Showing posts with label beach. Show all posts
Showing posts with label beach. Show all posts

3 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 03032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

Such an eventful weekend...!

நீண்ட நாட்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் மெரினா மகிழ்ச்சிக்கு பல வாயில்கள் கொண்ட ஒரு வீடு. கடலலையில் கால் நனைக்கலாம், மணலில் காலாற நடக்கலாம், மல்லாக்க படுத்துக்கொண்டு அண்டவெளியை வேடிக்கை பார்க்கலாம், சைட் அடிக்கலாம் அல்லது அமைதியாக ஏதேனும் ஒரு கல்லிருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். நான் கடைசி வாசலை தேர்ந்தெடுத்தேன். கடற்கரையில் காக்கைகள் அராஜகம் செய்கின்றன. எனக்கு சில அடிகள் தள்ளி ஒரு எளியவர் அமர்ந்து உணவு பொட்டலத்தை பிரித்தார். சரியாக பத்து நொடிகள் ஆகியிருக்கும், எங்கிருந்தோ பத்து, பன்னிரண்டு காக்கைகள் வந்து அவரை சூழ்ந்துகொண்டன. நானாக இருந்தால் சோத்துப்பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியே போயிருப்பேன். அந்த மனிதருக்கு அது வழக்கம் போல. அவர் பாட்டுக்கு அசராமல் சாப்பிட்டு முடித்தார். அதுவுமில்லாமல் காக்கைகள் மிகத் தாழ்வாக பறக்கின்றன. என் தலைக்கு மிக மிக அருகில் சில காகங்கள் பறப்பதும், நான் பயந்துபோய் குனிந்துகொள்வதும், அப்புறம் யாராவது பார்த்திருப்பார்களோ என்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அசடு வழிவதாகவோ பொழுது போனது.

புகைப்படம்: தி ஹிந்து
காக்கைகள் என்றதும் நினைவுக்கு வருகிறது. எனக்கு சில மூடநம்பிக்கைகள் உள்ளன. ஆனால் எனக்கோ மற்றவர்களுக்கோ எந்த தொந்தரவும் தராதவை. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒருமுறை தலையில் முட்டினால் கொம்பு முளைத்துவிடும் என்று ஜெனிலியா நம்புவார். ஜெயம் ரவி நீ இதையெல்லாமா நம்புற...? என்று கேட்கும்போது நல்லா இருக்குல்ல என்று சிரித்தபடி பதிலளிப்பார் ஜெனிலியா. அதுபோல தான் எனக்கு சில நம்பிக்கைகள். விஷயம் இதுதான். தினமும் காலையில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு குறிப்பிட்ட காகம் வந்து கரைகிறது. உடனே தாத்தா வந்துவிட்டார் என்று அதற்கு கொஞ்சம் உணவுப்பொருள் வைப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த காக்காவும் சளைத்ததில்லை. உப்புமாவோ, வெண் பொங்கலோ வைத்தால் சீண்டாது. உணவை எடுத்துக்கொண்டு போய் வைக்க தாமதமானாலும் விடாமல் கரைந்து கொண்டிருக்கும். அதுவும் அசாதாரண குரலில். ஏதோ சுனாமி வரப்போகிறது என்று எச்சரிப்பது போல இருக்கும். என்றோ ஒருநாள் அந்த காக்கைக்கு உணவளித்து அது தினமும் வந்து பழகியிருக்கக்கூடும். அல்லது உண்மையாகவே மறைந்த முன்னோர்கள் காக்கைகளாக உரு பெறுகிறார்களோ என்னவோ...?

அப்படி அவர்கள் காக்கைகளாக உருப்பெறும் பட்சத்தில் அவர்களுடைய வாழ்நாள் எவ்வளவாக இருக்கும் என்று தேடினேன். காக்கைகளை நாம் ஆங்கிலத்தில் Crow என்று அழைத்தாலும் அவற்றிற்கு Raven என்ற பெயரும் உண்டு. காக்கைகளில் பல இனங்கள் இருக்கின்றன. பொதுவாக காக்கைகள் இருபது வயது வரை வாழ்கின்றன. அதாவது உருமாறும் நமது மூதாதையர்களின் வாழ்நாள் இருபது வருடங்கள். அதன்பிறகு அவர்கள் என்னவாக ஆகிறார்கள் என்று யாராவது கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாக ஒரு காக்கை 59 வயது வரை வாழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. டாட்டா என்று பெயரிடப்பட்ட அந்த காக்கை ஒரு செல்லபிராணியாக வீடுகளில் வளர்ந்திருக்கிறது. ஒருவேளை அதனை அதிக கவனம் செலுத்தி வீட்டுச்சூழலில் வளர்த்தமையால் கூட அத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கலாம். இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. டாட்டாவை விட வேறு எந்த காக்கையும் அதிக ஆண்டுகள் வாழ்ந்ததில்லை என்று எப்படி சொல்ல முடியும். உலகில் உள்ள எல்லா காக்கைகளின் வயதையும் சென்சஸ் அதிகாரிகள் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்களா என்ன...?

சரி, காகங்கள் பற்றிய கரைதலை நிறுத்திக்கொள்வோம். நேற்று காலை ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நண்பர் அருள் செல்வன் அவருடைய குறும்பட ஷூட்டிங்கை பார்ப்பதற்கு அழைத்திருந்தார். வெட்டி ப்ளாக்கர்ஸ் சிறுகதை போட்டியில் ரஜினியிசம் என்ற சிறுகதை நிறைய பேருடைய நினைவிலிருக்கும். அதை எழுதியவர் தான் இந்த அருள் செல்வன். ஏற்கனவே சொம்பு, மொக்கை பையன் சார் உட்பட ஐந்தாறு குறும்படங்களில் பணியாற்றியிருக்கிறார். எல்லாமே சராசரிக்கு மேல் என்று சொல்லக்கூடிய அளவில் இருந்தன. அவற்றில் சொம்பு என் விருப்பதிற்குகந்தது. எல்லா படங்களையும் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். தற்சமயம் H2SO4, பொண்ணு ஒன்னு கிடைக்கல என்று இரு குறும்படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு உற்சாகமான அணியையும் தன்னகத்தே வைத்திருக்கிறார் அருள். பெங்களூரில் ஒரு உலக பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணனுக்கு நடிப்பதில் பேரார்வம். அருளுக்காக பெங்களூரிலிருந்து சென்னை வந்து நடித்து கொடுத்துவிட்டு செல்கிறார். கிட்டத்தட்ட அருளின் எல்லா படங்களிலும் கிருஷ்ணன் நடித்திருக்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும் இயல்பாக நடித்துவிடுகிறார். இந்தமுறை அருள் செல்வன் குழுவினர் நாளைய இயக்குநரில் பங்குபெற இருப்பதாக ஒரு தகவல் காதில் விழுந்தது. அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...!

பார்க்க: சொம்பு

அங்கிருந்து மதிய உணவிற்கு அண்ணா நகர் ஸீ ஷெல்ஸுக்கு அழைத்துச் சென்றார் அஞ்சாசிங்கம். ஏதோ மட்டன் ரான் பிரியாணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் கூட ஆட்டுத்தொடையை அப்படியே கொண்டு வந்து வைப்பார்கள் போல என்று நம்பிக்கொண்டிருந்தேன். வண்ணமயமான உணவகம். ஏராளமான மேட்டுக்குடி யுவதிகளும், சீமாட்டிகளும் சில தடிமாடுகளுடன் வந்து செல்கிறார்கள். கைகளை கழுவிவிட்டு வருவதற்குள் சைட்டடிக்க தோதான இடத்தில் அமர்ந்துகொண்டார் சிவக்குமார். சரி, வளர்ற பிள்ளையாச்சே’ன்னு விட்டுத்தர வேண்டியதாக போய்விட்டது. கேபிள், கே.ஆர்.பி, பிரபு கிருஷ்ணா ஆகியோரை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆரூர் மூனாவும் வந்திருந்தார். பிரியாணி வெகு சுமார். பில்லுக்கு பணம் செலுத்திய அஞ்சாசிங்கத்துக்கு என்னுடைய அனுதாபங்கள்.

முந்தய பத்தி எங்கு போய் முடியும் என யூகித்திருப்பீர்கள். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு. ஆனால் மது பழக்கத்தை நிறுத்தியபிறகு மற்றவர்கள் மது அருந்துவதை வேடிக்கை பார்ப்பது துயரமாக இருக்கிறது. அதிலும் ஒருத்தர் குரியர் நெப்போலியனுக்கு பக்க வாத்தியமாக வெண்ணிலா ஐஸ்க்ரீமை சுவைக்கிறார். என்ன கருமம்டா...! போனதற்கு உருப்படியாக ஆரூராரிடமிருந்து ராஜீவ்காந்தி சாலை, உப்புநாய்கள், மரபல்லி ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறேன்.

சமீபத்தில் எழுதியது: தெகிடி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2013

அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானை நோக்கிய என்னுடைய கப்பல் பயணத்தில், ஒரு வெள்ளைக்கார சோடியை பார்த்து உள்ளூர்வாசி சொன்னது, “இவுகல்லாம் ஹேவ்லாக் போயி அவுத்துப்போட்டு படுத்துக்குவாக...”. அப்போதிலிருந்தே என்னுடைய மனது அந்த ஒற்றைச் சொல்லை கவனமாக பற்றிக்கொண்டது - ஹேவ்லாக். அந்தமானில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து “சந்தைக்கு போகணும் காசு கொடு...” என்று சொல்லும் சப்பாணி போல, எப்ப பாஸ் ஹேவ்லாக்குக்கு அனுப்பி வைப்பீங்க என்று டிராவல் ஏஜென்ட்டை நச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

ஹேவ்லாக் நம் கவலைகளுக்கான பூட்டு ! அந்தமான் தீவுகளிலேயே போர்ட் ப்ளேர் தவிர்த்து வெளிநாட்டவர் தங்குவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே தீவு - ஹேவ்லாக். அதனாலேயே ஹேவ்லாக் கடற்கரைகள் பிகினி மயமாகவும் பிறந்தமேனியாகவும் காட்சியளிக்கின்றன. கொண்டாட்ட விரும்பிகள், தேனிலவு தம்பதிகள் ஹேவ்லாக்கில் ஒரு இரவாவது தங்கி விரிவாக சுற்றிப்பார்ப்பது உகந்தது. அந்தமான் சுற்றுப்பயணம் முழுவதையும் ஹேவ்லாக்கில் மட்டுமே செலவளிப்போரும் உண்டு.

கொஞ்சம் மெனக்கெட்டால் டிராவல் ஏஜெண்டுகளின் தலையீடு இல்லாமல் ஹேவ்லாக் சென்றுவரலாம். போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்வதற்கு அரசாங்க கப்பல் பம்பூகாவும் தனியார் கப்பல் மாக்ரூஸும் இருக்கின்றன. பம்பூகாவில் டிக்கெட் விலை 250ரூ. மாக்ரூஸில் 900ரூ. உங்கள் டிராவல் ஏஜெண்ட் உங்களிடம் சீசன்  உச்சத்தில் இருப்பதால் அரசாங்க கப்பலில் டிக்கெட் கிடைக்காது என்று காதில் பூ சுற்ற முயற்சிப்பார். ஏமாற வேண்டாம். உண்மையில் பம்பூகா பாதியளவு கூட நிரம்புவதில்லை. தரமான இருக்கைகள், தொலைகாட்சி, கேண்டீன், துரித வேகம் என்று தனியார் கப்பலில் சில வசதிகள் இருப்பது உண்மைதான். என்னைப்பொறுத்தவரையில் போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்லும்போது அரசாங்க கப்பலிலும் திரும்பிவரும்போது தனியார் கப்பலை நாடுவதும் சாலச்சிறந்தது. முந்தய பத்தியில் குறிப்பிட்ட தரப்பினர் தவிர்த்து மற்றவர்கள் காலையில் கிளம்பி மாலையில் திரும்பிவிடலாம்.

போர்ட் ப்ளேரிலிருந்து ஹேவ்லாக் செல்வதற்கு ஹெலிகாப்டர், ஸீ ப்ளேன் சேவைகள் கூட உள்ளன. சராசரி கட்டணம் தான். ஆனால் செல்வாக்கு உள்ள ஆட்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று நினைக்கிறேன்.

ஹேவ்லாக்கில் மொத்தம் ஏழு கடற்கரைகள் உள்ளன, எனினும் அவற்றில் இரண்டு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. ராதா நகர் கடற்கரை- ஆசியாவிலேயே தலைசிறந்தது என்று 2004ல் டைம்ஸ் மேகஸின் அறிவித்த கடற்கரை. ஹேவ்லாக் படகுத்துறையிலிருந்து 11கி.மீ தொலைவில் ராதாநகர் கடற்கரை அமைந்துள்ளது. ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும், எனினும் அது தேவையற்றது. ஹேவ்லாக்கை பொறுத்தவரையில் வெட்கம் என்னும் கருமத்தை களைந்துவிடுவது நல்லது, கூடவே ஆடைகளையும், உங்களுடையதை தான். அபத்தமாக சூரியனை உள்ளங்கையில் பிடித்திருப்பது போல போட்டோவெல்லாம் எடுக்க வேண்டாம். ஜஸ்ட் என்சாய் ! கடலலை லேசாக உடலை நனைத்துவிட்டு செல்கிறபடி, மணலில் மல்லாக்கப் படுத்துக்கொள்ளுங்கள் - கடவுளை காணலாம்.

நான் ராதாநகர் கடற்கரைக்கு சென்றபோது மணி மாலை ஐந்தை நெருங்கியிருந்தது. சூரியன் மறைகிற தருணம். நிறைய பேர் SLR கேமராவை வைத்து திருகிக்கொண்டிருந்தார்கள். அருகிலேயே ஒரு ரிக்கி பாண்டிங் ஒரு துரையம்மாவின் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான். இந்தியா ஏன் இதுவரை வல்லரசு ஆகவில்லை என்ற உண்மை உரைத்தது. அப்படியே அலைகளை தொட்டபடி ஒரு நடை நடந்தேன். ஒரு பிகினி மங்கை குப்புற படுத்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். அவள் புட்டத்தில் ஒட்டியிருந்த ஈரமணல் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்துக்கொண்டிருந்தது. அந்த தருணம்... திருவள்ளுவர் ஏதோ சொல்லியிருக்கிறாரே, ஆங் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே உலக்கை... என்ன எழவோ, அப்படித்தான் ஆகியிருந்தது என்னுடைய நிலை. மீண்டும் என் உணர்வுகளை சமநிலைக்கு கொண்டுவர நேரம் பிடித்தது.

ராதாநகர் கடற்கரையிலிருந்து மீண்டும் படகுத்துறைக்கோ அல்லது அறைக்கோ செல்லும்வழியில் மூன்று கி.மீ தொலைவில் எலிபேண்ட் பீச்சுக்கு செல்வதற்கான குறுக்குப்பாதை அமைந்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாது. காட்டுவழிப்பாதையாக சில கி.மீ நடந்து சென்றால் எலிபேண்ட் கடற்கரையை சென்றடையலாம். சில வருடங்கள் முன்பு வரை இங்கே யானை சவாரி நடைபெறும் என்று சொல்கிறார்கள். மற்றபடி முந்தய பதிவுகளில் சொன்ன ஸ்கூபா டைவிங், ஸ்னார்கலிங் வகையறா விளையாட்டுகள் ஹேவ்லாக்கிலும் உண்டு. ஹேவ்லாக் படகுத்துறை - ராதாநகர் பீச் - எலிபேண்ட் பீச் : எளிய புரிதலுக்காக கூகுள் மேப்.

தங்குமிடங்களை பொறுத்தவரையில் ஹேவ்லாக்கில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. நான் ஹேவ்லாக் சென்ற சமயம், என்னுடைய பயணத்தின் கடைசி நாட்கள். ஏற்கனவே என்னுடைய ஏ.டி.ம். கறவை மாட்டின் மடி வற்றியிருந்தது. எனவே ட்ராவல் ஏஜெண்டிடம் பாடாவதி லாட்ஜாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி வைத்திருந்தேன். அந்த வசந்த மாளிகையின் பெயர் பிலாஷி லாட்ஜ். ம்ம்ம் குடிபோதையில் உள்ள ஒருவன் படுத்து உறங்குவதற்கு போதுமானதாகவே இருந்தது. இருப்பினும் கரப்பான்களுக்கு பயந்து இரவெல்லாம் மின்விளக்குகளை எரியவிட்டு, தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக்கொண்டு தூங்கிய கதையை தனி அத்தியாயமாகத்தான் எழுத வேண்டும்.

மிக முக்கியமான தகவலை மறந்துவிட்டேன்; ஹேவ்லாக் செல்லும்போது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு ஃபுல் பாட்டில் சரக்காவது வாங்கிச் செல்லுங்கள். மக்கள் வசிக்கும் பகுதிதானே, மதுக்கூடம் இருக்கும் என்று நம்பி சென்றுவிட்டேன். இருந்தது. மூன்று கி.மீ ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றார்கள். அதையும் செய்தேன். சலூன் கடை அளவில் உள்ள மிகச்சிறிய இடம். டேபிள் எல்லாம் இல்லை. கடைக்காரர் ஊற்றிக்கொடுப்பார். அப்படியே வாங்கி குடிக்க வேண்டியது தான். சைட் டிஷ் எல்லாம் ஊற்றிக்கொடுப்பவரின் முன்னே இறைந்துக்கிடக்கும். அள்ளி வள்ளு வதக்கு'ன்னு வாயில போட்டுக்க வேண்டியது தான். ஒரு தனி மனிதனாக இதுபோன்ற அனுபவங்களை நான் ரசித்து ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் வருத்தப்பட்டு பாரம் சுமக்க விரும்பாதவர்கள் சரக்குபுட்டியை போர்ட் ப்ளேரிலிருந்து சுமக்கலாம். அடுத்தது, உணவகங்கள். கிட்டத்தட்ட இரவு எட்டரை மணிக்கெல்லாம் எல்லோரும் கடையை சாத்திவிடுகின்றனர். எனவே தாமதிப்பது உகந்ததல்ல. மதுக்கூடத்திற்கு அருக சில பெங்காலிகளின் வீட்டுவாசலில் டேபிள் சேரெல்லாம் போட்டு உணவு பரிமாறுகிறார்கள். அவற்றை தவிர்த்தால் படகுத்துறைக்கு அருகில் வழக்கம்போல பொரொட்டா, ஃபிரைட் ரைஸ் விற்கும் உணவகங்கள் உள்ளன.

என்னடா ரெண்டு பீச்சு தானே இருக்கு என்று தோன்றலாம். ஹேவ்லாக் என்பது ஒரு உணர்ச்சி. அதனை வார்த்தைகளால் புரிய வைப்பது கடினம். பழமொழி சொன்னா அனுபவிக்கணும் என்று சொல்வதுபோல ஹேவ்லாக்கையெல்லாம் அனுபவிக்கணும் !

பி.கு: அந்தமான் தொடர் இழுத்துக்கொண்டே செல்கிறதே; எப்பதான் முடிப்பீங்க'ன்னு ஒரு நண்பர் கேட்டிருந்தார். இன்னும் இரண்டு கட்டுரைகள் உள்ளன.

படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 April 2013

அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானில் பிற தீவுகள் தவிர்த்து போர்ட் ப்ளேரிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால் முன்னுரிமை கொடுக்கவேண்டியவை. காரணம் இந்த இடங்களை சுற்றிப்பார்க்கும்போது உங்களுக்கு அந்தமானை பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும். எஞ்சியிருக்கிற பயணத்தை எப்படி திட்டமிடலாம் என்கிற எண்ணம் கிடைக்கும். நினைவிருக்கட்டும் என்னுடைய கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ள இடங்கள் தவிர்த்து அந்தமானில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன. மொத்தத்தையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகலாம். எனவே சரியான தேர்வு, திட்டமிடல் அவசியமாகிறது. அதனால் அந்தமான் சுற்றுலாவின் முதல்நாளாக போர்ட் ப்ளேர் நகருலாவை வைத்துக்கொள்வது உகந்தது.

டூர் ஏஜெண்டுகளை அணுக வேண்டிய அவசியமில்லை. பத்தடிக்கு ஒன்றாக இருக்கும் ஏதாவதொரு டிராவல்ஸில் இருந்து நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு காரை புக் செய்துக்கொள்ளவும் அல்லது ஆட்டோ ஒன்றை டிரைவரோடு சேர்த்து வாடகைக்கு பிடித்துக்கொள்ளவும். மாற்றுத்துணி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் முழுக்க முழுக்க தகவல் சார்ந்தது என்பதால் விருப்பமிருந்தால் குறிப்பெடுக்க நோட்டு - பேனா எடுத்துச்செல்லலாம். காலை எட்டு மணிக்கு டிபனை முடித்துவிட்டு கிளம்புவது உத்தமம்.

சாத்தம் மர-அறுவை தொழிற்சாலை
சாத்தம் என்கிற தனித்தீவில் அமைந்துள்ள வரலாற்று பெருமைகள் நிறைந்த தொழிற்சாலை. அந்தமான் தீவுகளிலேயே பாலத்தால் இணைக்கப்பட்ட ஒரே தீவு. ஆசியாவின் பழமையான தொழிற்சாலைகளுள் ஒன்று. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் குண்டுமழை பொழிந்த இடம். தொழிற்சாலையில் இன்னமும் போர்த்தளும்புகள் இருக்கின்றன. நிறைய தமிழ் தொழிலாளிகள் தென்படுகின்றனர். அவர்களிடம் அன்பு என்ற சமாச்சாரத்தை கொஞ்சம் காட்டினால் போதும், அவர்களாகவே முன்வந்து உங்களுக்கு தொழிற்சாலையை சுற்றிக்காட்டி அங்கு நடைபெறும் பணிகளை விளக்குவார்கள். தொழிற்சாலை வாயிலில் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. தொழிற்சாலையை பற்றியும் ஜப்பானிய படையெடுப்பை பற்றிய தகவல்கள் ஆங்கே தொகுக்கப்பட்டுள்ளது. மரத்தில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

சாமுத்ரிகா அருங்காட்சியகம்
இந்திய கடற்படையின் பராமரிப்பின் கீழ் உள்ள அருங்காட்சியகம். வாயிலிலேயே பிரம்மாண்ட திமிங்கலத்தின் எலும்புக்கூடு வரவேற்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் அந்தமானின் வரலாறு மற்றும் புவியியல் சார்ந்த தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம். மேலும் அந்தமானின் கடல்வளங்கள், மீன்கள், பவளப்பாறைகள் பற்றிய தகவல்களும் அடக்கம். சாமுத்ரிகாவின் எதிரிலேயே உயிரியல் அருங்காட்சியம் ஒன்றும் அமைந்துள்ளது. சரியான திட்டமிடல் காரணமாக அங்கே செல்ல முடியவில்லை. பெயரின்படி அந்தமானின் உயிரியல் வளங்கள், அரிய வகை முதலைகள், ஆமைகள் பற்றிய தகவல்கள் அங்கே இருக்கலாம்.

மனிதவியல் அருங்காட்சியகம்
அந்தமானில் அவசியம் பார்க்கவேண்டிய அருங்காட்சியகம். அந்தமான் மக்களின் மத, மொழி, கலாசார பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்கள் இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. தவிர அந்தமானின் வெவ்வேறு வகையான பழங்குடியினரை பற்றிய அரிய புகைப்படங்கள், நிறைய தகவல்கள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை தெரிந்துக்கொள்ளலாம். அருங்காட்சியகத்தின் கீழே சில கடைகள் அமைந்துள்ளன. ஜரவா பொம்மைகள், டீ-ஷர்ட்டுகள், கைவினைப்பொருட்கள் முதிலியன கிடைக்கின்றன. முக்கியமாக அந்தமான் டூரிஸ்ட் கைடு கிடைக்கிறது. விலை 100ரூ. 

செல்லுலர் ஜெயில்
அந்தமானில் பார்த்தே தீரவேண்டிய வரலாற்று சிறப்பிடம். முதலில் சில அறைகளில் சிறை குறித்த வரலாற்று தகவல்களும் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அங்கே கொடுக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய வடிவமைப்புகள் கதிகலங்க வைக்கின்றன. முந்தய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது போல அந்தமானை பொறுத்தவரையில் காந்திக்கு இணையாக வீர சவார்க்கர் போற்றப்படுகிறார். சவார்க்கர் முப்பது ஆண்டுகளுக்கு மேல் அங்கே சிறைப்படுத்த பட்டுள்ளார். சாவர்க்கரின் நண்பர்கள் பலர் சிறைக்குள்ளிருந்தபடி பல போராட்டங்கள் நிகழ்த்தி ஆங்கிலேயர்களால் தண்டனைகளுக்கு உட்பட்டு உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அந்தமான், அந்தமான் சிறை சுதந்திரத்திற்கு முன்பு காலா பாணி (கருப்பு நீர்) என்று அழைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து அந்தமான் சிறைக்கு ஒருவர் கப்பலேற்றப்பட்டுவிட்டால் அவர் உயிரோடு திரும்புவதற்கு சாத்தியமில்லை என்னுமளவிற்கு கொடுமையான இடம். அவ்வாறு உயிரிழப்பவர்களை கல்லைக் கட்டி கடலில் வீசும் முறை கையாளப்பட்டிருக்கிறது.

மீன் காட்சியகம் & அறிவியலகம்
மீன் காட்சியகம் சிறையிலிருந்து நடை தொலைவிலேயே அமைந்துள்ளது. இரண்டு சிறிய அரங்கங்களில் மீன்கள், பவளப்பாறைகள், அவற்றை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அறிவியியலகத்திற்கு சரியான திட்டமிடல் காரணமாக செல்ல முடியவில்லை. ஆனால் அது அவசியம் பார்த்திருக்க வேண்டிய இடம் என்று அறிகிறேன்.

இதுவரையிலும் குறிப்பிட்ட இடங்களை நீங்கள் காலை எட்டரை மணிக்கு துவங்கி மாலை மூன்று மணிக்குள் பார்த்திருக்க வேண்டும்.

காந்தி பார்க்
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறிய பூங்கா. மாலை மூன்று மணிக்கு முன்பு பெரிதாக ஆரவாரங்கள் இருக்காது. காதலர்கள் அமர்ந்து அளவளாவ உகந்த இடம். மாலையில் படகு சவாரி நடைபெறுகிறது. சிறிய அளவிலான ஜப்பானிய வழிபாட்டு தளத்தை காணலாம்.

ரைட்டு. நான்கு அல்லது நான்கரை மணிக்கு காந்தி பூங்காவிலிருந்து கிளம்பி கார்பின்ஸ் கோவ் கடற்கரையை அடைவது உத்தமம்.

கார்பின்ஸ் கோவ்
மெரீனாவோடு ஒப்பிடும்போது கார்பின்ஸ் கோவ் மிக மிகச் சிறியது. எனினும் அநியாயத்துக்கு பராமரிக்கிறார்கள். நாயத்துக்கு நாமெல்லாம் (சென்னை வாசிகள்) மெரீனாவின் புகைப்படத்தை நடுஹாலில் மாட்டிவைத்து தினமும் கும்பிட வேண்டும். வாட்டர் ஸ்கூட்டர் சவாரி கிடைக்கிறது. ஒரு ட்ரிப்புக்கு 350ரூ. கார்பின்ஸ் கோவுடைய சிறப்பு அங்குள்ள சாய்வுப்பலகைகள் தான். பேசாமல் மல்லாக்க படுத்து கொஞ்ச நேரம் அமைதிக்கடலில் மூழ்கலாம். உணர்ச்சிவசப்பட தேவையில்லை. அந்தமானில் கும்மாளம் போடுவதற்கு வேறுசில கடற்கரைகள் உண்டு. கார்பின்ஸ் கோவ் சாத்விக கடற்கரை. அமைதியாக அமர்ந்து ரசித்துவிட்டு திரும்புவதே சிறந்தது.

அங்கிருந்து கிளம்பும்போது மணி ஆறு அல்லது ஆறரை ஆகியிருக்கலாம். நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் மறுபடியும் செல்லுலர் ஜெயிலுக்கு சென்றால் அங்கே ஒளியும் ஒலியும் காட்டுவார்கள். (Sound & Light show). அதை பார்த்துவிட்டு இரவு பாருக்கு திரும்பலாம்.

அடுத்து வருவது: அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 March 2013

அந்தமான் - ஜாலிபாய்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெயருக்கேற்ற தீவு. ஜாலிபாய் டிசம்பரில் துவங்கி மே மாதம் வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருக்கும். அடுத்த ஆறு மாதங்களுக்கு ரெட் ஸ்கின் என்ற இன்னொரு தீவு திறக்கப்படும்.இரண்டும் ஒரே மாதிரியான தீவுகள். எனவே நீங்கள் செல்லும்போது எந்த தீவு வரவேற்பு கம்பளம் விரிக்கிறதோ, அங்கே சென்றிடுங்கள். ஜாலிபாய் செல்வதற்கு அந்தமான் நிர்வாகத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என்பதால் ட்ராவல் ஏஜெண்டிடம் ஒப்படைத்து விடுவது நல்லது. அனுமதியும் டிக்கெட் கட்டணமும் சேர்த்து 700ரூ. போர்ட் ப்ளேரிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள வண்டூரிலிருந்து தான் படகுகள் புறப்படும். அதுவரை அழைத்துச் செல்ல / மறுபடி கொண்டுவந்து விட நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து செலவு வேறுபடும். மிக முக்கியமாக, ஜாலிபாய்க்கு செல்லும்போது டவல், மாற்றுத்துணி எடுத்துச் சென்றே ஆகவேண்டும். அது தேவைப்படாது என்று நினைப்பவர்கள் ஜாலிபாயை தவிர்த்துவிடலாம். தேவைப்படுமென்றால் கேமரா எடுத்துக்கொள்ளவும். தேவைகேற்ப உற்சாக பானம் அவசியம்.


கழுகுப்பார்வையில் ஜாலிபாய்
தீவுக்குள் பிளாஸ்டிக் குப்பைகள் போட தடை உள்ளது. எனவே, முடிந்தவரையில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்கவும். தண்ணீர், உ.பா காரணமாக வாட்டர் பாட்டிலை தவிர்க்க முடியாது; கவலையில்லை, நீங்கள் உள்ளே செல்லும்போது எத்தனை பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்துச் செல்கிறீர்கள் என்று டோக்கன் போட்டுக்கொள்ள வேண்டும். திரும்பி வரும்போது அதே எண்ணிக்கை பாட்டில்களை காட்டி பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தீவிற்குள் ப்ளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது என்பதற்குத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி அங்கே குப்பை கொட்டுவது மிகவும் எளிது; எனினும் சுயக்கட்டுப்பாடு அவசியம்.

காலை ஏழு மணிக்கு டிபன் அடித்துவிட்டு, மதியத்திற்கு பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பினால், எட்டு, எட்டரைக்கு வண்டூர் மரைன் பூங்காவை சென்றடைந்து அங்குள்ள சிறிய மியூசியத்தை சுற்றிப் பார்த்துவிடலாம். காலை ஒன்பது மணி தாண்டியதும் ஓடங்கள் ஒவ்வொன்றாக புறப்படும். சுமார் ஒன்றரை மணிநேர பயணம். ஜாலிபாய் பவழப்பாறைகளால் சூழப்பட்ட தீவு. படகுத்துறை கட்டும்போது அவற்றை அழிக்க வேண்டி வரும் என்பதால் படகுத்துறை இல்லை. எனவே, ஓடங்கள் சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து கண்ணாடி அடிப்புறம் கொண்ட படகுகள் நம்மை தீவிற்கு கொண்டு செல்லும். படகின் அடிப்புறத்தின் வழியாக பவழப்பாறைகளை பார்க்கலாம்.


கண்ணாடி படகினூடே
ஜாலிபாய் - அந்த தீவில் கால் பதித்ததும் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, குறைந்தபட்ச ஆடையைத் தவிர மற்றவை துறந்து கடலில் குதிப்பது. வட இந்திய குலோப் ஜாமூன்களும், ரசகுல்லாக்களும் கடலில் மிதக்கக்கூடும். நான் முன்பே சொன்னது போல சுயக்கட்டுப்பாடு அவசியம். ஒரு பத்து நிமிடங்கள் கடலோடு அளவளாவி விட்டு, ஒரு கட்டிங் அடித்துக்கொள்வது உடலிற்கு உகந்தது. 

ஸ்னார்கலிங் - எளிய புரிதலுக்கும் இளைப்பாறுதலுக்கும்

படகிலிருந்து இறங்கும்போது உங்களுக்கு ஒரு டோக்கன் கொடுத்திருப்பார்கள். இலவச ஸ்னார்கலிங்கிற்கான டோக்கன். போட்டி அதிகமாக இருக்கும், எனவே உங்கள் படகிற்கான ஸ்னார்கலிங் கைடு யாரென்று கண்டுபிடித்து ஒட்டிக்கொள்ளவும். இங்குதான் ஸ்வாரஸ்யம் ஆரம்பம்; நீருக்குள் பார்ப்பதற்கான கண்ணாடியும், சுவாசக்குழாயும் தரப்படும். வாய் வழியாக மட்டுமே சுவாசிக்க முடியும். சுவாசக்குழாயின் மறுபகுதி நீர்நிலைக்கு மேலே இருக்கும். முதலிரண்டு நிமிடங்கள் சிரமமாக இருக்கும்; அப்புறம் பழகிவிடும். பயப்பட வேண்டாம். லைப் ஜாக்கெட் அல்லது ரப்பர் டியூப் வழங்கப்படும். எனவே நீர்மட்டத்திலேயே மிதப்பீர்களே தவிர மூழ்கிவிட வாய்ப்பில்லை. மேலும் கைடு உங்கள் கையைப் பிடித்தபடி நீந்தி வருவார்.


கடல் மீன்களோடு சேர்ந்து நீந்துகிற உணர்வு. கைடு மீன்களின் பெயர்களை சொல்லி ஹிந்தியில் ஏதாவது விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பார். அவரோடு பேச முயற்சிக்க வேண்டாம்; முயன்றால் சுவாசிப்பதில் கவனம் குறைந்துவிடும். கொஞ்ச தூரம் நீந்திய பிறகு உங்கள் இலவச ட்ரிப் முடிந்துவிட்டது. இன்னும் தூரம் செல்ல வேண்டுமென்றால் தூரத்திற்கேற்ப 300/400/500ரூ செலவாகும் என்றார். நான் 300ரூ தர சம்மதித்தேன். ஆழம் சற்று அதிகமானது. பெரிய பெரிய மீன்களும் பவழப்பாறைகளும் தென்பட ஆரம்பித்தன. இப்போது கைடை அழைத்தேன். 500ரூ தருகிறேன், முடிந்தவரை ஆழத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றேன்.

கடல் வெள்ளரி
மறுபடியும் மீன்களோடு சேர்ந்து நீந்தத் துவங்கினேன். பவழப்பாறைகள் மீது கால் படாதபடி பார்த்துக்கொள்ள வலியுறுத்தினான். அப்படி கால் வைப்பது அவற்றிற்கும், சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தான். தீடீரென ஒரு ஸ்டார் ஃபிஷ்ஷை கையில் எடுத்து விளக்கம் கொடுத்தான். அடுத்த நொடி, அதை என் கையில் திணித்து விட்டான். இதுவரைக்கும் புத்தகத்திலும் மியூசியங்களிலும் மட்டுமே பார்த்த ஸ்டார் ஃபிஷ் இப்போது என்னுடைய கைகளில்; பரவசமான நிமிடம் அது. கொஞ்ச தூரம் சென்றதும் பெரிய சைஸ் அட்டைப்பூச்சி மாதிரி ஏதோவொன்று கடல் பரப்பில் கிடந்தது. அதையும் கையில் கொடுத்தான். ஸ்டார் ஃபிஷ் கல்லு போல திடமாக இருந்தது, இப்போது கொடுத்திருப்பது வழவழப்பாக இருக்கிறது. பெயர் ஸீ குகும்பர். தமிழாக்கினால் கடல் வெள்ளரிக்காய். அந்த சில நிமிடங்கள், கடவுளைக் கண்ட பரவசத்தோடு கரைக்கு திரும்பினேன்.

நான் - கட்டிங் - கடல்: த்ரீஸம் உல்லாசம் அனுபவித்தோம். நினைவிருக்கட்டும், இங்கிருக்கும் கழிவறை மற்றும் உடை மாற்றும் அறைகள் தற்காலிக தென்னை ஓலைக்குடில்கள் மட்டுமே. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இருந்தாலும்கூட. ஆண்களைப் போல பெண்கள் சுலபமாக ஒத்துப்போக இயலாது. கட்டி வந்த மதிய உணவை முடித்துவிட்டு, கடலலை படாத மணல்பரப்பில் படுத்துக்கொண்டேன். முந்தய பத்தியில் குறிப்பிட்டதைப் போன்ற விளையாட்டுகளை விரும்பாத சா.சாதங்கள் கண்ணாடி படகுகளில் பயணித்து நேரத்தை செலவிடலாம்.


அதிகபட்சம் மூன்று மணிநேரங்கள். ஓடங்கள் திரும்பத் தயாராகும். ப்ளாஸ்டிக் பாட்டில்களை கீழே போடாமல் கவனமாக எடுத்து பைக்குள் திணித்துக்கொள்ளவும். திரும்ப வரும்போது நிச்சயம் அயர்ச்சியாக இருக்கும். ஓடத்தின் மேல்பகுதிக்கு சென்று மல்லாக்கப்படுத்து ஒரு குட்டித்தூக்கம் போட்டால் சொர்க்கம்...!

திரும்பி வந்தபிறகு நேரம் அனுமதித்தால், வண்டூர் பீச்சையும் பார்த்துவிட்டு வரலாம். அருகில் சில கடைகள் இருக்கிறது. சிப்பியில், மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. மரத்தால் செய்யப்பட்ட ஜரவா பொம்மைகளை அந்தமான் நினைவாக வாங்கிக்கொள்ளலாம். மாலை ஆறு மணிக்குள் மீண்டும் ஹோட்டல் அறைக்கு திரும்பிவிடலாம்.

அடுத்து வருவது: போர்ட் ப்ளேர் சிட்டி டூர்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 March 2013

ஒன்பதுல குரு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அறுபதுகளில் பீச் பார்ட்டி என்கிற அமெரிக்க படம் வெளிவந்து வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அதே சாயலில் சில படங்கள் வெளிவந்தன. தமிழில் வெளிவந்த கோவா கிட்டத்தட்ட அந்த ரகம் என்று கொள்ளலாம். போலவே டீன் ஃப்லிம்ஸ் என்றொரு ஜான்ரா உள்ளது. பதின்பருவ வயதினரை குறி வைத்து எடுக்கப்படும் அத்தகைய படங்கள், முதல் காதல், காம உணர்ச்சிகள், பெற்றோருடன் கலாசார இடைவெளி போன்றவற்றை மையப்படுத்தி அமைந்திருக்கும். கவர்ச்சி தூக்கலாக இருக்கும். ஒன்பதுல குரு விளம்பரங்கள் அந்த படங்களை நினைவூட்டியது. லட்சுமி ராயின் இருப்பு, மந்த்ராவின் மீள்வருகை போன்ற தகவல்களாலும் திரையரங்கிற்கு உந்தப்பட்டேன்.


திரைப்படங்கள் மிக மோசமாக இருக்கும் பட்சத்தில் கதையே இல்லை என்று கிண்டலடிப்பது விமர்சன க்ளிஷே. ஆனால் உண்மையிலேயே ஒன்பதுல குருவில் கதையை மிகவும் சிரமப்பட்டு தேட வேண்டியிருக்கிறது. வாழ்க்கையை கொண்டாடும் சில பேச்சுலர்கள் திருமணத்திற்குப் பின் பேச்சு இல்லாதோராகி விடுகின்றனர். குடும்பத்தை விட்டு விலகி மீண்டும் பேச்சுலராக முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களே ROTS.

ஒன்பதுல குரு ஒரு நகைச்சுவை திரைப்படம் என்று சொல்வது தான் உச்சக்கட்ட நகைச்சுவையாக படுகிறது. நான்கைந்து நல்ல நகைச்சுவைகளை வைத்துக்கொண்டு, ஏராளமான சிரிப்பே வராத பாடாவதி காமெடிகளை சேர்த்து, கோர்வையாக இல்லாமல் பயங்கர மொக்கையாக இருக்கிறது.

பராசக்தியில் நடிகர் திலகம் அறிமுகமானபோது, “மீன்குஞ்சு மாதிரி வாய வாய தொறக்குறான்...” என்று கமெண்ட் அடித்தார்களாம். வினய்யும் அதேபோல அடிக்கடி வாயை திறக்கிறார் என்பதற்காக அவரை சிவாஜியாகவோ, வாயை கோணலாக வைத்துக்கொண்டு இழுத்து இழுத்து பேசுவதால் ரஜினியாகவோ, படத்தில் பில்லா என்ற பெயரை சூட்டிக்கொண்டதற்காக அஜித்தாகவோ கருதிவிட முடியாது. வினய்க்கு பொருந்தாத வேடம். குறிப்பாக பாடல்காட்சிகளில் அவருடைய வாயசைப்பு நாசம்.

சத்யன், ப்ரேம்ஜியின் நடிப்பு எரிச்சலும் இரைச்சலும் கலந்த கூட்டுக்கலவை. அரவிந்த் அகாஷும் உடன் இணைந்து சலம்பாதது ஆறுதலளிக்கிறது. ஒன்பது குருவின் பிரதான வேடங்களில் முதலில் நடிப்பதாக இருந்தவர்கள், நகுல், சிவா, சந்தானம், ப்ரேம்ஜி. ஒப்பீட்டளவில் நல்ல காம்பினேஷன். பவர் ஸ்டாரின் கோமாளித்தனங்களை எல்லாம் ஒருமுறை தான் ரசிக்க முடியும்.


லட்சுமி ராய் - மங்களகரமான பெயர். புத்தம் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் போல பளபளப்பாக இருக்கிறார். மைதா மாவை பிசைந்து செய்யப்பட்ட ஐந்தே முக்கால் அடி சிலை. மனோபாலாவின் மனைவியாக வருபவர் வல்லிய கேரளத்து பெண்குட்டி. சோனா, மந்த்ரா போன்ற டபுள் டக்கர் ஆண்ட்டிகள் வீணடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, லட்சுமி ராய், சாம்ஸ், பவர் ஸ்டார் போன்ற நல்ல ரிசோர்ஸஸ் வீணடிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர், வசனம் எழுதியவர் எல்லாம் பெரிதாக எதுவும் உழைக்கவில்லை. பழைய பாடல்கள், பழைய படங்களின் பிண்ணனி இசை, பிரபலமான வசனங்கள், இதையெல்லாம் கொஞ்சம் டிங்கரிங் செய்தோ செய்யாமலோ சொருகியிருக்கிறார்கள். முதலில் பழைய பாடல்களை பயன்படுத்துவதற்கு தடை கொண்டுவர வேண்டும். ஆல்ரைட், சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் ஆரம்பித்த போது ரசிக்க வைத்தது. ஆனால் அதையே தொடர்ந்து செய்தால் ? ஒரு ரம்மியமான இரவுப்பொழுதில் வா வா அன்பே அன்பே பாடலையோ கடலோர கவிதைகள் பாடலையோ கேட்கும்போது உங்களுக்கு சோனாவும் ப்ரேம்ஜியும் நினைவுக்கு வந்தால் எப்படி இருக்கும் ? மாட்டு சாணம்.

திருமணம் செய்துகொள்பவர்கள் ஒன்பதுல குரு, எட்டுல சனி, மூணுல ராகு என்று ராசி, ஜாதகமெல்லாம் பார்த்து திருமணம் செய்வதை விட, தமக்கு மனதளவில் பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஒன்பதுல குருவின் மையக்கருத்தாக நாமே வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். படக்குழுவினரை பொறுத்தவரையில் மந்த்ரா, சோனா, லட்சுமி ராய், அப்புறம் நிறைய துணை நடிகைகளை பெங்களூருக்கு அழைத்துச் சென்று நன்றாக கூத்தடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நீங்கள்லாம் நல்லா வருவீங்க !

ஒன்பதுல குரு - தேவி திரையரங்கில் பத்து ரூபாய் டிக்கெட் எடுக்கும் சாமர்த்தியம் இருப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment