Showing posts with label வர்கலா. Show all posts
Showing posts with label வர்கலா. Show all posts

28 January 2021

வர்கலா – மது மற்றும் சார்ந்தவை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு:
வடக்கு கடற்கரைகள்

வர்கலா கோவாவைப் போலவே இருக்கும் என்று நினைத்து நான் ஏமாற்றமடைந்த விஷயம் மது. 
 
கடற்கரையில், பூல் பெஞ்சில் லீஷராக கால் நீட்டி அமர்ந்தபடி, ரகம் ரகமாக பியர் குடிக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். முதல் அடி, வர்கலாவில் கோவாவில் அமைந்திருப்பது போல கடற்கரைக்கு நெருக்கமாக குடில் உணவகங்கள் இல்லை. (கீழே கடல்; குன்றின் மேலே உணவகங்கள்). இரண்டாவது அடி, பியரின் ரகங்கள். கடந்த பதிவின் இறுதியில் விஜய் சேதுபதி மாடுலேஷனில் ஒரு அண்ணா, “அங்க இருக்குற எல்லா கடைலயும் கிடைக்கும்டா” என்று சொன்னார் என்று முடித்திருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது – அத்தனை கடைகளும் மது விற்க லைசன்ஸ் இல்லாத கடைகள். லைசன்ஸை விட்டுத் தொலையுங்கள். அத்தனை கடைகளிலும் KF தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை. அதை பழைய இங்க்லீஷ் பேப்பரில் சுற்றிக் கொண்டு வந்து மேஜையின் கீழ் வைக்கிறார்கள். கமுக்கமாக குடித்துக்கொள்ள வேண்டும். விலை மட்டும் இரண்டு மடங்கு. இங்கிருந்து மாநிலம் கடந்து போய் அங்கேயும் ஒரு மனிதனுக்கு KF தான் கிடைக்கும், அதையும் அவன் திருட்டுத்தனமாகத்தான் குடிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அவலம்.
 
வர்கலாவில் குடித்த முதல் பியர்
அன்று மாலையே பெவ்கோவிற்கு கிளம்பினேன். Beverages Corporation என்பதின் சுருக்கம்தான் பெவ்கோ. பெவ்கோ என்பது கேரளாவின் டாஸ்மாக். ஆனால் டாஸ்மாக் மாதிரி கலீஜாக இருக்காது. கேரள பெவ்கோக்களில் பார் வசதி கிடையாது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போய்தான் குடிக்க வேண்டும். அதே சமயம் யாரும் அங்கேயே வாங்கி முட்டுச்சந்துகளில் நின்று குடிப்பதில்லை. அப்படியென்றால் கேரளர்கள் எங்கே போய்தான் குடிக்கிறார்கள் ? அநேகமாக, கேரளர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே குடிக்கும் சுதந்திரம் இருக்கும் என்று நினைக்கிறேன். மலையாள சினிமாக்களில் வரும் மது அருந்தும் காட்சிகளைப் பார்க்கும்போது இதனை நம்மால் யூகிக்க முடிகிறது.

வர்கலாவில் ஒரேயொரு பெவ்கோ, டவுன் பகுதியில் உள்ளது. அதாவது கடற்கரை பகுதியில் இருந்து 2 – 3 கி.மீ. வெளியே வர வேண்டும். அங்கே ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அமைந்திருக்கிறது பெவ்கோ. நான் சென்றபோது கீழே படிக்கட்டு வரை வரிசையில் ஆட்கள் நின்றுக்கொண்டிருந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்துக்கொண்டிருக்க, சில பேர் மட்டும் வரிசையில் நிற்காமல் கடந்து சென்றபடி இருந்தனர். அதே சமயம் எனக்கு முன்னால், பின்னால் நின்றிருந்த யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்திருந்து, எனக்கு முன்னால் நின்றிருந்தவரிடம் கேட்டுவிட்டேன். அதாவது அந்த மதுக்கடைக்கு அந்தப்பக்கம் இன்னொரு கதவு இருக்கிறதாம். ப்ரீமியம் செக்ஷன். அங்கே நாமாகவே உள்ளே சென்று நமக்கு வேண்டியதை பார்த்து எடுத்துக்கொள்ளலாமாம். அங்கே செல்கிறவர்கள் தான் எங்களைக் கடந்து அதற்குரிய வரிசையில் போய் நின்றிருக்கிறார்கள். இதைக் கேட்டதும் நான் உடனடியாக அந்த வரிசையில் இருந்து விலகி நாமே பார்த்து எடுத்துக் கொள்ளக்கூடிய பிரிவுக்கு நகர்ந்தேன். நம்முடைய சாதாரண டாஸ்மாக், எலைட் டாஸ்மாக் மாதிரியான வேறுபாடு இது. ப்ரீமியம் செக்ஷனில் குவார்ட்டர் / ஹாஃப் கிடையாது. அதனால் தினசரி மதுப்பிரியர்களின் கூட்டம் சாதாரண பிரிவில் அம்முகிறது. 

பெவ்கோவில் வாங்கியவை
ப்ரீமியம் செக்ஷனில் கூட்டம் குறைவு. வரிசை வேகமாக நகர்கிறது. நான்கு நான்கு பேராக கடைக்குள் அனுப்புகிறார்கள். (நான் சென்றது கோவிட் கட்டுப்பாடுகளுக்கு முந்தைய காலகட்டம்). நம் எலைட்டில் இருப்பது போலவே ஃபுல் பாட்டில்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள். பியர் வைத்திருக்கும் ஃப்ரிட்ஜ் மட்டும் ஒரு ஊழியரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் எது வேண்டும் என்று கேட்கிறோமோ அதை அவர் எடுத்துத் தருகிறார். ப்ரோ கோட் (Bro Code) என்கிற Brut இங்கு கிடைக்கிறது. Brut என்பது பியரையும் வைனையும் கச்சிதமான விகிதத்தில் மிக்ஸ் செய்த பானம். அல்கஹால் அளவு பதினைந்து சதவிகிதம் வரை இருக்கும். அதிலேயே ரியோ என்கிற உள்ளூர் தயாரிப்பும் கிடைக்கிறது. அவை தவிர, பீரா, சிம்பா உட்பட அனைத்து பிரபலமான பியர் வகைகளும் கிடைக்கின்றன.

ஆச்சர்யமாக பில் கவுண்டரில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். நம்புங்கள் அங்கே இருந்த ஊழியர் ஒரு பெண் என்பதால் எனக்கு எந்த நெருடலும் ஏற்படவில்லை. அந்த அறையின் சூழல் அப்படி அமைந்திருந்தது. இதுவே டாஸ்மாக் கவுண்டரில் ஒரு பெண் இருந்தால் அவர் எப்படி நடத்தப்படுவார் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அங்கே அந்தப் பெண்ணிடம் பணம் செலுத்தி பாட்டில்களைப் பெற்றபோது எனக்கு ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரியிடம் ஃபைலில் கையெழுத்து வாங்கியது போலதான் இருந்தது.கடையை விட்டு வெளியேறியதும் ஒரு அலமாரியில் பழைய செய்தித்தாள்கள் வைத்திருக்கிறார்கள். அதை வைத்து பாட்டிலை சுற்றி எடுத்துச் செல்ல வேண்டியதுதான்.

வர்கலா கடற்கரையில் அதிகாரப்பூர்வமாக லைசன்ஸ் பெற்ற பார் ஒன்றே ஒன்று (ஹெலிபேட் அருகே உள்ள SS பார் மற்றும் உணவகம்) மட்டும்தான் உள்ளது. அதுவும் குளிரூட்டப்பட்ட கதவடைத்த பார். அதில் உட்கார்ந்துக் கொண்டு குடிப்பது என்பது சென்னையில் ஈகிள் பாரில் உட்கார்ந்து குடிப்பதற்கு சமம். ஒரு நல்ல விஷயம் அங்குமட்டும் பியரில் மற்ற பிராண்டுகளும், ப்ரோகோடும் கிடைக்கிறது.

கள்ளு விஷயத்திலும் ஏமாற்றம்தான். ஏற்கனவே காந்தளூரில் கள்ளு குடித்து அது மிகவும் பிடித்திருந்ததால் கண்டிப்பாக கள்ளு குடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வர்கலாவில் கள்ளுக்கடைகள் இல்லை. கள்ளு வேண்டுமென்றால் வர்கலாவிலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவில் வெளிச்சக்கடவு என்கிற ஊருக்கு செல்ல வேண்டும். முதலில் நான் என் பயணத்தை ப்ளான் செய்தபோது ஒன்பது கி.மீ. என்பது எனக்கு சாதாரணமாகத் தெரிந்தது. கண்டிப்பாக போக வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். ஆனால் அங்கு சென்ற முதல் நாள் அந்திப் பொழுதில் ஏற்பட்ட திகில் அனுபவத்தின் காரணமாக அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். இங்கிருந்து போகும்போது பிரச்சனையில்லை. மனதில் கள்ளை நினைத்துக்கொண்டே சந்தோஷமாக சைக்கிளை மிதித்துவிடலாம். திரும்பி வருகையில் ? அதனால் கள்ளு திட்டம் கைவிடப்பட்டது. இது தனிப்பயணத்தின் பாதகங்களில் ஒன்று. என்னுடன் துணைக்கு ஒருவர் இருந்திருந்தால் கூட நான் நிச்சயம் கள்ளுக்கடைக்கு சென்றிருப்பேன்.

பீஃப் மோமோஸுடன்

வர்கலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர். அதுவும் லாங்-டெர்ம் பயணிகள். இந்தியர்களுக்கு மேலை நாட்டினர் மீது சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் இரண்டாவது பெரிய மூடநம்பிக்கை – மேலை நாட்டினர் அனைவரும் பணக்காரர்கள் என்று நினைப்பது. நீங்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்துகொண்டு உலகிலேயே மலிவான (லிவிங் காஸ்ட் அடிப்படையில்) நாடு என்று தேடினால் இந்தியா என்று பதில் வரும். பெரும்பாலும் இந்தியாவுக்கு பயணம் வருபவர்கள் இதன் அடிப்படையில் வருபவர்களே. குறிப்பிட வேண்டிய விஷயம் – வர்கலாவிற்கு வரும் மேலைநாட்டினர் யாரும் இவ்வுணவகங்களில் திருட்டு பியர் குடிப்பதை நான் பார்க்கவில்லை. பொதுவாக இவர்கள் ஒரு ஸ்மூத்தியை வாங்கி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் கதை பேசுகிறார்கள். பியரின் மீது இவர்களின் கவனம் இல்லை. அப்படியெனில் இவர்களுடைய அஜெண்டா ? இங்கு வரும் வெளிநாட்டினர் பலர் ரஷ்யர்கள். இவர்கள் அங்குள்ள கடும்குளிரிலிருந்து சிலகாலம் இளைப்பாற இங்கு வந்து சேர்கிறார்கள். இவர்களைக் குறி வைத்து வர்கலாவில் யோகா வகுப்புகள், ஸர்ஃபிங் பயிற்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

இவர்களுடைய போதைக்கு ? கிட்டத்தட்ட கோவாவின் கர்லீஸ் கதைதான். அதைப் பற்றி சற்று விரிவாக அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அடுத்த பதிவு: லாஸ்ட் ஹாஸ்டல்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 December 2020

வர்கலா – வடக்கு கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: ஆதாமிண்ட ஸ்வர்க்கம் 

வர்கலா பயணத்தின் அடுத்த பகுதிக்கு போகும் முன் என் பயணத்துணைகளாக வந்த இரண்டு அஃறிணை நண்பர்களைப் பற்றி குறிப்பிட்டுவிடுகிறேன்.
 
முதல் நண்பன் – சைக்கிள்: எனக்கு பைக் – ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்பதால் பயணத் திட்டத்தின் போது சைக்கிள் வாடகைக்கு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். சில இடங்களில் மெளன்டைன் பைக் என்று சொல்லப்படும் மலையேற்றத்திற்கான சைக்கிள் கிடைத்தது. கியர் வைத்த 21 ஸ்பீட் சைக்கிள் அது. நாளொன்றிற்கு வாடகை முன்னூற்றி ஐம்பது ரூபாய். நான் தேடியதோ மிதித்தால் ஒரே வேகத்தில் போகக் கூடிய சாதாரண சைக்கிள். பின்னர் கூகுள் மேப் வழியாக உன்னிக்கண்ணன் என்பவரிடம் சைக்கிள் வாடகைக்கு கிடைப்பதாக அறிந்தேன். கியர் வைத்தது தான், ஆனாலும் அந்த சைக்கிள் பழையது போல தோன்றியதால் ஒரு அணுக்கம் உண்டானது. தினசரி வாடகை நூற்றி ஐம்பது. வர்கலா சென்றதும் நேராக ஹெலிபேட் போய் இறங்கினேன் இல்லையா. அங்கு முதல் வேலையாக உன்னிக்கண்ணனை சந்தித்து சைக்கிளைப் பெற்றுக்கொண்டேன். உன்னிக்கண்ணன் ஒரு சிறிய ஹோம்ஸ்டே வைத்து நடத்துகிறார். டிராவல்ஸும் நடத்துகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் வாடகை சைக்கிளை பொறுத்தவரையில் அவர் அதனை தொழில்ரீதியாக செய்யவில்லை. அவரது சொந்த பயன்பாட்டிற்காக ஒரே ஒரு சைக்கிள் வைத்திருக்கிறார். அதைத்தான் உபரி சமயங்களில் வாடகைக்கு விடுகிறார். ப்ரொஃபஷனல் இல்லை என்பதால் உன்னிக்கண்ணனின் சைக்கிளில் பெல் இல்லை, பிரேக்கை கோபம் கொண்டு அழுத்தினால் பெருத்த ஒலியுடன் லேசாக வேலை செய்யும். ஆனாலும் எனது தேவைக்கு அது போதுமானதாக இருந்தது.

வாடகை சைக்கிள்
இரண்டாவது நண்பன் – மொபைல் ஸ்டாண்ட்: சுய புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை என்றாலும் ஒரு ட்ரிப் முழுக்க புகைப்படங்கள் எடுக்காமல் இருக்க முடியாது அல்லவா. அது மட்டுமில்லாமல் அரபிக்கடலில் சூரியன் மறைவதை டைம் லாப்ஸ் வீடியோ எல்லாம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இங்கிருந்து போகும்போதே மொபைல் போனுக்கான ட்ரைபாட் ஒன்றை வாங்கியிருந்தேன். அமெச்சூர் பொருள்தான். ஆனாலும் தேவையை பூர்த்தி செய்தது. அமேசானில் கிடைக்கிறது. விலை நானூறு. கூடவே ஒரு சிறிய ப்ளூடூத் ரிமோட்டும் கிடைக்கிறது. போனை ஸ்டாண்டில் செட் செய்துவிட்டு வந்து ரிமோட் பட்டனை அழுத்தினால் புகைப்படம் எடுக்கும். இந்த ட்ரிப் முழுக்க என்னை புகைப்படம் எடுத்துக் கொடுத்தவர் இவர்தான். எதிரில் நண்பர் இருந்து நம்மை புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் கூட நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இவரிடம் அப்படி எந்த தயக்கமும் இல்லை.

வர்கலா பயணத்தை வடக்கு, தெற்கு என்று பிரித்திருந்தேன் அல்லவா. முதலிரண்டு தினங்கள் வடக்கு. விடுதியில் போய் இறங்கி குளித்து முடித்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிய இடம் ஆழியிறக்கம் கடற்கரை. விடுதியின் பின்புறம் தான் கடற்கரை. கிட்டத்தட்ட பிரைவேட் கடற்கரை மாதிரி தான். விடுதியிலிருந்து செங்குத்தாக இறங்கும் படிக்கட்டுகள் வழியாக கடற்கரையை அடைந்துவிடலாம். ஆனால் சாலை வழியாக முக்கால் கி.மீ. நான் சாலை வழியைத் தேர்வு செய்தேன். சரிவான பாதையில் ப்ரேக் இல்லாத என் சைக்கிள் தறிகெட்டு ஓட, ஒரு கட்டத்தில் முதல் நாளே சில்லறை வேண்டாம் என்று இறங்கி தள்ளிக் கொண்டே போய்விட்டேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 1
குன்றின் இறக்கத்தில் கடற்கரை அமைந்திருப்பதால் ஆழியிறக்கம் என்கிற பெயர் அமைந்திருக்கக்கூடும். ஆஃப் பீட் கடற்கரை. அக்கம் பக்கம் ஒரு கடை, ஒரு வீடு எதுவும் கிடையாது. நான் சென்றபோது நான் ஒருவன் மட்டும் கடற்கரையில் மொட்டை வெயிலில் நின்றுக் கொண்டிருந்தேன். டைம் லாப்ஸ் எடுத்துப் பார்க்கும் ஆர்வத்தில் மொபைல் ஸ்டாண்டை செட் செய்தேன். அதற்குள் சில உள்ளூர் சிறுவர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். பருந்துகள் வேறு மிகத் தாழ்வாக பறந்துக் கொண்டிருந்தன. சூழல் எனக்கு ஒரு மாதிரி பதற்றமூட்டுவதாக அமைந்திருந்ததால் அதிக நேரம் அக்கடற்கரையில் செலவிட இயலாமல் கிளம்பினேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 2
அடுத்தது, அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் கடற்கரை. இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும், அஸ்தியை கரைக்கும் பழக்கம் இங்கிருக்கிறது என்று நினைக்கிறேன். கடற்கரையில் பத்தடிக்கு ஒரு பார்ப்பனர் குடை, போர்டு வைத்து கடை போட்டிருக்கிறார்கள். இந்த ப்ராஸஸுக்கு தேவையான துண்டு, வேட்டி, பூஜை சாமான்கள் போன்றவற்றின் விற்பனை ஒரு பக்கம் பரபரவென நடந்துக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் இவற்றையெல்லாம் விநோதமாகப் பார்த்துக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் கடக்கிறார்கள். எனக்கு இதிலெல்லாம் மனம் ஒட்டவில்லை. நான் வர்கலா சென்று இறங்கியதிலிருந்து அந்த நிமிடம் வரை ஒரு மிடறு மது கூட அருந்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 1
பாபநாசம் கடற்கரையை ஒட்டிய சாலையில் வரிசையாக உணவகங்கள் இருந்தன. ஒவ்வொரு உணவகத்தின் வாசலிலும் ஒரு ஸ்டாண்ட் அமைத்து அதில் மெனு புத்தகத்தை வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கிறேன். ஒன்றில் கூட மதுவின் விலைப்பட்டியல் இல்லை. ஒரு உணவகத்தில் கூட மது கிடைக்கும் என்கிற அறிவிப்பு இல்லை. அதிலும் ஒரு உணவகத்தின் மெனுவில் காழ்ப்புணர்வை தூண்டும் வகையில் “ஹாட் ட்ரிங்க்ஸ்” என்று காஃபி, டீ, பூஸ்ட், ராகிமால்ட் போன்றவற்றை பட்டியலிட்டிருந்தார்கள். எனக்கு படபடப்பாக ஆகிவிட்டது. 
 
பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 2
ஒரு கடைக்குள் நுழைந்து காண்டம் கேள் என்றால் சத்தமாகக் கேட்பேன். ஆனால் பியர் இருக்கிறதா என்று, அதுவும் வேற்றூரில், வேற்று மொழி ஆட்களிடம் கேட்க சங்கடமாக இருந்தது. யோசித்தபடி பாபநாசம் கடற்கரை மணலில் நடந்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு கீற்றுப் பந்தல் அமைத்து ஆபத்துதவிக்காக இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி மாதிரியே இருந்தார். அவரைக் கண்டதும் ஒரு அணுக்கம். அவருக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கும் என்று உள்ளுணர்வு சொன்னதால், அண்ணா, இங்க எங்கே பியர் கிடைக்குமா என்று தமிழிலேயே கேட்டேன். அதற்கு அந்த வி.சே. அண்ணா நான் கடந்து வந்த உணவகங்களைக் காட்டி “அங்க இருக்குற எல்லா கடைலயும் கெடைக்கும்டா” என்று அச்சு அசலாக வி.சே. மாடுலேஷனிலேயே சொன்னார். 
 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 November 2020

வர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: தொடக்கம்

வர்கலா பயணத்தில் உண்ண, உறங்க, உற்சாக பானம் அருந்த என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சமயம். ஏற்கனவே வர்கலா சென்று வந்த சில நண்பர்களிடம் தகவல்கள் கேட்டிருந்தேன். அதில் ஒரு அண்ணன் செளத் வேணாம் நார்த் போ, கீழே இருக்காதே மேலே போயிடு என்று சில சங்கேத குறிப்புகள் கொடுத்தார். எனக்குப் புரியவில்லை. நான் கீழே மேலே பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை. மகிழ்ச்சிதான் முக்கியம். பின்னர், வர்கலாவின் புவியியலை ஆராயும்போது தான் அண்ணன் சொன்னது புரிய வந்தது.

கோவாவைப் போலவே வர்கலாவையும் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கலாம். அதே போல வடக்கு ஆரவாரமானது, தெற்கு அமைதியானது. இரண்டுக்கும் மத்தியில் வர்கலா ஹெலிபேட். வர்கலாவைப் பற்றி கூறும்போது க்ளிஃப் (cliff) என்று குறிப்பிடுகிறார்கள். Cliff என்றால் செங்குத்தாக இருக்கக்கூடிய சிறிய குன்று (குறிப்பாக கடற்கரைக்கு அருகில்) என்று பொருள். மேலே குன்று, கீழே கடல். அண்ணன் சொன்னது இதுதான் !

நான் எனது நான்கு நாள் பயணத்தை இரண்டாக வகுத்துக் கொண்டேன். முதலிரு நாட்கள் தெற்கு, அடுத்த இரு நாட்கள் வடக்கு. தெற்கில் நான் சல்லடை போட்டு தேடிச் சலித்து முன்பதிவு செய்த விடுதியின் பெயர் ஆதாமிண்ட ஸ்வர்க்கம் (Adam’s Paradise). எனக்காகவே பிரத்யேகமாக தயார் செய்தது போலிருந்தது அவ்விடுதி !
 
விடுதி கட்டிடம்
ஹெலிபேடில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில், கிட்டத்தட்ட வர்கலாவின் தென்மூலையில், ஒரு அமைதியான தெருவில் அமைந்திருக்கிறது விடுதி. தனிப்பயணி என்பதால் ஒருவர் மட்டும் தங்கும் சிறிய அறையை பதிவு செய்திருந்தேன். வாடகை நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய். 
 
நீச்சல் குளம்
குன்றின் உச்சியில் விடுதி, முதல் மாடியில் அறை, கீழே நீச்சல் குளம், அதையொட்டி சிறிய லான், அங்கிருந்து கீழே பார்த்தால் பிரம்மாண்டமான அரபிக்கடல், விடுதியிலிருந்து கடற்கரைக்கு இறங்க இரும்பால் செய்யப்பட்ட படிக்கட்டுக்கள். நல்ல வாரநாட்களாக பார்த்து பயணம் செய்ததால் இதையெல்லாம் அனுபவிக்க விடுதியில் என்னைத் தவிர வேறு விருந்தினர்கள் யாருமில்லை !

லானிலிருந்து கடல் !
அறையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் ஒரு கனவு அறை இருக்குமல்லவா. என்னுடைய கனவு அறை என்பது ஒருவர் மட்டும் படுக்கும் சிறிய கட்டில், ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு அலமாரி, சுத்தமான குளியலறை, கழிப்பறை. அது அத்தனையும் கச்சிதமாக அமைந்திருந்தது அந்த அறையில். தொலைக்காட்சி மட்டும் இருந்திருந்தால் பரிபூரணம் ! 

அறையில் மேஜை நாற்காலி
இந்த கோவிட், கீவிட் எல்லாம் வந்தபிறகு, தீவிரமாக WFH செய்துக் கொண்டிருந்த சமயத்தில் வர்கலாவில் நான் தங்கிய அந்த அறையை நினைத்துக் கொள்வேன். நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய் வாடகை. மொத்தமாக நீண்ட நாட்களுக்கு வாடகைக்குப் பிடிப்பதென்றால் இன்னும் குறைவான தொகைக்குக் கூட கிடைக்கும். மேஜை, நாற்காலி, நல்ல காற்று, கடற்கரை, கேரள உணவு. BEVCO சரக்கு, அப்படியே வைக்கம் முகம்மது பஷீரைப் படித்துக்கொண்டு, வாரம் ஒருநாள் ஃபஹத் ஃபாஸில் படமோ, பார்வதி படமோ பார்த்துக்கொண்டு மீதமிருக்கும் காலத்தை நிம்மதியாகக் கழித்திருக்கலாம் என்று தோன்றும்.

அந்த விடுதியில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் ஏதோ அந்தப்புரத்தில் தங்கியிருந்தது போல ஒரு அணுக்கம். கட்டோடு குழலாட ஆட என்று ரிலாக்ஸ்டாக நீச்சல் குளத்தில் மிதப்பது, லானில் அமர்ந்து அரபிக்கடலை ரசிப்பது, இரவில் மதுவுடன் லானில் அமர்ந்து கடலில் சின்னச் சின்ன படகுகளில் தெரியும் வெளிச்சப் புள்ளிகளின் தொகுப்பைப் பார்ப்பது என்று ரம்மியமாகக் கடந்தன அந்நாட்கள்.

இரவு நேரத்து கடல்

குறைகள் என்று பார்த்தால் நீச்சல் குளத்தில் இலைகள் மிதக்கும். லக்ஸுரியை விரும்பும் ஆட்களுக்கு ஒத்து வராது. இரவு நேரத்தில் வெளியே பூச்சிகள் தொந்தரவு (அநேகமாக இது எல்லா விடுதிகளிலும் உண்டு). நான் ஒரே ஒரு கெஸ்ட் என்பதால் விடுதியில் உள்ள உணவகத்தில் சமைக்கவில்லை. நல்ல உணவகம் வேண்டுமென்றால் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள டவுனுக்கு செல்ல வேண்டும் அல்லது அதே அளவு தொலைவில் உள்ள வடக்கு வர்கலாவுக்கு செல்ல வேண்டும்.

முதல் நாள் மாலை. சுமார் ஆறரை மணி இருக்கும். சைக்கிளை எடுத்துக் கொண்டு வர்கலா டவுனுக்கு கிளம்பினேன். BEVCO சென்று மது வாங்க வேண்டும், மதுவுடன் சாப்பிட பழங்கள் மற்றும் இரவு உணவு வாங்க வேண்டும். நிதானமாக ஒவ்வொன்றையும் வாங்கி முடிப்பதற்குள் இருட்டிவிட்டது. ஒரு அரை கி.மீ. வரை டவுன் கடைகளும் வெளிச்சங்களும் உதவின. அதன் பிறகு வெறும் இருட்டும் காடும் தான். ஆளரவமற்ற குறுகிய சாலைகள். திடீர் திடீரென ஒளியை பாய்ச்சியபடி கடந்து செல்லும் வாகனங்கள். ஒரு மாதிரி ஹாண்டட் அனுபவமாகிவிட்டது.

அடுத்த நாள் அதே தவறை செய்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். விடுதியில் இருந்து சுமார் முக்கால் கி.மீ. தூரத்தில் ஒரு உணவகம் இருப்பதை பகலிலேயே குறித்து வைத்துக்கொண்டேன். பக்கத்தில் தானே என்று எட்டு மணி வரைக்கும் விடுதியில் இருந்து உ.பா. அருந்திவிட்டு சாவகாசமாகக் கிளம்பினேன். நடைதொலைவு என்பதால் சைக்கிள் எடுத்துச் செல்லவில்லை. ஊர் ஓய்ந்துவிட்டது. ஆள் நடமாட்டமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளில் மட்டும் வெளிச்சம் தெரிகிறது. யோசித்துப் பாருங்கள், இருள் சூழ்ந்த சாலை, தூரத்தில் ஒரே ஒரு வீடு, அதிலிருந்து வரும் வெளிச்சம், அங்கிருந்து கேட்கும் தொலைக்காட்சி சத்தம் ஒரு மனிதனை எவ்வளவு தொந்தரவு செய்யும். இது போதாதென்று தெரு நாய்கள் வேறு. இத்தனையையும் கடந்து உணவகத்திற்கு சென்றால் அதன் வாயிலுக்கும் உணவகம் இருக்கும் பகுதிக்குமே முன்னூறு மீட்டர் இருள் பாதை. ஆக, அன்றைய இரவும் திகிலாகவே கழிந்தது.

இவையெல்லாம் தனிப்பயணத்தின் சாதகங்களா பாதகங்களா என்றால் இரண்டும் தான் ! தனியாகச் சென்றதால் தான் இவ்வளவு த்ரில் கிடைத்தது. ஆனால் நண்பர்களுடன் சென்றிருந்தால் இது அப்படியே வேறு மாதிரி உற்சாகமான நிகழ்வாக மாறியிருக்கும்.

முக்கால் கி.மீ. நடந்து சென்றடைந்த அந்த உணவகத்தில் மூன்று மேல்நாட்டு சீமாட்டிகள் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கிட்டாரோ ஏதோ இசைத்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் பஃபலோ சோல்ஜர் பாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஏனோ தேனிசைத் தென்றல் தேவாவும், கெளசல்யாவும் நினைவுக்கு வந்து போனார்கள்.

அடுத்த பதிவு: வடக்கு கடற்கரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 November 2020

வர்கலா – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

ஒரு திரைப்படமோ, ஒரு புத்தகமோ மனதுக்கு பிடித்துவிட்டால் அதன் இயக்குநரின் / எழுத்தாளரின் மற்ற படைப்புகளை தேடுவோமில்லையா. அது போல கோவா சென்றுவந்த பிறகு இந்தியாவில் கோவாவைப் போல என்னென்ன ஐட்டங்கள் இருக்கின்றன என்று தேடத் துவங்கினேன். அத்தேடல்கள் அனைத்தும் இரண்டு ஊர்களை மீண்டும் மீண்டும் பரிந்துரைத்துக் கொண்டே இருந்தன. 


ஆம், கோவாவிற்கு இரண்டு தங்கைகள். ஒன்று, கோகர்னா. மற்றொன்று வர்கலா ! 

இரண்டில் ஒன்று என்றெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்ளவில்லை. இரண்டும் வேண்டும். ஆனால் எது முதலில் என்ற கேள்வி வந்தபோது இரண்டு அங்குலம் முன்னால் வந்து நின்றது வர்கலா. ஏனெனில் அது கேரளா ! மென்சோகம் இழையோடும் சாலைகள், இருமருங்கே நீண்டு வளர்ந்த தென்னைகள், கட்டஞ்சாயா, கள்ளு, பீஃப் கறி இவையெல்லாம் தாண்டி கேரளா என்பது ஒரு உணர்வு !

வர்கலா செழிப்பான கடற்கரை ஸ்தலம் மட்டுமில்லாமல் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமும் கூட. அரபிக்கடலின் முத்து, தென்னகத்து காசி போன்றவை வர்கலா பெற்ற பெயர்கள். பாண்டிய மன்னனின் பாவம் போக பிரம்மன் கோவில் கட்டச் சொன்ன இடம், நாரதர் வீசிய வல்கலம் (மரப்பட்டை) வந்து விழுந்த இடம் என்று புராணமும் அதன் பங்குக்கு வர்கலா பற்றி கதைகள் சொல்கின்றன. இங்குள்ள அஞ்செங்கோ (அஞ்சு தேங்காய் என்பதின் வழுவல்) கோட்டை பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயே அரசால் நிர்மாணிக்கப்பட்டது. அரசுக்கு பாதுகாப்பு அரணாகவும், அதே சமயம் வணிகப் தொடர்புக்கு பயன்படுபவதாகவும் இருந்திருக்கிறது இந்தக் கோட்டை. ஆன்மிகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு வர்கலாவைச் சேர்ந்தவர். இவர் அமைத்த சிவகிரி மடம் இன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.
 
எனது இந்தப் பயணம் ஒரு சோலோ பயணம். Solo travel / traveller என்கிற சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களாக தனிப்பயணம் / தனிப்பயணி என்பவற்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் கவிஞர் மனுஷி. இனி நாமும் அவற்றையே பயன்படுத்துவோம். சில தவிர்க்க முடியாத / எழுத்தில் கொண்டு வர முடியாத காரணங்களுக்காக எனது பயணத்துணைகள் என்னோடு தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அதனால் நான் தனிப்பயணியானேன் ! 

உண்மையில் தனிப்பயணங்களில் சம அளவில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. சாதகங்களில் பிரதானமானது - சர்வாதிகாரம். அந்த இடத்திற்கு போனால் எனக்கு சளி பிடித்துவிடும், அவ்வளவு தூரம் உட்கார்ந்து வர முடியாது – எனக்கு பைல்ஸ், அலுவலகத்தில் லீவ் தர மாட்டார்கள் (பொய்), அந்த தேதியில் தான் வீட்டில் தலுவை போடுகிறார்கள் போன்ற விவாதங்களுக்கு வேலையில்லை. உங்கள் தேதி, உங்கள் தேர்வு. நீங்கள் திருமணமாகாதவர் என்றால் உங்கள் மேனேஜர் ஒருவரை மட்டும் சமாளித்தால் போதும், திருமணமானவர்களுக்கு இரண்டு. அவ்வளவுதான் ! 

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், சுயமறிதல் போன்ற சில சாதகங்களும் தனிப்பயணங்களில் உண்டு. இவை தவிர, தனிப் பயணங்களில் புது நண்பர்கள் கிடைப்பார்கள் என்பது பொது நம்பிக்கை. Introvert என்பதால் அதுகுறித்த கள நிலவரத்தை என்னால் கண்டறிய முடியவில்லை. 

பாதகங்களில் பிரதானம் ஒரு நல்ல புகைப்படம் எடுத்துத் தரக்கூட யாரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான். நம்முடன் நண்பர்கள் இருக்கும்போது கிடைக்கக்கூடிய ஒரு கூடுதல் தைரியம் தனிப்பயணங்களில் சாத்தியமில்லை. மாலை வேளைகளில் ஒருவிதமான வெறுமையுணர்வு தோன்றும்.

இன்னும் case specific சாதக பாதகங்களை இத்தொடரின் இடையிடையே தெரிந்துகொள்வீர்கள். 

திருவனந்தபுரம் மெயில்

தரை மற்றும் வான் மார்க்கங்களில் மிக எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது வர்கலா. சென்னை மத்திய ரயில் நிலையத்திலிருந்து வர்கலாவிற்கு தினசரி ரயில் செல்கிறது (திருவனந்தபுரம் மெயில் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்). எக்மோரிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வர்கலா ரயில் நிலையத்திலிருந்து சில கி.மீ. தூரத்தில் சுற்றுலா தளத்தின் மத்திய பகுதி. ஆட்டோவில் நூறு ரூபாய். ஒருவேளை வர்கலா ரயில் நிலையம் சாத்தியமில்லை என்றால் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ, திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஐம்பது கி.மீ. வான்வழி செல்வதென்றால் ஐம்பது கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம். அங்கிருந்து கேரள அரசு பேருந்துகள் வர்கலாவிற்கு இயக்கப்படுகின்றன. 
 
பழம்பொரி
என்னிடம் கைவசம் நாட்கள் தாராளமாக இருந்ததால், போக வர இரண்டுக்கும் திருவனந்தபுரம் மெயிலில் டிக்கட் எடுத்திருந்தேன். முதல்நாள் இரவு 7:45க்கு சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் சேலம், ஈரோடு, கோயமுத்தூர் வழியாக அதிகாலையில் கேரளா மாநில பாலக்காடு ரயில் நிலையத்தை கடக்கிறது. டீ, காபி, வடையுடன் பழம்பொரியும் விற்கப்படுவது கேரள வருகையை உறுதிப்படுத்துகிறது. அதன்பிறகு ரயிலில் தினசரி பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை 10.50க்கு ரயில் வர்கலாவை சென்றடைகிறது. 

வர்கலா ரயில் நிலையம்
ஆர்ப்பாட்டமில்லாத சிறிய ரயில் நிலையம். அருகிலேயே நான் நீ என்று போட்டி போடாத ஆட்டோ ஸ்டாண்ட். வர்கலா ஹெலிபேட் என்று கேட்டு வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தேன். ரயில் நிலையத்திலிருந்து சரியாக மூன்றரை கி.மீ. வர்கலா ஹெலிபேட் என்பது ஒரு மலை முகட்டில் அமைந்துள்ள பிரம்மாண்டமான சமதளம். ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்குவதற்கான அமைப்பு. அதன் மத்தியில் என்னை இறக்கிவிட்டுச் சென்றார் ஆட்டோ ஓட்டுநர்.   

இருவர் படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜ் மோகன்லாலை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்வார். மெல்ல மொட்டை மாடியின் விளிம்பிற்கு செல்லும் மோகன்லால் கீழே அவருக்காக ஆரவாரம் செய்துக் கொண்டிருக்கும் மக்களைக் காண்பார். அதுபோல நான் அந்த ஹெலிபேடின் மத்திய பகுதியிலிருந்து மலை முகட்டிற்கு மெதுவாக நடந்து செல்கிறேன். 

கீழே வர்கலா கடற்கரையின் பிரம்மாண்டமான எழில்தோற்றம் தோன்றுகிறது. “இருவர்” மோகன்லால் அடைந்ததை விட பரவசமான அனுபவம் அது !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment