Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

6 July 2018

விக்டரின் திருமண விழா !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அன்றைய தினம் ஒருபுறம் விக்டரும் லிசாவும் திருமணம் செய்துகொள்ள, மறுபுறம் விக்டருக்கும் சத்யாவுக்குமான நட்பு இன்னொரு புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைத்தது !

விக்டரின் திருமண விழாவிற்கு அவன் மீது ஒருதலையாய் மையல் கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள். விக்டரையும் லிசாவையும் ஜோடியாகக் கண்டதும் ஆற்றாமையால் புலம்பத் துவங்கினாள் ஒருத்தி. இன்னொருத்தியோ அவன் மீது பொய்க்கோபம் கொண்டு அடிக்கப் போனாள். ஒருத்தி, இதோ மேடையேறி வந்து உன்னுடன் நின்று கொள்கிறேன் என்று பாய, மற்றவள்கள் அவளை பிடித்து நிறுத்தினார்கள். இதற்குள் ஒருத்தி ஏதோ நடந்தது நடந்துவிட்டது, விக்டர் தனக்கு பொருத்தமானவளைத் தானே தேர்வு செய்திருக்கிறான் என்றதும், மற்றவர்கள் அதனை ஆமோதித்து விக்டரை வாழ்த்தத் தயாரானார்கள். இப்படித்தான் விக்டரின் மணவிழா துவங்கியது.

ஒரு பக்கம் மணக்க, மணக்க பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது. சத்யாதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான். சத்யா என்பவன் விக்டரின் நெருங்கிய நண்பன். ‘நெருங்கிய’ என்றதும் சின்ன வயதில் இருந்து பழக்கம் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். வெறும் ஆறே மாதங்கள். ஆனால் இந்த ஆறு மாதங்களில், ஆறு போல நிறைய திருப்பங்கள் நிகழ்ந்துவிட்டன. ஒரு வகையில் பார்த்தால் சத்யா இல்லாவிட்டால் விக்டர் இப்போது உயிருடன் கூட இருந்திருக்க மாட்டான்.

வேலூர் சிறை. அங்கேதான் முதல்முறையாக சத்யாவை சந்தித்தான் விக்டர். ஆசைத்தம்பியின் ஆட்கள் விக்டரை கொல்லத் திட்டமிட்டிருப்பதாக தகவல் சொன்னான் சத்யா. முதலில் விக்டர் அதனை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவன் கொஞ்சம் அசந்திருந்த சமயம் எட்டு கைதிகள் சேர்ந்து அவனை சுற்றி வளைத்தபோதுதான் அவனுக்கு உரைத்தது. இருந்தாலும் அவன் அசரவில்லை. கையில் கிடைத்த பொருட்களையும், சமயத்தில் கைகளேயும் ஆயுதமாக பயன்படுத்தி அவர்களை திக்குமுக்காடச் செய்தான். அதே சமயம் விக்டர் இளைப்பாற நினைத்த இரண்டு நொடி இடைவேளையில் எட்டில் ஒருத்தன் அவனை கத்தியால் குத்த வர, அங்கே பிரவேசித்தான் சத்யா. ஒருவேளை சத்யா வராவிட்டால் அப்போதே வெளியே வந்திருக்கும் விக்டரின் குடல். நன்றி சொல்லிக் கொள்ளக்கூட விக்டருக்கு நேரமில்லை. சத்யாவும் சேர்ந்துகொண்டான். எழுதிக்கொண்டிருக்கும் இந்த பத்தியை நிறைவு செய்யும் முன் அவசர அவசரமாக அவர்கள் இருவரும் சேர்ந்து எட்டு பேரையும் துவம்சம் செய்து முடித்தார்கள்.

அன்றிலிருந்து சத்யாவுக்கும் விக்டருக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. குறிப்பாக விக்டர் சத்யாவை மானசீகமாக நேசிக்க ஆரம்பித்தான். நாட்கள் நகர்ந்தன. ஒருமுறை சத்யாவையும் விக்டரையும் வெவ்வேறு வழக்குகளுக்காக மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்த வேண்டியிருந்தது. அதற்காக அவர்களை காவல் துறையினர் அழைத்துச் சென்றபோது, இருவரும் முன்பே திட்டமிட்டிருந்தது போல காவலர்களை தாக்கிவிட்டு துப்பாக்கிமுனையில் தப்பித்தார்கள். அதுமுதல் அவர்களது நட்பு கூடுதல் பலம் பெற்றது.

சிறையிலிருந்து தப்பித்ததும் விக்டர் முதல் வேலையாக லிசாவைப் போய் சந்தித்தான். சத்யாவுக்கும் அவளை அறிமுகப்படுத்தினான். விக்டருக்கும் லிசாவுக்கும் காதல். வன்மையான காதல் என்று சொல்லலாம். ஒருவேளை விக்டர் இதிகாசங்களில் வருவது போல வனவாசம் சென்று வந்தாலோ, அல்லது இரட்டை ஆயுள் தண்டனை பெற்று திரும்பி வந்தாலோ கூட லிசா அவனுக்காக காத்துக்கொண்டிருப்பாள். விக்டரும் அவ்விதமே அவளைக் காதலித்தான். சத்யாவின் நட்பு கிடைத்தபிறகு விக்டரின் காதல் பயணங்களுக்கெல்லாம் சாரதியானான் சத்யா. விக்டரையும் லிசாவையும் காரின் பின்னிருக்கையில் உட்கார வைத்து சாகசங்கள் செய்து காட்டுவான் சத்யா. அவனது வித்தைகள் விக்டரைக் கவர்ந்தன. சத்யாவை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைத்து வைத்திருந்தான். ஒரு வகையில் அவனது திருமணமே அதற்கான துவக்கமாக அமைந்தது.

ஏனென்றால் விக்டரின் திருமணத்திற்கு அவனது குழுத்தலைவன் மேத்தீவ் வந்திருந்தான். மேத்தீவ் ஒரு முன்னாள் பாதிரியார். பதிமூன்று வயதிலேயே தனது வாழ்க்கையை மதத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மேத்தீவின் அன்புக்கு பாத்திரமாய் அவனுடனிருந்த சிறுவன் ஒருநாள் கொல்லப்பட, மேத்தீவ் துப்பாக்கி தூக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகு மேத்தீவ் துப்பாக்கியை கீழே வைக்கவே இல்லை. நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி என்று தென் மாவட்டங்களில் மேத்தீவின் கை ஓங்கத்துவங்கி இன்று சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கூட புழங்கத் துவங்கிவிட்டான். கஞ்சா, கொக்கைன் போன்ற போதை மற்றும் போதை தொடர்பான வஸ்துகளை டீல் செய்வது மேத்தீவின் பிரதானத் தொழில். மற்றபடி ஆளைத் தூக்குவது முதல் ஆளையே தூக்குவது வரை எல்லா முறையற்ற வேலைகளையும் செய்பவன் மேத்தீவ் !

திருமண நிகழ்வில் வைத்து மேத்தீவையும், சத்யாவையும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தான் விக்டர். அறிமுகப்படுத்தியதும் சத்யா மேத்தீவிடம், நான் உங்க ஃபேன் தல என்றது மேத்தீவை கவர்ந்திருக்கக்கூடும். கொஞ்ச நேரத்திலேயே சத்யாவும், மேத்தீவும் இயல்பாகப் பேசிக்கொள்வதும், மேத்தீவ் சத்யாவை கிண்டலடிப்பதுமாக இணக்கமாகியிருந்தார்கள். இதற்குள் திருமண நிகழ்வு ஆட்டம் பாட்டம் என்று களை கட்டத் துவங்கியிருந்தது. விக்டரின் காதலிகள் ஒரு பக்கம் ஆட, லிசாவின் கடைக்கண் அனுமதி பெற்று விக்டரும் ஆடத்துவங்க, விக்டர் அவனது தலைவன் மேத்தீவையும் உடனாட அழைத்தான். மேத்தீவோ புது நண்பன் சத்யாவை ஆடச்சொல்லி தள்ளிவிட்டு, ஒதுங்கிக்கொண்டான். அதன்பிறகு சத்யாவும் விக்டரும் சேர்ந்துப் போட்ட குத்தாட்டத்தில் அந்த மாலைப்பொழுது ஆரவாரமானது.

விழாவுக்கு வந்திருந்த தன் மற்ற நண்பர்களையும், சகாக்களையும் சத்யாவுக்கு அறிமுகம் செய்துவைத்தான் விக்டர். ஆச்சர்யமாக அவர்கள் அனைவரையும், அவர்களது குற்றப் பின்னணியுடன் சேர்த்து தெரிந்து வைத்திருந்தான் சத்யா. விழா முடிந்தபிறகு மேத்தீவிடம் சத்யாவை அழைத்துச் சென்றான் விக்டர். சத்யாவின் கார் டிரைவிங் பிரஸ்தாபங்களை அவன் மேத்தீவிடம் ஒப்புவித்தான். சத்யாவையும் அவர்களது குழுவில் சேர்த்துக்கொள்ள கோரினான். மேத்தீவின் தொழிலுக்கும் சாகசக்கார வாகன ஓட்டுநர் என்பது அவசியத்தேவையாய் இருந்தது. மேத்தீவின் வலது கையாயிருந்தவன் மட்டும் ஏனோ ஆரம்பம் தொட்டே சத்யாவை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். இருப்பினும் விக்டரின் நம்பிக்கையான வார்த்தைகளுக்கு இசைந்தான் மேத்தீவ். 

அன்றைய தினம் ஒருபுறம் விக்டரும் லிசாவும் திருமணம் செய்துகொள்ள, மறுபுறம் விக்டருக்கும் சத்யாவுக்குமான நட்பு இன்னொரு புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைத்தது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 November 2016

கொல்லிமலை - அருவிகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலையில் முக்கிய போக்கிடம் மற்றும் பிரதான அருவியான ஆகாயகங்கையை பற்றி ஏற்கனவே முந்தைய கட்டுரையொன்றில் பார்த்தோம். ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில அருவிகளும் கொல்லிமலையில் உண்டு.

முதலாவது, மாசிலா அருவி. மாசிலா அருவி சென்றடைய சுலபமான, சிறிய அருவி. ஆகாயகங்கை படிக்கட்டு இறங்கி ஏற முடியாதவர்கள், அத்தனை உயர மலையிலிருந்து பாயும் அருவியின் சீற்றத்தை தாங்க இயலாதவர்கள், உடல் பருமனானவர்கள், வயோதிகர்கள், இதய நோயாளிகளுக்கான பாதுகாப்பான அருவி ! ஆகாயகங்கை அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. அருவியைச் சுற்றி பூங்கா ஒன்றினை அமைத்து நன்றாக பராமரித்து வருகின்றனர். பூங்காவில் சிறுவர்களுக்கான ஊஞ்சல், ஸீஸா போன்றவை இருக்கின்றன.

மாசிலா அருவியில்...
நாங்கள் மாசிலா அருவிக்கு சென்றடைந்தபோது உச்சி வெயில். ஆமாம் வெயில். மலை வாசஸ்தலம் என்றாலும் மதிய வெயில் காட்டமாக இருக்கிறது. அருவியை பார்த்ததும் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. வெயில் கால ஒன்னுக்கு போல கொஞ்சமாக ஊற்றிக்கொண்டிருந்தது அருவி. தொப்பையுள்ள ஒரு நபர் மட்டும் குளிக்கும் வகையில் தான் அருவி நீர் வழிந்துக்கொண்டிருந்தது. ஆனால் அதிலேயே ஆண்களும், பெண்களுமாக ஈஷிக்கொண்டு ஒரு பத்து பேர் குளித்துக்கொண்டிருந்தனர். இக்காட்சியை பார்த்ததும் எனக்கு அந்த அருவியில் தலைகாட்டும் ஆர்வமே நீர்த்துப்போனது. மேலும் உடைமாற்றும் அறை போன்ற செளகரியங்கள் பெண்களுக்கு மட்டும் இருக்கிறது. ஆண்களுக்கென ஒரு கழிவறை மட்டும் இருக்கிறது. அதனை கடைசியாக வல்வில் ஓரி காலத்தில் கழுவி விட்டிருக்கிறார்கள். பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடி சிறிதுநேரம் இளைப்பாறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

அடுத்த அருவி நம்ம அருவி. பெயரே அதுதான் ! இதுவும் மாசிலா அருவியைப் போலவே கொஞ்சமே கொஞ்சம் நீர்வரத்து கொண்ட சிறிய அருவி. ஆனால் இது அமைந்துள்ள இடம் ஒரு விஷுவல் ப்ளிஸ் !

நம்ம அருவியின் எழில் தோற்றம் !
சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளத்தாக்கு. வெளியிலிருந்து பார்த்தால் அந்த இடமே தெரியாது. பள்ளத்தில் இறங்க, இறங்க அருவியும் அதனைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களும் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. இன்னொரு ஆச்சர்யம், நாங்கள் அங்கே சென்றபோது ஒரு சிலரைத் தவிர வேறு யாருமில்லை. அவர்களும் சிறிதுநேரத்தில் கிளம்பிவிட அருவியை கொஞ்ச நேரத்திற்கு சொந்தம் கொண்டாடினோம்.

நம்ம அருவி
நம்ம அருவியின் அருகே அமைந்துள்ள இடம்
மனதை தளர்வாக்கவும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் தோதான இடம். 

மூன்றாவது, சந்தன அருவி, இப்படியொரு அருவி இருப்பதாக ஏதோவொரு வழிகாட்டி பதாகையில் பார்த்த ஞாபகம். ஆனால் அருவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதோ இன்னொரு கி.மீ நேராக போனால் வந்துவிடும் என்கிறார்கள். இரண்டு கி.மீ தாண்டியும் அருவியேதும் வராததால் சந்தேகப்பட்டு கேட்டால் ஒரு கி.மீ பின்னோக்கி செல்ல வேண்டும் என்கிறார்கள்.

சந்தனப்பாறை
இப்படியே முன்னும் பின்னும் அலைந்து கடைசியாக ஒருவர் எங்களுடன் வந்து சந்தன அருவி எனும் சொல்லப்படும் இடத்தைக் காட்டி இதுதான் சந்தனப்பாறை. இதைத்தான் சந்தன அருவி என்று யாரோ உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள் என்றார். சந்தன அருவியை தேடிய நேரத்தில் வேறு உபயோகமான காரியங்கள் செய்திருக்கலாம்.

அடுத்த இதுவரையில் கொல்லிமலையில் உள்ள அருவிகள், கோவில்கள் பற்றி பார்த்தோம். அடுத்த கட்டுரையில் கொல்லிமலையில் உள்ள நோக்குமுனைகள் மற்றும் பிற போக்கிடங்கள் பற்றி பார்க்கலாம்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 July 2014

இடியட் பாக்ஸ் !


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கவலைப்படாதீர்கள். விஜய் அவார்ட்ஸில் ஆனந்த யாழுக்கு விருது கொடுக்காதது பற்றியோ, சரவணன் – மீனாட்சி திருமணம் செய்து கொண்டது பற்றியோ அல்லது கனெக்ஷன்ஸ் ஜகன் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் என்பதைப் பற்றியோ எழுதி போரடிக்க மாட்டேன். இக்கட்டுரையானது அலுவலக கேண்டீனில் (கார்ப்பரேட் மொழியில் பேண்ட்ரி அல்லது கேஃபெடெரியா) வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி பற்றியது.

நான் முன்பு பணிபுரிந்த அலுவலக கட்டிடத்தில் தொலைக்காட்சி கிடையாது. கேண்டீன் என்று சொல்லப்பட்ட அந்த அறையில் ஒரே சமயத்தில் முப்பது பேர் நின்றாலே மூச்சடைக்கும். போதாத குறைக்கு கேரம் போர்டும், டேபிள் டென்னிஸும் இருந்தன. எனினும் அலுவலகம் அறிவாலயத்திற்கு எதிரே அமர்ந்திருந்தமையால் கேண்டீனுக்கு வெளியே நின்று பார்த்தால் ஹயாத் கட்டிடம் அட்டகாசமாக தெரியும், அப்படியே கீழ் நோக்கினால் அண்ணாசாலையின் அழகை ரசித்துக்கொண்டே தேநீர் பருகலாம். திடீரென அலுவலகம் அலேக்காக கிண்டிக்கு மாற்றப்பட்ட போது கொஞ்சம் வருத்தமும் அதே சமயம் புது அலுவலகம் குறித்த ஆர்வ குறுகுறுப்பும் இருந்தன. சில ஏமாற்றங்கள், நிறைய ஆச்சரியங்கள். அந்த ஆ’க்களில் ஒன்றுதான் கேண்டீனில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி.

அங்கிருந்த தொலைக்காட்சியில் பெரும்பாலும் டைம்ஸ் நவ் தான் ஓடிக்கொண்டிருக்கும், அதுவும் ம்யூட்டில். அதற்கு உரித்தான ரிமோட் என்கிற வஸ்து யாரிடமிருக்கும் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. திடீரென இரண்டு நாட்கள் NDTV ஓடும், அப்புறம் பழையபடி டைம்ஸ் நவ் வரும். யார் இதையெல்லாம் மாற்றுகிறார்கள், ஏன் வேறு சேனல் வைக்க மாட்டேன் என்கிறார்கள் என்றெல்லாம் நான் கேள்வி எழுப்பியதில்லை. 

நாட்டில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட்டால் நியூஸ் சேனல்காரர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கிருந்தாவது ஒரு ஃபூடேஜை லவட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். அதையே ரிபீட் மோடில் நாள் முழுக்க போட்டுக்காட்டுவார்கள். சில சமயங்களில் வெறுமனே அரை நொடி ஃபூட்டேஜ் மட்டுமே கிடைத்திருக்கும். அசரமாட்டார்கள். அதையே ஸ்லோ மோஷனில் வைத்து, ரிபீட்டில் ஓட விடுவார்கள். ஃபூட்டேஜில் குறிப்பிட்ட இடத்தில் வட்டமிட்டு காட்டுவார்கள். அந்த வட்டத்திற்குள் அப்படியொன்றும் விசேஷமாக இருக்காது என்பது வேறு விஷயம். அய்யா, ஃபூட்டேஜே கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. சிவகாசி பட்டாசு நிறுவன விபத்து என்று நினைக்கிறேன். அப்போது ஆங்கில செய்தி சேனல்களுக்கு ஃபூட்டேஜ் கிடைக்கவில்லை. ஒன்றுமில்லை, இந்தியா மேப்பை லாங்க்ஷாட்டில் காட்டத்துவங்கி அப்படியே ஜூம் பண்ணி கொண்டு வந்து சிவகாசியில் ஒரு சிகப்பு புள்ளி வைப்பார்கள். மறுபடியும் இந்தியா மேப், ஜூம், சிவகாசி, சிகப்பு புள்ளி. மறுபடியும் இந்தியா மேப், ஜூம், சிவகாசி, சிகப்பு புள்ளி. நீங்களாகவே ஒரு சில நூறுமுறை காப்பி பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

செய்தி சேனல்களால் சில அனுகூலங்களும் இருந்தன. நியூஸ் ஹவரில் அர்னாப் கோஸ்வாமி வாயசைத்து சத்தம் வராமலிருக்கும் அரிய காட்சியை கண்டுகளிக்கலாம். அர்னாபை ம்யூட்டில் பார்க்கும் கொடுப்பினை யாருக்கு கிடைக்கும். மற்றொன்று, கேண்டீனில் எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது நாம் மட்டும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தால் அறிவு ஜீவி இமேஜ் கிடைக்கும். குறிப்பாக பெண்கள் இருக்கும் சமயங்களில். நான்கைந்து யுவதிகள் கூட்டாக அமர்ந்துகொண்டு, யார் அலுவலகத்தில் அக்குளை ஷேவ் பண்ணாமல் ஸ்லீவ்லெஸ் அணிந்து வருகிறார்கள், டீம் அவுட்டிங்கில் யார் யாரோடு கூத்தடித்தார்கள் போன்ற அதிமுக்கியமான விஷயங்களை விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அங்கே சென்று அவர்களை சுத்தமாக கண்டுகொள்ளாமல் டிவியையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தால் நீங்கதான் ஹீரோ!

கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது மட்டும் தொலைக்காட்சியில் சேனல் மாற்றி வைக்கப்படும். தோனியோ ரவீந்திர ஜடேஜாவோ அல்லது யாரோ சிக்ஸர் அடித்திருப்பார்கள். உடனே கேண்டீனிலிருந்து ஓ’வென ஒரு அலறல் சத்தம் கேட்கும். குறித்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், கிரிக்கெட் பார்ப்பதால் அறிவுஜீவி இமேஜ் கிடைக்காது. எனவே கிரிக்கெட் ஓடும் தருணங்களில் கமுக்கமாக அமர்ந்து வேலை பார்ப்பது உத்தமம். உண்மையிலேயே கிரிக்கெட் ஆர்வம் இருந்தால் க்ரிக்பஸ், க்ரிக்கின்ஃபோவில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். சில சமயங்களில் லைவை விட முன்கூட்டியே அப்டேட் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். மேட்ச் முடிந்ததும் மொத்தக்கூட்டமும் கேண்டீனில் இருந்து திரும்பி வரும். அச்சமயத்தில் ‘ஏ ஐ ஹேட் கிரிக்கெட்யா... கிரிக்கெட் இஸ் நாட் அட் ஆல் எ ஸ்போர்ட்... சும்மா நின்ன எடத்துல இருந்துக்கிட்டு பந்தை அடிக்கிறானுங்க சோம்பேறிங்க’ன்னு பீட்டர் விடலாம். தேவைப்பட்டால் 11 fools are playing, 11000 fools are watching என்கிற ஜானகி ஷாவின் தத்துவத்தை எடுத்துவிடலாம். அப்புறம் எந்த ஸ்போர்ட் பார்க்க வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது, ஃபுட்பால், டென்னிஸ், ஃபார்முலா 1. டென்னிஸ் பார்ப்பவர்கள் லியாண்டர் பெயஸ், மகேஷ் பூபதி போன்ற உள்ளூர் ஆட்டக்காரர்களின் பெயர்களை உச்சரிப்பது மகாபாவம். சம்பாஷனைகள் ஃபெடரர், ராடிக் லெவலிலேயே இருக்க வேண்டியது அவசியம். பேஸ்கட்பால் ஆட்டக்காரர்கள் சிலருடைய பெயரை தெரிந்து வைத்திருப்பது நல்லது. எப்படியும் வேறு யாருக்கும் தெரிந்திருக்காது.

ஆங் தொலைக்காட்சி... சமீபத்தில் யாரோ 'என் ரிமோட் என் உரிமை' புரட்சி போராட்டம் நடத்தியிருப்பார்கள் என தெரிகிறது. ரிமோட் பொதுவில் வைக்கப்பட்டு விட்டது. தற்சமயம் தொலைக்காட்சி ஊரான் வீட்டு நெய். அதுவும் அலுவலகத்தில் யாராவது ஃபூடி ஆசாமிகள் பணிபுரிந்தால் கிழிந்தது. ஃபூடி ஆசாமிகள் என்பவர்கள் ஆபீஸில் வேலை ஒன்பது மணிநேரம் என்றால் அதில் பத்தரை மணிநேரம் எதையாவது சாப்பிட்டுக்கொண்டும், கேண்டீனுக்கும் டெஸ்க்குக்கும் எதையாவது (அநேகமாக விசித்திர நிற திரவம்) தூக்கிக்கொண்டு அலைவதுமாக இருப்பார்கள். இடையில் கொஞ்சம் நேரம் கிடைத்தால் டிவிக்கு முன்பு வந்து அமர்ந்துகொண்டு ஃபாக்ஸ் ட்ராவலர் சேனலில் சமையல் குறிப்பு நிகழ்ச்சி பார்க்கத் துவங்கிவிடுவார்கள். மற்றவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பிடிக்கிறதா ? வேறு யாரேனும் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறார்களா ? என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை கிடையாது. நல்லவேளையாக வேலைநேரம் இரவு பத்து மணியோடு முடிந்துவிடுகிறது. இல்லையென்றால் ஃபூடி ஆசாமிகள் உட்கார்ந்து சமையல் மந்திரம் நிகழ்ச்சி பார்க்க நேரிடலாம்.

என்னதான் தொலைக்காட்சி தொழில்நுட்ப பணியாளர்களுக்காக வைக்கப்பட்டாலும் அதனை அதிக நேரம் பயன்படுத்துவது என்னவோ ஹவுஸ்கீப்பிங் பணியாளர்கள் தான். ரிமோட் இவர்கள் கையில் சிக்கினால் ஆதித்யா அல்லது சிரிப்பொலி. இதில் சில சிக்கல்கள் உள்ளன. அர்னாப் கோஸ்வாமியை ம்யூட்டில் பார்ப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்குமோ அதற்கு நேர்மாறான உணர்வினை ஏற்படுத்தக்கூடியது கவுண்டமணி – செந்தில் நகைச்சுவையை ம்யூட்டில் பார்ப்பது. இன்னொன்று, பெட்ரமாஸ் லைட்டு காமெடி சீன் வந்தால் நம் வீடு மாதிரி கெக்கே பிக்கே என்று சிரிக்க முடியாது.

எப்போது என்று நினைவில்லை, முன்பைப்போல ம்யூட்டில் அல்லாமல் தொலைக்காட்சியில் வால்யூம் வைத்து பார்க்கத் துவங்கிவிட்டார்கள். சக பணியாளர்களில் வடா பாவ் ஆட்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் அவர்கள் ஒன்றுகூடினால் B4U மியூசிக் என்கிற ஹிந்தி பாட்டு சேனலை வைத்துவிடுவார்கள். அடடடடா சும்மா சொல்லக்கூடாது, தமிழ் நடிகைகள் எல்லாம் ஹிந்தி நடிகைகள் வீட்டு மொளகு ரசத்தை வாங்கிக் குடிக்க வேண்டும். பிபாஷா பாசுவோ, தீபிகா படுகோனோ ஆடினால் அல்லது ஷீலா கி ஜவானி பாடலை ஒளிபரப்பினால் நானும் தற்காலிக வடா பாவ் ஆசாமியாக மாறிவிடுவதுண்டு.

ஆரியர்கள் அப்படி என்றால் திராவிடர்களை பற்றி சொல்லவா வேண்டும். இருக்கவே இருக்கிறது சன் மியூசிக், இசையருவி. அதுவும் உச்சி வெய்யில் கொளுத்திக்கொண்டிருக்கிற சமயத்தில் இவர்கள் கொஞ்சம் ரொமான்ஸ் தூக்கலான பாடல்களை ஒளிபரப்பி நம்மை மெர்சலாக்குவார்கள். 

'மத்தியான நேரம் பாய் போடச் சொன்னால் மாட்டேன்னு சொல்லுவியா’ - ரஜினி ரவுசு விடுவார்.

பதிலுக்கு மீனா - ‘மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மேட்னி ஷோ கூப்பிடுவேள்’ என்று சிணுங்குவார்.

அப்புறம் ரஜினி மீனாவை அலேக்காக தூக்கிக்கொண்டு போய் தொப்பென கட்டிலில் போடுவார். ஜிங்கு சாக்கு ஜிங்...! ஜிங்கு சாக்கு ஜிங்...!

இப்பொழுதெல்லாம் ஹவுஸ்கீப்பிங் ஆட்கள் மத்தியான நேரத்தில் கே டிவியில் படமே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்றவாரத்தில் ஒருநாள் விஜயகாந்த், பானுப்பிரியா நடித்த படமொன்று ஓடிக்கொண்டிருந்தது. பழைய பானுப்பிரியாவை சிக்கென புடவையில் பார்த்ததும் எனக்கு நிலைகுத்திக் கொண்டன. கண்கள். கதை இதுதான். விஜயகாந்தும் பானுப்ரியாவும் கணவன் மனைவி. என்றாலும் பானுப்ரியாவுக்கு விஜயகாந்தை பிடிக்கவில்லை. ஆனால் பானுப்ரியாவின் தாத்தாவான நம்பியார் சொத்துகளை எல்லாம் விஜயகாந்தின் பெயரில் எழுதி வைத்துவிடுகிறார். பானுப்ரியாவுக்கு சொத்தின் மீது ஆசை. உடனே மனோரமா ஆபத்பாந்தவனாக நுழைந்து ஒரு ஐடியா கொடுக்கிறார். அதாவது விஜயகாந்தை செட்யூஸ் செய்து அவருடன் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டால் குழந்தையை வைத்து சொத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று. என்ன ஒரு யோசனை. செட்யூஸ் என்றதும் ஏதோ பானுப்ரியா அவருடைய ஆஸ்தான ஸ்டைலான கருவிழிகளை ஒரு சுற்று உருட்டி, (அவருடைய) உதட்டை கடித்து, அப்படியே கண்களை சொக்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக அந்த நேரம் பார்த்து தோழி ஒருவர் எதிரில் வந்து அமர்ந்தமையால் நாகரிகம் கருதி தொலைக்காட்சியிலிருந்து பார்வையை அகற்றிக்கொண்டேன். சில விநாடிகள் கழித்து எதேச்சையாக திரும்புவது போல தொலைக்காட்சியை பார்த்தபோது விஜயகாந்த் பானுப்ரியாவின் தொப்புளில் எண்ணெய் விட்டு தடவிக்கொண்டிருந்தார்.

குறிப்பு: பார்வைக்கு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment