6 July 2016

பெங்களூரு தினங்கள் – 4


அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு போகப்போகிறோம் என்றதும் அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் உற்சாகமூட்டிய ஒரு விஷயம், அங்கு நல்ல சரக்கு கிடைக்கும் என்பது. குறிப்பாக வெளிநாட்டு பியர் வகைகள். தமிழ்நாட்டு மதுக்கடைகளில் திரும்பிய திசையெல்லாம் கிங்ஃபிஷர்தான் பிரதானமாக கிடைக்கும். அதிலேயும் ‘லாஹர்’ கிடைக்காது, கூலிங் இருக்காது. வேண்டாம் என்றால் 6000, 12000 என்ற பெயரில் உள்ள மட்டமான பியர்தான் கிடைக்கும். டாஸ்மாக்குகளின் ஒரேயொரு ஆறுதல் ப்ரிட்டிஷ் எம்பயர் பியர்தான். பெங்களூரில் அப்படியில்லை. கால்ஸ்பர்க், பட்வெய்ஸர், ஹெய்னகென், ஃபாஸ்டர்ஸ் உட்பட நல்ல பியர்கள் டின்னிலும், பாட்டிலிலும் MRP விலைக்கே கிடைக்கின்றன. 

முதல்முறை பெங்களூரில் உள்ள ஒரு மதுபான ஷோரூமுக்கு சென்றோம். ஏறத்தாழ தமிழக எலைட் கடைகளைப் போல காட்சியளித்தது. ஆனால் சாய்ஸ் மட்டும் ஏராளம்.

தமிழகத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். டாஸ்மாக்கில் மற்ற பானங்களை விட பிராந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். புதிய சரக்குகளை அறிமுகப்படுத்தும்போது அதில் பிராந்தி பிரதான இடம் வகிக்கும். ஒருமுறை அலுவலக டீம் அவுட்டிங் சென்றிருந்தோம். வந்திருந்தவர்கள் அவரவர் விருப்ப சரக்குகளை கொணர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர்கூட பிராந்தி கொண்டு வரவில்லை. மேலும் என் பையில் இருந்து பிராந்தியை எடுத்ததும் என்னை ‘டிபிக்கல் டமில்நாடு கய்’ என்று ஏளனம் செய்தார்கள். சென்னையின் விருப்ப பானம் பிராந்திதான் என்று ஒரு பிரபல நாளிதழே சூடமேற்றி சத்தியம் செய்கிறது. மற்ற (பியரல்லாத) பானங்களோடு ஒப்பிடும்போது டாஸ்மாக்குகளில் எண்பது சதவிகிதம் பிராந்தி விற்பனையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பிராந்தியை குதிரைக்கு கொடுக்கும் சரக்கு என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதனால்தான் தங்களை கட்டுக்கடங்காத குதிரையாக கருதும் தமிழர்கள் பிராந்தியை அருந்துகிறார்களோ ? இன்னொரு பக்கம், தமிழர்கள் வேறு வழியில்லாமல் தான் பிராந்தி அருந்துகிறார்களோ என்ற ஐயப்பாடும் எனக்கு எழுவதுண்டு. உண்மையைச் சொல்வதென்றால் தமிழக குடிகாரர்கள் பெரும்பாலோனோருக்கு பானங்களின் பெயரோ, வகையோ தெரிவதில்லை. இருப்பதிலேயே மலிவாக எது கிடைக்கிறதோ அதனை அவர்கள் உட்கொள்கிறார்கள். டாஸ்மாக்குகளில் வெறுமனே பணத்தை மட்டும் நீட்டி எழுபது ரூபாய் சரக்கு, எண்பது ரூபாய் சரக்கு என்று கேட்பவர்கள் அதிகம். எதற்காக இந்த பிராந்தி கதையை சொல்கிறேன் என்றால் பெங்களூரில் ஒப்பீட்டளவில் பிராந்தி குறைவு. அதே சமயம் ரம், விஸ்கியில் அதிக வெரைட்டி கிடைக்கின்றன. 

பெங்களூரில் உள்ள விதவிதமான மதுக்கடைகளுக்கும், மதுக்கூடங்களுக்கும், க்ளப் / பப் வகையறாக்களுக்கு சென்று ஆராயும் அளவிற்கு எனக்கு நேரம் கிடைத்ததில்லை. ஒருமுறை அங்குள்ள மோர் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். அங்குள்ள பலசரக்கு பொருட்களுக்கு இடையே ஓரமாக ஒரு பிரிவை மதுபானங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு நான் கண்டு உவந்த சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.
  • குவார்ட்டர் அளவு பானங்கள் ஃப்ரூட்டி பாணியில் டெட்ரா பேக்குகளில் கிடைக்கின்றன. இதுபோக பாண்டிச்சேரி போல சாம்பிள் பானங்கள் குட்டிக்குட்டி புட்டிகளில் கிடைக்கின்றன.
  • மலிவான பானங்கள் முதல் விலையுயர்ந்த ‘ஒசந்த சாதி’ பானங்கள் வரை பாரபட்சமின்றி கிடைக்கின்றன. குறைந்த பட்சமாக ஒரு ஃபுல் பாட்டில் ரம் வெறும் 254 ரூபாய்க்கு கிடைக்கிறது.
  • பகார்டியில் லெமன், ஆப்பிள், ஆரஞ்சு, பீச், கொய்யா, டிராகன் ஃப்ரூட், ராஸ்பெர்ரி உள்ளிட்ட சுவைகள் கிடைக்கின்றன. இதுபோக இறக்குமதி செய்யப்பட்ட காபோ, மலிபு தேங்காய் சுவையூட்டப்பட்ட வெண்ணிற ரம் கிடைக்கின்றன.
  • வொட்காவில் ஸ்மிர்னாஃப், எரிஸ்டாஃப், ரோமொனோவ் போன்ற உள்ளூர் பானங்களில் துவங்கி அப்சொலூட், க்ரே கூஸ் வரை கிடைக்கின்றன.
  • ஜின்னில் டாஸ்மாக்கில் கிடைக்குமே அந்த லோக்கல் பிராண்ட் (ப்ளு டைமண்ட் ?) தொடங்கி 8400 ரூபாய் மதிப்புள்ள டேன்க்வெரி (Tanquery) நம்பர் 10 ஜின் வரை கிடைக்கின்றன. அநேகமாக, அங்குள்ள விலையுயர்ந்த பானம் இதுவாகத்தான் இருக்கும்.
  • பியர்களில் முந்தைய பத்தியில் சொன்னது போல கால்ஸ்பர்க், பட்வெய்ஸர், ஹெய்னகென், ஃபாஸ்டர்ஸ் உட்பட நல்ல பியர்கள் டின்னிலும், பாட்டிலிலும் MRP விலைக்கே கிடைக்கின்றன. இதுபோக சில உள்ளூர் பியர்வகைகளும், ப்ரீசர்களும் கிடைக்கின்றன.
  • விஸ்கியில் பேக்பைப்பர் ரேஞ்சில் ஆரம்பித்து ப்ளாக் டாக், ஜேக் டேனியல், க்ளென்ஃபிடிச் வரை கிடைக்கின்றன. ஒரு ஃபுல் பாட்டில் க்ளென்ஃபிடிச்சின் விலை ஏழாயிரத்து எழுநூற்றி சொச்சம்.
  • ரெட் மற்றும் ஒயிட் ஒயின்கள் வெவ்வேறு விலையில் கிடைக்கின்றன. போர்ட் ஒயின் எனப்படும் காட்டமான ஒயின் வகையின் மிகக்குறைவான விலை என்னவென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒரு ஃபுல் பாட்டில் வெறும் 86 ரூபாய். 
ஐடி துறையில் பணிபுரிபவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இவர்கள் பெரும்பாலும் தாங்கள் ஐரோப்பாவிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக கற்பனையில் இருப்பவர்கள். எங்கும், எதிலும் ஆடம்பரமாக இருப்பதை விரும்புவார்கள். ஆனால் குடி என்று வந்துவிட்டால் இவர்கள் பெரும்பாலும் விரும்பிக் குடிக்கும் பானம் எது தெரியுமா ? ஓல்ட் மாங்க் ! முதலில் இதனை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவேளை ஓல்ட் மாங்க் என்ற பெயரில் இறக்குமதியாகும் பானம் ஒன்றிருக்கிறது போலும் என்றுதான் நினைத்தேன். பின்னாளில் அது அதே அடிமட்ட ஓல்ட் மாங்க் என்பதை தெரிந்துகொண்டேன். ஓல்ட் மாங்க்கை சிலாகித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பல கட்டுரைகளை நீங்கள் கூகுளில் தேடிப் படிக்கலாம். அத்தகைய பெருமைகள் கொண்ட ஓல்ட் மாங்க் பெங்களூரில் சல்லிசாக கிடைக்கிறது. ஒரு ஃபுல் 305 ரூபாய். இதே பாணியில் விஸ்கியில் கிளாஸிக்கான பேக்பைப்பரும் மலிவாக கிடைக்கிறது. இவையிரண்டையும் பார்த்தபிறகு எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. பிராந்தியில் குரியர் நெப்போலியன் என்றொரு அடிமட்ட அற்புதம் உள்ளதே அது எங்கே அய்யா ? அதே போல டக்கீலா பானங்களை பார்த்ததாக நினைவில்லை. ஒருவேளை வேறு கடைகளில் இருக்கலாம். 

பெங்களூரில் ஆங்காங்கே உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் (Restobar) உள்ளன. இவற்றில் ஒன்றில் நுழைந்து கால்ஸ்பர்க் கேட்டோம். தமிழக பார்களைப் போலவே கிங்ஃபிஷர் கொண்டு வரட்டுமா என்று மதுக்கூட ஊழியர் காலில் வெந்நீர் ஊற்றியதைப் போல துடியாய் துடித்தார். (என்ன மாயம் செய்தாய் மல்லய்யா ?) அதெல்லாம் முடியாது என்றதும் வெவ்வேறு பியர்களின் பெயரைச் சொல்லி கடைசியாக கில்லரோ, புல்லட்டோ ஏதோ ஒரு பெயர்கொண்ட பியரைக் கொணர்ந்து இது கால்ஸ்பர்கை போலவே இருக்கும் என்று திறக்கப் போனார். ‘குடித்தால் கால்ஸ்பர்க், இல்லையேல் விஷம்’ என்ற கொள்கையோடு அங்கிருந்து உக்கிரமாக வெளிநடப்பு செய்து மற்றொரு மதுக்கூடத்திற்கு சென்று கால்ஸ்பர்கை அடைந்தோம். இந்த மதுக்கூடங்களில் உள்ள இன்னொரு விசேஷம் பன்றிக்கறி. எனக்கு நினைவிருக்கிறது, நான் சின்ன வயதிலிருந்தபோது தமிழக துரித உணவகங்களில் பன்றிக்கறி கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னர் என்ன காரணத்தினாலோ அவை கிடைப்பதில்லை. இப்போது மாட்டுக்கறி கூட பெரும்பாலும் கிடைப்பதில்லை. பெங்களூரில் பன்றி மற்றும் மாட்டிறைச்சியை பாரபட்சமில்லாமல் விற்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம், ஒரேயொரு முறை பெங்களூரு மதுக்கூடங்களுக்கு சென்றுவிட்டு வந்து டாஸ்மாக்குகளுக்குள் நுழைந்தால் உங்களுக்கு வாழ்ந்துகெட்ட வீடு நினைவுக்கு வரும் ! 

பன்றிக்கறி வறுவலுடன் கால்ஸ்பர்கை பருகிய உற்சாகத்தில் வெளியேற முற்பட்டபோது ஒரு குடிமகன் அவருடைய பில்தொகையை குறுகுறுவென உற்றுப்பார்த்துவிட்டு பணியாளர் தன்னை ஏமாற்ற முயல்வதாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். மாநிலம் மாறலாம், மொழி மாறலாம், மதுபானங்களும் மாறலாம். ஆனால் மக்கள் மாறுவதில்லை ! 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 June 2016

மாண்ட்யா ராணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2002. சிம்பு ஹீரோவாக அறிமுகமாகியிருந்த சமயம். அப்போது அவர் நடிப்பில் வெளிவந்த ‘தம்’ படத்தில் ‘சாணக்யா’ பாடல் சூப்பர்ஹிட் ஆகியிருந்தது. சொல்லப்போனால் சிம்புவுக்கு அந்த காலகட்டத்தில் நிறைய ரசிகைகளை தேடிக்கொடுத்த பாடல் அது. ரொமாண்டிக்கான கடற்கரை, சிம்புவும் கதாநாயகி ரக்ஷிதாவும் செய்யும் சில்மிஷங்கள், சாதனா சர்கமின் கிறங்கடிக்கும் குரல் எல்லாமுமாக ஒன்று சேர்ந்து தமிழகத்தை கலங்கடித்தது அந்தப்பாடல். தம் படத்தை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'குத்து' படத்திற்காக சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஏ.வெங்கடேஷ் சாணக்யாவை போலவே ஒரு சூப்பர்ஹிட் பாடல் தர நினைத்திருக்கக்கூடும். அதே சிம்பு, அதே போன்றதொரு கடற்கரை, அதே சாதனா சர்கம், கதாநாயகி மட்டும் ரக்ஷிதாவுக்கு பதில் ரம்யா. நிபுணா நிபுணா என்று தொடங்கும் அந்தப்பாடல் சாணக்யாவை பிரதி எடுத்தது போலவே இருந்தது. ஆனால் இந்தமுறை ரசிகைகளை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. காரணம் ரம்யாவும் அவருடைய செக்ஸியான எக்ஸ்பிரஷன்களும் தான். அதிலிருந்து தமிழில் அந்த கதாநாயகியின் பெயரே ‘குத்து’ ரம்யா என்றாகிவிட்டது. அந்தப் பெயரில் உள்ள உள்ளர்த்தத்தை புரிந்துகொண்டு, ‘என்னை குத்து ரம்யா என்று அழைக்காதீர்கள்’ என்று பேட்டிகளில் பலமுறை சொல்லியும் அந்தப் பெயரை மீடியாவோ ரசிகர்களோ மாற்றிக்கொள்ளவே இல்லை. ஆம், ரம்யா என்பது ஒரு பெயர். ‘குத்து’ ரம்யா என்பது ஒரு உணர்வு !

ரம்யா பிறக்கும்போதே ரம்யா இல்லை. அவருடைய இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா. 1982 நவம்பர் 29ம் தேதி கன்னட தேசத்தில் அவதரித்தார். பெங்களூரில் பிறந்திருந்தாலும் ரம்யாவின் பூர்விகம் பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையே உள்ள மாண்ட்யாதான். ஜெயலலிதா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற பிரபல அரசியல்வாதிகளை ஈன்றெடுத்த மாவட்டம். ரம்யாவுக்கும் அரசியல்ரீதியான பின்புலம் உண்டு. ரம்யாவின் தாத்தா போரேகவுடா மாண்ட்யாவின் நகராட்சி தலைவராக இருந்திருக்கிறார். ரம்யாவின் அம்மா ரஞ்சிதா கர்நாடக காங்கிரஸில் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். வளர்ப்புத்தந்தை நாராயணன் நேரடியாக அரசியலில் இல்லாவிட்டாலும் கூட எஸ்.எம்.கிருஷ்ணா வரையில் செல்வாக்குள்ளவர். கர்நாடக டென்னிஸ் சங்கத்தில் பெரும் பங்காற்றியவர்.

ரம்யா தன்னுடைய பள்ளிப்பருவம் முழுவதையும் தமிழகத்தில்தான் கழித்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரை ஊட்டி புனித ஹில்டா பள்ளியில் படித்த ரம்யா படிப்பு தவிர்த்து கலை, விளையாட்டுத்துறையில் படுசுட்டி. மேடை நாடகங்களிலும், டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் விரும்பிப் பங்கேற்கும் ரம்யா பள்ளி ஆண்டுவிழாவில் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறந்த துணை நடிகைக்கான பரிசைப் பெற்றிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தடகளத்தில் பல பரிசுகளை பெற்றிருக்கும் ரம்யா, ஆறாம் வகுப்பு படிக்கும்போது இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முப்பதே நொடியில் ஓடி சாதனை படைத்ததை பெருமையுடன் இன்றும் நினைவுகூர்கிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ரம்யா ஒரு கவிதாயினியாக இருந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை பற்றிய அவருடைய கவிதையொன்று அவருடைய ஸ்கூல் மேகஸினில் பிரசுரமாயிருக்கிறது. ரம்யா தன்னுடைய மேல்நிலை கல்வியை பயின்றது வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை சர்ச் பார்க் பள்ளியில்.

தன்னுடைய பதினெட்டாவது வயதில் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தபோது அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. ரம்யாவுக்கு முதன்முதலில் கிடைக்க இருந்த ‘நினக்காகி’ கன்னட படவாய்ப்பு எதிர்பாராவிதமாக ‘குட்டி’ ராதிகா வசம் போய்விட்டது. அடுத்து கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிய அப்பு படத்தில் வாய்ப்பு கிடைக்க இருந்தது. ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் முடிந்தபிறகு அந்த வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப் பறித்தார். அப்படி பறித்தது வேறு யாருமில்லை, நிபுணா நிபுணாவுக்கு முன்னோடியாக சாணக்யாவில் ஆட்டம் போட்ட ரக்ஷிதாதான். ரம்யா துவண்டுவிடவில்லை. புனித் ராஜ்குமாரின் இரண்டாவது படமான ‘அபி’யில் கதாநாயகி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சுமாரான காதல் கதைதான். ஆனால் வணிகரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தடுத்து ரம்யா நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைய, ஒரு கட்டத்தில் ‘கன்னட சினிமாவின் தங்கமகள்’ என்று அழைக்கப்பட்டார் ரம்யா.

இதற்கிடையே தான் தமிழில் சிம்புவுடன் குத்துவில் அறிமுகம். தமிழில் பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும் தனுஷுடன் ரம்யா நடித்த பொல்லாதவன் படம் சக்கை போடு போட்டது. படத்தைப் பார்த்த தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினர். தன்னுடைய ‘குத்து’ ரம்யா என்ற தமிழ் சினிமா பெயரை அடியோடு வெறுத்த ரம்யா கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் திவ்யா ஸ்பந்தனாவாக மறு-அறிமுகமானார். பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றளவும் தன்னுடைய கேரியரில் மறக்க முடியாத படங்களில் ஒன்று வாரணம் ஆயிரம் என்கிறார் ரம்யா. அதில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி என்ற பாடலை ரசிகர்களாலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவிற்கும் ரம்யா ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் காட்டிய தாராள கவர்ச்சியை அவர் கன்னட சினிமாக்களில் நாசூக்காக தவிர்த்திருக்கிறார். இது குறித்து பேட்டிகளில் கேட்டபோது கூட, கன்னடத்தில் அப்படியான வாய்ப்புகள் வருவதில்லை என்று மட்டும் நைச்சியமாக சொல்லி தப்பித்திருக்கிறார். கன்னட, தமிழ் சினிமாக்களில் ரம்யாவின் சொந்தக்குரலை பயன்படுத்துவதில்லை. ஆனால் நான்கு தென்னிந்திய மொழிகளோடு, ஹிந்தி, ஆங்கிலம் ஆறு மொழிகளை எழுத, படிக்க, பேசவும் தெரியுமாம் ரம்யாவுக்கு. இரண்டு முறை ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கியிருக்கிறார். சஞ்சு வெட்ஸ் கீதா படத்திற்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த நடிகை விருது பெற்றிருக்கிறார்.

சினிமாவில் ஒரு சுற்று வந்த ரம்யா அடுத்த அதிரடியாக அரசியலில் குதிக்க ஆயத்தமானார். அதன் துவக்கமாக ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்த ரம்யா 2011ம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸில் இணைந்தார். இந்த தகவல் கர்நாடக காங்கிரஸில் இருந்த இளைஞர்களுக்கெல்லாம் ஒரு புது எழுச்சியை உண்டாக்கியது என்று சொன்னால் மிகையாகாது. 2013 மாண்ட்யா இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ரம்யாவுக்கு சீட் கிடைத்தது. ரம்யா வேட்புமனு தாக்கல் செய்த சில மணிநேரங்களில் அவருடைய வளர்ப்புத்தந்தை மாரடைப்பில் காலமானார். ரம்யா தளர்ந்துவிடவில்லை. எதிர்க்கட்சிகள் ரம்யாவின் உண்மையான தந்தை குறித்து கேள்வி எழுப்பின. ரம்யாவை டெஸ்ட் ட்யூப் பேபி என்று விமர்சித்தனர். அதற்கெல்லாம் அசரவில்லை ரம்யா. கடைசியில், வாக்காளர்கள் குத்து குத்து என குத்திய குத்தில் நாற்பத்தி ஏழாயிர சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவின் இளம் பாராளுமன்ற உறுப்பினரானார் ரம்யா.

வெறும் பெயரளவில் பாராளுமன்ற உறுப்பினராக இராமல் சபையில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது, கேன்சர் நிறுவனத்திற்கு மத்திய அரசின் சார்பாக நாற்பத்தைந்து கோடி நிதியுதவி பெற்றுத்தந்தது உள்ளிட்ட பலப்பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்தாலும் 2014 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மாண்ட்யாவில் போட்டியிட்ட ரம்யா ஐயாயிரத்து சொச்ச வாக்குகளில் தோல்வியுற்றார். தோல்வி நிரந்தரமில்லை என்றாலும் இடைவெளியை பூர்த்தி செய்ய மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கியிருக்கிறார் ரம்யா. ரம்யா சமீபத்தில் நடித்த நாகரஹாவு அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. 2019 ரம்யாவுக்காக காத்திருக்கிறது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment