Showing posts with label in. Show all posts
Showing posts with label in. Show all posts

24 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 24032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரத்தில் ஒருநாள் ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருந்தேன். துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வாங்குவதற்கான விஜயம். புத்தகம் கிடைத்தபிறகு ஒரு சுற்று மற்ற புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஜெயா டீச்சரை கண்டேன். கூடவே நான்கு வயது சுமார் மகனையும் கூட்டி வந்திருந்தார். Flashback...! நான் உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் பள்ளி மாணவர்கள் பி.டி.மாஸ்டர் என்றாலே அலறுவார்கள். கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் அப்படித்தான் என நினைக்கிறேன். பி.டி.மாஸ்டரின் பெயர் ஸ்ரீநிவாசன். நெற்றியில் செங்குத்தாக மூன்று கோடுகளை வரைந்திருப்பார். மற்ற வாத்தியார்களைப் போல சின்ன பிரம்பு அவருக்கு உபயோகப்படாது. ஆறு அடி நீளத்துக்கு சிலம்பத்திற்கு பயன்படுத்துவது போல ஒன்றை வைத்திருப்பார். அப்போது தான் தப்பியோட முயற்சிப்பவர்களை துரத்தி அடிக்க முடியும். அவர் அந்த பிரம்பை எடுத்துக்கொண்டு நடந்துவந்தால் அப்படியே நம்முடைய மூதாதையர்களை பார்த்தது போல இருக்கும். திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எல்லாம் சிதறி ஓடுவார்கள். அவருடைய மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மாணவர்களை துரத்தி துரத்தி அடித்த பாவம்தான் அந்த விபத்துக்கு காரணம் என்று சில மாணவர்கள் பேசிக்கொள்வார்கள். 

நான் ஒன்பதாவது வகுப்பிற்கு சென்றபோது புதிதாக எங்கள் பள்ளியில் ஒரு பி.டி.ஆசிரியை சேர்ந்திருந்தார். அவர்தான் ஜெயா டீச்சர். பயல்களுக்கு வேறு பனித்துளி பார்க்கிற வயதாச்சே...! ஜெயா டீச்சரை அங்கங்கே ஓரமாக சைட் அடித்துக்கொள்வோம். ஜெயா டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சரிதான், அவர் மட்டும் அவ்வளவு ஸ்ட்ரிக்டாக இருந்திருக்காவிட்டால் வரம்பு மீறி சேட்டை செய்திருப்பார்கள் மாணாக்கர். திமிர்தான் பெண்களுக்கு வேலி என்று கமலஹாசன் சொல்லியிருக்கிறார். ஹிக்கின்பாதம்ஸில் ஜெயா டீச்சரை பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்து கூடவே உதட்டோரத்தில் ஒரு புன்னகையும் வந்தது. நல்லவேளையாக டீச்சருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. தெரிந்தாலும் பேசுவதாக இல்லை. இனி பழைய ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தால் மறந்தும் கூட அவர்களிடம் பேசிவிடக் கூடாது. குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய பிம்பமாவது நம்முடைய மனதில் நல்லபடியாக இருக்கட்டும் என்றொரு எண்ணம். ஒன்பதாம் வகுப்பு மாணவனைப் போலவே ஜெயா டீச்சரை திருட்டுத்தனமாக சைட் அடித்து கிளம்பிவிட்டேன்.

ஹிக்கின்பாதம்ஸ் என்றதும் தொடர்ச்சியாக நூலகம் நினைவுக்கு வருகிறது. சிறுவயதிலிருந்தே நூலகம் எனக்கு விருப்பமான ஒரு இடம். எனினும் இந்நாள் வரைக்கும் ஒரு நூலகத்தின் பலனை ஒருமுறை கூட நான் முழுமையாக அனுபவித்ததில்லை. முந்தய பத்தியில் குறிப்பிட்ட அதே உயர்நிலை பள்ளியில் ஒரு நூலகம் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தபிறகு போய் படிக்கலாம். புத்தகங்கள் பூட்டிய கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எந்த புத்தகம் வேண்டுமென நூலகரிடம் கை காட்டினால் அவர் நல்ல மூடில் இருந்தால் மட்டும் எடுத்துக் கொடுப்பார். பிரச்சனை என்னவென்றால் அவர் பெரும்பாலான நேரங்களில் நல்ல மூடில் இருக்க மாட்டார். அதுபோன்ற நேரங்களில் வேறு வழியில்லாமல் வெளியே இறைந்து கிடக்கும் பள்ளி ஆண்டு மலர்களை எடுத்து புரட்ட வேண்டியிருக்கும். புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற விதிமுறை இருந்தாலும் கூட நூலகரின் சிடுசிடு மூஞ்சி நினைவுக்கு வந்து அந்த ஆசையே போய்விடும். மேனிலை பள்ளியிலும் கிட்டத்தட்ட அப்படித்தான். அங்கே பெண் நூலகர் என்பதால் சிடுசிடுப்புக்கு பஞ்சமிருக்காது. அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பள்ளி முடிந்ததும் கேர்ள்ஸ் ஸ்கூலை நோக்கி உசேன் போல்ட் வேகத்தில் ஓட வேண்டும், பஸ் ஸ்டாப்பில் நின்று சைட்டடிக்க வேண்டும் என்பது போன்ற கடமைகள் இருந்ததால் நூலகம் பெரிதாக தெரியவில்லை. 

கல்லூரி நூலகத்தில் படிப்பு சார்ந்த புத்தகங்கள் தவிர்த்து அதிக புத்தகங்கள் இருக்காது. அதிலும் தமிழ் மருந்துக்கு கூட இருக்காது. ஆங்கில நாளிதழ்கள், இந்தியா டுடே, கணினி சம்பந்தமான சஞ்சிகைகளை வாசிக்கலாம். கல்லூரி நூலகத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் நான்கு மணிக்கு கல்லூரி பேருந்துகள் கிளம்பிவிடுவதால் அதன்பிறகு வளாகத்தில் மாணாக்கர் நடமாட்டம் அதிகமிருக்காது. நூலகத்தில் இரண்டு பேர் அமர்ந்திருந்தால் சாதனை. தள்ளுமுள்ளு இல்லாமல் நிதானமாக வாசிக்கலாம். அதைவிட முக்கியமாக தினசரி ஒரு மணிநேரம் எந்த தொல்லையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கோவிலை எப்படி உணர்வார்களோ அதுபோல நான் நூலகத்தை உணர்ந்துக்கொண்டிருந்த சமயம் அது. மேலும் அங்குள்ள நூலகர்களுக்கு புன்னகை செய்ய தெரிந்திருந்தது. அதில் ஒரு நூலகர் இப்பொழுது கேப்டன் தொலைக்காட்சியில் ரவி பெர்னாட் ரேஞ்சுக்கு இருக்கிறார். படிப்பெல்லாம் முடிந்தபிறகு ஒருநாள் அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். நிறைய பழைய புத்தகங்களாகவே இருந்தன. பாக்கியம் ராமசாமியின் புத்தகம் ஒன்றை சிறிதுநேரம் புரட்டிவிட்டு திரும்பினேன். கன்னிமாரா என்று சொல்கிறார்களே அந்த நூலகத்திற்கு இதுவரைக்கும் நான் சென்றதே கிடையாது. 

திருவொற்றியூரில் ஒரு நூலகம் நீண்டகாலமாக இருக்கிறது. தற்போது அதனை புதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு சேர்த்து நூலகத்துடனான என்னுடைய தொடர்பையும் புதிப்பித்துக்கொள்ள ஒரு விருப்பம். புதுப்பிப்பு பணிகள் முடியும் வரை நூலகம் தற்காலிகமாக பின் பக்கத்தில் நடத்தப்படுகிறது என்று செல்வின் சொல்லியிருந்தார். போய்ப் பார்த்தால் நூலகம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. செல்வினை நம்ப முடியாது. சரியாக தெரியவில்லை என்றால் கூட தெரிந்த மாதிரியே அடித்துவிட்டுவிடுவார். என்னடா இது சோதனை என்று அருகிலுள்ள பூங்காவிற்குள் நுழைந்தேன். அந்த பூங்காவைப் பற்றிய சுவையான நினைவுகள் என்னிடம் நிறைய உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் எழுத முடியாது. வேறொன்றும் இல்லை, சொன்னா உதைப்பீங்க. நான்கு பள்ளிச்சிறுமிகள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மாநிறமாக லட்சணமாக இருந்தாள். பேச்சு கொடுக்கலாம் என்று நினைப்பதற்குள் செல்வின் வந்துவிட்டார். நூலகம் அதன் பழைய இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக இயங்குவதால் புத்தகங்கள் கொஞ்சமாக இருந்தன. தேர்தல் முடிந்ததும் புது கட்டிடத்திற்கு போய்விடுவோம் என்று சொன்னார் நூலகர். உறுப்பினராக விண்ணப்ப படிவம் வாங்கி வந்தோம்.

இதற்கிடையே என் இல்லத்திலிருந்து நடை தொலைவிலேயே ஒரு நூலகம் இருப்பதாக என் தாயார் சொன்னார். ஏன் விடுவானேன் என்று அங்கேயும் சென்றேன். அது நூலகம் அல்ல. படிப்பகம். நாளிதழ்கள், சஞ்சிகைகள் மட்டும் வைத்திருக்கிறார்கள். மின்சார செலவை கட்டுப்படுத்தும் பொருட்டு மின்விசிறியை போடுவதில்லை. சென்ற பாவத்திற்காக வியர்க்க வியர்க்க ஆனந்த விகடனை புரட்டிவிட்டு திரும்பினேன்.

*****

ரொம்ப போரடித்துவிட்டேனோ...? சற்று இளைப்பாறலாம். நேற்று தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பினார்கள். ஏற்கனவே பலமுறை கேட்டு, பார்த்திருந்தாலும் ஏனோ சுத்தி சுத்தி வந்தீக என்ற பாடல் பிடித்துவிட்டது. செக்ஸியாக இருப்பதாக தோன்றுகிறது. இங்கே செக்ஸி என்று குறிப்பிடுவது செளந்தர்யாவையோ அவருடைய தொப்புளையோ அல்ல. ஹரிணியின் குரலையும், சிணுங்கல்களையும் தான்...! கேட்டுப் பாருங்கள்.


அடுத்து வருவது: வேலைக்கார நாயி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 27012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் முதன்முதலாக சயமீஸ் இரட்டையர்களை காட்டியது (நடிப்பில் தான்...!) மாற்றான் என்று சொல்லப்பட்டாலும், மாற்றான் படம் அறிவிக்கப்பட்டபிறகு படப்பிடிப்பை தொடங்கிய இருவன் என்ற லோ பட்ஜெட் படம் ரிலீஸில் முந்திக்கொண்டது. நிறைய பேருக்கு அப்படி ஓரு படம் வந்ததே தெரியாது என்பதால் மாற்றானின் புகழுக்கு பங்கமில்லை என்று நம்பலாம். உலக அளவில் முதன்முதலில் சயமீஸ் இரட்டையர்களை காட்டிய படம் எதுவென்று தெரியுமா...? விடை இறுதியில்...

*************************************************

ஃபர்ஸ்ட் லுக்கில் 'நவீன' இல்லை !
நவீன சரஸ்வதி சபதம் படம் பார்த்தேன். சிவாஜி காலத்திற்கு பிறகு அமைதியாக இருந்துவிட்ட சிவபெருமான் மீண்டுமொரு திருவிளையாடல் செய்கிறார். குடிபழக்க அடிமைகளான நால்வரை ஒரு தீவில் சிக்க வைக்கிறார். அவர்கள் தப்பிக்க சில வாய்ப்புகளையும் கொடுக்கிறார். தப்பித்தார்களா...? என்பது உச்சகாட்சி. நல்ல மனஉரு. அந்த சுவாரஸ்யத்தை திரையிலும் ஓரளவுக்கு காட்டியிருக்கிறார்கள். ஐ-பாடில் பாட்டு கேட்கும் சிவன், டெம்பிள் ரன் விளையாடும் முருகன், த்ரெட் மில்லில் ஓடும் விநாயகன் என்றெல்லாம் பக்தியை நவீன மயமாக்கி காமெடி செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சுப்ரஜா ஸ்ரீதரன் ஒருவர் மட்டும்தான் ஹிந்து கடவுள்களை கிண்டலடித்ததற்காக ந.ச.ச படத்திற்கு  கண்டனம் தெரிவித்தார். சரி தொலையட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. நிவேதா தாமஸ் அம்மையாரை நாயகி என்று சொல்லிவிட்டு நான்கு ஆண்களையும் தீவையும் மட்டுமே முக்கால்வாசி படத்திற்கு காட்டியிருக்கிறார்கள். அதற்கு வேண்டுமானால் என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

*************************************************

நேற்று மாலை அந்தமான் ராஸ் – நார்த் பே தீவுகளுக்கு இடையே ஒரு படகு விபத்து. அதில் பயணம் செய்த சுமார் 45 பேரில் 21 பேர் மரணம். மரணம் அடைந்த பெரும்பாலானவர்கள் காஞ்சிபுரத்து ஆட்கள். செய்தியைக் கேட்டதும் கொஞ்சம் பக்கென்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் சேதுராமன் அதே படகில் பயணம் செய்திருக்கக்கூடும். சென்ற வாரம் என்னுடைய பெற்றோர், தங்கை உட்பட உறவினர்கள் அதே பாதையில் பயணித்திருக்கிறார்கள். போர்ட் ப்ளேரிலிருந்து மூன்று தீவுகளுக்கு அழைத்துச் செல்லும் பேக்கேஜ் அது. சென்ற வாரமே, இரண்டு தீவுகளை பார்த்துவிட்டு மூன்றாவது தீவிற்கு செல்லும் வழியில் காற்று பலமாக வீசியதால் பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். நேற்றைக்கும் கூட அதே போல நிகழ்ந்திருக்கலாம். அந்த படகில் லைப் ஜாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை நானே பார்த்திருக்கிறேன், ஆனால் வெறும் சம்பிரதாயத்திற்காக. அதை எப்படி துரிதமாக எடுக்க வேண்டும் என்றோ, எப்படி பயன்படுத்த வேண்டும் என்றோ அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. வேறெப்போதும் போல அல்லாமல் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

*************************************************

மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு துயர செய்தியை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்தால் என்ன செய்வீர்கள்...? ஒரு சோக ஸ்மைலி. நாமும் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம் என்பதற்கான அடையாளமாக அதனை கருதலாம். ஆனால் துயர செய்திகளை லைக் செய்வது பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு தரப்பு இது அபத்தம் என்றும் மற்றொரு தரப்பு இதுவும் சோக ஸ்மைலி போல ஒரு பங்கெடுப்பு என்றும் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் மொழியாக தமிழை வைத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது அபத்தமாகத்தான் தெரியும். காரணம் – இன்னார் குறிப்பிட்ட துயர செய்தியை விரும்புகிறார் என்று ஃபேஸ்புக்கே தெரிவிக்கும். இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஃபேஸ்புக் ஒரு யோசனை வைத்திருக்கிறது. ஏற்கனவே உள்ள ‘ஃபீலிங்’ ஆப்ஷன் மூலம் சோகமாக இருக்கிறேன் என்று தெரிவு செய்தால் போதும் லைக் பட்டன் தற்காலிகமாக சிம்பதைஸ் பட்டனாக மாறிக்கொள்ளும். கூடிய விரைவில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரலாம்.

*************************************************

சென்ற வாரம் என்னுடைய ஒரு இடுகையில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் மாதிரி என்று எழுதியிருந்தேன். அந்த சொற்றொடர் கண்டிப்பாக நிறைய பேருக்கு புரிந்திருக்கும். யாரேனும் அதனை குறிப்பிட்டு பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ப்ச். நானே தொடர்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் ஒலிப்பேழையில் பாடல்கள் கேட்கும் பழக்கம் உடையவர்களுக்கு நிச்சயம் சிரிப்போ சிரிப்பு என்ற ஒலிப்பேழையை பற்றி தெரிந்திருக்கும். என்னுடைய சிறிய வயதில் அந்த ஒலிப்பேழையை எத்தனையோ முறை திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறேன். அச்சமயத்தில் அதில் வரும் பெரும்பாலான நகைச்சுவைகள் எனக்கு மனப்பாடம். இப்போதும் நினைவிலிருப்பது (ஜனகராஜ் ஸ்வீட் ஸ்டால் நகைச்சுவை தவிர்த்து) என்று பார்த்தால் :-

- கிருபானந்த வாரியாரின் கிரிக்கெட் வர்ணனை
- 36 மொட்டைகளின் அட்டகாசங்கள் – பட ட்ரெயிலர்
- ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் கேட்கும் கலைஞர்
- மெஹபூபா பாடும் பாக்யராஜ், டி.ஆர், எம்.ஆர்.ராதா
- எலி பிடிப்பது எப்படி என்று சொல்லித்தரும் ஜனகராஜ்

படம்: அரவிந்த் ரஹ்மேனியாக்
சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையை பற்றி கூகுள் செய்துக்கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியம். அரவிந்த் ரஹ்மேனியாக் (ரஹ்மான் தீவிர விசிறியாம்) என்ற புண்ணியவான் சிரிப்போ சிரிப்பு ஆடியோ முழுவதையும் எம்.பி.3 கோப்பு வடிவில் தரவேற்றி வைத்திருக்கிறார். வேண்டுபவர்கள் கீழ்காணும் இணைப்பிற்கு சென்று அரவிந்திற்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு பதிவிறக்கிக் கொள்ளவும்.


*************************************************

வருடாவருடம் புத்தகக்காட்சி முடிந்ததும் புத்தகங்கள் படிப்பது தொடர்பாக ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாக சூட்டோடு முடிந்தவரை வாங்கிய புத்தகங்களை படித்துவிடுவது புத்திசாலித்தனம். அப்படி சென்ற வாரத்தில் படித்த புத்தகங்கள் :-

புக் மார்க்ஸ் என்.சொக்கன்
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன்
கி.பி.2087இல்... முனைவர் மலையமான்
திசை கண்டேன் வான் கண்டேன் சுஜாதா
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

வாசிப்பானுபவம் பற்றி தனித்தனியாக இல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு இடுகையாக வெளியிடுகிறேன்.

*************************************************

முதல் பத்தி கேள்விக்கு பதில் Freaks (1932). ஒரு சர்க்கஸ், கூத்து, வித்தை வகையறா குழு. அதன் அங்கத்தினர் பெரும்பாலும் உடல் குறைபாடு கொண்டவர்கள். அவர்கள் தவிர்த்து கிளியோபாட்ரா என்று ஒருத்தி. கிளியோபாட்ரா என்று சொல்லிவிட்டதால் அவளுடைய அழகு எப்படி என்று சொல்லத்தேவையில்லை. அவளை ஒரு குள்ள மனிதன் விரும்புகிறான். அவனுக்கு நிறைய சொத்து இருப்பதால் கிளியோபாட்ராவும் அவனை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்துகொள்கிறாள். அவர்களுடைய திருமண வரவேற்பில் எல்லா ‘ஃப்ரீக்ஸும்’ ஆடிப்பாட கிளியோபாட்ரா கோபப்பட்டு அவர்களை அவமதிக்கிறாள். அதன்பிறகு ஃப்ரீக்ஸ் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு கிளியோபாட்ராவின் உடல் பாகங்களை சிதைத்து அவளை மனிதத்தலை கொண்ட வாத்தாக மாற்றிவிடுகிறார்கள். பொழுதுபோக்குக்காக மக்கள் அவளை வேடிக்கை பார்ப்பதாக படம் நிறைவடைகிறது.

படம்: Gabby Voltron
இத்திரைப்படத்தில் நிஜத்திலேயே சயமீஸ் இரட்டையர்களான டெய்சி & வைல்ட் ஹில்டன் நடித்திருக்கிறார்கள். கதைப்படி வைலட்டுக்கு மட்டும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வைலட்டுடைய வருங்கால கணவன் அவளுக்கு முத்தமிடுகிறாள், அதனை டெய்சி உணருவதாக நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு காட்சி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 January 2014

பண்பலை குரல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2004ம் ஆண்டு வாக்கில் சென்னையில் ரேடியோ மிர்ச்சியும் சூரியன் பண்பலையும் அடியெடுத்து வைத்து புகழ் பெற்றிருந்த சமயம். அச்சமயத்தில் பேருந்துகளில், கடைகளில், உணவகங்களில், சிறிய தொலைக்காட்சிகளில் என எங்கும் பண்பலைகள் மயமாக இருக்கும். நிறைய பேர் மிர்ச்சி சுச்சியின் விசிறிகளாகியிருந்தனர், நான் உட்பட. நானெல்லாம் சிறிய ரேடியோ ஒன்றை கையோடு வைத்திருப்பேன். பள்ளிக்கூடத்திற்கு கூட எடுத்துச்சென்று திருட்டுத்தனமாக கேட்டது நினைவிலிருக்கிறது. ஞாயிறு தோறும் மாலை ஆறிலிருந்து எட்டு வரை மிர்ச்சியில் டாப் 20 பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதனை எங்கிருந்தாலும் தவறாமல் கேட்டுவிடுவேன். நாளடைவில் வதவதவென நிறைய பண்பலை வரிசைகள் வந்துவிட்டன. தொழில்நுட்பங்களும் நிறைய வளர்ந்துவிட்டதால் பண்பலைகள் மறந்து போயிற்று. எனினும் இன்றளவும் பல சிறிய தொழிற்சாலைகளில் பணியாளர்கள் பண்பலையில் பாடல்கள் கேட்டபடியே களைப்பு தெரியாமல் பணிபுரிகிறார்கள்.

என்னுடைய அலுவலகத்தில் பணியாளர்கள் வீடு திரும்ப தினசரி வாடகை சீருந்து வசதி உண்டு. அப்படி நான் பயணம் செய்கிற வண்டியில் எப்போதும் பண்பலை ஒலித்துக்கொண்டிருக்கும். ஆரம்பத்தில் எனக்கும் அது பிடித்திருந்தது. நாளடைவில் தினசரி ஒரே மாதிரியான குரல்கள், ஒரே மாதிரியான பேச்சு, ஒரே மாதிரியான பாடல்கள் என்று சலித்துவிட்டது. ஆனால் வாகன ஓட்டுநருக்கு சலிக்கவில்லை. உண்மையில் அவர் வாகன ஓட்டுநர் மட்டுமல்ல, உரிமையாளரும் கூட. அவருடைய வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டு ரேடியோ பொட்டியை கொஞ்சம் நிறுத்த முடியுமா ? என்று கேட்பது எனக்கு அவ்வளவு நாகரிகமாக படவில்லை. அதுவுமில்லாமல் இரவு பன்னிரண்டு மணி வரை தூக்கத்தை கட்டுபடுத்திக் கொண்டு உழைக்கும் மனிதரிடம் போய் பாடலை நிறுத்துங்கள் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும். அதனால் இப்ப என்ன பெருசா கெட்டுப்போச்சு என்று கேட்டுக்கொள்ள பழகிவிட்டேன். ஆனால் புலம்பலாம் இல்லையா...?

முதலில் ஒரு முன்ஜாமீன் போட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் நான் குறிப்பிட இருக்கின்ற மூவருமே உண்மையில் சிறப்பான வானொலி தொகுப்பாளர்களே. லபோ திபோ என்று கத்துபவர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் மூவரும் ஆயிரம் மடங்கு பரவாயில்லை. இருப்பினும் மோனோடோனஸாக அவர்களுடைய குரல்களையே கேட்டுக்கொண்டிருந்ததின் விளைவே இக்கட்டுரை. உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார். ஆனால் தினமும் ஒரே மாதிரியாகவே எழுதிக்கொண்டிருந்தால் சலிப்பு தட்டுகிறது அல்லவா...? அது மாதிரிதான்...!

அன்பான அருண்
தினசரி இரவு பத்திலிருந்து பதினோரு மணிவரை சூரியன் பண்பலையில் ஒலிபரப்பாகும் இனிய இரவு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவருடைய குரல் கேட்டதும் பிடித்துவிடக் கூடியது, கேட்கக் கேட்க பிடிக்காமல் போகக்கூடும். மெட்ராஸ் பவன் சிவகுமார் குரல் போலவே இருக்கும். அருண் ஜீவகாருண்ய கட்சியை சேர்ந்தவராக இருக்கக்கூடும். யாரையும் விளையாட்டுக்காக கூட கிண்டலடித்து பேசமாட்டார். தொலைபேசி நேயர்களை லைட்டா கலாய்க்கக்கூட மாட்டார், அதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் என்று நினைக்கிறேன். வெறுமனே தடவிக்கொடுத்துக்கிட்டே இருந்தா பூனை கூட செத்துப்போயிடும்’ன்னு ஜேஜே படத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல இவருடைய பேச்சை கேட்டால் என்னடா இந்தாளு எப்பப்பாரு கொழைஞ்சுக்கிட்டே இருக்கான்னு இயல்பாகவே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அருணுடைய இன்னொரு சிக்கல் பொதுபுத்தி வார்த்தைகள். அதாவது நிகழ்ச்சியின் இடையில் அருமையான கிளைமேட், மண் வாசனை வீசுற இந்த இனிய இரவு நேரத்துல ராஜா சார் பாடல்களை கேட்குறது ஒரு சுகம்தான்ல்ல...? அப்படின்னு ஒரு ‘ல்ல’ போட்டு கேள்வியா முடிப்பார். உண்மையில் நாம் அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இல்லையென்றாலும் அவருடைய கேள்விக்கு ஆம் சொன்னதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்.

லவ் குரு
அதே இரவு பத்து மணிவாக்கில் ரேடியோ சிட்டியில் ஒலிபரப்பாகும் லவ் குரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவரும் கிட்டத்தட்ட அருண் போல தான். யாருக்கும் வலிக்காமல் பேசக்கூடியவர். எப்போதாவது தொலைபேசி நேயர்களிடம் மட்டும் லைட்டா... ரொம்ப லைட்டா... கிண்டலடிப்பார். அருணுடைய குரல் பதிவர் சிவகுமார் போன்றது என்றால் இவருடைய குரல் நடிகர் சிவகுமார் போன்றது. அதாவது ஒருமாதிரி தழுதழுத்த குரலில் பேசுவார். கெரகம் அவர் தொகுத்து வழங்குகிற நிகழ்ச்சி அப்படி. தினசரி இரவு யாராவது ஒரு காதலன் / காதலியுடைய உருக்கமான கடிதத்தை ஹஸ்கி வாய்ஸில் படித்துக்காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் தீம். ஆனால் அந்த காதல் கடிதங்களை நிலையத்தினரே உருவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. நாட்டில் என்ன அத்தனை கிறுக்கர்களா இருக்கிறார்கள்...? மேலும், மனமுதிர்ச்சியடையாத காதலர்களை நன்றாக கிண்டிவிடக்கூடிய அளவில் லவ் குரு என்னைப்பொறுத்தவரையில் ஒரு மோசமான நிகழ்ச்சி. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு ஒலியிடுகை வெளியிட்டேன். மிகவும் திட்டமிட்டு பதிவு செய்யப்பட்டாலும் கூட என்னால் தொடர்ச்சியாக மூன்று நிமிடங்கள் கூட பேச முடியவில்லை. அப்படியிருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் பேசும் காதல் தோல்வி ஆசாமிகள் எப்படி கனகச்சிதமாக பேசுகிறார்கள்...? தொடர்ந்து கேட்டால் லவ் குரு ஒரு நல்ல ஜோடனை நிகழ்ச்சி என்று தெரிந்துவிடும்.

யாழ் சுதாகர்
அப்படியே இரவு பதினோரு மணியளவில் மீண்டும் சூரியன் பண்பலைக்கு திரும்பினால் யாழ் சுதாகரை கேட்கலாம். ரயில் நிலையத்தில் அறிவிப்பு குரலை கேட்டிருக்கிறீர்களா....? வண்டி எண், செல்லும் இடம், பிளாட்பார எண், புறப்படும் நேரம் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வரும். அதுபோல யாழ் சுதாகரின் குரல் டெம்ப்ளேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அதில் படத்தின் பெயர், பாடலின் முதல் வரி, பாடகர்கள் பெயர், பாடலின் ராகம் போன்றவற்றை உள்ளீடு செய்கிறார்களோ என்பது என்னுடைய ஐயப்பாடு. பயணிகள் கவனத்திற்கு என்று துவங்கும் சொற்றொடர் நம்மை எவ்வளவு வெறுப்பேற்றுமோ அதற்கு இணையாக வெறுப்பேற்றக்கூடிய சொற்றொடர் நாதகலாஜ்ஜோதி இளையராஜ்ஜாவின் இசை வார்ப்பில். சூரியன் பண்பலையின் தாரக மந்திரமான கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்ற வரிகளை நம்மாளு தூயதமிழில் பொறுமையாக வாசிக்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுத்துவிடுவார். அடிக்கடி சுதாகர் உச்சரிக்கும் இன்னொரு சொற்றொடர் பழைய பாடல்கள் தங்கம் என்றால் புதிய பாடல்கள் தகரம் என்பேன். அப்படியென்றால் சூரியன் பண்பலையில் நாளின் மற்ற இருபத்தி மூன்று மணிநேரங்கள் ஒலிபரப்பாகும் பாடல்கள் அனைத்தும் தகரம் என்று அவரே ஒப்புக்கொள்கிறாரா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 January 2014

பட்டியல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் மூட்டை மூட்டையாக புத்தகங்கள் வாங்கி அவற்றை லிஸ்ட் போடும் ஆசாமி கிடையாது. மிகவும் செலக்டிவ். எனக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது, புத்தகங்கள் வாங்குவதில் கூட. புத்தகக்காட்சியை எடுத்துக் கொண்டால், முதலில் ஒருநாள் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாளாக சென்று ஒன்றிலிருந்து தொடங்கி எல்லா கடைகளையும் பார்வையிட்டு ஒரு சுற்று வருவேன். இடையிடையே நல்லதாக ஏதாவது கண்ணில் பட்டால் (புத்தகங்கள் தான்) குறித்து வைத்துக்கொள்வேன். இரண்டாவது நாள், யாராவது ஒரு நண்பருடன் சென்று அவர் புத்தகங்கள் வாங்குவதையும் கையில் எடுத்து பார்த்துவிட்டு நிராகரிக்கும் செய்கைகளையும் மானிட்டர் செய்வேன். அவர் புத்தகங்கள் பற்றி ஏதாவது சொன்னால் அதை வாங்கி காதில் போட்டு வைத்துக்கொள்வேன். மூன்றாவது நாள், காலையிலேயே துரிதமாக சென்று நான் ஏற்கனவே குறித்து வைத்திருந்த பதிப்பகங்களிலிருந்தும் முக்கியமானவை எனக் கருதப்படும் பதிப்பகங்களிலிருந்தும் விலைப்பட்டியல்களை சேகரிப்பேன். அன்றிரவு எல்லா விலைப்பட்டியல்களையும் ஆராய்ந்து வாங்க வேண்டிய புத்தகங்களை பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல ஷார்ட்லிஸ்ட் செய்வேன். நான்காவது நாளில், பட்டியலிட்ட புத்தகங்களை சமர்த்தாக வாங்கிவிடுவேன். வளவளவென மொக்கை போடாமல் சுருங்கச் சொல்வதென்றால் – புத்தகங்கள் வாங்குவதில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் போல. எல்லா இனிப்பு வகைகளையும் ஒரு டின்னில் கொட்டச் செய்து அதுல இருந்து ஒரு நூறு கிராம் கொடு என்று அசடு வழிவேன்.

அப்படி ஷார்ட்லிஸ்ட் செய்து நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் :-
திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.75
மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140
ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் – ரூ.75
புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75
பாம்புத்தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100
இழந்த நாகரிகங்களின் இறவாக்கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145
கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30
கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60
ஒரு சிப்பாயின் சுவடுகளில் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.100
சூப்பர் சுப்பு 3D (இரண்டு கண்ணாடிகளுடன்) – ரூ.200
அலமாரி – மாத இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.50
ஃபெமினா தமிழ் – மாத(ர்) இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.180

கிளம்பிவிடாதீர்கள். பினாமி பெயரில் வாங்கிய பட்டியல் இரண்டு உள்ளன. தோழர் செல்வின் இம்முறை மிகவும் குறைந்த அளவில் புத்தகங்கள் வாங்கினாலும் அறிவியல் சார்ந்த புத்தகங்களாக வாங்கினார்.

அவருடைய லிஸ்ட்:
பூமி எனும் கோள் – ஜார்ஜ் கேமாவ் – தமிழில் தி.ஜானகிராமன்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ் சிவா
எப்போது அழியும் இந்த உலகம் ? – ராஜ் சிவா
விஞ்ஞானத்தில் சில விந்தைகள் – முனைவர் மெ.மெய்யப்பன்
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

சில புத்தகங்களை வாங்கலாம் என்ற ஆவல் இருக்கும், ஆனால் கொள்ளை விலை இருக்கும். அல்லது இதைப்போய் காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும். அல்லது வாங்கியபின் நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது என்ற அவநம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் நமக்காக வாங்கிக் குவிக்க ஒரு ஆபத்பாந்தவன் இருந்தால் எப்படி இருக்கும்...?

தோழர் ஆரூர் மூனா என் பரிந்துரையின் பெயரில் வாங்கிய புத்தகங்கள் :-
வெள்ளையானை - ஜெயமோகன்
ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
கொசு - பா.ராகவன்
நாயுருவி - வா.மு.கோமு
பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - வா.மு.கோமு
எட்றா வண்டிய - வா.மு.கோமு
மரப்பல்லி - வா.மு.கோமு
சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - வா.மணிகண்டன்
அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - முகில்
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
தண்ணீர் - அசோகமித்திரன்
வெல்லிங்டன் – சுகுமாரன்

பட்டியல் முடிந்தது. அடுத்த சிக்கல் வாசிப்பை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதுதான். பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 October 2013

ராஜா ராணி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இப்பொழுதெல்லாம் சினிமாக்காரர்கள் குட்டிக்கர்ணம் அடித்து காட்டியாவது மக்களை திரையரங்கிற்கு வரவழைத்து விடுகிறார்கள். வார இறுதியில் தொலைக்காட்சியை உயிர்பித்தால் வரிசையாக நான்கைந்து நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொள்கிறார்கள். வாய் காதுவரை நீளும் அளவிற்கு கதை அளக்கிறார்கள். ஒரு ஷோவில் ஹீரோயின் இடுப்புல கை வச்சா டக்குன்னு சிரிச்சிடுவாங்கன்னு ஹீரோ சொல்கிறார். சொல்வது மட்டுமில்லாமல் இடுப்பில் கை வைத்தும் காட்டுகிறார். ஒரு செய்தித்தாளில் ஏதோ ஒலிம்பிக் நடைபெறவிருப்பது போல நாளுக்கு நாள் கவுண்டவுன் போடுகிறார்கள். கடுபேத்துறாங்க மை லார்ட் ! எனினும் கடைசியில் நானும் ஒரு பொது ஜனம் தானே ? ராஜா ராணி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இரண்டில் ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் மிஸ்கின் மீதுகொண்ட அவ-நம்பிக்கையின் காரணமாக ராஜா ராணியை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.

ட்ரைலரை மட்டும் போட்டுக் காட்டினால் போதும் பக்கத்து வீட்டு மாலினி பாப்பா கூட கதையை சொல்லிவிடும். ஒரு கல்யாணம், அதற்குள் மடித்து வைக்கப்பட்ட இரண்டு காதல் கதைகள் என ஒரு காம்போ பேக்கேஜாக கொடுத்திருக்கிறார் அட்லீ !

படம் தொடங்கி சில நிமிடங்கள் வரை, சமகாலத்தில் வெளிவந்துக்கொண்டிருக்கும் மொக்கை காமெடி படவரிசையில் இன்னொன்று என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. தொலைக்காட்சியில் ஒலியை பெருக்கி வைத்து குத்துப்பாடல்கள் கேட்பது, குடித்துவிட்டு சலம்புவது என்று பார்க்கும் நமக்கே கடுப்பானால் நயன்ஸுக்கு கடுப்பாகாதா ? ஜெய் – நயன் காதல் எபிசோடு துவங்கியதும் கொஞ்சம் ஆசுவாசமானேன். குறிப்பாக ஜெய்யின் வாடிக்கையாளர் சேவை மைய காட்சிகள் என்னுடைய டோகோமோ நாட்களை நினைவு கூர்ந்தன. இரண்டாம் பாதியில் ஆர்யா – நஸ்ஸு பகுதி. கொஞ்சம் தொய்வாகவே நகர்ந்து சோகமாக முடிகிறது. திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும் என்கிற சிக்கலான சூழ்நிலையில் கொஞ்சம் ஜவ்வென இழுத்து தமிழ் சினிமா செண்டிமெண்ட் இலக்கணப்படி ஏர்போர்ட்டில் வைத்து ஆர்யாவும் நயன்தாராவும் ஒன்று சேர்கிறார்கள்.

பொண்ணுக்காக தான் அடிச்சிக்கக்கூடாது. ஃப்ரெண்டுக்காக அடிக்கலாம். என்றபடி நான்கே அடியில் அந்த ஜிம் பாடியை அடித்து வீழ்த்தும் ஆர்யா சற்றே மெர்சலாக்குகிறார். நஸ்ரியாவை பார்க்கும் போதெல்லாம் ஈயென்று இளித்து தொலைக்கிறார். சகிக்கல. ஒரு படத்தில் ஒரு வேடத்தில் நடித்தால் தொடர்ச்சியாக அதே போன்ற வேடமளிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு ! கிட்டத்தட்ட எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த அதே வேடம் ஜெய்க்கு. ஆனாலும், நான் ஒன்னும் அழுவலையே, கண்ணுல வேர்க்குது’ன்னு சொல்லும்போது நமக்கு கண்ணுல தண்ணி வருது சிரிச்சு.

த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள் தாங்கள் டொக்கு ஆகிக்கொண்டிருப்பதை உணர்ந்தால் உடனே கேரள மசாஜ் மகிமையில் புத்தம் புதிய பூவைப் போல மீண்டு வருகின்றனர். இது நயன்தாராவின் முறை. ஆனால் க்ளோசப் ஷாட்டில் அழுவதை எல்லாம் காட்டியிருக்க வேண்டாம். நஸ்ஸுக்குட்டி ! ஒட்டுமொத்த படத்திலும் அதிகமாய் ஸ்கோர் செய்வது நஸ்ஸு தான். எந்த ஹீரோயினுக்கும் இப்படியொரு அறிமுகக்காட்சி வைத்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். மலையாளம் கலந்த சொந்தத்தமிழ் வேறு கிறங்கடிக்கிறது. எம்.ஜி.யார் படங்களில் அவர் இறப்பது போன்று காட்சிகள் அமைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். அந்த ஆங்கிளில் இருந்து பார்த்தால் ராஜா ராணியையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சந்தானம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர் ஜெய் – நயன் போர்ஷனில் இடம்பெற முடியாத நிலை. ஏதோவொரு பேட்டியில் சந்தானம் ராஜா ராணியில் ஏதோ ஜெயசித்ராவோ குணச்சித்திராவோ அப்படி நடித்திருப்பதாக சொல்லியிருந்தார்கள். அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. நயனிடம் உருக்கமாக பேசும் ஓரிரு வரிகளில் கூட சந்தானம் காமெடி செய்வதைக் காட்டிலும் அதிக சிரிப்பு வருகிறது. சந்தானம் முழுமுதல் காமெடியில் செட்டாகி விட்டார். அவரை குணசித்திர வேடத்தில் எல்லாம் பார்க்க முடியவில்லை. போலவே, சத்யன் காமெடிக்கெல்லாம் சிரிப்பு வரவில்லை.

ஷங்கர் தன்னுடைய சிவாஜி படத்தில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்துவிட்டாராம். அந்த சத்யராஜ் என்ற மானஸ்தரை இப்பொழுது தேடினாலும் கிடைக்கவில்லை. சென்னை எக்ஸ்பிரஸ், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்தமைக்கு சத்யராஜ் வருத்தப்பட்டே ஆகவேண்டும். தலைவா படத்தில் ஒரு வசனம் சொல்லுவார், ஒருமுறை கத்தி நம்ம கைக்கு வந்துடுச்சுன்னா ஒன்னு காக்கும். இல்லை அழிக்கும். அதே மாடுலேஷனில் ராஜா ராணியிலும் ஒரு வசனம் கொல்லுகிறார்... சாரி சொல்லுகிறார். முந்தய படங்களை ஒப்பிடும்போது சத்யராஜூக்கு கெளரவமான வேடம்தான். பெண்களுக்கு பிடிக்கக்கூடும். ஈன்னா வான்னா அப்பான்னா யாருக்குத்தான் பிடிக்காது.

பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. ஆனால் பாடல் காட்சிகளை பார்க்கும்போது இயக்குநர் ஷங்கரின் சிஷ்யர் என்று நினைவுக்கு வருகிறது. ஆர்யாவின் கையிலிருந்து காராசேவு தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் ஷங்கர் டச். 

படத்தின் பலம் என்று எது கருதப்படுகிறதோ அதுவே படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது வேதனை. இரண்டே முக்கால் மணிநேரத்தில் மூன்று காதல் கதைகளை முழுமையாக சொல்ல வேண்டும் என்கிற அவசரத்தில் மூன்றையுமே அழுத்தமில்லாமல் சொல்லியிருக்கிறார். ஹீரோயின் புட்டத்தை ஆட்டிக்கொண்டு வருவதைப் பார்த்தால் உடனே காதலா ? எனக்கு எங்க அப்பாவை பார்த்தா தான் பயம். மத்தபடி ஐ லவ் யூங்க என்று அசால்ட்டாக சொல்கிறார் இன்னொரு நாயகன். ஆர்யா – நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் எத்தனை உணர்வுப்பூர்வமாக வந்திருக்க வேண்டும் ? ஆனால் நமக்கென்னவோ சேரத்தானே போறீங்க ? சேர்ந்து தொலையுங்க என்ற சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஏ.ஆர்.முருகதாஸுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய், அனன்யா. ராஜா ராணியில் நஸ்ரியா.

மொத்தத்தில் ராஜா ராணியை நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம். ஆனால் அது எப்படி விளம்பரப்படுத்தப் படுகிறதோ அப்படியில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. திருமணமான எல்லோரும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும், ஆண் – பெண் புரிதல் சார்ந்த படம் போன்ற பூ சுற்றல்களை எல்லாம் காதில் வாங்கிப் போட்டுக்கொள்ளாமல் பார்த்தால் ஒருமுறை ரசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 March 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படக்குழுவினர் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டுமென்றால் முதலில் விளம்பர வடிவமைப்பாளருக்கு தான் சொல்ல வேண்டும். பளீரென்று பல்லிளித்து நம்மை திரையரங்கிற்கு வரவேற்கின்றன. அப்புறம் ரெஜினா. சிவா மனசுல சக்தி தெலுங்கு பதிப்பில் நடித்தவர். தமிழிலும் கண்டநாள் முதல் படத்தில் தோன்றியிருக்கிறார். அவருடைய அழகு அப்படியே என்னை அலேக்காக ஆம்னி வேனுக்குள் தூக்கிப்போட்டு ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டது.

இரண்டு இணை பிரியா நண்பர்கள். வழக்கம்போல தறுதலைகள். உருப்புட்டார்களா என்பதே படத்தின் உருப்படியான கதை.

எல்லா வணிக திரைப்படங்களையும் போல குடிகார நண்பர்கள், கரித்துக்கொட்டும் அப்பா பரிந்துபேசும் அம்மா அல்லது வைஸ் வெர்ஸா, அரைலூஸு கதாநாயகிகள், முழுலூஸு கதாநாயகி அப்பாக்கள் என்று படம் நெடுக நிறைந்திருந்தாலும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா என்கிற காற்று பிரியும் சத்தத்தை நம்மிடமிருந்து வெளிவராமல் பார்த்துக்கொள்கிறார்கள். போலவே, நாயகர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரிந்து உச்சக்கட்ட காட்சியில் ஒன்றுசேருவார்கள், யாருமே எதிர்பாரா வண்ணம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்கிற எண்ணத்திற்கெல்லாம் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். 

இரண்டு கதாநாயகர்கள் இருப்பினும் சிவ கார்த்திகேயன்தான் மனதில் நிற்கிறார். மெரினா படத்தில் அய் பஞ்ச்சு என்பாரே, அதே மாடுலேஷன் அதே உடல்மொழி. அவருடைய ஹியூமர் சென்ஸ் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சி.காவுக்கு எழுதிய அதே வரிகள் தான் விமலுக்கும். அவருடைய மாடுலேஷன், உடல்மொழி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. எதிர்மறையாக புரிந்துக்கொள்ளவும்.

பிந்து மாதவியை பற்றி இரண்டொரு பத்திகள் வர்ணித்து எழுதியிருக்கலாம், ரெஜினா இல்லாமலிருந்தால். எழுதினாலும் “உங்களை கம்பேர் பண்ண சொன்னேனா” என்று ரெஜி கோபித்துக் கொள்ளக்கூடும். சுடச்சுட சில துளிகள் தூறினால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறார் ரெஜினா ! அந்த ஆரஞ்சு சுளை உதட்டிற்காகவே பக்கத்து வீட்டுக்காரரின் சொத்து முழுவதையும் எழுதி கொடுத்துவிடலாம். ரெஜிக்கு ஒரு கவர்ச்சிப்பாடல் கூட வைக்காததால் இதற்கு மேலே எதுவும் சொல்ல முடியவில்லை.

பிந்து மாதவியை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ‘மொக்கமூஞ்சி’. மாவு மாதிரி இருக்கிறார். வேண்டுமென்றால் நகைச்சுவை நடிகையாக வட்டமிடலாம்.

பளிச்சென சிவகார்த்திகேயன் - ரெஜினா. ஃபியூஸ் போனது போல விமல் - பிந்து. குட் காம்பினேஷன். 

துணை நடிகர்கள் தங்கள் பங்கிற்கு அமர்க்களப் படுத்தியிருக்கிறார்கள். பட்டை முருகனின் தாயாரும், டெல்லி கணேஷும் க்ளாஸான நடிப்பு. டெல்லி கணேஷின் கலாசலா டான்ஸ் ரசிக்க வைக்கிறது. சூரி, அவருடைய மாமனார் ஆகியோரும் சிறப்பு.

இந்த படத்தைப் பற்றி எனக்கு முன்பே தெரியாத இரண்டு விஷயங்கள். ஒன்று, இசை யுவன். டைட்டிலில் போடாவிட்டால் கடைசி வரை தெரிந்திருக்காது. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பிற்கு முன்னே என்ற நா.முத்துக்குமாரின் வரிகளுக்காக அந்த இசை பிடித்திருக்கிறது. இரண்டு, இயக்கம் பாண்டிராஜ். நகைச்சுவையை மட்டும் அடித்தளமாக வைத்துக்கொண்டு வெவ்வேறு கருவில் படம் எடுக்கிறார். கே.பி.கி.ர.வை பொறுத்தவரையில் நகைச்சுவை மட்டத்தை உயர்த்திவிட்டு கடைசியாக கொஞ்சமாக கருத்து சொல்லியிருக்கிறார். ஃபினிஷிங் டச் நேரடியாக நம்முடைய மனதை டச் செய்தாலும் கூட, அந்த ரயிலடி மரணத்தை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. கலகலவென சிரித்துக்கொண்டிருந்த திரையரங்கம் இரண்டே நிமிடத்தில் வாத்தியார் நுழைந்த வகுப்பறை போலாகிவிட்டது.

முழுநீள நகைச்சுவை, இறுதியில் செண்டிமெண்ட் வகையறா படங்களில் பெரும்பாலும் வேறு வழியே இல்லாமல் கதாநாயகன் ஓரிரவில் / ஒரு பாடலில் வாழ்க்கையை வென்றேடுப்பதாக காட்டி நிறைவு செய்வார்கள். அதிலும் நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரி தான் இருக்கும். (எ.கா: சகுனி தேர்தல் வெற்றி, பாஸ் என்கிற பாஸ்கரன் டுடோரியல் காலேஜ்) இந்தப்படத்திலும் அதுவே தொடர்ந்திருக்கிறது. ஒயின்ஷாப்பில் புட்டி பொறுக்கும் காண்டிராக்ட்டை ஒரே நிமிடத்தில் ஒயின்ஷாப் ஓனரிடம் பேசி வாங்கிவிடுகிறார் நாயகன்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா அடிக்கடி  பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. சில இடங்களில் ஒன்பதுல குரு. பொழுதுபோக்கு சினிமா விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 February 2013

அந்தமான் - வாழ்க்கைமுறை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் அந்தமான் மண்ணில் கால்பதித்த சில நிமிடங்களிலேயே என் தந்தையின் நண்பருடைய செல்வாக்கை புரிந்துக்கொண்டேன். ஒருமாதிரி திருட்டுமுழியுடன் நுழைந்த என்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழிமறித்து கேள்விக்கணைகளை தொடுத்தார்கள். இன்னாருடைய விருந்தினர் என்று சொன்னதும் மரியாதையாக அனுப்பிவைத்தார்கள். நான் தங்கியிருந்த தெலானிப்பூர் பகுதியில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே அவரை தெரிந்திருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கிறது. தங்குமிடத்திற்காக அலைய அவசியமில்லாமல் போனது. விருந்தினருக்காக கட்டிவைக்கப்பட்ட சில அறைகளுள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டேன். ஏசி இல்லை. மற்றபடி விசாலமான கட்டில், தொலைக்காட்சி, சுத்தமான குளியல் மற்றும் கழிவறைகள், பாத்ரூமில் ஹீட்டர் என்று செளகரியமாக இருந்தது. அடுத்தநாள் என்னுடைய சைட் ஸீயிங் இனிதே துவங்கியது. இப்போது சுற்றுப்பயணத்தில் தொபுக்கடீர் என்று குதிப்பதற்கு முன்பு அந்தமான் மக்களின் வாழ்க்கைமுறையை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நம் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட இரண்டு - சினிமா & அரசியல். இரண்டினுடைய ஆதிக்கமும் அந்தமான் மக்களிடம் அதிகமில்லை.

சினிமா
கப்பலில் பயணிக்கும்போது தான் உள்ளூர்வாசிகள் அந்த அதிர்ச்சியைக் கொடுத்தார்கள் - அந்தமானில் திரையரங்குகள் இல்லை. லைட் அவுஸ், ஆனந்த் பேரடைஸ், சப்னா தியேட்டர் போன்ற அரங்குகள் சில வருடங்களுக்கு முன்புவரை இருந்திருக்கின்றன. ஆட்கள் வரத்து குறைந்து நாளடைவில் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. இளைஞர்களை பொறுத்தமட்டில், சினிமா பார்ப்பதென்றால் டிவிடியில் தான் பார்ப்போம் என்கிறார்கள். அப்போதும் கூட புதுப்படம், உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வமெல்லாம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. ரஜினி - கமல், அஜித் - விஜய் போன்ற பிம்பிள்ளிக்கி பிளாக்கி மோதல்கள் எல்லாம் அங்கே நடைபெறுவதில்லை.

அரசியல்
அந்தமான் & நிகோபர், பாண்டிச்சேரியை போலவே ஒன்றியப் பகுதியாகும். எனினும், அதன் அரசியல் மற்ற ஒன்றியப்பகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. அந்தமானுக்கென்று முதலமைச்சர் கிடையாது. ஆட்சியதிகாரம் ஆளுநரிடம் தான் உள்ளது. ஒரேயொரு லோக் சபா எம்.பி அந்தமானில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். நீண்ட வருடங்களாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்தான் அங்கு எம்பியிருக்கிறார். ஆனால் தற்போது பி.ஜே.பி எம்பி அமர்ந்திருக்கிறார். “யோவ்... பி.ஜே.பிக்கு ஓட்டு போடுற அளவுக்கு மோசமான ஆளுகளாய்யா நீங்க...” என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. இங்கே கட்சி, சாதி, மதமெல்லாம் பார்த்து வாக்களிக்க மாட்டோம். வேட்பாளரை பார்த்துதான் வாக்களிப்போம் என்கிறார்கள்.



உணவு
சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடல்சூழ் பகுதியென்பதால் கடல் உணவுகள் பிரசித்தி. என்ன ஒன்று, தமிழகத்தில் வஞ்சிரை, சங்கரா, வாளை, சுறா, இறால் என்று சொல்லப்படுபவை அங்கே இந்தி, வங்காள மொழிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஜிங்கான் மச்சி என்றால் இறாலை கொண்டுவந்து வைக்கிறார்கள். மற்றபடி, சுற்றுலா பயணிகளிடம் மான்கறி கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி ஆசை காட்டுகிறார்கள். அதேசமயம், மான்கறி சாப்பிட்டு மாட்டினால் கடுமையான தண்டனைகள் உண்டு என்று சொல்லி மிரள வைக்கிறார்கள்.



மது
ANIIDCO எனும் நிறுவனம் தான் அந்தமான் முழுவதும் சரக்கு சப்ளை செய்கிறது. தமிழகத்தில் TASMAC மாதிரி என்று சொல்ல முடியாது. ANIIDCO நேரடியாக சில கடைகளை அந்தமானில் நிறுவியுள்ளது. இதனை அங்குள்ளவர்கள் ‘சொசைட்டி’ என்று சொல்கிறார்கள். அத்தகைய கடைகளில் நீங்கள் சரக்கு வாங்க மட்டுமே முடியும். உட்கார்ந்து பருக இடமில்லை. மற்றபடி போர்ட் ப்ளேரில் இருபதடிக்கு ஒரு மதுக்கூடம் (பார்) அமைந்திருக்கிறது. மதுக்கூடங்களில் நம்மூர் தனியார் பார் முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஸ்மால், லார்ஜ், கட்டிங் அளவுகளில் மது, கண்ணாடி குடுவைகளில் பரிமாறப்படுகிறது. நான்கைந்து கிண்ணங்களில் சைட் டிஷ். விலையும் ஒப்பீட்டளவில் குறைவு. அதிலும் அருகிலிருந்த Holiday Inn மதுக்கூடத்தில் வேண்டப்பட்டவர் என்று அறிமுகப்படுத்தி விட்டதில் நல்ல மரியாதை கிடைத்தது.



பட உதவி: கூகிள்
பயணம்
அரசு பேருந்துகளை தேட வேண்டியிருக்கிறது. மினி பஸ் போன்ற அளவில் தனியார் பேருந்துகள் நிறைய தென்படுகின்றன. எந்தவொரு தீவுக்கும் மேம்பால போக்குவரத்து கிடையாது. திக்லிப்பூர், ரங்கத், மாயபந்தர் போன்ற தீவுகளுக்கு செல்வதென்றால் பேருந்தே கப்பலில் ஏறி பயணிக்கிறது. ஆட்டோக்காரர்கள் அதிகம் ஏமாற்றுவதில்லை. ஆனால், அந்த வேலையை டூரிஸ்டு ஏஜெண்டுகள் செவ்வனே செய்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவு.

மொழி & மதம்
தமிழும் வங்காளமும் ஆதிக்க மொழிகள். ஹிந்தி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தெலுங்கு, மலையாளம் பேசும் மக்களும் இருக்கிறார்கள். முதலாளிகள், தொழிலதிபர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருக்கிறார்கள். சமீபகாலமாக பெங்காலிகளின் கை ஓங்கியிருப்பதாக தெரிகிறது. ஹிந்துக்கள் பெரும்பான்மை. காளியும் விநாயகரும் இஷ்ட தெய்வங்கள். முருகனை வணங்குபவர்கள் நிச்சயம் தமிழர்கள் என்று கண்டுபிடித்துவிடலாம். அடுத்தபடியாக முறையே கிறிஸ்தவமும் இஸ்லாமியமும்.

மற்றவை
பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. அவை தவிர்த்து மேற்படிப்பு படிக்க விரும்பினால் தாயகத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ தான் செல்ல வேண்டும். இந்திய நகரங்களின் தீராத தலைவலியாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் அந்தமானில் மிக மிக குறைவு. சிக்னல் விளக்குகள் கிடையாது. ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் மட்டும் நிற்கிறார்கள். யாரையும் மடக்கி லஞ்சம் வாங்குவதில்லை. காய்கறி, பழங்கள் தாயகத்திலிருந்து அனுப்பப்படுவதால் கொள்ளை விலையில் விற்கப்படுகின்றன. யாரும் செய்தித்தாள்கள் படிப்பதில்லை. படிக்க வேண்டுமென்று நினைத்தாலும் மதியத்துக்கு மேல்தான் கிடைக்கும். சொல்லப்போனால் யாரும் செய்திகளை தெரிந்துக்கொள்ளவும் விரும்புவதில்லை.

தொடரும்

முந்தய பகுதிகள்:
பயணத்தொடர் ஆரம்பம்
கப்பல் பயணம்

மேலும் சில கேள்விகளும் பதில்களும்


1. சீசன் ?
டிசம்பர் - மே. மற்ற மாதங்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சில தீவுகளில் சீசன் இல்லாத சமயம் பராமரிப்பிற்காக சுற்றுப்பயணிகளை அனுமதிக்க மாட்டார்கள். மழைக்காலத்தில் உள்ளூர்கப்பல்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் அபாயங்கள் உள்ளன.

2. எத்தனை நாட்கள் தேவை ?
போக வர விமானப்பயணம் சேர்த்து எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவோடு சுற்றிப்பார்க்கலாம். ஓரிரு நாட்கள் குறைவாக இருப்பின் சில இடங்களை தவிர்த்துவிட்டு சுற்றிப்பார்க்கலாம்.

3. சொகுசுக்கப்பல்கள் உண்டா ?
முந்தய பதிவில் குறிப்பிட்ட Azamara Journey எப்போதாவது ஒருமுறை பயணிக்கும். டிக்கெட் கட்டணம் 3500 அமெரிக்க டாலர்களில் துவங்கும். தவிர, AMET நிறுவனம் இயக்கும் கப்பல்களில் டிக்கெட் விலை பதினெட்டாயிரத்தில் ஆரம்பிக்கிறது.

4. கப்பல், விமானம் இரண்டில் எது சிறந்தது ?
கப்பலில் போக வேண்டுமென்று பேராவல் கொண்டவர்கள் தவிர்த்து மற்றவர்கள் விமானத்தையே தேர்ந்தெடுக்கவும். கப்பலில் பயணம் செய்தால் மூன்று நாட்கள் ஸ்வாஹா, விமானத்தில் மூன்றே மணிநேரங்கள். தவிர, தீவுகளுக்கிடையே சிறிய கப்பல்களில் பயணிக்கலாம்.

5. விமானக் கட்டணம்
நான்கைந்து மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டால் ஒருவழிப்பயணத்திற்கு 5000ரூ வரை செலவாகும். தேதி நெருங்க நெருங்க பதினெட்டாயிரம் வரை அதிகரிக்கும். வார இறுதி நாட்களை விட, வாரநாட்களில் குறைவாக இருக்கும்.

மேலும் கேள்விகள் வரவேற்கப் படுகின்றன...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment