11 June 2018

பிரபா ஒயின்ஷாப் – 11062018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சரவணன் சந்திரன், லஷ்மி சரவணக்குமார் மற்றும் இவ்வருட பு.கா.வின் சூப்பர் ஸ்டார் தமிழ்ப் பிரபா என்று படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய பட்டியலில் இருக்கின்றன. இருப்பினும் கிண்டிலில் அவ்வப்போது இலவசமாகக் கிடைக்கும் சில நூல்களை படிப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது.

முக்கியமாக இவ்வகை நூல்கள் மீதுள்ள ஈர்ப்புக்கு காரணம் இவற்றை எழுதுபவர்கள் செய்யும் பரிட்சார்த்த முயற்சிகளே. உதாரணமாக சமீபத்தில் படித்த மாயுத்ரி (கிண்டில் வடிவ நாவல்). மாயுத்ரி என்பது பண்டைய லெமூரிய பேரரசு. வரலாற்று கற்பனை நாவல் ! ஆசிரியரைப் பற்றிய குறிப்பு அதனினும் சுவாரஸ்யம். பெயர் ஆதித்யா, வயது 16. ஆசிரியரின் முதல் நாவல். குறுகிய கால சலுகையாக விலையில்லாமல் கிடைத்ததால் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன்.

கதைப்படி தமிழகத்தை களப்பிரர்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் தமிழகத்திற்கு தெற்கே லெமூரியாவில் மாயுத்ரியின் அரசு. அறிவும் ஆற்றலும் கொண்ட படைத்தளபதி ஆருத்ரா கதையின் நாயகன். மாயுத்ரியின் எல்லையில் ரோகில்லர்கள் என்கிற கொள்ளையர்கள் கூட்டம். ஒரு கட்டத்தில் ரோகில்லர்கள், களப்பிரர்களுடன் சேர்ந்து மாயுத்ரி மீது போர் தொடுக்க முடிவெடுக்கின்றனர். அதனை படைத்தளபதி ஆருத்ரா எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதே கதை. அக்காலகட்டத்திலேயே மாயுத்ரி அரசு பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் சாதனங்களை வைத்திருந்தன என்கிற ரீதியில் கதை போகிறது. இடையிடையே படைத்தளபதி ஆருத்ரா - காதலி புகழினி ரொமான்ஸ் காட்சிகள்.

கொஞ்சம் எழுத்துப்பிழைகள் மற்றும் அவ்வப்போது ஞாபக மறதியில் எழுதிய கொச்சைத் தமிழ் (செவிள்லயே ஒன்னு விட்டார்) தவிர்த்து பாதகமில்லா லைட் ரீடிங் குறுநாவல். அறுபது நிமிட வாசிப்பில் முடித்துவிடலாம். என்னுடைய கணிப்பு சரியென்றால் இந்நாவல் பாகுபலி திரைப்படம், விகடனின் சந்திரஹாசம் மற்றும் அமிஷ் திருபாதியின் ஷிவா முத்தொகுதி நூல்களின் பாதிப்பில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் என்று சொல்லப்படும் தம்பி ஆதித்யாவின் ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப் பார்த்தேன். மாயுத்ரியை நிஜமாகவே இவர்தான் எழுதியிருப்பார் என்று எனக்கு நம்பிக்கையில்லை. பதினாறு வயது சிறுவன் சரித்திர நாவல் எழுதக்கூடாது / முடியாது என்றில்லை. ஆனால் ஒருவன் நூறு பக்க நாவல் எழுதுகிறான் என்றால் அவன் அதற்குமுன் ஆயிரம் பக்க குப்பைகளையாவது எழுதியிருக்க வேண்டும். சாதித்து விட்டோம் என்கிற கர்வம் கொஞ்சமாவது இருக்க வேண்டும். பள்ளியில் / லோக்கல் இலக்கிய மன்றத்தில் ஏதாவது பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும். ஆதித்யாவின் பக்கத்தில் இருப்பவை எல்லாம் சில்லறை / ஆர்வக்கோளாறு பதிவுகள் மட்டும்தான். ஒருவேளை என் சந்தேகத்தை மீறி நிஜமாகவே ஆதித்யா இந்நாவலை எழுதியிருந்தால் அது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

மாயுத்ரி தற்போது சலுகைக்காலம் முடிந்து நூறு ரூபாய் விலையில் அமேஸானில் (கிண்டில் வடிவம்) கிடைக்கிறது.

**********

சமீபத்தில் படித்த இன்னொரு இலவச கிண்டில் நூல் – யாரோ (ஆசிரியரின் பெயரே அதுதான்) எழுதிய சரித்திரம் பேசுகிறது (முதல் பாகம்). ஆசிரியரின் பெயரைத் தவிர்த்து இது முந்தைய நூலைப் போல பின்னணியில்லா தனி மனிதனின் படைப்பல்ல. குவிகம் என்றொரு சிற்றிதழ் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் சார்பாக அவ்வப்போது இலக்கியக் கூட்டங்கள் கூட நடைபெறுகின்றன. அவ்விதழில் எழுதப்பட்ட சரித்திரம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அச்சுப்பிரதி கண்டிருக்கிறது என நினைக்கிறேன். இப்புத்தகத்தில் புதிய சில தகவல்களும், ஆச்சர்யங்களும் கிடைக்கின்றன.

உதாரணத்திற்கு, ராமாயணத்தின் வெவ்வேறு வடிவங்கள் பற்றிய ஒரு கட்டுரை. ராமாயணத்தின் ஆதிவடிவத்தை வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதினார். அதன்பிறகு துளசிதாசர் எழுதியது, தமிழில் கம்பர் எழுதியது உட்பட ஏறக்குறைய முன்னூறு விதமான ராமாயணங்கள் உள்ளன என்கிறார். அவற்றுள் சிலவற்றில் சீதைக்கு ராமன் சித்தப்பாதானாம். பெளத்த ராமாயணத்தில் புத்தரின் முன்பிறவி அவதாரம் ராமன். சீக்கிய வடிவத்தில் ராமன் ஒரு புரட்சியாளர், கடவுளெல்லாம் இல்லை. சமண வடிவத்தில் ராமனுக்கு நான்கு மனைவிகள். மலேசிய வடிவத்தில் ராமனை விட லக்ஷ்மணனுக்கு முக்கியத்துவம் உள்ளது. தாய்லாந்து வடிவத்தில் சீதை ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த மகள் என்று நீள்கிறது அந்த கட்டுரை. பிற்சேர்க்கையாக இக்கட்டுரையில் காலாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இன்னொரு கட்டுரை புத்தர் காலத்தில் வாழ்ந்த ஆம்ராபலி என்ற பெண்ணைப் பற்றியது. கி.மு. 500 சமயத்தில் வைசாலி நாட்டில் (தற்போதைய பிஹார்) வாழ்ந்த பேரழகி ஆம்ராபலி. அவரை மணந்துகொள்ள பல செல்வந்தர்களும் இளவரசர்களும் போட்டி போட்டார்கள். பழங்கால இந்தியாவில் நகர்வது (நகரத்தின் மணப்பெண்) என்கிற முறை இருந்தது. அதன்படி நாட்டின் அழகான பெண் அனைவருக்கும் பொது. புரியும்படி சொல்வதென்றால் செல்வந்தர்கள், மன்னர்கள், இளவரசர்கள் மற்றும் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் (காரணம் நகர்வதுகளின் ஒருநாள் விலை அதிகம்) என யார் வேண்டுமானாலும் அவரோடு உறவு கொள்ளலாம். ஆம்ராபலியை அடைய முயன்று முடியாமல் போன வைசாலியின் மன்னன் மனுதேவ் அவரை நகர்வதுவாக அறிவித்தார். 

பின்னாளில் ஆம்ராபலியின் அழகைப் பற்றி மகத நாட்டு மன்னர் பிம்பிசாரர் கேள்விப்பட்டு, ஆம்ராபலிக்கு பிம்பிசாரர் மூலமாக ஒரு மகன் பிறக்கிறான். அதே பிம்பிசாரரின் மகன் அஜாதசத்ரு (வேறொரு மகாராணிக்கு பிறந்தவர்) ஆம்ராபலியின் மீது கொண்ட காதலினால் வைசாலியின் மீது போர் தொடுத்து, அந்நகரத்தையே எரித்து ஆம்ராபலியை விடுவித்தான். ஆனால் ஆம்ராபலியோ அஜாதசத்ருவின் காதல், அவர் பெற்றுத்தந்த விடுதலை இரண்டையும் ஏற்கவில்லை. 

ஒருமுறை ஆம்ராபலி வசித்த ஊருக்கு புத்த துறவி ஒருவர் வந்திருந்தார். ஆம்ராபலி அவரைச் சென்று சந்தித்தார். தன்னுடைய அழகை சற்றும் சட்டை செய்யாத துறவியின் குணம் ஆம்ராபலிக்கு திகைப்பூட்டியது. ஆம்ராபலி அவரை தன் அரண்மனைக்கு விருந்தினராக அழைத்தார். அவரோ என் குருவிடம் அனுமதி கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு மாம்பழத்தை கொடுத்து தான் வரும்வரை அதனை கெடாமல் பார்த்துக்கொள்ளும்படி கூறுகிறார். நாட்கள் கடக்கின்றன. குருவிடம் அனுமதி பெற்றபிறகு துறவி வருகிறார். ஆம்ராபலியிடம் மாம்பழத்தை கேட்கிறார். அது அழுகியிருந்தது. அதனுள்ளிருந்து மாங்கொட்டையை பிரித்தார். பழம் – உடல். அழியக்கூடியது. கொட்டை – ஆன்மா. ஒரு புதிய மரத்திற்கு வித்தாகக்கூடியது என்பதை விளக்கினார். ஆம்ராபலி பேச்சிழந்தார். தொடர்ந்து அத்துறவி நான்கு மாதங்கள் ஆம்ராபலியின் விருந்தினராக தங்கியதில் ஆம்ராபலி புத்த சமயத்தில் சேர விரும்பினார். அப்போது புத்த சமயத்தில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. அது துறவிகளின் தவ வாழ்க்கையில் சலனம் ஏற்படுத்தலாம் என்பதற்காக. ஆனால் ஆம்ராபலியின் மனதிடத்தைக் கண்ட புத்தர் பெண்கள் சமயத்தில் இணைய அனுமதியளித்தார். ஆம்ராபலி புத்தப்பிக்ஷினி ஆனார்.

ஆம்ராபலியாக வைஜெயந்திமாலா
ஹிந்தி சினிமாவில் ஆம்ராபலி 1966ம் ஆண்டு வைஜேந்தி மாலாவின் நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் ரீமேக் உரிமை ஷாருக்கானின் ரெட் சில்லீஸிடம் உள்ளதால் சீக்கிரமாக தீபிகா படுகோனை ஆம்ராபலியாக பார்த்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை.

குவிகம் பதிப்பகத்தின் சரித்திரம் பேசுகிறது முதல் பாகம் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அமேஸானில் இலவசமாகக் கிடைக்கிறது. குறுகிய காலச் சலுகை !

**********

சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஹயாத் ஹோட்டலில் கூகுள் தமிழ் ஆட் சென்ஸ் பற்றிய கூட்டம் நடந்தது. அதன் இரண்டாவது நிகழ்வு கடந்த சனியன்று கோவிலம்பாக்கத்தில் உள்ள ஸோன் ஹோட்டலில் நடைபெற்றது. வீட்டிலிருந்து சுமார் முப்பது கி.மீ. தூரம். கூடவே திருமண வாழ்க்கைக்குப் பிறகு கிடைக்கும் நிபந்தனை சுதந்திரத்தை இதுபோன்ற மொக்கை நிகழ்வுகளுக்கு வீணாக்கக்கூடாது என்று நினைத்தால் விதி விடுவதாக இல்லை. சென்ற நிகழ்வில் இரண்டு வேளை உணவு, இரண்டு வேளை ஸ்நாக்ஸ் என்று தடபுடலான விருந்து கொடுத்தது எனது மனதை சலனப்படுத்தியது. ஆனால் இம்முறையோ மிகச்சிறிய அரங்கு. ஐம்பது பேர் தாராளமாக உட்காரக்கூடிய அந்த அரங்கில் நூற்றியைம்பது பேர் சேர்ந்துவிட்டார்கள். அதே அரங்கிலேயே ஹை-டீ. அசைவம் கிடையாது. வெஜிடபிள் சான்ட்விச், கொஞ்சம் வெங்காயப் பகோடா, சில பட்டர் பிஸ்கட்டுகள். அவ்வளவுதான். இடைவேளை முடிந்ததும் நைஸாக அரங்கிலிருந்து வெளியேறினோம்.

சென்னையில் இதுவரை வாசகசாலை நிகழ்வுகள் ஐம்பதுக்கும் மேலே நடந்திருக்கின்றன. திடலில் திராவிடம் 2.0 சில கூட்டங்கள் நடந்துவிட்டன. அவற்றில் எல்லாம் கலந்துகொள்ள முயலாமல் இதுபோன்ற மொக்கை நிகழ்வுக்கு சென்று வெங்காய பகோடாவை சாப்பிட்டுவிட்டு வருவது கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகத்தான் இருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

Ponmahes said...

அருமையான பதிவு....... வாழ்த்துகள் தம்பி......