Showing posts with label mess. Show all posts
Showing posts with label mess. Show all posts

2 November 2016

தயிர் சாதம் சாப்பிடுவது எப்படி ?

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நானொரு மாமிச பட்சினி. சிறு வயதிலிருந்தே எனக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாது. குறிப்பாக தயிர் என்று யாராவது சொல்லிவிட்டால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கமாட்டேன். ஆனால் நாம் எதை மனதின் அடியாழத்திலிருந்து வெறுக்கிறோமோ அதுவே நம் கண் முன்னே அடிக்கடி வந்து போவது தானே வாழ்க்கையின் வடிவமைப்பு !

எனக்குத் தெரிந்த ஒருவர் (எதற்கு வம்பு ?) இருக்கிறார். சிவகாசிக்காரர் என்பதால் பால் சோறு விரும்பி. தயிர் சோறும் சாப்பிடுவார். அவர் தயிர் சோறு சாப்பிடுவதை பார்த்துவிட்டால் நமக்கு சோறு இறங்காது. சோற்றின் மீது தயிரை தலைகுப்புற தள்ளிவிடுவார். அதன்பிறகு அவருடைய உள்ளங்கையைக் கொண்டு தயிர் சோற்றை ஜென்ம விரோதியின் கழுத்தை நெரிக்கும் பாவனையில் அழுத்துவார். அதுவரை தனித்தனியாக இருந்த தயிரும் சோறும் தயிர் சோறாக அவருடைய ஆக்டோபஸ் விரலிடுக்குகள் வழியாக வெளியேறும் ! அதற்கு மேல் அந்தக்காட்சியை பார்க்க முடியாமல் நான் திரும்பிக்கொள்வேன்.

இது பரவாயில்லை. தனிப்பட்ட முறையில் சந்திக்கும் சிக்கல் என்பதால் நமக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடலாம். பொது இடத்தில் நடக்கும் கூத்துகள் நம்மை விடாமல் துரத்தி வந்து வன்புணர்வு செய்யும் ரகம். சென்ற மாதத்தில் ஒருநாள் மேனேஜர் ஒருவருக்கு மூட் வந்ததால் உருப்படிகளை புஹாரிக்கு அழைத்துச் சென்றிருந்தார். எல்லோரும் மெனுவை மேய்ந்து இதுவரை வாழ்நாளில் முகர்ந்து கூட பார்த்திராத வித்தியாச உணவுவகைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். எனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ஆந்திர நண்பர் சர்வரின் காதில் கிசுகிசுப்பாக ‘கர்ட் ரைஸ்’ இருக்கா ? என்று கேட்டார். எனக்கு வெலவெலத்துப் போய்விட்டது. அநேகமாக தமிழ்நாட்டில் புஹாரிக்கு சென்று யாருமே இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். புஹாரியின் நிறுவனருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் மின் சரடை கடித்து தற்கொலை செய்துகொள்வார். ஆந்திர நண்பரிடம் 'ஏங்க இப்படி ராவடித்தனம் பண்றீங்க' என்றால் வவுறு சரியில்லை என்கிறார். நல்லவேளையாக சர்வர் புஹாரியில் தயிர் சோறு நன்றாக இருக்காதென்று அவராகவே வேறு உணவை பரிந்துரைத்து என்னைத் தப்புவிக்கச் செய்தார்.

அலுவலகத்திற்கு வெளியே நடப்பது இப்படியென்றால் உள்ளே நடப்பது எல்லாம் நம்மை ரூம் போட்டு செய்யும் ரகம். கார்ப்பரேட் அலுவலகங்களைப் பொறுத்தவரையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஏதாவது மின்னஞ்சல் வரும். அதாவது வாட்டர் டிஸ்பென்ஸரில் கை கழுவாதீர்கள், வாஷ் பேஸினில் பப்பிள் கம் துப்பாதீர்கள் போன்ற மின்னஞ்சல்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒருமுறை, ஆண் ஊழியர்கள் யூரிணல் தாண்டி தெறிக்காமல் கவனமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மின்னஞ்சல் வந்தது. கூடவே, இந்த மின்னஞ்சல் ஆண் ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பியிருப்பதால் யாரும் சங்கடப்பட வேண்டாம் என்ற பின்குறிப்புடன் வந்தது. பின்குறிப்பை பார்த்ததும் தான் இன்னும் சங்கடமாக இருந்தது. தமிழ் சினிமாவில் வெளிவரும் மாஸ் படங்களை பார்த்து பார்த்து பழக்கப்பட்ட ஆசாமிகள் யாரோ தான் இப்படி தெறிக்க விட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். 

ஒழுங்கு நடவடிக்கை மின்னஞ்சல்கள் வரிசையில், 'பணிபுரியும் மேசையில் யாரும் உணவருந்த வேண்டாம்' என்று அவ்வப்போது வரும். மின்னஞ்சல் வந்து சில நாட்கள் வரை எல்லோரும் உத்தரவை ஒழுங்காக கடைபிடிப்பார்கள். அப்புறம் ஒருநாள் சாதாரணமாக எவ்வித குற்றவுணர்வுமின்றி இவ்விதியை மீறி பிள்ளையார் சுழி போடுவார் ஒருவர். இப்படி பி.சு போட்டு தொடங்கி வைப்பவர் பெரும்பாலும் மேனேஜராக இருப்பார். ஏனென்றால் மேனேஜர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து நேரடியாக குதித்து வந்தவர்கள். அவர்களுக்கென்று விதிகள் எல்லாம் இல்லை.

அடுத்த சில நாட்களில் பணிமேசையில் உணவருந்துவது சகஜமாகிவிடும். ஐம்பது மீட்டர் தூரத்திலிருக்கும் கேண்டீனுக்கு போய் சாப்பிடுவதில் சோம்பேறித்தனம். கேட்டால் ‘லைட் ஃபுட்’ வேண்டுமானால் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மின்னஞ்சலிலேயே போட்டிருக்கிறது என்று வியாக்கியானம் பேசுவார்கள். இந்த ‘லைட் ஃபுட்’ என்பதில் தயிர் சாதமும் சேர்த்தி.

பணிமேசையில் வைத்து தயிர் சாதம் சாப்பிடுவது ஒரு தனிக் கலை ! முதலில் அவுட்லுக்கில் ஒரு நியூ மெயில் விண்டோவை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும். தயிர் சாதத்திற்கும் அவுட்லுக்கிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். சில விஷயங்களை ஆராயக்கூடாது. அனுபவிக்க வேண்டும். மெயிலில் யாரையாவது யாரிடமாவது கோர்த்துவிடும் வகையில் நான்கைந்து புல்லட் பாயின்ட் கேள்விகள் கேட்க வேண்டும். ஸீஸீயில் டீம் லீடர், ப்ராஜெக்ட் மேனேஜர், மேனேஜர் தொடங்கி மேனேஜருடைய சித்தப்பா வரை வைக்க வேண்டும். நீங்கள் இந்த மெயிலை அனுப்பி கோர்த்து விடப்போகிற நபர் உங்கள் புறமுதுகிற்கு பின்னாலேயே அமர்ந்திருக்கலாம். அவரிடம் நேரிலேயே கேட்டுவிட்டால் உங்களுக்கு அடுத்த நிமிடமே வேண்டிய பதில் கிடைத்துவிடலாம். ஆனால் உங்களுக்கு உணவு செரிக்க வேண்டுமில்லையா ? அதனால் மேற்கூறியபடி மின்னஞ்சலை தயார் செய்துவிட்டு உங்கள் டப்பர்வேரை எடுக்கவும்.

ஒரு கையில் டப்பர்வேரையும் இன்னொரு கையில் ஸ்பூனையும் பிடித்துக்கொண்டு பிட்டுப்படம் பார்க்கும் பாவனையில் வெறிக்க வெறிக்க நீங்கள் தயார் செய்துவைத்த மின்னஞ்சலை பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டும். முக்கியமான விஷயம், நீங்கள் சாப்பிடும் போதும் வினோத சப்தங்களை எழுப்ப வேண்டும். அப்போதுதானே உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எரிச்சல் மூளும். முதலில் நீங்கள் உட்கொள்ளும் தயிர் சாதத்தை நாவிற்கும் மேலண்ணத்திற்கும் இடையே கசக்கி ‘பச்யேக்... பச்யேக்...’ என்று ஒலியெழுப்ப வேண்டும். உங்கள் வீட்டில் தயிர் சாதத்திற்கு சைட் டிஷ்ஷாக காராபூந்தி கொடுத்திருப்பார்கள். அதனை அள்ளி வாயில் போட்டு மெல்லும்போது ‘கருக்கு... முறுக்கு...’ என்று சத்தம் வரும். இப்படி நீங்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத ஏப்பம் ஒன்று வரும். அந்த சனியனை ஏன் கட்டுப்படுத்த வேண்டும். ‘ஏவ்வ்வ்வ்...’ !. அருகில் அமர்ந்திருப்பவர்கள் சாவட்டும். 

இப்படி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு திடீரென பணி சம்பந்தமான சந்தேகமொன்று எழும். கவலைப்பட வேண்டாம். ஒரு கவளம் தயிர் சாதத்தை எடுத்து வாயில் இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள். அதனை விழுங்கிவிடாமல் கவனமாக வாயில் அதக்கியபடி பக்கத்தில் உள்ள ஆசாமியிடம் உங்கள் சந்தேகத்தை கேட்டுவிடுங்கள். இந்த சாகசத்தை நிகழ்த்தும்போது உங்கள் வாயிலிருந்து சில எச்சில் பருக்கைகள் அந்த நபர்மீது சிதறக்கூடும். அதற்கெல்லாம் கலங்காமல் உங்கள் சந்தேகம் முற்றிலுமாக நிவர்த்தியாகும் வரை அவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். இப்போது உங்கள் டப்பர்வேரில் தயிர் சாதம் கிட்டத்தட்ட காலியாகியிருக்கும். ஆனால் டப்பாவில் கொஞ்சம் ஒட்டியிருக்கும் அல்லவா. அதனை ஸ்பூன் வைத்து, ‘வரட்டு, வரட்டு’ என்று பக்கத்து ஆளுக்கு பல் கூசும் வரையில் சுரண்டியெடுத்து ஸ்பூனை சப்ப வேண்டும். 

என்னது வாந்தி வருகிறதா ? கொஞ்சம் பொறுங்கள் பாஸ். இனிமேல் தான் ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது. சாப்பிட்டு முடித்தாயிற்று. வாட்டர் பாட்டிலில் உள்ள தாகஷமணியை எடுத்து ஒரு மிடறு உட்கொள்ள வேண்டும். விழுங்கி விடக்கூடாது. ‘குப்ளிக்... குப்ளிக்... குப்ளிக்...’ என்று சுமார் இரண்டு நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்கும் பாவனை காட்டி.......... குடித்துவிட 

உவ்வேக் ! உவ்வேக் !!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 January 2014

பேரடைஸ் பிரியாணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பள்ளிக்கூட பருவத்திலிருந்தே எனக்கு ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கொண்டு போகும் பழக்கத்தின் மீது ஒரு பயங்கர வெறுப்பு. மணியடித்ததும் டிபன் பாக்ஸை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். காக்காய் எச்சம் போடாத ஒரு மரத்தடி நிழலில் இடம்பிடிக்க வேண்டும். டீச்சர் ‘ஷேரிங்’ பற்றி சொல்லிக்கொடுத்திருந்தாலும் குழுவாய் வட்டமிட்டு அமர்ந்து அரட்டையடித்தபடியே சாப்பிடும் கலாசாரத்தில் எனக்கொன்றும் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. சாப்பிடும்போது பேசும் பழக்கம் கிடையாது. அதுவுமில்லாமல் எனது எண்ண அலைவரிசைக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் எனக்கு கிடைத்ததில்லை. பெரும்பாலும் தனியாகவே அமர்ந்து சாப்பிடுவேன். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. யாராவது நான் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை பார்த்துவிட்டால் என்னவோ சுயமைதுனம் செய்பவனை கையும் குறியுமாக பிடித்துவிட்டதைப் போன்ற பாவனையுடன் என்னடா தனியா உக்காந்து சாப்பிடுற ? என்று அலறித் தொலைப்பார்கள். அதற்காகவே நேரத்தை வீணடிக்காமல் துரிதமாக சாப்பிட்டு முடிப்பதை பழக்கமாக வைத்திருந்தேன்.

ரெண்டு லெக்பீஸையும் பிரபாவுக்கே கொடுத்திட்டேனே !
அதன்பிறகு நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தமையால் லஞ்ச் பாக்ஸ் தொல்லை இல்லை. என் விசுப்பலகையில் அமருபவர்கள், அறைத்தோழர்கள் என சமயத்திற்கு கிடைத்தவர்களோடு போய் சாப்பிட்டு வந்துவிடுவேன். முதன்முதலாக வேலையில் சேர்ந்தபோது ‘க்ரேவ்யார்ட்’ ஷிப்ட் கிடைத்தது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு துவங்கி காலை ஆறு மணிக்கு முடியும் ஷிப்ட். முதலிரண்டு நாட்களுக்கு சிரமமாக இருந்து, அதன்பின் பழகிவிட்டது. நிம்மதியான வேலை. அங்கேயும் லஞ்ச் பாக்ஸுக்கு வேலை கிடையாது. சில மாதங்களுக்கு பிறகு பகல் ஷிப்டிற்கு மாற்றினார்கள். வீட்டில் எவ்வளவோ சொல்லியும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்ல விடாப்பிடியாக மறுத்துவிட்டேன். உண்மையில் லஞ்ச் பாக்ஸ் சுமப்பது என்பது ஒரு காமன் மேன் இமேஜை கொடுக்கும் என்பதாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. பட்டினியாக கிடந்தாலும் கிடப்பேனே தவிர லஞ்ச் பாக்ஸ் சுமக்கமாட்டேன். தற்சமயம் யூ.கே ஷிப்ட் வேலை என்பதால் மதிய உணவிற்கு அவசியமில்லை. இரவு உணவிற்கு தான் வெளியே அலைய வேண்டும்.

சமீபத்தில் நான் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு மாற்றப்பட்ட போது முதலிரண்டு நாட்கள் உணவுக்காக அல்லாட வேண்டியதாகிவிட்டது. தேனாம்பேட்டையை பொறுத்தவரையில் ஃபாஸ்ட் ஃபுட், வடக்கம்பட்டி புரோட்டா கடை, தலைப்பாகட்டி பிரியாணி, உயர்தர சைவ என பலதரப்பட்ட உணவகங்கள் நடை தூரத்திலேயே இருந்தன. கிண்டியில் அப்படியொன்றும் பிடிபடுவதாக தெரியவில்லை. முதலிரண்டு நாட்கள் ஒரு தள்ளுவண்டிக் கடையில் சப்பாத்தி வாங்கிச் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி. ச்சை, இப்போது நினைத்துப் பார்த்தால் அசூயையாக இருக்கிறது. நானெல்லாம் வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது மாமிசம் சாப்பிடுபவன். நான் போய் தொடர்ச்சியாக இரண்டு இரவுகள் சப்பாத்தி, தக்காளி சட்னி சாப்பிட்டிருக்கிறேன். மூன்றாவது நாள் கொலைவெறியுடன் தேடியதில் அரை கிலோ மீட்டர் தொலைவில் மயூரா என்றொரு துரித உணவகம் கிடைத்தது. ஆரம்பத்தில் அங்கே அதிக கூட்டமில்லை. நல்ல மரியாதை கொடுப்பார்கள். வெறும் ஃபிரைட் ரைஸ் மாத்திரமில்லாமல் வேறு உணவு வகைகளும் இருந்தமையால் தொடர்ந்து அங்கே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தேன். நாளாக நாளாக கடையில் கூட்டம் அதிகரித்தது. மரியாதையும் குறைய ஆரம்பித்தது. ஒருநாள் ஃபிரைட் ரைஸ் சொல்லிவிட்டு இருபது நிமிடங்கள் ஆகியும் வராததால் போங்கடா நொன்னைகளா என்று எழுந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அங்கே செல்லவில்லை. தற்சமயம் அந்த உணவகம் வேறு பெயருக்கு மாற்றலாகி வேறு உரிமையாளர் அமர்ந்திருக்கிறார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் உணவகம் தேடியபோது தான் கவனித்தேன். அந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பெண்கள் விடுதியும், சில ஆண்கள் விடுதியும் அவற்றை சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட சிறிய உணவகங்களும் இருந்தன. நிறைய இருந்தாலும் சிலவற்றில் மட்டும்தான் தரம் இருக்கும். தக்கன தப்பிப்பிழைக்கும் எனும் விதிப்படி தரமான மெஸ்கள் தவிர்த்து மற்றவை கை மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மெஸ்’ஸாக சாப்பிட்டு பார்த்து இறுதியில் ஒரு ஆந்திரா மெஸ்ஸின் சால்னாவுக்கு அடிமையாகி அங்கேயே ஐக்கியமாகிவிட்டேன். அந்த மெஸ்’ஸில் சால்னா தவிர்த்து மற்ற அனைத்தும் எனக்கு எடாகூடமாகவே இருந்தன. அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள். யாருக்கும் தமிழ் தெரியாது. அங்குள்ள தொலைக்காட்சியில் ஜெமினி சேனலில் சன் டிவியின் நெடுந்தொடர்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு ஓடிக்கொண்டிருக்கும். சால்னா ஊத்துவதற்கு ஏதோ அவன் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்டது போல சதாய்ப்பான். அரைக்கரண்டி ஊற்றிவிட்டு முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். நான் அங்கே சால்னா தவிர்த்து வேறு எதையும் ஊற்றிச் சாப்பிடுவதில்லை என்று நன்றாக தெரிந்தும் ஒவ்வொரு முறையும் சாம்பார் வாளியை என் முன் கொண்டுவந்து காட்டி வசை வாங்கிக்கொள்வார்கள். இவை எல்லாம் கூட பரவாயில்லை. அங்குள்ள சிறுவர்களுக்கு என் தலைமயிர் மீது ஒரு கண். மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கு போய் அமர்ந்துவிட்டால் குறைந்தது நான்கு பணியாளர்களாவது என் தலைமயிரை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருப்பார்கள். வாஷ் பேஸினுக்கு அருகில் சென்று ஒரு சிலுப்பு சிலுப்பினால் பின்னால் நின்று இரண்டு பேர் பார்த்தபடி அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வார்கள். அவர்கள் அனைவரும் கே’யாக இருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கிருக்கும் நேரம், அழகாக பிறந்த பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் அவஸ்தைகளை நான் உணரக்கூடிய சில மணித்துளிகள். அவ்வளவு அவஸ்தைகளுக்கு மத்தியிலும் அந்த சால்னாவுக்காக அடிக்கடி அங்கு போக வேண்டியிருக்கிறது.

வாரத்திற்கு இரண்டு நாட்களாவது ஆந்திரா மெஸ்ஸில் ஆஜாராகிவிடுவேன். ஆனாலும் தினமும் பரோட்டா சால்னாவையே சாப்பிட முடியாதல்லவா...? அதனால் ஒரு மாற்றத்திற்காக துரித உணவகம், தோசைக்கடை எனது உணவகங்களை மாற்றிக் கொண்டிருப்பேன். ஒரேயொரு குறை அந்த சுற்றுவட்டாரத்தில் நடந்து போகக்கூடிய தொலைவில் எங்கேயும் பிரியாணி கடை கிடையாது. 

சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவை நோக்கி நடந்துக் கொண்டிருந்தபோது கவனித்தேன். தனம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த வெகு சுமாரான ஒரு மெஸ் மூடப்பட்டு அங்கே புதிய கடை உதயமாகியிருந்தது. பேரடைஸ் பிரியாணி செண்டர்....! புதிய உணவகம் என்பதாலோ என்னவோ எல்லாம் சுத்தமாக இருந்தன. கடையில் ஒன்றிரண்டு பேர் தவிர ஆட்கள் இல்லை. மயூராவை விட ஒரு படி அதிகமாகவே மரியாதை கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் கல்லாவில் இருந்தவர் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்வதற்காக ஃபீட்பேக் கேட்டார். பிரியாணியில் ஸ்பைசஸ் (பட்டை, லவங்கம், கிராம்பு இத்யாதிகள்) அதிகமுள்ளதாக சொல்லிவிட்டு அகன்றேன். அதன்பிறகு விடுமுறை பருவம் வந்ததால் கிட்டத்தட்ட அரை மாதத்திற்கு அங்கே செல்ல முடியவில்லை.

புத்தாண்டு பிறந்ததும் சென்ற வாரத்தில் ஒருநாள் பேரடைஸுக்கு சென்றிருந்தேன். வாடிக்கையாளர்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ஆச்சரியமாக இருந்தது. இன்னமும் அதே சுத்தத்தை பராமரிக்கிறார்கள். இம்முறை மெனு கார்டு விஸ்தரிக்கப் பட்டிருந்தது. அதே மரியாதை. பிரியாணி மட்டுமில்லாமல் ஃபிரைட் ரைஸ் வகையறாக்கள், தந்தூரி வகையறாக்கள், சிக்கன் உப உணவுவகைகள் என மெனுவே அட்டகாசமாக இருந்தது. விலையும் அப்படியொன்றும் அதிகமில்லை. அரை பிளேட் சிக்கன் பிரியாணி தொண்ணூறு ரூபாய். இன்னொரு ஆச்சரியம். பிரியாணியில் சென்ற முறை சொன்ன குறை களையப்பட்டு கச்சிதமாக இருந்தது. சாப்பிட்டு முடிப்பதற்குள் கல்லாவில் இருந்தவர் இரண்டுமுறை வந்து நல்லாயிருக்கா சார் என்று கேட்டுவிட்டார். கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும் அவருடைய மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதற்காகவேனும் பேரடைஸ் பிரியாணி செண்டர் நீண்ட நாட்களுக்கு பெயர் மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment