Showing posts with label சினிமா அலசல். Show all posts
Showing posts with label சினிமா அலசல். Show all posts

31 December 2014

2014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒவ்வொரு வருடம் துவங்கும்போதும் சென்ற ஆண்டை விட அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன். இந்த வருடத்தை பொறுத்தவரையில் அதில் பாதியை கூட நிறைவேற்ற முடியவில்லை. இருக்கட்டும் அடுத்த வருடத்திற்கு கிடைத்துவிட்டது ஈஸியான டார்கெட்!


2014ல் நான் ரசித்த சில விஷயங்கள்...

நாவல்: உப்பு நாய்கள் – லக்ஷ்மி சரவணகுமார் 

சுஜாதா நாவல்கள்: ஆ, நில்லுங்கள் ராஜாவே

கட்டுரைத்தொகுப்பு: பாம்புத்தைலம் – பேயோன்

அபுனைவு: கிளியோபாட்ரா – முகில்

ஃபேஸ்புக் எழுத்தாளர்கள்: (வரிசைபடுத்தவில்லை)
VeeBaa Vee (ஃபேஸ்புக் அக்கவுண்டை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்).

பாடல்கள்: (வரிசைபடுத்தவில்லை)
கூட மேல கூட வச்சு – ரம்மி
விண்மீன் விழிகள் – தெகிடி
முன்னே என் முன்னே – சதுரங்க வேட்டை
போ இன்று நீயாக – வேலையில்லா பட்டதாரி
பாண்டி நாட்டு – ஜிகர்தண்டா
இறந்திடவா – மெட்ராஸ்
செல்ஃபி புள்ள – கத்தி
மழைக்காத்தா – ஒரு ஊருல ரெண்டு ராஜா
ஏய் மிஸ்டர்.மைனர் – காவியத்தலைவன்
போகும் பாதை – பிசாசு

பாடகர்: அந்தோணி தாசன் (பாண்டி நாட்டு, கண்ணம்மா)

பாடகி: வந்தனா ஸ்ரீநிவாசன் (கூட மேல கூட வச்சு, மழைக்காத்தா)

இசையமைப்பாளர்கள்: சந்தோஷ் நாராயன் (ஜிகர்தண்டா, மெட்ராஸ்), ஷான் ரோல்டன் (சதுரங்க வேட்டை)

படங்கள்: (வரிசைபடுத்தவில்லை)
தெகிடி
யாமிருக்க பயமே
சதுரங்க வேட்டை
ஜிகர்தண்டா
மெட்ராஸ்

நடிகர், நடிகையர்: (வரிசைபடுத்தவில்லை)
சாந்தினி (கோலி சோடா)
ஐஸ்வர்யா ராஜேஷ் (ரம்மி)
வாணீ கபூர் (ஆஹா கல்யாணம்)
அசோக் செல்வன் (தெகிடி)
ஓவியா (யாமிருக்க பயமே)
நடராஜ் (சதுரங்க வேட்டை)
பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
குரு சோமசுந்தரம் (ஜிகர்தண்டா)
ரித்விகா (மெட்ராஸ்)
ஹரி (மெட்ராஸ்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 November 2013

Nuances of யாருக்கு யாரோ ஸ்டெப்னி !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

யாருக்கு யாரோ ஸ்டெப்னி என்கிற உன்னதமான சினிமா 2007ம் ஆண்டு வெளிவந்தபோது அதனை ரசிகர்கள் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. திரை மொழியை மிகச்சரியாக புரிந்துக்கொண்டு காட்சிகளின் மூலம் பல தகவல்களையும் சிந்தனைகளையும் குறியீடுகளாக உணர்த்திய அத்திரைப்படத்தை தமிழர்களால் எளிதாக புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். அவைகளை விளக்கும் பொருட்டு இதோ என்னுடைய கோனாரு உரை !

- முதலில் படத்தின் தலைப்பு. படத்தின் கதைக்கருவான முக்கோண காதலை குறிக்கும்படி ‘யாருக்கு யாரோ’ என்ற பதத்தையும், காருக்கு பின்னால் உள்ள ஸ்டெப்னி என்பதோடு சேர்த்து மிக பொருத்தமாக ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி ?’ என்று சூட்டியிருக்கிறார்கள். தலைப்பில் ஸ்டெப்னி என்ற சொல் கதை நாயகிகளை குறிக்கிறது. பெண்களை ஸ்டெப்னி என்று குறிப்பிட்டு இழிவு படுத்தியிருப்பதாக எண்ணுதல் தவறு. கதைப்படி நாயகன் டேவிட்டின் கனவு கார் தொழிற்சாலை அமைப்பது. அவ்வாறாக கார் என்பது டேவிட்டின் வாழ்க்கையோடு ஒன்றியிருக்கிறது. காருக்கு பிற்பகுதியில் ஸ்டெப்னி இருக்கிறது. அதுபோல டேவிட் என்ற மனிதனுக்கு பின்னால், அவனுடைய வெற்றிக்கு பின்னால் இருக்கக்கூடிய பெண்ணை ‘ஸ்டெப்னி’ என்று சுட்டிக்காட்டுகிறார்.

- அடுத்தது படத்தலைப்பு திரையில் தோன்றிய விதம். வெகுஜன சினிமாக்களில் தோன்றுவது போல ரகளையான கிராபிக்ஸ் எல்லாம் இல்லை. மிக ரம்மியமான பின்னணி இசையினூடே தலைப்பு தோன்றுகிறது. முக்கியமாக கவனிக்க வேண்டியது, ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி’ என்ற தலைப்பு திரையில் அலைபாய்ந்தபடி தோன்றுகிறது. அது டேவிட்டுடைய மனது தீபா, ஜோதி காதல்களுக்கிடையே அலைபாய்வதற்கான குறியீடு. தலைப்பில் ‘ஸ்டெப்னி’ என்ற சொல் ஆங்கிலத்தில் ‘STEPNEE’ என்று காட்டப்படுகிறது. உண்மையில் அந்த வார்த்தையுடைய ஸ்பெல்லிங் ‘STEPNEY’ என்று இயக்குநருக்கு தெரியாமலா இருந்திருக்கும். டேவிட் வாழ்க்கையின் வெற்றிப்படிக்கட்டுகளின் STEP NEE என்பதனால் அப்படி காட்டியிருக்கிறார்.

- கதையின் நாயகன் டேவிட்டின் அறிமுகக்காட்சி. தீபாவின் கழுத்துச்சங்கிலியை சமூக விரோதிகள் பறித்துக்கொண்டு பைக்கில் பறக்கின்றனர். அந்த நேரம் பார்த்து அங்கே டேவிட் வருகிறார். கீழே விழுந்து கிடக்கும் தீபாவை பொருட்படுத்தாமல் திருடர்களை துரத்துகிறார். இக்காட்சியின் மூலம் டேவிட் உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை காட்டிலும் தர்க்கரீதியாக சிந்திப்பதை விரும்புபவன் என்று ரசிகர்கள் மனதில் பதியப்படுகிறது. கூடவே, அவனுடைய அபார நினைவாற்றல், துறை சார்ந்த அறிவு, இசை நாட்டம், கொடை பண்பு போன்றவற்றையும் நேர விரயம் செய்யாமல் எளிமையாக சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

- படம் முழுக்க கருப்பு நிறத்தை அறிவின் குறியீடாகவும், சிகப்பு நிறத்தை அன்பின் குறியீடாகவும் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். டேவிட் கருப்பு நிற ஸ்கூட்டியையும், தீபா சிகப்பு நிற ஸ்கூட்டியையும் பயன்படுத்துகிறார். அதே சமயம் டேவிட் தீபாவின் மீதும், செயின் திருடர்கள் மீதும் அன்பு செலுத்தும் காட்சிகளில் சிகப்பு நிற சட்டை அணிந்து தோன்றுகிறார். தீபாவும் அன்பை வலியுறுத்தும் பாடலோடு தான் அறிமுகமாகிறார். முக்கியமான காட்சிகள் அனைத்திலும் சிகப்பு நிற உடையணிந்து வருகிறார். மற்றொரு நாயகியான மஞ்சு, கனடாவிலிருந்து சிகப்பு நிற காரில் வந்து இறங்குகிறார். டேவிட்டும் மஞ்சுவும் உணர்வுகளால் சங்கமிக்கும் காட்சியில் இருவரும் சிகப்பு நிற உடை அணிந்துள்ளனர்.

- என்னதான் கதை கார், காதல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அதன் கரு மதநல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘யாருக்கு யாரோ’ என்ற தலைப்பினைக் கூட யாருக்கு யாரோ கடவுளாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று குறிப்பதாக புரிந்துக்கொள்ளலாம். ஹிந்துப்பெண் தீபா கிறிஸ்தவ துதிப்பாடலை பாடுவதாக படம் துவங்குகிறது. மற்றொரு காட்சியில் கிறிஸ்தவரான டேவிட்டை பார்த்து ‘கண்ணா, நீ எங்கே...?’ என்று தீபா பாடுகிறார். டேவிட் அணிந்துள்ள சிலுவை குறியீடு கொண்ட சங்கிலியை தீபாவுக்கு கொடுக்கிறார். இந்த சிலுவை டாலர் தான் படத்தின் உயிர்நாடி...! எப்படி என்பதை பின்னால் பார்க்கலாம்.

- பாடல்கள், அதில் நடிகர் / நடிகை வெளிப்படுத்தும் நடனம் அருமையானதொரு வாழ்க்கை தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற்றுவிட்டால் ஓவராக ஆட்டம் போடக்கூடாது அல்லவா ? அதை உணர்த்தும்பொருட்டு அளவாக ஆடுகிறார் டேவிட். வாழ்க்கை எத்தனை எளிமையானது என்பதை உணர்த்துவதற்காகவே டேவிட் மிகவும் எளிமையான நடன அசைவுகளை செய்து காட்டுகிறார் என்று புரிந்துக்கொள்ளலாம். அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் பாடல்கள் அனைத்தும் நம் மன-உளைச்சலை போக்கி ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

- ஒரு காட்சியில் கடற்கரையில் வைத்து தீபாவும், டேவிட்டும் சந்திக்கிறார்கள். டேவிட் தன்னுடைய தொழிற்சாலையை துவங்க கடன் கிடைக்க இருப்பதாக சொல்கிறான். அதைக் கேட்ட தீபா மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து ஓடுகிறாள். டேவிட் அவளை பின்தொடர்ந்து ஓடுகிறாள். அப்போது அவனுக்கு இடையூறாக ஒரு கட்டுமரம் எதிர்ப்படுகிறது. அதாவது தீபா – டேவிட் காதலுக்கு ஏதோவொரு இடையூறு இருக்கிறது என்ற எச்சரிக்கை ஊட்டப்படுகிறது. இரண்டாவது பாதியில் மஞ்சு கதைக்குள் நுழைந்து தீபா – டேவிட் காதலுக்கு இடையூறு செய்வதன் மூலம் அது ஊர்ஜிதமாகிறது.

- ‘ராசாத்தி என் ஆசை ராசாத்தி’ என்றொரு பாடல். காதலிக்கும்போது பொங்கியெழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் விதமாக துள்ளிசையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜோ ஸ்டேன்லி. பாடலில் ஒவ்வொரு முறை ‘ராசாத்தி’ என்ற வார்த்தையை உபயோகிக்கும் போதும் வெவ்வேறு தொனியில் வெவ்வேறு உணர்ச்சிகளை பாடகர் வெளிப்படுத்துவதை உன்னிப்பாக கவனித்து கேட்டால் உணர முடியும். பாடலின் இடையிடையே வண்ண வண்ண உடைகளணிந்து தீபாவும் டேவிட்டும் ஓடுவதாக காட்சியாக்கப்பட்டுள்ளது. அது அவர்களுடைய காதல் வாழ்க்கை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஓடுவதற்கான குறியீடு.

- கார் தொழிற்சாலைக்கு கடன் வழங்கும்பொருட்டு ஃபைனான்சியர் வருகிறார். டேவிட்டும் நண்பர்களும் ஆளுயுர மாலையோடு அவரை வரவேற்கின்றனர். ஃபைனான்சியர் வெண்ணிற ஆடை மூர்த்தி தனக்கே உரிய பாணியில் டேவிட்டின் அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் பற்றி விசாரிக்கிறார். அவருக்கு முழு திருப்தியில்லை. கடன் வழங்க முடியாது என்ற தன்னுடைய நிலையைச் சொல்லிவிட்டு கிளம்புகிறார். காட்சி சோகமயமாகிறது. அப்போது ஒரு கதாபாத்திரம் ஃபைனான்சியருக்கு போட்ட மாலையை எடுத்துச்சென்று சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் கார் படத்திற்கு போட்டுவிட்டு சோகமாக நிற்கிறார். இது குவென்டின் டொராண்டினோ பாணியிலான ப்ளாக் காமெடி !

- ‘லவ் ப்ரோபோசல்’ காட்சியில் இயக்குநர் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத கவித்துவமான காட்சியமைப்பை பயன்படுத்தியுள்ளார். ‘ஐ லவ் யூ’ – ‘லவ் யூ டூ’ போன்ற அபத்தங்கள் இல்லை. தீபா டேவிட்டிடம், தீடிரென ‘உங்க லைப் பார்ட்னரு யாரு ?’ என்று கேட்கிறார். டேவிட் நேரடியாக பதில் சொல்லவில்லை. ‘கார் படத்தை எனக்கு கொடுத்த மகாராணி !’ என்று குறிப்பால் உணர்த்துகிறார். தீபா அதனை கச்சிதமாக புரிந்துக்கொள்கிறார். உடனே டூயட் பாட ஓடிவிடாமல் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள் டேவிட் – தீபா தம்பதியர்.

- டேவிட்டின் மனநிலை மாற்றங்களைக் கொண்டு நமக்கெல்லாம் ஒரு ஜென் நிலையை சொல்லிக் கொடுக்கிறார் இயக்குநர். கார் தொழிற்சாலைக்கு கடன் கிடைக்க இருப்பது, அது ரத்தாகி போவது, தீபாவுடன் காதல் பரிமாற்றம், மஞ்சுவின் வருகை, தீபாவின் பிரிவு என்ற சகல விதமான காட்சிகளுக்கும் டேவிட் அழுகையோ, சிரிப்போ அல்லது எந்தவிதமான உணர்ச்சிகளையோ வெளிக்காட்டாமல் புத்தரைப் போல காட்சியளிக்கிறார். நாமும் அதைப்போல வாழ்க்கையில் எத்தகைய இன்ப துன்பங்கள் ஏற்பட்டாலும் சமநிலையில் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

- டேவிட்டின் சிலுவை டாலர் கதையின் உயிர்நாடி என்று கூறினேன் அல்லவா ? இங்கே சிலுவை என்பது மனது அல்லது காதலை குறிக்கின்றது. முதலில் மஞ்சு தன்னுடைய மனதை, அதாவது சிலுவை டாலரை டேவிட்டிடம் கொடுக்கிறார். பின்னர், அதனை டேவிட் தீபாவிடம் கொடுக்கிறார், தீபா முதலில் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். டேவிட்டை புரிந்துக்கொண்டபிறகு தீபாவே அதனை விரும்பிக்கேட்டு வாங்கிக்கொள்கிறார். இறுதியில் தீபா அந்த டாலரை மஞ்சுவிடமே ஒப்படைத்துவிடுகிறார். அதாவது டேவிட்டின் காதல் மஞ்சுவிடம் சேர்பித்து விடப்படுகிறது. டாலர் மஞ்சுவிடமிருந்து மஞ்சுவிற்கே திரும்ப கிடைப்பதன் மூலம் ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற உண்மையும் உணர்த்தப்படுகிறது.

- உச்சக்கட்ட காட்சி. தீபா சிலுவை டாலரையும், ஸ்டெப்னியையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார். சிறிய ஊடலுக்கு பின்னர் டேவிட்டும் மஞ்சுவும் இணைகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து ஹுண்டாய் காரை மூன்று முறை சுற்றி வருகிறார்கள். அதாவது தங்களின் தொழிலான காரையே கடவுளாக கருதி சுற்றி வருவதோடு படம் முடிந்து திரை இருள்கிறது.

அடுத்து வருவது: கோவை நேரம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 December 2011

நான் பார்த்த தமிழ் சினிமா – 2011

அன்புள்ள வலைப்பூவிற்கு,




20. பொன்னர் சங்கர்
அய்யகோ...! கஸாலி என்னும் கயவனால் இந்த காவியத்தை காண வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன். திவ்யா பரமேஸ்வரனுக்காக மட்டும் லைட்டா ரசித்தேன்.

19. கோ
இது படமல்ல பாடம்...!

18. லத்திகா
எப்பேர்ப்பட்ட காமெடி படமாக இருந்தாலும் இந்த அளவிற்கு சிரித்திருக்க மாட்டேன். அல்டிமேட் ஃபன். வெயிட்டிங் ஃபார் ஆனந்த தொல்லை.

17. கருங்காலி
வித்தியாசம் ஆனால் வக்கிரம், பிடிச்சிருந்தது ஆனால் தப்பு, போன்ற வாக்கியங்களை உதாரணமாக கூறலாம். அஞ்சலியின் ஒரு ஜில்பான்ஸ் காட்சிக்காக லைக்கிங்.

16. நடுநிசி நாய்கள்
கருங்காலிக்கு எழுதிய அதே வாக்கியங்கள் இதற்கும் பொருந்தும். படம் முழுக்க தப்புதண்டா செய்துவிட்டு கடைசியில் இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு ஸ்லைடு போடுறது அயோக்கியத்தனம்.

15. பதினாறு
ஒரே புத்தகத்தில் இரண்டு ஃபீல் குட் நாவல்கள் படித்த திருப்தி. ஆனால் தியேட்டருக்கு போய் பார்க்கக் கூடிய அளவுக்கு வொர்த் இல்லை.

14. சாந்தி அப்புறம் நித்யா
குறும்படமாக எடுக்க வேண்டிய சமாச்சாரத்தை குறும்புப்படமாக எடுத்திருந்தார்கள். மற்ற சாப்ட் போர்ன் படங்களை விட ஒருபடி மேல். மார்கெட்டிங் ஜாலம் அபாரம்.

13. ஏழாம் அறிவு
எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருக்கும்போது ஏமாற்றம் வருவது சகஜம்தான். காசுக்காக தமிழுணர்வு ஜல்லியடிப்பது கண்டிக்கத்தக்கது. 

12. முரண்
ஆர்ப்பாட்டமில்லாத படம். ஆனால் ஒரிஜினல் வெர்ஷனோடு ஒப்பிடும்போது தோற்றுவிடும்.

11. அழகர்சாமியின் குதிரை
மூடநம்பிக்கைகளை சாடும் நறுக் வசனங்கள் ப்ளஸ் பாயிண்ட். கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

10. குள்ளநரி கூட்டம்
நல்லதொரு பொழுதுபோக்கு படம். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தாமல் அதே சமயம் அழகாக மார்கெட்டிங் செய்தது படத்தின் மிகப்பெரிய பலம்.

9. வித்தகன்
பார்த்திபனின் மொக்கை காமெடி வசனங்களுக்காகவும், குட்டி அசின் பூர்ணாவிற்காகவும் ரசித்தேன். மற்றபடி ஒன்றும் புதுசில்லை.

8. காஞ்சனா
இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி. (லத்திகாவுக்கு அப்புறம்) தமிழில் திகில் படமெடுப்பது சாதாரண விஷயமல்ல. கொஞ்சம் பிசகினாலும் செம காமெடியாகிவிடும். காஞ்சனா உண்மையாகவே பயம் காட்டிவிட்டாள்.

7. எங்கேயும் எப்போதும்
ரிலீசாகி ரொம்ப நாள் கழித்து தான் பார்த்தேன். ஆஹா, ஓஹோ என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதை, நச்சுன்னு ஒரு கருத்து அதுக்காக ரசித்தேன்.

6. மயக்கம் என்ன
செய்கிற வேலையை ரசித்து செய்யச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதிக எதிர்பார்ப்போடு போகாமலிருந்தால் இன்னும் பிடித்திருக்கும். 

5. வாகை சூட வா
பழைய பாரதிராஜா டைப் படம். ஆனாலும் சலிப்பூட்டாமல் ரசிக்க முடிந்தது. நல்லதொரு கருத்து சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

4. மங்காத்தா
தல படம். வேறென்ன சொல்ல.

3. யுத்தம் செய்
புத்திசாலி போலீஸ் கதைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்தினாலும் ஏதோ ஒரு வகையில் ரசிக்க வைக்கின்றன. இதுதான் கதை என்று தெரியாமல் பார்த்ததால் இன்னும் ரசிக்க முடிந்தது.

2. 180
பொழுதுபோக்கு படம் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் இதுதான். கவலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் இந்தப்படம். நிறைய காட்சிகள் போரடித்தாலும் கடைசியில் சொன்ன கருத்துக்காக லைக்கோ லைக்.

1. ஆரண்ய காண்டம்
அட்டகாசமான விளம்பர யுக்தி, கொடுக்காப்புலி, காளையன் கேரக்டர்களின் பிரமாதமான நடிப்பு, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள், அருமையான திரைக்கதை, பின்னணி இசை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தில் Strategy Management, Decision Making என்று பாடமெடுத்தது சூப்பர்.

தவறவிட்டு வருந்தியவை: ஆடுகளம், வானம், உயிரின் எடை 21 அயிரி, வேலாயுதம், வெங்காயம், போராளி, மெளனகுரு

தவறவிட்டு மகிழ்ந்தவை: சிறுத்தை, காவலன், அவன் இவன், தெய்வதிருமகள், வெடி, ஒஸ்தி, ராஜபாட்டை


பிளாஷ்பேக்: நான் பார்த்த தமிழ் சினிமா - 2010

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 October 2010

Endhiran Revisited - சுஜாதாவுக்காக

வணக்கம் மக்களே...!

முன் குறிப்பு: ரங்குஸ்கி காட்சியையும் கலாபவன் மணி காட்சியையும் நீக்கிவிட்டார்கள், க்ளைமாக்ஸ் காட்சியின் நீளத்தை குறைத்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றிய டீம் மேனேஜர் ரிச்சர்டை வன்மையாக கண்டிக்கிறேன்...!!! (ஏன் பாஸ் இந்த கொலைவெறி...?)

ஏற்கனவே எந்திரன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து டரியலாகி "எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை...!" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன்பு அமரர் சுஜாதா அவர்களின் என் இனிய இயந்திரா நாவலை படிக்க நேர்ந்தது. சான்ஸே இல்லை... நாவல் முழுவதையும் ஒரே சிட்டிங்கில் படித்து முடித்தபோது ஏதோ வேற்றுகிரகத்துக்கு போய்வந்தது போல இருந்தது. அப்பேர்பட்ட ஓர் பேரறிஞனின் வசனங்களை முதல்முறை பார்த்தபோது ரசிக சிகாமணிகளின் இரைச்சல்களுக்கு மத்தியில் ரசிக்க முடியவில்லை. எனவே இன்னொரு முறை ஆறு வாரங்கள் கழிந்த பின்னர் ஆரவாரங்கள் இல்லாமல் பார்க்க வேண்டுமென முடிவு செய்திருந்தேன். அதுமட்டுமில்லாமல் "கொளத்தூர் கங்கா, விருகம்பாக்கம் தேவி கருமாரியில் எல்லாம் பார்த்தால் டல்லா இருக்கும்... சத்யம் அல்லது எஸ்கேப் சினிமாஸில் பார்த்தால் நல்லா இருக்கும்..." என்று டீம் மேனேஜர் ரிச்சர்ட் திருவாய் மலர்ந்திருந்தார். ஆனால் நான் சத்தியமாக எஸ்கேப் சினிமாஸில் பார்க்கவில்லை. சென்னை ராயபுரத்தில் "மதுரை சுனாமி" அண்ணன் அழகிரி பினாமி பெயரில் வைத்திருக்கும் ஐட்ரீம் சினிமாஸில் படம் பார்க்க நேர்ந்தது. மூட்டைப்பூச்சி கடியைக் கூட தாங்கிக்கொள்ளலாம் ஆனால் ரசிகர்களின் அலப்பறையை எல்லாம் நிச்சயம் தாங்க முடியாது. எனவே இரவுக்காட்சிக்கு சென்றேன். (அப்படியும் கூட்டம் கும்மியடித்தது வேறு விஷயம்...!).

முதல்முறை ரசிக்க முடியாத இசை, வசனம், Sound Effects, பாடல் காட்சிகளை இந்த முறை ஆற அமர ரசித்தேன். சிட்டி தலையை திருப்பும்போதும், அங்க அசைவுகளின் போதும் கேட்கும் Buzzing Sound முதற்கொண்டு மொத்தத்தையும் ரசித்தேன். இந்தமுறைதான் கவனித்து பார்க்க முடிந்தது. ஐஸ்வர்யா ராய் கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். (எந்த இடத்தில் என்றெல்லாம் கேட்கக் கூடாது...!).

பாடல் காட்சிகள் - வழக்கமாக ஷங்கர் படங்கள் என்றாலே பிரமிப்பாக இருக்கும். இதிலும் அப்படித்தான் என்பதை நேற்றிரவே சன் டி.வியில் பார்த்திருப்பீர்கள். வெள்ளித்திரையில் பார்த்தால் இன்னும் இன்னும் ஆச்சர்யங்கள். காதல் அனுக்கள் பாடலில் காட்டப்பட்ட பாலைவனத்தையும் பாலைவனத்திற்கு நடுவில் ஆங்காங்கே காணப்பட்ட குட்டிக்குட்டி குளங்களையும் வெகுவாக ரசித்தேன். கிளிமாஞ்சாரோ பாடலில் காட்டுவாசிகளின் உடையலங்காரமும் அவர்களின் நடன அமைப்பும் பிடித்திருந்தது. ரோபோடிக் பாடலில் ஐஸின் நடனம் சிலிர்க்க வைத்தது. பக்கத்து சீட் நண்பனிடம் இருந்து பாப்கார்னை ஆட்டையை போடும் ஆட்டத்தில் மும்முரமாக இருந்ததால் இரும்பிலே ஓர் இருதயம் பாடலை மட்டும் சரிவர ரசிக்க முடியவில்லை.

பாடல் வரிகள் - வைரமுத்து, பா. விஜய், மதன் கார்க்கி ஆகிய மூவரும் வடித்திருக்கிறார்கள். ராணுவக் காட்சி கவிதையை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டும் பிரம்மாண்டமல்ல பாடல் வரிகளிலும் தான். கவிப்பேரரசு வைரமுத்துவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் எழுதிய வரிகளில் எனக்குப் பிடித்த சில வரிகள்...

"கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்...
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை..." (புதிய மனிதா...)

"சனா... சனா... ஒரே வினா...?
அழகின் மொத்தம் நீயோ...?" (காதல் அனுக்கள்...)

"வயரெல்லாம் ஓசை... உயிரெல்லாம் ஆசை...
ரோபோவை போ போ வேண்ணாதே..." (அரிமா... அரிமா)

தந்தை ஒருபக்கம் அமர்க்களப்படுத்தினால் மகன் மறுபக்கம் அதகளமாக்குகிறார். வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி "இரும்பிலே ஓர் இருதயம்...." பாடலுக்காக வரலாற்று சிறப்புமிக்க வரிகளை எல்லாம் எழுதியிருக்கிறார். சாம்பிளுக்கு இரண்டு வரிகள்...

"எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா...
ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா..."

மேலும் பா.விஜய் "கிளிமாஞ்சாரோ..." பாடலில்...

"உதட்டையும் உதட்டையும் பூட்டிக்கொண்டு...
ஒரு யுகம் முடிந்து திற அன்பாய்..."

இந்த வரிகளை எல்லாம் ரசித்தபோது எந்திரன் படம் வெளியாவதற்கு முன் ஏன் பாடல்களை கேட்கவில்லை என்று என் மேலேயே கோபம் வருகிறது.

ரஜினி - வசீகரன், சிட்டி, சிட்டி v2.0 என்று மூன்று பாத்திரங்கள் இருந்தாலும் இரண்டாம் வெர்ஷன் சிட்டியே மொத்த சிக்ஸரையும் அடித்துவிடுகிறார். "சிவாஜி" படத்தில் ரஜினி அடிக்கடி கூல்... கூல்... என்று சொல்வார். ஆனால் இந்தப் படத்தில் வசீகரன் ரஜினி கொஞ்சம் கூட கூல் இல்லை. எதற்கெடுத்தாலும் கத்துவது, கோபப்படுவது என்று சராசரி மனிதனாகவே வலம் வருகிறார். சிட்டி கேரக்டர் உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் வசனங்களை ஒப்பிக்கிறது. சிட்டி v2.0 கேரக்டரில் தான் பழைய ரஜினியை பார்க்க முடிந்தது. உதாரணத்துக்கு "ச்சீ... ன்னுறது, சீதா பிராட்டி சீன் போடுறது..." என்று ஆரம்பித்து தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் வசனம் பேசிமுடித்தபோது தியேட்டரில் அப்படி ஒரு அப்ளாஸ். மேலும் பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் வில்லச்சிரிப்பு சிரிப்பதும் "மே... மே..." என்று ஆடு போல மிமிக்ரி செய்வதுமாக கலக்கி இருக்கிறார். ரஜினி ஹீரோயிசத்தை விட நன்றாகவே வில்லத்தனம் செய்கிறார். இனிவரும் படங்களில் ரஜினி இமேஜ் இம்சைகளையெல்லாம் விடுத்து வில்லனாக நடித்தால் அதிகம் ரசிக்கலாம்.

சுஜாதாவுக்காக - என்று தலைப்பில் போட்டுவிட்டு வசனத்தை பற்றி ஒன்றும் எழுதாவில்லை என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சாதாரணமான படங்களுக்கே அசாதாரணமாக வசனம் எழுதுபவர் சுஜாதா. ஆயுத எழுத்து படத்தின் காதல் பற்றிய ஒரு காட்சியில் Androgen, Estrogen, Testosterone என்றெல்லாம் வசனமெழுதி பொளந்து கட்டியிருப்பார். அப்படிப்பட்டவருக்கு எந்திரன் போன்றொரு படத்துக்கு வசனம் எழுதச் சொன்னால் சும்மா விடுவாரா. அவரது கைவண்ணத்தில் எனக்கு பிடித்த சில வசனங்கள்...

1. ஐஸ்: உள்ள உயிரோட இருக்காரா...?
கருணாஸ்: உள்ள வயரோட இருக்கார்...

2. ஐஸ்: Can you please shutdown your stupid system...?
சந்தானம்: Control, Alt, Delete

3. ரஜினி: நான் கொடுத்த 2 பவர் 9, ஐநூத்தி பன்னண்டு முத்தம்...
ஐஸ்: முத்தம் கொடுக்கும்போது கூட கவுன்ட் பண்ணிட்டு இருப்பீங்களா... பீல் பண்ண மாட்டீங்களா... சரியான Matrix மண்டை...

4. டிராபிக் போலீஸ்: அட்ரஸ் சொல்லுய்யா...
ரோபோ: ஐ.பி அட்ரஸ் தான் இருக்கு... 108.11.0.1

5. ட்ராபிக் போலீஸ்: நக்கலா....?
ரோபோ: இல்ல நிக்கல்... போல்டெல்லாம்  நிக்கல்ல பண்ணது...

6. விஞ்ஞானி ஒருவர்: சிம்பிளா கேக்குறேன்... 24157817 Fibonacci நம்பரா...?
ரோபோ: ஆமாம், 22வது Fibonacci நம்பர்... பை தி வே அது மந்தவெளி பி.சுப்ரமணியத்தோட போன் நம்பர்...

7. ரோபோ: 98dB... Too loud... Who is that செல்லாத்தா...?

8. சந்தானம்: யேய்... நீ என்ன பெரிய இவனா...?
ரோபோ: இலக்கணம் தப்பு...

9. விஞ்ஞானி ஒருவர்: கடவுள் இருக்காரா இல்லையா...?
ரோபோ: கடவுள்ன்னா யாரு...?
விஞ்ஞானி: நம்மள எல்லாம் படைச்சவர்....
ரோபோ: என்னை படிச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...

10. விஞ்ஞானி போஹ்ரா: ஆபத்து வரும்போது யார முதல்ல காப்பத்துவ...? டாக்டர் ஐன்ஸ்டீனையா...? ஒரு சின்ன குழந்தையா...?
ரோபோ: Hypothetical Question...

இதெல்லாம் சும்மா சாம்பிள்தான். சுஜாதா வரிக்கு வரி கோல் போட்டிருக்கிறார். ஆனால் ஏனோ முதல் பாதியில் மட்டும்தான் இதுபோன்ற சுஜாதா டச் கொண்ட வசனங்கள் அதிகம் வருகிறது. ஒருவேளை அதுவரைக்கும்தான் அவர் எழுதியதோ என்னவோ. வசனங்கள் மட்டுமின்றி காதலிக்கு Freakonomics புத்தகத்தை பரிசாக தருவது, ரோபோவை வைத்து ஆயுத பூஜை செய்வது, ரோபோவுக்கு உணர்ச்சிகளை கற்பிக்க வேண்டி ஆசார கோவையை படிக்க கொடுப்பது என்று திரைக்கதையிலும் ஆங்காங்கே சுஜாதா டச்.

டிஸ்கி: இந்தமுறை பார்த்தபோது இடைவேளைக்குப்பின் காரமாக இருந்தது Lays Chips (Spanish Tomato Flavour).
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 April 2010

வேலு பிரபாகரனின் காதல் கதை சொன்ன தத்துவங்கள்

வணக்கம் மக்களே...

கடவுள், புரட்சிக்காரன் உட்பட சில பகுத்தறிவு திரைப்படங்களை இயக்கிய வேலு பிரபாகரன் "காதல் அரங்கம்" என்ற பெயரில் ஆரம்பித்த கலகம் அது. சிலபல வருடங்கள் கழித்து கழிந்தபிறகு, கருமாறி உருமாறி "வேலு பிரபாகரனின் காதல் கதை" என்ற பெயரில் வெளியானது. வெளியான முதல் நாளே உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் ஆஜராகிவிட்டேன், ஆனால் நான் அப்போது மேஜராகிவிட்டேனா என்று தெரியவில்லை.அரங்கம் நிரம்பிய கூட்டம். ஆனால் மொத்தக்கூட்டமும் கதையை நம்பி வராமல் சதையை நம்பியே வந்திருக்கிறது என்று உணர முடிந்தது. வழக்கமாக ஷகிலா படங்களில் கூட ரசிகர்களுக்கு ஏதாவது மெசேஜ் வைத்திருப்பார்கள். இந்தப் படத்தில் அப்படிப்பட்ட மெசேஜ் நிறைய இருக்கிறது. "பெண்களை நம் சமூகம் காமக்கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது" என்ற கருத்தையும் சில உபகருத்துக்களையும் வலியுறுத்தியதோடு நில்லாமல் மூன்று பிட்டுக்கதைகளையும் படத்தில் சொருகியிருக்கிறார் வேலு பிரபாகரன்.

வே.பி இந்தப் படத்தை இரண்டு நோக்கத்தில் எடுத்திருக்கலாம். முதலாவது, வெறுமனே கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு டாக்குமெண்டரி எடுத்தால் ரீச் ஆகாது. சில ஜல்சா காட்சிகளை இணைத்தால் சொல்ல வந்த கருத்துக்கள் நிறைய பேரை சென்றடையும் என்று நினைத்திருக்கலாம். அல்லது, வெறுமனே ஆபாசக் காட்சிகளை வைத்து படமெடுத்தால் விமர்சனங்கள் எழும், சென்சாரில் சுக்குநூறாக்கி விடுவார்கள் அதனால் நடுநடுவே கருத்து என்ற பெயரில் எதையாவது பிதற்றிவிட்டுச் சென்றால் தேவலை என்று நினைத்திருக்கலாம். முதலாவது உண்மையாக இருந்திருந்தால் வே.பியை பாராட்டலாம். இல்லையெனில் ஷங்கர், மணிரத்னம் வகையறாக்களில் சேர்த்துவிட வேண்டியதுதான். வே.பி எதை மெயின் டிஷ்ஷாக வைத்து எதை ஊறுகாயாக்கினார் என்று தெரியவில்லை. படத்தைப் பார்த்து நான் வடிகட்டி எடுத்த சில தத்துவங்கள்:-

விஷ்ணுபுரம் என்ற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள் என்று கதை ஆரம்பிக்கிறது. மூன்று பிட்டுக்கதைகள் என்று சொன்னேன் அல்லவா. முதலாவதாக காதல் போதையில் தவறான பாதையில் செல்லும் ஒரு ஜோடி. பண்ணையார் மகன் - தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் இருவரும் காதலிக்கிறார்கள். பையன் பொண்ணை பார்க்கும் போதெல்லாம் ஹஸ்கி வாய்ஸில் காதல் வசனம் பேசி கவிழ்க்கிறான். பெண்ணோ, பையன் கை வைக்கும் போதெல்லாம் கண்களை மூடி போதையில் திளைத்துவிட்டு டைரக்டர் கட் சொன்னதும் "ச்சீ... போடா..." என்று சிலுப்பிக்கொண்டு ஓடுகிறார். கடைசியில் காதலர்கள் பலியாகவே செய்கிறார்கள். அவர்களும் இந்த சமூகமும் காதல் என்று நினைத்துக்கொண்டிருப்பது காதல் அல்ல, அதன் அடிப்படையே காமம் தான் என்று இயக்குனர் இறுதியில் விளக்கம் கொடுக்கிறார்.

இரண்டாவது, வேலைக்காரியிடம் வேலையைக் காட்டும் வாத்தியார். இவர் கணக்கு வாத்தியார் அல்ல, கணக்கு பண்ணும் வாத்தியார். ஏற்கனவே காதலனால் கைக்குழந்தையுடன் கைவிடப்பட்ட அந்த வேலைக்காரியை பலவந்தப்படுத்தி, பின்னர் ஆசைக்காட்டி வேட்டையாடுகிறார். வேலைக்காரி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்பவே விரசம். தமிழ் சினிமாக்களிலும் ஜோக்குகளிலும் வேலைக்காரியை இப்படித்தானே காட்டுகிறார்கள். கடைசியில் தன் அம்மா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறிவிட்டு வேலைகாரி தங்கத்திடம் இருந்து விடைபெறுகிறார் வாத்தியார். இந்தக் காட்சி முடிந்ததும் தங்கம், சாமி சிலை என்று கூறப்படும் கல்லில் கட்டியிருக்கும் தாலி என்று கூறப்படும்  மஞ்சள் கையிற்றை அறுத்தெறிகிறார், கூடவே தாலி சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகளையும். அதன்பின்னரும் தங்கம் அந்த கல்லின் மீது மண்ணள்ளி தூற்றுவது, சிலையை சிதைப்பது என்று புரட்சிகள்.

மூன்றாவது, பண்ணையாரும் பண்ணையாள் மனைவிக்கும் நடக்கும் (கள்ளக்)காதல். பண்ணையாள் மனைவியாக பாபிலோனா. பாபிலோனா ஏற்கனவே இதுபோன்ற படங்களில் நடித்து பழக்கப்பட்டவர் என்பதால் நல்ல பெர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த பிட்டு சொல்லும் கருத்து கொஞ்சம் வித்தியாசமானது இதை வார்த்தைகளால் விவரிக்காமல் அந்தப்படத்தில் வரும் காட்சியாக விவரிக்கிறேன். பண்ணை வீட்டில் பண்ணையாரும் பாபியும் கூடுகின்றனர். கூடி முடித்து களைப்பாக படுத்திருக்கும்போது வரும் வசனம்:-
பாபி: ஏன்யா...? இதுதான் கள்ளக்காதலா...?
பண்ணை: காதல்ல ஏது டீ நல்லக்காதல்... கள்ளக்காதல்... எல்லாமே காமம் தான்...

இவைதான் வேலு பிரபாகரனின் காதல் கதை சொல்லும் முத்தான மூன்று தத்துவங்கள். அதுசரி படத்திற்கு ஏன் வேலு பிரபாகரனின் காதல் கதை என்று பெயர் வைத்தார்கள். படத்தின் பிற்பாதியில் வே.பி அவரது சொந்தக்கதையை புலம்பித் தள்ளியிருக்கிறார். முக்கியமாக "சில்க்" சுமிதாவுடனான அவரது உறவைப் பற்றி தைரியமாக சொல்லியிருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டியாக வேண்டும்.

இது தவிர்த்து படத்தில் ஆங்கங்கே வே.பி தோன்றி பிரச்சார வசனம் பேசியிருக்கிறார். இவற்றில் முக்கியமான ஒரு காட்சி, பெரியார் வேடமிட்டு வே.பி தோன்றும் காட்சி. இவர்கள் சந்தித்தால் பாணியில் பெரியாரும் ஆதி சங்கராச்சாரியும் சந்தித்தால் எப்படி இருக்குமென்று ஒரு சின்ன கற்பனை. பெரியார் சங்கிடம், "கடவுள் தான் இல்லைன்னு சொல்ல மாட்டீங்க... ஆனா ஜாதிகள் இல்லைன்னு சொல்லலாமே அய்யா..." என்று கேட்கிறார். அதற்கு சங்கு, "இது காலங்காலமா நமது பெரியவாளெல்லாம் கடைபிடிச்சு வர்ற ஆச்சார அனுஷ்டானங்கள்... இது பகவன் படச்சது... பாவாத்மாக்களுக்கு புரியாது... உணர்த்தவும் முடியாது..." என்று பிதற்றுகிறார்.

இப்படியெல்லாம் வே.பியின் காதல் கதை சொன்ன தத்துவங்களை விட ஒரே ஒரு பிரேமில் ஹைக்கூ கவிதை போல ஒரு மிகப்பெரிய தத்துவத்தை உணர்த்தியது. அந்த தத்துவம்: -


கடந்த படங்களில் கடவுள் இல்லை என்று உணர்த்திவந்த வே.பி இந்தப் படத்தில் காதலும் இல்லையென்று உணர்த்தியிருக்கிறீர்கள். பார்க்க வேண்டிய படம். டி.வி.டி வாங்கியாவது பாருங்கள்.
அனுபவமும் - பகிர்வும்,
NR PRABHAKARAN

Post Comment

18 March 2010

தமிழ்ப் படம் கற்றுத்தந்த பாடங்கள்

வணக்கம் மக்களே...

கொஞ்சம் மொக்கையாகத்தான் இருக்கும். என்ன செய்வது...? பூமிக்கும் பண்டோராவுக்கும் உள்ள இடைவெளியை விட எனதிரு பதிவுகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதாக நண்பர்கள் கண்டித்ததால் அவசரமாக இந்த பதிவைப் போடுகிறேன். அது மட்டுமல்ல. மருவத்தூர் பதிவு, அதற்கு ஷிவு போட்ட பின்னூட்டங்கள், சுரேஷுக்கு ஒரு கடிதம் என்று தொடர்ந்து சீரியஸாக போய்க்கொண்டிருந்தால் நமது ஹியுமர் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமென்ற பயத்தில் இந்த பதிவைப் போடுகிறேன்.
படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போதுதான் படத்தை பார்க்க முடிந்தது. படத்தில் கதை என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால் விக்கிப்பீடியாவில் மட்டும் பக்கம் பக்கமாக என்னதான் போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் தமிழ்ப்படத்தை எப்படி ரசித்தார்களோ, அப்படித்தான் நான் வழக்கமாக பேரரசு, ஹரி படங்களையும் ரசிப்பேன். அந்த வரிசையில் சிவகாசி படத்திற்குப்பின் நான் குலுங்கிச்சிரித்த ஒன்றுதான் தமிழ்ப்படம்.

நாலு லொள்ளு சபா எபிசோடை ஒரே டேக்கில் பார்த்த ஒரு பீலிங். டைட்டில் கார்டு போடுவதில் இருந்தே கலாய்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கமல் சொன்னது போல கடைசி வரை அதை மெயின்டெயின் பண்ணவும் செய்திருக்கிறார்கள். ஈவன், நாயகன் மற்றும் நாயகியின் பாத்திரங்களின் பெயரில்கூட கலாய்ப்பதை விட்டுவைக்கவில்லை. கொஞ்சம் யோசித்து பாருங்களேன், முக்கால்வாசி கமர்ஷியல் சினிமாக்களில் நாயகன் பெயர் ஷிவாவாகவும் நாயகியின் பெயர் ப்ரியாவாகவும் தான் இருக்கும்.
கிழக்கே போகும் ரயில், கருத்தம்மாவில் ஆரம்பித்து கந்தசாமி வரை கிழித்திருந்தார்கள். நடிகர்களில் பாக்யராஜ், ராமராஜன் தொடங்கி சிம்பு வரை கலாய்த்திருக்கிறார்கள். முப்பதிற்கும் மேற்ப்பட்ட படங்கள் பஞ்சராக்க பட்டிருக்கிறது. அவற்றுள் எனக்கு பிடித்த நான்கினை மட்டும் போல்ஸில் இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்த காட்சியில் வாக்களித்து விடுங்கள்.
ஏற்கனவே படத்தை பார்த்தவர்களுக்கும் இனி பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சில எச்சரிக்கைத்துளிகள்:
1. சிறுவர்கள் யாரும் ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் சைக்கிளின் மீது ஏறி அமர்ந்து பெடலை சுற்ற வேண்டாம். பின்னர் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.
2. சிவாவைப் போல பரதம் ஆட யாரும் முயற்ச்சிக்க வேண்டாம். படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் தேர்ந்த நிபுணர்களால் பலத்த பாதுக்காப்புகளுக்கு மத்தியில் செய்யப்பட்டது.
3. படத்தில் காட்டப்படும் P.R.S. கள்ளிப்பால் விற்பனைக்குட்பட்டது அல்ல. டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்று P.R.S கள்ளிப்பால் தான் வேண்டுமென யாரும் அடம் பிடிக்க வேண்டாம்.
படம் பார்த்த பின்பு இன்னமும் கூட கலாய்த்திருக்கலாமோ என்று தோன்றியது. அவ்வாறாக இயக்குனர் தவறவிட்ட சில சிக்சர்கள்:
1. வண்டிக்கடைகள் சிதற, மண்பானைகள் நொறுங்க, பொதுமக்கள் தெறித்து ஓட, என்பதுகளில் வெளிவந்த கிராமத்து படங்களில் காட்டப்பட்ட சந்தைக்கடை சண்டைக்காட்சி மிஸ்ஸிங்.
2. பாய்ஸ் பட பாணியில் யூத்துக்கள் பட்டாபி, வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா அறிமுகமாவது அமர்க்களம். ஆனால் பார்த்திபன் அல்லது கெளதம் மேனன் வாய்ஸில் ஒவ்வொரு யூத்துக்கும் ஒரு இன்ட்ரோ கொடுத்திருக்கலாம்.
3. விக்ரமன் படங்களில் வருவது போல "காதல்ங்கறது..." என்று ஆரம்பிக்கக்கூடிய தத்துபித்துவ வசனங்கள் இல்லாதது எனக்கு ரொம்பவே வருத்தம். அட்லீஸ்ட் பேக்ரவுண்டில் "லா லா லா... லா லா லா..." என்று பாடும் சியர் கேர்ள்ஸையாவது கூப்பிட்டிருக்கலாம்.
4. அதிகமாக ஷங்கர் தனது படங்களில் பொதுமக்களை ஊறுகாயாக பயன்படுத்தும் ஒரு காட்சி: நாயகன் கைதாகும் போதோ அல்லது இக்கட்டான சூழலில் இருக்கும்போதோ மக்களுள் லோ கிளாஸ் முதல் ஹை கிளாஸ் வரை நாயகனுக்கு ஆதரவாக கமென்ட் கொடுப்பார்கள். அத்தகைய காட்சி எதுவும் இந்தப்படத்தில் இல்லை.
இது தவிர்த்து நாயகன் புலி பொம்மையோடு சண்டையிடும் காட்சியை ஏற்கனவே ஷாருக்கான் கிழித்துவிட்டதால் அது தேவையில்லை.
சரி சீரியஸான விஷயத்திற்கு வருவோம். படத்தை பார்த்தோம், சிரித்தோம். போதுமா...? சிந்திக்க வேண்டாமா...?
தமிழ்ப்படம் கற்றுத்தரும் பாடங்கள் என்னென்ன...?
1. இனியாவது "அசிலி பிசிலி", "டோல் டப்பி மா" என்று அர்தத்தம் புரியாத அல்கஞ்சாரி குல்கா பாடல்களை ஹிட்டாக்கக் கூடாது.
முக்கியமாக சன் மியுசிக்குக்கு கால் பண்ணி அத்தகைய பாடல்களை அக்காப்பொண்ணு அருக்கானிக்கு டெடிகேட் பண்ணக்கூடாது.
2. தாமு, வையாபுரி, சார்லியெல்லாம் அரியர் பேப்பர் கிளியர் பண்ணலை என்று சொல்லிக்கொண்டு காலேஜ் பக்கம் வந்தால் கூட யாரும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்.
3. கழிவறையில் அமர்ந்தபடி ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆவது போல கனவு காண்பது தவறு. அதிலும் தொழிலதிபர் கனவு மிகவும் ஆபத்தானது. வேண்டுமானால் ஏ.ஆர்.ரகுமானைப் போல ஒரே பாடலில் உலகப்புகழ் அடைய முயலுங்கள்.
4. இனியாவது கிழவிகளை கட்டிப்பிடிக்கும் நாயகர்களை கண்டு சிலிர்க்க வேண்டாம். இப்படித்தான் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே ஏமாற்றி வருகிறார்கள்.
5. the ultimate one: இனியாவது ஷங்கர், பேரரசு, ஹரி போன்றவர்களது படங்களைப் பார்த்து அடுத்தர்களது போதைக்கு ஊறுகாயாகாமல் இருங்கள்.


இது போல உங்களுக்கும் ஏதாவது தத்துபித்துவங்கள் தோன்றியிருந்தால் பின்னூட்டம் போட்டு பிதற்றிவிட்டு செல்லுங்கள். பதிவை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் போடாதவர்களை அந்த விரலை ஆட்டி நடிக்கும் தம்பி படத்தை நூறுமுறை போட்டுக் காட்டுங்கப்பா...
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment