23 November 2020

வர்கலா – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

ஒரு திரைப்படமோ, ஒரு புத்தகமோ மனதுக்கு பிடித்துவிட்டால் அதன் இயக்குநரின் / எழுத்தாளரின் மற்ற படைப்புகளை தேடுவோமில்லையா. அது போல கோவா சென்றுவந்த பிறகு இந்தியாவில் கோவாவைப் போல என்னென்ன ஐட்டங்கள் இருக்கின்றன என்று தேடத் துவங்கினேன். அத்தேடல்கள் அனைத்தும் இரண்டு ஊர்களை மீண்டும் மீண்டும் பரிந்துரைத்துக் கொண்டே இருந்தன. 


ஆம், கோவாவிற்கு இரண்டு தங்கைகள். ஒன்று, கோகர்னா. மற்றொன்று வர்கலா ! 

இரண்டில் ஒன்று என்றெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்ளவில்லை. இரண்டும் வேண்டும். ஆனால் எது முதலில் என்ற கேள்வி வந்தபோது இரண்டு அங்குலம் முன்னால் வந்து நின்றது வர்கலா. ஏனெனில் அது கேரளா ! மென்சோகம் இழையோடும் சாலைகள், இருமருங்கே நீண்டு வளர்ந்த தென்னைகள், கட்டஞ்சாயா, கள்ளு, பீஃப் கறி இவையெல்லாம் தாண்டி கேரளா என்பது ஒரு உணர்வு !

வர்கலா செழிப்பான கடற்கரை ஸ்தலம் மட்டுமில்லாமல் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமும் கூட. அரபிக்கடலின் முத்து, தென்னகத்து காசி போன்றவை வர்கலா பெற்ற பெயர்கள். பாண்டிய மன்னனின் பாவம் போக பிரம்மன் கோவில் கட்டச் சொன்ன இடம், நாரதர் வீசிய வல்கலம் (மரப்பட்டை) வந்து விழுந்த இடம் என்று புராணமும் அதன் பங்குக்கு வர்கலா பற்றி கதைகள் சொல்கின்றன. இங்குள்ள அஞ்செங்கோ (அஞ்சு தேங்காய் என்பதின் வழுவல்) கோட்டை பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயே அரசால் நிர்மாணிக்கப்பட்டது. அரசுக்கு பாதுகாப்பு அரணாகவும், அதே சமயம் வணிகப் தொடர்புக்கு பயன்படுபவதாகவும் இருந்திருக்கிறது இந்தக் கோட்டை. ஆன்மிகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு வர்கலாவைச் சேர்ந்தவர். இவர் அமைத்த சிவகிரி மடம் இன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.
 
எனது இந்தப் பயணம் ஒரு சோலோ பயணம். Solo travel / traveller என்கிற சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களாக தனிப்பயணம் / தனிப்பயணி என்பவற்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் கவிஞர் மனுஷி. இனி நாமும் அவற்றையே பயன்படுத்துவோம். சில தவிர்க்க முடியாத / எழுத்தில் கொண்டு வர முடியாத காரணங்களுக்காக எனது பயணத்துணைகள் என்னோடு தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அதனால் நான் தனிப்பயணியானேன் ! 

உண்மையில் தனிப்பயணங்களில் சம அளவில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. சாதகங்களில் பிரதானமானது - சர்வாதிகாரம். அந்த இடத்திற்கு போனால் எனக்கு சளி பிடித்துவிடும், அவ்வளவு தூரம் உட்கார்ந்து வர முடியாது – எனக்கு பைல்ஸ், அலுவலகத்தில் லீவ் தர மாட்டார்கள் (பொய்), அந்த தேதியில் தான் வீட்டில் தலுவை போடுகிறார்கள் போன்ற விவாதங்களுக்கு வேலையில்லை. உங்கள் தேதி, உங்கள் தேர்வு. நீங்கள் திருமணமாகாதவர் என்றால் உங்கள் மேனேஜர் ஒருவரை மட்டும் சமாளித்தால் போதும், திருமணமானவர்களுக்கு இரண்டு. அவ்வளவுதான் ! 

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், சுயமறிதல் போன்ற சில சாதகங்களும் தனிப்பயணங்களில் உண்டு. இவை தவிர, தனிப் பயணங்களில் புது நண்பர்கள் கிடைப்பார்கள் என்பது பொது நம்பிக்கை. Introvert என்பதால் அதுகுறித்த கள நிலவரத்தை என்னால் கண்டறிய முடியவில்லை. 

