Showing posts with label ramya. Show all posts
Showing posts with label ramya. Show all posts

28 June 2016

மாண்ட்யா ராணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2002. சிம்பு ஹீரோவாக அறிமுகமாகியிருந்த சமயம். அப்போது அவர் நடிப்பில் வெளிவந்த ‘தம்’ படத்தில் ‘சாணக்யா’ பாடல் சூப்பர்ஹிட் ஆகியிருந்தது. சொல்லப்போனால் சிம்புவுக்கு அந்த காலகட்டத்தில் நிறைய ரசிகைகளை தேடிக்கொடுத்த பாடல் அது. ரொமாண்டிக்கான கடற்கரை, சிம்புவும் கதாநாயகி ரக்ஷிதாவும் செய்யும் சில்மிஷங்கள், சாதனா சர்கமின் கிறங்கடிக்கும் குரல் எல்லாமுமாக ஒன்று சேர்ந்து தமிழகத்தை கலங்கடித்தது அந்தப்பாடல். தம் படத்தை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'குத்து' படத்திற்காக சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஏ.வெங்கடேஷ் சாணக்யாவை போலவே ஒரு சூப்பர்ஹிட் பாடல் தர நினைத்திருக்கக்கூடும். அதே சிம்பு, அதே போன்றதொரு கடற்கரை, அதே சாதனா சர்கம், கதாநாயகி மட்டும் ரக்ஷிதாவுக்கு பதில் ரம்யா. நிபுணா நிபுணா என்று தொடங்கும் அந்தப்பாடல் சாணக்யாவை பிரதி எடுத்தது போலவே இருந்தது. ஆனால் இந்தமுறை ரசிகைகளை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. காரணம் ரம்யாவும் அவருடைய செக்ஸியான எக்ஸ்பிரஷன்களும் தான். அதிலிருந்து தமிழில் அந்த கதாநாயகியின் பெயரே ‘குத்து’ ரம்யா என்றாகிவிட்டது. அந்தப் பெயரில் உள்ள உள்ளர்த்தத்தை புரிந்துகொண்டு, ‘என்னை குத்து ரம்யா என்று அழைக்காதீர்கள்’ என்று பேட்டிகளில் பலமுறை சொல்லியும் அந்தப் பெயரை மீடியாவோ ரசிகர்களோ மாற்றிக்கொள்ளவே இல்லை. ஆம், ரம்யா என்பது ஒரு பெயர். ‘குத்து’ ரம்யா என்பது ஒரு உணர்வு !

ரம்யா பிறக்கும்போதே ரம்யா இல்லை. அவருடைய இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா. 1982 நவம்பர் 29ம் தேதி கன்னட தேசத்தில் அவதரித்தார். பெங்களூரில் பிறந்திருந்தாலும் ரம்யாவின் பூர்விகம் பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையே உள்ள மாண்ட்யாதான். ஜெயலலிதா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற பிரபல அரசியல்வாதிகளை ஈன்றெடுத்த மாவட்டம். ரம்யாவுக்கும் அரசியல்ரீதியான பின்புலம் உண்டு. ரம்யாவின் தாத்தா போரேகவுடா மாண்ட்யாவின் நகராட்சி தலைவராக இருந்திருக்கிறார். ரம்யாவின் அம்மா ரஞ்சிதா கர்நாடக காங்கிரஸில் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். வளர்ப்புத்தந்தை நாராயணன் நேரடியாக அரசியலில் இல்லாவிட்டாலும் கூட எஸ்.எம்.கிருஷ்ணா வரையில் செல்வாக்குள்ளவர். கர்நாடக டென்னிஸ் சங்கத்தில் பெரும் பங்காற்றியவர்.

ரம்யா தன்னுடைய பள்ளிப்பருவம் முழுவதையும் தமிழகத்தில்தான் கழித்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரை ஊட்டி புனித ஹில்டா பள்ளியில் படித்த ரம்யா படிப்பு தவிர்த்து கலை, விளையாட்டுத்துறையில் படுசுட்டி. மேடை நாடகங்களிலும், டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் விரும்பிப் பங்கேற்கும் ரம்யா பள்ளி ஆண்டுவிழாவில் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறந்த துணை நடிகைக்கான பரிசைப் பெற்றிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தடகளத்தில் பல பரிசுகளை பெற்றிருக்கும் ரம்யா, ஆறாம் வகுப்பு படிக்கும்போது இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முப்பதே நொடியில் ஓடி சாதனை படைத்ததை பெருமையுடன் இன்றும் நினைவுகூர்கிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ரம்யா ஒரு கவிதாயினியாக இருந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை பற்றிய அவருடைய கவிதையொன்று அவருடைய ஸ்கூல் மேகஸினில் பிரசுரமாயிருக்கிறது. ரம்யா தன்னுடைய மேல்நிலை கல்வியை பயின்றது வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை சர்ச் பார்க் பள்ளியில்.

தன்னுடைய பதினெட்டாவது வயதில் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தபோது அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. ரம்யாவுக்கு முதன்முதலில் கிடைக்க இருந்த ‘நினக்காகி’ கன்னட படவாய்ப்பு எதிர்பாராவிதமாக ‘குட்டி’ ராதிகா வசம் போய்விட்டது. அடுத்து கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிய அப்பு படத்தில் வாய்ப்பு கிடைக்க இருந்தது. ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் முடிந்தபிறகு அந்த வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப் பறித்தார். அப்படி பறித்தது வேறு யாருமில்லை, நிபுணா நிபுணாவுக்கு முன்னோடியாக சாணக்யாவில் ஆட்டம் போட்ட ரக்ஷிதாதான். ரம்யா துவண்டுவிடவில்லை. புனித் ராஜ்குமாரின் இரண்டாவது படமான ‘அபி’யில் கதாநாயகி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சுமாரான காதல் கதைதான். ஆனால் வணிகரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தடுத்து ரம்யா நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைய, ஒரு கட்டத்தில் ‘கன்னட சினிமாவின் தங்கமகள்’ என்று அழைக்கப்பட்டார் ரம்யா.

இதற்கிடையே தான் தமிழில் சிம்புவுடன் குத்துவில் அறிமுகம். தமிழில் பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும் தனுஷுடன் ரம்யா நடித்த பொல்லாதவன் படம் சக்கை போடு போட்டது. படத்தைப் பார்த்த தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினர். தன்னுடைய ‘குத்து’ ரம்யா என்ற தமிழ் சினிமா பெயரை அடியோடு வெறுத்த ரம்யா கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் திவ்யா ஸ்பந்தனாவாக மறு-அறிமுகமானார். பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றளவும் தன்னுடைய கேரியரில் மறக்க முடியாத படங்களில் ஒன்று வாரணம் ஆயிரம் என்கிறார் ரம்யா. அதில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி என்ற பாடலை ரசிகர்களாலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவிற்கும் ரம்யா ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் காட்டிய தாராள கவர்ச்சியை அவர் கன்னட சினிமாக்களில் நாசூக்காக தவிர்த்திருக்கிறார். இது குறித்து பேட்டிகளில் கேட்டபோது கூட, கன்னடத்தில் அப்படியான வாய்ப்புகள் வருவதில்லை என்று மட்டும் நைச்சியமாக சொல்லி தப்பித்திருக்கிறார். கன்னட, தமிழ் சினிமாக்களில் ரம்யாவின் சொந்தக்குரலை பயன்படுத்துவதில்லை. ஆனால் நான்கு தென்னிந்திய மொழிகளோடு, ஹிந்தி, ஆங்கிலம் ஆறு மொழிகளை எழுத, படிக்க, பேசவும் தெரியுமாம் ரம்யாவுக்கு. இரண்டு முறை ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கியிருக்கிறார். சஞ்சு வெட்ஸ் கீதா படத்திற்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த நடிகை விருது பெற்றிருக்கிறார்.

சினிமாவில் ஒரு சுற்று வந்த ரம்யா அடுத்த அதிரடியாக அரசியலில் குதிக்க ஆயத்தமானார். அதன் துவக்கமாக ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்த ரம்யா 2011ம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸில் இணைந்தார். இந்த தகவல் கர்நாடக காங்கிரஸில் இருந்த இளைஞர்களுக்கெல்லாம் ஒரு புது எழுச்சியை உண்டாக்கியது என்று சொன்னால் மிகையாகாது. 2013 மாண்ட்யா இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ரம்யாவுக்கு சீட் கிடைத்தது. ரம்யா வேட்புமனு தாக்கல் செய்த சில மணிநேரங்களில் அவருடைய வளர்ப்புத்தந்தை மாரடைப்பில் காலமானார். ரம்யா தளர்ந்துவிடவில்லை. எதிர்க்கட்சிகள் ரம்யாவின் உண்மையான தந்தை குறித்து கேள்வி எழுப்பின. ரம்யாவை டெஸ்ட் ட்யூப் பேபி என்று விமர்சித்தனர். அதற்கெல்லாம் அசரவில்லை ரம்யா. கடைசியில், வாக்காளர்கள் குத்து குத்து என குத்திய குத்தில் நாற்பத்தி ஏழாயிர சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவின் இளம் பாராளுமன்ற உறுப்பினரானார் ரம்யா.

வெறும் பெயரளவில் பாராளுமன்ற உறுப்பினராக இராமல் சபையில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது, கேன்சர் நிறுவனத்திற்கு மத்திய அரசின் சார்பாக நாற்பத்தைந்து கோடி நிதியுதவி பெற்றுத்தந்தது உள்ளிட்ட பலப்பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்தாலும் 2014 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மாண்ட்யாவில் போட்டியிட்ட ரம்யா ஐயாயிரத்து சொச்ச வாக்குகளில் தோல்வியுற்றார். தோல்வி நிரந்தரமில்லை என்றாலும் இடைவெளியை பூர்த்தி செய்ய மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கியிருக்கிறார் ரம்யா. ரம்யா சமீபத்தில் நடித்த நாகரஹாவு அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. 2019 ரம்யாவுக்காக காத்திருக்கிறது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 March 2014

வேலைக்கார நாயி !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

விகடன் மேடையில் கடந்த நான்கு வாரங்களாக கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நாகேஷ், நடிகர் திலகம் பற்றி, படையப்பாவில் டான்ஸ் ஆடியது பற்றி, ரகுவரனின் ‘ஐ நோ’ ரகசியம் என உண்மையோ பொய்யோ படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. சிலர் ரஜினி – கமலை வைத்து படம் இயக்குவீர்களா...? அப்படி இயக்கினால் படத்தின் ஒன்லைன் என்ன...? என்பது போன்ற ஹைப்போதெட்டிக்கல் கேள்விகளை கேட்டு வைக்கிறார்கள். முத்து படத்தில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் வசனம் வைத்தது பற்றி ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு மட்டும் வசதியாக தப்பித்துக் கொண்டார். இதையெல்லாம் படித்ததும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. முத்தாய்ப்பாக முந்தாநாள் தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பியதால் பதிவாகவே எழுதிவிட்டேன்.

பொதுவாக கே.எஸ்.ரவிகுமாரை இந்தமாதிரி படங்கள் மட்டும்தான் இயக்குவார் என்று வகைப்படுத்திவிட முடியாது. ஒட்டுமொத்தமாக அவர் ஒரு நல்ல எண்டர்டெயினர். ஆனால் நாட்டாமை, ஊர் பெரியவர் வகையறா சமாச்சாரங்கள் என்றால் அவருக்கு அல்வா மாதிரி. அது குறித்து ஒரு வாசகர் கேட்டிருக்கும் கேள்விக்கு அவருடைய பதிலை முதலில் பார்த்துவிடலாம்.

'பண்ணையார்’, 'நாட்டாமை’, 'ஜமீன்எல்லாம் எப்போதோ ஒழிந்துவிட்டன. ஆனால், சினிமாவில் மட்டும் ஏன் இன்னமும் விடாமல் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?

'இது எனக்கான கேள்விதான்! நகரத்தைவிட கிராமங்கள் இன்னைக்கு ரொம்ப வேகமா மாறிட்டு வருது. அண்ணனுக்கு மரியாதை கொடுக்கும் தம்பி, பெத்தவங்களைப் பத்திரமாப் பார்த்துக்கும் பிள்ளைகள், விவசாயம், கிராமக் கட்டுப்பாடு... இதெல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழியும் நிலைமையில் இருக்கு.

சென்னைலயே வளர்ந்த எனக்கு முதல்முறையா கிராமத்துல தங்கியிருந்தப்போ, அதெல்லாம் ஆச்சரியமா இருந்தன. அதனாலேயே கிராமங்கள் இப்பவும் எனக்கு இஷ்டம். ஆனா, அந்த விஷயங்கள் இவ்வளவு சீக்கிரம் காலாவதி ஆகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதான், 'இப்படி எல்லாம் இருந்திருக்காங்கனு இப்போதைய தலைமுறைக்கு ரீ-க்ரியேட் பண்ணிக் காட்டணும்னு நினைச்சேன். அதனாலதான் அந்த மாதிரி படங்கள் எடுக்கிறேன். தவிர சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், காமெடினு மசாலா தூவுறதுக்கும் கிராமத்து சப்ஜெக்ட்லதான் பெரிய ஸ்கோப் இருக்கு!''

சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்கள் அவருடைய அந்த வகை படங்களில் சிறப்பானவை. அஜித்தை வைத்து வரலாறு என்றொரு படம் இயக்கினார். நகர வாழ்க்கையை மையமாக கொண்ட படம்தான். ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தெரியும், வரலாறும் அவருடைய வழக்கமான ஊர் பெரியவர் டெம்ப்ளேட் கதைதான். பணக்கார அஜித், அவருக்கு கீழே நிறைய வேலைக்காரர்கள், இளவயது அஜித்தை சின்ன அய்யா என்று அழைப்பார்கள், இடிச்சபுளி செல்வராஜ் போன்ற ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் பட்டாளம், கிளைமாக்ஸில் ஒரு உயிர் தியாகம். கெட்ட கேட்டுக்கு அஜித் ரசிகர்கள் வரலாறை க்ளாஸ் + மாஸ் என்று கூவிக்கொண்டு இருந்தார்கள். அதைப்பற்றி இன்னொரு நாள் விரிவாக பார்க்கலாம்.

இப்படி கே.எஸ்.ஆரின் பெரும்பாலான படங்களில் தவறாமல் அங்கம் வகிப்பவர்கள் வேலைக்காரர்கள். அதுவும் அதிபயங்கரமான விசுவாசம் கொண்ட வேலைக்காரர்கள். ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டின் உறுப்பினர்களை விட வேலைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். முதலாளிகள் அவ்வப்போது டென்ஷன் ஆகும்போதெல்லாம் வேலைக்காரர்களின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டு தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்வார்கள். கன்னத்தில் அறை விடுகிற பழக்கம் நடைமுறை வாழ்க்கையில் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. சினிமாவில் தான் எதற்கெடுத்தாலும் கன்னத்தில் அறைகிறார்கள். அதுவும் காதலை ப்ரொபோஸ் செய்ததற்கெல்லாம் அறைகிறார்கள். அத்தனை சிறிய பிரதேசத்தில் தூரத்தில் இருந்து எப்படி குறி பார்த்து அறைகிறார்கள் என்பதே ஆச்சரியக்குறியாக இருக்கிறது.

பாட்டாளி படத்தில் ஒரு காட்சி. ரம்யா கிருஷ்ணன் ஒரு வேலைக்காரரிடம் மீன்தொட்டியை இடம் மாற்றும் பணியை ஒப்படைப்பார். ஒப்படைக்கும் முன்பே ஒரு அறை விடுவார். தவறு செய்வதற்கு முன்பே அறைந்துவிட்டால் தவறு செய்யமாட்டார் என்று வேறு வியாக்கியானம் பேசுவார். கொஞ்ச நேரத்தில் பணியாளர் மீன் தொட்டியை கீழே போட்டு உடைத்துவிட்டு அதான் ஏற்கனவே அறைஞ்சிட்டீங்களே என்று சொல்வார். அதே ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் காபி டம்ளரை தவறவிட்டதற்காக செளந்தர்யாவை அறைய வருவார். நல்லவேளையாக சூப்பர்ஸ்டார் தடுத்து விடுவார். அவருடைய நிறைய படங்களில் வேலைக்காரர்களை அறையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தவிர, வேலைக்கார நாயி என்ற பதம் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படும். இதுபோன்ற அறைகள், வசனங்கள் பெரும்பாலும் திமிர் பிடித்த கதாபாத்திரம் ஒன்று செய்வதாக காட்டினாலும் எனக்கென்னவோ கொஞ்சம் டூ மச் என்றுதான் தோன்றுகிறது.

நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் எல்லோரும் வேலைக்காரர்களை நன்றாகவே நடத்துகிறார்கள். நிறைய பேர் தங்கள் குடும்ப உறுப்பினரை போல கவனித்துக் கொள்கிறார்கள். அதுவும் கே.எஸ்.ஆர் பார்த்து ரசித்த கிராமங்களில் என்றால் கேட்கவே வேண்டாம், நிச்சயமாக வேலைக்காரர்களை நன்றாக கவனித்து அவர்கள் வீட்டு நல்ல காரியங்களை கூட முன்னின்று நடத்தித் தருகிறார்கள். ஒருவேளை முன்பொரு காலத்தில் வேலைக்காரர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டிருக்கலாம். அவருடைய படங்களில் வரும் பண்ணையார், நாட்டாமை, ஜமீன் போல வேலைக்காரர்களை அறைவதும், நாய் என்று விளிப்பதும் கூட வழக்கொழிந்துவிட்ட செய்கைகள் என்றே கருதுகிறேன்.

ஒருவேளை இன்னமும் யாராவது அப்படி இருந்தால் கூட அதையெல்லாம் சினிமாவில் சரி என்பது போல காட்டுவது முறையல்ல. இனியாவது கே.எஸ்.ஆர் அதுபோன்ற காட்சிகளை தவிர்க்கலாம்.

செய்வீர்களா கே.எஸ்.ரவிகுமார்...? நீங்கள் இதைச் செய்வீர்களா...?

அடுத்து வருவது: மரப்பல்லி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 11112013


அன்புள்ள வலைப்பூவிற்கு,  

ஆரம்பம் படத்தினை மீண்டுமொரு முறை திரையரங்கில் பார்த்து தன்யனானேன். சில புதிய விஷயங்களை கவனிக்க முடிந்தது. ‘குட்கா முகேஷ்’ செய்திப்படம் காட்டவில்லை. அதாவது படத்தில் புகை, மது காட்சிகள் இல்லை. படக்குழுவினருக்கு சல்யூட். ஆனால், இஸ்திரி பொட்டி காட்சி உட்பட சில ராவான வன்முறைக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சுமா ரங்கநாத் சுமார் தான் என்றாலும் ஆளை பார்த்தால் நாற்பது வயது போலவா தெரிகிறது. ம்ம்ம். தீவிரவாத இயக்கத்தின் பெயர் ‘லயன்ஸ் லிபரேஷன்’. வேறொரு இயக்கத்தின் பெயரை நினைவூட்டுகிறது அல்லவா ? விஷ்ணுவர்தன், உமக்கு எதற்கு இந்த குறிக்கொழுப்பு வேலை ? முடியாது’ன்னு சொல்ல முடியாது பாடல் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கென்னவோ இரண்டாம் பாதியை விட முதல் பாதி பிடித்திருக்கிறது.

சுஜாதாவின் ஜே.கே படித்தேன். நாவலின் வயது 43. ஜே.கே ஒரு பைலட். அரசு சார்பாக விவசாய நிலங்களுக்கு விமானம் மூலம் மருந்து அடிப்பவன். ஒரு குழு அவனிடம் பணம் கொடுத்து ஏதோ ஆராய்ச்சி என்று சொல்லி ஒரு பெட்டியை விமானத்தில் எடுத்துவரச் சொல்கிறது. அது போதைப் பொருள் என்று அறியாமல் செய்கிறான். கைது செய்யப்படுகிறான். வி.ஐ.பி ஒருவரின் தலையீட்டால் விடுவிக்கப்படுகிறான். காவல்துறையின் பிடியிலிருக்கும் வி.ஐ.பியின் மகளை மீட்டு வரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. மீட்டு வருகிறான், ஒப்படைப்பதற்குள் தப்பிவிடுகிறாள். அவளை துப்பறிய போக, அவளைப் பற்றியும் அவளுடைய குழுவின் திட்டமும் தெரிய வருகிறது. அது என்ன திட்டம் ? நிறைவேறியதா என்பது க்ளைமேக்ஸ். சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது ஜே.கே நாவலின் மூலம் நிரூபணமாகிறது. படிக்கும்போது சத்யராஜ் நடித்த ஏர்போர்ட் என்ற திரைப்படம் நினைவுக்கு வந்தது. அடுத்ததாக படிக்க சில சுஜாதா நாவல்கள் வரிசையில் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காக பழம்பெரும் மனிதவள ஆய்வாளர் பிலோ.இருதயநாத் எழுதிய ‘கேரள ஆதிவாசிகள்’ படிக்க இருக்கிறேன்.

தீபாவளிக்கு முந்தய நாள் மாலையில் நண்பர் ஒருவர் போனில் அழைத்து ‘தல தீபாவளி’ வாழ்த்து சொன்னார். அவரும் நானும் சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறோம். அப்போதிலிருந்தே என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வருடாவருடம் வாழ்த்துவார். எனக்கு ஒரு மாதிரியாக ‘சங்கடமாக’ இருக்கும். எனக்கு மட்டுமல்ல யாருடனாவது ஓரிரு வாரங்கள் மட்டும் பழகியிருந்தால் கூட அவர்களுடைய பிறந்தநாளை குறித்து வைத்து வாழ்த்து சொல்லும் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது அவருடைய நண்பர்கள் வட்டத்தில் யாருக்கெல்லாம் ‘தல தீபாவளி’ என்று லிஸ்ட் எடுத்து ஒவ்வொருவராக வாழ்த்து சொல்லிவருவதாக கூறினார். அவரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கெல்லாம் என் குடும்பத்தினரை தவிர வேறு யாருடைய பிறந்தநாளும் தெரியாது. அதுவே கூட சமயங்களில் ஜூன் பதினான்கா, ஜூலை பதினான்கா ? என்று குழம்பும். இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும் நண்பருக்கு அவருடைய வாழ்வில் மேன்மையடைய உதவும். உதவியிருக்கும்.

சுட்ட கதை படத்தை வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் கண்டேன். அடுத்த வாரத்திலேயே புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்கள். அதுவும் விளம்பர இடைவேளை இல்லாமல். நல்ல பல்பு. இனி வேந்தர் சம்பந்தப்பட்ட படங்களை திரையரங்கில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். போலவே, விஜய் டிவியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு நண்பர் நல்ல படம் திரையரங்கில் ஓடாமல் டிவியில் ஓடுகிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அவருடைய எண்ணத்தின் படி மிஷ்கின் வேடத்தை வேறு யாராவது மாஸ் நடிகர்கள் செய்திருந்தால் படம் அபாரமாக வசூலை குவித்திருக்கும். அதாவது அஜித் போன்ற ஒரு நடிகர். ஓ.ஆவில் அஜித் நடித்திருந்தால் ? மிஷ்கின் வேடம் உண்மையில் அஜித்திற்கு நன்றாகவே பொருந்தும். ஆனால் படத்தின் உயிர்நாடி காட்சியொன்று இருக்கிறது. கல்லறையில் வைத்து கதை சொல்லும் காட்சி. அதை அஜித் மட்டுமல்ல, சமகால கதாநாயகர்கள் யாராலும் செய்திருக்க முடியாது. Kamal may be an exceptional case !

கமல் என்றதும் பட்டிமன்றம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உண்மையில் கமல் உலக நாயகன் தான் ! அவரை மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது. சம்பவத்தை ஒட்டி சில நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று, இந்தியன் படத்தில் சந்துரு என்ற மானஸ்தனை தேடும் காட்சி. இரண்டு, நாடோடிகள் பரணி இருபுறம் பல்பு வாங்கி அப்ப நான்தான் அவுட்டா என்று புலம்பும் காட்சி. மூன்று, விவேக் போலீஸ் ஸ்டேஷன் – அவனாவது கேஸ் விஷயமா பேசிக்கிட்டு இருக்கேன்னு சொன்னான், ஆனா நீ கேஸ் கூடவே பேசிக்கிட்டு இருக்கியே ! ரஜினி’ன்னு ஒரு மனுஷன் இந்தா வாரேன் இந்தா வாரேன்’ன்னு சொல்லியே நம்மாட்களுக்கு கிறுக்கு பிடிக்க வைத்தார். கமலின் சந்தர்ப்பவாதம், துரோகம், எச்சச்ச எச்சச்சாக்கு முன்னால் ரஜினி எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. கமல் இன்னமும் அக்ரஹாரத்து பிள்ளையாகவே இருக்கிறார்.

பாண்டிய நாடு படத்தில் Fy Fy Fy, அப்படின்னு ஒரு பாட்டு. என்னடா இது எல்லாரும் முனுமுனுக்குறாங்களே’ன்னு தேடிக் கண்டுபிடிச்சு கேட்டேன். நல்ல பாட்டு. லட்சுமி மேனனையெல்லாம் ரசிக்கும் சமூகத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. முக்கியமான விஷயம், பாடலை பாடியவர் மூக்கு & முழியழகி ரம்யா நம்பீசன் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment