Showing posts with label experience. Show all posts
Showing posts with label experience. Show all posts

6 July 2016

பெங்களூரு தினங்கள் – 4


அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு போகப்போகிறோம் என்றதும் அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் உற்சாகமூட்டிய ஒரு விஷயம், அங்கு நல்ல சரக்கு கிடைக்கும் என்பது. குறிப்பாக வெளிநாட்டு பியர் வகைகள். தமிழ்நாட்டு மதுக்கடைகளில் திரும்பிய திசையெல்லாம் கிங்ஃபிஷர்தான் பிரதானமாக கிடைக்கும். அதிலேயும் ‘லாஹர்’ கிடைக்காது, கூலிங் இருக்காது. வேண்டாம் என்றால் 6000, 12000 என்ற பெயரில் உள்ள மட்டமான பியர்தான் கிடைக்கும். டாஸ்மாக்குகளின் ஒரேயொரு ஆறுதல் ப்ரிட்டிஷ் எம்பயர் பியர்தான். பெங்களூரில் அப்படியில்லை. கால்ஸ்பர்க், பட்வெய்ஸர், ஹெய்னகென், ஃபாஸ்டர்ஸ் உட்பட நல்ல பியர்கள் டின்னிலும், பாட்டிலிலும் MRP விலைக்கே கிடைக்கின்றன. 

முதல்முறை பெங்களூரில் உள்ள ஒரு மதுபான ஷோரூமுக்கு சென்றோம். ஏறத்தாழ தமிழக எலைட் கடைகளைப் போல காட்சியளித்தது. ஆனால் சாய்ஸ் மட்டும் ஏராளம்.

தமிழகத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். டாஸ்மாக்கில் மற்ற பானங்களை விட பிராந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். புதிய சரக்குகளை அறிமுகப்படுத்தும்போது அதில் பிராந்தி பிரதான இடம் வகிக்கும். ஒருமுறை அலுவலக டீம் அவுட்டிங் சென்றிருந்தோம். வந்திருந்தவர்கள் அவரவர் விருப்ப சரக்குகளை கொணர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர்கூட பிராந்தி கொண்டு வரவில்லை. மேலும் என் பையில் இருந்து பிராந்தியை எடுத்ததும் என்னை ‘டிபிக்கல் டமில்நாடு கய்’ என்று ஏளனம் செய்தார்கள். சென்னையின் விருப்ப பானம் பிராந்திதான் என்று ஒரு பிரபல நாளிதழே சூடமேற்றி சத்தியம் செய்கிறது. மற்ற (பியரல்லாத) பானங்களோடு ஒப்பிடும்போது டாஸ்மாக்குகளில் எண்பது சதவிகிதம் பிராந்தி விற்பனையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பிராந்தியை குதிரைக்கு கொடுக்கும் சரக்கு என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதனால்தான் தங்களை கட்டுக்கடங்காத குதிரையாக கருதும் தமிழர்கள் பிராந்தியை அருந்துகிறார்களோ ? இன்னொரு பக்கம், தமிழர்கள் வேறு வழியில்லாமல் தான் பிராந்தி அருந்துகிறார்களோ என்ற ஐயப்பாடும் எனக்கு எழுவதுண்டு. உண்மையைச் சொல்வதென்றால் தமிழக குடிகாரர்கள் பெரும்பாலோனோருக்கு பானங்களின் பெயரோ, வகையோ தெரிவதில்லை. இருப்பதிலேயே மலிவாக எது கிடைக்கிறதோ அதனை அவர்கள் உட்கொள்கிறார்கள். டாஸ்மாக்குகளில் வெறுமனே பணத்தை மட்டும் நீட்டி எழுபது ரூபாய் சரக்கு, எண்பது ரூபாய் சரக்கு என்று கேட்பவர்கள் அதிகம். எதற்காக இந்த பிராந்தி கதையை சொல்கிறேன் என்றால் பெங்களூரில் ஒப்பீட்டளவில் பிராந்தி குறைவு. அதே சமயம் ரம், விஸ்கியில் அதிக வெரைட்டி கிடைக்கின்றன. 

பெங்களூரில் உள்ள விதவிதமான மதுக்கடைகளுக்கும், மதுக்கூடங்களுக்கும், க்ளப் / பப் வகையறாக்களுக்கு சென்று ஆராயும் அளவிற்கு எனக்கு நேரம் கிடைத்ததில்லை. ஒருமுறை அங்குள்ள மோர் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். அங்குள்ள பலசரக்கு பொருட்களுக்கு இடையே ஓரமாக ஒரு பிரிவை மதுபானங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு நான் கண்டு உவந்த சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.
  • குவார்ட்டர் அளவு பானங்கள் ஃப்ரூட்டி பாணியில் டெட்ரா பேக்குகளில் கிடைக்கின்றன. இதுபோக பாண்டிச்சேரி போல சாம்பிள் பானங்கள் குட்டிக்குட்டி புட்டிகளில் கிடைக்கின்றன.
  • மலிவான பானங்கள் முதல் விலையுயர்ந்த ‘ஒசந்த சாதி’ பானங்கள் வரை பாரபட்சமின்றி கிடைக்கின்றன. குறைந்த பட்சமாக ஒரு ஃபுல் பாட்டில் ரம் வெறும் 254 ரூபாய்க்கு கிடைக்கிறது.
  • பகார்டியில் லெமன், ஆப்பிள், ஆரஞ்சு, பீச், கொய்யா, டிராகன் ஃப்ரூட், ராஸ்பெர்ரி உள்ளிட்ட சுவைகள் கிடைக்கின்றன. இதுபோக இறக்குமதி செய்யப்பட்ட காபோ, மலிபு தேங்காய் சுவையூட்டப்பட்ட வெண்ணிற ரம் கிடைக்கின்றன.
  • வொட்காவில் ஸ்மிர்னாஃப், எரிஸ்டாஃப், ரோமொனோவ் போன்ற உள்ளூர் பானங்களில் துவங்கி அப்சொலூட், க்ரே கூஸ் வரை கிடைக்கின்றன.
  • ஜின்னில் டாஸ்மாக்கில் கிடைக்குமே அந்த லோக்கல் பிராண்ட் (ப்ளு டைமண்ட் ?) தொடங்கி 8400 ரூபாய் மதிப்புள்ள டேன்க்வெரி (Tanquery) நம்பர் 10 ஜின் வரை கிடைக்கின்றன. அநேகமாக, அங்குள்ள விலையுயர்ந்த பானம் இதுவாகத்தான் இருக்கும்.
  • பியர்களில் முந்தைய பத்தியில் சொன்னது போல கால்ஸ்பர்க், பட்வெய்ஸர், ஹெய்னகென், ஃபாஸ்டர்ஸ் உட்பட நல்ல பியர்கள் டின்னிலும், பாட்டிலிலும் MRP விலைக்கே கிடைக்கின்றன. இதுபோக சில உள்ளூர் பியர்வகைகளும், ப்ரீசர்களும் கிடைக்கின்றன.
  • விஸ்கியில் பேக்பைப்பர் ரேஞ்சில் ஆரம்பித்து ப்ளாக் டாக், ஜேக் டேனியல், க்ளென்ஃபிடிச் வரை கிடைக்கின்றன. ஒரு ஃபுல் பாட்டில் க்ளென்ஃபிடிச்சின் விலை ஏழாயிரத்து எழுநூற்றி சொச்சம்.
  • ரெட் மற்றும் ஒயிட் ஒயின்கள் வெவ்வேறு விலையில் கிடைக்கின்றன. போர்ட் ஒயின் எனப்படும் காட்டமான ஒயின் வகையின் மிகக்குறைவான விலை என்னவென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒரு ஃபுல் பாட்டில் வெறும் 86 ரூபாய். 
ஐடி துறையில் பணிபுரிபவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இவர்கள் பெரும்பாலும் தாங்கள் ஐரோப்பாவிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக கற்பனையில் இருப்பவர்கள். எங்கும், எதிலும் ஆடம்பரமாக இருப்பதை விரும்புவார்கள். ஆனால் குடி என்று வந்துவிட்டால் இவர்கள் பெரும்பாலும் விரும்பிக் குடிக்கும் பானம் எது தெரியுமா ? ஓல்ட் மாங்க் ! முதலில் இதனை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவேளை ஓல்ட் மாங்க் என்ற பெயரில் இறக்குமதியாகும் பானம் ஒன்றிருக்கிறது போலும் என்றுதான் நினைத்தேன். பின்னாளில் அது அதே அடிமட்ட ஓல்ட் மாங்க் என்பதை தெரிந்துகொண்டேன். ஓல்ட் மாங்க்கை சிலாகித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பல கட்டுரைகளை நீங்கள் கூகுளில் தேடிப் படிக்கலாம். அத்தகைய பெருமைகள் கொண்ட ஓல்ட் மாங்க் பெங்களூரில் சல்லிசாக கிடைக்கிறது. ஒரு ஃபுல் 305 ரூபாய். இதே பாணியில் விஸ்கியில் கிளாஸிக்கான பேக்பைப்பரும் மலிவாக கிடைக்கிறது. இவையிரண்டையும் பார்த்தபிறகு எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. பிராந்தியில் குரியர் நெப்போலியன் என்றொரு அடிமட்ட அற்புதம் உள்ளதே அது எங்கே அய்யா ? அதே போல டக்கீலா பானங்களை பார்த்ததாக நினைவில்லை. ஒருவேளை வேறு கடைகளில் இருக்கலாம். 

பெங்களூரில் ஆங்காங்கே உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் (Restobar) உள்ளன. இவற்றில் ஒன்றில் நுழைந்து கால்ஸ்பர்க் கேட்டோம். தமிழக பார்களைப் போலவே கிங்ஃபிஷர் கொண்டு வரட்டுமா என்று மதுக்கூட ஊழியர் காலில் வெந்நீர் ஊற்றியதைப் போல துடியாய் துடித்தார். (என்ன மாயம் செய்தாய் மல்லய்யா ?) அதெல்லாம் முடியாது என்றதும் வெவ்வேறு பியர்களின் பெயரைச் சொல்லி கடைசியாக கில்லரோ, புல்லட்டோ ஏதோ ஒரு பெயர்கொண்ட பியரைக் கொணர்ந்து இது கால்ஸ்பர்கை போலவே இருக்கும் என்று திறக்கப் போனார். ‘குடித்தால் கால்ஸ்பர்க், இல்லையேல் விஷம்’ என்ற கொள்கையோடு அங்கிருந்து உக்கிரமாக வெளிநடப்பு செய்து மற்றொரு மதுக்கூடத்திற்கு சென்று கால்ஸ்பர்கை அடைந்தோம். இந்த மதுக்கூடங்களில் உள்ள இன்னொரு விசேஷம் பன்றிக்கறி. எனக்கு நினைவிருக்கிறது, நான் சின்ன வயதிலிருந்தபோது தமிழக துரித உணவகங்களில் பன்றிக்கறி கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னர் என்ன காரணத்தினாலோ அவை கிடைப்பதில்லை. இப்போது மாட்டுக்கறி கூட பெரும்பாலும் கிடைப்பதில்லை. பெங்களூரில் பன்றி மற்றும் மாட்டிறைச்சியை பாரபட்சமில்லாமல் விற்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம், ஒரேயொரு முறை பெங்களூரு மதுக்கூடங்களுக்கு சென்றுவிட்டு வந்து டாஸ்மாக்குகளுக்குள் நுழைந்தால் உங்களுக்கு வாழ்ந்துகெட்ட வீடு நினைவுக்கு வரும் ! 

பன்றிக்கறி வறுவலுடன் கால்ஸ்பர்கை பருகிய உற்சாகத்தில் வெளியேற முற்பட்டபோது ஒரு குடிமகன் அவருடைய பில்தொகையை குறுகுறுவென உற்றுப்பார்த்துவிட்டு பணியாளர் தன்னை ஏமாற்ற முயல்வதாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். மாநிலம் மாறலாம், மொழி மாறலாம், மதுபானங்களும் மாறலாம். ஆனால் மக்கள் மாறுவதில்லை ! 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 June 2016

பெங்களூரு தினங்கள் - 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெங்களூரு வந்து மூன்று வாரங்களாகி விட்டன. எல்லா வார இறுதிகளிலும் தவறாமல் சென்னை வந்துவிடுகிறேன். முதல்முறையாக சென்னையை விட்டு கிளம்பியது ஒரு துயரம் என்றால் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையை விட்டு கிளம்புவது பெருந்துயரம். சனிக்கிழமை எப்படி, எங்கே போனதென்றே தெரியாது. ஞாயிற்றுக்கிழமை மதியத்தை தாண்டியதும் மனச்சலனம் துவங்கிவிடும்.

மனப்போராட்டங்கள் ஒருபக்கம் என்றால் ரயிலில் / பேருந்தில் டிக்கட் எடுப்பது, பயணிப்பது எல்லாம் இன்னொரு வகையான போராட்டம். முதல் வார இறுதிக்கு, சில மாதங்கள் முன்பே ரயில் டிக்கட் முன்பதிவு செய்து வைத்திருந்ததால் பிரச்சனையில்லை. அடுத்தடுத்த வாரங்களுக்கு தட்கல் டிக்கட் புக் செய்ய வேண்டியிருந்தது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது ஒரு கலை. இதுகுறித்து BLADEPEDIAவில் விரிவாக எழுதியுள்ள பதிவு நல்ல பலனளித்தது. காலையில் பத்தரை மணியளவில் குளித்து முடித்து சுத்தமாக, கடவுள் நம்பிக்கை இருந்தால் தொழுதுவிட்டு கணினி முன்பு வந்து அமர்ந்துகொள்ள வேண்டும். சோர்ஸ், டெஸ்டினேஷன் ரயில் நிலைய மூன்றிலக்க குறியீடுகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ரயில், எந்த தேதி, எந்த நேரம் என்பதையெல்லாம் கவனமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பயணம் செய்பவர்களின் பட்டியலை முன்கூட்டிய மாஸ்டர் பாசஞ்சர்ஸ் லிஸ்டில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். சரியாக பத்து ஐம்பத்தி எட்டுக்கு ஒருமுறை லாக் அவுட் செய்து லாகின் செய்துகொள்வது நலம். IRCTC சர்வரில் சரியாக பதினோரு மணியானதும் துரித கதியில் டிக்கெட் புக் செய்ய வேண்டும். பெங்களூருக்கு பரவாயில்லை. அதிக போராட்டங்கள் இல்லாமல் கிடைத்துவிடுகிறது.

ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் இளைஞர்கள் ‘வாரணம் ஆயிரம்’ சமீரா போல தங்களுக்கு ஒருபோதும் சகபயணி அமைவதில்லை என்று புலம்புவதை பார்த்திருப்பீர்கள். ஒருவேளை சமீரா போன்ற சகபயணி கிடைத்தால் இந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பெங்களூரு செல்லும் இரவு ரயிலை பொறுத்தவரையில் சமீரா மாதிரி அல்ல, சமீராவே வந்தாலும் பிரயோஜனமில்லை. ஏனென்றால் ரயில் கிளம்பிய அடுத்த நிமிடமே அனைவரும் அவரவர் பெர்த்தில் ஏறி படுத்துக்கொள்கின்றனர். அத்தோடு கண்டோன்மென்ட் வந்ததும் தான் துயில் எழுகின்றனர். இருந்தாலும் சார்ட்டில் நம் கம்பார்ட்மென்டில் யுவதிகள் யாரேனும் உளரா பார்ப்பதில் ஒரு கிக் இருக்கிறது. ஒருமுறை இப்படி சார்ட் பார்க்கும்போது F28 ஒன்று இருந்தது. ஆளை பார்க்கும் ஆவலில் பெர்த்தில் ஏறி படுக்காமல் காத்திருந்தேன். ரயில் கிளம்பும் தருவாயில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அம்மாள் வந்து நான் எதிர்பார்த்த பெண்ணுக்குரிய சீட்டில் படுத்துக்கொண்டார். அவர்தான் அந்த F28 என்பதை ஜீரணிக்கவே எனக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. ரயில் டிக்கட் புக் செய்யும்போதாவது உங்கள் உண்மையான வயதை குறிப்பிட்டுத் தொலைக்கலாமே லேடீஸ்? அடுத்தமுறை ஒரு F26 இருப்பதை கவனித்தேன். நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அமைதியாக சீட்டில் அமர்ந்து ரயில் கிளம்புவதற்காக காத்திருந்தேன். இந்தமுறை நிஜ யுவதிதான். பவ்யமாக என்னிடம் வந்து என்னுடையது மிடில் பெர்த், அதை நீங்கள் எடுத்துக்கொண்டு உங்கள் அப்பர் பெர்த்தை எனக்கு தர முடியுமா என்று வினவினார். அழகான பெண்கள் கேட்டால் அப்பீல் உண்டா. ஒரு நொடிகூட தாமதிக்காமல் மாற்றிக்கொண்டேன். இன்னொரு முறை எனக்கு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. சார்ட்டில் எல்லோரும் பெருசுகள் என்பதால் வெளியில் காத்திருந்து ரயில் கிளம்புவதற்கு ஒரு நொடிக்கு முன் ஏறினேன். என் பெர்த் அருகே சென்றதும் எதிர் லோயரில் இருந்த முதியவர், அவருடைய மனைவி பக்கத்து கோச்சில் தனியே இருப்பதால் என்னை அங்கே மாற்றிக்கொள்ளுமாறு பணித்தார். சரி என்றதும் விறுவிறுவென பக்கத்து கோச்சுக்கு நடந்து, அங்கு லோயர் பெர்த்தில் உறங்கிக்கொண்டிருந்த ஒரு அம்மாளை எழுப்பினார். அவர் எழுந்து சில நொடிகளுக்கு முதியவரை முறைத்துப் பார்த்தார். பெரியவர் ஏதோ நினைவுக்கு வந்தவராய் அடுத்த கம்பார்ட்மென்ட் லோயர் பெர்த்துக்கு போய் அங்கிருந்த அம்மாளை எழுப்பினார். முதலில் எழுப்பியது அவருடைய மனைவி இல்லை போலும்.

IRCTC ஒரு பக்கம் என்றால் SETCயில் டிக்கெட் புக் செய்வது இன்னொரு வகையான தலைவலி. SETC தளத்திற்கு சென்றால் ஆறரை, ஏழு, ஏழரை என்று அரைமணிக்கொரு பேருந்து இருப்பதாக காட்டுகிறது. ஆனால் பேருந்து நிறுத்தத்தில் நாய் மாதிரி காத்திருந்தால் ஆறே முக்காலுக்கு வர வேண்டிய பேருந்து ஏழு இருபதுக்கு சாவகாசமாக வருகிறது. தாமதமாக வருவது குறித்த குற்ற உணர்ச்சி துளிகூட ஓட்டுநரிடமோ, நடத்துநரிடமோ இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் டிக்கெட் குறைவாக புக் ஆகிற காரணத்தினால் ஆறரை, ஏழு மணி பேருந்துகளை ஒரே பேருந்தாக்கி விடுகின்றனர். KSRTC பேருந்துகள் மாலை நேரங்களில் சென்னைக்கு இயக்கப்படுவதில்லை. இதுவரையில் தனியார் பேருந்துக்கு முயற்சி செய்யவில்லை. IRCTC, SETC இரண்டும் காலை வாரும்போது தனியாரிடம் தான் செல்லவேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூரு பரிட்சயமாகி வருகிறது. மடிவாளா என்பது நம்ம ஏரியா என்று மனதில் பதிய ஆரம்பித்திருக்கிறது. இது அதிகம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி என்று சொல்லப்படுகிறது. சுலபமாக கிடைக்கும் பீஃப் பிரியாணி இதனை உறுதிப்படுத்துகிறது. பிரம்மாண்டமாக இருக்கும் ஹனுமான் சிலைதான் இந்த ஏரியாவுக்கு நம்மை வரவேற்கிறது. திப்பு சுல்தானுக்கு விழா எடுக்கிறார்கள். மொட்டை மாடியில் இயங்கும் ஒரு கிறிஸ்தவ ஆலயமும் உண்டு. திடீரென அம்பேத்கர் பேந்தர்ஸ் சார்பாக கூட்டம் நடக்கிறது. மொத்தத்தில் மடிவாளா ஒரு லிட்டில் இந்தியா என்றுதான் சொல்லவேண்டும். இப்போது கொஞ்சம் ஏரியா பழக்கமாகிவிட்டதால் எங்கெங்கே என்னென்ன கிடைக்கும் என்று தெரிகிறது. BDA காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு பேக்கரியில் அற்புதமான லெமன் டீ கிடைக்கிறது. பொமனஹல்லி கிருஷ்ணா தியேட்டர் அருகிலுள்ள வண்டிக்கடையில் அட்டகாசமான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் கிடைக்கிறது. 

இவை தவிர்த்து, பெங்களூருக்கென சில பிரத்யேக வாசனைகள் உள்ளன. தெருவோரத்தில் மாம்பழம் விற்கும் கடைகளை கடக்கும்போது கும்மென்று ஒரு வாசம் வரும். மறுபடியும் ஒருமுறை அந்தப்பக்கம் நடந்து போகலாமா என்று தோன்றும். அடுத்தது, பானிப்பூரி வாசனை. கடுந்தவம் புரியும் முனிவரிடம் இந்த பானிப்பூரி வாசத்தை காட்டினால் தவம் கலைந்துவிடும். பெரும்பாலான டீக்கடைகளில் லெமன் டீ சாதாரணமாக விற்கப்படுகிறது. தமிழகத்தில் இது அரிதாக சில டீக்கடைகளில் மட்டும்தான் பார்க்க முடியும். சென்னை சத்யம் திரையரங்கின் எதிரில் மசாலா பெப்ஸி என்று ஒன்று கிடைக்கும். பெரிய விசேஷமில்லை. பெப்ஸியில் ஜல்ஜிரா மசாலாவை கலந்தால் மசாலா பெப்ஸி. பெங்களூரில் இது ரெடிமேடாகவே கிடைக்கிறது. பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா என்கிற பெயரில் கிடைக்கும் இந்த பானம் கர்னாடகத்தின் காளிமார்க். டீ / ஜுஸ் கடைகளிலும் ஜல்ஜிரா டீ, மசாலா கோக், மசாலா 7UP போன்றவை கிடைக்கின்றன.

பெரிய பெரிய ஸ்டார்கள் எல்லாம் செருப்பு விளம்பர பதாகைகளில் சிரிக்கிறார்கள். லுனாருக்கு உபேந்திரா, பாரகனுக்கு சுதீப் மற்றும் சமந்தா, வி.கே.சி. பிரைடில் கன்னுக்குட்டிக்கு பதிலாக திவ்யா ஸ்பந்தனா. இந்த பதாகைகள் ஹைவேஸில் இருநூறுக்கு அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. செருப்புகளுக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

புதிய வேலை என்பதால் அலுவலகத்தில் அதிகம் வாட்டுவதில்லை. பெங்களூர் சூழலும் கொஞ்சம் இலகுவாகி வருவதால் தினசரி ஒரு புத்தகம், அரை சினிமா, பக்கத்து ஏரியாவுக்கு போய் நைட் ஷோ படம் பார்ப்பது என்று செட்டில் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் அலுவலகத்திலிருந்து ஒரு (இன்ப) அதிர்ச்சி கொடுத்தார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 June 2016

பெங்களூரு தினங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு. புது ஊர், புது மாநிலம், புது வேலை, புது மனிதர்கள். ஒரு பக்கம் பதட்டமாகவும், மறுபக்கம் உற்சாகமாகவும் இருக்கிறது. என்னதான் நடந்துவிடும். வாழ்ந்துதான் பார்த்துவிடுவோமே என்கிற நம்பிக்கையில் தான் பெங்களூருக்கு சென்றிருக்கிறேன்.

பெங்களூரில் நான் தங்கப்போகிற இடத்தின் பெயர் மடிவாளா என்று முகவரி கொடுத்திருந்தார்கள். லேண்ட்மார்க் சந்தியா டிஜிட்டல் தியேட்டர் அருகில். முதலில் ஏனோ எனக்கு இது சினிமா தியேட்டர் என்பது ஸ்ட்ரைக் ஆகவில்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரியாத டாக்ஸி டிரைவரிடம் ஜிப்ரிஷில் வழி சொல்லி சந்தியா தியேட்டர் வாசலில் வந்து இறங்கினேன். நிமிர்ந்து பார்த்தால் சினிமா தியேட்டர் :) அதுவும் காஜல் அகர்வால் படம் (பிரம்மோத்சவம்). ஆனால் இதனை நினைத்து நினைத்து அகமகிழும் மனநிலை அப்போது இல்லை. 

இளைப்பாறிவிட்டு அருகிலிருக்கும் நண்பன் வீட்டைத் தேடியபடி பெங்களூரு தெருக்களில் ஒரு சுற்று வந்தேன். எங்கு பார்த்தாலும் PG for Gents, PG for ladies என்று போர்டுகள் தொங்குகின்றன. முதலில் எனக்கு PGயின் விரிவாக்கம் என்னவென்று தெரியவில்லை. நண்பனிடம் கேட்டு Paying Guest என்று தெரிந்துக்கொண்டேன். ‘மெய்ன் ஹூன் நா’ படத்தில் ஷாருக் தனது கல்லூரி நண்பர் / தம்பி வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குவார். அதாவது பெயருக்கேற்ப அந்த வீட்டில் நம்மை ஒரு விருந்தினர் போல கவனித்துக் கொள்வார்கள். ஆனால் தின்பதற்கும் தூங்குவதற்கும் மட்டும் பணம் கொடுத்துவிட வேண்டும். இது சினிமா :) மெய்ன் ஹூன் நா PGக்கும் பெங்களூரு நிஜ PGகளுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. இது கிட்டத்தட்ட ஒரு ஹாஸ்டல் செட்டப். கொஞ்சம் சுதந்திரமான ஹாஸ்டல். 

PG போர்டுகளுக்கு அடுத்த படியாக அதிகம் தொங்குவது அகலக்கற்றை சேவை விளம்பரங்கள். இதில் பெங்களூருவாசிகளுக்கு நிறைய சாய்ஸ் உள்ளன. இவை தவிர்த்து, ஹேர் லாஸ், வெயிட் லாஸ், யோகா கிளாஸ், பேக்கர்ஸ் & மூவர்ஸ் போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஆசாமிகளுக்கான சேவைகள் குறித்த விளம்பரங்கள். இந்த விளம்பரத்தட்டிகள் நமக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன.

ஒன்று, இது வந்தேறிகளின் நகரம். இரண்டாவது, இந்த வந்தேறிகள் பெரும்பாலும் ஐ.டி துறையினர். சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக சில சமயங்களில் யோசிப்பதுண்டு. பெங்களூரை பார்க்கும்போது அப்படி யோசிப்பதே மகாபாவம் என்று தோன்றுகிறது. இங்கே அலுவலகத்தில் கன்னடர்களை தேட வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

நண்பன் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் கூகுள் மேப்ஸ் திணறியது. தொலைக்காட்சி நாடகமொன்றில் எஸ்.எஸ்.சந்திரனும், கோவை சரளாவும் கே.கே.நகரை தேடியலைவார்கள். கடைசியில் தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் பொங்கலுக்கு செல்வார்கள். நான் முதன்முதலில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் இப்படிப்பட்ட அவஸ்தையை அனுபவித்திருக்கிறேன். அண்ணா நகர் நிறுவன முகவரியை கையில் வைத்துக்கொண்டு ஏறத்தாழ மொத்த ஏரியாவையும் சுற்றிவிட்டேன். யாரைக் கேட்டாலும் ‘எந்த ப்ளாக் ?’ என்று கேட்கிறார்கள். எனக்கென்ன தெரியும். என்னிடமுள்ள முகவரியில் ப்ளாக் எதுவும் குறிப்பிடவில்லை. கிட்டத்தட்ட மதியம் வரை தேடியபின் முகவரியில் டோர் நம்பர் S51 என்று இருப்பதை கவனித்து, எஸ் ப்ளாக்கை தேடி கண்டடைந்தேன். அதன்பிறகு வாழ்க்கையில் நான் அண்ணா நகருக்கே செல்வதில்லை என்று சபதம் ஏற்றுக்கொண்டேன். டிவியில் அண்ணா நகர் முதல் தெரு போட்டால் கூட பார்க்கமாட்டேன். பெங்களூரை பொறுத்தவரையில் எல்லா ஏரியாவும் அண்ணா நகர் தான். 4th க்ராஸ், 2nd மெயின் என்று தாலியருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மேப்பில் பார்க்கும்போது தெருக்கள் எல்லாம் ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல நேர்த்தியாக இருக்கின்றன.

பெங்களூரில் முதல் தினம், நண்பரின் தயவால் அவருடைய இல்லத்தில் தரமான அசைவ உணவுடன் சிறப்பாக கழிந்தது. பொழுது சாய்ந்ததும் எனக்கான கூட்டுக்கு திரும்பினேன். இரவு உணவில் சிக்கன் குழம்பு பரிமாறப்பட்டது. அந்த சிக்கன் குழம்பை அதிலிருந்த கோழி உயிரோடிருந்து பார்த்திருந்தால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும். அடேயப்பா, நான் எப்பர்ப்பட்ட பரம்பரையிலிருந்து வந்தவன் தெரியுமா ? நானெல்லாம் வாரத்தில் எட்டு நாட்கள் (முட்டையை கணக்கிடாமல்) அசைவம் சாப்பிடுபவன் அய்யா. வேறு வழியில்லாமல், அந்த சிக்கன் மசாலா தண்ணீரை சோற்றில் குழைத்து முதல் வாய் வைக்கும்போது என் மாமியார் சமைக்கும் அற்புதமான இறால் பிரியாணியை நினைத்துக்கொண்டேன்.

இந்த துக்கங்களுக்கு மத்தியில் தனிமையும் தன் வேலையைக் காட்டத் துவங்கியது. தனிமை இனிமையானது, அது நாம் தேர்ந்தெடுத்ததாக இருக்கும்போது மட்டும். என் வாழ்வில் பல உன்னதமான தருணங்களை தனிமை எனக்கு கொடுத்திருக்கிறது. (சுய இன்பத்தை பற்றி சொல்லவில்லை). அதே தனிமைதான், இப்போது என்னை வதைக்கிறது. இயல்பில், நான் ஹோம்சிக்கெல்லாம் கிடையாது. நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறேன். ஆனால் இப்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. இந்த காதல், கல்யாணம், மனைவி, குழந்தை போன்ற லெளகீக விஷயங்கள் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்று பாருங்கள். குறிப்பாக நிலாவைப் பற்றி நினைக்கும்போது கண்ணீர் துளிர்த்துவிடும் போல இருந்தது. நிற்க. இத்தனைக்கும் என் பெங்களூர் வாசம் நிரந்தரமில்லை. பெங்களூருக்கும் சென்னைக்கும் ஆறுமணிநேர பயணம். எல்லா வாரயிறுதிகளிலும் சென்னைக்கு வந்துவிடப் போகிறேன். இப்படியெல்லாம் தீர்க்கமான மனநிலையில் இருக்கும் எனக்கே இப்படி இருக்கிறதென்றால் எங்கேயோ அமீரகத்திலோ, மலேசியா, சிங்கப்பூரிலோ எப்போது விடுமுறை கிடைக்கும் எப்போது இந்தியாவுக்கு திரும்புவோம் என்பதே தெரியாமல் மெளனமாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு எப்படி இருக்கும் ? மனதை திடப்படுத்திக்கொண்டு பெங்களூர் தினங்களின் அடுத்த பகுதியை எழுத ஆரம்பிக்கும் முன் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகள் அனைவரையும் மானசீகமாக நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 March 2015

ஃப்ராய்ட் தந்த முத்தம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதியம் பன்னிரண்டே முக்காலுக்கு சைதாப்பேட்டை நிலையத்தை தாண்டி விரைந்துகொண்டிருக்கும் கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயிலின் ஒரு பெண்கள் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். கண்களில் தூக்கம் தேங்கியிருக்கிறது. கைகளோ சிக்மண்ட் ஃப்ராய்டின் புத்தகமொன்றை தாங்கியிருக்கின்றன. முப்பத்தி ஐந்தாம் பக்கத்தின் வலது மூலையில் உள்ள வரிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...

எல்லா கண்ணியமானவர்களுக்கும் அசிங்கமான...

நிறைந்த வெள்ளிக்கிழமை. மஞ்சள் பூக்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து நிறைந்திருக்கும் சாலை. ஒருபுறம் அரூபமான பாறைகள். மறுபுறம் மரவேலி அமைக்கப்பட்ட அழகழகான தோட்டங்கள். அவற்றில் ஒன்றிலிருந்து பெண் புலியொன்று சிரித்தபடி எட்டிப்பார்க்கிறது. எனது குறி விறைக்கிறது. சுற்றிலும் வீடுகள் எதுவும் தென்படவில்லை. மனிதர்களும், எனக்கு முன்னால் நடந்து கொண்டிருப்பவளைத் தவிர. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட பாடலை பாடியபடி அவள் நடக்கிறாள். நான் தொடர்கிறேன். புட்டங்களில் முரசு கொட்டும் அவள் கூந்தலை கவனிக்கிறேன். கொஞ்ச தூரத்தில் இன்னொரு மனிதன் தென்படுகிறான். கருத்த தேகத்துடன் முக்கால் நிர்வாணமாக நின்றுக்கொண்டிருக்கிறான். எனக்கு முன்பாக நடந்துகொண்டிருப்பவளை பார்த்து ஈஈஈஈ’யென இளிக்கிறான். ஒருவேளை முன்புறமும் முரசு இருக்கிறதோ என்னவோ ? இருந்தாலும் இசை எழுப்ப கூந்தல் இல்லையே. அவன் தடிமனான ஒரு மரக்கிளையை ஜில்லெட் ரேஸர் வைத்து ஷேவ் செய்துகொண்டிருக்கிறான். அதிலிருந்து உதிரும் இலைகள் பச்சையில் இருந்து சிகப்புக்கு மாறுகின்றன. திடீரென முரசொலி கவன ஈர்ப்பு செய்கிறது. நடந்துகொண்டிருந்தவள், சட்டென திரும்பிப் பார்க்கிறாள். பரிட்சயமான முகமாக தெரிகிறது. அவளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. ஒரு படத்தில் நாயகனிடம் மன்னிப்பு கோருவதற்காக கைகளை பறவையின் இறக்கைகளைப் போல விரித்துக் காட்டுவாள். அது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. ஏதோ என்னிடம் ஏற்கனவே எதையோ பேசி தீர்மானித்து வைத்திருப்பது போல ஒரு பார்வையை உமிழ்ந்துவிட்டு மறுபடியும் நடக்கிறாள். பல மைல் தூரம் நடந்திருப்பாள். சலிக்கவில்லை. பத்து மைலுக்கு முன்னால் பார்த்த பார்வை மட்டும் கிடைத்திராவிட்டால் சலித்திருக்கக்கூடும். சாலையின் இடது புறத்தில் பல்வேறு மரங்களின் கிளைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து நீளமான கிளையொன்றை தேர்ந்தெடுக்கிறாள். இதழ்கள் பிரிகின்றன. அந்த மரக்கிளையை நேசிப்பதாக சொல்கிறாள். அது அவளுடைய தோட்டத்திற்கு தேவைப்படுகிறதாம். மரக்கிளையை தோட்டத்திற்கு கொண்டு வந்து போட முடியுமா ? என்கிறாள்.

ஜனத்திரளின் சத்தம் கேட்கிறது. கிண்டியின் நிலையத்தை கிழித்து நுழைந்துக்கொண்டிருக்கிறது ரயில். இன்னும் நிற்கவில்லை. வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஜனத்திரள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

... கனவுகள் வரத்தான் செய்கின்றன ...

அவளும் நானும் நகரத்தின் பிரபலமான ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியிலோ ஐந்தாவது மாடியிலோ நின்று கீழே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அன்றைய தினம் போகி என்பதால் மாலுக்கு நடுவே பிரம்மாண்டமாக அக்கினிக்குண்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. யுவன்களும் யுவதிகளும் ஆடைகளை களைந்து தீயில் வீசிவிட்டு நிர்வாணமாக திரும்பிச் செல்கிறனர். எனக்கு அருகில் நின்றுக்கொண்டிருப்பவளும் ஒரு யுவதிதான். அவள் பக்கமாக திரும்பி நேற்றைய ரயில் பயணத்தில் அவள் என் கனவில் வந்தது பற்றி கூறுகிறேன். என்ன கனவு என்கிறாள். சொல்கிறேன். ஒன்று விடாமல் சொல்லவில்லை. ‘முரசு’ சம்பவத்தை மட்டும் தந்திரமாக சென்ஸார் செய்துவிட்டு மற்றவைகளை சொல்கிறேன். உண்மையில் அந்த முரசு சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை. அவளுக்கு அவ்வளவு நீளமான கூந்தல் இல்லை. முழுக்கனவையும் கேட்டுவிட்டு சுவாரஸ்யமில்லாமல் சிரிக்கிறாள். ஒரு தற்செயலான பொருத்தம் என்ன தெரியுமா ? நான் தற்சமயம் சிக்மண்ட் ஃப்ராய்டை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அதனால் தான் இப்படியெல்லாம் கனவுகள் வருகிறதா ? என்று கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். பெண்களுக்கு கவலையுடன் இருப்பவர்களை பிடிக்கிறது. அப்போதுதானே சமாதானப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அருகில் வந்து என்னை கட்டிபிடித்து அரவணைக்கிறாள். நாவில் பட்ட எக்லேர்ஸ் சாக்லேட் போல உருக்குலைந்து கொண்டிருக்கிறேன். உருக்குலைந்த என்னை உருண்டையாக திரட்டி போகி நெருப்பில் வீசுகிறாள்.

... என்பது ஒரு அழகான உண்மை.

தொப்புள் தெரிய புடவை கட்டிய ஒருத்தி என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். க்ளக் க்ளக் க்ளக். யாரோ பரோட்டாவுக்கு மாவு பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா... இவ்வளவு பலமாகவா அடிப்பது ? அருமையான கனவொன்று கண்டு கொண்டிருக்கின்றேனே அய்யா என்று புலம்புகிறேன். யாரோ என் உச்சந்தலையில் கை வைத்து தம்பி தம்பி என்று அழைப்பது போல தெரிகிறது. அடேய், அரை மணிநேரம் கழித்து வா ஐம்பது பரோட்டா சாப்பிடுகிறேன். இப்போது போய் விடு !

“தம்பி... அக்காவுக்கு காசு கொடுப்பா...”

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 January 2015

டைரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


டைரி எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்டகால அவா என்றாலும் அதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மனம் தளராமல் தொடர்ச்சியாக எழுத வேண்டும். யார் கையிலும் சிக்கி விடாமல் பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டும். அப்படியே பாதுகாத்தாலும் கூட ஒரு insecured feeling இருக்கும். அதனால் எல்லா ரகசியங்களையும் அப்பட்டமாக எழுத முடியாது. சரி, சங்கேத மொழியில் எழுதலாம் என்றால் அது பின்னாளில் நமக்கே புரியாமல் போகக்கூடிய அபாயம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக எழுதுவதற்கு தேவையான அரை மணிநேர தனிமை கிடைக்காது. இது போன்ற காரணங்களுக்காக நான் இதுவரையில் ஹார்ட் காப்பியாக டைரி எழுதியது கிடையாது. (கூகுள் நோட்புக் என்ற சேவை இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் சாஃப்ட் காப்பியாக டைரி எழுதியிருக்கிறேன்).

தேடிக் கண்டுபிடித்து வாங்கிய நோட்புக்
சமீபகாலமாக ஒரு எண்ணம். டைரி எழுதினால் வாழ்க்கையின் பல அற்புதமான தருணங்களை பதிவு செய்யலாமே என்று தோன்றுகிறது. குறிப்பாக எனது மகளுடைய குழந்தை பருவத்தை எனது வார்த்தைகளில் பதிவு செய்து வளர்ந்த பிறகு அவளிடம் காட்ட வேண்டும் என்கிற பேராவல். நியாயமாக பார்த்தால் இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் டைரி எழுத ஆரம்பித்திருக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது. இப்போதும் ஒன்னும் கெட்டுவிடவில்லை, கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கையும் சேர்ந்து டைரியில் எழுதிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எனக்கு வரிசையாக தேதி போட்டு, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு அரைநாள் மட்டும் ஒதுக்கும் ஒழுங்குமுறை டைரிகள் ஒத்துவராது. சுதந்திரமாக எழுத வேண்டும். தேவைப்பட்டால் ஆறு பக்கமும், இல்லையென்றால் அரை பக்கமும் எழுதிக்கொள்ளும் சுதந்திரம் வேண்டும். அதற்காகவே தேடிக் கண்டுபிடித்து ஸ்பெஷலாக ஒரு நோட்டு புத்தகம் வாங்கியிருக்கிறேன். கீ-போர்டில் நடனமாடிய எனது விரல்கள் இனி மகளுக்காக பேனாவும் பிடிக்கப் போகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 24032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரத்தில் ஒருநாள் ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருந்தேன். துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வாங்குவதற்கான விஜயம். புத்தகம் கிடைத்தபிறகு ஒரு சுற்று மற்ற புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஜெயா டீச்சரை கண்டேன். கூடவே நான்கு வயது சுமார் மகனையும் கூட்டி வந்திருந்தார். Flashback...! நான் உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் பள்ளி மாணவர்கள் பி.டி.மாஸ்டர் என்றாலே அலறுவார்கள். கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் அப்படித்தான் என நினைக்கிறேன். பி.டி.மாஸ்டரின் பெயர் ஸ்ரீநிவாசன். நெற்றியில் செங்குத்தாக மூன்று கோடுகளை வரைந்திருப்பார். மற்ற வாத்தியார்களைப் போல சின்ன பிரம்பு அவருக்கு உபயோகப்படாது. ஆறு அடி நீளத்துக்கு சிலம்பத்திற்கு பயன்படுத்துவது போல ஒன்றை வைத்திருப்பார். அப்போது தான் தப்பியோட முயற்சிப்பவர்களை துரத்தி அடிக்க முடியும். அவர் அந்த பிரம்பை எடுத்துக்கொண்டு நடந்துவந்தால் அப்படியே நம்முடைய மூதாதையர்களை பார்த்தது போல இருக்கும். திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எல்லாம் சிதறி ஓடுவார்கள். அவருடைய மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மாணவர்களை துரத்தி துரத்தி அடித்த பாவம்தான் அந்த விபத்துக்கு காரணம் என்று சில மாணவர்கள் பேசிக்கொள்வார்கள். 

நான் ஒன்பதாவது வகுப்பிற்கு சென்றபோது புதிதாக எங்கள் பள்ளியில் ஒரு பி.டி.ஆசிரியை சேர்ந்திருந்தார். அவர்தான் ஜெயா டீச்சர். பயல்களுக்கு வேறு பனித்துளி பார்க்கிற வயதாச்சே...! ஜெயா டீச்சரை அங்கங்கே ஓரமாக சைட் அடித்துக்கொள்வோம். ஜெயா டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சரிதான், அவர் மட்டும் அவ்வளவு ஸ்ட்ரிக்டாக இருந்திருக்காவிட்டால் வரம்பு மீறி சேட்டை செய்திருப்பார்கள் மாணாக்கர். திமிர்தான் பெண்களுக்கு வேலி என்று கமலஹாசன் சொல்லியிருக்கிறார். ஹிக்கின்பாதம்ஸில் ஜெயா டீச்சரை பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்து கூடவே உதட்டோரத்தில் ஒரு புன்னகையும் வந்தது. நல்லவேளையாக டீச்சருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. தெரிந்தாலும் பேசுவதாக இல்லை. இனி பழைய ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தால் மறந்தும் கூட அவர்களிடம் பேசிவிடக் கூடாது. குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய பிம்பமாவது நம்முடைய மனதில் நல்லபடியாக இருக்கட்டும் என்றொரு எண்ணம். ஒன்பதாம் வகுப்பு மாணவனைப் போலவே ஜெயா டீச்சரை திருட்டுத்தனமாக சைட் அடித்து கிளம்பிவிட்டேன்.

ஹிக்கின்பாதம்ஸ் என்றதும் தொடர்ச்சியாக நூலகம் நினைவுக்கு வருகிறது. சிறுவயதிலிருந்தே நூலகம் எனக்கு விருப்பமான ஒரு இடம். எனினும் இந்நாள் வரைக்கும் ஒரு நூலகத்தின் பலனை ஒருமுறை கூட நான் முழுமையாக அனுபவித்ததில்லை. முந்தய பத்தியில் குறிப்பிட்ட அதே உயர்நிலை பள்ளியில் ஒரு நூலகம் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தபிறகு போய் படிக்கலாம். புத்தகங்கள் பூட்டிய கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எந்த புத்தகம் வேண்டுமென நூலகரிடம் கை காட்டினால் அவர் நல்ல மூடில் இருந்தால் மட்டும் எடுத்துக் கொடுப்பார். பிரச்சனை என்னவென்றால் அவர் பெரும்பாலான நேரங்களில் நல்ல மூடில் இருக்க மாட்டார். அதுபோன்ற நேரங்களில் வேறு வழியில்லாமல் வெளியே இறைந்து கிடக்கும் பள்ளி ஆண்டு மலர்களை எடுத்து புரட்ட வேண்டியிருக்கும். புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற விதிமுறை இருந்தாலும் கூட நூலகரின் சிடுசிடு மூஞ்சி நினைவுக்கு வந்து அந்த ஆசையே போய்விடும். மேனிலை பள்ளியிலும் கிட்டத்தட்ட அப்படித்தான். அங்கே பெண் நூலகர் என்பதால் சிடுசிடுப்புக்கு பஞ்சமிருக்காது. அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பள்ளி முடிந்ததும் கேர்ள்ஸ் ஸ்கூலை நோக்கி உசேன் போல்ட் வேகத்தில் ஓட வேண்டும், பஸ் ஸ்டாப்பில் நின்று சைட்டடிக்க வேண்டும் என்பது போன்ற கடமைகள் இருந்ததால் நூலகம் பெரிதாக தெரியவில்லை. 

கல்லூரி நூலகத்தில் படிப்பு சார்ந்த புத்தகங்கள் தவிர்த்து அதிக புத்தகங்கள் இருக்காது. அதிலும் தமிழ் மருந்துக்கு கூட இருக்காது. ஆங்கில நாளிதழ்கள், இந்தியா டுடே, கணினி சம்பந்தமான சஞ்சிகைகளை வாசிக்கலாம். கல்லூரி நூலகத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் நான்கு மணிக்கு கல்லூரி பேருந்துகள் கிளம்பிவிடுவதால் அதன்பிறகு வளாகத்தில் மாணாக்கர் நடமாட்டம் அதிகமிருக்காது. நூலகத்தில் இரண்டு பேர் அமர்ந்திருந்தால் சாதனை. தள்ளுமுள்ளு இல்லாமல் நிதானமாக வாசிக்கலாம். அதைவிட முக்கியமாக தினசரி ஒரு மணிநேரம் எந்த தொல்லையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கோவிலை எப்படி உணர்வார்களோ அதுபோல நான் நூலகத்தை உணர்ந்துக்கொண்டிருந்த சமயம் அது. மேலும் அங்குள்ள நூலகர்களுக்கு புன்னகை செய்ய தெரிந்திருந்தது. அதில் ஒரு நூலகர் இப்பொழுது கேப்டன் தொலைக்காட்சியில் ரவி பெர்னாட் ரேஞ்சுக்கு இருக்கிறார். படிப்பெல்லாம் முடிந்தபிறகு ஒருநாள் அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். நிறைய பழைய புத்தகங்களாகவே இருந்தன. பாக்கியம் ராமசாமியின் புத்தகம் ஒன்றை சிறிதுநேரம் புரட்டிவிட்டு திரும்பினேன். கன்னிமாரா என்று சொல்கிறார்களே அந்த நூலகத்திற்கு இதுவரைக்கும் நான் சென்றதே கிடையாது. 

திருவொற்றியூரில் ஒரு நூலகம் நீண்டகாலமாக இருக்கிறது. தற்போது அதனை புதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு சேர்த்து நூலகத்துடனான என்னுடைய தொடர்பையும் புதிப்பித்துக்கொள்ள ஒரு விருப்பம். புதுப்பிப்பு பணிகள் முடியும் வரை நூலகம் தற்காலிகமாக பின் பக்கத்தில் நடத்தப்படுகிறது என்று செல்வின் சொல்லியிருந்தார். போய்ப் பார்த்தால் நூலகம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. செல்வினை நம்ப முடியாது. சரியாக தெரியவில்லை என்றால் கூட தெரிந்த மாதிரியே அடித்துவிட்டுவிடுவார். என்னடா இது சோதனை என்று அருகிலுள்ள பூங்காவிற்குள் நுழைந்தேன். அந்த பூங்காவைப் பற்றிய சுவையான நினைவுகள் என்னிடம் நிறைய உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் எழுத முடியாது. வேறொன்றும் இல்லை, சொன்னா உதைப்பீங்க. நான்கு பள்ளிச்சிறுமிகள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மாநிறமாக லட்சணமாக இருந்தாள். பேச்சு கொடுக்கலாம் என்று நினைப்பதற்குள் செல்வின் வந்துவிட்டார். நூலகம் அதன் பழைய இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக இயங்குவதால் புத்தகங்கள் கொஞ்சமாக இருந்தன. தேர்தல் முடிந்ததும் புது கட்டிடத்திற்கு போய்விடுவோம் என்று சொன்னார் நூலகர். உறுப்பினராக விண்ணப்ப படிவம் வாங்கி வந்தோம்.

இதற்கிடையே என் இல்லத்திலிருந்து நடை தொலைவிலேயே ஒரு நூலகம் இருப்பதாக என் தாயார் சொன்னார். ஏன் விடுவானேன் என்று அங்கேயும் சென்றேன். அது நூலகம் அல்ல. படிப்பகம். நாளிதழ்கள், சஞ்சிகைகள் மட்டும் வைத்திருக்கிறார்கள். மின்சார செலவை கட்டுப்படுத்தும் பொருட்டு மின்விசிறியை போடுவதில்லை. சென்ற பாவத்திற்காக வியர்க்க வியர்க்க ஆனந்த விகடனை புரட்டிவிட்டு திரும்பினேன்.

*****

ரொம்ப போரடித்துவிட்டேனோ...? சற்று இளைப்பாறலாம். நேற்று தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பினார்கள். ஏற்கனவே பலமுறை கேட்டு, பார்த்திருந்தாலும் ஏனோ சுத்தி சுத்தி வந்தீக என்ற பாடல் பிடித்துவிட்டது. செக்ஸியாக இருப்பதாக தோன்றுகிறது. இங்கே செக்ஸி என்று குறிப்பிடுவது செளந்தர்யாவையோ அவருடைய தொப்புளையோ அல்ல. ஹரிணியின் குரலையும், சிணுங்கல்களையும் தான்...! கேட்டுப் பாருங்கள்.


அடுத்து வருவது: வேலைக்கார நாயி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 January 2014

பேரடைஸ் பிரியாணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பள்ளிக்கூட பருவத்திலிருந்தே எனக்கு ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கொண்டு போகும் பழக்கத்தின் மீது ஒரு பயங்கர வெறுப்பு. மணியடித்ததும் டிபன் பாக்ஸை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். காக்காய் எச்சம் போடாத ஒரு மரத்தடி நிழலில் இடம்பிடிக்க வேண்டும். டீச்சர் ‘ஷேரிங்’ பற்றி சொல்லிக்கொடுத்திருந்தாலும் குழுவாய் வட்டமிட்டு அமர்ந்து அரட்டையடித்தபடியே சாப்பிடும் கலாசாரத்தில் எனக்கொன்றும் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. சாப்பிடும்போது பேசும் பழக்கம் கிடையாது. அதுவுமில்லாமல் எனது எண்ண அலைவரிசைக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் எனக்கு கிடைத்ததில்லை. பெரும்பாலும் தனியாகவே அமர்ந்து சாப்பிடுவேன். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. யாராவது நான் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை பார்த்துவிட்டால் என்னவோ சுயமைதுனம் செய்பவனை கையும் குறியுமாக பிடித்துவிட்டதைப் போன்ற பாவனையுடன் என்னடா தனியா உக்காந்து சாப்பிடுற ? என்று அலறித் தொலைப்பார்கள். அதற்காகவே நேரத்தை வீணடிக்காமல் துரிதமாக சாப்பிட்டு முடிப்பதை பழக்கமாக வைத்திருந்தேன்.

ரெண்டு லெக்பீஸையும் பிரபாவுக்கே கொடுத்திட்டேனே !
அதன்பிறகு நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தமையால் லஞ்ச் பாக்ஸ் தொல்லை இல்லை. என் விசுப்பலகையில் அமருபவர்கள், அறைத்தோழர்கள் என சமயத்திற்கு கிடைத்தவர்களோடு போய் சாப்பிட்டு வந்துவிடுவேன். முதன்முதலாக வேலையில் சேர்ந்தபோது ‘க்ரேவ்யார்ட்’ ஷிப்ட் கிடைத்தது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு துவங்கி காலை ஆறு மணிக்கு முடியும் ஷிப்ட். முதலிரண்டு நாட்களுக்கு சிரமமாக இருந்து, அதன்பின் பழகிவிட்டது. நிம்மதியான வேலை. அங்கேயும் லஞ்ச் பாக்ஸுக்கு வேலை கிடையாது. சில மாதங்களுக்கு பிறகு பகல் ஷிப்டிற்கு மாற்றினார்கள். வீட்டில் எவ்வளவோ சொல்லியும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்ல விடாப்பிடியாக மறுத்துவிட்டேன். உண்மையில் லஞ்ச் பாக்ஸ் சுமப்பது என்பது ஒரு காமன் மேன் இமேஜை கொடுக்கும் என்பதாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. பட்டினியாக கிடந்தாலும் கிடப்பேனே தவிர லஞ்ச் பாக்ஸ் சுமக்கமாட்டேன். தற்சமயம் யூ.கே ஷிப்ட் வேலை என்பதால் மதிய உணவிற்கு அவசியமில்லை. இரவு உணவிற்கு தான் வெளியே அலைய வேண்டும்.

சமீபத்தில் நான் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு மாற்றப்பட்ட போது முதலிரண்டு நாட்கள் உணவுக்காக அல்லாட வேண்டியதாகிவிட்டது. தேனாம்பேட்டையை பொறுத்தவரையில் ஃபாஸ்ட் ஃபுட், வடக்கம்பட்டி புரோட்டா கடை, தலைப்பாகட்டி பிரியாணி, உயர்தர சைவ என பலதரப்பட்ட உணவகங்கள் நடை தூரத்திலேயே இருந்தன. கிண்டியில் அப்படியொன்றும் பிடிபடுவதாக தெரியவில்லை. முதலிரண்டு நாட்கள் ஒரு தள்ளுவண்டிக் கடையில் சப்பாத்தி வாங்கிச் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி. ச்சை, இப்போது நினைத்துப் பார்த்தால் அசூயையாக இருக்கிறது. நானெல்லாம் வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது மாமிசம் சாப்பிடுபவன். நான் போய் தொடர்ச்சியாக இரண்டு இரவுகள் சப்பாத்தி, தக்காளி சட்னி சாப்பிட்டிருக்கிறேன். மூன்றாவது நாள் கொலைவெறியுடன் தேடியதில் அரை கிலோ மீட்டர் தொலைவில் மயூரா என்றொரு துரித உணவகம் கிடைத்தது. ஆரம்பத்தில் அங்கே அதிக கூட்டமில்லை. நல்ல மரியாதை கொடுப்பார்கள். வெறும் ஃபிரைட் ரைஸ் மாத்திரமில்லாமல் வேறு உணவு வகைகளும் இருந்தமையால் தொடர்ந்து அங்கே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தேன். நாளாக நாளாக கடையில் கூட்டம் அதிகரித்தது. மரியாதையும் குறைய ஆரம்பித்தது. ஒருநாள் ஃபிரைட் ரைஸ் சொல்லிவிட்டு இருபது நிமிடங்கள் ஆகியும் வராததால் போங்கடா நொன்னைகளா என்று எழுந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அங்கே செல்லவில்லை. தற்சமயம் அந்த உணவகம் வேறு பெயருக்கு மாற்றலாகி வேறு உரிமையாளர் அமர்ந்திருக்கிறார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் உணவகம் தேடியபோது தான் கவனித்தேன். அந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பெண்கள் விடுதியும், சில ஆண்கள் விடுதியும் அவற்றை சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட சிறிய உணவகங்களும் இருந்தன. நிறைய இருந்தாலும் சிலவற்றில் மட்டும்தான் தரம் இருக்கும். தக்கன தப்பிப்பிழைக்கும் எனும் விதிப்படி தரமான மெஸ்கள் தவிர்த்து மற்றவை கை மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மெஸ்’ஸாக சாப்பிட்டு பார்த்து இறுதியில் ஒரு ஆந்திரா மெஸ்ஸின் சால்னாவுக்கு அடிமையாகி அங்கேயே ஐக்கியமாகிவிட்டேன். அந்த மெஸ்’ஸில் சால்னா தவிர்த்து மற்ற அனைத்தும் எனக்கு எடாகூடமாகவே இருந்தன. அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள். யாருக்கும் தமிழ் தெரியாது. அங்குள்ள தொலைக்காட்சியில் ஜெமினி சேனலில் சன் டிவியின் நெடுந்தொடர்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு ஓடிக்கொண்டிருக்கும். சால்னா ஊத்துவதற்கு ஏதோ அவன் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்டது போல சதாய்ப்பான். அரைக்கரண்டி ஊற்றிவிட்டு முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். நான் அங்கே சால்னா தவிர்த்து வேறு எதையும் ஊற்றிச் சாப்பிடுவதில்லை என்று நன்றாக தெரிந்தும் ஒவ்வொரு முறையும் சாம்பார் வாளியை என் முன் கொண்டுவந்து காட்டி வசை வாங்கிக்கொள்வார்கள். இவை எல்லாம் கூட பரவாயில்லை. அங்குள்ள சிறுவர்களுக்கு என் தலைமயிர் மீது ஒரு கண். மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கு போய் அமர்ந்துவிட்டால் குறைந்தது நான்கு பணியாளர்களாவது என் தலைமயிரை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருப்பார்கள். வாஷ் பேஸினுக்கு அருகில் சென்று ஒரு சிலுப்பு சிலுப்பினால் பின்னால் நின்று இரண்டு பேர் பார்த்தபடி அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வார்கள். அவர்கள் அனைவரும் கே’யாக இருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கிருக்கும் நேரம், அழகாக பிறந்த பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் அவஸ்தைகளை நான் உணரக்கூடிய சில மணித்துளிகள். அவ்வளவு அவஸ்தைகளுக்கு மத்தியிலும் அந்த சால்னாவுக்காக அடிக்கடி அங்கு போக வேண்டியிருக்கிறது.

வாரத்திற்கு இரண்டு நாட்களாவது ஆந்திரா மெஸ்ஸில் ஆஜாராகிவிடுவேன். ஆனாலும் தினமும் பரோட்டா சால்னாவையே சாப்பிட முடியாதல்லவா...? அதனால் ஒரு மாற்றத்திற்காக துரித உணவகம், தோசைக்கடை எனது உணவகங்களை மாற்றிக் கொண்டிருப்பேன். ஒரேயொரு குறை அந்த சுற்றுவட்டாரத்தில் நடந்து போகக்கூடிய தொலைவில் எங்கேயும் பிரியாணி கடை கிடையாது. 

சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவை நோக்கி நடந்துக் கொண்டிருந்தபோது கவனித்தேன். தனம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த வெகு சுமாரான ஒரு மெஸ் மூடப்பட்டு அங்கே புதிய கடை உதயமாகியிருந்தது. பேரடைஸ் பிரியாணி செண்டர்....! புதிய உணவகம் என்பதாலோ என்னவோ எல்லாம் சுத்தமாக இருந்தன. கடையில் ஒன்றிரண்டு பேர் தவிர ஆட்கள் இல்லை. மயூராவை விட ஒரு படி அதிகமாகவே மரியாதை கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் கல்லாவில் இருந்தவர் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்வதற்காக ஃபீட்பேக் கேட்டார். பிரியாணியில் ஸ்பைசஸ் (பட்டை, லவங்கம், கிராம்பு இத்யாதிகள்) அதிகமுள்ளதாக சொல்லிவிட்டு அகன்றேன். அதன்பிறகு விடுமுறை பருவம் வந்ததால் கிட்டத்தட்ட அரை மாதத்திற்கு அங்கே செல்ல முடியவில்லை.

புத்தாண்டு பிறந்ததும் சென்ற வாரத்தில் ஒருநாள் பேரடைஸுக்கு சென்றிருந்தேன். வாடிக்கையாளர்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ஆச்சரியமாக இருந்தது. இன்னமும் அதே சுத்தத்தை பராமரிக்கிறார்கள். இம்முறை மெனு கார்டு விஸ்தரிக்கப் பட்டிருந்தது. அதே மரியாதை. பிரியாணி மட்டுமில்லாமல் ஃபிரைட் ரைஸ் வகையறாக்கள், தந்தூரி வகையறாக்கள், சிக்கன் உப உணவுவகைகள் என மெனுவே அட்டகாசமாக இருந்தது. விலையும் அப்படியொன்றும் அதிகமில்லை. அரை பிளேட் சிக்கன் பிரியாணி தொண்ணூறு ரூபாய். இன்னொரு ஆச்சரியம். பிரியாணியில் சென்ற முறை சொன்ன குறை களையப்பட்டு கச்சிதமாக இருந்தது. சாப்பிட்டு முடிப்பதற்குள் கல்லாவில் இருந்தவர் இரண்டுமுறை வந்து நல்லாயிருக்கா சார் என்று கேட்டுவிட்டார். கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும் அவருடைய மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதற்காகவேனும் பேரடைஸ் பிரியாணி செண்டர் நீண்ட நாட்களுக்கு பெயர் மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment