அன்புள்ள வலைப்பூவிற்கு,
டைரி எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்டகால அவா என்றாலும் அதில் ஏராளமான
நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மனம் தளராமல் தொடர்ச்சியாக எழுத வேண்டும். யார்
கையிலும் சிக்கி விடாமல் பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டும். அப்படியே
பாதுகாத்தாலும் கூட ஒரு insecured feeling இருக்கும். அதனால் எல்லா ரகசியங்களையும்
அப்பட்டமாக எழுத முடியாது. சரி, சங்கேத மொழியில் எழுதலாம் என்றால் அது பின்னாளில் நமக்கே
புரியாமல் போகக்கூடிய அபாயம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக எழுதுவதற்கு தேவையான அரை மணிநேர தனிமை
கிடைக்காது. இது போன்ற காரணங்களுக்காக நான் இதுவரையில் ஹார்ட் காப்பியாக டைரி
எழுதியது கிடையாது. (கூகுள் நோட்புக் என்ற சேவை இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம்
சாஃப்ட் காப்பியாக டைரி எழுதியிருக்கிறேன்).
![]() |
| தேடிக் கண்டுபிடித்து வாங்கிய நோட்புக் |
சமீபகாலமாக ஒரு எண்ணம். டைரி எழுதினால் வாழ்க்கையின் பல அற்புதமான
தருணங்களை பதிவு செய்யலாமே என்று தோன்றுகிறது. குறிப்பாக எனது மகளுடைய குழந்தை பருவத்தை
எனது வார்த்தைகளில் பதிவு செய்து வளர்ந்த பிறகு அவளிடம் காட்ட வேண்டும் என்கிற
பேராவல். நியாயமாக பார்த்தால் இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் டைரி எழுத
ஆரம்பித்திருக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வருத்தமாகத் தான்
இருக்கிறது. இப்போதும் ஒன்னும் கெட்டுவிடவில்லை, கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கையும்
சேர்ந்து டைரியில் எழுதிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எனக்கு
வரிசையாக தேதி போட்டு, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு அரைநாள் மட்டும் ஒதுக்கும் ஒழுங்குமுறை டைரிகள்
ஒத்துவராது. சுதந்திரமாக எழுத வேண்டும். தேவைப்பட்டால் ஆறு பக்கமும்,
இல்லையென்றால் அரை பக்கமும் எழுதிக்கொள்ளும் சுதந்திரம் வேண்டும். அதற்காகவே
தேடிக் கண்டுபிடித்து ஸ்பெஷலாக ஒரு நோட்டு புத்தகம் வாங்கியிருக்கிறேன். கீ-போர்டில்
நடனமாடிய எனது விரல்கள் இனி மகளுக்காக பேனாவும் பிடிக்கப் போகிறது.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|