பாதகங்களில் பிரதானம் ஒரு நல்ல புகைப்படம் எடுத்துத் தரக்கூட யாரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான். நம்முடன் நண்பர்கள் இருக்கும்போது கிடைக்கக்கூடிய ஒரு கூடுதல் தைரியம் தனிப்பயணங்களில் சாத்தியமில்லை. மாலை வேளைகளில் ஒருவிதமான வெறுமையுணர்வு தோன்றும்.

இன்னும் case specific சாதக பாதகங்களை இத்தொடரின் இடையிடையே தெரிந்துகொள்வீர்கள். 

திருவனந்தபுரம் மெயில்

தரை மற்றும் வான் மார்க்கங்களில் மிக எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது வர்கலா. சென்னை மத்திய ரயில் நிலையத்திலிருந்து வர்கலாவிற்கு தினசரி ரயில் செல்கிறது (திருவனந்தபுரம் மெயில் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்). எக்மோரிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வர்கலா ரயில் நிலையத்திலிருந்து சில கி.மீ. தூரத்தில் சுற்றுலா தளத்தின் மத்திய பகுதி. ஆட்டோவில் நூறு ரூபாய். ஒருவேளை வர்கலா ரயில் நிலையம் சாத்தியமில்லை என்றால் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ, திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஐம்பது கி.மீ. வான்வழி செல்வதென்றால் ஐம்பது கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம். அங்கிருந்து கேரள அரசு பேருந்துகள் வர்கலாவிற்கு இயக்கப்படுகின்றன. 
 
பழம்பொரி
என்னிடம் கைவசம் நாட்கள் தாராளமாக இருந்ததால், போக வர இரண்டுக்கும் திருவனந்தபுரம் மெயிலில் டிக்கட் எடுத்திருந்தேன். முதல்நாள் இரவு 7:45க்கு சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் சேலம், ஈரோடு, கோயமுத்தூர் வழியாக அதிகாலையில் கேரளா மாநில பாலக்காடு ரயில் நிலையத்தை கடக்கிறது. டீ, காபி, வடையுடன் பழம்பொரியும் விற்கப்படுவது கேரள வருகையை உறுதிப்படுத்துகிறது. அதன்பிறகு ரயிலில் தினசரி பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை 10.50க்கு ரயில் வர்கலாவை சென்றடைகிறது. 

வர்கலா ரயில் நிலையம்
ஆர்ப்பாட்டமில்லாத சிறிய ரயில் நிலையம். அருகிலேயே நான் நீ என்று போட்டி போடாத ஆட்டோ ஸ்டாண்ட். வர்கலா ஹெலிபேட் என்று கேட்டு வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தேன். ரயில் நிலையத்திலிருந்து சரியாக மூன்றரை கி.மீ. வர்கலா ஹெலிபேட் என்பது ஒரு மலை முகட்டில் அமைந்துள்ள பிரம்மாண்டமான சமதளம். ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்குவதற்கான அமைப்பு. அதன் மத்தியில் என்னை இறக்கிவிட்டுச் சென்றார் ஆட்டோ ஓட்டுநர்.   

இருவர் படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜ் மோகன்லாலை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்வார். மெல்ல மொட்டை மாடியின் விளிம்பிற்கு செல்லும் மோகன்லால் கீழே அவருக்காக ஆரவாரம் செய்துக் கொண்டிருக்கும் மக்களைக் காண்பார். அதுபோல நான் அந்த ஹெலிபேடின் மத்திய பகுதியிலிருந்து மலை முகட்டிற்கு மெதுவாக நடந்து செல்கிறேன். 

கீழே வர்கலா கடற்கரையின் பிரம்மாண்டமான எழில்தோற்றம் தோன்றுகிறது. “இருவர்” மோகன்லால் அடைந்ததை விட பரவசமான அனுபவம் அது !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 May 2020

நள்ளிரவின் நடனங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஊரடங்கிற்கு முன் ஒரு மாலைப்பொழுதில், ஒரு பேருந்து பயணத்தில், கிண்டிலில் நள்ளிரவின் நடனங்கள் புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். முதல் கதையே கோவா செல்லும் திருமணமான நான்கு பேச்சுலர்களைப் பற்றியது. இரண்டாவது கதை ஊட்டியில் தொடங்கியது. ஒரு நிமிஷம். இது பயணத்தில் படிப்பதற்கு உகந்த புத்தகம் போலிருக்கிறதே என்று எடுத்து கமுக்கமாக உள்ளே வைத்துக் கொண்டேன்.

அத்துடன் வர்கலாவில் ஒரு சிம்பாவையும், ஒரு பீராவையும் உள்ளே சாத்தியிருந்த ஒரு நள்ளிரவில் நடனங்களைத் தொடங்கினேன்.

மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். எழுத்தாளருடைய சுருக்கமான, அடக்கமான முன்னுரை. வீம்புக்காக ஒரு குழந்தை எழுதிய கதைகள் என்று தனது முன்னுரையில் எழுதியிருக்கிறார் அராத்து. மேலும் முன்னுரையில் புது முயற்சி, தனித்துவம் போன்ற சில குறிச்சொற்களையும் கவனித்தேன்.

வழக்கமாக அராத்துவின் புத்தகங்களில் சாருவின் முன்னுரை இருக்குமில்லையா ! அது இந்த புத்தகத்தில் இல்லை. அதனால் மனதில் எந்த சஞ்சலமும் இல்லாமல் புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க முடிந்தது. 

பெரும்பான்மை கதைகள் நவீன உலகின் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. அப்பர்-மிடில் கிளாஸ் வாழ்க்கை முறையைப் பேசுகிறது. அவ்வளவு கதைகளும் டிராவல் சம்பந்தப்பட்டவை இல்லை என்றாலும் கோவா, ஊட்டி, புவனேஷ்வர், லங்காவி, புக்கட் என்று பயணிக்கின்றன. பயணத்தில் படிப்பதற்கு உகந்த புத்தகம் என்ற கருத்தில் மாற்றமில்லை.

பொதுவாக தமிழ் புனைவுகளில் உவமைகளுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் வைத்திருப்பார்கள். அவற்றை மொத்தமாக காலி செய்து, முற்றிலும் வேறொரு கோணத்தில் உள்ளது அராத்தின் உவமைகள். சில உதாரணங்கள் - தெலுங்கு சினிமாவின் பாடல் காட்சியில் முதல் வரிசையில் ஆடுபவளைப் போல் இருந்த ஒருத்தி – மாபெரும் லேடீஸ் ஹாஸ்டலில் அழகிய இளம்பெண்கள் அனைவரும் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டதைப் போல கூடுதல் பச்சையுடன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன செடிகள்.

அதே போல சின்னச் சின்னச் கிண்டல்கள். வேலைக்காரி, வேலைக்காரி என்று தொடர்ந்து சொல்ல வேண்டாம். பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் ஆசாமிகள் படையெடுப்புக்கு ஆளாக வேண்டி வரும் – ஃபில்டர் காஃபி குடிக்க வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனாலும் கிரீன் டீ. குடித்துக் கொண்டும் புகைத்துக் கொண்டும் இருப்பதால் மற்ற அனைத்திலும் ஹெல்த்தியாக இருந்தாக வேண்டி இருக்கிறது – இலக்கியம் என்றால் டி.ராஜேந்தர் பொண்ணுதானே என்று கேட்கும் அளவுக்கு சமர்த்தனாக தன்னை வளர்த்தெடுத்து இருந்தான். ஒரு சிறுகதைக்குள் குட்டிக்கதையாக வரும் நவ் ஹீன் முழுக்கவே பட்டாசு.

இந்திய நடுத்தர வர்க்க மனோபாவத்தைப் பற்றிய ஒரு மெல்லிய நையாண்டி அராத்துவின் கதைகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. ஒரு இடத்தில் கோவாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் பற்றிய வர்ணனை வருகிறது. எண்பது சதவிகிதம் வெளிநாட்டினரால் நிரம்பி வழியும் ரெஸ்டாரண்ட் அது. ஒவ்வொருவரும் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுதிக்கொண்டே வருகிறார். சில ரஷ்யர்கள் கஞ்சாவோ ஏதோ புகைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கிடார் வாசித்துக்கொண்டிருந்தான். இரண்டு பெண்கள் மினி ஸ்கர்ட்டில் மெலிதாக இடுப்பை ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர் என்று நீளும் அந்த வர்ணனை கடைசியாக ஒரு இந்தியன் ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டு இருந்தான் என்று முடிகிறது.

அதே சிறுகதையில் இன்னொரு இடத்தில் வகதூர் பீச்சில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொப்பைக் கூட்டம் தனியே வாந்தி எடுத்தபடி கிடந்தது. வாந்திக்கு நடுவில் ஒரு தொப்பை கர்ம சிரத்தையாக செந்தமிழ் தேன்மொழியாள் என சீரியஸாக பாடியபடியே ஆடிக்கொண்டிருந்தது என்று வருகிறது.

அராத்துவின் ஒரு சில கதைகளில் ஒரு பிரபல எழுத்தாளரின் சாயல் தெரிவதாக யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென எழுத்தாளரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. ம்ஹும். சார்லஸ் புக்கொவ்ஸ்கி, ழார் பத்தாயெல்லாம் இல்லை. அவர்களை நான் படித்தது இல்லை என்பதால் அராத்து, அவர்களின் சாயலில் எழுதுகிறாரா அல்லது அவர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டாரா என்பது குறித்து என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. நான் கவனித்தது வாமு கோமுவின் சாயல். குறிப்பாக வெடுக் ராஜா, அபாயம் ஆகிய இரண்டு கதைகளும் வாமு கோமு ஸ்டைல். வெடுக் ராஜா கதையை படிக்கும்போது களவாணி விமல் நினைவுக்கு வந்தார்.

இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை எழுத்தாளரின் சொந்த மற்றும் நண்பர்களுடைய அனுபவங்களில் இருந்து எழுதப்பட்டவை என்று உணர முடிகிறது. உறைவிடப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது பற்றிய கதை ஒரு உதாரணம். இன்னொரு கதையில் ஹீரோ ஒரு பீச் ரெசார்ட் பார்ட்டிக்கு போகிறான். அந்தப் பார்ட்டியைப் பற்றி குறிப்பிடுகையில் – கண்டிப்பாக மறக்காமல் அவசியம் தங்களுக்கான மதுவை தாங்களே எடுத்து வாருங்கள் என காலில் விழாத குறையாக அந்தக் குழுவின் அட்மின் பல போஸ்ட்டுகள் மூலம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் என்று எழுதியிருக்கிறார். 

ஆங்காங்கே சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார். அதில் முக்கியமான பரிசோதனை புக்கட் என்கிற சிறுகதை. மல்டிபிள் பர்ஸன் நரேடிவ் முறையில் பயணிக்கிறது இக்கதை. ஒரு தாய்லாந்து லோக்கல் ஆள், ஒரு விலைமகள், ஒரு இந்திய இளைஞன். ஒருவருக்கொருவர் அதிகம் அறிமுகமில்லை. அக்கதையில் ஒரு கட்டம் இப்படிப் போகிறது –

அவளை அழைத்து இந்திய நண்பனிடம் கை காட்டினேன். அவள் இயல்பாக அவனுடன் ஒட்டிக்கொண்டாள். லவ் யூ டார்லிங்க்என்றாள். 

லவ் யூ டார்லிங்க்என்று சொல்லி அவனை இயல்பாக்க முயற்சித்தேன். அவன் இதய துடிப்பை உணர முடிந்தது. அளவுக்கு அதிகமாக இருந்தது. 

லவ் யூ டார்லிங்க்என்று அவள் சொன்னது எனக்கு இதமாக இருந்தது. ஒரு ஒட்டுதல் வந்தது. இவள் அழகாகவும் ஸ்டைலாகவும் இருந்தாள்.

ஒரு சின்ன சம்பவம். அதனை மூவரும் அவரவர் பார்வையில் சொல்கிறார்கள். இக்கதை வாசகர்களுக்கு ஒரு சிறிய சவாலையும், வாசிப்பின்பத்தையும் வழங்குகிறது.

முன்னுரையில் எழுதியிருப்பது போலவே புது முயற்சியும், தனித்துவமும் அராத்துவின் கதைகளில் நிரம்பியிருக்கின்றன. அதே சமயம் ஒருவித அலட்சியமும் தென்படுகிறது. அராத்து தன்னுடைய கதைகளை ரொம்ப கேஷுவலாகவும், சில சமயம் வாய்ஸ் டைப்பிங் மூலம் எழுதுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளன் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது தான். அதே சமயம் எழுத்தாளனுக்கு டிலிஜென்ஸ் மிக மிக அவசியம். எழுத்தாளர் கூடுதலாகக் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இதே புத்தகத்தை இன்னும் மேம்பட்ட வடிவில் தந்திருக்கலாம்.

கடைசியாகத்தான் கவனித்தேன். சாருவின் சுருக்கமான ஒரு முன்னுரை பின்னட்டையில் இருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment