Showing posts with label park. Show all posts
Showing posts with label park. Show all posts

24 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 24032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரத்தில் ஒருநாள் ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருந்தேன். துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வாங்குவதற்கான விஜயம். புத்தகம் கிடைத்தபிறகு ஒரு சுற்று மற்ற புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஜெயா டீச்சரை கண்டேன். கூடவே நான்கு வயது சுமார் மகனையும் கூட்டி வந்திருந்தார். Flashback...! நான் உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் பள்ளி மாணவர்கள் பி.டி.மாஸ்டர் என்றாலே அலறுவார்கள். கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் அப்படித்தான் என நினைக்கிறேன். பி.டி.மாஸ்டரின் பெயர் ஸ்ரீநிவாசன். நெற்றியில் செங்குத்தாக மூன்று கோடுகளை வரைந்திருப்பார். மற்ற வாத்தியார்களைப் போல சின்ன பிரம்பு அவருக்கு உபயோகப்படாது. ஆறு அடி நீளத்துக்கு சிலம்பத்திற்கு பயன்படுத்துவது போல ஒன்றை வைத்திருப்பார். அப்போது தான் தப்பியோட முயற்சிப்பவர்களை துரத்தி அடிக்க முடியும். அவர் அந்த பிரம்பை எடுத்துக்கொண்டு நடந்துவந்தால் அப்படியே நம்முடைய மூதாதையர்களை பார்த்தது போல இருக்கும். திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எல்லாம் சிதறி ஓடுவார்கள். அவருடைய மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மாணவர்களை துரத்தி துரத்தி அடித்த பாவம்தான் அந்த விபத்துக்கு காரணம் என்று சில மாணவர்கள் பேசிக்கொள்வார்கள். 

நான் ஒன்பதாவது வகுப்பிற்கு சென்றபோது புதிதாக எங்கள் பள்ளியில் ஒரு பி.டி.ஆசிரியை சேர்ந்திருந்தார். அவர்தான் ஜெயா டீச்சர். பயல்களுக்கு வேறு பனித்துளி பார்க்கிற வயதாச்சே...! ஜெயா டீச்சரை அங்கங்கே ஓரமாக சைட் அடித்துக்கொள்வோம். ஜெயா டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சரிதான், அவர் மட்டும் அவ்வளவு ஸ்ட்ரிக்டாக இருந்திருக்காவிட்டால் வரம்பு மீறி சேட்டை செய்திருப்பார்கள் மாணாக்கர். திமிர்தான் பெண்களுக்கு வேலி என்று கமலஹாசன் சொல்லியிருக்கிறார். ஹிக்கின்பாதம்ஸில் ஜெயா டீச்சரை பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்து கூடவே உதட்டோரத்தில் ஒரு புன்னகையும் வந்தது. நல்லவேளையாக டீச்சருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. தெரிந்தாலும் பேசுவதாக இல்லை. இனி பழைய ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தால் மறந்தும் கூட அவர்களிடம் பேசிவிடக் கூடாது. குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய பிம்பமாவது நம்முடைய மனதில் நல்லபடியாக இருக்கட்டும் என்றொரு எண்ணம். ஒன்பதாம் வகுப்பு மாணவனைப் போலவே ஜெயா டீச்சரை திருட்டுத்தனமாக சைட் அடித்து கிளம்பிவிட்டேன்.

ஹிக்கின்பாதம்ஸ் என்றதும் தொடர்ச்சியாக நூலகம் நினைவுக்கு வருகிறது. சிறுவயதிலிருந்தே நூலகம் எனக்கு விருப்பமான ஒரு இடம். எனினும் இந்நாள் வரைக்கும் ஒரு நூலகத்தின் பலனை ஒருமுறை கூட நான் முழுமையாக அனுபவித்ததில்லை. முந்தய பத்தியில் குறிப்பிட்ட அதே உயர்நிலை பள்ளியில் ஒரு நூலகம் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தபிறகு போய் படிக்கலாம். புத்தகங்கள் பூட்டிய கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எந்த புத்தகம் வேண்டுமென நூலகரிடம் கை காட்டினால் அவர் நல்ல மூடில் இருந்தால் மட்டும் எடுத்துக் கொடுப்பார். பிரச்சனை என்னவென்றால் அவர் பெரும்பாலான நேரங்களில் நல்ல மூடில் இருக்க மாட்டார். அதுபோன்ற நேரங்களில் வேறு வழியில்லாமல் வெளியே இறைந்து கிடக்கும் பள்ளி ஆண்டு மலர்களை எடுத்து புரட்ட வேண்டியிருக்கும். புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற விதிமுறை இருந்தாலும் கூட நூலகரின் சிடுசிடு மூஞ்சி நினைவுக்கு வந்து அந்த ஆசையே போய்விடும். மேனிலை பள்ளியிலும் கிட்டத்தட்ட அப்படித்தான். அங்கே பெண் நூலகர் என்பதால் சிடுசிடுப்புக்கு பஞ்சமிருக்காது. அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பள்ளி முடிந்ததும் கேர்ள்ஸ் ஸ்கூலை நோக்கி உசேன் போல்ட் வேகத்தில் ஓட வேண்டும், பஸ் ஸ்டாப்பில் நின்று சைட்டடிக்க வேண்டும் என்பது போன்ற கடமைகள் இருந்ததால் நூலகம் பெரிதாக தெரியவில்லை. 

கல்லூரி நூலகத்தில் படிப்பு சார்ந்த புத்தகங்கள் தவிர்த்து அதிக புத்தகங்கள் இருக்காது. அதிலும் தமிழ் மருந்துக்கு கூட இருக்காது. ஆங்கில நாளிதழ்கள், இந்தியா டுடே, கணினி சம்பந்தமான சஞ்சிகைகளை வாசிக்கலாம். கல்லூரி நூலகத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் நான்கு மணிக்கு கல்லூரி பேருந்துகள் கிளம்பிவிடுவதால் அதன்பிறகு வளாகத்தில் மாணாக்கர் நடமாட்டம் அதிகமிருக்காது. நூலகத்தில் இரண்டு பேர் அமர்ந்திருந்தால் சாதனை. தள்ளுமுள்ளு இல்லாமல் நிதானமாக வாசிக்கலாம். அதைவிட முக்கியமாக தினசரி ஒரு மணிநேரம் எந்த தொல்லையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கோவிலை எப்படி உணர்வார்களோ அதுபோல நான் நூலகத்தை உணர்ந்துக்கொண்டிருந்த சமயம் அது. மேலும் அங்குள்ள நூலகர்களுக்கு புன்னகை செய்ய தெரிந்திருந்தது. அதில் ஒரு நூலகர் இப்பொழுது கேப்டன் தொலைக்காட்சியில் ரவி பெர்னாட் ரேஞ்சுக்கு இருக்கிறார். படிப்பெல்லாம் முடிந்தபிறகு ஒருநாள் அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். நிறைய பழைய புத்தகங்களாகவே இருந்தன. பாக்கியம் ராமசாமியின் புத்தகம் ஒன்றை சிறிதுநேரம் புரட்டிவிட்டு திரும்பினேன். கன்னிமாரா என்று சொல்கிறார்களே அந்த நூலகத்திற்கு இதுவரைக்கும் நான் சென்றதே கிடையாது. 

திருவொற்றியூரில் ஒரு நூலகம் நீண்டகாலமாக இருக்கிறது. தற்போது அதனை புதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு சேர்த்து நூலகத்துடனான என்னுடைய தொடர்பையும் புதிப்பித்துக்கொள்ள ஒரு விருப்பம். புதுப்பிப்பு பணிகள் முடியும் வரை நூலகம் தற்காலிகமாக பின் பக்கத்தில் நடத்தப்படுகிறது என்று செல்வின் சொல்லியிருந்தார். போய்ப் பார்த்தால் நூலகம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. செல்வினை நம்ப முடியாது. சரியாக தெரியவில்லை என்றால் கூட தெரிந்த மாதிரியே அடித்துவிட்டுவிடுவார். என்னடா இது சோதனை என்று அருகிலுள்ள பூங்காவிற்குள் நுழைந்தேன். அந்த பூங்காவைப் பற்றிய சுவையான நினைவுகள் என்னிடம் நிறைய உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் எழுத முடியாது. வேறொன்றும் இல்லை, சொன்னா உதைப்பீங்க. நான்கு பள்ளிச்சிறுமிகள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மாநிறமாக லட்சணமாக இருந்தாள். பேச்சு கொடுக்கலாம் என்று நினைப்பதற்குள் செல்வின் வந்துவிட்டார். நூலகம் அதன் பழைய இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக இயங்குவதால் புத்தகங்கள் கொஞ்சமாக இருந்தன. தேர்தல் முடிந்ததும் புது கட்டிடத்திற்கு போய்விடுவோம் என்று சொன்னார் நூலகர். உறுப்பினராக விண்ணப்ப படிவம் வாங்கி வந்தோம்.

இதற்கிடையே என் இல்லத்திலிருந்து நடை தொலைவிலேயே ஒரு நூலகம் இருப்பதாக என் தாயார் சொன்னார். ஏன் விடுவானேன் என்று அங்கேயும் சென்றேன். அது நூலகம் அல்ல. படிப்பகம். நாளிதழ்கள், சஞ்சிகைகள் மட்டும் வைத்திருக்கிறார்கள். மின்சார செலவை கட்டுப்படுத்தும் பொருட்டு மின்விசிறியை போடுவதில்லை. சென்ற பாவத்திற்காக வியர்க்க வியர்க்க ஆனந்த விகடனை புரட்டிவிட்டு திரும்பினேன்.

*****

ரொம்ப போரடித்துவிட்டேனோ...? சற்று இளைப்பாறலாம். நேற்று தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பினார்கள். ஏற்கனவே பலமுறை கேட்டு, பார்த்திருந்தாலும் ஏனோ சுத்தி சுத்தி வந்தீக என்ற பாடல் பிடித்துவிட்டது. செக்ஸியாக இருப்பதாக தோன்றுகிறது. இங்கே செக்ஸி என்று குறிப்பிடுவது செளந்தர்யாவையோ அவருடைய தொப்புளையோ அல்ல. ஹரிணியின் குரலையும், சிணுங்கல்களையும் தான்...! கேட்டுப் பாருங்கள்.


அடுத்து வருவது: வேலைக்கார நாயி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 January 2014

சி.ஐ.டி நகர் பாபு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மது அருந்துதல் உடல்நலத்திற்கு தீங்கானது.

உங்களுக்கு சர்பத் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா...? தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் அடிக்கடி ஓமத்திரவம் வாங்கி குடிப்பீர்களா...? ஆமாம் என்றால் உங்களுக்கு நிச்சயமாக சி.ஐ.டி.நகர் பாபுவை தெரிந்திருக்கும். நீங்கள் சி.ஐ.டி நகர் பக்கம் தலை வைத்துக்கூட படுத்ததில்லை என்றாலும் பரவாயில்லை. சி.ஐ.டி. நகர் பாபு என்பவர் தமிழகத்தின் எல்லா நியாயவிலை கடைகளிலும் காணப்படும் ஒரு சராசரி உயிரினம் தான். அதற்காக, டேபிளுக்கு பக்கத்தில் கையில் வெறும் கிளாஸோடு தயங்கியபடியே வந்து நின்று தலை சொறிவார்களே அந்த கூட்டத்தோடு பாபுவை சேர்த்துவிட வேண்டாம். அண்ணன் கொஞ்சம் யூனிக். பாபு அண்ணனைப் பற்றி அடையாளம் சொல்வதென்றால், ஐந்தரை அடி உயரம், உறுத்தாத உடல்வாகு, வயது முப்பத்தி ஐந்திலிருந்து நாற்பதுக்குள் இருக்கலாம். அங்கொன்று இங்கொன்று என்றே தலையிலுள்ள பாதி மயிர் நரைத்துவிட்டது. மங்காத்தா படம் வெளிவந்தபிறகு அவருடைய தலைச்சாய செலவு மிச்சமாகிவிட்டது. சிக்ஸ் பேக் இருக்கவேண்டிய இடத்தில் சிறிய அளவிலான ஸ்கூல் பேக். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவார் இல்லை. யூத்தாக தன்னை நிறுவிக்கொள்ள டீ-ஷர்டையும் ட்ராக்ஸையும் எடுத்து மாட்டிக்கொள்வார். பார்ப்பதற்கு நடிகர் மயில்சாமி போலவே தோற்றமளிப்பார். அவருக்கு தண்டபாணி என்ற புனைப்பெயரும் உண்டு...!

ஏதேனும் விடுமுறை நாளாக இல்லாத பட்சத்தில் காலை பத்து மணிக்கு முன்பு பாபு அண்ணன் வீட்டிலிருந்து கிளம்பமாட்டார். அதே சமயம் பத்து மணிக்கு மேல் வீட்டிலிருக்கவும் மாட்டார். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு...! 

பாபுவுக்கு நிரந்தர நண்பர்கள் என்று யாரும் கிடையாது. இன்றைய தினம் அவர் யாருடைய நண்பர் என்பது அவருக்கே தெரியாத சுவாரஸ்யம். அழுக்கு பிடித்த அந்த கடையின் பின்புறத்தில் உள்ள சிறிய அறைக்குள் அவர் நுழைந்ததுமே அவருடைய பழைய நண்பர்கள் கொஞ்சம் மிரளுவார்கள். சுற்றி அமர்ந்துள்ள மனிதர்களை ஒரு சில மணித்துளிகள் நோட்டம் விடுவார். அவர் யாரை தேர்ந்தெடுப்பார் என்பது உச்சபட்ச மர்ம முடிச்சு. அறையின் மூலையில் தனியாக அமர்ந்திருக்கும் ரிக்ஷாக்காரன், தீவிரமாக இலக்கியமோ பிஸினஸோ என்ன எழவோ பேசிக்கொண்டிருக்கும் ஜெண்டில்மென், மத்திய வயதினருக்கு மத்தியில் நீளமாக மயிர் வளர்த்திருக்கும் அந்த இளைஞன், ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்புல என்கிற ரீதியில் அமர்ந்திருக்கும் பொடியன்கள் எல்லோரையும் ஒரு எட்டு பார்வையால் வலம் வருவார். மோட்டுவளையை பார்த்தபடி கணநேரம் உக்கிரமாக சிந்திப்பார். தீர்க்கமான முடிவொன்றை எடுத்தவராக தன்னுடைய புதிய நண்பரை அணுகி தன்னை அறிமுகப்படுத்தி கொள்வார். புதிய மனிதர்களிடம் பேசத்துவங்குவது அவருக்கு ஒன்றும் சிரமமான காரியம் கிடையாது. வெள்ளை நிற ஜிப்பா, காதில் அணிந்திருக்கும் கடுக்கன், நீளமான தலைமயிர் என்று எதையாவது காட்டி சூப்பர் பாஸ் என்றபடி கச்சிதமாக பேச்சை துவங்கிவிடுவார். புகழ்ச்சிக்கு மயங்காத ஆண்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன...? கொஞ்சம் பேச்சு கொடுத்தால் போதும். சமர்த்தாக ஒரு ஸ்டூலை எடுத்துவந்து போட்டு உங்கள் அருகிலேயே அமர்ந்துவிடுவார். சொற்பொழிவை ஆற்ற தொடங்குவார்.

உங்க பேரென்ன பாஸ்...? எங்க வேலை பாக்குறீங்க...? என்பது போன்ற சம்பிரதாய கேள்விகளுடன் தான் ஆரம்பிப்பார். பேச்சினூடே அடிக்கடி அவருடைய முதல் வசனமான ஜிப்பா சூப்பர் பாஸை சொல்லிக்கொல்வார். முடிந்தால் நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க என்ற பிட்டையும் போட்டுவிடுவார். நிம்மதியான வேலை. இத்தனை அட்ராசிட்டியையும் உங்களுடன் வந்த நண்பர் யாரேனும் கலவரமாக பார்த்துக்கொண்டிருந்தால் சந்தேகமே இல்லாமல் அவர்தான் காமெடியன். கூட்டத்தில் யாராவது குறுந்தாடி வைத்திருந்தால் அவர் டைரக்டர். முரட்டுத்தனமாக யாரேனும் தோற்றமளித்தால் வில்லன். வில்லனைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் அவருடைய கையாட்கள். இந்த மூஞ்சிகளை எல்லாம் வச்சி படம் எடுக்குற ப்ரொட்யூசர் யாரென்று தானே கேட்கிறீர்கள்...? அது ஷாத்ஷாத் அந்த பாபு அண்ணனே தான்...! ப்ரொட்யூசர் சரி... பணம்...? என்ன பாஸ் வெளையாடுறீங்க...? படம் எடுக்கத்தானே பணம் தேவை. சும்மா ஒரு பேச்சுக்கு பணம் தேவையில்லை தானே...? பேச்சுக்கு இடையே சமயத்தில் ஹீரோவே காமெடியனாகவும், ப்ரொட்யூசர் வில்லனாகவும், டைரக்டர் ஹீரோவாகவும் மாறி மாறி அவதாரம் எடுப்பார்கள். புரியலையா...? இந்த கதையில எல்லாருக்கும் டபுள் ரோல்... போறுமா...?

பாபு அண்ணன் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதம் அலாதியானது. நம்முடைய வலது கையை எடுத்து அவருடைய வலது கையில் பற்றிக்கொள்வார். அந்த பற்றுதலில் ஒரு கரிசனம் இருக்கும். அச்சமயத்தில் அவருக்கு எப்போதெல்லாம் அன்பு ஊற்றெடுக்கிறதோ அப்போதெல்லாம் நம்முடைய புறங்கையை கடித்து வைப்பார். யாராவது நம்மை கடித்தால் வலிக்கும் தானே...? ஆனால் பாபு அண்ணன் கடித்தால் வலிக்காது. அது அன்புக்கடி. பாம்பு கொத்தி வைத்தாற்போல புறங்கையில் பல் பதிந்து அதிலிருந்து சிகப்பு நிற திரவம் கூட வழியும். அது பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஏதோ கே.எப்.சி கோழி கறித்துண்டை கடித்த களிப்புடன் பாபு அண்ணன் அமர்ந்திருப்பார். அதுதான் பாபு அண்ணன்...!

இவ்வளவு அன்பாக பழகும் பாபு அண்ணன் யார் தெரியுமா...? அவர் எங்கே பணிபுரிகிறார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். டைடல் பார்க்...! ஒன்றுமில்லை டைடல் பார்க் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து M70 என்ற பேருந்தை பிடித்தால் ஒரு மணிநேரத்தில் சி.ஐ.டி நகர் வந்து சேர்ந்துவிடலாம் என்று சொல்ல வந்தேன். அங்கே எம்ஜியார் ஒரு கையால் ரோப்பை பிடித்துக்கொண்டே மறுகையால் வாள் வீசுவது போலவோ அல்லது எம்ஜியார் ஜெயலலிதாவின் தோள்பட்டைகளை தாங்கிப்பிடித்திருப்பது போலவோ ஒரு பதாகை இருக்கும். அதற்கு கீழே எம்ஜியார் பக்தர்கள் குழு என்று எழுதியிருக்கும். அதற்கும் கீழே சில ப(க்)தர்களின் திருவுருவப் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றில் இடமிருந்து வலம் மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது எம்ஜியார் பாபு என்றும் அழைக்கப்படும் பாபு அண்ணன் தான். ஆமாம், பாபு அண்ணன் ஒரு தீவிர எம்ஜியார் பக்தர்.

அது மட்டுமல்ல, தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான தொண்டரும் கூட. எந்த அளவிற்கு தீவிரம் என்றால் நீங்கள் ரோஸ்மில்க் குடித்துக்கொண்டிருக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். அட ரோஸ்மில்க் என்னய்யா ரோஸ்மில்க். ஒரு ஆப்பிள் மில்க்ஷேக்கோ, ஸ்ட்ராபெர்ரி ஜூஸோ குடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அங்கே பாபு அண்ணா வருகிறார். நீங்கள் அவருக்கும் சேர்த்து ஒரு ஆப்பிள் மில்க்ஷேக் சொல்லுகிறீர்கள். அவர் அதை குடிப்பார் என்றா நினைக்கிறீர்கள்...? அம்மாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் அவர் அதனை குடிக்க மாட்டார். அவர் தன்னுடைய வாழ்நாளில் ஏழைகளின் பானமான அம்மா குடிநீர் தவிர்த்து வேறு எந்த திரவத்தையும் ஒரு மிடறு கூட குடிப்பதில்லை. அம்மா குடிநீரை சுமார் நூற்றியெண்பது மில்லி மட்டும் பருகக்கொடுத்தால் போதும். நடுத்தெரு என்றாலும் கூட கவலைப்படாமல் அம்மாவே நேரில் காட்சியளித்ததாக கருதிக்கொண்டு சாஷ்டாங்கமாக குப்புற விழுந்து வணங்கிவிடுவார். சில சமயங்களில் அப்படி விழுந்து வணங்கினார் என்றால் சில மணிநேரங்கள் ஆனாலும் கூட விழுந்தது விழுந்தபடியே தான் இருப்பார்.

நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது கூட உங்கள் காலில் யாரேனும் ஒரு சி.ஐ.டி. பாபு இடரலாம். அவரை தொந்தரவு செய்யாமல் தாண்டிச் செல்லுங்கள். அதுதான் நல்லது... உங்களுக்கு...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 09122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒலிம்பியா வாசலில் உள்ள சிட்டிபேங்க் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்காக காத்திருந்தேன். அந்த இடத்தில் ஒரு சிலை இருக்கிறது. ராமரோ, பெருமாளோ யாரென்று தெரியவில்லை. முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாட்டுக்கு வழி தெரியும்...? சட்டென ஒரு பெண் அந்த சிலைக்கு முன் வந்து நின்று சிலையுடன் பேச ஆரம்பித்துவிட்டார். அதாவது சினிமாவில் எல்லாம் ஹீரோயின்கள் கடவுளை நண்பனாக பாவித்து பேசுவார்களே (உ: ரோஜாவில் மதுபாலா) அதுபோல. நான் அவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தசமயம் என்னையே அறியாமல் என் உதட்டோரத்தில் லேசாக புன்னகை கசிந்திருக்கும் போல தெரிகிறது. அவள் எதார்த்தமாக என்னைப் பார்த்ததும் நாக்கை கடித்துக்கொண்டு டெம்ப்ளேட்டாக கைகூப்பி, கண்களை மூடி சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டாள். அப்புறமென்ன, ஃபிகர் சுமாராக இருந்ததால் என் முகத்திற்கு நேரே ப்ரொப்பெல்லர் காற்று வீசி, முன்னம்மயிரெல்லாம் சிலுசிலுத்து, டங்’கென மணியோசை எல்லாம் கேட்டு என்றெல்லாம் எழுத முடியவில்லை.

கொஞ்சநேரத்திற்கு டைம்பாஸ் செய்ய ஏதாவது புத்தகம் கிடைக்குமா என்று என்னுடைய பெட்டகத்தை துழாவியபோது கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா கிடைத்தது. 2008ன் இறுதியில் துவங்கி 2009 வரை கேபிளார் எழுதிய கொத்து பரோட்டா பதிவுகளின் தொகுப்பு. வருங்காலத்தில் ‘ஒயின்ஷாப்பை’ புத்தகமாக வெளியிட்டால் (!!!) அது எப்படியிருக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்வதற்காக அந்த புத்தகத்தை வாங்கியதாக நினைவு. உல்டாவாக எப்படி இருக்கக்கூடாது என்று சில விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. அடல்ட் ஜோக்குகள் தவிர சொல்லிக்கொள்ளும்படி எதுவும் உருப்படியாக கிடையாது. கேபிளே புத்தகத்தை பற்றி சும்மா ‘டைம்பாஸ்’ மச்சி என்று சொல்லியிருப்பது பொருத்தம். கொ.ப வாங்கிப் படித்ததில் ஒரேயொரு நல்ல விஷயம் – ஒருகாலத்தில் கேபிள் கூட அமெச்சூராகத்தான் எழுதியிருக்கிறார். கலவை இடுகைகள் விஷயத்தில் கேபிளை ரோல் மாடலாக நினைக்கும் என் போன்றவர்களுக்கு ஒரு சிறிய ஆறுதல். அம்புட்டுதேன்...!

கொ.ப.வில் டக்கீலா பற்றி கேபிள் சங்கர் :-
மெனுகார்டில் டக்கீலாவை பார்த்ததும் ஷகீலாவை பார்த்தவன் போல் உற்சாகமாகி ஒரு ஸ்மாலை அர்டர் செய்தேன். பார்மேன் ஒரு சின்ன டெஸ்ட் டூயூப் போன்ற ஓரு குடுவையில் ஓரு ஸ்மாலுடன் ரெண்டு எலுமிச்சையுடன் உப்பை ஓரு டேபிளின் முன் வைத்தான். எதனுடன் அதை அடிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது, ’அப்படியே சாப்டணும்னுஎன் நண்பர் ஹார்லிக்ஸ் பேபி போல் சொல்ல ஒரே ஷாட்டில் அடித்தேன். நெஞ்சுக்குள் சல்லென்று இறங்கி, உடனடியாய் கீழே போய் ஓரு 'பக்' என தீப்பிழம்பு போல் சர்ரென்று மேலேறி குப்பென்று வாய் வழியாய் தீ வர, உடனடியாய் உப்பை எலுமிச்சையில் தோய்த்து நாக்கில் வைத்து தேய்க்க, சூப்பர். டக்கீலா.. ஒரு வெளிநாட்டு சாராயம்...!

நையாண்டி பார்த்தேன், தொப்புள் காட்சி உட்பட. நஸ்ரியா கதாபாத்திரம் அரை லூசெல்லாம் இல்லை. முழு லூஸு. அதற்கு மிக பொருத்தமாக ஓவியாவுக்கு வாய்ஸ் கொடுப்பவரே டப்பிங் பேசியிருக்கிறார். படத்தில் புன்முறுவல் அளவுக்கு ஆங்காங்கே சிரிப்பு வருகிறது. மனம் விட்டு சிரித்த ஒரே காட்சி சத்யனின் லுங்கி டான்ஸ் மட்டும்தான்.

குடிப்பழக்கம் உள்ள ஒருவன் மதுக்கூடத்திற்கு சென்று ஒரு துளி கூட குடிக்காமல், குடிப்பவரை வாய்பார்த்து விட்டு வருவது எவ்வளவு மோசமான அனுபவம். சனியன்று மாலை கிடைத்தது. சிறுதூறல், சில்லென காற்று, சில்ட் பீர் கிடைத்தால் எப்படி இருக்கும்...? ஆனால் பார்க்க மட்டும் என்றால்...? சிங்கம் ஒரு கிங்ஃபிஷர் பியரோடு என் முன்னால் அமர்ந்திருந்தார். எனக்கு அடிக்க வேண்டும் போலிருந்தது. ஒன்று, பியரை எடுத்து ‘பாட்டம்ஸ் அப்’ அடிக்க வேண்டும். அல்லது பாட்டிலை எடுத்து சிங்கத்தின் மண்டையில் அடிக்க வேண்டும். மிகுந்த சிரத்தை எடுத்து பொறுத்துக்கொண்டேன். கூடுமான வரை சிங்கத்திடம் பேச்சு கொடுக்காமல், குறிப்பாக வரலாறு சம்பந்தமாக பேச்சு கொடுக்காமல் உட்கார்ந்திருந்து வேடிக்கை மட்டும் பார்த்தேன். FYI, நான் திரவ உணவு உட்கொள்வதை நிறுத்தி / நிறுத்தப்பட்டு ஐம்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது :)

சனியிரவு தூர்தர்ஷனில் ஸ்போர்ட்ஸ் க்விஸ் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாத காலகட்டத்தில் எனக்கு கிடைத்த ஒன்றிரண்டு பொ.போ நிகழ்ச்சிகளில் ஸ்போர்ட்ஸ் க்விஸ் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி இன்னமும் (பன்னிரண்டு வருடங்களாக) தொடர்ந்துக் கொண்டிருப்பது சர்ப்ரைஸ். சுமந்த் சி ராமன் நிகழ்ச்சியை நடத்திச்செல்லும் விதம் அலாதியானது. ஒருமணிநேர நிகழ்ச்சி என்றால் அதில் விளம்பர இடைவேளை தவிர்த்து ஒரு நொடியைக் கூட வீணாக்கமாட்டார் என்று நினைக்கிறேன். என்ன ஒன்று, சில நேயர்கள் லைன் கிடைத்து பதில் தெரியாமல் நேர விரயம் செய்கிறார்கள். அது போன்றவர்களை அல்லையில் போட்டு மிதிக்கலாம். சுமந்த் சி ராமன் அதிகம் கவனிக்கப்படாத ஒரு லெஜன்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

வணக்கம் சென்னை படத்தின் ஒசக்க பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இப்படியொரு பாடல் ‘மொக்கை’ சிவாவிடம் வந்து கிடைத்திருப்பது காலக்கொடுமை. அதிலே குற்றாலத்துண்டை வைத்து ஒரு பெசல் ஸ்டெப் போடுகிறார் பாருங்கள் அடடா அவசியம் பார்க்கவும்.

வருகிற சனிக்கிழமை துவங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு புனே வாசம். ஒயின்ஷாப் திறக்கப்படாது என்பதை அறிக :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 April 2013

பிரபா ஒயின்ஷாப் - 08042013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில் ஒரு நாள் - படம் பற்றியதல்ல. என்னுடைய பள்ளிப்பருவ நண்பர் ஒருவர் திடீரென முந்தய வாசகத்தில் குறிப்பிட்ட படத்திற்கு டிக்கெட் எடுத்து வைத்திருப்பதாக அழைத்தார். நண்பர் என்னைப்போன்ற  ஏழைகளை தன்னுடைய டெபிட் கார்டை வைத்து சொறிந்துவிடக் கூடியவர். தங்க முட்டையிடும் வாத்து. அவருடைய அன்பின் பாதையில் சென்று S2 மாலில் சுற்றி ப்ளாக் ஃபாரஸ்ட், சாக்கோ லாவா கேக்கெல்லாம் வாங்கி சாப்பிட்டாயிற்று. அடுத்தது தாக சாந்தி. அங்கே இங்கே என்று சுற்றித்திரிந்து இறுதியில் கழுதை கெட்டா குட்டிச்சுவரு என்ற சொலவடைக்கு ஒத்து தி.நகர் ஈகிள் பாருக்கு சென்று அமர்ந்தோம். நண்பர் சிக்நேச்சர் தவிர்த்து வேறு எதையும் தொடுவதில்லை என்று தன்னுடைய வரலாற்று பெருமையை பேசிக்கொண்டிருந்தார். சிக்நேச்சர் டேபிளுக்கு வந்தது போல இருந்தது. அடுத்த நிமிடம் நண்பர் திரவத்தை ஒரே மடக்கில் குடித்துவிட்டு சைட் டிஷ்ஷை சாப்பாடு போல சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். எனக்கு மட்டும் ஏன் இந்தமாதிரியான நண்பர்கள் வாய்க்கிறார்கள். என்னுடைய குணநலன்களுக்கு ஒத்திசைகிற நண்பர் வாழ்நாளுக்கும் கிடைக்க வாய்ப்பே இல்லை. எல்லோருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இயற்கையின் படைப்பில் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். இன்னமும் எனக்கான பரமனை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

*************************

ஜுராசிக் பார்க் 3Dயில் வெளிவந்திருக்கிறது. நான் முதன்முதலில் பார்த்த ஆங்கிலப்படம் அது தானென்று நினைக்கிறேன். என் வயதையொட்டிய இளைஞர்களில் பெரும்பான்மைக்கு ஜுராசிக் பார்க் படத்தின் மீதான சுவாரஸ்ய நினைவுக் குவியல் இருக்கக்கூடும். தேவி வளாக திரையரங்கங்கள் கிட்டத்தட்ட என்னுடைய ஹோம் தியேட்டர் போலாகிவிட்டன. வாரத்தில் ஏதாவது ஒரு படமாவது தேவியில் பார்த்துவிடுகிறேன். கூட்டமும் அதிகம் சேருவதில்லை என்பதால் ஏதோ எனக்கு மட்டும் ஸ்பெஷலாக திரையிடுவது போன்ற உணர்வு தோன்றி உற்சாகமூட்டுகிறது. ஜுராசிக் பார்க்கை தேவி பாலாவில் பார்த்தேன். நான்கைந்து ஆங்கில 3D படங்களின் ட்ரைலர் காட்டினார்கள். அத்தனையும் அசத்தலாகவே இருக்கின்றன. அவற்றை புரிந்துக்கொள்ள வேண்டியாவது ஆங்கிலம் கற்க வேண்டும். திரையரங்குகளில், ஒரு கையெழுத்து, மாறியது தமிழனின் தலையெழுத்து என்று ஒரு செய்திப்படம் போடுகிறார்கள். அதைப்பார்க்கும்போது புகையிலை தரக்கூடிய கொடிய... மிகவும் கொடிய நோய் அப்படியொன்றும் அருவருப்பாக தோன்றவில்லை. நல்லவேளை முகேஷ் இதையெல்லாம் பார்ப்பதற்கு உயிரோடு இல்லை. தமிழில் டிஜிட்டல் ரெஸ்டோரேஷன் பம்மாத்து போலவே ஹாலிவுட்டில் 3D டக்கால்ட்டி போல. எனினும், 3D நுட்பம் தாண்டி கிளாசிக் சீரியஸ் என்பதற்காக டைட்டானிக், ஜுராசிக் பார்க் போன்றவைகளை மறுபடி பார்க்கலாம். அநேகமாக அடுத்த மாதத்தில் ஷெர்லின் சோப்ராவின் இயல்பான நடிப்பில் காமசூத்ரா 3D வெளியாகக்கூடும்.

*************************

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சம்பவங்களும் நமக்கு ஏதோவொன்றை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. உதாரணத்திற்கு நீயா நானா. சில சமயங்களில் சில்லறைத்தனமான தலைப்புகளை ஒட்டி விவாதம் நடந்தாலும் கூட அதிலிருந்து ஒன்றிரண்டு படிப்பினைகளாவது கிடைத்து விடுகின்றன. நேற்றைய நிகழ்ச்சியில் இரண்டு பேர் பேசியது எனக்கு மனதளவில் தெளிவைக் கொடுத்தது. முதலாவது, 56 இடங்களில் நேர்முகத்தேர்விற்கு சென்று வேலை கிடைக்காமல் 57வது இடத்தில் பணம்கட்டி ஏமாந்து தற்கொலைக்கு முயன்று மீண்ட இளைஞர். ஒருமுறை தற்கொலைக்கு முயன்றாலும் கூட, பணம் கட்டி ஏமாந்தாலும் கூட, தற்போது அத்தகைய குழப்பங்களில் இருந்து மீண்டு தீர்மானமான வாழ்க்கையை எட்டியிருக்கும் அந்த இளைஞர் என்னுடைய கண்களுக்கு சாதனையாளராகவே தெரிகிறார். நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறவிருந்த தற்கொலை தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

இரண்டாவது சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட திருநங்கை. நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கிற திருநங்கைகள் எப்படியிருக்கிறார்கள். பகலில் ரயிலில் கைதட்டி பிச்சை எடுக்கிறார்கள், மாலையில் டாஸ்மாக்கில் குடித்துக் களிக்கிறார்கள், இரவில் சப்வேக்களுக்கு அருகில் நின்று அழைக்கிறார்கள். சரி, அதைப்பற்றி இன்னொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன். ஊடகங்களில் வெளிப்படும் திருநங்கைகள் தங்களுக்கென்று ஒரு துக்க பிலாசபி வைத்திருப்பார்கள். எங்களுக்கும் மனசிருக்கு என்பது போன்ற நெஞ்சை அடைக்கும் துக்கம் கலந்த வார்த்தைகளை வெளிப்படுத்துவார்கள். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர் அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டவராக தெரிந்தார். எவ்வளவு நாள் தான் நானும் செண்டிமெண்டாவே ஃபீல் பண்ணுறது என்று கேட்டு, மிகவும் ஹாஸ்யமாக தன்னுடைய வித்தியாச அனுபவங்களை சில நிமிடங்கள் பகிர்ந்துக்கொண்டார். அவர் தன்னுடைய ஞான நிலையை அடைய எத்தனை இன்னல்களை கடந்து வந்திருப்பார் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற திருநங்கைகள் அவரை ஒரு முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம்.

*************************

தொண்டை மண்டலத்தைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த விஜய நகரப் பேரரசில் ராயர் என்ற கன்னட பிராமணர்கள் பலர் முக்கியப் பதவிகளை வகித்தனர். ராயர்களுக்கு அதன் பொருட்டு அரசு மானியமாக அளித்த சென்னையின் வடக்குப்பகுதி ராயர்கள் வசித்த ராயர்புரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி ராயபுரம் ஆனது. ராயபுரம் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை உயர் வகுப்பினர் வசிக்கும் செல்வபுரியாய் இருந்த செய்தி இன்று பலருக்கும் தெரியாது. வசதிமிக்க பார்சி இனத்தவரும், ஆங்கில கனவான்களும் சிரும்பி வசித்த கடற்கரையுடன் கூடிய ராயபுரத்தின் கடந்தகாலம் அடங்கிவிட்ட பேரலையாய் நம்முன் நிற்கிறது. (ராயபுரம் பற்றி நம்ம சென்னை ஏப்ரல் மாத இதழில்...)

*************************

உலகிலேயே அருவருப்பான உணவுகள் என்று சில உள்ளன; போலவே குரூரமான முறையில் தயார் செய்யப்படும் உணவுகள் சில உள்ளன. மேற்கூறிய இரண்டு பட்டியலிலும் இடம்பெற தகுதியுள்ள ஜப்பானிய மீன் உணவுவகை - இகிஸுகுரி. உணவகத்தில் ஒரு தொட்டியில் மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மீனை காட்டினால், உடனடியாக சமையல் வல்லுநர் அதனை பிடித்து உயிருடன் சமைத்துக் கொடுப்பார். உயிருடன் எப்படி சமைப்பது ? பார்க்க காணொளி:


இப்ப சொல்லுங்க, இனிமேல் தியேட்டரில் முகேஷை பற்றிய செய்திப்படம் போடும்போது கண்ணை மூடிக்கொள்வீர்களா ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 April 2013

அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானில் பிற தீவுகள் தவிர்த்து போர்ட் ப்ளேரிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால் முன்னுரிமை கொடுக்கவேண்டியவை. காரணம் இந்த இடங்களை சுற்றிப்பார்க்கும்போது உங்களுக்கு அந்தமானை பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும். எஞ்சியிருக்கிற பயணத்தை எப்படி திட்டமிடலாம் என்கிற எண்ணம் கிடைக்கும். நினைவிருக்கட்டும் என்னுடைய கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ள இடங்கள் தவிர்த்து அந்தமானில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன. மொத்தத்தையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகலாம். எனவே சரியான தேர்வு, திட்டமிடல் அவசியமாகிறது. அதனால் அந்தமான் சுற்றுலாவின் முதல்நாளாக போர்ட் ப்ளேர் நகருலாவை வைத்துக்கொள்வது உகந்தது.

டூர் ஏஜெண்டுகளை அணுக வேண்டிய அவசியமில்லை. பத்தடிக்கு ஒன்றாக இருக்கும் ஏதாவதொரு டிராவல்ஸில் இருந்து நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு காரை புக் செய்துக்கொள்ளவும் அல்லது ஆட்டோ ஒன்றை டிரைவரோடு சேர்த்து வாடகைக்கு பிடித்துக்கொள்ளவும். மாற்றுத்துணி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் முழுக்க முழுக்க தகவல் சார்ந்தது என்பதால் விருப்பமிருந்தால் குறிப்பெடுக்க நோட்டு - பேனா எடுத்துச்செல்லலாம். காலை எட்டு மணிக்கு டிபனை முடித்துவிட்டு கிளம்புவது உத்தமம்.

சாத்தம் மர-அறுவை தொழிற்சாலை
சாத்தம் என்கிற தனித்தீவில் அமைந்துள்ள வரலாற்று பெருமைகள் நிறைந்த தொழிற்சாலை. அந்தமான் தீவுகளிலேயே பாலத்தால் இணைக்கப்பட்ட ஒரே தீவு. ஆசியாவின் பழமையான தொழிற்சாலைகளுள் ஒன்று. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் குண்டுமழை பொழிந்த இடம். தொழிற்சாலையில் இன்னமும் போர்த்தளும்புகள் இருக்கின்றன. நிறைய தமிழ் தொழிலாளிகள் தென்படுகின்றனர். அவர்களிடம் அன்பு என்ற சமாச்சாரத்தை கொஞ்சம் காட்டினால் போதும், அவர்களாகவே முன்வந்து உங்களுக்கு தொழிற்சாலையை சுற்றிக்காட்டி அங்கு நடைபெறும் பணிகளை விளக்குவார்கள். தொழிற்சாலை வாயிலில் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. தொழிற்சாலையை பற்றியும் ஜப்பானிய படையெடுப்பை பற்றிய தகவல்கள் ஆங்கே தொகுக்கப்பட்டுள்ளது. மரத்தில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

சாமுத்ரிகா அருங்காட்சியகம்
இந்திய கடற்படையின் பராமரிப்பின் கீழ் உள்ள அருங்காட்சியகம். வாயிலிலேயே பிரம்மாண்ட திமிங்கலத்தின் எலும்புக்கூடு வரவேற்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் அந்தமானின் வரலாறு மற்றும் புவியியல் சார்ந்த தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம். மேலும் அந்தமானின் கடல்வளங்கள், மீன்கள், பவளப்பாறைகள் பற்றிய தகவல்களும் அடக்கம். சாமுத்ரிகாவின் எதிரிலேயே உயிரியல் அருங்காட்சியம் ஒன்றும் அமைந்துள்ளது. சரியான திட்டமிடல் காரணமாக அங்கே செல்ல முடியவில்லை. பெயரின்படி அந்தமானின் உயிரியல் வளங்கள், அரிய வகை முதலைகள், ஆமைகள் பற்றிய தகவல்கள் அங்கே இருக்கலாம்.

மனிதவியல் அருங்காட்சியகம்
அந்தமானில் அவசியம் பார்க்கவேண்டிய அருங்காட்சியகம். அந்தமான் மக்களின் மத, மொழி, கலாசார பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்கள் இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. தவிர அந்தமானின் வெவ்வேறு வகையான பழங்குடியினரை பற்றிய அரிய புகைப்படங்கள், நிறைய தகவல்கள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை தெரிந்துக்கொள்ளலாம். அருங்காட்சியகத்தின் கீழே சில கடைகள் அமைந்துள்ளன. ஜரவா பொம்மைகள், டீ-ஷர்ட்டுகள், கைவினைப்பொருட்கள் முதிலியன கிடைக்கின்றன. முக்கியமாக அந்தமான் டூரிஸ்ட் கைடு கிடைக்கிறது. விலை 100ரூ. 

செல்லுலர் ஜெயில்
அந்தமானில் பார்த்தே தீரவேண்டிய வரலாற்று சிறப்பிடம். முதலில் சில அறைகளில் சிறை குறித்த வரலாற்று தகவல்களும் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அங்கே கொடுக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய வடிவமைப்புகள் கதிகலங்க வைக்கின்றன. முந்தய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது போல அந்தமானை பொறுத்தவரையில் காந்திக்கு இணையாக வீர சவார்க்கர் போற்றப்படுகிறார். சவார்க்கர் முப்பது ஆண்டுகளுக்கு மேல் அங்கே சிறைப்படுத்த பட்டுள்ளார். சாவர்க்கரின் நண்பர்கள் பலர் சிறைக்குள்ளிருந்தபடி பல போராட்டங்கள் நிகழ்த்தி ஆங்கிலேயர்களால் தண்டனைகளுக்கு உட்பட்டு உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அந்தமான், அந்தமான் சிறை சுதந்திரத்திற்கு முன்பு காலா பாணி (கருப்பு நீர்) என்று அழைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து அந்தமான் சிறைக்கு ஒருவர் கப்பலேற்றப்பட்டுவிட்டால் அவர் உயிரோடு திரும்புவதற்கு சாத்தியமில்லை என்னுமளவிற்கு கொடுமையான இடம். அவ்வாறு உயிரிழப்பவர்களை கல்லைக் கட்டி கடலில் வீசும் முறை கையாளப்பட்டிருக்கிறது.

மீன் காட்சியகம் & அறிவியலகம்
மீன் காட்சியகம் சிறையிலிருந்து நடை தொலைவிலேயே அமைந்துள்ளது. இரண்டு சிறிய அரங்கங்களில் மீன்கள், பவளப்பாறைகள், அவற்றை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அறிவியியலகத்திற்கு சரியான திட்டமிடல் காரணமாக செல்ல முடியவில்லை. ஆனால் அது அவசியம் பார்த்திருக்க வேண்டிய இடம் என்று அறிகிறேன்.

இதுவரையிலும் குறிப்பிட்ட இடங்களை நீங்கள் காலை எட்டரை மணிக்கு துவங்கி மாலை மூன்று மணிக்குள் பார்த்திருக்க வேண்டும்.

காந்தி பார்க்
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறிய பூங்கா. மாலை மூன்று மணிக்கு முன்பு பெரிதாக ஆரவாரங்கள் இருக்காது. காதலர்கள் அமர்ந்து அளவளாவ உகந்த இடம். மாலையில் படகு சவாரி நடைபெறுகிறது. சிறிய அளவிலான ஜப்பானிய வழிபாட்டு தளத்தை காணலாம்.

ரைட்டு. நான்கு அல்லது நான்கரை மணிக்கு காந்தி பூங்காவிலிருந்து கிளம்பி கார்பின்ஸ் கோவ் கடற்கரையை அடைவது உத்தமம்.

கார்பின்ஸ் கோவ்
மெரீனாவோடு ஒப்பிடும்போது கார்பின்ஸ் கோவ் மிக மிகச் சிறியது. எனினும் அநியாயத்துக்கு பராமரிக்கிறார்கள். நாயத்துக்கு நாமெல்லாம் (சென்னை வாசிகள்) மெரீனாவின் புகைப்படத்தை நடுஹாலில் மாட்டிவைத்து தினமும் கும்பிட வேண்டும். வாட்டர் ஸ்கூட்டர் சவாரி கிடைக்கிறது. ஒரு ட்ரிப்புக்கு 350ரூ. கார்பின்ஸ் கோவுடைய சிறப்பு அங்குள்ள சாய்வுப்பலகைகள் தான். பேசாமல் மல்லாக்க படுத்து கொஞ்ச நேரம் அமைதிக்கடலில் மூழ்கலாம். உணர்ச்சிவசப்பட தேவையில்லை. அந்தமானில் கும்மாளம் போடுவதற்கு வேறுசில கடற்கரைகள் உண்டு. கார்பின்ஸ் கோவ் சாத்விக கடற்கரை. அமைதியாக அமர்ந்து ரசித்துவிட்டு திரும்புவதே சிறந்தது.

அங்கிருந்து கிளம்பும்போது மணி ஆறு அல்லது ஆறரை ஆகியிருக்கலாம். நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் மறுபடியும் செல்லுலர் ஜெயிலுக்கு சென்றால் அங்கே ஒளியும் ஒலியும் காட்டுவார்கள். (Sound & Light show). அதை பார்த்துவிட்டு இரவு பாருக்கு திரும்பலாம்.

அடுத்து வருவது: அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment