17 April 2017

பிரபா ஒயின்ஷாப் – 17042017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சுஜாதாவின் கமிஷனருக்குக் கடிதம் படித்தேன். நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி, கமிஷனருக்குக் கடிதம் இவையெல்லாம் சுஜாதா ஆரம்பகாலத்தில் எழுதிய நாவல்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் நான் வாசிப்பின் அடுத்தக்கட்டத்திற்கு போகவேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று சோதிக்க வேண்டும். கதையின் துவக்கத்தில் மைசூரு ரோடு ஆர்.வி.காலேஜ் திருப்பத்தில் ஒரு விபத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஹிட் அண்ட் ரன். அந்த கேஸ் காவல்துறையிடம் வருகிறது. விறுவிறுப்பான ஒரு புலனாய்வு நாவலை படிக்கப் போகிறோம் என்று உட்கார்ந்தால் ஒரு முக்கோணக் காதல் கதை. அதுவும் ரொம்ப ரொம்ப பழையதாக இருக்கிறது. இடையிடையே குற்ற வழக்குகளும் பின்னணியில் வருகிறது. ஆனால் அதில் துளி கூட சுவாரஸ்யமில்லை. கதையில் மாயா என்கிற பெண் காவல்துறையில் ஏ.எஸ்.பி.யாக பதவியேற்கிறாள். சமூகத்தை திருத்தி சேவை செய்ய வேண்டும் என்பது அவளுடைய நோக்கம். ஆனால் காவல்துறையைப் பொறுத்தவரையில் அத்துறையில் ஈவு, இறக்கம், ஈர வெங்காய மனிதாபிமானத்திற்கு எல்லாம் வேலையே இல்லை என்பது கதையின் அடிக்குறிப்பு. சமூக சேவை செய்ய விரும்பிய மாயா இறுதியில் காவல்துறை பணியை ராஜினாமா செய்துவிட்டு காதலிக்கக் கிளம்பிவிடுகிறாள்.

அடுத்து படிப்பதற்காக என்னிடம் உயிர்மையின் கம்பெனி எழுத்தாளர்கள் மூவருடைய புத்தகங்கள் இருக்கின்றன. எதை (முதலில்) தொடலாம் ?

    1. அஜ்வா – சரவணன் சந்திரன்
    2. நீர் – விநாயக முருகன்
    3. நீருக்கடியில் சில குரல்கள் – பிரபு காளிதாஸ்

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. குழம்பிவிடாதீர்கள். இது ஒரு படத்தின் தலைப்பு. VSOP என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். படத்தின் தலைப்பை சுருக்கினால் VSOP என்று வருவதே பாவம் அதன் இயக்குநருக்கு ஏதேச்சையாகத்தான் ஸ்ட்ரைக் ஆகியிருக்கிறது. டைட்டில் டிஸைனில் வருவதுகூட சோடா மூடி தானே தவிர நீங்கள் நினைப்பது போல கிடையாது. 

இரண்டரை மணிநேர படத்தில் கடைசி கால் மணிநேரம் மட்டும்தான் விஷயமிருக்கிறது. அதுகூட ஒரு குறும்பட அளவிற்குத்தான் ஓர்த். பிச்சைக்காரனுக்கு பிச்சைக்காரன் செக்யூரிட்டி என்பதுபோல ராஜேஷ் – ஆர்யா – தமன்னா என்று கூட்டணி கனக்கச்சிதம். ஆர்யா அடிக்கடி ஹா ஹா ஹா செம கலாய் மச்சி செம கலாய் மச்சி என்பதும், பதிலுக்கு சந்தானம் அற்ற்றிவு கெட்டவனே என்று கடிந்துகொள்வதுமாகவே கடந்து செல்கிறது முக்கால்வாசி படம். இதிலே வாசு... சரவணா... வாசு... சரவணா... என்று ஆர்யாவும் சந்தானமும் அடிக்கடி மாறி மாறி சிணுங்கிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது ஒரு 'கே' படமோ என்று நினைக்கும்படி ஆகிவிடுகிறது. ஒரேயொரு கதையை வைத்துக்கொண்டு ஆறு படங்களை இயக்கிவிட்டார் ராஜேஷ். இதிலே சிவா மனசுல சக்தி மட்டும் கொஞ்சம் ஒப்புக்கொள்ளக்கூடிய ரகம். அதன்பிறகு கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பின் லுல்லா சைஸுக்கு ஆகிவிட்டார். ராஜேஷுக்கெல்லாம் கூச்சமாகவே இருக்காதா என்று ஒரே யோசனையாக இருக்கிறது. ராஜேஷை விட்டுத் தள்ளுங்கள். சந்தானம் இருக்கிறார், டைம்பாஸ் ஆகிவிடும் என்று தனக்குத்தானே அற்பசமாதானம் செய்துக்கொண்டு அன்னாருடைய படங்களை திரையரங்கிற்கு சென்று பார்க்கும் மொக்கைகள் இருக்கும்வரை ஆறு படங்களென்ன நூறு படங்கள் கூட இயக்குவார். 

நேற்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சுஜாதா எனும் பன்முக ஆளுமை நிகழ்வு குறித்த முன்னறிவிப்பை கவனிப்பதற்கு தாமதம் செய்துவிட்டேன்.

நடந்துமுடிந்தவாசகசாலை நிகழ்வின் அழைப்பிதழ்
தனிப்பட்ட சில காரணங்களால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதது குறித்து வருத்தம்தான். குறிப்பாக அதிஷா, பரிசல் இருவருடைய பேச்சையும் கேட்க முடியாதது நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். அதனை குறைக்கும் விதமாக யூடியியூபில் அந்நிகழ்வின் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் நாவலைப் பற்றி அதிஷா பேசியிருக்கிறார். அந்த நாவலை படித்தபோது எனக்கு தோன்றிய விஷயங்கள் அதிஷாவோடு ஒத்துப்போகின்றன. நிறைய இடங்களில் அதிஷா ஒரு குழந்தை போல பேசுகிறார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையெல்லாம் யோசிக்காமல் மனதிலிருந்து வெளிப்படையாக பேசுகிறார். மதராஸப்பட்டினம் படத்தின் முதல் பாதி காட்சிகள் ரத்தம் ஒரே நிறத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என்று நேரடியாகவே குறிப்பிடுகிறார். பொன்னியின் செல்வன் நாவலை தன்னால் முழுமையாக படிக்கவே முடியவில்லை. ரொம்ப போர் என்கிறார். எனக்கெல்லாம் இப்போது வரை சக வாசிப்பாளர்கள் யாரிடமாவது அளவளாவினால் அவர்களிடம் நான் பொன்னியின் செல்வன் படித்ததில்லை என்று சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது. சுஜாதாவின் சிறுகதைகள் பற்றி பரிசல் பேசியிருக்கிறார். பரிசலின் பேச்சைக் கேட்கும்போது இந்த பதிவின் முதல் சில வரிகளை அழித்துவிடத் தோன்றுகிறது. பதினைந்து நிமிடங்கள்தான் பரிசலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் பாலம் கதை விடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போலவே சுஜாதாவின் மறுபடி (1), முதல் மனைவி போன்ற சிறுகதைகள் என்னால் மறக்க முடியாதவை.

துல்லியமான ஒலி, ஒளி அமைப்புடன் வாசகசாலை நிகழ்வை படம் பிடித்து யூடியூபில் அளித்த ஸ்ருதி தொலைக்காட்சிக்கும், காணொளி இணைப்பை பகிர்ந்துக்கொண்ட எடிட்டர் கெளதமுக்கும் என் அன்பு கலந்த நன்றி. இணைப்புகள் உங்கள் பார்வைக்கு.


தோழர் உதயநிதி சுமாராக நடித்தாலும், அவருடைய படங்கள் ரொம்ப சுமாராக இருந்தாலும் அவருடைய படங்களில் இரண்டு விஷயங்கள் நன்றாக அமைந்துவிடுகின்றன. ஒன்று லட்டு லட்டான ஹீரோயின்கள். இரண்டாவது, அட்லீஸ்ட் ஒரு ஹிட் பாடல். நயன்தாரா, எமி ஜாக்சன் என்று உதயநிதியின் லட்டு லிஸ்டில் புதுவரவு ரெஜினா (முழுப்பெயர் தமிழ் எழுத்துருவில் கஷ்டம்). படம் – சரவணன் இருக்க பயமேன். மாநகரம் பார்த்துவிட்டு தமிழ் சினிமாவில் ரெஜினாவை எவ்வளவு சொத்தையாக பயன்படுத்துகிறார்கள் என்று வருத்தப்பட்டேன். இப்பொழுதுள்ள தமிழ் நடிகைகளில் செக்ஸியான உதடுகளை கொண்டவர் யாரென்று ஒரு ஆய்வு செய்தால் அதில் சந்தேகமே இல்லாமல் ரெஜினா முதலிடம் பிடிப்பார். ஆக்ட்ரெஸ் ட்ரோல் போன்ற பலான ஃபேஸ்புக் பக்கங்களில் ரெஜினாவை செட்யூஸிங் குயின் என்கிறார்கள். தமிழில் வெறுமனே ஹீரோக்களை திருத்திக்கொண்டிருக்கிறார். சரவணன் இருக்க பயமேனிலும் விசேஷமாக எதுவும் இருந்துவிடப் போவதில்லை. இப்போதைக்கு இந்தப்பாடலைத் தவிர. உதயநிதிக்கு நண்பேன்டாவில் ஊரெல்லாம் உன்னைக்கண்டு, மனிதனில் அழகழகா அவ தெரிவா அமைந்தது போல ச.இ.ப.வில் எம்புட்டு இருக்குது ஆசை அமைந்திருக்கிறது. டி.இமானின் இசையில் ஷான் ரோல்டன், கல்யாணி பாடியிருக்கும் ஸ்லோ பாய்சன் உங்களுக்காக –


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

Mayilan said...

இந்த ராஜேஷ் வி.எஸ்.ஓ.பி எதேச்சையாக கவனித்ததை இரண்டாவது முறை பதிவு செய்வது எதேச்சையாக இருக்க முடியாது :)

வி.மு இதுவரை வாசித்ததில்லை. அஜ்வா பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ச.ச'வின் சிறந்த நாவல் அது என்பேன்.ஆரம்பம் கொஞ்சன் தொய்வாக இருக்கும். கடைசியில் சரிகட்டி பிரமாதமாக முடிப்பார். நீருக்கடியில் சில குரல்கள்
நன்றாக வந்திருக்க வேண்டிய நாவல்.உரசல் வந்த பிறகு ஒருவரை பற்றி ஏதாவது சொன்னால் அது காழ்ப்புணர்வாக கொள்ளப்படும். அதனால் நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரெஜினாவை பற்றி பேசவேண்டும். நிறைய்ய்ய்ய...

Anonymous said...

அதிஷா ஏன் லாடு லபக்குதாசு மாதிரி பேசுகிறார். பரிசல் கிருஷ்னா பேச்சு நிதானமாக இருக்கு.

ராஜி said...

பன்னிக்குட்டிக்கிட்ட கத்துக்கிட்டீங்களா லேட்டா விமர்சனம் செய்ய.