்கள் என்ற...
கனவுகளுடன்,
N.R.PRABHAKARAN

 பி.கு: நண்பர் எஸ்.கே எனது இந்தக் கனவிற்கு பின்னூட்டம் மூலமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும் அவர் கொடுத்துள்ள விளக்கம் ஏறத்தாழ நூறு சதவிகிதம் சரியாக இருப்பதால் அவரது விளக்கத்தை இந்த இடுகையில் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்...

பிற்சேர்க்கை:
எஸ்.கே:
நண்பரே...!
எனக்கு தெரிந்தவரை உங்கள் கனவை விளக்குகிறேன்...

வயல்வெளி பாதுகாப்பான / வசதியான இடத்தை குறிக்கிறது.
ஜெட் / விண்கலம் நீங்கள் தனியாக செயல்பட விரும்புவதை குறிக்கிறது. புதிய வழிகளில் நீங்கள் செயல்பட விரும்புவதை குறிக்கிறது. ஆனால் அது விபத்துக்குள்ளாகிறது. அப்படியானால் நீங்கள் தனியாக செயல்பட சுதந்திரம் கிடைக்கவில்லை. மேலும் அதனால் பிரச்சினைகள் உண்டாகிறது. அல்லது இது உங்கள் வாழ்வில் உங்களை சார்ந்தவர்களின் வாழ்வில் எதிர்மறையான மாற்றங்களை குறிக்கிறது. ஆனால் நீங்கள் விபத்தை ரசிக்கிறீர்கள். உள்மனது பிரச்சினைகளானாலும் பரவாயில்லை எண்ணம்போல் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது.

இதில் விபத்து நிகழ்கிறது. மேலும் உடன் பிறந்தவரை காப்பாற்ற விரும்புகிறீர்கள். மரணம் மீதுள்ள பயம் மற்றும் உடன்பிறந்தவர் மீதுள்ள அக்கறையை குறிக்கிறது.

உங்கள் வாழ்வில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் / முடிவுகள் குறித்து யோசியுங்கள். மேலும் உடன்பிறந்தவர்களிடன் அன்போடு இருங்கள். நிச்சயம் தெளிவு பிறக்கும். இக்கனவு / இதைப் போன்ற கனவு மீண்டும் வந்தால் தெரிவிக்கவும்.

Post Comment

8 November 2010

வ குவாட்டர் கட்டிங் – மப்பேறாத பிராந்தி

வணக்கம் மக்களே...

என்னுடைய தற்போதைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம் வாசகர்களாகிய நீங்கள் தான். இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய மைனா படத்திற்கு உங்களது பேராதரவை கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றிகள். 
மேலும் வாக்களிக்க விரும்பினால் இந்த இணைப்பை சொடுக்கவும்...

திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில் கேபிள் சங்கர் எவ்வளவு பெரிய கில்லாடி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இவ்வாறாக நான் எழுதிய மைனா விமர்சனம் அவர் எழுதியதை விட இன்ட்லியில் சில வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்துக்கொண்டிருக்கிறது. இது எப்படி நடந்தது..? எதுவும் தொழில்நுட்பக் கோளாறா என்று தெரியவில்லை. எனினும் இதனால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன். மேலும் எனது மைனா விமர்சனத்திற்கு கேபிள் அண்ணன் வந்து பின்னூட்டம் போட்டு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் பதிவிற்கும் இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு நான் மகான் அல்ல படம் பார்க்க சென்றிருந்தபோது இந்தப் படத்தின் ட்ரைலரையும் காட்டினார்கள். அப்போதே இந்தப் படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன். அப்படி ஒரு எதிர்பார்ப்பு. ஆனால் உடன் வரத் துணை கிடைக்காததால் நேற்றுதான் படத்தைப் பார்த்தேன். சுவாரஸ்யம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக யாருடைய விமர்சனத்தையும் படிக்காமல் தியேட்டருக்கு சென்றேன். ஆனால் அதுவே எனக்கு ஆப்பாக அமையும் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

வழக்கமாக நான் படம் பார்க்கும் சில தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை அல்லது டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே சென்னை மெலோடி திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருந்தேன். திரையரங்கைப் பற்றி சில வரிகள். வழக்கமாக இங்கே ஹிந்தி திரைப்படங்கள் தான் வெளியாகும். நீண்ட நாட்களுக்குப்பின்பு தமிழ் படமான எந்திரன் வெளியானது. இப்போது இந்தப் படம். இனி அவர்கள் நிச்சயம் தமிழ் படங்களை திரையிட மாட்டார்கள் என்பது இந்தப் பதிவை படித்து முடிக்கும்போது உங்களுக்கும் புரியும். பெரிய திரையரங்கு என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் திரையரங்கும் சீட் தரமும் சுமாராகவே இருந்தது. ஆனால் கேண்டீன் மட்டும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது. வழக்கமாக திரையரங்குகளில் கிடைக்கும் உணவுப்பொருட்களுடன் கோல்ட் காபி, மேங்கோ ஜூஸ், ப்ளாக் பாரஸ்ட் போன்ற வித்தியாசமான உணவுப்பொருட்கள் கிடைத்தன. விலையும் மற்ற திரையரங்குகளோடு ஒப்பிட்டு பார்த்தால் குறைவுதான். இனி மெயின் பிக்சருக்கு போகலாம்.

கதை...???
அலன் ஸோலிக்கு போய் ஆடிக்கழிவு கேட்டால் எப்படி பாஸ். கதை அப்படியெல்லாம் படத்தில் ஒரு டேஷும் கிடையாது. இருப்பினும் இயக்குனர் கதை என்று சொல்ல நினைத்திருப்பது என்னவென்றால்... கோயம்புத்தூரை சேர்ந்த இளைஞன் சிவா வேலைதேடி துபாய்க்கு செல்ல இருக்கிறார். சிவாவின் அக்காவுடைய வருங்கால கணவராக சரண். இவர்கள் இருவர்தான் முக்கிய பாத்திரங்கள். மறுநாள் அதிகாலை சிவா துபாய்க்கு செல்ல தயாராக இருக்க துபாயில் தண்ணி அடிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை (!!!) என்று அவருக்கு தெரிய வருகிறது. இதனால் மனம் நொந்துப்போன சிவா கடைசியாக ஒரு முறை குவாட்டர் அடிக்க விரும்புகிறார். ஆனால் அது தேர்தலுக்கு முந்தைய நாள் என்பதால் குவாட்டர் எங்கேயும் கிடைக்கவில்லை. விடிய விடிய சிவாவும் சரணும் குவாட்டர் தேடி அலைகிறார்கள். கடைசியில் அவர்களுக்கு குவாட்டர் கிடைத்ததா இல்லையா என்பதே மீதிக்கதை. இது தவிர நிறைய சைட் டிஷ்களும் உள்ளன.

படத்தில் ஆங்காங்கே தமிழ்ப்படம், சரோஜா படங்களின் சாயல் தெரிகிறது. தவிர குயிக் கன் முருகனை அதிகமாக நினைவுப்படுத்துகிறது. படத்தில் சரோஜா படத்தில் வருவது போல டைம்லைன் போட்டிருக்கலாம். காட்சிகள் எத்தனை மணிக்கு நடைபெறுகிறது என்பதே புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒரு காட்சியில் நள்ளிரவில் நடப்பது போல தெரிகிறது. அடுத்த காட்சியிலேயே ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடுவது போலவும் காட்டுகிறார்கள்.

கதாபாத்திரங்கள்
- சுறா (எ) சுந்தர்ராஜனாக மிர்ச்சி சிவா வழக்கம் போல மொக்கை போட்டிருக்கிறார். ஆனால் வழக்கமாக இவர் போடக்கூடிய மொக்கைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். இந்த முறை போட்டது மரண மொக்கை. ரசிக்க முடியவில்லை.
- மார்தாண்டன் என்ற பாத்திரத்தில் சரண். சரோஜாவில் பார்த்த அதே கேரக்டர் என்று சொல்லலாம். சிவாவின் அக்காவிற்காக சிவா பண்ணும் அலப்பறைகளை எல்லாம் பொறுத்துக்கொள்கிறார்.
- சரோ (எ) சரஸ்வதியாக லேகா. வழக்கமான தமிழ் சினிமா லூசுப்பென்களை விட ஒரு நூறு மடங்கு அதிகமான லூசு.
- கிங், பரட்டை பிரின்ஸ் என்று இரட்டை வேடங்களில் பிரின்ஸ் விஜய். கிங் கதாப்பாத்திரத்தில் எம்.ஆர்.ராதா போல மிமிக்ரி செய்து நடித்திருக்கிறார். பிரின்ஸ் கதாப்பாத்திரம் அவனா நீ...? வகையறா பாத்திரம். ஆனாலும் தியேட்டர் வாசலில் ஜான் விஜய்க்கு பேனர் வைத்திருந்ததெல்லாம் ரொம்ப ரொம்ப டூ மச்.
- இது தவிர கிரெய்க், கல்யான், அபிநயஸ்ரீ, மாணிக்க விநாயகம் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லோருக்குமே மொக்கை போடுவது ஒன்றுதான் வேலை. ஒரே ஒரு காட்சியில் ஆர்யா.

பாடல்கள்
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார். எல்லாப் பாடல்களும் ஏதோ சேட் வீட்டு கல்யாணத்தில் கேட்ட பாடலைப் போலவே இருக்கிறது. ஆனால் பாடல்களை கண்களுக்கு குளிர்ச்சியான விதத்தில் காட்சியாக்கி இருக்கிறார்கள். உன்னைக் கண் தேடுதே... பாடல் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. சவூதி பாஷா... பாடலும் சார்ப்பு சார்ப்பு ஜி... பாடலும் சுமார் ரகம்.

இயக்குனர்கள்
எப்படி இந்த மாதிரியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்று தெரியவில்லை. இயக்குனர் இணைக்கு எக்கச்சக்கச்சக்கமான கிரியேட்டிவிட்டி. பெயர் போடுவதில் ஆரம்பித்து படம் முடியும்வரையில் கிரியேட்டிவிட்டி கொட்டி கிடக்கிறது. உதாரணத்திற்கு படத்தில் லைட்டிங், கலர் செலேக்ஷன். கேரக்டர்களுக்கு பெயர் வைப்பதில் கூட வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அத்தனையையும் வீணடித்திருக்கிறார்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து எப்படி கெட்ட கெட்ட வார்த்தைகளை எல்லாம் வசனங்களாக எழுதுகிறார்களோ...? இதோடு இவர்கள் படம் எடுப்பதை நிறுத்திவிட்டு விளம்பர படங்களை எடுக்கலாம். ஏனெனில் ஒரு அரை நிமிடக்காட்சியில் மனதை கவர்பவர்கள், இரண்டரை மணிநேர படத்தில் சொதப்பிவிடுகிறார்கள்.

எனக்குப் பிடித்த காட்சி
எவ்வளவோ யோசித்து பார்த்தேன். ஆனால் அப்படி எந்தவொரு காட்சியும் படத்தில் இல்லை. ஆங்காங்கே வசனங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தன. ஜான் விஜய் எம்.ஆர்.ராதா போல இமிடேட் செய்தது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது ஆனால் எனக்குப் பிடித்திருந்தது. குவாட்டர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் வசனங்களும் குபீர் சிரிப்பை வரவழைத்து. ஆனால் குவாட்டரின் அருமை தெரியாதவர்களுக்கு அவை எரிச்சலையே ஏற்படுத்தும்.

தீர்ப்பு
படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகள் ரசிக்கும் விதமாக இருந்தது. ஆனால் போகப்போக மொக்கையின் அளவு ஓவராகி விட்டது. தெரிந்தும் தெரியாமலும் கூட தியேட்டர் பக்கம் போய்விட வேண்டாம். 70 ரூபாய் கொடுத்து இந்தப் படத்தை பார்த்ததற்கு ஒரு குவாட்டர் அடித்துவிட்டு மட்டையாகி இருந்திருக்கலாம்.

மப்பேறாத பிராந்தி
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment