Showing posts with label comedy. Show all posts
Showing posts with label comedy. Show all posts

20 November 2013

Nuances of யாருக்கு யாரோ ஸ்டெப்னி !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

யாருக்கு யாரோ ஸ்டெப்னி என்கிற உன்னதமான சினிமா 2007ம் ஆண்டு வெளிவந்தபோது அதனை ரசிகர்கள் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. திரை மொழியை மிகச்சரியாக புரிந்துக்கொண்டு காட்சிகளின் மூலம் பல தகவல்களையும் சிந்தனைகளையும் குறியீடுகளாக உணர்த்திய அத்திரைப்படத்தை தமிழர்களால் எளிதாக புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். அவைகளை விளக்கும் பொருட்டு இதோ என்னுடைய கோனாரு உரை !

- முதலில் படத்தின் தலைப்பு. படத்தின் கதைக்கருவான முக்கோண காதலை குறிக்கும்படி ‘யாருக்கு யாரோ’ என்ற பதத்தையும், காருக்கு பின்னால் உள்ள ஸ்டெப்னி என்பதோடு சேர்த்து மிக பொருத்தமாக ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி ?’ என்று சூட்டியிருக்கிறார்கள். தலைப்பில் ஸ்டெப்னி என்ற சொல் கதை நாயகிகளை குறிக்கிறது. பெண்களை ஸ்டெப்னி என்று குறிப்பிட்டு இழிவு படுத்தியிருப்பதாக எண்ணுதல் தவறு. கதைப்படி நாயகன் டேவிட்டின் கனவு கார் தொழிற்சாலை அமைப்பது. அவ்வாறாக கார் என்பது டேவிட்டின் வாழ்க்கையோடு ஒன்றியிருக்கிறது. காருக்கு பிற்பகுதியில் ஸ்டெப்னி இருக்கிறது. அதுபோல டேவிட் என்ற மனிதனுக்கு பின்னால், அவனுடைய வெற்றிக்கு பின்னால் இருக்கக்கூடிய பெண்ணை ‘ஸ்டெப்னி’ என்று சுட்டிக்காட்டுகிறார்.

- அடுத்தது படத்தலைப்பு திரையில் தோன்றிய விதம். வெகுஜன சினிமாக்களில் தோன்றுவது போல ரகளையான கிராபிக்ஸ் எல்லாம் இல்லை. மிக ரம்மியமான பின்னணி இசையினூடே தலைப்பு தோன்றுகிறது. முக்கியமாக கவனிக்க வேண்டியது, ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி’ என்ற தலைப்பு திரையில் அலைபாய்ந்தபடி தோன்றுகிறது. அது டேவிட்டுடைய மனது தீபா, ஜோதி காதல்களுக்கிடையே அலைபாய்வதற்கான குறியீடு. தலைப்பில் ‘ஸ்டெப்னி’ என்ற சொல் ஆங்கிலத்தில் ‘STEPNEE’ என்று காட்டப்படுகிறது. உண்மையில் அந்த வார்த்தையுடைய ஸ்பெல்லிங் ‘STEPNEY’ என்று இயக்குநருக்கு தெரியாமலா இருந்திருக்கும். டேவிட் வாழ்க்கையின் வெற்றிப்படிக்கட்டுகளின் STEP NEE என்பதனால் அப்படி காட்டியிருக்கிறார்.

- கதையின் நாயகன் டேவிட்டின் அறிமுகக்காட்சி. தீபாவின் கழுத்துச்சங்கிலியை சமூக விரோதிகள் பறித்துக்கொண்டு பைக்கில் பறக்கின்றனர். அந்த நேரம் பார்த்து அங்கே டேவிட் வருகிறார். கீழே விழுந்து கிடக்கும் தீபாவை பொருட்படுத்தாமல் திருடர்களை துரத்துகிறார். இக்காட்சியின் மூலம் டேவிட் உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை காட்டிலும் தர்க்கரீதியாக சிந்திப்பதை விரும்புபவன் என்று ரசிகர்கள் மனதில் பதியப்படுகிறது. கூடவே, அவனுடைய அபார நினைவாற்றல், துறை சார்ந்த அறிவு, இசை நாட்டம், கொடை பண்பு போன்றவற்றையும் நேர விரயம் செய்யாமல் எளிமையாக சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

- படம் முழுக்க கருப்பு நிறத்தை அறிவின் குறியீடாகவும், சிகப்பு நிறத்தை அன்பின் குறியீடாகவும் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். டேவிட் கருப்பு நிற ஸ்கூட்டியையும், தீபா சிகப்பு நிற ஸ்கூட்டியையும் பயன்படுத்துகிறார். அதே சமயம் டேவிட் தீபாவின் மீதும், செயின் திருடர்கள் மீதும் அன்பு செலுத்தும் காட்சிகளில் சிகப்பு நிற சட்டை அணிந்து தோன்றுகிறார். தீபாவும் அன்பை வலியுறுத்தும் பாடலோடு தான் அறிமுகமாகிறார். முக்கியமான காட்சிகள் அனைத்திலும் சிகப்பு நிற உடையணிந்து வருகிறார். மற்றொரு நாயகியான மஞ்சு, கனடாவிலிருந்து சிகப்பு நிற காரில் வந்து இறங்குகிறார். டேவிட்டும் மஞ்சுவும் உணர்வுகளால் சங்கமிக்கும் காட்சியில் இருவரும் சிகப்பு நிற உடை அணிந்துள்ளனர்.

- என்னதான் கதை கார், காதல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அதன் கரு மதநல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘யாருக்கு யாரோ’ என்ற தலைப்பினைக் கூட யாருக்கு யாரோ கடவுளாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று குறிப்பதாக புரிந்துக்கொள்ளலாம். ஹிந்துப்பெண் தீபா கிறிஸ்தவ துதிப்பாடலை பாடுவதாக படம் துவங்குகிறது. மற்றொரு காட்சியில் கிறிஸ்தவரான டேவிட்டை பார்த்து ‘கண்ணா, நீ எங்கே...?’ என்று தீபா பாடுகிறார். டேவிட் அணிந்துள்ள சிலுவை குறியீடு கொண்ட சங்கிலியை தீபாவுக்கு கொடுக்கிறார். இந்த சிலுவை டாலர் தான் படத்தின் உயிர்நாடி...! எப்படி என்பதை பின்னால் பார்க்கலாம்.

- பாடல்கள், அதில் நடிகர் / நடிகை வெளிப்படுத்தும் நடனம் அருமையானதொரு வாழ்க்கை தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற்றுவிட்டால் ஓவராக ஆட்டம் போடக்கூடாது அல்லவா ? அதை உணர்த்தும்பொருட்டு அளவாக ஆடுகிறார் டேவிட். வாழ்க்கை எத்தனை எளிமையானது என்பதை உணர்த்துவதற்காகவே டேவிட் மிகவும் எளிமையான நடன அசைவுகளை செய்து காட்டுகிறார் என்று புரிந்துக்கொள்ளலாம். அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் பாடல்கள் அனைத்தும் நம் மன-உளைச்சலை போக்கி ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

- ஒரு காட்சியில் கடற்கரையில் வைத்து தீபாவும், டேவிட்டும் சந்திக்கிறார்கள். டேவிட் தன்னுடைய தொழிற்சாலையை துவங்க கடன் கிடைக்க இருப்பதாக சொல்கிறான். அதைக் கேட்ட தீபா மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து ஓடுகிறாள். டேவிட் அவளை பின்தொடர்ந்து ஓடுகிறாள். அப்போது அவனுக்கு இடையூறாக ஒரு கட்டுமரம் எதிர்ப்படுகிறது. அதாவது தீபா – டேவிட் காதலுக்கு ஏதோவொரு இடையூறு இருக்கிறது என்ற எச்சரிக்கை ஊட்டப்படுகிறது. இரண்டாவது பாதியில் மஞ்சு கதைக்குள் நுழைந்து தீபா – டேவிட் காதலுக்கு இடையூறு செய்வதன் மூலம் அது ஊர்ஜிதமாகிறது.

- ‘ராசாத்தி என் ஆசை ராசாத்தி’ என்றொரு பாடல். காதலிக்கும்போது பொங்கியெழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் விதமாக துள்ளிசையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜோ ஸ்டேன்லி. பாடலில் ஒவ்வொரு முறை ‘ராசாத்தி’ என்ற வார்த்தையை உபயோகிக்கும் போதும் வெவ்வேறு தொனியில் வெவ்வேறு உணர்ச்சிகளை பாடகர் வெளிப்படுத்துவதை உன்னிப்பாக கவனித்து கேட்டால் உணர முடியும். பாடலின் இடையிடையே வண்ண வண்ண உடைகளணிந்து தீபாவும் டேவிட்டும் ஓடுவதாக காட்சியாக்கப்பட்டுள்ளது. அது அவர்களுடைய காதல் வாழ்க்கை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஓடுவதற்கான குறியீடு.

- கார் தொழிற்சாலைக்கு கடன் வழங்கும்பொருட்டு ஃபைனான்சியர் வருகிறார். டேவிட்டும் நண்பர்களும் ஆளுயுர மாலையோடு அவரை வரவேற்கின்றனர். ஃபைனான்சியர் வெண்ணிற ஆடை மூர்த்தி தனக்கே உரிய பாணியில் டேவிட்டின் அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் பற்றி விசாரிக்கிறார். அவருக்கு முழு திருப்தியில்லை. கடன் வழங்க முடியாது என்ற தன்னுடைய நிலையைச் சொல்லிவிட்டு கிளம்புகிறார். காட்சி சோகமயமாகிறது. அப்போது ஒரு கதாபாத்திரம் ஃபைனான்சியருக்கு போட்ட மாலையை எடுத்துச்சென்று சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் கார் படத்திற்கு போட்டுவிட்டு சோகமாக நிற்கிறார். இது குவென்டின் டொராண்டினோ பாணியிலான ப்ளாக் காமெடி !

- ‘லவ் ப்ரோபோசல்’ காட்சியில் இயக்குநர் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத கவித்துவமான காட்சியமைப்பை பயன்படுத்தியுள்ளார். ‘ஐ லவ் யூ’ – ‘லவ் யூ டூ’ போன்ற அபத்தங்கள் இல்லை. தீபா டேவிட்டிடம், தீடிரென ‘உங்க லைப் பார்ட்னரு யாரு ?’ என்று கேட்கிறார். டேவிட் நேரடியாக பதில் சொல்லவில்லை. ‘கார் படத்தை எனக்கு கொடுத்த மகாராணி !’ என்று குறிப்பால் உணர்த்துகிறார். தீபா அதனை கச்சிதமாக புரிந்துக்கொள்கிறார். உடனே டூயட் பாட ஓடிவிடாமல் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள் டேவிட் – தீபா தம்பதியர்.

- டேவிட்டின் மனநிலை மாற்றங்களைக் கொண்டு நமக்கெல்லாம் ஒரு ஜென் நிலையை சொல்லிக் கொடுக்கிறார் இயக்குநர். கார் தொழிற்சாலைக்கு கடன் கிடைக்க இருப்பது, அது ரத்தாகி போவது, தீபாவுடன் காதல் பரிமாற்றம், மஞ்சுவின் வருகை, தீபாவின் பிரிவு என்ற சகல விதமான காட்சிகளுக்கும் டேவிட் அழுகையோ, சிரிப்போ அல்லது எந்தவிதமான உணர்ச்சிகளையோ வெளிக்காட்டாமல் புத்தரைப் போல காட்சியளிக்கிறார். நாமும் அதைப்போல வாழ்க்கையில் எத்தகைய இன்ப துன்பங்கள் ஏற்பட்டாலும் சமநிலையில் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

- டேவிட்டின் சிலுவை டாலர் கதையின் உயிர்நாடி என்று கூறினேன் அல்லவா ? இங்கே சிலுவை என்பது மனது அல்லது காதலை குறிக்கின்றது. முதலில் மஞ்சு தன்னுடைய மனதை, அதாவது சிலுவை டாலரை டேவிட்டிடம் கொடுக்கிறார். பின்னர், அதனை டேவிட் தீபாவிடம் கொடுக்கிறார், தீபா முதலில் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். டேவிட்டை புரிந்துக்கொண்டபிறகு தீபாவே அதனை விரும்பிக்கேட்டு வாங்கிக்கொள்கிறார். இறுதியில் தீபா அந்த டாலரை மஞ்சுவிடமே ஒப்படைத்துவிடுகிறார். அதாவது டேவிட்டின் காதல் மஞ்சுவிடம் சேர்பித்து விடப்படுகிறது. டாலர் மஞ்சுவிடமிருந்து மஞ்சுவிற்கே திரும்ப கிடைப்பதன் மூலம் ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற உண்மையும் உணர்த்தப்படுகிறது.

- உச்சக்கட்ட காட்சி. தீபா சிலுவை டாலரையும், ஸ்டெப்னியையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார். சிறிய ஊடலுக்கு பின்னர் டேவிட்டும் மஞ்சுவும் இணைகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து ஹுண்டாய் காரை மூன்று முறை சுற்றி வருகிறார்கள். அதாவது தங்களின் தொழிலான காரையே கடவுளாக கருதி சுற்றி வருவதோடு படம் முடிந்து திரை இருள்கிறது.

அடுத்து வருவது: கோவை நேரம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 June 2013

ரம்பாயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இ-ங்-கு ப-ணி-யா-ர-ம் வி-ற்-க-ப்-ப-டு-ம் :- கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த பலகையில் எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டிருந்தேன். பேசாமல், மீன் மார்க்கெட்டில் வடிவேலுவிடம் பார்த்திபன் செய்வதைப் போல லந்து செய்யலாமா ? மறுபடியும் எதோ ஒரு யோசனை தோன்ற பலகை வாசகத்தை கவனித்தேன் - பணியாரம். இப்போது எனக்கு அவருடைய ஞாபகம் வந்தது. என்னது யாரா ? ரம்பா சார் ரம்பா ! ஒரு தட்டு பணியாரத்தை வாங்கி அதனோடு சேர்த்து ரம்பாவின் நினைவுகளையும் அசை போடத் துவங்கினேன்.


மிகச்சரியாக முப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் ரம்பா பூமியில் அவதரித்தார். ஆந்திர மாநில விஜயவாடா அன்று முதல் புண்ணியஸ்தலம் ஆகப்பெற்றது. அவரிடம் விஷயம் உள்ளது என்பதை குறிப்பால் உணர்ந்துக்கொண்ட அவருடைய பெற்றோர் அவருக்கு விசயலட்சுமி என்று பெயர் சூட்டினர். ஆமாம், அதுதான் அவருடைய இயற்பெயர். சினிமாவிற்காக அமிர்தா என்று மாற்றியிருக்கிறார். பின்னர் அவருடைய அழகில் சொக்கிய இயக்குனர் / தயாரிப்பாளர் யாரேனும் ரம்பா என்ற பெயரை சூட்டியிருக்க வேண்டும்.

பொதுவாக யாரும் அதிகம் கண்டுகொள்ளாத கன்னட சினிமாதான் முதன்முதலில் ரம்பாவை கண்டுக்கொண்டது. சர்வர் சோமன்னா என்கிற கன்னட படத்தில் பதினாறு வயது ரம்பா மழையில் நனைந்தபடி போட்ட ஆட்டத்திற்கு கர்நாடக மாநில நிலப்பரப்புகளில் சூடு கிளம்பியிருக்க வேண்டும். ஆந்திராவில் உருவாகிய புயல் கன்னட தேசம் வழியாக கேரளம் கண்டு மீண்டும் தெலுங்கு தேசம் சென்று கடைசியாகத்தான் தமிழகத்தை தாக்கியது. தெலுங்கில் ரம்பா முதன்முதலில் ராஜேந்திர பிரசாத்துடன் ஜோடி சேர்ந்தார் என்பதை நினைவில் கொள்ளவும்.

தமிழில் ரம்பாவுடைய முதல் படம் உழவன். அப்போது ரம்பாவின் வாளிப்பைக் கண்ட வாலிபக்கவிஞர் தன் வரிகளால் வாலிபால் விளையாடிவிட்டார்.

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ !

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மைவிழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ !

என்று துவங்கி உச்சி முதல் பாதம் வரை வர்ணித்து தள்ளிவிட்டார் மனிதர். நியாயத்திற்கு ரம்பாவின் புகழ் உச்சகட்டத்தை அடைந்திருக்க வேண்டும். எனினும் அந்த படத்தில் நடித்த மற்றொரு நாயகி ராக்கோழியாக மாறி கவன ஈர்ப்பு செய்துவிட்டார். கிடைத்த கேப்பில் ரம்பா தாய்தேசம் திரும்பி சிரஞ்சீவி, வெங்கடேஷ் என ஒரு சுற்று வந்தார்.


அப்போது காமெடி ஸ்பெஷலிஸ்டுகளின் ஒருவரான சுந்தர்.சி கண்களில் ரம்பா சிக்கினார். ரம்பாவைக் கண்ட சுந்தர்.சிக்கு குஸ்காவிற்குள் லெக்பீஸ் கிடைத்தது போல இருந்திருக்க வேண்டும். உடனடியாக தன்னுடைய உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நாயகியாக்கி விட்டார். கூடவே அழகிய லைலா என்ற அழகிய அறிமுகப் பாடலை ரம்பாவுக்கு வைத்து, அதில் அவரை மர்லின் மன்றோ பாணியில் நடனமாட விட்டு தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார். ரம்பாவின் வருகையைக் கண்டு மற்ற நடிகைகள் தொடை நடுங்கியிருக்கக்கூடும்.

தொண்ணூறுகளின் மத்தியில் தமிழகத்தில் தீம் பார்க்குகள் அப்படியொன்றும் பிரபலமில்லை. அது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானதாக நடுத்தர வர்க்கம் கருதிக்கொண்டிருந்தது. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ என்றொரு பாடல், MGM பார்க்கில் படம் பிடிக்கப்பட்டது. படம் வெளிவந்ததும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக MGMமிற்கு படையெடுத்தனர். இதுதான் ரம்பா ஓடிவந்த இடம், இதுதான் ரம்பா தொடை வைத்திருந்த பெஞ்ச் என்று கண்டு களித்து இன்புற்றனர். 


அதுமுதல் ரம்பாவிற்கு ஏறுமுகம் துவங்கியது. 1997ல் வி.ஐ.பி என்றொரு தமிழ்ப்படம் வெளியானது. இரட்டை நாயகிகள் கதையம்சம். ஒருவர் ரம்பா, இன்னொருவர் சிம்ரன். ஒரே கல்லில் இரண்டு மாங்கா. மயிலு மயிலு மயிலம்மா பாடலில் ரம்பாவும் சிம்ரனும் போட்டி போட்டுக்கொண்டு திறமை காட்டினர். இருப்பினும் கொழு கொழு ரம்பாவின் ஆட்டத்திற்கு முன் கொத்தவரங்காய் சிம்ரனின் ஆட்டம் செல்லுபடியாகவில்லை. ரம்பாவின் புகழ் ஓங்கியது. உச்ச நடிகரின் பட வாய்ப்பு, அஜித்துடன் ராசி என்று அந்த ஆண்டு முழுவதும் ரம்பாவுக்கும் அவருடைய பக்தர்களுக்கும் சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது.

டாகுடர் விஜய்க்கும் ரம்பாவுக்கும் அப்படியொரு பொருத்தம். விஜய் தன்னுடைய கனவில் இடுப்பில் மச்சம் வைத்த பெண்ணொருத்தியை அடிக்கடி காண்கிறார். முகத்தை பார்க்க முடியவில்லை. கனவில் வந்தவள் யாரென்று மணிவண்ணன் விசாரிக்கிறார். மனிஷா கொய்ராலா, மாதுரி தீட்சித் தொடங்கி பானுப்ரியா வரைக்கும் அத்தனை பேரையும் கேட்டுப் பார்த்தாயிற்று. கடைசியில் விஜய்யுடைய கனவில் வந்தவர் யார் ? ஷாத்ஷாத் நம்ம ரம்பாவே தான் ! அங்கே தொடங்குகிறது அவர்களுக்குள்ளான வேதியியல். விஜய்யும் ரம்பாவும் மூன்று படங்களில் ஜோடியாக நடித்தார்கள் என்பது செய்தி.


கிட்டத்தட்ட எல்லா முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்ட ரம்ஸுக்கு கடைசியாக அவருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. ஆம், கமல் பட வாய்ப்பு. காதலா காதலா படத்தில் ரம்பா கமலுக்கு ஜோடியாக நடிக்காவிட்டாலும் செளந்தர்யாவைக் காட்டிலும் பிரதான வேடம். நகைச்சுவையிலும் தடம் பதித்திருப்பார். பொதுவாகவே, கமல் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் அதன்பிறகு காணாமல் போய்விடுவார்கள் என்று திரையுலகில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு மித். ஆனால் ரம்பா விஷயத்தில் அது துரதிர்ஷ்டவசமாக உண்மையாகிவிட்டது.

ரம்பாவின் மார்க்கெட் சரிய துவங்கியது. பாலிவுட்டில் முயற்சித்துப் பார்த்தார். கோவிந்தா கோவிந்தா ஆகாதது தான் மிச்சம். விபரீத முடிவாக தமிழில் சொந்தப்படம் எடுத்து கையையும் தொடையையும் சுட்டுக்கொண்டார். எனினும் மனம் தளராமல் பெங்காலி, போஜ்புரி என்று கிடைக்கிற ஜீப்பில் தொற்றிக்கொண்டு பயணித்தபடி இருந்தார் ரம்பா. தெலுங்கில் ரம்பாவின் முதல் நாயகன் ராஜேந்திர பிரசாத் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா ? சொல்லி வைத்தாற்போல மீண்டும் ராஜேந்திர பிரசாத்துடன் க்விக் கன் முருகனில் ரம்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ரம்பாவின் கடைசி படம் அதுதான்.


2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் நாளில் அந்த துயர செய்தி ரம்பா ரசிகர்களின் காதுகளுக்கு எட்டியது. செய்தியை கேட்டதும் இதய பலவீனமானவர்கள் பலர் மாரடைப்பில் பலியானார்கள். நிறைய வீடுகளில் கோபத்தில் செய்தி வாசித்த ரேடியோக்களும் தொலைக்காட்சிகளும் நொறுங்கின. பத்திரிகை அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. செய்தி: நடிகை ரம்பா தொழிலதிபரை மணந்தார். திருமணமாகி சரியாக ஒன்பதே மாதங்களில் ரம்பா, குட்டி ரம்பாவை ஈன்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் கோபமிருந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டுபோய் நின்றால் கோபம் போய்விடும் என்பார்கள். ரம்பா ரசிகர்கள் விஷயத்தில் அது உண்மைதான், மானாட மயிலாட நிகழ்ச்சியில் தற்போது ரம்பாவை பல்லிளித்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.


தொடர்புடைய சுட்டிகள்:
நக்மாயிசம்
ஆல்ப்ஸ் மலைக்காற்று

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment