16 January 2014

வீரமான ஜில்லா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிகழ் வருடத்தின் தைப்பொங்கல் தமிழ் வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக பொங்கியிருக்கிறது. சமகால தமிழ் சினிமாவின் இருபெரும் துருவ நட்சத்திரங்களான அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. ரசிகர்கள் தீபாவளியும் பொங்கலும் ஒரே நாளில் அமைந்தது போல கொண்டாட்ட மனநிலையுடன் இருக்க, திரையரங்க உரிமையாளர்களை பொறுத்தமட்டில் ஒரு சிறிய பின்னடைவு. இருவேறு தினங்களில் தனித்தனியாக வெளியாகி இரட்டை வசூல் பொன் முட்டைகளை தர வேண்டிய படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ஒரேயொரு பொன் முட்டை மட்டுமே சாத்தியம். பன்திரை வளாகங்களுக்கு பிரச்சனையில்லை. பல ஒற்றைத்திரை அரங்குகள் வேறு வழியின்றி ‘தலைக்கு’ இரண்டு காட்சிகள் காட்டின. ஒரு புறம் தலயா ? தளபதியா ? என்ற போட்டி இருந்தாலும், இருவருக்கும் பொதுவான மசாலாப்பட பிரியர்கள் அடுத்தடுத்து இரண்டு படங்களையும் பார்த்து ஆனந்தக்கூத்தாடினர். எல்லாம் சரிதான். ஆனால் இந்த படங்கள் இரண்டும் உண்மையாகவே நன்றாக இருந்ததா என்று சற்று உணர்ச்சிவசப்படாமல் பார்க்கலாம்.

வீரம், ஜில்லா படங்கள் வெளியாகி முழுமையாக ஏழு நாட்கள் ஆகிவிட்டதால் கதை எல்லாம் சொல்லத் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.

ஜில்லா – பார்த்து பார்த்து சலித்த கதை இல்லை என்றாலும் ஏற்கனவே வேறு பரிமானங்களில் பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட ‘தீனா’ பாணி கதை. விஜய்யும் மோகன் லாலும் இணைந்து நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க அவர்கள் இருவருடைய பிரஸ்தாங்களே நிரம்பியிருக்கின்றன. அதாவது, தேவர் மகன் படத்தில் கமல் எப்படி நடிகர் திலகத்தை பயன்படுத்திக் கொண்டாரோ அதே போல மோகன் லாலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். ஜில்லாவின் காரணமாக மலையாள தேசத்தில் விஜய்யின் புகழ் ஓங்கியிருக்கக்கூடும். லாலேட்டன் நடித்திருப்பதாலோ என்னவோ பின்னணி இசையில் பெரும்பாலும் 'செண்டை மேளம்' பயன்படுத்தியிருக்கிறார்கள். மோகன் லால் விஜய்யை விட பெரிய காமெடி பீஸாக இருப்பார் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் நான் சிவன்டா என்று கத்திக்கொண்டே இருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் கமிஷனர் போல ஏதோவொரு பதட்டத்துடனேயே வசனம் பேசுகிறார். ரவி மரியா கதாபாத்திரத்தை அடிக்கடி குறுகுறுவென காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நமக்கு சந்தேக மசுறை ஏற்படுத்துறாங்களாமாம். இறுதியில் வில்லன் யார் என்பதில் டுவிஸ்ட் வைத்து, சாகடித்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

ஜில்லாவின் நாயகி காஜல். இறுக்கமான காவலர் உடுப்பில் தோன்றி கிறக்கமூட்டுகிறார். ஜில்லாவில் காஜலின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று பாடல்களில் தோன்றி களிப்பூட்டுகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இலவச இணைப்பாக நிவேதா தாமஸை தேர்ந்தெடுத்தமைக்கு விஜய் மச்சானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வீரம் – அண்ணன் தம்பிகள் கதை. கேட்டதும் சலிப்பாக இருக்கிறது அல்லவா...? படமும் ஏறத்தாழ அப்படித்தான் இருக்கிறது. அஜித்தின் தம்பிகளாக விதார்த் உட்பட நான்கு சுமார் மூஞ்சிகள் நடித்திருக்கிறார்கள். ஆளுக்கொரு ஆளு. நீயும் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி தானா என்று கேட்ட பாவத்திற்காக கல்லூரி படிப்பு முடிக்காமலே கூட ஐந்தாவது தம்பிக்கொரு ஜோடி சேர்த்திருக்கிறார்கள். நல்லவேளையாக அஜித் அட்டகாசத்தில் முயற்சித்தது போல வட்டார வழக்கு எதையும் முயற்சிக்கவில்லை. வசனங்களை அழுத்தம் திருத்தமாக பேசாமல் கொஞ்சம் லூஸ் விட்டு பேசுகிறார். வழக்கமான மசாலா படங்களில்லாத புதுமை ஒன்று வீரத்திலிருக்கிறது. துவக்கத்திலிருந்தே அஜித் பக்கம் ஒரு உயிர்பலி கூட ஏற்படுவதில்லை. ஒரு சறுக்கல் கூட இல்லை. எல்லோரையும் போட்டு துவம்சம் செய்கிறார். அந்த ஊரில் இனி அடிக்க ஆட்கள் இல்லையென்றதும் தமன்னாவின் ஊருக்கு போய் அங்கே ஒரு கும்பலை புரட்டி எடுக்கிறார். கடைசியில் மீண்டும் அதுல் குல்கர்னி என பழைய வட இந்திய வில்லனை அழைத்துவந்து சாகடித்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

காஜலோடு ஒப்பிடும்போது வீர நாயகி ஒரு படி மேல். சிற்பங்களை பராமரிப்பவள் என்ற புதுமையான பாத்திர படைப்பு. ஒரு காட்சியில் தீபங்களுக்கு இடையே தேவதை போல காட்சியளிக்கிறார். ஏதோவொரு பனி பிரதேசத்தில், நோகாமல் கோர்ட்டு சூட்டு போட்டு ஆடும் அஜித்துடன் குறைந்தபட்ச ஆடைகளுடன் ஆடி சூடேற்றுகிறார். தமன்னாவின் தொப்புளை பார்க்கும்போது அவருடைய மார்க்கெட் சுணக்கமாக இருக்கிறதென்று நம்ப முடியவில்லை.

இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் சராசரி அக்ஷன் மசாலா படங்கள். இரண்டும் மொக்கை. பிரதீப் ராவத், தம்பி ராமையா, வித்யுலேகா ராமன், ஸ்டண்ட் சில்வா என இரண்டிலும் சிலர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பிரதீப் ராவத் என்ற வட இந்திய நடிகர். பார்ப்பதற்கு வலைப்பதிவர் பபாஷாவிற்கு வயதானது போல இருப்பார். முன்பொரு காலத்தில் கஜினி, தொட்டி ஜெயா என ஒரு சுற்று வந்தவர். அவரை வலியச் சென்று அழைத்துவந்து சிரிப்பு வில்லன், குணச்சித்திர வேடங்களை கொடுத்திருக்கிறார்கள். ஜில்லாவில் பிரதீப் ராவத் தோன்றும் போதெல்லாம் பிண்ணனியில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்கின்றன. ஒரு காட்சியில் கூட, வடமொழியில் பேசுகிறார். ஒருவேளை பிரதீப் ராவத்தை, திராவிட நாயகர்களான மோகன் லாலையும் விஜய்யையும் எதிர்க்க வந்த ஆரிய சக்தியாக சித்தரித்திருக்கிறார்களோ என்னவோ...? ஸ்டண்ட் சில்வா பாவம். இரண்டு நாயகர்களிடம் மரண அடி வாங்கியிருக்கிறார். இரண்டு படங்களுக்கும் எப்படி ‘யூ’ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதை எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை. ஜிங்குனமணி பாடலில் ஆட்டக்காரிகளின் மாராப்பை மறைத்தால் மட்டும் போதுமா...? வன்முறை காட்சிகள்...? காட்சி நேர்த்தியாக வரவேண்டி ரத்தத்தை பார்வையாளர்களின் முதுகு வரைக்கும் தெறித்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள், பாடல் காட்சிகள் என சரிவிகித வார்ப்புருவில் பொருத்தப்பட்டுள்ளன. ஜில்லாவில் சூரி வந்து புட்டத்தில் குத்து வாங்கி சிரிக்க வைக்க முயற்சித்து படுத்தி எடுக்கிறார். வீரத்தில் கொஞ்சம் ஆறுதல். சந்தானத்தின் வசன வெடிகள் உண்மையாகவே ரசித்து சிரிக்க வைக்கின்றன.

வாய்வழி பிரச்சாரம் என்று ஒன்று இருக்கிறது (எதுவும் கெட்டவார்த்தை இல்லை) ஆங்கிலத்தில் word of mouth marketing என்பார்கள். அதன்படி இரண்டு படங்களும் வெளியான தினத்திலிருந்தே ஜில்லா படத்தை மொக்கையென்றும், வீரத்தை ஹிட்டென்றும் யாரோ ஒரு மகானுபாவர் கிளப்பிவிட அதையே மற்றவர்களும் பின்பற்றி கிட்டத்தட்ட அதுதான் உண்மை என்பது போலாக்கிவிட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் வீரம், ஜில்லா இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இரண்டில் எது பரவாயில்லை என்று கேட்டால் வீரத்தை சொல்லலாம், சந்தானத்திற்காக.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 13012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,


வீரம் படத்துக்கு டிக்கெட் எடுத்த தள்ளு முள்ளில் தான் கவனித்தேன். செங்கல்பட்டில் லாரெல் மால் என்கிற பிரம்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. அடடே, நாம பொரண்டு வளர்ந்த மண்ணாச்சே. செங்கல்பட்டுல எங்க’ன்னு தேடினா இன்னும் ஆச்சரியம். மாமண்டூரில் சரியாக ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு எதிரில் லாரெல் மால் அமைந்திருக்கிறது. அந்த அத்துவானக் காட்டில் யார் மாலுக்கு வந்து ஷாப்பிங் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஈ.சி.ஆரில் இருந்திருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அண்டையில் உள்ள மகேந்திரா சிட்டி, எஸ்.ஆர்.எம் கல்லூரி, கற்பக விநாயகர் கல்லூரி, நம்மோட ஆண்டாள் அழகர் அப்புறம் செங்கல்பட்டு பொதுஜனம் போன்றவர்களை நம்பித்தான் காம்ப்ளக்ஸ் இயங்கக்கூடும்.

ஒரு நாள் வண்டி கட்டிக்கொண்டு போய் லாரெல் மாலை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே கல்லூரியையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் தான். ஆனால் உள்ளே சேர்ப்பார்களா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொன் மகேஸ் மாதிரி யாராவது எம்ஜியாரு டைப்பு ஆசாமியை உடன் அழைத்துச் செல்லலாம்.
******************************

இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா பார்த்தேன். சராசரிக்கு மேல் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம். இதைப்போய் ஏன் இணையத்தில் கழுவி ஊற்றினார்கள் என்று தெரியவில்லை. ஒரு படத்தில் இடையிடையே வரும் இருபது நிமிடக்காட்சிகள் மொக்கையாக இருந்ததென்றால் அந்த படத்தையே மொக்கை என்று சொல்லிவிடலாமா...? ஜில்லா, வீரம் போன்ற அரைத்த மாவு குப்பைகளோடு ஒப்பிடும்போது இ.ஆ.பா நூறு மடங்கு தேவலாம். விஜய் சேதுபதி வட சென்னை ஹவுஸிங் போர்ட் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்வாதி, நந்திதா இருவரும் க்யூட். ஸ்வாதிக்கு டப்படித்த மானசிக்கு (டைட்டில் க்ரெடிட்ஸ் ஓடவிட்டு அவருடைய பெயரை கண்டுபிடித்தேன்) குடோஸு. திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் தொடங்கி நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் பார்த்து குபுகுபு’வென சிரித்திருக்கிறேன். ஆனால் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மலையாளியென்ன தமிழனென்ன என்றொரு மேனேஜர் செண்டிமெண்ட் காட்சி செய்திருக்கிறார் பாருங்கள். கண்ணுல வேர்த்துவிட்டது.

******************************

ஓவர் டூ ஒய்.எம்.சி.ஏ...!

சனிக்கிழமை ஸோலோவாக சென்றிருந்தேன். டிஸ்கவரி வாசலில் வா.மணிகண்டன் நின்றுக்கொண்டிருந்தார். அடித்துவிடுவாரோ என்று பயமாக இருந்தது. அவர் கண்ணில் படாமல் தப்பித்து வந்துவிட்டேன். நிறைய பேரை எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. எல்லாம் ஃபேஸ்புக்கால் வந்த வினை. காலச்சுவடு (என்று நினைக்கிறேன்) அரங்கில் இருந்தவரை எங்கேயோ நினைவிருக்க, அவரிடமே கேட்டு அவர்தான் கிருஷ்ண பிரபு என்று உறுதி படுத்திக்கொண்டேன். அவருக்கு என்னை அவ்வளவாக அடையாளம் தெரியவில்லை. சினிமா பத்தியே நிறைய எழுதுவீங்களோ...? என்றார். அங்கிருந்த சில எளிய இலக்கிய நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதென்ன இணையத்தில் சினிமா பற்றி எழுதுபவர் என்றாலே ஒருவித கேலி, தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். நம் சமூகத்தில் சினிமாவை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. சினிமாவையே தொடாமல் எழுதும் எழுத்தாளர் கூட ஜனவரி பத்தாம் தேதி வேண்டுமென்றே தன்னுடைய பதிவிற்கு வீரம் என்று பெயர் சூட்டுகிறார். சினிமாவையே ஒழிக்க வேண்டும் என்று முழங்கியவர் (!!!) கூட அவருடைய வலைப்பூவிற்கு சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை வைத்திருந்தார். கடைசியில், சினிமா என்பதும் எழுத்தைப் போல கலையின் ஒரு வடிவம்தானே...?

லெக்கின்ஸ் அணிந்த தோழி ஒருவர் கார்க்கி மனோகரன் சாயலில் தெரிந்தார். கோயமுத்தூர் மோனி சாயல், சரவணக்குமார் சாயல் என சிலரிடம் அடையாளங்கள் தெரிந்தாலும் நாமாகவே போய்ப் பேசி அவர் வேறு யாராகவோ இருந்து பல்பு வாங்கிவிட வேண்டாமென அடக்கியே வாசித்தேன். ஒரு முழுச்சுற்று சுற்றிவிட்டு வந்தபின்பும் வா.ம டிஸ்கவரி வாசலிலேயே இருந்தார். மனிதர் கிளம்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாததால் ஒரு ஹாய் சொல்லி ஆரம்பித்தேன். இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று, அவர் என்னை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். இரண்டாவது, அவர் இணையத்தில் எழுதுவது போல அடாவடியாக தெரியவில்லை. தட் அந்த கொழந்தையே நீங்கதான் சார் மொமண்ட். அவரை சந்தித்த மற்ற நண்பர்களும் அதையே வழிமொழிந்தனர். இணையத்தில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு அக்செஸிபிளாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்தது தான் அவர் மீதான தவறான புரிதல்களுக்கு காரணமாக இருக்க வேண்டும்.

யாராவது கொலைப்பசியில் இருந்துவிட்டு சாப்பிடுவதை கவனித்திருக்கிறீர்களா ? வள்ளு வதக்குன்னு அள்ளிச் சாப்பிட்டு ஐந்து நிமிடங்களுக்குள் அந்த இடத்தை ரணகளமாக்கி விடுவார்கள். இன்னொரு உதாரணமாக, யானை வெண்கலக்கடைக்குள் புகுவதை எடுத்துக்கொள்ளலாம். ஆரூர் மூனா புத்தகங்கள் வாங்கியது அப்படித்தான் இருந்தது. ஒரு பதினைந்து நிமிடங்கள் இருக்கும். பாய்ந்து பாய்ந்து முப்பத்தி இரண்டு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை என்னுடைய பரிந்துரைகள். சில புத்தகங்கள் வாங்கலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும், சில புத்தகங்கள் படிக்க ஆசையாக இருந்தாலும் கொள்ளைக்காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும் அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் ஆரூரார் ஜஸ்ட் லைக் தட் வாங்கிவிட்டார். நல்ல மனுஷன்.

நேற்று சிங்கம் உடன் வந்திருந்தார். சில விளம்பரங்கள் காரணமாக, மினி மெல்ட்ஸ் ஐஸ்க்ரீமுடன் இனிதே துவங்கினோம். சிங்கம் தேடித் தேடி அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டும் வாங்கினார். மாலைக்கு மேல் வழக்கம் போல நண்பர்கள் கூடி கும்மியடிக்க தொடங்கியாயிற்று. இத்தோடு அடுத்த வாரயிறுதியில் தான் புத்தகக் காட்சிக்கு செல்ல முடியும்.

நித்யானந்தாவின் பம்ம பம்மதான் பாடலின் முழு பதிப்பை நான் நீண்டகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சில நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். புத்தகக் காட்சியில் அவர்களுடைய ஸ்டாலை பார்த்ததும் சட்டென உள்ளே புகுந்து அந்த ஆல்பத்தின் பெயரைச் சொல்லி அது இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை. ஆனால் ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொண்டார்கள். அடுத்த வாரம் கிடைக்கும் என்றார்கள். இப்போதைக்கு நித்தியானந்தா படம் பொறிக்கப்பட்ட ஒரு கொட்டையை கொடுத்திருக்கிறார்கள்.

நான் இதுவரையில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment