25 March 2015

ரசிகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கால்களை படித்து முடித்த கையோடு நான் தொட்ட அடுத்த நாவல் ரசிகன். இதிலிருந்து என்னுடைய மன உறுதியையோ அல்லது நாவலின் மீது வைத்துள்ள நம்பிக்கையையோ உணர்ந்து கொள்ளலாம்.

முன்னுரையில் அபிலாஷ் நாவலை எப்படி எழுதினார் ? என்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொண்டார் ? என்பது குறித்து சுருக்கமாக எழுதியிருக்கிறார். எழுதும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அபிலாஷின் முன்னுரை கட்டாய பாடம்.

இடதுசாரி கொள்கையுடைய எண்பதுகளின் இளைஞனான சாதிக் என்பவனே நாவலின் மைய கதாபாத்திரம். அவனுடைய வாழ்வின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை நாவல் ஒரு பார்வையாளனாக, நண்பனாக உடனிருந்து கவனித்து நமக்கு விவரிக்கிறது.

நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் மாற்று சினிமா, மலையேற்ற சுற்றுலா, சிற்றிதழ் சிந்தனைகள் என்று ஒரு நாடோடியைப் போல அதன் விருப்பத்திற்கேற்ப பயணிக்கிறது. தீவிர இடது சாரி கொள்கை பிடிப்பு கொண்ட சாதிக் வறுமையின் கோர பிடியிலும் கூட ‘செங்கதிர்’ என்ற சிற்றிதழை விடாமல் நடத்தி வருகிறான். அவன் லெளகீக வாழ்க்கையில் ஈடுபாடற்றவனாக செயல்படுகிறான். நாவலின் இரண்டாவது பாகத்தில் அவன் அந்த காலகட்டத்தில் கேரளாவில் பிரபலமாக இருந்த பேரலல் காலேஜில் விரிவுரையாளராக பணிபுரிகிறான். அவனுடைய கொள்கை பிடிப்புகள் சற்று தளர்ந்திருக்கின்றன. ரெஜினா என்கிற பெண்ணை காதலிக்கிறான். காதலுக்காக பல இன்னல்களை சந்திக்கிறான். சிறைக்கு கூட செல்கிறான். மூன்றாவது பாகத்தில், அவனுடைய குணநலன்கள் மொத்தமாகவே மாறிப் போயிருக்கின்றன. அவன் ஒரு தீவிர ரஜினி ரசிகனாக இருக்கிறான். நிறைய குடிக்கிறான். அவனுடைய செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஒரு மனப்பிறழ்வு ஏற்பட்டவனைப் போல இருக்கின்றன.

அபிலாஷின் முந்தைய நாவலுக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் நாகர்கோவில் / கன்னியாகுமரி வட்டார பேச்சு மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் அப்பா காணாமல் போய்விடுகிறார். இரண்டிலும் அடிக்கடி கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யாராவது வெட்டியாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே மிக மொண்ணையான விவாதம் கடவுள் உண்டா இல்லையா என்பதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் உண்டா இல்லையா என்று மணிக்கணக்கில் எந்தவித கன்க்லூஷனும் இல்லாமல் விவாதிப்பதை விட அலகு குத்திக் கொள்வதோ, தீ மிதிப்பதோ கூட பெரிய மூட நம்பிக்கையில்லை.

முக்கியமாக இரண்டு நாவல்களில் உள்ள பொதுவான சிக்கல், கண்டதையும் எழுதி வைத்திருப்பது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். சில நொடிகளில் வெவ்வேறு தலைப்புகளில் எண்ணற்ற விஷயங்களை சிந்திக்கக்கூடிய ஆற்றல் படைத்தது மனித மனம். ஆனால் அப்படி மனித மனம் நினைப்பது அத்தனையையும் ஒன்றுவிடாமல் எழுதிக்கொண்டே வந்தால் நன்றாகவா இருக்கும். இன்னொரு விஷயம், இலக்கியவாதிகள் சும்மா ஒரு கெத்துக்காக முலைகள், யோனி, விரைத்த ஆண்குறி, தேவடியாள் போன்ற வார்த்தைகளை மானே தேனே மாதிரி பயன்படுத்துவது நவநாகரிகமாக மாறிவிட்டது. அது ஒரு எல்லையை மீறிப்போகும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, நாவலின் 139ம் பக்கம் ஒரு கதாபாத்திரத்தை விவரிக்கிறது – அவர் கண்ணை மூடி நமசிவாய நமசிவாய என உதடு குவித்து முணுமுணுத்தார். அப்படிக் குவியும்போது அவர் உதடுகள் பார்க்க நாயின் ஆசனவாய் திறந்து மூடுகிறாற் போல இருந்தன. இதனை படிக்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், எழுத்தாளர் எப்போதோ ஒரு சமயம் நாயின் ஆசனவாயைப் போய் குறுகுறுவென பார்த்திருக்கிறார். அது திறந்து மூடும்போது எப்படி இருக்கிறது என்று தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். பின்னர், பெரியவர் உதடு குவிக்கும்போது அது முன்பு பார்த்த நாயின் ஆசனவாய் போலவே இருக்கிறதா என்று ஒப்பிடுகிறார். நினைத்துப் பார்க்கவே நாராசமாக இருக்கிறது.

சமீபமாக படித்த நாவல்களில் உள்ள பொதுவான ஒரு அம்சம், போகிறபோக்கில் இலைமறை காயாக மற்ற எழுத்தாளர்களை பகடி செய்கிறார்கள். குறிப்பாக, சாரு நிவேதிதாவை அதிகம் சீண்டுகிறார்கள். ஒன்றிரண்டு நாவல் எழுதியிருக்கும் புதிய எழுத்தாளர்கள் இப்படி கிண்டலடிப்பது சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத மிர்ச்சி சிவா ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ராமராஜனை கிண்டலடிப்பதை நினைவூட்டுகிறது.

ரசிகனை பொறுத்தவரையில் அபிலாஷின் முந்தைய நாவலைப் போல போரடிக்கவில்லை. ஆனால் அத்தியாயங்கள் போகப் போக நாவலின் கதாபத்திரங்களுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் அரைகிறுக்கு போல இஷ்டத்துக்கு எதையாவது செய்கிறார்கள். அத்தியாயத்துக்கு ஒரு பிராண்ட் என்று குடிக்கிறார்கள். முதலில் டைரெக்டர்’ஸ் ஸ்பெஷல், அப்புறம் ப்ளாக் லேபிள், பகார்டி லெமன், ஈ & ஜெ, ஓல்ட் மாங்க், மார்பியஸ் என்று டாஸ்மாக் வகையறா அத்தனையும் வந்து போகின்றன. பெண் கதாபாத்திரம் ஒன்று மார்பகங்களை உடைகளுக்கு வெளியே எடுத்து விபத்தில் இறந்த கணவனின் மூளையை நினைத்து உச்சம் அடைகிறது. ம்ஹூம். ரசிகன் என்பது என்ன ஒரு அற்புதமான தலைப்பு என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல விமர்சனம்.
//என்னைப் பொறுத்தவரையில் உண்டா இல்லையா என்று மணிக்கணக்கில் எந்தவித கன்க்லூஷனும் இல்லாமல் விவாதிப்பதை விட அலகு குத்திக் கொள்வதோ, தீ மிதிப்பதோ கூட பெரிய மூட நம்பிக்கையில்லை.//
மிக சரியான கருத்து.இந்த விவாதங்களால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உதடுகள் குறித்த வர்ணனை உண்மையில் ஆட்சேபத்துக்குரியது. ஒரு கதையில் தேவையற்ற திணிக்கப்படும் வர்ணனைகள் எதற்கு.மனதில் தோன்றுவதை எல்லாம் கதையில் சொல்லியே ஆக வேண்டுமா என்ற கேள்வி மிகச் சரி. முக நூலில் ட்விட்டரில் தட்டிவிட்டால். பெருமாள் முருகன் விவகாரம் போல பரபரப்படைய வாய்ப்பு உண்டு.ஹிந்துத்த்வா அமைப்புகளின் கவனத்திற்கு இன்னும் வரவில்லை போலிருகிறது

Ponmahes said...

//உலகிலேயே மிக மொண்ணையான விவாதம் கடவுள் உண்டா இல்லையா என்பதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னையா பொசுக்கு ன்னு இப்பிடி போட்டு உடைச்சிட்ட????

//கன்க்லூஷனும்

இந்த வார்த்தையை உச்சரிக்க கடினமாக இருக்கிறது நண்பா....

//சாரு நிவேதிதாவை அதிகம் சீண்டுகிறார்கள்.

ஆமா யா விமர்சனம் ங்கற பேருல அந்த ஆளு வீட்ல உள்ள நாய கூட விட மாட்டரானுங்க.....

//இன்னொரு விஷயம், இலக்கியவாதிகள் சும்மா ஒரு கெத்துக்காக முலைகள், யோனி, விரைத்த ஆண்குறி, தேவடியாள் போன்ற வார்த்தைகளை மானே தேனே மாதிரி பயன்படுத்துவது நவநாகரிகமாக மாறிவிட்டது.


இதுக்கு மாற்றா நீங்க ஏதாவது இலக்கியத் தரமா வேற வார்த்தைகளை கண்டுபுடிச்சி சொல்லுங்க ...

சீனு said...

அப்போ இதுவும் எனக்கான கோப்பை இல்லை :-)

Yarlpavanan said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE