27 January 2021

காந்தளூரும் கள்ளுக்கடையும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,
 
வர்கலாவைப் பற்றி எழுதிக்கொண்டே வரும்போது இடையில் எங்களுடைய  காந்தளூர் பயணம் பற்றி எழுதாமல் வர்கலாவின் சில பகுதிகளை எழுத முடியாது என்று தோன்றியதால் இந்த இடைச்செருகல் !

உடுமலைப்பேட்டையில் இருந்து அறுபது கி.மீ. தொலைவில், தமிழக – கேரள எல்லையில், கேரளாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது காந்தளூர். ஏதாவது ஆஃப்-பீட் தளத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து காந்தளூரைத் தேர்வு செய்திருந்தோம். சில்லென்ற தட்பநிலை. டூரிஸ்ட் கூட்டமில்லாத பகுதி.
 
2019 இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடந்துக்கொண்டிருந்தபோது நாங்கள் காந்தளூர் சென்றுவந்தோம். மிகச்சரியாக சொல்வதென்றால் தமிழ்நாட்டில் ஓட்டு போட்டுவிட்டு ஈர மையுடன் கிளம்பிச் சென்றோம். அப்போது கேரளாவில் தேர்தல் நாளுக்கு சில நாட்கள் எஞ்சியிருந்தன. 
 
தேர்தல் பரப்புரை ஊர்வலம்
காந்தளூர் என்பது இடுக்கி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அங்கே கடைசிகட்ட தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் வேட்பாளரின் முகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள். ஆனால் மேற்பார்வைக்கு அத்தனையும் ஒரே முகம் போலவே இருந்ததால், போஸ்டர்களை கூர்ந்து கவனித்தேன். நான் நினைத்தது போல இல்லை. மூன்று வெவ்வேறு வேட்பாளர்களே. இயல்பில் கேரள பெண்களைப் போலவே கேரள ஆண்களும் ஒரே சாயல் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மூவரும் ஒரே மாதிரியான மீசை வைத்திருந்தார்கள்.

கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் பிரதான கட்சிகள். கிட்டத்தட்ட 2016க்கு முந்தைய தி.மு.க. – அ.தி.மு.க.வைப் போல. குறிப்பாக கம்யூனிஸ்டை தி.மு.க.வோடு ஒப்பிடலாம். பாரம்பரியமிக்க கட்சி, அதே சமயம் முன்பைப் போல இல்லை என்கிற சலசலப்புகள் கொண்ட கட்சி. மூன்றாவதாக பி.ஜே.பி – ஒப்புக்கு.

கேரள அரசியலை கவனிக்கும்போது ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க,விற்கும் இடையே சில தொழில் உறவுகள் உண்டு. ஆனால் களத்தில் இருவரும் எதிரிகள். ஒருவரை ஒருவர் தேர்தலில் வீழ்த்த, கொள்கை சமரசங்களுடன் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். கேரளாவில் அப்படியில்லாமல் கம்யூனிஸ்டுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு புரிந்துகொள்ளுணர்வு இருக்கிறது என்று யூகிக்கிறேன். இவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை வைத்துக்கொண்டு மதவாத சக்திகள் கேரளாவில் காலூன்ற முடியாமல் செய்வதாகத் தோன்றுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கேரளத் தலைவர்கள் ஒரே விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் என்ற செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போதும் கூட கம்யூனிஸ – காங்கிரஸ் தலைவர்கள் தான் ஒன்றாக வந்தார்களே ஒழிய பி.ஜே.பி. கோமாளிகள் அல்ல.

2019 இடுக்கி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக அவர்களுடைய ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் (சிட்டிங் எம்.பி.) போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தமிழக முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் அதே ஆர்வத்துடன் இடுக்கி தொகுதி நிலவரத்தை தேடினேன். ஒன்றரை லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார். 

*************************

நாங்கள் காந்தளூர் சென்றிருந்த சமயத்தில் இடைப்பட்ட ஒருநாள் மட்டும்தான் மதுக்கடை இயங்கியது. முன்பும் பின்பும் தேர்தல் விதிகள் காரணமாக இயங்கவில்லை. கள்ளுக்கடைகளும் அவ்விதமே. இடைப்பட்ட அந்த ஒருநாளில் கள்ளுக்கடைக்கு படையெடுத்தோம். நான் அதற்கு முன்புவரை கள்ளு குடித்ததில்லை. ஒரேயொரு முறை கல்லூரியில் படிக்கும்போது அதற்கான வாய்ப்பு வந்தபோது, உடன் பயின்றவர்கள் புதிதாக குடிப்பவர்களுக்கு கள்ளு தூக்கி விட்டுவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதால் அந்த ஆசையை கைவிட்டுவிட்டேன். இப்போது சூழல் கூடி வந்ததால் கள்ளு குடித்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன். 

காந்தளூர் கள்ளுக்கடை
கிட்டத்தட்ட ஊருக்கு ஒதுக்குப்புறமாக, குடியிருப்புகள் அற்ற பகுதியில் அமைந்திருந்தது காந்தளூர் கள்ளுக்கடை. ஒரு வயதான அம்மாளும் அவரது மகனும்தான் அக்கடையை நிர்வகித்து வருகின்றனர்.

கள்ளு - கப்பை - கடலைக்கறி

கள்ளுடன் சாப்பிட கப்பையும், பீஃப் கறியும் இருப்பதாகச் சொன்னார்கள். கப்பை என்றால் என்னவென்றே அப்போது தெரியாததால் அதனை ஒரு பிளேட் வாங்கி, அது மரவள்ளிக்கிழங்கு என்று தெரிந்து, அதனை கைவிட்டோம். அதன்பிறகு பீஃப் கறி வாங்கி அது சில பல ப்ளேட் ரீப்பீட்டில் சென்றது. கள்ளின் ஒருவகையான புளிப்புச்சுவை, அதிலிருந்த ஃபிஸ் போன்றவை மிகவும் பிடித்துப்போய்விட்டது.

தேர்தல் சமயம் என்பதால் கடையை நிர்வகித்து வந்த அம்மாள் அரசியல் குறித்து பேசத் துவங்கினார். அவருடைய பேச்சில் இருந்து அவருக்கு மற்றும் பொதுவாக அத்தொகுதி மக்களுக்கு ஸ்டாலின் மீது ஒரு ஸாஃப்ட் கார்னர் இருப்பது தெரிய வந்தது. அவரது முதலமைச்சர் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போகிறது என்பது மாதிரியான ஸாஃப்ட் கார்னர். மேலும் முன்பொரு முறை அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து நீண்ட முதல் மற்றும் ஒரே உதவிக்கரம் ஸ்டாலினுடையது என்றார்.

இதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மகன் இடைமறித்து, நான் ஒரு தகவல் சொல்கிறேன் அதைப் போய் உன் மாநில மக்களிடம் சொல் என்பது மாதிரி ஒரு விஷயத்தைச் சொன்னார். அங்கே மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நேரடியாக அலைபேசியில் தகவல் தெரிவிப்பார்களாம். ச.ம.உ.வும் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பாராம். ஒருவேளை அப்படி வராவிட்டால் அடுத்தநாள் ஊரே ச.ம.உ. வீட்டுவாசலில் நிற்குமாம். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் தமிழத்தில் இந்நிகழ்வில் ஒரு பத்து சதவிகிதத்தைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.

கேரளாவில் மட்டும் இது எப்படி சாத்தியம் ? கேரளாவில் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதில்லை. மாறாக பணம் பெறுகிறார்கள். அதாவது மக்கள் அவரவர் சார்ந்த இயக்கங்களுக்கு தங்கள் ஒருநாள் ஊதியத்தை தேர்தல் செலவுகளுக்காக தருகிறார்கள். உதாரணமாக அந்த கள்ளுக்கடை உரிமையாளர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அதனால் அவரது ஒருநாள் வருமானத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக வழங்கியிருக்கிறார். அதனால் அவர்களால் உரிமைக்குரல் எழுப்ப முடிகிறது.

கேரளாவும் தமிழகமும் இந்தியாவின் முன்னோடி மாநிலங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் நாம் இன்னும் கேரளாவை விட பல படிகள் பின்தங்கியே இருக்கிறோம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 December 2020

வர்கலா – வடக்கு கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: ஆதாமிண்ட ஸ்வர்க்கம் 

வர்கலா பயணத்தின் அடுத்த பகுதிக்கு போகும் முன் என் பயணத்துணைகளாக வந்த இரண்டு அஃறிணை நண்பர்களைப் பற்றி குறிப்பிட்டுவிடுகிறேன்.
 
முதல் நண்பன் – சைக்கிள்: எனக்கு பைக் – ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்பதால் பயணத் திட்டத்தின் போது சைக்கிள் வாடகைக்கு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். சில இடங்களில் மெளன்டைன் பைக் என்று சொல்லப்படும் மலையேற்றத்திற்கான சைக்கிள் கிடைத்தது. கியர் வைத்த 21 ஸ்பீட் சைக்கிள் அது. நாளொன்றிற்கு வாடகை முன்னூற்றி ஐம்பது ரூபாய். நான் தேடியதோ மிதித்தால் ஒரே வேகத்தில் போகக் கூடிய சாதாரண சைக்கிள். பின்னர் கூகுள் மேப் வழியாக உன்னிக்கண்ணன் என்பவரிடம் சைக்கிள் வாடகைக்கு கிடைப்பதாக அறிந்தேன். கியர் வைத்தது தான், ஆனாலும் அந்த சைக்கிள் பழையது போல தோன்றியதால் ஒரு அணுக்கம் உண்டானது. தினசரி வாடகை நூற்றி ஐம்பது. வர்கலா சென்றதும் நேராக ஹெலிபேட் போய் இறங்கினேன் இல்லையா. அங்கு முதல் வேலையாக உன்னிக்கண்ணனை சந்தித்து சைக்கிளைப் பெற்றுக்கொண்டேன். உன்னிக்கண்ணன் ஒரு சிறிய ஹோம்ஸ்டே வைத்து நடத்துகிறார். டிராவல்ஸும் நடத்துகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் வாடகை சைக்கிளை பொறுத்தவரையில் அவர் அதனை தொழில்ரீதியாக செய்யவில்லை. அவரது சொந்த பயன்பாட்டிற்காக ஒரே ஒரு சைக்கிள் வைத்திருக்கிறார். அதைத்தான் உபரி சமயங்களில் வாடகைக்கு விடுகிறார். ப்ரொஃபஷனல் இல்லை என்பதால் உன்னிக்கண்ணனின் சைக்கிளில் பெல் இல்லை, பிரேக்கை கோபம் கொண்டு அழுத்தினால் பெருத்த ஒலியுடன் லேசாக வேலை செய்யும். ஆனாலும் எனது தேவைக்கு அது போதுமானதாக இருந்தது.

வாடகை சைக்கிள்
இரண்டாவது நண்பன் – மொபைல் ஸ்டாண்ட்: சுய புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை என்றாலும் ஒரு ட்ரிப் முழுக்க புகைப்படங்கள் எடுக்காமல் இருக்க முடியாது அல்லவா. அது மட்டுமில்லாமல் அரபிக்கடலில் சூரியன் மறைவதை டைம் லாப்ஸ் வீடியோ எல்லாம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இங்கிருந்து போகும்போதே மொபைல் போனுக்கான ட்ரைபாட் ஒன்றை வாங்கியிருந்தேன். அமெச்சூர் பொருள்தான். ஆனாலும் தேவையை பூர்த்தி செய்தது. அமேசானில் கிடைக்கிறது. விலை நானூறு. கூடவே ஒரு சிறிய ப்ளூடூத் ரிமோட்டும் கிடைக்கிறது. போனை ஸ்டாண்டில் செட் செய்துவிட்டு வந்து ரிமோட் பட்டனை அழுத்தினால் புகைப்படம் எடுக்கும். இந்த ட்ரிப் முழுக்க என்னை புகைப்படம் எடுத்துக் கொடுத்தவர் இவர்தான். எதிரில் நண்பர் இருந்து நம்மை புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் கூட நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இவரிடம் அப்படி எந்த தயக்கமும் இல்லை.

வர்கலா பயணத்தை வடக்கு, தெற்கு என்று பிரித்திருந்தேன் அல்லவா. முதலிரண்டு தினங்கள் வடக்கு. விடுதியில் போய் இறங்கி குளித்து முடித்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிய இடம் ஆழியிறக்கம் கடற்கரை. விடுதியின் பின்புறம் தான் கடற்கரை. கிட்டத்தட்ட பிரைவேட் கடற்கரை மாதிரி தான். விடுதியிலிருந்து செங்குத்தாக இறங்கும் படிக்கட்டுகள் வழியாக கடற்கரையை அடைந்துவிடலாம். ஆனால் சாலை வழியாக முக்கால் கி.மீ. நான் சாலை வழியைத் தேர்வு செய்தேன். சரிவான பாதையில் ப்ரேக் இல்லாத என் சைக்கிள் தறிகெட்டு ஓட, ஒரு கட்டத்தில் முதல் நாளே சில்லறை வேண்டாம் என்று இறங்கி தள்ளிக் கொண்டே போய்விட்டேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 1
குன்றின் இறக்கத்தில் கடற்கரை அமைந்திருப்பதால் ஆழியிறக்கம் என்கிற பெயர் அமைந்திருக்கக்கூடும். ஆஃப் பீட் கடற்கரை. அக்கம் பக்கம் ஒரு கடை, ஒரு வீடு எதுவும் கிடையாது. நான் சென்றபோது நான் ஒருவன் மட்டும் கடற்கரையில் மொட்டை வெயிலில் நின்றுக் கொண்டிருந்தேன். டைம் லாப்ஸ் எடுத்துப் பார்க்கும் ஆர்வத்தில் மொபைல் ஸ்டாண்டை செட் செய்தேன். அதற்குள் சில உள்ளூர் சிறுவர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். பருந்துகள் வேறு மிகத் தாழ்வாக பறந்துக் கொண்டிருந்தன. சூழல் எனக்கு ஒரு மாதிரி பதற்றமூட்டுவதாக அமைந்திருந்ததால் அதிக நேரம் அக்கடற்கரையில் செலவிட இயலாமல் கிளம்பினேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 2
அடுத்தது, அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் கடற்கரை. இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும், அஸ்தியை கரைக்கும் பழக்கம் இங்கிருக்கிறது என்று நினைக்கிறேன். கடற்கரையில் பத்தடிக்கு ஒரு பார்ப்பனர் குடை, போர்டு வைத்து கடை போட்டிருக்கிறார்கள். இந்த ப்ராஸஸுக்கு தேவையான துண்டு, வேட்டி, பூஜை சாமான்கள் போன்றவற்றின் விற்பனை ஒரு பக்கம் பரபரவென நடந்துக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் இவற்றையெல்லாம் விநோதமாகப் பார்த்துக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் கடக்கிறார்கள். எனக்கு இதிலெல்லாம் மனம் ஒட்டவில்லை. நான் வர்கலா சென்று இறங்கியதிலிருந்து அந்த நிமிடம் வரை ஒரு மிடறு மது கூட அருந்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 1
பாபநாசம் கடற்கரையை ஒட்டிய சாலையில் வரிசையாக உணவகங்கள் இருந்தன. ஒவ்வொரு உணவகத்தின் வாசலிலும் ஒரு ஸ்டாண்ட் அமைத்து அதில் மெனு புத்தகத்தை வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கிறேன். ஒன்றில் கூட மதுவின் விலைப்பட்டியல் இல்லை. ஒரு உணவகத்தில் கூட மது கிடைக்கும் என்கிற அறிவிப்பு இல்லை. அதிலும் ஒரு உணவகத்தின் மெனுவில் காழ்ப்புணர்வை தூண்டும் வகையில் “ஹாட் ட்ரிங்க்ஸ்” என்று காஃபி, டீ, பூஸ்ட், ராகிமால்ட் போன்றவற்றை பட்டியலிட்டிருந்தார்கள். எனக்கு படபடப்பாக ஆகிவிட்டது. 
 
பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 2
ஒரு கடைக்குள் நுழைந்து காண்டம் கேள் என்றால் சத்தமாகக் கேட்பேன். ஆனால் பியர் இருக்கிறதா என்று, அதுவும் வேற்றூரில், வேற்று மொழி ஆட்களிடம் கேட்க சங்கடமாக இருந்தது. யோசித்தபடி பாபநாசம் கடற்கரை மணலில் நடந்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு கீற்றுப் பந்தல் அமைத்து ஆபத்துதவிக்காக இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி மாதிரியே இருந்தார். அவரைக் கண்டதும் ஒரு அணுக்கம். அவருக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கும் என்று உள்ளுணர்வு சொன்னதால், அண்ணா, இங்க எங்கே பியர் கிடைக்குமா என்று தமிழிலேயே கேட்டேன். அதற்கு அந்த வி.சே. அண்ணா நான் கடந்து வந்த உணவகங்களைக் காட்டி “அங்க இருக்குற எல்லா கடைலயும் கெடைக்கும்டா” என்று அச்சு அசலாக வி.சே. மாடுலேஷனிலேயே சொன்னார். 
 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment