Showing posts with label rice. Show all posts
Showing posts with label rice. Show all posts

2 November 2016

தயிர் சாதம் சாப்பிடுவது எப்படி ?

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நானொரு மாமிச பட்சினி. சிறு வயதிலிருந்தே எனக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாது. குறிப்பாக தயிர் என்று யாராவது சொல்லிவிட்டால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கமாட்டேன். ஆனால் நாம் எதை மனதின் அடியாழத்திலிருந்து வெறுக்கிறோமோ அதுவே நம் கண் முன்னே அடிக்கடி வந்து போவது தானே வாழ்க்கையின் வடிவமைப்பு !

எனக்குத் தெரிந்த ஒருவர் (எதற்கு வம்பு ?) இருக்கிறார். சிவகாசிக்காரர் என்பதால் பால் சோறு விரும்பி. தயிர் சோறும் சாப்பிடுவார். அவர் தயிர் சோறு சாப்பிடுவதை பார்த்துவிட்டால் நமக்கு சோறு இறங்காது. சோற்றின் மீது தயிரை தலைகுப்புற தள்ளிவிடுவார். அதன்பிறகு அவருடைய உள்ளங்கையைக் கொண்டு தயிர் சோற்றை ஜென்ம விரோதியின் கழுத்தை நெரிக்கும் பாவனையில் அழுத்துவார். அதுவரை தனித்தனியாக இருந்த தயிரும் சோறும் தயிர் சோறாக அவருடைய ஆக்டோபஸ் விரலிடுக்குகள் வழியாக வெளியேறும் ! அதற்கு மேல் அந்தக்காட்சியை பார்க்க முடியாமல் நான் திரும்பிக்கொள்வேன்.

இது பரவாயில்லை. தனிப்பட்ட முறையில் சந்திக்கும் சிக்கல் என்பதால் நமக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடலாம். பொது இடத்தில் நடக்கும் கூத்துகள் நம்மை விடாமல் துரத்தி வந்து வன்புணர்வு செய்யும் ரகம். சென்ற மாதத்தில் ஒருநாள் மேனேஜர் ஒருவருக்கு மூட் வந்ததால் உருப்படிகளை புஹாரிக்கு அழைத்துச் சென்றிருந்தார். எல்லோரும் மெனுவை மேய்ந்து இதுவரை வாழ்நாளில் முகர்ந்து கூட பார்த்திராத வித்தியாச உணவுவகைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். எனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ஆந்திர நண்பர் சர்வரின் காதில் கிசுகிசுப்பாக ‘கர்ட் ரைஸ்’ இருக்கா ? என்று கேட்டார். எனக்கு வெலவெலத்துப் போய்விட்டது. அநேகமாக தமிழ்நாட்டில் புஹாரிக்கு சென்று யாருமே இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். புஹாரியின் நிறுவனருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் மின் சரடை கடித்து தற்கொலை செய்துகொள்வார். ஆந்திர நண்பரிடம் 'ஏங்க இப்படி ராவடித்தனம் பண்றீங்க' என்றால் வவுறு சரியில்லை என்கிறார். நல்லவேளையாக சர்வர் புஹாரியில் தயிர் சோறு நன்றாக இருக்காதென்று அவராகவே வேறு உணவை பரிந்துரைத்து என்னைத் தப்புவிக்கச் செய்தார்.

அலுவலகத்திற்கு வெளியே நடப்பது இப்படியென்றால் உள்ளே நடப்பது எல்லாம் நம்மை ரூம் போட்டு செய்யும் ரகம். கார்ப்பரேட் அலுவலகங்களைப் பொறுத்தவரையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஏதாவது மின்னஞ்சல் வரும். அதாவது வாட்டர் டிஸ்பென்ஸரில் கை கழுவாதீர்கள், வாஷ் பேஸினில் பப்பிள் கம் துப்பாதீர்கள் போன்ற மின்னஞ்சல்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒருமுறை, ஆண் ஊழியர்கள் யூரிணல் தாண்டி தெறிக்காமல் கவனமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மின்னஞ்சல் வந்தது. கூடவே, இந்த மின்னஞ்சல் ஆண் ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பியிருப்பதால் யாரும் சங்கடப்பட வேண்டாம் என்ற பின்குறிப்புடன் வந்தது. பின்குறிப்பை பார்த்ததும் தான் இன்னும் சங்கடமாக இருந்தது. தமிழ் சினிமாவில் வெளிவரும் மாஸ் படங்களை பார்த்து பார்த்து பழக்கப்பட்ட ஆசாமிகள் யாரோ தான் இப்படி தெறிக்க விட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். 

ஒழுங்கு நடவடிக்கை மின்னஞ்சல்கள் வரிசையில், 'பணிபுரியும் மேசையில் யாரும் உணவருந்த வேண்டாம்' என்று அவ்வப்போது வரும். மின்னஞ்சல் வந்து சில நாட்கள் வரை எல்லோரும் உத்தரவை ஒழுங்காக கடைபிடிப்பார்கள். அப்புறம் ஒருநாள் சாதாரணமாக எவ்வித குற்றவுணர்வுமின்றி இவ்விதியை மீறி பிள்ளையார் சுழி போடுவார் ஒருவர். இப்படி பி.சு போட்டு தொடங்கி வைப்பவர் பெரும்பாலும் மேனேஜராக இருப்பார். ஏனென்றால் மேனேஜர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து நேரடியாக குதித்து வந்தவர்கள். அவர்களுக்கென்று விதிகள் எல்லாம் இல்லை.

அடுத்த சில நாட்களில் பணிமேசையில் உணவருந்துவது சகஜமாகிவிடும். ஐம்பது மீட்டர் தூரத்திலிருக்கும் கேண்டீனுக்கு போய் சாப்பிடுவதில் சோம்பேறித்தனம். கேட்டால் ‘லைட் ஃபுட்’ வேண்டுமானால் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மின்னஞ்சலிலேயே போட்டிருக்கிறது என்று வியாக்கியானம் பேசுவார்கள். இந்த ‘லைட் ஃபுட்’ என்பதில் தயிர் சாதமும் சேர்த்தி.

பணிமேசையில் வைத்து தயிர் சாதம் சாப்பிடுவது ஒரு தனிக் கலை ! முதலில் அவுட்லுக்கில் ஒரு நியூ மெயில் விண்டோவை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும். தயிர் சாதத்திற்கும் அவுட்லுக்கிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். சில விஷயங்களை ஆராயக்கூடாது. அனுபவிக்க வேண்டும். மெயிலில் யாரையாவது யாரிடமாவது கோர்த்துவிடும் வகையில் நான்கைந்து புல்லட் பாயின்ட் கேள்விகள் கேட்க வேண்டும். ஸீஸீயில் டீம் லீடர், ப்ராஜெக்ட் மேனேஜர், மேனேஜர் தொடங்கி மேனேஜருடைய சித்தப்பா வரை வைக்க வேண்டும். நீங்கள் இந்த மெயிலை அனுப்பி கோர்த்து விடப்போகிற நபர் உங்கள் புறமுதுகிற்கு பின்னாலேயே அமர்ந்திருக்கலாம். அவரிடம் நேரிலேயே கேட்டுவிட்டால் உங்களுக்கு அடுத்த நிமிடமே வேண்டிய பதில் கிடைத்துவிடலாம். ஆனால் உங்களுக்கு உணவு செரிக்க வேண்டுமில்லையா ? அதனால் மேற்கூறியபடி மின்னஞ்சலை தயார் செய்துவிட்டு உங்கள் டப்பர்வேரை எடுக்கவும்.

ஒரு கையில் டப்பர்வேரையும் இன்னொரு கையில் ஸ்பூனையும் பிடித்துக்கொண்டு பிட்டுப்படம் பார்க்கும் பாவனையில் வெறிக்க வெறிக்க நீங்கள் தயார் செய்துவைத்த மின்னஞ்சலை பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டும். முக்கியமான விஷயம், நீங்கள் சாப்பிடும் போதும் வினோத சப்தங்களை எழுப்ப வேண்டும். அப்போதுதானே உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எரிச்சல் மூளும். முதலில் நீங்கள் உட்கொள்ளும் தயிர் சாதத்தை நாவிற்கும் மேலண்ணத்திற்கும் இடையே கசக்கி ‘பச்யேக்... பச்யேக்...’ என்று ஒலியெழுப்ப வேண்டும். உங்கள் வீட்டில் தயிர் சாதத்திற்கு சைட் டிஷ்ஷாக காராபூந்தி கொடுத்திருப்பார்கள். அதனை அள்ளி வாயில் போட்டு மெல்லும்போது ‘கருக்கு... முறுக்கு...’ என்று சத்தம் வரும். இப்படி நீங்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத ஏப்பம் ஒன்று வரும். அந்த சனியனை ஏன் கட்டுப்படுத்த வேண்டும். ‘ஏவ்வ்வ்வ்...’ !. அருகில் அமர்ந்திருப்பவர்கள் சாவட்டும். 

இப்படி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு திடீரென பணி சம்பந்தமான சந்தேகமொன்று எழும். கவலைப்பட வேண்டாம். ஒரு கவளம் தயிர் சாதத்தை எடுத்து வாயில் இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள். அதனை விழுங்கிவிடாமல் கவனமாக வாயில் அதக்கியபடி பக்கத்தில் உள்ள ஆசாமியிடம் உங்கள் சந்தேகத்தை கேட்டுவிடுங்கள். இந்த சாகசத்தை நிகழ்த்தும்போது உங்கள் வாயிலிருந்து சில எச்சில் பருக்கைகள் அந்த நபர்மீது சிதறக்கூடும். அதற்கெல்லாம் கலங்காமல் உங்கள் சந்தேகம் முற்றிலுமாக நிவர்த்தியாகும் வரை அவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். இப்போது உங்கள் டப்பர்வேரில் தயிர் சாதம் கிட்டத்தட்ட காலியாகியிருக்கும். ஆனால் டப்பாவில் கொஞ்சம் ஒட்டியிருக்கும் அல்லவா. அதனை ஸ்பூன் வைத்து, ‘வரட்டு, வரட்டு’ என்று பக்கத்து ஆளுக்கு பல் கூசும் வரையில் சுரண்டியெடுத்து ஸ்பூனை சப்ப வேண்டும். 

என்னது வாந்தி வருகிறதா ? கொஞ்சம் பொறுங்கள் பாஸ். இனிமேல் தான் ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது. சாப்பிட்டு முடித்தாயிற்று. வாட்டர் பாட்டிலில் உள்ள தாகஷமணியை எடுத்து ஒரு மிடறு உட்கொள்ள வேண்டும். விழுங்கி விடக்கூடாது. ‘குப்ளிக்... குப்ளிக்... குப்ளிக்...’ என்று சுமார் இரண்டு நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்கும் பாவனை காட்டி.......... குடித்துவிட 

உவ்வேக் ! உவ்வேக் !!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 July 2014

சதுரங்க வேட்டை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு மனக்குழப்பம். என்ன படம் பார்ப்பது என்பதைப் பற்றியது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து (என்னளவில்) நீண்டகாலம் ஆகிறது. கடைசியாக பார்த்தது யாமிருக்க பயமே. இதுவரையில் இந்த ஆண்டில் வெறும் ஆறு படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். கட்டாயமாக படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்த சமயம் என்னிடமிருந்த தேர்வுகள் – வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை, இருக்கு ஆனா இல்ல (படத்தின் பெயர்தான்). பெயரில் தொடங்கி ட்ரைலர் வரை முதலில் ஈர்த்தது இருக்கு ஆனா இல்ல. வேலையில்லா பட்டதாரி நன்றாக இருந்தாலும் பார்ப்பதாக இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். கொஞ்சம் தாமதமாக பிடிக்க ஆரம்பித்தது சதுரங்க வேட்டை. சின்னச் சின்ன விளம்பரங்கள் காட்டியே ஈர்த்துவிட்டார்கள். ஒரு சாமானிய ரசிகனை படம் பார்க்க வைக்க திரைப்படக்குழு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. கொஞ்சம் தயக்கத்துடனேயே எடுத்த முடிவு, முதல்நாள் விமர்சனங்கள் வரத்துவங்கியதும் பார்த்தே தீர வேண்டும் என தெளிவுற்றேன்.

Based on true events என்ற வரிகளை பார்த்ததும் சற்று கடுப்பானேன். கொஞ்ச நேரத்தில் ஏன் அப்படி என்று புரிய ஆரம்பித்துவிட்டது. மண்ணுளி பாம்பு, எம்.எல்.எம், ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என்று தமிழகத்தை கலக்கிய பிரபல மோசடி சம்பவங்களை தொகுத்திருக்கிறார்கள். 

பணத்திற்காக பல மோசடி சம்பவங்களை அரங்கேற்றுபவன் (தினத்தந்தி பாஷையில் மோசடி மன்னன்) காந்தி பாபு. ஒரு முறை காவல்துறையில் சிக்கி அல்லல்படுகிறான். பணம் அவனை காப்பாற்றுகிறது. ஆனால் அவனால் ஏமாற்றப்பட்டவன் ஒருவனால் மரணம் வரை செல்ல நேரிடுகிறது. அதிலிருந்து திருந்தி வாழ முயலும் காந்தி பாபுவுக்கு சமூகம் என்ன செய்கிறது என்பதே மீதிக்கதை.

காந்தி பாபுவாக நடித்திருக்கும் நடராஜை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை. பாலியுட்டில் பிரபல ஒளிப்பதிவாளரான நடராஜ், தமிழில் அவ்வப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மட்டரகமான மசாலா படங்களில். சதுரங்க வேட்டைக்கு பிறகு முந்தய வாசகத்தில் ஒரு வார்த்தையை மட்டும் அடித்துவிடலாம். எதார்த்தமான நடிப்பாலும் உடல்மொழியாலும் கவர்ந்துவிடுகிறார். அவரது மிகைப்படுத்தாத நடிப்பிற்கு விடுதலை கிடைத்ததும் நீதிமன்றத்தில் இருந்து நடந்துவரும் காட்சி ஒரு உதாரணம்.

சரோஜா தேவி புத்தகங்களின் வர்ணிப்பு பகுதியில் ‘வாளிப்பான உடல்’ என்கிற வாக்கியத்தை அடிக்கடி படித்திருக்கிறேன். அதற்கான பொருளை இஷாராவை பார்த்தால் புரிந்துக்கொள்ளலாம். ச்சும்மா பப்பாளி போல இருக்கிறார். ஆனால் ‘ஸ்கோப்’ இல்லாத கதாபாத்திரம். கூடிய விரைவில் இஷாராவை உப வேடங்களிலும் மூன்றாம் தர கதாபாத்திரங்களிலும் பார்க்கலாம் என்பது என்னுடைய கணிப்பு.

கவிஞர் பிறைசூடனின் பெயரை படம் முடிந்ததும் டைட்டிலில் பார்த்தேன். எப்போது வந்தார் என்று நீண்ட நேரம் யோசித்தபிறகு விடை கிடைத்தது – ஜட்ஜய்யா !

ஷான் ரோல்டனின் இசையில் முன்னே என் முன்னே பாடல் கொஞ்சம் பிடிக்கிறது. அதன் இடையே வரும் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அபாரம். அதையே படத்தின் இறுதியில் டைட்டில் க்ரெடிட்ஸ் போடும்போது பயன்படுத்தியது நல்ல யுக்தி. என்னைக் கேட்டால் அந்த டைட்டில் க்ரெடிட்ஸ் இசையே படத்தின் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது.

வசனங்கள் படத்தின் அசுர பலம். அப்புறம் ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன சர்காஸ்டிக் சுவாரஸ்யங்கள். ஒரு காட்சியில், ஃப்ரீயா கட்டிங் கொடுக்குற மனசு மதுரக்காரனுக்கு தான்டா வரும், மதுரக்காரன் என்னைக்குடா தண்ணியூத்தி அடிச்சிருக்கான் என்று செம ஓட்டு ஓட்டியிருக்கிறார்கள். அப்புறம் ரைஸ் புல்லிங் பற்றி காவியுடையணிந்த காந்தி பாபு பேசும் வசனம் செம்ம அட்ராசிட்டி. 

எல்லாம் இருந்தும் படத்தில் உணர்வு குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது. காந்தி பாபு ஒரு அக்மார்க் அயோக்கியன் என்று முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். அதனாலோ என்னவோ அவரை நையப்புடையும்போது கூட எந்தவித பதட்டமும் பரிதாபமும் வர மறுக்கிறது. உலகத்தில் பணம் மட்டுமே க்ளிஷே கிடையாது என்று தத்துவம் உதிர்க்கிறார் காந்தி பாபு. ஆனால் எல்லா சினிமாக்களிலும் வருவது போல காந்தி பாபுவுக்கு ஒரு சோக ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. திடீரென காந்தி பாபு திருந்தி வாழும்போது கூட, உண்மையில் திருந்திவிட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நிறைய இடங்களில் துல்லியம் தவறவிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு கதாபாத்திரம் தூய தமிழிலேயே பேசுகிறது. (அது என்ன எழவுக்காக அப்படி பேசுகிறது என்று புரிபடவில்லை). ஆனால் சில காட்சிகளில் தன்னையே மறந்து ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறது. அதே போல காந்தி பாபு தன்னுடைய சிறுவயது சம்பவங்களைப் பற்றி சொல்லும்போது மட்டும் திடீரென மெட்ராஸ் பாஷையில் பேசுகிறார். நாயகியின் கொங்கு சொல்லாடலிலும் அதே மெத்தனம் தெரிகிறது.

ஒரு கட்டுரையின் முதல் சில வரிகளும், ஃபினிஷிங் டச் எனப்படும் முத்தாய்ப்பான முடிவும் மட்டும் இருந்தால் அதன் நடுவே உள்ள குறைகளை வாசகர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எழுத்துக்கு மட்டுமல்ல, எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும். சதுரங்க வேட்டையும் அப்படித்தான். அதன் முன்னோட்டங்கள் நம்மை திரையரங்கிற்குள் இழுத்துப் போடுகின்றன, அதன் இறுதிக்காட்சி க்ளிஷே என்பதையும் தாண்டி ஒரு சிறிய தாக்கத்தை(யாவது) ஏற்படுத்துகிறது. மற்றபடி இடையில் வரும் காட்சிகள் அப்படியொன்றும் சுவாரஸ்ய மிகுதியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சதுரங்க வேட்டை – புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டக்கூடிய ஒரு சுமாரான பொழுதுபோக்கு படம். மிகைபடுத்தப்பட்ட விமர்சனங்களையும் பட முன்னோட்டத்தையும் வைத்து எந்தவித எதிர்பார்ப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் ரசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment