Showing posts with label jain. Show all posts
Showing posts with label jain. Show all posts

10 November 2016

கொல்லிமலை – வீரகனூர்பட்டி சமணர் கோவில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் சீண்டாத, தனித்துவமான இடம் ஒன்றினைப் பற்றி சொல்லப்போகிறேன். வீரகனூர்பட்டி என்ற மலை கிராமம். அங்கே அமைந்திருக்கும் கொங்கலாய் அம்மன் கோவில். தொன்மையான சமணர் (?!) உருவச்சிலை. இவற்றைப் பற்றியெல்லாம் தமிழில் இதற்குமுன் எழுதியிருக்கும் ஒரே நபர் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் தானென நினைக்கிறேன். கூடவே, எதிர்காலத்தில் கொல்லிமலை செல்லும் நண்பர்கள் வீரகனூர்பட்டிக்கும் செல்வதற்கு தோதாக மேலதிக தகவல்களும் தருகிறேன்.

நாங்கள் வீரகனூர்பட்டிக்கு சென்ற கதையை மட்டுமே தனிக்கட்டுரையாக எழுத வேண்டும். கொல்லிமலைக்கு ஸ்கெட்ச் போடும்போதே கூகுள் மேப்பில் பார்க்க வேண்டிய சில இடங்களை பார்த்து குறிப்பெடுத்து வைத்திருந்தேன். முன்பே சொன்னது போல மேப்பில் குத்துமதிப்பாக கொல்லிமலை பக்கம் உலவினால் கூட ஆங்காங்கே ‘Ancient Jain Temple’, ‘Ancient Jain Idol’ போன்றவை கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, நெகனூர்பட்டி சமணர் கோவில். ஒதுக்குப்புற கிராமம் என்பதால் ஆர்வம் அதிகமானது. 

கொல்லியில் சென்று இறங்கியதிலிருந்து ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரிடமும் சித்தர் குகைகள் பற்றியும் நெகனூர்பட்டியைப் பற்றியும் விசாரித்தபடி இருந்தோம். நெகனூர்பட்டி என்று ஊர் இருப்பதே அங்கே யாருக்கும் தெரியவில்லை. இணைய அணுகல் (ஏர்டெல்) வேறு துண்டிக்கப்பட்டு விட்டதால் மறுபடியும் மேப்பில் அவ்விடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. திட்டமிட்ட மற்ற இடங்களை எல்லாம் பார்த்தாயிற்று. மறுநாள் காலை கிளம்புவதாக முடிவு செய்திருந்தோம். இன்னும் நெகனூர்பட்டி சமணர் கோவிலை மட்டும் பார்க்கவில்லை. கடைசி முயற்சியாக அன்றிரவு எனது டோகோமோ எண்ணை மீள்நிரப்பி 2G வேகத்தில் நெகனூர்பட்டியை கண்டுபிடித்து ஆஃப்லைனில் சேமித்தேன். விடிந்ததும் அங்கே சென்று வந்து பிறகு சென்னைக்கு கிளம்பலாம் என்று முடிவானது.

மழையுடன் விடிந்தது. இன்னொரு அரை மணிநேரம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று காத்திருந்து, காத்திருந்து எட்டு மணிக்கு மழை நின்றது. பத்து மணிக்காவது கொல்லியிலிருந்து கிளம்பினால் தான் மாலையிலாவது சென்னை வர முடியும். இப்போது போய் நெகனூர்பட்டிக்கு போகலாம் என்றால் என் உடன் வந்தவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அமைதியாக மோட்டுவளையை பார்த்தபடி படுத்திருந்தேன். என் மனக்குறையை குறிப்பால் உணர்ந்துகொண்ட என் தளபதி என்னை நெகனூர்பட்டிக்கு அழைத்துச் செல்ல அவராகவே மனமுவந்து ஒப்புக்கொண்டார்.

செம்மேட்டிலிருந்து வாசலூர்பட்டி வழியாக தின்னனூர்நாடு செல்லும் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி சுமார் ஐந்து கி.மீ தூரம் சென்றால் இலக்கை அடைந்துவிடலாம். இது செம்மேட்டிலிருந்து பத்து கி.மீ. கிலோமீட்டர் கணக்கை பார்த்தால் குறைவு போல தோன்றினாலும் மலைச்சாலை என்பதால் இந்த இடத்தை சென்றடைய அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிறது. அங்கே சென்றதும்தான் அந்த ஊரின் பெயர் நெகனூர்பட்டி அல்ல வீரகனூர்பட்டி என்று தெரிந்தது. யாரோ கூகுள் மேப்பில் தவறுதலாக கொடுத்திருக்கிறார்கள். ஊர்க்காரர்களிடம் சமணர் கோவில் என்றதும் அம்மன் கோவில் தான் உள்ளது என்று மலையுச்சியை கை காட்டினார்கள். அங்கே வாகனத்தில் செல்ல முடியாது என்பதால் நடந்தே சென்றோம்.

 
பனிமூட்டமான வீரகனூர்பட்டி
அப்போது நேரம் காலை ஒன்பது மணி சுமார் இருக்கும். ஆனால் நாங்கள் நடந்து சென்ற பகுதி முழுக்க பனிமூட்டம். பத்து அடிக்கு முன்னால் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. இதையெல்லாம் தவற விட்டுவிட்டு சென்னை செல்லப் பார்த்தோமே என்று என்னை நானே கடிந்துகொண்டேன். 

அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை
சிறிது தூரம் நடந்து மலையுச்சியை அடைந்தோம். அங்கே கேட்பாரற்று அமைந்திருக்கிறது கொங்கலாய் அம்மன் கோவில். 

கொங்கலாய் அம்மன்
அம்மனைக் கண்டதும் எனக்கு செந்தூரதேவி படம்தான் நினைவுக்கு வந்தது. பாழடைந்த கோவில், பார்வையால் பயம் காட்டும் அம்மன் உருவம். ஒருபுறம் திருப்பதிக்கும், சபரிமலைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று முண்டியடிக்கிறார்கள். வெவ்வேறு அடுக்கில் பணம் கொடுத்து, கொடுத்த காசுக்கேற்ப தரிசனம் செய்கிறார்கள். இன்னொருபுறம் எங்கேயோ மலை மீது, ஒதுக்குப்புறமாக உள்ள கிராமத்தில் அம்மன் கோவில் ஒன்று தனியாக இருக்கிறது. 

அம்மன் கோவிலின் முகப்புப் பகுதி
வருடத்திற்கு ஒருமுறை (சித்திரை மாதம்) திருவிழா சமயத்தில் மட்டும் கோவிலை திறப்பார்கள் என்று ஊர்க்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். 

கொங்கலாய் அம்மனை பார்த்தாயிற்று. ஆனால் நாம் தேடி வந்தது சமணர் கோவிலாயிற்றே... மேப்பை கையில் வைத்துக்கொண்டு போக்கிமான் விளையாட்டைப் போல இங்கும் அங்கும் அலைந்தோம். கொஞ்ச நேரத்தில் ஊர்க்காரர்கள் இருவர் அந்தப்பக்கம் வந்தனர். இம்முறை சமணர் என்ற வார்த்தையை அவர்களிடம் பிரயோகிக்காமல் பழங்கால சிலை ஏதேனும் உள்ளதா என்றோம். அதோ அங்கே என்று வாழைத்தோப்பிற்குள் கை காட்டினார்கள். 

வாழைத்தோப்புக்குள் சமணர் (தெரிகிறாரா ?)
முதலில் அங்கிருக்கும் உருவம் எங்கள் கண்களுக்கே தெரியவில்லை. நாங்கள் சாமி கும்பிடுவதற்கு தான் வந்தோம் எங்களோடு வாருங்கள் என்று அழைத்துச் சென்றனர் அவ்விருவர். உள்ளே சென்றால் மோனலிஸா புன்னகையுடன், இடைப்பகுதி வரை மண்ணில் புதையுண்டு இருக்கிறது ஒரு சமணர் சிலை. ஜெயமோகன் இச்சிலையை 24 தீர்த்தங்காரர்களில் ஒருவர் என்றும், மகாவீரராக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

சமணர் உருவச்சிலை
எங்களை அங்கே அழைத்துச் சென்ற கிராமவாசிகள் பயபக்தியுடன் கற்பூரம் கொளுத்தி சமணரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சாமியின் பெயரென்ன என்றேன். இருவரில் இளையவர், முதியவரின் முகத்தை பார்த்தார். முதியவர் முனிவர் சாமி என்றார். அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்தபிறகு சமணரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். (பெரும்பாலும், கிராமவாசிகள் கோவில்களில், கடவுள் உருவச்சிலைகளை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை). 

வீரகனூர்பட்டி பயணம் ஒருவாறு எனது கொல்லிமலை பயணத்தை முழுமையடையச் செய்தது போல உணர்ந்தேன். வீரகனூர்பட்டிக்கு என்னை அழைத்துச் சென்றதற்காகவும், ஒட்டுமொத்தமாக கொல்லிமலை பயணத்தில் முகம் கோணாமல், கோபப்படாமல், கால தாமதங்களையும், கரடுமுரடான சாலைகளையும் பொறுத்துக்கொண்ட எனது போர்ப்படை தளபதிகள் பிரகாஷ் மற்றும் ஜெய் ரமேஷ் இருவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

ஏறத்தாழ கொல்லிமலை பயணக்கட்டுரைகளின் முடிவுக்கு வந்துவிட்டோம். கடைசியாக கொல்லிமலை சென்றடைவது எப்படி..?, பார்க்க வேண்டிய இடங்கள், எங்கே தங்கலாம்..?, எவ்வளவு செலவாகும்..? போன்ற விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். தொடர்ந்து இந்த பகுதியை படித்து வந்த நண்பர்களுக்கு ஏதேனும் (விவகாரமில்லாத) சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்.

கூகுள் மேப்பில்:
(நண்பர்கள் நேரமிருந்தால் மேப்பில் உள்ள தகவல் பிழைகளை சரி செய்யலாம்)

கடைசி இடுகை: பயணக்குறிப்புகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 October 2016

கொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: ஆகாயகங்கை 

கொல்லிமலை என்றாலே நம் நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை சித்தர்கள் ! கொல்லியில் சித்தர்கள் வாழ்ந்த குகைகள் மட்டும் இப்போதும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் பிரதானமானது கோரக்கர் குகை. எப்படியாவது கோரக்கர் குகையை பார்த்துவிட வேண்டுமென்று கொல்லியில் இறங்கியதிலிருந்தே விசாரித்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை சொல்கிறார்கள். ஒரு சிலர் அப்படியொரு குகை இல்லவே இல்லை என்கிறார்கள். தீர விசாரித்தபிறகு, ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் வழியிலிருந்து பிரிந்து காட்டுக்குள் நீண்டதூரம் சென்றால் கோரக்கர் குகையை காணலாம் என்று தெரிந்துக்கொண்டோம். ஆனால் அங்கே வழிகாட்டிகளின் உதவியுடன் மட்டும்தான் செல்ல முடியும் என்றும் குகைக்கு செல்வதென்றால் காலையிலேயே கிளம்பிவிட வேண்டுமென்றும் மீண்டும் திரும்பி வர மாலையாகிவிடும் என்றும் சொன்னார்கள். எனவே கோரக்கர் குகைக்கு செல்லும் எண்ணத்தை ஒருமனதாக கைவிட்டோம்.

சித்தர்கள் குகையை தவிர்த்து கொல்லியில் இருக்கும் சில முக்கிய கோவில்களைப் பற்றி பார்க்கலாம்.

1. அறப்பளீஸ்வரர் கோவில்
ஆகாயகங்கை அருவியின் முகப்புக்கு எதிரிலேயே அமைந்திருக்கிறது அறப்பளீஸ்வரர் கோவில். கோவிலுக்கு சென்றுவிட்டு அருவிக்கு இறங்குவதோ அல்லது அருவியில் குளித்தபிறகு கோவிலுக்கு செல்வதோ உங்கள் செளகர்யம். ஆனால் கோவில் மதியம் ஒரு மணிக்கு மூடப்பட்டுவிடுகிறது. அத்துடன் மீண்டும் பிற்பகல் நேரத்தில் தான் திறக்கப்படுகிறது. எனவே அதற்கேற்றபடி திட்டம் அமைத்துக்கொள்வது நல்லது.

புகைப்படம்: HolidayIQ
அக்காலத்தில் கொல்லிமலையில் வாழ்ந்த சிவனடியார்கள் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றினை நிறுவி வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ‘அறை’ என்றால் சிறிய மலை, ‘அறைப்பள்ளி’ என்றால் மலைமேல் உள்ள கோவில், இறைவன் ஈஸ்வரர் என்பதால் அறைப்பள்ளி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி அறப்பளீஸ்வரர் ஆனதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இவ்விடம் விளைநிலமாக மாறி, சிவலிங்கம் மண்ணுள் புதைந்தது. பின்னாளில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது அவருடைய கலப்பை சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் பட்டு அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மக்கள் இங்கு கோவில் அமைத்து வழிபட துவங்கியிருக்கின்றனர். இப்பொழுதும் கூட அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் அத்தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

கோவிலின் அருகே அமைந்துள்ள பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. அப்போது ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. இச்சம்பவத்தால் இங்கிருக்கும் சிவனுக்கு அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

2. கொல்லிப்பாவை (அ) எட்டுக்கையம்மன் கோவில்
அறப்பளீஸ்வரர் கோவிலிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் மாசிலா அருவி போகும் வழியில் அமைந்திருக்கிறது எட்டுக்கையம்மன் கோவில். முன்பே வழி தெரியாததால் வாய்வழி கேட்டு கோவிலை அடைந்தபோது அங்கே கோவில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளை கண்டு அதிர்ந்தோம். ஏற்கனவே ஆகாயகங்கைக்காக ஆயிரம் படிகள் இறங்கி ஏறிய களைப்பு. இங்கே குறைந்த எண்ணிக்கை படிக்கட்டுகள் மட்டுமே என்பதை தீர விசாரித்தபின் இறங்கினோம். 

அக்காலத்தில் கொல்லிமலையில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையுடையது. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். கொல்லிப்பாவை பற்றி நற்றிணை, குறுந்தொகை செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை என்ற அக்காவல் தெய்வம் தான் தற்போது எட்டுக்கை அம்மனாக வழங்கப்படுகிறது.

இங்கே நுழைந்ததும் பல்வேறு அளவுகளில் மணிகளும், தாயத்துகளும், விசிட்டிங் கார்டுகளும் தொங்குவதை காண முடிந்தது. பூசாரி இருக்கிறார். புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்கிறார். சில கோவில்களில் ஏன் புகைப்பட அனுமதி மறுக்கப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா ? பூசாரி கவனிக்காத சமயத்தில் தந்திரமாக சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினோம். வெளியிலேயே மரத்தடியில் கேட்பாரற்று வீற்றிருக்கிறார் இன்னொரு எட்டுக்கையம்மன். சிறப்பு தரிசனம் கிடைத்த மனநிறைவுடன் கிளம்பினோம்.

3. மாசி பெரியசாமி கோவில்
இதற்குள் கால தாமதமாகிவிட்டதால் மாசி பெரியசாமி கோவிலை தவிர்த்துவிட முடிவு செய்தோம். எனினும் சுருக்கமாக சில தகவல்கள். எட்டுக்கையம்மன் கோவிலிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மாசி பெரியசாமி கோவில். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்கள் கொண்ட காவல்தெய்வம் தான் இந்த மாசி பெரியசாமி. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். கொல்லியில் அமைந்துள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்றான மாசிக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. 

பொதுவாகவே கொல்லிமலையில் நிறைய சைவ, சமண கோவில்கள் இருக்கின்றன. தோராயமாக கூகுள் மேப்பில் உலவினால் கூட ஆங்காங்கே பழங்கால சமண கோவில் / சிலை காணப்படுகிறது. அவற்றில் குறிப்பாக நெகனூர்பட்டி என்கிற ஒதுக்குப்புற கிராமத்தில் ஒரு பழங்கால சமணர் கோவில் இருப்பதாக சொல்லப்பட்டதால் அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அங்கே சென்றால் இன்னொரு ஆச்சர்யம் கிடைத்தது. இவை தவிர்த்து ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதிலமடைந்த சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இவற்றை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம். 

அதற்கு முன்பாக கொல்லிமலையில் ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில சிறிய அருவிகள் உண்டு. அவற்றை பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அடுத்த இடுகை: மற்ற அருவிகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment