Showing posts with label book. Show all posts
Showing posts with label book. Show all posts

13 July 2016

அந்தமானில் அருணகிரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த அருணகிரி – உலகம் சுற்றிய வாலிபன். தன்னுடைய உலக நாட்டு பயண அனுபவங்களைக் கொண்டு பதினைந்து நூல்கள் எழுதியிருக்கிறார். குறிப்பாக, ஜப்பானை பற்றி இதுவரை யாரும் எழுதியிராத தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். மேலும் விகடன் பிரசுரமாக வெளியான ‘கட்சிகள் உருவான கதை’ உட்பட ஐந்து அரசியல் நூல்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய படைப்புகளில் ஒன்று – அந்தமானில் அருணகிரி ! புத்தகத்தின் பெயரைக் கேட்டதும் அதனை வாங்கியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.

புத்தகத்தின் தலைப்பிலிருந்தே நீங்கள் ஒரு விஷயத்தை யூகித்திருக்கலாம். முன்னுரையை படிக்கும்போது ஊர்ஜிதமாயிற்று. அது என்னவென்றால் பெரிய எழுத்தாள தொனியோடு, படாடோப அலங்காரங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு சாமானியன் பார்வையில் இருக்கிறது புத்தகத்தின் உள்ளடக்கம். கையில் ஒரு வாழைக்காய் பஜ்ஜியை வைத்துக்கொண்டு, அது எந்த எண்ணையில் தயாரிக்கப்பட்டது, எண்ணெய்களின் மூலம் எந்த நாடு, எண்ணெய் இந்தியாவிற்குள் நுழைந்த அரசியல் பின்னணி என்ன, மேலும் பஜ்ஜியை சுற்றியிருக்கும் தினத்தந்தி எந்த தேதியில் அச்சிடப்பட்டது, அதன் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு என்றெல்லாம் வளவளவென்று மொக்கை போடாமல் நேரடியாக பஜ்ஜியின் சுவை தரும் பரவசத்தை விளக்கத் துவங்கிவிடுகிறார். பஜ்ஜியின் சுவை தொண்டைக்குழிக்குள் இறங்கியபிறகு சாவகாசமாக இடையிடையே அரசியல், வரலாறு பேசுகிறார்.

சிறு வயதிலிருந்தே அந்தமான் மீதும், கப்பல் பயணம் மீதும் தனக்குள்ள பேராவலை விவரித்து புத்தகத்தை துவங்குகிறார். கப்பல் பயணம் குறித்த இவருடைய முப்பது வருட கனவு அந்தமானுக்கு ஸ்வராஜ்தீப்பில் பயணம் செய்யும்போது பூர்த்தியடைகிறது. அருணகிரியின் இந்த இச்சைகளையும், அவரது முதல் கப்பல் அனுபவத்தையும், அவருடைய விவரணைகளையும் படிக்கும்போது அப்படியே என்னை நானே படித்துக்கொள்வது போல இருக்கிறது. பல இடங்களில் அச்சு அசலாக எனது வலைப்பூவையே வாசிப்பது போல இருந்து என்னை புத்தகத்துடன் நெருக்கமாக உணரச் செய்தது.

இருப்பினும் வலைப்பூவில் / ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கும் புத்தகம் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உங்கள் வலைப்பூவை படிப்பவர்கள் பெரும்பாலும் உங்களுடன் நட்பு பாராட்டுபவர்களாகவும், குறைந்தபட்சம் உங்களுடைய குணாதிசயங்களை புரிந்து வைத்திருப்பவராகவும் இருப்பர். வலைப்பூவில் எழுதும்போது நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை (பயணத்தில் சைட்டடித்த ஃபிகர் பற்றியோ, குறட்டைவிட்டு தூக்கத்தை கெடுத்த சகபயணி குறித்தோ) எழுதலாம். நண்பன் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கப்பலில் போக பயந்தது பற்றியும் அவனை எப்படி சமாதானப்படுத்தினீர்கள் என்றும் எழுதலாம். பெங்களூரில் போயிறங்கியதும் காஜல் அகர்வால் போஸ்டரை பார்த்தேன் என்று ஜொள் விடலாம். ஆனால் புத்தகத்தில் இதுபோன்ற அசட்டுத்தனங்கள் கூடாது. புத்தகத்தை வாங்கி படிப்பவர்கள் நம் மீது துளி கூட அக்கறை இல்லாதவராகவும், புத்தகத்தின் உள்ளடக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டும் வாங்கியிருக்கலாம். அவருடைய நம்பிக்கையை கெடுக்காத வண்ணம் பொறுப்புணர்ச்சியுடன் எழுத வேண்டும். அது இந்த புத்தகத்தில் நிறைய இடங்களில் தவறுகிறது.

தேசிய இளைஞர் திட்டம் என்கிற அமைப்பின் மூலம் அருணகிரி அவர்கள் அந்தமான் சென்றிருக்கிறார். அதனால் அந்த அமைப்பு, செயல்பாடுகள், முந்தைய முகாம்கள் போன்ற விவரணைகள் வருகின்றன. இடையிடையே அந்தமானில் படப்பிடிப்பு நடத்திய திரைப்படங்கள், அந்தமானில் வாழ்ந்த தமிழறிஞர்கள், தமிழர் சங்கம், அந்தமான் பொதுக்கூட்டத்தில் மறைந்த (அப்போதைய) வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி (தி.மு.க.), அந்தமான் ஹிந்துக் கோவில் திருவிழாக்கள், பயணத்தில் சந்தித்த வெளி மாநிலத்தவர் / வெளிநாட்டவர், ஈழத்தமிழ் பாடகி மாதங்கி அருள்பிரகாசம் என்று கலந்துகட்டி பல தகவல்களை அளிக்கிறார். கூடவே, கடலில் காகங்கள் பறக்குமா ? கப்பலில் காகத்தை கொண்டுவந்து நடுக்கடலில் பறக்க விட்டால் அது என்ன செய்யும் ? போன்ற கேள்விகளால் அவரது குழந்தைத்தனம் கொண்ட மறுபக்கத்தையும் காட்டுகிறார். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து குறைந்தது ஒரு புத்தகமாக எழுதிவிட வேண்டுமென தீவிரமாக பரிந்துரைக்கிறார்.

கப்பல் போர்ட் ப்ளேர் துறைமுகத்திற்கு சென்றடைந்ததும் கொஞ்சம் தரைதட்டத் துவங்குகிறது. அது மட்டுமில்லாமல் அருணகிரி அவர்கள் தன்னுடைய பத்துநாள் பயணத்தில் போர்ட் ப்ளேர் மற்றும் அதற்கு அருகே அமைந்துள்ள ஒன்றிரண்டு தீவுகளுக்கு மட்டும் போய் வந்திருப்பதாக தெரிகிறது. அவற்றில் கூட படிக்கும்போது இதனோடு பல தகவல்கள் சேர்த்து எழுதியிருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு சாத்தம் தீவில் அமைந்துள்ள மர அறுவை தொழிற்சாலைக்கு பின்னால் சுவாரஸ்யமான ஜப்பானிய போர் வரலாறு ஒன்று இருக்கிறது. ராஸ் தீவு ஒருகாலத்தில் ராணுவத் தலைமையிடமாக விளங்கியது. வைப்பர் தீவின் கதையைக் கேட்டால் மிரட்சியாக இருக்கும். மிக முக்கியமாக, வெளிநாட்டு கடற்கரைகளுக்கு இணையான ஹேவ்லாக் கடற்கரை இருக்கிறது. இதுகுறித்தெல்லாம் சிறிய சிறிய பத்திகள் எழுதிவிட்டு அந்தமான் காதலி படத்தில் சிவாஜி சுஜாதாவுடன் ரொமான்ஸ் செய்வதைப் பற்றி விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்தமான் ஆதிவாசி இனங்களில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள் சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகள். அவர்களைப் பற்றி ஒரு பத்தி கூட எழுதாதது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.

இது ஒருபக்கம் என்றால் நூற்றி நாற்பது பக்க புத்தகத்தில் எண்பத்திஐந்து பக்கங்களுடன் அந்தமான் அனுபவங்கள் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு நெல்லூர் ஞாயிறுச்சந்தை, மூணாறு, கழுகுமலை, யானைமலை போன்றவற்றை குறித்து எழுதியிருப்பதில் சில தகவல்கள் கிடைத்தாலும் கூட அவை அவுட் ஆப் சிலபஸ் என்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. உச்சபட்ச வன்முறை எது தெரியுமா ? கடைசி பதினைந்து பக்கங்களை நூலாசிரியர் பற்றி நடிகர் ராஜேஷ், லேனா தமிழ்வாணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் நிறைத்திருக்கின்றன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட எனது பயண அனுபவங்களை மீண்டும் நினைவூட்டும் விதமாகவும், மீண்டுமொரு முறை பயணிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளதாலும் அந்தமானில் அருணகிரியை ரசித்து வாசித்தேன். ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் வாங்கிப் படிக்கலாம்.

அந்தமானில் அருணகிரி
மங்கையர்க்கரசி பதிப்பகம்
140 பக்கங்கள்
விலை ரூ.100/-

எழுத்தாளரின் அலைபேசி எண்: 94443 93903


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 September 2015

சினிமா வியாபாரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சமீப வருடங்களாக சினிமா ரசிகர்கள் பரவலாக படங்களின் வசூல், நடிகர்களின் மார்க்கெட் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ரசிகன் என்ன கூந்தலுக்கு படத்தின் வசூலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். வசூல் மட்டுமல்ல. படத்தின் பட்ஜெட், படப்பிடிப்பிற்காக எடுத்துக்கொண்ட காலம், சிரத்தை உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகனுக்கு அவை மீது ஆர்வமில்லாத பட்சத்தில் அவசியமற்ற விஷயங்கள். பல வருடங்கள் உழைத்து, பல கோடிகள் கொட்டி உருவாக்கிய ஒரே காரணத்திற்காக ரசிகர்கள் ஒரு படத்தை பாராட்டியே ஆகவேண்டிய அவசியமில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். அதே சமயத்தில் ஒரு ரசிகன் கோச்சடையானையும் அவதாரையும் கூட கூச்சப்படாமல் ஒப்பிடலாம். ஏனெனில், அவன் இரு படங்களையும் அதே 120ரூ கொடுத்துதான் பார்க்கிறான். In fact, முந்தயதிற்கு அதிக பணம்.

என் எண்ணங்கள் இப்படியிருக்க, முழுக்க முழுக்க சினிமாவின் backend தகவல்கள் அடங்கிய புத்தகமொன்று என்னை விக்ரமாதித்யன் வேதாளம் மாதிரி சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது. கேபிள் சங்கர் எழுதியிருக்கும் சினிமா வியாபாரம். இரண்டு பாகங்கள். முதல் பாகத்தின் முதல் அத்தியாயத்தின் பெயர் ‘இலவச விளம்பரம்’. சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு அது தாராளமாக கிடைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆளாளுக்கு ‘இதெல்லாம் தெரியணும்ன்னா நீ சினிமா வியாபாரம் படிச்சிருக்கணும்’ன்னு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சொல்ல முடியாது இதுபோன்ற ஆசாமிகளை எல்லாம் கேபிளே கூட செட் பண்ணியிருக்கலாம். எதற்கு வம்பு என்று இரண்டு பாகங்களையும் வாங்கி படித்துவிட்டேன்.

முதல் பாகத்தில் பெரும்பாலும் திரைப்பட விநியோகம் பற்றியும் பல்வேறு வகையான உரிமைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். வடிவேலு ஒரு நகைச்சுவை காட்சியில் சிட்டி, செங்கல்பட்டு, நார்த் ஆற்காடு என்று தொடங்கி FMS வரை என்று முடிப்பார். இவைதான் தமிழ் சினிமாவின் விநியோக ஏரியாக்கள். விநியோகம் தவிர்த்து ஆடியோ ரைட்ஸ், டிவிடி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டப்பிங், ரீ-மேக் ரைட்ஸ் உட்பட நாமெல்லாம் கேள்விப்பட்டிராத பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் பரிவர்த்தனைகள் என்ன மாதிரியெல்லாம் நடைபெறுகிறது, என்ன மாதிரியான படங்களுக்கு யாருடைய கை ஓங்குகிறது போன்ற விவரங்களை புரிந்துகொள்ள உதவுகிறது முதல் பாகம். என்ன ஒன்று, பாதி புத்தகத்திற்கு பிறகு ஹாலியுட்டுக்கு தாவி அங்குள்ள தொழில்நுட்பங்கள், பெருநிறுவனங்கள், அவற்றின் அரசியல் போன்றவற்றை சுவாரஸ்யமாக சொன்னாலும் கூட ஏனோ அந்நியமாக தெரிகிறது.

முதல் பாகத்தை ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் எனக்கு மிகவும் நெருக்கமாக படுகிறது. ஏனெனில், இரண்டாவது ஒரு திரையரங்கத்தை எடுத்து நடத்துவது பற்றியது. நான் திரையரங்குகளை உணர்வுப்பூர்வமாக கருதுபவன். ஒரு படம் என்னுள் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துமோ, அதற்கு இணையான தாக்கத்தை திரையரங்குகளும் என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் ஒரு திரையரங்கில் என்ன பிராண்ட் ‘ரூம் ஸ்ப்ரே’ பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அதே ரூம் ஸ்ப்ரேயை என் வீட்டிற்கு வாங்கும் அளவிற்கு பைத்தியக்காரன் நான். திரையரங்குகள் குறித்து நான் எழுதத் துவங்கினால் தனி புத்தகம்தான் போட வேண்டும்.

விஷயத்திற்கு வருவோம். சிட்டி பார்டரில் உள்ள ஒரு திரையரங்கத்தை எடுத்து நடத்திய தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் கேபிள். திரையரங்கத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் எழுதியதால் எதுவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியதாக போயிற்று. உதயம், காசிக்கு அருகில் என்று எழுதியிருக்கிறார். பிட்டுப்படம் ஒட்டிய தியேட்டர் என்றும் சொல்கிறார். ஜோதி என்று நினைத்தால் அதனை வேறொரு திரையரங்கமாக பாவித்தும் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அது கண்டிப்பாக கே.கே.நகர் விஜயா தான் என்று நானாகவே முடிவு செய்துவிட்டேன். விஜயா திரையரங்கம் கேபிளின் இல்லத்தில் இருந்து நடைதொலைவு. ஆனால் கே.கே.நகர் சிட்டி லிமிட்டிற்குள் தானே வரும் என்று யோசித்து, கடைசியாக ஆலந்தூர் எஸ்.கே என்று முடிவு கட்டியிருக்கிறேன். உண்மையில் அது எந்த திரையரங்கம் என்பது கேபிளுக்கே வெளிச்சம்.

பாடாவதியான அந்த திரையரங்கை லீசுக்கு எடுக்கிறார்கள். புதுப்பிக்கிறார்கள். தடைகளை கடந்து முதல் படமாக முரளி நடித்த மனுநீதி படத்தை வெளியிடுகிறார்கள். அதன்பிறகு ஒரு திரையரங்க உரிமையாளராக என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நூல் பிடித்ததை போல தெளிவாகவும் எளிமையாகவும் எழுதியிருக்கிறார். ஒன்றுமில்லை, திரைப்படங்களுக்கென போஸ்டர் ஓட்டுவது என்பது நாம் அன்றாடம் சாலையில் பார்த்துவிட்டு கடந்துபோகும் விஷயங்களில் ஒன்று. அதற்குப் பின்னால் என்ன மாதிரியான அரசியல் இருக்கிறது என்றெல்லாம் தெரியும்போது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. 

இன்று சென்னையில் வசிக்கும் மூவி பப்ஸ்கள் பெரும்பாலானாவர்களுக்கு ஆதர்ஸ திரையரங்கம் என்றால் அது சத்யம் தான். ஒரு கட்டத்தில், சத்யம் திரையரங்கத்திற்கு மூடுவிழா நடத்த முடிவாகியிருந்ததும், அதிலிருந்து சத்யம் மீண்டுவரக் காரணம் நக்சலைட்டுகள் தான் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ஆனால் ஒன்று, சினிமா வியாபாரம் பாகம் இரண்டினை வாங்க விரும்புபவர்கள் தயவு கூர்ந்து முதல் பாகத்தையும் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஏனென்றால் இரண்டாம் பாகத்தில் ஆங்காங்கே ‘இது தெரிய வேண்டுமென்றால் நீங்கள் முதல் பாகம் படித்திருக்க வேண்டும்’ என்று சொல்லி சொல்லியே வெறுப்பேற்றியிருக்கிறார் மனிதர்.

சினிமா வியாபாரம் – பாகம் 1
கேபிள் சங்கர்
மதி நிலையம்
144 பக்கங்கள்
ரூ.90

சினிமா வியாபாரம் – பாகம் 2
கேபிள் சங்கர்
டிஸ்கவரி புக் பேலஸ்
88 பக்கங்கள்
ரூ.70

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 January 2015

ஃபேஸ்புக் பொண்ணு - சரோஜா தேவி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தாண்டு உற்சாகமாகவும் உணர்ச்சிமயமாகவும் துவங்கியிருக்கிறது. உயிர்மையின் பத்து புதிய நூல்கள் கடந்த சனியன்று (03/01/2014) அண்ணா சாலை புக் பாயிண்டில் வெளியானது. அவற்றில் இரண்டு எனது விருப்பப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களுடையது. அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள் (இருவரில் யார் வசந்த் என்பதற்கு அரங்கிற்கு வந்த ரசிகைகள் சாட்சி). ஒன்று, ‘லக்கிலுக்’ யுவகிருஷ்ணா எழுதிய சரோஜாதேவி. மற்றொன்று, அதிஷாவின் ஃபேஸ்புக் பொண்ணு.

கொஞ்சம் தாமதமாகவே புக் பாயிண்டுக்கு சென்றோம். சூழ்நிலை ஒத்துழைத்தால் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கேமராவை (Canon powershot SX150) எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே சென்றால், பிரபு காளிதாஸ், உமா மகேஸ்வரன் லாவோ ஸு, சுதர்ஸன் ஹரிபாஸ்கர் போன்ற புகைப்பட ஜாம்பவான்கள் ஆளுக்கொரு SLR வைத்து சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். போதாமைக்கு ஒருவர் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தார். கமுக்கமாக அமர்ந்துக்கொண்டேன்.

வானொலி தொகுப்பாளர் கண்மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். எதிர்பார்த்த லவ் குரு வரவில்லை. எங்கெங்கு காணினும் பிரபலங்கள். வெளியிட வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை. நீதியரசர் சந்துரு வேறு அவுட் ஆஃப் சிலபஸில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் போரடிக்கத் தான் செய்தது.

சற்று நேரத்தில் வெளியே போன் பேசுவதற்கு சென்றுவந்த நண்பர் ‘புக்ஸ் வந்துடுச்சு’ என்ற இன்பத்தேனை என் காதில் பாய்ச்சினார். என்னது மொளகா பஜ்ஜி போட்டுட்டாங்களா ? என்று பாய்ந்தோடி இரண்டு புத்தகங்களையும் முதல் ஆளாக வாங்கினேன், அதுவும் மேடையில் புத்தகம் வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே.

இருவரிடமும் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். எங்கே பேனா இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று எண்ணி அதையும் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தேன். வெளியீடு முடிந்து எழுத்தாளர்கள் மேடையிலிருந்து இறங்கியதும், இருவரிடமும் ஆட்டோகிராப் வேண்டி நின்றேன். கையொப்பத்திற்கு ஐயாயிரம் கேட்காத நல்லிதயம் கொண்டவர்கள். அதிஷா சுருக்கமாக ‘அன்புடன் அ’ என்று முடித்துக்கொண்டார். யுவகிருஷ்ணா அவரிடமிருந்த சிகப்பு மை நிரப்பப்பட்ட ஹீரோ பேனாவால் ஏதோ எழுதி கையொப்பமிட்டார். ஆறு புத்தகங்கள் எழுதியவருக்கு கூட ஆட்டோகிராப் போடும்போது கை நடுங்கும் என்று நான் உணர்ந்துகொண்ட தருணம் அது. யுவகிருஷ்ணா எனக்கான ஆட்டோகிராபில் என்ன எழுதினார் என்பதை தட்டச்சினால் என் கைகளும் நடுங்கக்கூடும் (பார்க்க படம்). உணர்ச்சிமயமான தருணத்தில் எனது தகுதிக்கு மீறிய அப்படியொரு வார்த்தையை யுவகிருஷ்ணா எழுதிவிட்டாலும் கூட, அதனால் நான் கொண்ட மகிழ்ச்சி அளவில்லாதது. என்ன ஒன்று, வீட்டில் காட்ட முடியாத புத்தகம் என்பது தான் சிறிய வருத்தம்.

ஆக, ஃபேஸ்புக் பொண்ணு, சரோஜாதேவி ஆகிய புத்தகங்கள் அதனதன் ஆசிரியர்கள் ‘முதல்’ கையொப்பமிட்ட பிரதிகள் என்னிடம் உள்ளன. இதன் மதிப்பு சில வருடங்களுக்கு பிறகு லட்சங்களில் இருக்கக்கூடும்.

ஃபேஸ்புக் பொண்ணை இன்னும் வாசிக்கவில்லை. சரோஜா தேவியை பொறுத்தவரையில் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் வலைப்பூவில் வாசித்த கட்டுரைகள். ஆயினும், என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிலபஸ் புத்தகம் போல பாதுகாக்க வேண்டியது. சுஜாதா நாவல்களை படிக்கும்போது வெறுமனே வாசகனாக இல்லாமல் நாமும் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஒன்று ஏற்படும். யுவகிருஷ்ணாவின் எழுத்துகளும் அப்படித்தான். அவருடைய சொல்லாடல்கள் ‘எழுச்சி’யூட்டுகின்றன. என்றும் இணைய சுஜாதா அவர் மட்டும்தான் !

ஒரு ஆறுதலான விஷயம், தினகரனின் முதன்மை ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு சரோஜா தேவி புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதில் புத்தகத்தில் உள்ள தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள் புத்தகத்தில் இல்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 December 2014

கந்தன் கருணை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சலூனுக்கும் மருத்துவமனைக்கும் அடிக்கடி செல்வதில்லை. வருடத்தில் ஒன்றிரண்டு முறை 'தலை' காட்டினால் பெரிய விஷயம். எப்போதாவது உடலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும் கூட, 'டாக்டர்கிட்ட போனா ஒரே வாரத்தில் சரியாகிடும். இல்லன்னா ஏழு நாள் நீடிக்கும்’ என்று வியாக்கியானம் பேசக்கூடிய ஆள். என்னைப் பொறுத்தவரையில் டோலோ 650 ஒரு சர்வரோக நிவாரணி. என்ன ஆனாலும் ஒரு டோலோவை விழுங்கிவிட்டு உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று திடமாக நம்புபவன். ஆமாம், ஏழு நாள் வரை பிரச்சனையில்லை. ஆனால் எட்டாவது நாள் ஆகிவிட்டால் உடலில் ஏற்பட்ட கோளாறு மனதிலும் தொற்றிக்கொள்ளும். வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு ஓடுவேன். அப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் செல்ல வேண்டியதாகி விட்டது.

மருத்துவரின் மையத்தில் டோக்கன் ஒழுங்குமுறையெல்லாம் கிடையாது. நாம் போனதும் கடைசியாக வந்தது யாரென்று கேட்டுவிட்டு அமர்ந்துகொள்ள வேண்டும். அந்த கடைசி ஆள் எப்போது செல்வார் என்று காத்திருந்து அவருக்கு அடுத்ததாக உள்ளே செல்ல வேண்டும். ஆனால் நம்முடைய நேரம் எப்படி இருக்கும் என்றால், சரியாக நமக்கு பின்னால் கைக்குழந்தையோடு ஒரு அம்மா வருவார். கொயந்தைக்கு உடம்பு சரியில்லை என்று இறைந்து மன்றாடுவார். சரி போகட்டும் என்று விடுவோம். அடுத்தது ஒரு நடுத்தர வயது பெண்மணி பத்து கிலோமீட்டர் மாரத்தான் ஓடிவிட்டு வந்தது போல மூச்சிரைத்துக் கொண்டே வருவார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா ம்ம்ம்ம்மா முடியலயேம்மா என்று தமக்குள் முனகிக்கொள்வார். உடனே ஒரு சோடாவை வாங்கி புளிச் என்று அவருடைய முகத்தில் அடிக்காவிட்டால் ஏதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்று நமக்கே பயமாக இருக்கும். அவரை சகல மரியாதையோடு நமக்கு முன்பாக அனுப்பி வைப்போம். அதற்குள் நமக்கு அடுத்து போக வேண்டியவர்கள் எல்லாம் நாங்க போன மாசமே வந்து காத்திருக்கிறோம் தெரியுமா ? என்று நம்மை சத்தம் போட ஆரம்பிப்பார்கள். போய்த் தொலைங்க என்று ஒவ்வொருவரையாக அனுப்பிக் கொண்டிருக்கும்போது யாரேனும் ஒரு இறக்க சுபாவி புன்னகையுடன் நீங்க போங்க சார் என்பார். அவர் வேறு யாருமில்லை நம்மைப் போன்ற இன்னொரு ஈனா வானா தான்.

உள்ளே போனால் அங்கே வீற்றிருப்பார் கந்தன். நியாயமாக பார்த்தால் சேவித்துக்கொள்ள வேண்டும். எங்கள் குடும்ப மருத்துவர். எனது தாத்தாவில் துவங்கி எனது மகள் வரை மருத்துவம் பார்த்துவிட்டார். சைல்ட் ஸ்பெஷலிஸ்ட். (இப்போது புரிகிறதா நான் ஏன் அவரிடம் மருத்துவம் பார்க்கிறேன் என்று !). எனது பதின்பருவ வயதில் அவரிடம் செல்லும்போது நானொரு அடல்ட் என்று காட்டிக்கொள்வதற்காகவே தோள்பட்டையில் ஊசி குத்திக்கொள்வேன். இப்பொழுதெல்லாம் யாரும் யாருக்கும் தோள்பட்டையில் ஊசி போடுவதாக தெரியவில்லை. புட்டம்தான். ஜெண்டாமைஸின், கேராமைஸின் என்று (வயது முதிர்ந்த) செவிலியிடம் மருத்துவ மொழியில் ஏதோ சம்பாஷித்தார். அந்த அம்மாள் எனது இரண்டு புட்டங்களையும் பஞ்சர் ஆக்கினார்.

வழக்கமாக என்னுடைய சிகை அலங்காரத்தைப் பற்றி ஏதாவது கோக்கு மாக்காக கேள்வி கேட்பார் கந்தன். நானும் கோக்கு மாக்காக ஏதாவது பதிலளிப்பேன். இந்தமுறை அது இல்லாததால் ‘ப்ளாக்’ பற்றி கேட்டார். அவரும் முன்பொரு காலத்தில் ‘ப்ளாக்’ வைத்திருந்ததாகவும் அதனை பராமரிக்க நேரமில்லை என்றும் கொஞ்சமாக வருத்தப்பட்டுக் கொண்டார். 

இந்த இடத்தில் மருத்துவர் பற்றி கொஞ்சம் முன்னுரை வேண்டும். ஜிகர்தண்டாவில் சங்கிலிமுருகன் குருவம்மா என்றொரு கதை வைத்திருப்பார். அது அந்த காலத்தில் வெளிவந்திருந்தால் பெரிய ஹிட் ஆகியிருக்கும் என்பார். உண்மையிலேயே குருவம்மா என்றொரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது என்று கார்த்திக் சுப்பராஜிற்கு தெரிந்திருக்காது. 2002ல் லிவிங்க்ஸ்டன், தேவயாணி நடிப்பில் வெளிவந்தது. அத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த சொற்ப நபர்களில் அடியேனும் ஒருவன். பிளாட்பார வாசிகளுக்கு வீட்டின் தேவையைப் பற்றி உணர்த்த வந்த படம் அது. அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் மருத்துவர் கந்தன். (இன்னொருவர் தற்சமயம் ச.ம.க சார்பாக நாங்குநேரி ச.ம.உ.வாக பணியாற்றும் எர்ணாவூர் நாராயணன்). அது மட்டுமில்லாமல் அதற்கு முன்பே மருத்துவர் ‘நையாண்டி மேளம்’ என்கிற தமது கவிதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். 

பேச்சு ‘ப்ளாக்’ வரை சென்றுவிட்டதால் மருத்துவரிடம் நையாண்டி மேளம் ஒரு காப்பி கிடைக்குமா ? என்றேன். தற்சமயம் கைவசம் இல்லை. எடுத்து வைக்கிறேன், அடுத்த முறை வரும்போது வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். கிழிந்தது. அடுத்தமுறை நான் அவரிடம் செல்ல மாதங்கள் ஆகக்கூடும். சரி என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.

தற்செயலாக திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்க நூலகத்திற்கு சென்றபோது அங்கே நையாண்டி மேளம் கிடைத்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஒரு மருத்துவர் எழுதிய கவிதைகள் என்பதால் அதனை நியாயத்தராசில் எல்லாம் வைக்க மனம் ஒப்பவில்லை.

மருத்துவர் எழுதிய மருத்துவக் கவிதை ஒன்று :-

உள்ளங்கையில் வெறுமனே
விளையாடிக் கொண்டிருந்தது
இருபத்தைந்து காசு வில்லை

திடீரெனத் தாவிவிட்டது
குழந்தையின் வயிற்றுக்கு

பதைத்துப் போனாள் தாய்
மூக்குத்தியைத் தடவியபடி

‘விழுங்கிவிட்டான் மருத்துவன்
இருபத்தைந்து ரூபாய் !’

இன்னொன்று :-

கருவுற்றாள் மனைவி என்றதுமே
நினைவெல்லாம் அவள் உருவமேயாகி

காலையில் தாமதமாய் கண்விழித்து

நேரத்தே துயில் கொளும்வரை
கண்காணித்து

செலவைக் குறைத்து
சிக்கன உண்டியலில் சேர்த்து

வயிற்றில் வலியென்றதும்
தன் நெஞ்சில் வலி கொண்டு

ஆட்டோ பிடித்து
மருத்துவமனை சேர்த்து

மருந்துக்கலைந்து
மூட்டையாய் வாங்கிக்கொடுத்து

வெளியில் காத்திருந்து
வயிறு காய்ந்து

ஒரு வழியாக
ஒரு வழி யாக

குழந்தை பிறந்ததுமே
நிம்மதி மூச்சுவிட்டு\

மருத்துவமனை
நீங்கும் வேளை

கட்டணப் பணத்தை
பெட்டியோடு கொடுத்திட்டு

தாயையும் சேயையும்
வாடகைக் காரினில் சுமந்து

வீடு திரும்பினால்
வாசலிலே வரவேற்பு

பிரசவம் பெண்ணுக்கு
வேதனை பெண்ணுக்கு மட்டுமா !

மேலதிக தகவல்கள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 March 2014

மரப்பல்லி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அனுபவம் #1
இந்த காலத்து பசங்க குமுதம், ஆனந்த விகடன் தாண்டி எதையும் படிப்பதில்லை என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார் ஒரு பெரியவர். தீவிர இலக்கியமில்லை’ன்னாலும் வாமு கோமு வரைக்குமாவது படிங்கப்பா என்று ஒருநாள் புலம்பினார். அவருடைய கூற்றைக் கொண்டு நவீன இலக்கியத்திற்கான வாசல்படி வாமு கோமு என்று நானாகவே புரிந்துகொண்டேன். அப்போது அவருடைய 'எட்றா வண்டியை' என்ற புத்தகம் இணையத்தில் பிரசித்தி பெற்றிருந்தது. அதிலிருந்தே துவங்கலாம் என்று முடிவெடுத்து டிஸ்கவரி புக் பேலஸை புரட்டியபோது எனக்கு அது கிடைக்கவில்லை. 'நாவலல்ல கொண்டாட்டம்' என்ற புத்தகம் கையில் கிடைத்தது. வாங்கிக்கொண்டேன்.  அந்தமான் சென்றபோது கப்பல் பயணத்தில் அந்த புத்தகத்தை பிரித்தேன். தொடர்வதற்கு முன்பு ஒன்றை சொல்லி விடுகிறேன், நான் சுஜாதா நாவல்கள், கிழக்கு வெளியீடுகள் போன்றவற்றை மட்டும் படிக்கும் லைட் ரீடிங் ஆசாமி. ஒரேயொரு முறை எ.பேன்சி பனியனும் படித்துவிட்டு பேயறை வாங்கியவன். அப்படிப்பட்ட நான் கொண்டாட்டத்தை படித்திருக்கக்கூடாது. பெக்குக்கு ஒரு பிராண்ட் மாற்றி அடித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாமல் இருந்தன அதன் அத்தியாயங்கள். ஒருவேளை பின்நவீனத்துவம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்று வெறுப்புற்றேன். அதன்பிறகு நான் என் பாணி வாசிப்பிற்கு திரும்பிவிட்டேன்.

அனுபவம் #2
புத்தகக்காட்சி உயிர்மை அரங்கில் அனு, அக்கா, ஆண்ட்டி, ஆயா மாதிரி வயது வேறுபாட்டுடன் ஒரு பெண்கள் குழு புடவைக்கடை நினைப்பிலோ என்னவோ புத்தகங்களை புரட்டிப்போட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். நான் கூட என்னவோ சமையல் குறிப்பு புத்தகத்தை தேடுகிறார்களோ ? அதெல்லாம் இங்க கிடைக்காது’ன்னு எடுத்துச் சொல்லலாமா என்று நினைத்தேன். அதற்குள் அந்த அக்கா வாமு கோமுவின் ஒரு புத்தகத்தை எடுத்து ஆண்ட்டியிடம் காட்டினார். ஆண்ட்டி அதன் முகப்பை பார்த்துவிட்டு, ‘வாமு கோமுவா ? அவருது எல்லாம் ஒன்னுபோல இருக்கும்...’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இரு மோசமான அனுபவங்களையும் தாண்டி வாமு கோமுவின் புத்தகங்களை படிக்க வேண்டுமென ஒரு ஆர்வம் ஏனோ என்னிடம் மிச்சமிருந்தது. இருக்கவே இருக்கிறார் ஆபத்பாந்தவன் ஆரூர் மூனா. புத்தகக்காட்சியில் வாமு கோமுவின் ஐந்து புத்தகங்களை வாங்கியிருக்கிறார். முதற்கட்டமாக அதிலிருந்து மரப்பல்லியை உருவி வந்தேன். லெஸ்பியன் உறவு சம்பந்தப்பட்ட கதை என்று கேள்விப்பட்டதால் அதற்கு முன்னுரிமை.

அட்டகாசமாக ஹார்ட் பவுண்ட் செய்யப்பட்டு, புக்மார்க் எல்லாம் வைக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. உண்மையில் மரப்பல்லிக்கு அவை தேவையில்லை. மொத்தம் நூற்றி ஐம்பது பக்கங்கள் மட்டுமே. எழுத்துக்கூட்டி படித்தால் கூட சில மணிநேரங்களில் முடித்துவிடலாம். அப்புறம் ஏன் புக்மார்க் ?

வாமு கோமுவைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் என்று யாராவது எழுதினால் மறக்காமல் ‘பாலியல் எழுத்தாளர் என்று விமர்சிக்கப்படும்’ என்ற அடைமொழியை சேர்த்துவிடுகிறார்கள். அவ்வாறு அடைமொழி கொடுத்துவிடுவதால் அவரை பாலியல் எழுத்தாளர் என்று விமர்சிப்பது தவறான கருத்து என்று நிறுவ முனைகிறார்கள். 

நான் படித்த பிரதியின் உரிமையாளர் உப்புநாய்களை பற்றி எழுதும்போது சேர்த்துக்கொண்ட வரிகள் :-
காமம் கலந்து நாசூக்காகவும் கிளர்ச்சியாகவும் எழுதுவது வேறு. சரோஜாதேவி டைப் புத்தகங்களை தாண்டும் அளவுக்கு வக்கிரம் புடித்து எழுதுவது வேறு. அரைகுறை எழுத்தாளர்கள் வாமுகோமுவைப் பார்த்து எப்படி பட்டும்படாமலும் எழுதுவதை என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

புத்தகத்தை படித்து முடித்ததும் எனக்கு மேற்கண்ட வரிகள் நினைவுக்கு வந்தன. உண்மையைச் சொன்னால் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. 

ஆறாவது அத்தியாய முடிவிலிருந்து சில வரிகள்:
மணிபாரதியின் கீழ் உதட்டை சப்பி எடுத்தவளை அப்படியே கட்டிக்கொண்டு தூக்கியபடி படுக்கையறைக்கு நுழைந்தான். நாமெல்லாம் காத்தாடி சுத்துவதை உன்னிப்பாக கவனிக்கிறோம். காத்தாடியை காட்டிய கேமரா கீழே இறங்கி படுக்கையில் கிடக்கும் ஜோடியை காட்டுமா என்று ஆவலுடன் இருக்கிறோம்.

ஒருவேளை ஆரூர் மூனா இதுபோன்ற வரிகள் எதையாவது படித்துவிட்டு அடடா பச்சையாக எல்லாவற்றையும் விவரிக்காமல் காட்சியை கட் செய்திருக்கிறார் என்று நினைத்திருக்கக்கூடும். அப்படி நினைத்திருந்தால் அவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்தி எழுதுவது ஒருவகை, கொச்சையான கதையம்சம் வைத்து எழுதுவது இன்னொரு வகை. வாமு கோமுவுடையது இரண்டாவது.

பி-கிரேடு படங்கள் பார்த்திருக்கிறீர்களா ? பெரும்பலான பி-கிரேடு படங்கள் ஒரு நாயகன் – மூன்று நாயகிகள் என்ற கோட்பாட்டை தழுவி எடுக்கப்பட்டிருக்கும். ஒரே நாயகியை காட்டிக்கொண்டிருந்தால் போரடிக்கும் என்பதால் மாற்றி மாற்றி சீன் காட்டுவார்கள். சமீபத்தில் அசைவம் என்ற பி-கிரேடு படம் பார்க்க கிடைத்தது. அதன் பிரதான நாயகி செம ஃபிகர். கதை இதுதான். நாயகன் நாயகியை ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டமிட்டு திருமணம் செய்துகொள்கிறான். அதன்பிறகு ஒரு வல்லிய சந்தர்ப்பத்தில் நாயகியின் தங்கையை அனுபவிக்கிறான். ஒரு கட்டத்தில் நாயகியின் அம்மாவையும் பலவந்தப்படுத்தி அனுபவிக்கிறான். கடைசியில் எல்லோரும் எல்லாரையும் பழி வாங்கிக்கொண்டு சாகிறார்கள். 

கிட்டத்தட்ட அதே பாணி கதைதான் மரப்பல்லி. மணிபாரதி என்பவன் நாயகன். அவனுடைய மனைவி இறந்துவிட்டாள். அவனுக்கு பக்கத்து வீட்டில் கணவனிடம் சுகம் கிடைக்காமல் தாய் வீட்டில் வந்து அண்டியிருக்கும் ஒருத்தி, அவளுடைய திருமணமாகாத தங்கை, மணிபாரதியின் மகளுடைய ‘கணவனை பிரிந்து வாழும்’ டீச்சர். மாறி மாறி பிட்டுக்கள். இடையே ஒரு லெஸ்பியன் பிட்டு. அவ்வளவுதான் மரப்பல்லி.

அசைவமாக எழுதுவதோ அதை வாசிப்பதோ எனக்கு பிரச்சனை இல்லை. உண்மையில் நான் அதனை விரும்புகிறேன். ஆனால் இந்த புத்தகத்தில் மனித உணர்வுகள், குறிப்பாக பெண்ணின் உணர்வுகள் படுகேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதே என் வருத்தம். போதாத குறைக்கு ஓரினச்சேர்க்கையை பற்றி எந்தவித புரிந்துகொள்ளுணர்வும் இல்லாமல், மறைமுகமாக அதனை எதிர்த்தும் எழுதியிருக்கிறார் வாமு கோமு. ஒருபால் உறவெல்லாம் பேத்தல். பெண்களுக்கு சுகம் வேண்டுமென்றால் at last ஒரு ஆணிடம் தான் பெண் வரவேண்டும் என்று சொல்கிறார். மரப்பல்லியை படித்தால் ஏதோ ஊரில் உள்ளவர்கள் எல்லாரும் ஓழுக்காக மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக கடைசி சில அத்தியாயங்கள் வக்கிரம். ப்ரியா மனிபாரதியை பிறந்ததிலிருந்து அண்ணா என்றே அழைத்திருக்கிறாள். திடீரென ஒரு சமயத்தில் மணிபாரதி ப்ரியாவை கட்டிப்பிடித்து, உதட்டை கடித்து, பின்புறத்தை பிசைந்ததும் ப்ரியா ஒத்துழைக்கிறாள்.

மரப்பல்லி இனத்தில் ஒருபால் உணர்வு உண்டு என்பதால் குறிப்பாக அப்பெயர் சூட்டியதாக திலீபன் எழுதியிருக்கிறார், எனக்கு வேறு மாதிரியான அர்த்தம் தோன்றுகிறது. ஒருபால் உறவு என்பது மரத்தால் செய்யப்பட்ட உயிரற்ற பல்லியை போன்றது என்று அர்த்தத்தில் எழுதியிருப்பதாக தோன்றுகிறது. 

நல்ல விஷயங்கள் என்று சொல்வதானால், வாமு கோமுவின் வட்டார பேச்சு வழக்கில் உள்ள எழுத்து நடை. அதில் அவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மைதான். ஐந்தாவது அத்தியாயத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்ட ப்ரியா தன்னுடைய காதலி ஜெனிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். க்ளாஸ். பேசாமல் அதை மட்டும் ஒரு சிறுகதையாகவோ அல்லது அதனை மையக்கருவாக வைத்து ஒரு நாவலோ எழுதியிருந்தால் பிரமாதம் என்றிருக்கலாம்.

மரப்பல்லி
வா.மு.கோமு
எதிர் வெளியீடு
160 பக்கங்கள்
ரூ.150

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 January 2014

பட்டியல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் மூட்டை மூட்டையாக புத்தகங்கள் வாங்கி அவற்றை லிஸ்ட் போடும் ஆசாமி கிடையாது. மிகவும் செலக்டிவ். எனக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது, புத்தகங்கள் வாங்குவதில் கூட. புத்தகக்காட்சியை எடுத்துக் கொண்டால், முதலில் ஒருநாள் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாளாக சென்று ஒன்றிலிருந்து தொடங்கி எல்லா கடைகளையும் பார்வையிட்டு ஒரு சுற்று வருவேன். இடையிடையே நல்லதாக ஏதாவது கண்ணில் பட்டால் (புத்தகங்கள் தான்) குறித்து வைத்துக்கொள்வேன். இரண்டாவது நாள், யாராவது ஒரு நண்பருடன் சென்று அவர் புத்தகங்கள் வாங்குவதையும் கையில் எடுத்து பார்த்துவிட்டு நிராகரிக்கும் செய்கைகளையும் மானிட்டர் செய்வேன். அவர் புத்தகங்கள் பற்றி ஏதாவது சொன்னால் அதை வாங்கி காதில் போட்டு வைத்துக்கொள்வேன். மூன்றாவது நாள், காலையிலேயே துரிதமாக சென்று நான் ஏற்கனவே குறித்து வைத்திருந்த பதிப்பகங்களிலிருந்தும் முக்கியமானவை எனக் கருதப்படும் பதிப்பகங்களிலிருந்தும் விலைப்பட்டியல்களை சேகரிப்பேன். அன்றிரவு எல்லா விலைப்பட்டியல்களையும் ஆராய்ந்து வாங்க வேண்டிய புத்தகங்களை பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல ஷார்ட்லிஸ்ட் செய்வேன். நான்காவது நாளில், பட்டியலிட்ட புத்தகங்களை சமர்த்தாக வாங்கிவிடுவேன். வளவளவென மொக்கை போடாமல் சுருங்கச் சொல்வதென்றால் – புத்தகங்கள் வாங்குவதில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் போல. எல்லா இனிப்பு வகைகளையும் ஒரு டின்னில் கொட்டச் செய்து அதுல இருந்து ஒரு நூறு கிராம் கொடு என்று அசடு வழிவேன்.

அப்படி ஷார்ட்லிஸ்ட் செய்து நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் :-
திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.75
மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140
ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் – ரூ.75
புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75
பாம்புத்தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100
இழந்த நாகரிகங்களின் இறவாக்கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145
கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30
கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60
ஒரு சிப்பாயின் சுவடுகளில் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.100
சூப்பர் சுப்பு 3D (இரண்டு கண்ணாடிகளுடன்) – ரூ.200
அலமாரி – மாத இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.50
ஃபெமினா தமிழ் – மாத(ர்) இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.180

கிளம்பிவிடாதீர்கள். பினாமி பெயரில் வாங்கிய பட்டியல் இரண்டு உள்ளன. தோழர் செல்வின் இம்முறை மிகவும் குறைந்த அளவில் புத்தகங்கள் வாங்கினாலும் அறிவியல் சார்ந்த புத்தகங்களாக வாங்கினார்.

அவருடைய லிஸ்ட்:
பூமி எனும் கோள் – ஜார்ஜ் கேமாவ் – தமிழில் தி.ஜானகிராமன்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ் சிவா
எப்போது அழியும் இந்த உலகம் ? – ராஜ் சிவா
விஞ்ஞானத்தில் சில விந்தைகள் – முனைவர் மெ.மெய்யப்பன்
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

சில புத்தகங்களை வாங்கலாம் என்ற ஆவல் இருக்கும், ஆனால் கொள்ளை விலை இருக்கும். அல்லது இதைப்போய் காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும். அல்லது வாங்கியபின் நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது என்ற அவநம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் நமக்காக வாங்கிக் குவிக்க ஒரு ஆபத்பாந்தவன் இருந்தால் எப்படி இருக்கும்...?

தோழர் ஆரூர் மூனா என் பரிந்துரையின் பெயரில் வாங்கிய புத்தகங்கள் :-
வெள்ளையானை - ஜெயமோகன்
ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
கொசு - பா.ராகவன்
நாயுருவி - வா.மு.கோமு
பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - வா.மு.கோமு
எட்றா வண்டிய - வா.மு.கோமு
மரப்பல்லி - வா.மு.கோமு
சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - வா.மணிகண்டன்
அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - முகில்
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
தண்ணீர் - அசோகமித்திரன்
வெல்லிங்டன் – சுகுமாரன்

பட்டியல் முடிந்தது. அடுத்த சிக்கல் வாசிப்பை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதுதான். பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 13012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,


வீரம் படத்துக்கு டிக்கெட் எடுத்த தள்ளு முள்ளில் தான் கவனித்தேன். செங்கல்பட்டில் லாரெல் மால் என்கிற பிரம்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. அடடே, நாம பொரண்டு வளர்ந்த மண்ணாச்சே. செங்கல்பட்டுல எங்க’ன்னு தேடினா இன்னும் ஆச்சரியம். மாமண்டூரில் சரியாக ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு எதிரில் லாரெல் மால் அமைந்திருக்கிறது. அந்த அத்துவானக் காட்டில் யார் மாலுக்கு வந்து ஷாப்பிங் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஈ.சி.ஆரில் இருந்திருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அண்டையில் உள்ள மகேந்திரா சிட்டி, எஸ்.ஆர்.எம் கல்லூரி, கற்பக விநாயகர் கல்லூரி, நம்மோட ஆண்டாள் அழகர் அப்புறம் செங்கல்பட்டு பொதுஜனம் போன்றவர்களை நம்பித்தான் காம்ப்ளக்ஸ் இயங்கக்கூடும்.

ஒரு நாள் வண்டி கட்டிக்கொண்டு போய் லாரெல் மாலை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே கல்லூரியையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் தான். ஆனால் உள்ளே சேர்ப்பார்களா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொன் மகேஸ் மாதிரி யாராவது எம்ஜியாரு டைப்பு ஆசாமியை உடன் அழைத்துச் செல்லலாம்.
******************************

இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா பார்த்தேன். சராசரிக்கு மேல் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம். இதைப்போய் ஏன் இணையத்தில் கழுவி ஊற்றினார்கள் என்று தெரியவில்லை. ஒரு படத்தில் இடையிடையே வரும் இருபது நிமிடக்காட்சிகள் மொக்கையாக இருந்ததென்றால் அந்த படத்தையே மொக்கை என்று சொல்லிவிடலாமா...? ஜில்லா, வீரம் போன்ற அரைத்த மாவு குப்பைகளோடு ஒப்பிடும்போது இ.ஆ.பா நூறு மடங்கு தேவலாம். விஜய் சேதுபதி வட சென்னை ஹவுஸிங் போர்ட் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்வாதி, நந்திதா இருவரும் க்யூட். ஸ்வாதிக்கு டப்படித்த மானசிக்கு (டைட்டில் க்ரெடிட்ஸ் ஓடவிட்டு அவருடைய பெயரை கண்டுபிடித்தேன்) குடோஸு. திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் தொடங்கி நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் பார்த்து குபுகுபு’வென சிரித்திருக்கிறேன். ஆனால் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மலையாளியென்ன தமிழனென்ன என்றொரு மேனேஜர் செண்டிமெண்ட் காட்சி செய்திருக்கிறார் பாருங்கள். கண்ணுல வேர்த்துவிட்டது.

******************************

ஓவர் டூ ஒய்.எம்.சி.ஏ...!

சனிக்கிழமை ஸோலோவாக சென்றிருந்தேன். டிஸ்கவரி வாசலில் வா.மணிகண்டன் நின்றுக்கொண்டிருந்தார். அடித்துவிடுவாரோ என்று பயமாக இருந்தது. அவர் கண்ணில் படாமல் தப்பித்து வந்துவிட்டேன். நிறைய பேரை எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. எல்லாம் ஃபேஸ்புக்கால் வந்த வினை. காலச்சுவடு (என்று நினைக்கிறேன்) அரங்கில் இருந்தவரை எங்கேயோ நினைவிருக்க, அவரிடமே கேட்டு அவர்தான் கிருஷ்ண பிரபு என்று உறுதி படுத்திக்கொண்டேன். அவருக்கு என்னை அவ்வளவாக அடையாளம் தெரியவில்லை. சினிமா பத்தியே நிறைய எழுதுவீங்களோ...? என்றார். அங்கிருந்த சில எளிய இலக்கிய நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதென்ன இணையத்தில் சினிமா பற்றி எழுதுபவர் என்றாலே ஒருவித கேலி, தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். நம் சமூகத்தில் சினிமாவை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. சினிமாவையே தொடாமல் எழுதும் எழுத்தாளர் கூட ஜனவரி பத்தாம் தேதி வேண்டுமென்றே தன்னுடைய பதிவிற்கு வீரம் என்று பெயர் சூட்டுகிறார். சினிமாவையே ஒழிக்க வேண்டும் என்று முழங்கியவர் (!!!) கூட அவருடைய வலைப்பூவிற்கு சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை வைத்திருந்தார். கடைசியில், சினிமா என்பதும் எழுத்தைப் போல கலையின் ஒரு வடிவம்தானே...?

லெக்கின்ஸ் அணிந்த தோழி ஒருவர் கார்க்கி மனோகரன் சாயலில் தெரிந்தார். கோயமுத்தூர் மோனி சாயல், சரவணக்குமார் சாயல் என சிலரிடம் அடையாளங்கள் தெரிந்தாலும் நாமாகவே போய்ப் பேசி அவர் வேறு யாராகவோ இருந்து பல்பு வாங்கிவிட வேண்டாமென அடக்கியே வாசித்தேன். ஒரு முழுச்சுற்று சுற்றிவிட்டு வந்தபின்பும் வா.ம டிஸ்கவரி வாசலிலேயே இருந்தார். மனிதர் கிளம்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாததால் ஒரு ஹாய் சொல்லி ஆரம்பித்தேன். இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று, அவர் என்னை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். இரண்டாவது, அவர் இணையத்தில் எழுதுவது போல அடாவடியாக தெரியவில்லை. தட் அந்த கொழந்தையே நீங்கதான் சார் மொமண்ட். அவரை சந்தித்த மற்ற நண்பர்களும் அதையே வழிமொழிந்தனர். இணையத்தில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு அக்செஸிபிளாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்தது தான் அவர் மீதான தவறான புரிதல்களுக்கு காரணமாக இருக்க வேண்டும்.

யாராவது கொலைப்பசியில் இருந்துவிட்டு சாப்பிடுவதை கவனித்திருக்கிறீர்களா ? வள்ளு வதக்குன்னு அள்ளிச் சாப்பிட்டு ஐந்து நிமிடங்களுக்குள் அந்த இடத்தை ரணகளமாக்கி விடுவார்கள். இன்னொரு உதாரணமாக, யானை வெண்கலக்கடைக்குள் புகுவதை எடுத்துக்கொள்ளலாம். ஆரூர் மூனா புத்தகங்கள் வாங்கியது அப்படித்தான் இருந்தது. ஒரு பதினைந்து நிமிடங்கள் இருக்கும். பாய்ந்து பாய்ந்து முப்பத்தி இரண்டு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை என்னுடைய பரிந்துரைகள். சில புத்தகங்கள் வாங்கலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும், சில புத்தகங்கள் படிக்க ஆசையாக இருந்தாலும் கொள்ளைக்காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும் அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் ஆரூரார் ஜஸ்ட் லைக் தட் வாங்கிவிட்டார். நல்ல மனுஷன்.

நேற்று சிங்கம் உடன் வந்திருந்தார். சில விளம்பரங்கள் காரணமாக, மினி மெல்ட்ஸ் ஐஸ்க்ரீமுடன் இனிதே துவங்கினோம். சிங்கம் தேடித் தேடி அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டும் வாங்கினார். மாலைக்கு மேல் வழக்கம் போல நண்பர்கள் கூடி கும்மியடிக்க தொடங்கியாயிற்று. இத்தோடு அடுத்த வாரயிறுதியில் தான் புத்தகக் காட்சிக்கு செல்ல முடியும்.

நித்யானந்தாவின் பம்ம பம்மதான் பாடலின் முழு பதிப்பை நான் நீண்டகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சில நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். புத்தகக் காட்சியில் அவர்களுடைய ஸ்டாலை பார்த்ததும் சட்டென உள்ளே புகுந்து அந்த ஆல்பத்தின் பெயரைச் சொல்லி அது இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை. ஆனால் ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொண்டார்கள். அடுத்த வாரம் கிடைக்கும் என்றார்கள். இப்போதைக்கு நித்தியானந்தா படம் பொறிக்கப்பட்ட ஒரு கொட்டையை கொடுத்திருக்கிறார்கள்.

நான் இதுவரையில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment