24 January 2014

பண்பலை குரல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2004ம் ஆண்டு வாக்கில் சென்னையில் ரேடியோ மிர்ச்சியும் சூரியன் பண்பலையும் அடியெடுத்து வைத்து புகழ் பெற்றிருந்த சமயம். அச்சமயத்தில் பேருந்துகளில், கடைகளில், உணவகங்களில், சிறிய தொலைக்காட்சிகளில் என எங்கும் பண்பலைகள் மயமாக இருக்கும். நிறைய பேர் மிர்ச்சி சுச்சியின் விசிறிகளாகியிருந்தனர், நான் உட்பட. நானெல்லாம் சிறிய ரேடியோ ஒன்றை கையோடு வைத்திருப்பேன். பள்ளிக்கூடத்திற்கு கூட எடுத்துச்சென்று திருட்டுத்தனமாக கேட்டது நினைவிலிருக்கிறது. ஞாயிறு தோறும் மாலை ஆறிலிருந்து எட்டு வரை மிர்ச்சியில் டாப் 20 பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதனை எங்கிருந்தாலும் தவறாமல் கேட்டுவிடுவேன். நாளடைவில் வதவதவென நிறைய பண்பலை வரிசைகள் வந்துவிட்டன. தொழில்நுட்பங்களும் நிறைய வளர்ந்துவிட்டதால் பண்பலைகள் மறந்து போயிற்று. எனினும் இன்றளவும் பல சிறிய தொழிற்சாலைகளில் பணியாளர்கள் பண்பலையில் பாடல்கள் கேட்டபடியே களைப்பு தெரியாமல் பணிபுரிகிறார்கள்.

என்னுடைய அலுவலகத்தில் பணியாளர்கள் வீடு திரும்ப தினசரி வாடகை சீருந்து வசதி உண்டு. அப்படி நான் பயணம் செய்கிற வண்டியில் எப்போதும் பண்பலை ஒலித்துக்கொண்டிருக்கும். ஆரம்பத்தில் எனக்கும் அது பிடித்திருந்தது. நாளடைவில் தினசரி ஒரே மாதிரியான குரல்கள், ஒரே மாதிரியான பேச்சு, ஒரே மாதிரியான பாடல்கள் என்று சலித்துவிட்டது. ஆனால் வாகன ஓட்டுநருக்கு சலிக்கவில்லை. உண்மையில் அவர் வாகன ஓட்டுநர் மட்டுமல்ல, உரிமையாளரும் கூட. அவருடைய வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டு ரேடியோ பொட்டியை கொஞ்சம் நிறுத்த முடியுமா ? என்று கேட்பது எனக்கு அவ்வளவு நாகரிகமாக படவில்லை. அதுவுமில்லாமல் இரவு பன்னிரண்டு மணி வரை தூக்கத்தை கட்டுபடுத்திக் கொண்டு உழைக்கும் மனிதரிடம் போய் பாடலை நிறுத்துங்கள் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும். அதனால் இப்ப என்ன பெருசா கெட்டுப்போச்சு என்று கேட்டுக்கொள்ள பழகிவிட்டேன். ஆனால் புலம்பலாம் இல்லையா...?

முதலில் ஒரு முன்ஜாமீன் போட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் நான் குறிப்பிட இருக்கின்ற மூவருமே உண்மையில் சிறப்பான வானொலி தொகுப்பாளர்களே. லபோ திபோ என்று கத்துபவர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் மூவரும் ஆயிரம் மடங்கு பரவாயில்லை. இருப்பினும் மோனோடோனஸாக அவர்களுடைய குரல்களையே கேட்டுக்கொண்டிருந்ததின் விளைவே இக்கட்டுரை. உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார். ஆனால் தினமும் ஒரே மாதிரியாகவே எழுதிக்கொண்டிருந்தால் சலிப்பு தட்டுகிறது அல்லவா...? அது மாதிரிதான்...!

அன்பான அருண்
தினசரி இரவு பத்திலிருந்து பதினோரு மணிவரை சூரியன் பண்பலையில் ஒலிபரப்பாகும் இனிய இரவு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவருடைய குரல் கேட்டதும் பிடித்துவிடக் கூடியது, கேட்கக் கேட்க பிடிக்காமல் போகக்கூடும். மெட்ராஸ் பவன் சிவகுமார் குரல் போலவே இருக்கும். அருண் ஜீவகாருண்ய கட்சியை சேர்ந்தவராக இருக்கக்கூடும். யாரையும் விளையாட்டுக்காக கூட கிண்டலடித்து பேசமாட்டார். தொலைபேசி நேயர்களை லைட்டா கலாய்க்கக்கூட மாட்டார், அதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் என்று நினைக்கிறேன். வெறுமனே தடவிக்கொடுத்துக்கிட்டே இருந்தா பூனை கூட செத்துப்போயிடும்’ன்னு ஜேஜே படத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல இவருடைய பேச்சை கேட்டால் என்னடா இந்தாளு எப்பப்பாரு கொழைஞ்சுக்கிட்டே இருக்கான்னு இயல்பாகவே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அருணுடைய இன்னொரு சிக்கல் பொதுபுத்தி வார்த்தைகள். அதாவது நிகழ்ச்சியின் இடையில் அருமையான கிளைமேட், மண் வாசனை வீசுற இந்த இனிய இரவு நேரத்துல ராஜா சார் பாடல்களை கேட்குறது ஒரு சுகம்தான்ல்ல...? அப்படின்னு ஒரு ‘ல்ல’ போட்டு கேள்வியா முடிப்பார். உண்மையில் நாம் அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இல்லையென்றாலும் அவருடைய கேள்விக்கு ஆம் சொன்னதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்.

லவ் குரு
அதே இரவு பத்து மணிவாக்கில் ரேடியோ சிட்டியில் ஒலிபரப்பாகும் லவ் குரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவரும் கிட்டத்தட்ட அருண் போல தான். யாருக்கும் வலிக்காமல் பேசக்கூடியவர். எப்போதாவது தொலைபேசி நேயர்களிடம் மட்டும் லைட்டா... ரொம்ப லைட்டா... கிண்டலடிப்பார். அருணுடைய குரல் பதிவர் சிவகுமார் போன்றது என்றால் இவருடைய குரல் நடிகர் சிவகுமார் போன்றது. அதாவது ஒருமாதிரி தழுதழுத்த குரலில் பேசுவார். கெரகம் அவர் தொகுத்து வழங்குகிற நிகழ்ச்சி அப்படி. தினசரி இரவு யாராவது ஒரு காதலன் / காதலியுடைய உருக்கமான கடிதத்தை ஹஸ்கி வாய்ஸில் படித்துக்காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் தீம். ஆனால் அந்த காதல் கடிதங்களை நிலையத்தினரே உருவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. நாட்டில் என்ன அத்தனை கிறுக்கர்களா இருக்கிறார்கள்...? மேலும், மனமுதிர்ச்சியடையாத காதலர்களை நன்றாக கிண்டிவிடக்கூடிய அளவில் லவ் குரு என்னைப்பொறுத்தவரையில் ஒரு மோசமான நிகழ்ச்சி. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு ஒலியிடுகை வெளியிட்டேன். மிகவும் திட்டமிட்டு பதிவு செய்யப்பட்டாலும் கூட என்னால் தொடர்ச்சியாக மூன்று நிமிடங்கள் கூட பேச முடியவில்லை. அப்படியிருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் பேசும் காதல் தோல்வி ஆசாமிகள் எப்படி கனகச்சிதமாக பேசுகிறார்கள்...? தொடர்ந்து கேட்டால் லவ் குரு ஒரு நல்ல ஜோடனை நிகழ்ச்சி என்று தெரிந்துவிடும்.

யாழ் சுதாகர்
அப்படியே இரவு பதினோரு மணியளவில் மீண்டும் சூரியன் பண்பலைக்கு திரும்பினால் யாழ் சுதாகரை கேட்கலாம். ரயில் நிலையத்தில் அறிவிப்பு குரலை கேட்டிருக்கிறீர்களா....? வண்டி எண், செல்லும் இடம், பிளாட்பார எண், புறப்படும் நேரம் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வரும். அதுபோல யாழ் சுதாகரின் குரல் டெம்ப்ளேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அதில் படத்தின் பெயர், பாடலின் முதல் வரி, பாடகர்கள் பெயர், பாடலின் ராகம் போன்றவற்றை உள்ளீடு செய்கிறார்களோ என்பது என்னுடைய ஐயப்பாடு. பயணிகள் கவனத்திற்கு என்று துவங்கும் சொற்றொடர் நம்மை எவ்வளவு வெறுப்பேற்றுமோ அதற்கு இணையாக வெறுப்பேற்றக்கூடிய சொற்றொடர் நாதகலாஜ்ஜோதி இளையராஜ்ஜாவின் இசை வார்ப்பில். சூரியன் பண்பலையின் தாரக மந்திரமான கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்ற வரிகளை நம்மாளு தூயதமிழில் பொறுமையாக வாசிக்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுத்துவிடுவார். அடிக்கடி சுதாகர் உச்சரிக்கும் இன்னொரு சொற்றொடர் பழைய பாடல்கள் தங்கம் என்றால் புதிய பாடல்கள் தகரம் என்பேன். அப்படியென்றால் சூரியன் பண்பலையில் நாளின் மற்ற இருபத்தி மூன்று மணிநேரங்கள் ஒலிபரப்பாகும் பாடல்கள் அனைத்தும் தகரம் என்று அவரே ஒப்புக்கொள்கிறாரா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 January 2014

பட்டியல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் மூட்டை மூட்டையாக புத்தகங்கள் வாங்கி அவற்றை லிஸ்ட் போடும் ஆசாமி கிடையாது. மிகவும் செலக்டிவ். எனக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது, புத்தகங்கள் வாங்குவதில் கூட. புத்தகக்காட்சியை எடுத்துக் கொண்டால், முதலில் ஒருநாள் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாளாக சென்று ஒன்றிலிருந்து தொடங்கி எல்லா கடைகளையும் பார்வையிட்டு ஒரு சுற்று வருவேன். இடையிடையே நல்லதாக ஏதாவது கண்ணில் பட்டால் (புத்தகங்கள் தான்) குறித்து வைத்துக்கொள்வேன். இரண்டாவது நாள், யாராவது ஒரு நண்பருடன் சென்று அவர் புத்தகங்கள் வாங்குவதையும் கையில் எடுத்து பார்த்துவிட்டு நிராகரிக்கும் செய்கைகளையும் மானிட்டர் செய்வேன். அவர் புத்தகங்கள் பற்றி ஏதாவது சொன்னால் அதை வாங்கி காதில் போட்டு வைத்துக்கொள்வேன். மூன்றாவது நாள், காலையிலேயே துரிதமாக சென்று நான் ஏற்கனவே குறித்து வைத்திருந்த பதிப்பகங்களிலிருந்தும் முக்கியமானவை எனக் கருதப்படும் பதிப்பகங்களிலிருந்தும் விலைப்பட்டியல்களை சேகரிப்பேன். அன்றிரவு எல்லா விலைப்பட்டியல்களையும் ஆராய்ந்து வாங்க வேண்டிய புத்தகங்களை பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல ஷார்ட்லிஸ்ட் செய்வேன். நான்காவது நாளில், பட்டியலிட்ட புத்தகங்களை சமர்த்தாக வாங்கிவிடுவேன். வளவளவென மொக்கை போடாமல் சுருங்கச் சொல்வதென்றால் – புத்தகங்கள் வாங்குவதில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் போல. எல்லா இனிப்பு வகைகளையும் ஒரு டின்னில் கொட்டச் செய்து அதுல இருந்து ஒரு நூறு கிராம் கொடு என்று அசடு வழிவேன்.

அப்படி ஷார்ட்லிஸ்ட் செய்து நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் :-
திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.75
மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140
ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் – ரூ.75
புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75
பாம்புத்தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100
இழந்த நாகரிகங்களின் இறவாக்கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145
கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30
கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60
ஒரு சிப்பாயின் சுவடுகளில் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.100
சூப்பர் சுப்பு 3D (இரண்டு கண்ணாடிகளுடன்) – ரூ.200
அலமாரி – மாத இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.50
ஃபெமினா தமிழ் – மாத(ர்) இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.180

கிளம்பிவிடாதீர்கள். பினாமி பெயரில் வாங்கிய பட்டியல் இரண்டு உள்ளன. தோழர் செல்வின் இம்முறை மிகவும் குறைந்த அளவில் புத்தகங்கள் வாங்கினாலும் அறிவியல் சார்ந்த புத்தகங்களாக வாங்கினார்.

அவருடைய லிஸ்ட்:
பூமி எனும் கோள் – ஜார்ஜ் கேமாவ் – தமிழில் தி.ஜானகிராமன்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ் சிவா
எப்போது அழியும் இந்த உலகம் ? – ராஜ் சிவா
விஞ்ஞானத்தில் சில விந்தைகள் – முனைவர் மெ.மெய்யப்பன்
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

சில புத்தகங்களை வாங்கலாம் என்ற ஆவல் இருக்கும், ஆனால் கொள்ளை விலை இருக்கும். அல்லது இதைப்போய் காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும். அல்லது வாங்கியபின் நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது என்ற அவநம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் நமக்காக வாங்கிக் குவிக்க ஒரு ஆபத்பாந்தவன் இருந்தால் எப்படி இருக்கும்...?

தோழர் ஆரூர் மூனா என் பரிந்துரையின் பெயரில் வாங்கிய புத்தகங்கள் :-
வெள்ளையானை - ஜெயமோகன்
ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
கொசு - பா.ராகவன்
நாயுருவி - வா.மு.கோமு
பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - வா.மு.கோமு
எட்றா வண்டிய - வா.மு.கோமு
மரப்பல்லி - வா.மு.கோமு
சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - வா.மணிகண்டன்
அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - முகில்
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
தண்ணீர் - அசோகமித்திரன்
வெல்லிங்டன் – சுகுமாரன்

பட்டியல் முடிந்தது. அடுத்த சிக்கல் வாசிப்பை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதுதான். பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment