Showing posts with label novel. Show all posts
Showing posts with label novel. Show all posts

10 August 2015

7.83 ஹெர்ட்ஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2015ம் ஆண்டு துவங்கியதிலிருந்து ஜூன் மாதம் வரை இருபது புத்தகங்களுக்கு மேல் படித்துவிட்டேன். ஆனால், கிட்டத்தட்ட ஜூன் மாதக்கடைசியில் படிக்கத் துவங்கிய 7.83 ஹெர்ட்ஸை இப்பொழுது தான் முடித்திருக்கிறேன். அதற்கு புத்தகத்தின் தன்மை மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. பணிச்சுமை, குடும்பப் பொறுப்பு, கொஞ்சம் மன அழுத்தம், அது போதாதென்று காரோட்டும் பயிற்சி, திடுக்கென எதிர்ப்புற சாலையிலிருந்து யூ-டர்ன் அடிக்கும் ஷேர் ஆட்டோக்களை சமாளிக்க வேண்டும், ஹாரன் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் சாலையைக் கடக்கும் எருமைகளை இடிக்காமல் பிரேக் போடவேண்டும், க்ளட்ச்சில் இருந்து காலை எடுக்கும்போது எஞ்சின் ஆஃப் ஆகாமல் இருக்க வேண்டும், மாடு வேற இழுத்துனு போகுது, பாம்பு கழுத்துல ஊருது, பிளாடரை வேற கரெக்டா அமுக்கி கங்கையில தண்ணி வர வைக்கணும், இதுக்கு மேல டயலாக்கும் சொல்லணும்னா எப்படி ?

சுதாகருடைய 6174 எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். சுதாகர் எனக்கும், என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றுதான் சொல்ல வேண்டும். 6174 படித்த சமயத்தில், நாமளும் எப்படியாவது ஒரு பெரிய ‘சம்பவம்’ செய்யணும் என்ற வெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். (இன்னமும் அந்த கங்கு அணையாமல் தான் இருக்கிறது). அவருடைய இரண்டாவது நாவல் 7.83 ஹெர்ட்ஸ்.

7.83 ஹெர்ட்ஸ் ஒரு அறிவியல் புனைவு நாவல். ஆனால், கணினி, ரோபோக்கள் என்று இல்லாமல் பயோ-டெரரிஸம், பாலி பாஸ்பேட், ஸை-ஆப்ஸ் (Psyops) என்று வேறு தளத்தில் பயணிக்கும் ஸை-ஃபை !

ஓநாய்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவை. மனிதனைக் கண்டால் விலகிச் செல்பவை. ஆனாலும் அவற்றைக் கொடிய விலங்கு என்றே கருதுகிறோம் என்ற சுவாரஸ்ய வரிகளுடன் தான் நாவல் துவங்கியது. ஆனால், சில பக்கங்கள் தாண்டியதும் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதற்கான சில காரணங்கள் –

- ஒரு நபர் அல்லது ஒரு இடம் அல்லது ஒரு சம்பவத்தைப் பற்றி படிக்கும்போது அந்த விஷயம் அப்படியே நம் முன்பு காட்சியாக விரிய வேண்டும். 7.83 ஹெர்ட்ஸின் அத்தியாயங்களை அதுபோல என்னால் காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லை. இதே சிக்கல் எனக்கு 6174ன் பிற்பகுதியிலும் இருந்தது. அது இங்கே பதினெட்டாம் பக்கத்திலேயே துவங்கிவிடுகிறது. 


- ஓவர் டீடெயிலிங்: உண்மையில் சுதாகரின் டீடெயிலிங் பிரம்மிப்பாக இருக்கிறது. அநியாயத்துக்கு தகவல்களை அள்ளிக்கொடுத்திருக்கிறார். நிறைய டாபிக்கைப் பற்றி நாவலில் மேலோட்டமாகவே சொல்லியிருந்தாலும் அதற்கான தகவலை சேகரிக்க சுதாகர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. ஆனால், இவ்வளவு டீடெயிலிங் தேவையா ? தொடர்ச்சியாக தகவல்கள், தகவல்கள், தகவல்கள் என்பதே அயர்ச்சி தருகிறது. 

- ஜார்கன்ஸ்: சாமானியர்கள் படிப்பதற்கான புத்தகங்கள் எளிமையாக இருக்க வேண்டுமென்பது எனது கருத்து. ஐ.சி.பி ஸ்பெக்ட்ரோமீட்டர், ATC ஆக்ஸி டெட்ராசைக்கிள், கேனிட்ஸ் ஜீனோடைப்பிங் என்று புரியாத மொழியில் ஏதேதோ எழுதிக்கொண்டே போகும்போது தொடர்வதற்கு சிரமமாக இருக்கிறது. சுஜாதாவும் ஸை-ஃபை எழுதினார். ஆனால், எல்லோருக்கும் புரியும் மொழியில். பாய்ஸ் படத்தில் நிலநடுக்கம் வந்ததும் எல்லோரும் வீதிக்கு வந்து கூடிப் பேசிக்கொள்வார்கள். அங்கே ஜெனிலியாவின் அப்பாவும் ஒரு காமன் மேனும் ‘ரிக்டர்’ அளவை எப்படி கணக்கிடுவார்கள் என்று பேசிக்கொள்வார்கள். சுஜாதாவின் வெர்ஸடைலிட்டிக்கு அது ஒரு நல்ல உதாரணம்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, சுதாகர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் எனக்கு சுத்தமாக ஆர்வமில்லாத சப்ஜெக்ட். அதனாலேயே பல கொட்டாவிகளுக்கு மத்தியில் படிக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் தடையில்லாத வாசிப்புக்கு திரும்ப வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 March 2015

ரசிகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கால்களை படித்து முடித்த கையோடு நான் தொட்ட அடுத்த நாவல் ரசிகன். இதிலிருந்து என்னுடைய மன உறுதியையோ அல்லது நாவலின் மீது வைத்துள்ள நம்பிக்கையையோ உணர்ந்து கொள்ளலாம்.

முன்னுரையில் அபிலாஷ் நாவலை எப்படி எழுதினார் ? என்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொண்டார் ? என்பது குறித்து சுருக்கமாக எழுதியிருக்கிறார். எழுதும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அபிலாஷின் முன்னுரை கட்டாய பாடம்.

இடதுசாரி கொள்கையுடைய எண்பதுகளின் இளைஞனான சாதிக் என்பவனே நாவலின் மைய கதாபாத்திரம். அவனுடைய வாழ்வின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை நாவல் ஒரு பார்வையாளனாக, நண்பனாக உடனிருந்து கவனித்து நமக்கு விவரிக்கிறது.

நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் மாற்று சினிமா, மலையேற்ற சுற்றுலா, சிற்றிதழ் சிந்தனைகள் என்று ஒரு நாடோடியைப் போல அதன் விருப்பத்திற்கேற்ப பயணிக்கிறது. தீவிர இடது சாரி கொள்கை பிடிப்பு கொண்ட சாதிக் வறுமையின் கோர பிடியிலும் கூட ‘செங்கதிர்’ என்ற சிற்றிதழை விடாமல் நடத்தி வருகிறான். அவன் லெளகீக வாழ்க்கையில் ஈடுபாடற்றவனாக செயல்படுகிறான். நாவலின் இரண்டாவது பாகத்தில் அவன் அந்த காலகட்டத்தில் கேரளாவில் பிரபலமாக இருந்த பேரலல் காலேஜில் விரிவுரையாளராக பணிபுரிகிறான். அவனுடைய கொள்கை பிடிப்புகள் சற்று தளர்ந்திருக்கின்றன. ரெஜினா என்கிற பெண்ணை காதலிக்கிறான். காதலுக்காக பல இன்னல்களை சந்திக்கிறான். சிறைக்கு கூட செல்கிறான். மூன்றாவது பாகத்தில், அவனுடைய குணநலன்கள் மொத்தமாகவே மாறிப் போயிருக்கின்றன. அவன் ஒரு தீவிர ரஜினி ரசிகனாக இருக்கிறான். நிறைய குடிக்கிறான். அவனுடைய செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஒரு மனப்பிறழ்வு ஏற்பட்டவனைப் போல இருக்கின்றன.

அபிலாஷின் முந்தைய நாவலுக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் நாகர்கோவில் / கன்னியாகுமரி வட்டார பேச்சு மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் அப்பா காணாமல் போய்விடுகிறார். இரண்டிலும் அடிக்கடி கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யாராவது வெட்டியாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே மிக மொண்ணையான விவாதம் கடவுள் உண்டா இல்லையா என்பதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் உண்டா இல்லையா என்று மணிக்கணக்கில் எந்தவித கன்க்லூஷனும் இல்லாமல் விவாதிப்பதை விட அலகு குத்திக் கொள்வதோ, தீ மிதிப்பதோ கூட பெரிய மூட நம்பிக்கையில்லை.

முக்கியமாக இரண்டு நாவல்களில் உள்ள பொதுவான சிக்கல், கண்டதையும் எழுதி வைத்திருப்பது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். சில நொடிகளில் வெவ்வேறு தலைப்புகளில் எண்ணற்ற விஷயங்களை சிந்திக்கக்கூடிய ஆற்றல் படைத்தது மனித மனம். ஆனால் அப்படி மனித மனம் நினைப்பது அத்தனையையும் ஒன்றுவிடாமல் எழுதிக்கொண்டே வந்தால் நன்றாகவா இருக்கும். இன்னொரு விஷயம், இலக்கியவாதிகள் சும்மா ஒரு கெத்துக்காக முலைகள், யோனி, விரைத்த ஆண்குறி, தேவடியாள் போன்ற வார்த்தைகளை மானே தேனே மாதிரி பயன்படுத்துவது நவநாகரிகமாக மாறிவிட்டது. அது ஒரு எல்லையை மீறிப்போகும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, நாவலின் 139ம் பக்கம் ஒரு கதாபாத்திரத்தை விவரிக்கிறது – அவர் கண்ணை மூடி நமசிவாய நமசிவாய என உதடு குவித்து முணுமுணுத்தார். அப்படிக் குவியும்போது அவர் உதடுகள் பார்க்க நாயின் ஆசனவாய் திறந்து மூடுகிறாற் போல இருந்தன. இதனை படிக்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், எழுத்தாளர் எப்போதோ ஒரு சமயம் நாயின் ஆசனவாயைப் போய் குறுகுறுவென பார்த்திருக்கிறார். அது திறந்து மூடும்போது எப்படி இருக்கிறது என்று தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். பின்னர், பெரியவர் உதடு குவிக்கும்போது அது முன்பு பார்த்த நாயின் ஆசனவாய் போலவே இருக்கிறதா என்று ஒப்பிடுகிறார். நினைத்துப் பார்க்கவே நாராசமாக இருக்கிறது.

சமீபமாக படித்த நாவல்களில் உள்ள பொதுவான ஒரு அம்சம், போகிறபோக்கில் இலைமறை காயாக மற்ற எழுத்தாளர்களை பகடி செய்கிறார்கள். குறிப்பாக, சாரு நிவேதிதாவை அதிகம் சீண்டுகிறார்கள். ஒன்றிரண்டு நாவல் எழுதியிருக்கும் புதிய எழுத்தாளர்கள் இப்படி கிண்டலடிப்பது சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத மிர்ச்சி சிவா ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ராமராஜனை கிண்டலடிப்பதை நினைவூட்டுகிறது.

ரசிகனை பொறுத்தவரையில் அபிலாஷின் முந்தைய நாவலைப் போல போரடிக்கவில்லை. ஆனால் அத்தியாயங்கள் போகப் போக நாவலின் கதாபத்திரங்களுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் அரைகிறுக்கு போல இஷ்டத்துக்கு எதையாவது செய்கிறார்கள். அத்தியாயத்துக்கு ஒரு பிராண்ட் என்று குடிக்கிறார்கள். முதலில் டைரெக்டர்’ஸ் ஸ்பெஷல், அப்புறம் ப்ளாக் லேபிள், பகார்டி லெமன், ஈ & ஜெ, ஓல்ட் மாங்க், மார்பியஸ் என்று டாஸ்மாக் வகையறா அத்தனையும் வந்து போகின்றன. பெண் கதாபாத்திரம் ஒன்று மார்பகங்களை உடைகளுக்கு வெளியே எடுத்து விபத்தில் இறந்த கணவனின் மூளையை நினைத்து உச்சம் அடைகிறது. ம்ஹூம். ரசிகன் என்பது என்ன ஒரு அற்புதமான தலைப்பு என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 March 2015

கால்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வளவு போரிங்கான நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. உண்மையில், நான் அபிலாஷுடைய ரசிகனை வாசிக்க விரும்பினேன். அதனை வாசிப்பதற்கு அவருடைய முதல் நாவல் என்கிற வகையிலும், யுவ புரஸ்கார் விருது பெற்றது என்பதாலும் கால்கள் ஒரு Pre-requisite என்று நானாகவே கருதினேன்.

மொத்தம் 550 பக்கங்கள். நிறைய எழுத்தாளர்கள் எழுத்துரு அளவை பெரிதாக வைத்தோ, வரி வெளி அதிகமாக விட்டோ அல்லது படங்களைச் சேர்த்தோ பக்கங்களை அதிகரிக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் புத்தகம் முழுக்க முழுக்க எழுத்துகளால் நிறைந்திருக்கிறது என்பது முதல்முறை புரட்டும்போதே புரிந்துவிட்டது. ஆனால் உள்ளடக்கம் தான் சற்று சிக்கலானது. நான் பொதுவாக சோகமயமான படைப்புகளை விரும்புவது கிடையாது. கால்களை பொறுத்தவரையில் சோகம் என்று சொல்ல முடியாது. ஒருவிதமான அயர்ச்சியான உணர்வு.

சில நாவல்களை எடுத்து ஐம்பது பக்கம் வரை தாண்டி ஒரு Pleasure of the Text-ம் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் அதைத் தொடர்ந்து படித்து காலத்தை விரயம் ஆக்காமல் மற்றொன்றை ஆரம்பித்தல் என்றுமே சாலச் சிறந்தது என்கிறார் பிரபு காளிதாஸ். ஒவ்வொரு முறை மூடி வைத்துவிடலாமா என்று யோசிக்கும்போதும் யுவ புரஸ்காரை நினைத்துக்கொண்டே தம் கட்டி முடித்துவிட்டேன்.

இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மது என்கிற பருவப்பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது. தட்டையான நாவல் என்பார்களே, அதற்கு கால்கள் ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் வரை (365 பக்கங்கள் !) நாவல் ஒரே தொனியில் பயணிக்கிறது. அதற்குப் பிறகும் கூட பெரிய வித்தியாசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுவின் உணர்வுகள் தான் நாவலின் சாரம் எனும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்க வேண்டும். நாவலில், மது யாரிடமும் எந்த உணர்ச்சியையும் பெரிதாக காட்ட மறுக்கிறாள். அப்பா, அம்மா, வைத்தியர், கார்த்திக் என பல பாத்திரங்கள் வருகின்றன. அவர்களையெல்லாம் மது எந்தவித சலனமும் இல்லாமல் எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறாள், எதிர்கொண்டே இருக்கிறாள், கடைசி வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. மதுவுக்கு யாரைப் பார்த்தாலும் சோர்வாக இருக்கிறது. மற்றொரு எழுத்தாளருக்கு அடிக்கடி துக்கம் தொண்டையை அடைப்பது போல மதுவுக்கு அடிக்கடி சோர்வாக இருக்கிறது. அதை படிக்கும்போது நமக்கும் சோர்வாக இருக்கிறது. வார நாளொன்றின் மதியவேளையில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாதிரியான சவசவ உணர்வு ஏற்படும் அல்லவா ? அந்த உணர்வுதான் நாவல் முழுமைக்கும் கிடைக்கிறது.

ஆரம்ப அத்தியாயங்களில் மது, கார்த்திக் உரையாடல்கள் வருகின்றன. பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போல ஒருமாதிரி லொட லொட. ஒரேயொரு ஆறுதல், நல்லவேளையாக மது ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அதற்கும் சேர்த்து வேறு அழுது வடிந்திருக்கும் நாவல்.

உண்மையாகவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து வருந்திக்கொண்டோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை காலிபர் இல்லாமல் நடந்து கீழே விழுந்து கொண்டோவா இருக்கிறார்கள் ? அல்லது அப்படி இருந்தால் அது ஊக்குவிக்கக் கூடிய விஷயமா ? என்னைப் பொறுத்தவரையில், கால்கள் ஆப்டிமிஸ்டிக் தொனியில் எழுதப்பட்ட ஒரு பெஸ்ஸிமிஸ்டிக் நாவல்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 February 2015

சென்னைக்கு மிக அருகில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜீவ்காந்தி சாலை எழுதிய விநாயக முருகனின் இரண்டாவது நாவல். தயக்கத்துடன்தான் படிக்கத் துவங்கினேன். ஏனென்றால் என்னிடம் உள்ள ஒரு கெட்டபழக்கம், ஒரு புத்தகத்தை பாதி படித்துக்கொண்டிருக்கும்போது பிடிக்காமல் போனால் உடனே தூக்கி கடாசிவிட மாட்டேன். எப்பாடு பட்டாவது அந்த புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட முயற்சி செய்வேன். இது எங்கே போய் முடியும் என்றால் நான்கைந்து நாட்களில் முடித்துவிட வேண்டிய புத்தகம் ஒன்றிரண்டு மாதங்கள் வரை நீளும். தேவையில்லாத மன உளைச்சல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே ராஜீவ் காந்தி சாலை படிக்கும்போது இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டேன் என்பதால் ஏற்பட்ட தயக்கம்.

சென்னைக்கு மிக அருகில் அப்படியில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சித்திரை என்கிற பெரியவர் தான் கதையின் ஹீரோ. சென்னைக்கு மிக அருகில் உள்ள மணிமங்கலம் என்கிற கிராமத்தைச் சுற்றி கதை நகர்கிறது. அக்கிராமத்தில் வசித்துவரும் நில உரிமையாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சித்திரை மட்டும் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க மனம் ஒப்பாமல் சிறிய அளவில் விவசாயம் செய்துவருகிறார். அப்படியொரு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருபவரை இந்த சமூகம் எப்படியெல்லாம் நெருக்குகிறது என்பதுதான் பிரதான கதை.

இதனோடு நூல் பிடித்தாற்போல சில கிளைக்கதைகளும் வருகின்றன. எப்படியென்றால் மணிமங்கலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மருதம் பில்டர்ஸ், அதனுடைய விளம்பரப் படங்கள் ஒளிபரப்பாகும் கேலக்ஸி டிவி, அந்த விளம்பரங்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை, அந்த சின்னத்திரை நடிகைக்கும் ஒரு சாமியாருக்கும் இடையே நடந்த சல்லாபம்... இப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல கிளைக்கதைகள். இதிலுள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், நித்தியானந்தா – ரஞ்சிதா விவகாரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள், பள்ளி பேருந்து விபத்தில் சிறுமி பலியான விவகாரம், ஆழ்துளை கிணற்றில் சிறுவர் / சிறுமியர் விழுந்து பலியாகும் விபத்துகள் உள்ளிட்ட பல உண்மைச் சம்பவங்களை புனைந்து எழுதியிருக்கிறார் விநாயக முருகன்.

முந்தைய நாவலில் காணப்பட்ட குறைகளை கவனமாக களைந்தெடுத்திருக்கிறார் விநாயக முருகன். கூடவே சுவாரஸ்யத்தை சேர்ப்பதற்காக எதை எந்த இடத்தில் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று குறிப்பறிந்து கச்சிதமாக சேர்த்திருக்கிறார். 

எனினும் விநாயக முருகனின் இரண்டு நாவல்களுடைய தொனி மட்டும் ஒன்றுதான் – காலம் கெட்டுப்போய்விட்டது. அதாவது வயதானதும் மனிதர்கள் சமகால மாற்றங்களை சலித்துக்கொள்வார்கள் இல்லையா ? இந்த காலத்து பசங்க பெரியவங்க பேச்சை கேக்குறதில்ல, அரைகுறை துணியை உடுத்திக்கிட்டு திரியுதுங்க, சினிமாவே கதின்னு கெடக்குறாங்க, டிவியில போடுற கண்ட கருமத்தையும் பாக்குறாங்க இப்படி நிறைய. கூடவே, நாங்கள்லாம் அந்த காலத்துல என்று தொடங்கக்கூடிய வியாக்கியானங்கள். இப்படி நாவல் முழுவதும் பழமைவாதம் விரவிக் கிடக்கிறது. இது சில இடங்களில் ஈர்ப்பும் ஏற்பும் உடையதாக இருந்தாலும் பல இடங்களில் எரிச்சலையே தருகிறது. இத்தனைக்கும் நானே ஒரு பழமைவாதி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம், மக்களுக்கு எல்லாமே செய்திதான், இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கத் துவங்கிவிடுவார்கள் என்பது போன்ற வசைகள். இவற்றை படிக்கும்போது ‘உங்கொப்பன் செத்தப்ப எத்தன நாள் அழுத ?’ என்கிற ராஜனின் ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. தயவு செய்து அப்டேட் ஆகுங்கள் விநாயக முருகன்.

விநாயக முருகனின் எழுத்தில் ஆச்சரியமூட்டிய ஒரு விஷயம், இடையிடையே சில இடங்களில் கனவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். தூக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி தான். இதற்கு முன்பு சுஜாதாவின் சில நாவல்களில் இதுபோன்ற கனவுகளை படித்திருக்கிறேன். அவற்றை படிக்கும்போது நிஜமாகவே கனவு காணும் ஓர் உணர்வு ஏற்படும். விநாயக முருகன் எழுதியிருக்கும் கனவுகள் வேறு வகையானது. குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தின் சூழ்நிலையை வாசகர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் பொருட்டோ அல்லது உருவகப்படுத்தி சொல்லும் பொருட்டோ வரும் கனவுகள். மொத்தத்தில், படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

இறுதியாக, சென்னைக்கு மிக அருகில் போரடிக்காமல் படிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு நாவல். ஆனால், அதில் எழுத்தாளர் மிகவும் சீரியஸாக சொல்ல முயன்றிருக்கும் விஷயங்கள் மனதில் சிறிய பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கிறதா ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய சொற்றொடரை ‘என்னளவில்’ என்ற முற்சேர்க்கையுடன் படித்துக்கொள்ளுங்கள். ஐ.டி.யில் பணிபுரியும் சிலர், ‘இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானெல்லாம் வெவசாயம் பார்க்கப் போயிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் வேண்டுமானால் சென்னைக்கு மிக அருகில் நாவலை படித்துவிட்டு தங்கள் வாய்ச்சவடாலுக்கு ஒரு வாய் அவலாக சேர்த்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 February 2015

இரவல் காதலி + கொட்டு மொழக்கு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு விஷயத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்போது ஒரு கட்டத்தில் நம்மையறியாமல் அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. நாட்டின் நிலைமை அறிந்துகொள்ள சிகப்பு நா.....டா ! என்கிற விளம்பரப் பாடல் போல குருத்தோலை, இரவல் காதலி, கொட்டு மொழக்கு, செல்லமுத்து குப்புசாமி போன்ற பதங்கள் பரிட்சயமாகிவிட்டது. எழுத்தாளர் மென்பொருள் துறையில் பணிபுரிபவர் என்பதாலும் ஒரு ஆர்வம். அவருடைய இரண்டு நாவல்களை புத்தகக்காட்சியில் வாங்கினேன்.

முதலில் இரவல் காதலி. கமாக்கதை தளங்களில் விரவிக்கிடக்கும் UNSATISFIED WIFE கதையொன்றில் காதல் மற்றும் பிற உணர்ச்சிகளை சேர்த்து மானே தேனே போட்டு எழுதினால் இரவல் காதலி ரெடி.

முதல் ஐம்பது பக்கங்கள் சும்மா ஜிவ்வென்று பறக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் போரடித்தது. SMS, Gtalk சம்பாஷனைகளை பார்த்ததும் ஒருவேளை ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாக இருக்குமோ என்று பதிப்பிக்கப்பட்ட வருடத்தை அவசரமாக திருப்பிப் பார்த்தேன். புதுசுதான். SMS இடத்தை வாட்ஸப்பும், GTalk இடத்தை ஃபேஸ்புக் சாட்டும் எப்போதோ நிரப்பியாயிற்றே அய்யா. மைக்ரோஸாஃப்ட் வேர்டில் ஸ்மைலி போட்டால் அது J என்று மாறிக்கொள்வதை கவனித்திருப்பீர்கள். அது வினையாகி, சம்பாஷணைகளின் இடையே அடிக்கடி J, L என்று வருகிறது.

ஐ.டி.துறை சார்ந்த நாவல் என்பதால் அதன் வகையைச சேர்ந்த ‘ராஜீவ் காந்தி சாலை’யுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. ராகாசா’வில் பூர்வக்குடி மக்களின் விவசாய நிலங்களை பறித்தது, மாறிவரும் கலாசாரம், ஐடி ஊழியர்களின் வாழ்க்கைமுறை, கேப் டிரைவர்களின் கிளைக்கதைகள் என்று பலவற்றையும் தொட முயற்சி செய்திருப்பார் விநாயக முருகன். நிறைய கதாபாத்திரங்கள். சில சமயங்களில் குழப்பவும் கூட செய்தது. இரவல் காதலியில் அதுபோன்ற சிக்கல்கள் இல்லை. நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்கள். கொஞ்சம் ஐ.டி. கொஞ்சம் விமன் ஸைக்காலஜி. கொஞ்சம் செக்ஸ் என்று பிரமாதமான ப்ளெண்ட்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எழுத்தாளர், “நான் எழுதுவதை எல்லாம் என் மனைவி படிக்க வேண்டும். பாராட்ட வேண்டும்” என்று ஆசைப்படுவதாக கூறினார். நியாயம்தான். என்னதான் ஆடவர்கள் ஆயிரம் பேர் பாராட்டினாலும் கூட பெண்ணின் பாராட்டு என்பது சிலிர்ப்பை தரக்கூடியது. அதுவும் நமக்கு உற்றவளுடைய பாராட்டு என்பது மிகவும் உன்னதமானது. அந்த வகையில் எழுத்தாளருடைய மன உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளரின் மனைவி என்ன சொன்னார் தெரியுமா ? “நான் நான்கு பக்கங்கள் படிப்பதற்குள் தூங்கி விடுவேன்” என்று ஒரே போடாக போட்டார். என்னைக்கேட்டால் அதுவே சாலச் சிறந்தது என்பேன். இரவல் காதலி போன்ற கதையினை எழுத்தாளரின் மனைவி படித்தால் என்ன நடக்கும் என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. நாளடைவில் எழுத்தாளர் எழுதுவதையெல்லாம் மனைவி உட்கார்ந்து மட்டறுத்துக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும் ?

இரண்டாவது கொட்டு மொழக்கு.

கொட்டு மொழக்கின் பின்னட்டை பத்தி இப்படிச் செல்கிறது – கார்ப்பரேட் வாழ்க்கையின் அழுத்தங்களில் மூச்சுத்திணறும் ஒருவன்.... கொட்டு மொழக்கு மட்டுமல்ல. இந்த ஆண்டு வெளியான வேறு சில நாவல்களின் பின்னட்டைகளில் கூட ஏறத்தாழ இதே போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

சமீபத்தில் நடந்த புத்தகக்காட்சியில் ஒரு போட்டோக்கார நண்பர் ஸ்டால்களை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நித்யானந்தா ஸ்டாலில் பலமான வரவேற்பு கிடைத்தது. அங்கே வீற்றிருந்த ரெடிமேட் சாமியார் போட்டோக்கார நண்பரை அமர்த்தி கபாலத்தில் கை வைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை ? என்று கேட்டாராம். உடனே நண்பர் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட சாமியார் ஷாக் ஆகியிருக்கிறார். பின்னட்டை வாசகங்கள் எழுதும் ஆசாமிகளும் அந்த சாமியாரைப் போன்றவர்கள் தான். மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒரு மனக்குறையோடு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களாகவே கற்பிதம் செய்துகொள்கிறார்கள். ரைட்டு.

மரண வீடுகளை எதிர்கொள்ளத் தெரியாத ஒரு நகர நாகரிக மனிதன் என்ற கதைக்கரு பிடித்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாவலின் வட்டார மொழிநடை என்னை விழி பிதுங்க வைத்துவிட்டது. வட்டார மொழிநடை என்பது விருப்பத்திற்குரிய ஒன்றுதான். உரையாடல்கள் வட்டார மொழிநடையிலும், விவரணைகள் எழுத்துத் தமிழிலும் மாறி மாறி வரும்போது படிப்பதற்கு தொய்வில்லாமல் இருக்கும். இந்த நாவலை பொறுத்தவரையில் வட்டார மொழிநடை கொஞ்சம் ஓவர்டோஸ். குறிப்பிட்ட வட்டார மக்கள் விரும்பக்கூடும்.

சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் நாவலின் இடையே யாரோ ஒருவரை குத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் எடிமலை கதாபாத்திரம் எல்லாம் ரிட்டன் ஃபார்மட் சூரி என்றுதான் சொல்ல வேண்டும். முடியல. 

அப்புறம், மரண வீட்டு சடங்குகள் பற்றிய டீடெயிலிங். இதன் பின்னாலுள்ள எழுத்தாளரின் உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது. நிறைய விவரங்களை தேடித் தேடித் தொகுத்திருக்கக்கூடும். சில இடங்களில் ‘எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்கு செய்யுறது தாம்பா’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போவதை எளிமையாக கடந்துபோக முடியவில்லை. எதற்காக ஒரு எழுத்தாளர் சடங்காச்சாரங்களை பற்றியெல்லாம் எழுத வேண்டும் ? அந்த சடங்குகளுக்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை தெளிவு படுத்தினாலன்றி அதனை எழுதுவதால் என்ன பயன் ? என்று புரியவில்லை.

இரண்டு நாவல்களைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்வதென்றால் நகர்புறத்து கதைகளை விரும்புபவர்கள் இரவல் காதலியையும், கிராமத்து கதைகளை விரும்புபவர்கள் கொட்டு மொழக்கினையும் வாசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 December 2014

2014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒவ்வொரு வருடம் துவங்கும்போதும் சென்ற ஆண்டை விட அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன். இந்த வருடத்தை பொறுத்தவரையில் அதில் பாதியை கூட நிறைவேற்ற முடியவில்லை. இருக்கட்டும் அடுத்த வருடத்திற்கு கிடைத்துவிட்டது ஈஸியான டார்கெட்!


2014ல் நான் ரசித்த சில விஷயங்கள்...

நாவல்: உப்பு நாய்கள் – லக்ஷ்மி சரவணகுமார் 

சுஜாதா நாவல்கள்: ஆ, நில்லுங்கள் ராஜாவே

கட்டுரைத்தொகுப்பு: பாம்புத்தைலம் – பேயோன்

அபுனைவு: கிளியோபாட்ரா – முகில்

ஃபேஸ்புக் எழுத்தாளர்கள்: (வரிசைபடுத்தவில்லை)
VeeBaa Vee (ஃபேஸ்புக் அக்கவுண்டை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்).

பாடல்கள்: (வரிசைபடுத்தவில்லை)
கூட மேல கூட வச்சு – ரம்மி
விண்மீன் விழிகள் – தெகிடி
முன்னே என் முன்னே – சதுரங்க வேட்டை
போ இன்று நீயாக – வேலையில்லா பட்டதாரி
பாண்டி நாட்டு – ஜிகர்தண்டா
இறந்திடவா – மெட்ராஸ்
செல்ஃபி புள்ள – கத்தி
மழைக்காத்தா – ஒரு ஊருல ரெண்டு ராஜா
ஏய் மிஸ்டர்.மைனர் – காவியத்தலைவன்
போகும் பாதை – பிசாசு

பாடகர்: அந்தோணி தாசன் (பாண்டி நாட்டு, கண்ணம்மா)

பாடகி: வந்தனா ஸ்ரீநிவாசன் (கூட மேல கூட வச்சு, மழைக்காத்தா)

இசையமைப்பாளர்கள்: சந்தோஷ் நாராயன் (ஜிகர்தண்டா, மெட்ராஸ்), ஷான் ரோல்டன் (சதுரங்க வேட்டை)

படங்கள்: (வரிசைபடுத்தவில்லை)
தெகிடி
யாமிருக்க பயமே
சதுரங்க வேட்டை
ஜிகர்தண்டா
மெட்ராஸ்

நடிகர், நடிகையர்: (வரிசைபடுத்தவில்லை)
சாந்தினி (கோலி சோடா)
ஐஸ்வர்யா ராஜேஷ் (ரம்மி)
வாணீ கபூர் (ஆஹா கல்யாணம்)
அசோக் செல்வன் (தெகிடி)
ஓவியா (யாமிருக்க பயமே)
நடராஜ் (சதுரங்க வேட்டை)
பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
குரு சோமசுந்தரம் (ஜிகர்தண்டா)
ரித்விகா (மெட்ராஸ்)
ஹரி (மெட்ராஸ்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2014

ரத்தம் ஒரே நிறம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சுஜாதா நாவல்களை விரும்பி வாசிக்கிறேன் என்பதையும், ரத்தம் ஒரே நிறம் படித்ததில்லை என்பதையும் தெரிந்துகொண்ட நண்பர் செந்தில்குமார் (ஆரூர் மூனா அல்ல !) அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். முதற்கண் நன்றி செந்தில்குமாருக்கு. அவர் அனுப்பிய சமயத்தில் தற்செயலாக சீனு ரத்தம் ஒரே நிறத்தை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இருக்கலாம். ஆனால் இது என்னுடைய சிலபஸ் கிடையாது. நான் கொஞ்சம் ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், த்ரில்லர் போன்றவை வாசிக்க விரும்பும் ஆசாமி. ரத்தம் ஒரே நிறத்தின் கதைக்கரு என்னவென்று தெரிந்தபோதே எனக்கு அசுவாரஸ்யமாக ஆகிவிட்டது. புத்தகம் வேறு முன்னூறு பக்கங்களுக்கு மேல். பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டாயிற்று. 

புத்தகம் கையில் கிடைத்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் கழித்து மெதுவாக மனமுவந்து புத்தகத்தை பிரித்தேன். வடிவமைப்பை பொறுத்தவரையில் சுஜாதா புத்தகங்களில் மாஸ்டர்பீஸ் என்பதில் சந்தேகமே இல்லை. புக்மார்க் தான் கொஞ்சம் நைந்து போயிருந்தது. எனக்கெல்லாம் சரித்திர கதை என்றாலே மன்னர் கால கதை என்றுதான் எண்ணம். சுஜாதா அவ்வளவு தூரம் செல்லவில்லை. 1857ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தை அடிப்படையாக கொண்டு அதனோடு ஒரு தமிழ் சினிமா பாணி பழி வாங்கல் கதையையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில், ஆலப்பாக்கத்தில் வசிக்கும் முத்துக்குமரன் என்பவனுடைய தந்தையை ஆங்கிலேய லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி என்பவன் கொன்றுவிடுகிறான். முத்துக்குமரன் மக்கின்ஸியை பழி வாங்கத் திட்டமிடுகிறான். அங்கிருந்து கதை துவங்குகிறது. ஒரு பெண் ஒரு நல்மனம் படைத்த ஆண் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் அசம்பாவிதமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாக்கப்படுகிறாள். இதையே இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். ஒன்றுமில்லை, முத்துக்குமரன் – பூஞ்சோலை – ராக்கன், ஆஷ்லி – எமிலி – மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே மாதிரியாகவே பயணிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்கள் வரை இவர்களுடைய காதல் கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதன்பிறகு சிப்பாய் கலகத்திற்குள் மெதுவாக நுழைகிறது கதை. அதாகப்பட்ட சிப்பாய்க் கலகம் என்பது என்னவென்றால் ஆங்கிலேயர்களின் என்ஃபீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பை பயன்படுத்தினார்கள். இதனை உபயோகிக்கும் பொருட்டு கடிக்க வேண்டும் போல தெரிகிறது. இயல்பில் புலால் மறுக்கும் பிராமண சிப்பாய்களும், பன்றி இறைச்சி உட்கொள்வதை பாவமாக நினைக்கும் இஸ்லாமிய சிப்பாய்களும் எதிர்க்கிறார்கள். அதாவது பன்றி கொழுப்பை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.

ஒரு கதை அல்லது நாவலை படிக்கும்போது அதன் கதை மாந்தர்களுக்கென ஒரு உருவத்தை நம் மனம் தானாகவே வரைந்துகொள்ளும் இல்லையா...? முத்துக்குமரன் என்ற கதையின் நாயகன் பெயரை படித்ததும் சட்டென ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் கண்களில் தெரிகிறார். அடுத்து எமிலி. சந்தேகமே இல்லாமல் எமி ஜாக்சனை நினைவூட்டுகிறார். சில காட்சிகள் மதராஸபட்டினத்தை நினைவூட்டுகிறது. பைராகி ஏனோ பிரேமானந்தாவாக தெரிகிறார். 

நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போல செல்கிறது ரத்தம் ஒரே நிறம். கதையின் நாயகன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். நம்பமுடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். பூஞ்சோலை ஆண் வேடமணிகிறாள். பைராகி என்கிற சித்தர் கதாபாத்திரம் வேறு.

ஏராளமாக உழைத்திருக்கிறார் சுஜாதா. கூகுள் பரிட்சயமில்லாத கால கட்டத்திலேயே நிறைய தகவல்களை திரட்டி எழுதியிருக்கிறார். படிக்கும்போது சாதாரணமாக தெரியக்கூடிய ஒரு பத்தியை எழுதுவதற்கு கூட நிறைய உழைப்பை செலவிட்டிருக்கிறார். முட்டை நடனம் என்ற ஒன்றை கூத்து கலைஞர்கள் செய்வதாய் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. அது பற்றிய விவரணையாக ஆங்கில புத்தகம் ஒன்றின் பெயரை கடைசி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் குமார் எனக்கு அனுப்பி வைத்த பிரதியின் முதல் பக்கத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஒருவர் நமக்கு பரிசளித்த பொருளை நாம் மற்றவருக்கு பரிசளிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த புத்தகம் ஒரு தவறான கைகளுக்கு கிடைத்திருப்பதில் எனக்கு வருத்தம் உள்ளது. இந்த நாவலை என்னிடமிருந்து இரவலாக பெற்று யாரேனும் படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

ரத்தம் ஒரே நிறம்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
342 பக்கங்கள்
ரூ.260

என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

10 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 10022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் ஆசீர்வாதம். பெயரே அதுதான். கடவுள் மறுப்பாளர். என்னை செதுக்கியதில் அவருக்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு. படித்து முடித்தபிறகு எல்லா வாத்தியார்களோடும் தொடர்பு விட்டுப் போயிற்று. அதாவது நான் விடுபட்டுக் கொண்டேன். பொதுவாகவே எனக்கு வாத்தியார்கள் மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் கூட அதனைவிட பயம் சற்று கூடுதலாக இருக்கும். வாத்தியார்கள் யாரேனும் பெயரைச் சொல்லி அழைத்தாலே கை, காலெல்லாம் உதற ஆரம்பித்துவிடும். அது மட்டுமில்லாமல் இன்னும் நீ கழிசடையாத்தான் இருக்கியா...? என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது. அதனால் வாத்தியார்களை எல்லாம் சந்தித்து பேசுவதோ, தொடர்பிலிருப்பதோ கிடையாது. ஆனால் மனதளவில் என்றும் தொடர்பிலிருப்பேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆசீர்வாதம் வாத்தியாரைப் பற்றி கூட ஏற்கனவே என்னுடைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். தற்சமயம் ஃபேஸ்புக் வந்துவிட்டதால் பழைய வாத்தியார்களை தேடிப் பார்த்தேன் ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தார். ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதர் அந்த காலத்திலேயே, அதாவது சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே ‘பென் ஃப்ரெண்ட்’ என்ற பதத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர், படிப்பு தாண்டி சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய பேசுவார். நட்பு கோரினேன், ஏற்றுக்கொண்டார். அவருடைய ஃபேஸ்புக் பயன்பாடு அப்படியொன்றும் எதிர்பார்த்த வகையில் இல்லை. தமிங்கிலத்தில் வேறு எழுதிக்கொண்டிருந்தார். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென சாட்டுக்கு வந்து ‘என்னை நினைவிருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்தது. தற்சமயம் நான் ஒரு தமிழ் வலைப்பதிவர் என்று பெருமையாக சொல்லிக்கொண்டேன். அவருக்கு அது புரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. நான் அவருக்கு கொஞ்சம் சிரமப்பட்டு விளக்கிக் கொண்டிருக்கும்போதே ‘விருப்பப்பட்டால் தொடர்பு கொள்ளவும்’ என போன் நம்பரை அனுப்பி விட்டார். எனக்கு அப்போது வழக்கம்போல உதறல் தொடங்கிவிட்டது. சங்கடமான சூழ்நிலை. அழைப்பதற்கு பயம். அழைக்காமல் விட்டாலும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும். சிறிது நேர மனப்போராட்டத்திற்கு பிறகு அழைத்தேன். அவருக்கு என்னை அவ்வளவாக நினைவில்லை. என்னுடைய தந்தையின் பெயர், அவரிடம் தனிவகுப்பு படித்தது, அவர் என்னிடம் ஆசிரியரைப் பற்றி கேட்டு நான் பள்ளிக்கூட ஆசரியர் என்று புரிந்துகொண்டது எல்லாம் சொன்னபிறகு நினைவுக்கு கொண்டு வந்தார். இணையத்தில் தமிழில் எழுதத் தெரியவில்லை என்றார். அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை என்று வழிமுறைகளை கூறினேன். ஒரு வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதியைப் போல அவருடைய கணினியில் கூகுள் ட்ரான்ஸ்லிட்ரெட் மென்பொருளை நிறுவ படிப்படியாக சொல்லிக்கொடுத்தேன். சிறிது நேரத்தில் தமிழ் டைப்பிங் கற்றுக் கொடுத்தாயிற்று. எனக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு நான் சொல்லிக்கொடுப்பது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அது மட்டுமில்லை. இன்னொரு பெருமையும் எனக்காக காத்திருக்கிறது. அவர் இரண்டு கவிதை புத்தகங்கள் எழுதியிருப்பதாகச் சொல்லி அதனை மின்புத்தக வடிவில் மாற்றித் தரும்படி கேட்டிருக்கிறார். அவர் எழுதிய கவிதை புத்தகங்கள் கவியாழித்தனமாக இருக்கும் என்பது எனக்கு திண்ணமாக தெரியும். இருக்கட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. ஆனால் அவருக்காக அதையும் செய்து தர போகிறேன். ஆசீர்வதிக்கப்பட்டதை போல உணர்கிறேன்...!
*
ஆசீர்வாதம் வாத்தியார் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்வத்தை புனைந்து ஏற்கனவே ஒருமுறை எழுதியிருந்தேன். அது மீள் பிரசுரமாக :- வாத்தியார் ஒருநாள் மாணவர்களிடம் தன் கவலையை புலம்பிக்கொண்டிருந்தார். லீவு அன்னைக்காவது டிவியில் ஏதாவது உருப்படியாக பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். என் மனைவியின் சர்வாதிகாரத்தில் ரிமோட் அவளுடைய கைகளுக்கு மாறிவிட்டது. புதுப்படம் போடுறாங்க பேசாம பாருங்க என்று மனதை திருடிவிட்டாய் என்ற படத்தை வைத்தார். அதில் சம்பந்தமே இல்லாமல் திடீர்ன்னு மஞ்சக்காட்டு மைனான்னு ஒரு பாட்டு வருது (தலையில் அடித்தபடி) விதியே என்று பார்த்துக்கொண்டிருந்தபோது பாடலின் இடையில் தெரியாத்தனமாக கவிஞர் அருமையா ஒருவரி எழுதியிருக்குறான் பாருங்க... பூக்கள் பொதுக்குழு கூட்டும்... உன்னை தலைமை தாங்கக்கேட்கும்...என்று லைட்டாக ரொமாண்டிக் மூடுக்கு தாவினார். உடனே நம்மாளு ஒருத்தன் எழுந்து சார் அதே பாட்டுல இன்னொரு வரிகூட நல்லாயிருக்கும்ன்னு சொன்னான். ஆர்வத்துடன் அவன் சொன்னதை கேட்ட வாத்தியார் அடுத்த நொடியே வன்முறை மூடுக்கு மாறி அவனுடைய முதுகில் கொத்துபரோட்டா போட்டுவிட்டார். அவன் குறிப்பிட்ட வரிகள் - கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு...”.
*
படவா... கடைசி ரெண்டு போஸ்டுல ஐஸ்வர்யாவைப் பத்தி ஜொள்ளு விட்டிருக்குற... இப்ப என்னடான்னா வாத்தியாரு, மஞ்சக்காட்டு மைனா'ன்னு மொக்கை போட்டுக்கிட்டு இருக்குற... நான் ஒருத்தி இருக்குறதே உனக்கு மறந்து போச்சுல்ல...!
*
Freaks படம் பற்றியும், அதில் காட்டப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அதுகுறித்து மேலும் சில வரிகள். அப்படத்தில் ஜோஸஃபீன் ஜோஸப் என்றொரு கதாபாத்திரம். இவர் ஒரு இருபாலின உடலி. (Hermaphrodite என்ற பதத்தை தோராயமாக மொழி பெயர்த்தேன். தவறென்றால் மன்னிக்கவும்). அதாவது இவருடைய உடலை செங்குத்தாக பகுத்தால் ஒரு புறம் பெண்ணாகவும், மறுபுறம் ஆணாகவும் இருப்பார். ஆனால் ஜோ.ஜோ உண்மையாகவே இருபாலின உடலி என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

சில சமயங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டும்பொருட்டு ஆண்களே இருபாலின உடலிகளாக சித்தரிக்கப்படுவார்கள். அதாவது ஒரு புறத்தில் மட்டும் ரோமங்களை மழித்து, உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்கோப்பாகவும், மறுபுறம் தொள தொளவென பெண்ணின் மார்பகத்தை போல வளரவிட்டு, ஒருபுறம் ஆணின் ஆடைகளையும் மறுபுறம் பெண்ணின் ஆடைகளையும் அணிந்துக்கொள்வார்களாம். ஜோஸஃபீன் ஜோஸப்ப்பும் அந்த மாதிரி ஒருவராக இருக்கலாம். 

Freaks படத்தின் ஒரு காட்சியில் ஜோஸஃபீன் ஒரு ஆடவரை குறுகுறுவென பார்த்தபடி கடந்துசெல்வார். உடனே அந்த ஆடவருக்கு அருகிலிருப்பவர், ஒருவேளை அவளுக்கு உன்னை பிடிக்கிறது ஆனால் அவனுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்று கமெண்ட் அடிப்பார்.
*
அடிக்கடி சுஜாதா நாவல்களைப் பற்றி எழுதுவதை பார்த்துவிட்டு நண்பர் செந்தில்குமார் சாட்டில் வந்து ரத்தம் ஒரே நிறம் படித்திருக்கிறீர்களா...? என்று கேட்டார். படித்ததில்லை என்று சொன்னதுதான் தாமதம். கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று சொல்லி என்னுடைய விலாசத்தை வாங்கி புத்தகத்தை அனுப்பவே செய்துவிட்டார். அவர் அனுப்பிய புத்தகங்கள் கையில் கிடைத்த நேரத்தில் ஒத்திசைவாக சீனு அதனை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று எழுதிய கட்டுரை படிக்கக் கிடைத்தது. சரித்திர நாவல் என்று தெரிகிறது. சுஜாதா – சரித்திரம் என்ற சேர்க்கையே ஆர்வத்தீயை கிளப்பிவிட்டாலும் அர்பணித்து படிக்க தொடர்ச்சியான சில மணிநேரங்கள் தேவைப்படுகின்றன. தற்சமயம் செந்தில்குமார் அனுப்பிய மற்றொரு சுஜாதா நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பெயர் – ஆ...!
*
யாரோ ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் சுரேஷ் பீட்டர்ஸை பற்றி நல்லவிதமாக எழுதி கீழ்காணும் பாடலை பகிர்ந்திருந்தார். அப்படியென்ன இருக்கிறது என்று எட்டிப்பார்த்தேன். அவ்வளவுதான், பாடல் தனக்குள் என்னை வசமாக இழுத்துக் கொண்டது. வித்தியாசமான இசை, நடனம், உடைகள், அதனுடன் ஸ்வர்ணலதாவின் குரல், மீனா எல்லாமுமாக சேர்ந்து காணொளியாகவே தரவிறக்கி அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாடலின் இறுதியில் வரும் நாதஸ்வர இசையை கத்தரித்து என்னுடைய மொபைலில் ரிங்டோனாக வைத்துக்கொண்டேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 January 2014

வாசித்தவை - 1

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புக் மார்க்ஸ்
புத்தகக்காட்சி முடிந்த கையோடு முதலில் துவங்கிய புத்தகம். எழுத்தாளர்களைப் பற்றியும், புத்தகங்களை பற்றியும் சுவாரஸ்யமான துணுக்குகள் அடங்கிய தொகுப்பு. ‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது...?, சீத்தலை சாத்தனார் பெயர்க்காரணம், தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் என நிறைய தகவல்கள், சுவையான நிகழ்வுகள், ஆதாரங்களோடு. சீவக சிந்தாமணியில் வரும் தாமரைக் கண்ணால் பருகினார்கள் என்ற சொற்றொடரைப் பற்றிய பத்தி மாஸ்டர் பீஸ்...!

சில கைவினைப் பொருட்கள் பார்ப்பதற்கு அப்படியொன்றும் சிறப்பாக இருக்காது. ஆனால் அது அதிக உழைப்பில் உருவாகியிருக்கும். அதுபோல புக் மார்க்ஸ் பெரிய ஆரவாரங்கள் ஏதுமில்லாத புத்தகம் என்றாலும் அத்தனை தகவல்களை தொகுக்க என்.சொக்கன் எத்தனை புத்தகங்களை படித்திருப்பார் என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. 

புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

தமிழா! நீ ஒரு இந்துவா?
பொதுவாக எனக்கு பிரசார வகைமை புத்தகங்களின் மீது ஈடுபாடு கிடையாது. நண்பர் ஒருவர் கேட்டிருந்ததால் தமிழா நீ ஒரு இந்துவா என்ற புத்தகத்தை தேடி, அது எங்கேயும் கிடைக்கவில்லை. திடல்லயே இல்லையாம்...! புத்தகக்காட்சிக்கு சென்றிருந்தபோது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தில் இருக்கிறதா என்று ஒரு வார்த்தை கேட்டுப்பார்த்தேன். உடனடியாக கிடைத்துவிட்டது.

சங்ககாலத்திலிருந்து தமிழனின் வழிபாட்டு முறைகள், பிரிவுகள் (சாதிகள் அல்ல), திருமண முறைகள் என்று துவங்கி ஆரியர்களின் வருகை, அவர்களுடைய வளர்ச்சி, தமிழனின் வழிபாட்டு முறைகள் கடவுள் வழிபாடாக மாறியது என்று அறுபத்தைந்து பக்கங்களில் தேவையற்ற தகவல்கள் ஏதுமின்றி நீட்டாக சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் சங்ககால பாடல்களை ஆதாரங்களாகக் கொண்டும் விளக்கியிருக்கிறார். அதன்பிறகு மனுஸ்மிருதியில் உள்ள சமஸ்கிருத வேதங்களை தமிழில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். நான் ஹிந்து தமிழன் என பெருமை பொங்க சொல்லிக்கொள்பவர்கள் படிக்க வேண்டிய நூல்.

தமிழா! நீ ஒரு இந்துவா? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும்
இதுவும் கிட்டத்தட்ட முந்தய புத்தகத்தை போன்றது தான். தமிழர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்திருக்கிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் மிகவும் குறைந்த அளவில் ஆதாரங்களை வைத்துக்கொண்டு, பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், லெமுரியா,  சுமேரியா, மினோயன் நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் எல்லாமே அடிப்படையில் தமிழ் நாகரிகம் தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சமாகிப் போய்விட்டது. கிரேக்க கடவுள்களையும் ஹிந்து கடவுள்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் பகுதி கொஞ்சம் ரசிக்க வைத்தது. சுஜாதா விருது பெற்ற நூல் என்று கேள்விப்பட்டேன். ஒன்றும் சொல்வதற்கில்லை.

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும் – பா.பிரபாகரன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.125 – ஆன்லைனில் வாங்க

கி.பி.2087இல்...
நான் சிறுவனாக இருந்த சமயத்தில் வெளிவந்த சிறுவர்களுக்கான அறிவியல் புனைகதைகள் அடங்கிய நூல். ஒருவேளை நூல் வெளியான சமயத்திலேயே வாசித்திருந்தால் விரும்பியிருக்கக்கூடும். பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் நான்கைந்தை கூட முழுமையாக வாசிக்கவில்லை. 

கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25

திசை கண்டேன் வான் கண்டேன்
வாத்தியாருடைய சயின்ஸ் ஃபிக்ஷன். நோரா என்ற கிரகத்தினர் விண்வெளியில் ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக பூமியை அழிக்க திட்டமிடுகிறார்கள். அது குறித்து பூமியின் தலைமையகத்திற்கு தகவல் சொல்லும்பொருட்டு பாரி என்னும் நோராவாசியும் அவனுடைய வாகனமும் பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு பூமியின் எதிர்ப்பு நடவடிக்கை என்ன...? பூமி அழிந்ததா தப்பித்ததா...? என்பது கதை. மளமளவென வாசிக்க முடிந்தது. எனினும், இயந்திரா, ஜீனோ, சொர்க்கத்தீவு போன்ற அளவிற்கு ஈர்க்கவில்லை.

திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா - கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment