Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

13 July 2016

அந்தமானில் அருணகிரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த அருணகிரி – உலகம் சுற்றிய வாலிபன். தன்னுடைய உலக நாட்டு பயண அனுபவங்களைக் கொண்டு பதினைந்து நூல்கள் எழுதியிருக்கிறார். குறிப்பாக, ஜப்பானை பற்றி இதுவரை யாரும் எழுதியிராத தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். மேலும் விகடன் பிரசுரமாக வெளியான ‘கட்சிகள் உருவான கதை’ உட்பட ஐந்து அரசியல் நூல்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய படைப்புகளில் ஒன்று – அந்தமானில் அருணகிரி ! புத்தகத்தின் பெயரைக் கேட்டதும் அதனை வாங்கியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.

புத்தகத்தின் தலைப்பிலிருந்தே நீங்கள் ஒரு விஷயத்தை யூகித்திருக்கலாம். முன்னுரையை படிக்கும்போது ஊர்ஜிதமாயிற்று. அது என்னவென்றால் பெரிய எழுத்தாள தொனியோடு, படாடோப அலங்காரங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு சாமானியன் பார்வையில் இருக்கிறது புத்தகத்தின் உள்ளடக்கம். கையில் ஒரு வாழைக்காய் பஜ்ஜியை வைத்துக்கொண்டு, அது எந்த எண்ணையில் தயாரிக்கப்பட்டது, எண்ணெய்களின் மூலம் எந்த நாடு, எண்ணெய் இந்தியாவிற்குள் நுழைந்த அரசியல் பின்னணி என்ன, மேலும் பஜ்ஜியை சுற்றியிருக்கும் தினத்தந்தி எந்த தேதியில் அச்சிடப்பட்டது, அதன் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு என்றெல்லாம் வளவளவென்று மொக்கை போடாமல் நேரடியாக பஜ்ஜியின் சுவை தரும் பரவசத்தை விளக்கத் துவங்கிவிடுகிறார். பஜ்ஜியின் சுவை தொண்டைக்குழிக்குள் இறங்கியபிறகு சாவகாசமாக இடையிடையே அரசியல், வரலாறு பேசுகிறார்.

சிறு வயதிலிருந்தே அந்தமான் மீதும், கப்பல் பயணம் மீதும் தனக்குள்ள பேராவலை விவரித்து புத்தகத்தை துவங்குகிறார். கப்பல் பயணம் குறித்த இவருடைய முப்பது வருட கனவு அந்தமானுக்கு ஸ்வராஜ்தீப்பில் பயணம் செய்யும்போது பூர்த்தியடைகிறது. அருணகிரியின் இந்த இச்சைகளையும், அவரது முதல் கப்பல் அனுபவத்தையும், அவருடைய விவரணைகளையும் படிக்கும்போது அப்படியே என்னை நானே படித்துக்கொள்வது போல இருக்கிறது. பல இடங்களில் அச்சு அசலாக எனது வலைப்பூவையே வாசிப்பது போல இருந்து என்னை புத்தகத்துடன் நெருக்கமாக உணரச் செய்தது.

இருப்பினும் வலைப்பூவில் / ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கும் புத்தகம் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உங்கள் வலைப்பூவை படிப்பவர்கள் பெரும்பாலும் உங்களுடன் நட்பு பாராட்டுபவர்களாகவும், குறைந்தபட்சம் உங்களுடைய குணாதிசயங்களை புரிந்து வைத்திருப்பவராகவும் இருப்பர். வலைப்பூவில் எழுதும்போது நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை (பயணத்தில் சைட்டடித்த ஃபிகர் பற்றியோ, குறட்டைவிட்டு தூக்கத்தை கெடுத்த சகபயணி குறித்தோ) எழுதலாம். நண்பன் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கப்பலில் போக பயந்தது பற்றியும் அவனை எப்படி சமாதானப்படுத்தினீர்கள் என்றும் எழுதலாம். பெங்களூரில் போயிறங்கியதும் காஜல் அகர்வால் போஸ்டரை பார்த்தேன் என்று ஜொள் விடலாம். ஆனால் புத்தகத்தில் இதுபோன்ற அசட்டுத்தனங்கள் கூடாது. புத்தகத்தை வாங்கி படிப்பவர்கள் நம் மீது துளி கூட அக்கறை இல்லாதவராகவும், புத்தகத்தின் உள்ளடக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டும் வாங்கியிருக்கலாம். அவருடைய நம்பிக்கையை கெடுக்காத வண்ணம் பொறுப்புணர்ச்சியுடன் எழுத வேண்டும். அது இந்த புத்தகத்தில் நிறைய இடங்களில் தவறுகிறது.

தேசிய இளைஞர் திட்டம் என்கிற அமைப்பின் மூலம் அருணகிரி அவர்கள் அந்தமான் சென்றிருக்கிறார். அதனால் அந்த அமைப்பு, செயல்பாடுகள், முந்தைய முகாம்கள் போன்ற விவரணைகள் வருகின்றன. இடையிடையே அந்தமானில் படப்பிடிப்பு நடத்திய திரைப்படங்கள், அந்தமானில் வாழ்ந்த தமிழறிஞர்கள், தமிழர் சங்கம், அந்தமான் பொதுக்கூட்டத்தில் மறைந்த (அப்போதைய) வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி (தி.மு.க.), அந்தமான் ஹிந்துக் கோவில் திருவிழாக்கள், பயணத்தில் சந்தித்த வெளி மாநிலத்தவர் / வெளிநாட்டவர், ஈழத்தமிழ் பாடகி மாதங்கி அருள்பிரகாசம் என்று கலந்துகட்டி பல தகவல்களை அளிக்கிறார். கூடவே, கடலில் காகங்கள் பறக்குமா ? கப்பலில் காகத்தை கொண்டுவந்து நடுக்கடலில் பறக்க விட்டால் அது என்ன செய்யும் ? போன்ற கேள்விகளால் அவரது குழந்தைத்தனம் கொண்ட மறுபக்கத்தையும் காட்டுகிறார். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து குறைந்தது ஒரு புத்தகமாக எழுதிவிட வேண்டுமென தீவிரமாக பரிந்துரைக்கிறார்.

கப்பல் போர்ட் ப்ளேர் துறைமுகத்திற்கு சென்றடைந்ததும் கொஞ்சம் தரைதட்டத் துவங்குகிறது. அது மட்டுமில்லாமல் அருணகிரி அவர்கள் தன்னுடைய பத்துநாள் பயணத்தில் போர்ட் ப்ளேர் மற்றும் அதற்கு அருகே அமைந்துள்ள ஒன்றிரண்டு தீவுகளுக்கு மட்டும் போய் வந்திருப்பதாக தெரிகிறது. அவற்றில் கூட படிக்கும்போது இதனோடு பல தகவல்கள் சேர்த்து எழுதியிருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு சாத்தம் தீவில் அமைந்துள்ள மர அறுவை தொழிற்சாலைக்கு பின்னால் சுவாரஸ்யமான ஜப்பானிய போர் வரலாறு ஒன்று இருக்கிறது. ராஸ் தீவு ஒருகாலத்தில் ராணுவத் தலைமையிடமாக விளங்கியது. வைப்பர் தீவின் கதையைக் கேட்டால் மிரட்சியாக இருக்கும். மிக முக்கியமாக, வெளிநாட்டு கடற்கரைகளுக்கு இணையான ஹேவ்லாக் கடற்கரை இருக்கிறது. இதுகுறித்தெல்லாம் சிறிய சிறிய பத்திகள் எழுதிவிட்டு அந்தமான் காதலி படத்தில் சிவாஜி சுஜாதாவுடன் ரொமான்ஸ் செய்வதைப் பற்றி விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்தமான் ஆதிவாசி இனங்களில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள் சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகள். அவர்களைப் பற்றி ஒரு பத்தி கூட எழுதாதது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.

இது ஒருபக்கம் என்றால் நூற்றி நாற்பது பக்க புத்தகத்தில் எண்பத்திஐந்து பக்கங்களுடன் அந்தமான் அனுபவங்கள் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு நெல்லூர் ஞாயிறுச்சந்தை, மூணாறு, கழுகுமலை, யானைமலை போன்றவற்றை குறித்து எழுதியிருப்பதில் சில தகவல்கள் கிடைத்தாலும் கூட அவை அவுட் ஆப் சிலபஸ் என்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. உச்சபட்ச வன்முறை எது தெரியுமா ? கடைசி பதினைந்து பக்கங்களை நூலாசிரியர் பற்றி நடிகர் ராஜேஷ், லேனா தமிழ்வாணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் நிறைத்திருக்கின்றன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட எனது பயண அனுபவங்களை மீண்டும் நினைவூட்டும் விதமாகவும், மீண்டுமொரு முறை பயணிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளதாலும் அந்தமானில் அருணகிரியை ரசித்து வாசித்தேன். ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் வாங்கிப் படிக்கலாம்.

அந்தமானில் அருணகிரி
மங்கையர்க்கரசி பதிப்பகம்
140 பக்கங்கள்
விலை ரூ.100/-

எழுத்தாளரின் அலைபேசி எண்: 94443 93903


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 September 2015

சினிமா வியாபாரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சமீப வருடங்களாக சினிமா ரசிகர்கள் பரவலாக படங்களின் வசூல், நடிகர்களின் மார்க்கெட் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ரசிகன் என்ன கூந்தலுக்கு படத்தின் வசூலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். வசூல் மட்டுமல்ல. படத்தின் பட்ஜெட், படப்பிடிப்பிற்காக எடுத்துக்கொண்ட காலம், சிரத்தை உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகனுக்கு அவை மீது ஆர்வமில்லாத பட்சத்தில் அவசியமற்ற விஷயங்கள். பல வருடங்கள் உழைத்து, பல கோடிகள் கொட்டி உருவாக்கிய ஒரே காரணத்திற்காக ரசிகர்கள் ஒரு படத்தை பாராட்டியே ஆகவேண்டிய அவசியமில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். அதே சமயத்தில் ஒரு ரசிகன் கோச்சடையானையும் அவதாரையும் கூட கூச்சப்படாமல் ஒப்பிடலாம். ஏனெனில், அவன் இரு படங்களையும் அதே 120ரூ கொடுத்துதான் பார்க்கிறான். In fact, முந்தயதிற்கு அதிக பணம்.

என் எண்ணங்கள் இப்படியிருக்க, முழுக்க முழுக்க சினிமாவின் backend தகவல்கள் அடங்கிய புத்தகமொன்று என்னை விக்ரமாதித்யன் வேதாளம் மாதிரி சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது. கேபிள் சங்கர் எழுதியிருக்கும் சினிமா வியாபாரம். இரண்டு பாகங்கள். முதல் பாகத்தின் முதல் அத்தியாயத்தின் பெயர் ‘இலவச விளம்பரம்’. சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு அது தாராளமாக கிடைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆளாளுக்கு ‘இதெல்லாம் தெரியணும்ன்னா நீ சினிமா வியாபாரம் படிச்சிருக்கணும்’ன்னு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சொல்ல முடியாது இதுபோன்ற ஆசாமிகளை எல்லாம் கேபிளே கூட செட் பண்ணியிருக்கலாம். எதற்கு வம்பு என்று இரண்டு பாகங்களையும் வாங்கி படித்துவிட்டேன்.

முதல் பாகத்தில் பெரும்பாலும் திரைப்பட விநியோகம் பற்றியும் பல்வேறு வகையான உரிமைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். வடிவேலு ஒரு நகைச்சுவை காட்சியில் சிட்டி, செங்கல்பட்டு, நார்த் ஆற்காடு என்று தொடங்கி FMS வரை என்று முடிப்பார். இவைதான் தமிழ் சினிமாவின் விநியோக ஏரியாக்கள். விநியோகம் தவிர்த்து ஆடியோ ரைட்ஸ், டிவிடி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டப்பிங், ரீ-மேக் ரைட்ஸ் உட்பட நாமெல்லாம் கேள்விப்பட்டிராத பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் பரிவர்த்தனைகள் என்ன மாதிரியெல்லாம் நடைபெறுகிறது, என்ன மாதிரியான படங்களுக்கு யாருடைய கை ஓங்குகிறது போன்ற விவரங்களை புரிந்துகொள்ள உதவுகிறது முதல் பாகம். என்ன ஒன்று, பாதி புத்தகத்திற்கு பிறகு ஹாலியுட்டுக்கு தாவி அங்குள்ள தொழில்நுட்பங்கள், பெருநிறுவனங்கள், அவற்றின் அரசியல் போன்றவற்றை சுவாரஸ்யமாக சொன்னாலும் கூட ஏனோ அந்நியமாக தெரிகிறது.

முதல் பாகத்தை ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் எனக்கு மிகவும் நெருக்கமாக படுகிறது. ஏனெனில், இரண்டாவது ஒரு திரையரங்கத்தை எடுத்து நடத்துவது பற்றியது. நான் திரையரங்குகளை உணர்வுப்பூர்வமாக கருதுபவன். ஒரு படம் என்னுள் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துமோ, அதற்கு இணையான தாக்கத்தை திரையரங்குகளும் என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் ஒரு திரையரங்கில் என்ன பிராண்ட் ‘ரூம் ஸ்ப்ரே’ பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அதே ரூம் ஸ்ப்ரேயை என் வீட்டிற்கு வாங்கும் அளவிற்கு பைத்தியக்காரன் நான். திரையரங்குகள் குறித்து நான் எழுதத் துவங்கினால் தனி புத்தகம்தான் போட வேண்டும்.

விஷயத்திற்கு வருவோம். சிட்டி பார்டரில் உள்ள ஒரு திரையரங்கத்தை எடுத்து நடத்திய தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் கேபிள். திரையரங்கத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் எழுதியதால் எதுவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியதாக போயிற்று. உதயம், காசிக்கு அருகில் என்று எழுதியிருக்கிறார். பிட்டுப்படம் ஒட்டிய தியேட்டர் என்றும் சொல்கிறார். ஜோதி என்று நினைத்தால் அதனை வேறொரு திரையரங்கமாக பாவித்தும் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அது கண்டிப்பாக கே.கே.நகர் விஜயா தான் என்று நானாகவே முடிவு செய்துவிட்டேன். விஜயா திரையரங்கம் கேபிளின் இல்லத்தில் இருந்து நடைதொலைவு. ஆனால் கே.கே.நகர் சிட்டி லிமிட்டிற்குள் தானே வரும் என்று யோசித்து, கடைசியாக ஆலந்தூர் எஸ்.கே என்று முடிவு கட்டியிருக்கிறேன். உண்மையில் அது எந்த திரையரங்கம் என்பது கேபிளுக்கே வெளிச்சம்.

பாடாவதியான அந்த திரையரங்கை லீசுக்கு எடுக்கிறார்கள். புதுப்பிக்கிறார்கள். தடைகளை கடந்து முதல் படமாக முரளி நடித்த மனுநீதி படத்தை வெளியிடுகிறார்கள். அதன்பிறகு ஒரு திரையரங்க உரிமையாளராக என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நூல் பிடித்ததை போல தெளிவாகவும் எளிமையாகவும் எழுதியிருக்கிறார். ஒன்றுமில்லை, திரைப்படங்களுக்கென போஸ்டர் ஓட்டுவது என்பது நாம் அன்றாடம் சாலையில் பார்த்துவிட்டு கடந்துபோகும் விஷயங்களில் ஒன்று. அதற்குப் பின்னால் என்ன மாதிரியான அரசியல் இருக்கிறது என்றெல்லாம் தெரியும்போது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. 

இன்று சென்னையில் வசிக்கும் மூவி பப்ஸ்கள் பெரும்பாலானாவர்களுக்கு ஆதர்ஸ திரையரங்கம் என்றால் அது சத்யம் தான். ஒரு கட்டத்தில், சத்யம் திரையரங்கத்திற்கு மூடுவிழா நடத்த முடிவாகியிருந்ததும், அதிலிருந்து சத்யம் மீண்டுவரக் காரணம் நக்சலைட்டுகள் தான் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ஆனால் ஒன்று, சினிமா வியாபாரம் பாகம் இரண்டினை வாங்க விரும்புபவர்கள் தயவு கூர்ந்து முதல் பாகத்தையும் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஏனென்றால் இரண்டாம் பாகத்தில் ஆங்காங்கே ‘இது தெரிய வேண்டுமென்றால் நீங்கள் முதல் பாகம் படித்திருக்க வேண்டும்’ என்று சொல்லி சொல்லியே வெறுப்பேற்றியிருக்கிறார் மனிதர்.

சினிமா வியாபாரம் – பாகம் 1
கேபிள் சங்கர்
மதி நிலையம்
144 பக்கங்கள்
ரூ.90

சினிமா வியாபாரம் – பாகம் 2
கேபிள் சங்கர்
டிஸ்கவரி புக் பேலஸ்
88 பக்கங்கள்
ரூ.70

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 August 2015

7.83 ஹெர்ட்ஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2015ம் ஆண்டு துவங்கியதிலிருந்து ஜூன் மாதம் வரை இருபது புத்தகங்களுக்கு மேல் படித்துவிட்டேன். ஆனால், கிட்டத்தட்ட ஜூன் மாதக்கடைசியில் படிக்கத் துவங்கிய 7.83 ஹெர்ட்ஸை இப்பொழுது தான் முடித்திருக்கிறேன். அதற்கு புத்தகத்தின் தன்மை மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. பணிச்சுமை, குடும்பப் பொறுப்பு, கொஞ்சம் மன அழுத்தம், அது போதாதென்று காரோட்டும் பயிற்சி, திடுக்கென எதிர்ப்புற சாலையிலிருந்து யூ-டர்ன் அடிக்கும் ஷேர் ஆட்டோக்களை சமாளிக்க வேண்டும், ஹாரன் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் சாலையைக் கடக்கும் எருமைகளை இடிக்காமல் பிரேக் போடவேண்டும், க்ளட்ச்சில் இருந்து காலை எடுக்கும்போது எஞ்சின் ஆஃப் ஆகாமல் இருக்க வேண்டும், மாடு வேற இழுத்துனு போகுது, பாம்பு கழுத்துல ஊருது, பிளாடரை வேற கரெக்டா அமுக்கி கங்கையில தண்ணி வர வைக்கணும், இதுக்கு மேல டயலாக்கும் சொல்லணும்னா எப்படி ?

சுதாகருடைய 6174 எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். சுதாகர் எனக்கும், என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றுதான் சொல்ல வேண்டும். 6174 படித்த சமயத்தில், நாமளும் எப்படியாவது ஒரு பெரிய ‘சம்பவம்’ செய்யணும் என்ற வெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். (இன்னமும் அந்த கங்கு அணையாமல் தான் இருக்கிறது). அவருடைய இரண்டாவது நாவல் 7.83 ஹெர்ட்ஸ்.

7.83 ஹெர்ட்ஸ் ஒரு அறிவியல் புனைவு நாவல். ஆனால், கணினி, ரோபோக்கள் என்று இல்லாமல் பயோ-டெரரிஸம், பாலி பாஸ்பேட், ஸை-ஆப்ஸ் (Psyops) என்று வேறு தளத்தில் பயணிக்கும் ஸை-ஃபை !

ஓநாய்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவை. மனிதனைக் கண்டால் விலகிச் செல்பவை. ஆனாலும் அவற்றைக் கொடிய விலங்கு என்றே கருதுகிறோம் என்ற சுவாரஸ்ய வரிகளுடன் தான் நாவல் துவங்கியது. ஆனால், சில பக்கங்கள் தாண்டியதும் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதற்கான சில காரணங்கள் –

- ஒரு நபர் அல்லது ஒரு இடம் அல்லது ஒரு சம்பவத்தைப் பற்றி படிக்கும்போது அந்த விஷயம் அப்படியே நம் முன்பு காட்சியாக விரிய வேண்டும். 7.83 ஹெர்ட்ஸின் அத்தியாயங்களை அதுபோல என்னால் காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லை. இதே சிக்கல் எனக்கு 6174ன் பிற்பகுதியிலும் இருந்தது. அது இங்கே பதினெட்டாம் பக்கத்திலேயே துவங்கிவிடுகிறது. 


- ஓவர் டீடெயிலிங்: உண்மையில் சுதாகரின் டீடெயிலிங் பிரம்மிப்பாக இருக்கிறது. அநியாயத்துக்கு தகவல்களை அள்ளிக்கொடுத்திருக்கிறார். நிறைய டாபிக்கைப் பற்றி நாவலில் மேலோட்டமாகவே சொல்லியிருந்தாலும் அதற்கான தகவலை சேகரிக்க சுதாகர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. ஆனால், இவ்வளவு டீடெயிலிங் தேவையா ? தொடர்ச்சியாக தகவல்கள், தகவல்கள், தகவல்கள் என்பதே அயர்ச்சி தருகிறது. 

- ஜார்கன்ஸ்: சாமானியர்கள் படிப்பதற்கான புத்தகங்கள் எளிமையாக இருக்க வேண்டுமென்பது எனது கருத்து. ஐ.சி.பி ஸ்பெக்ட்ரோமீட்டர், ATC ஆக்ஸி டெட்ராசைக்கிள், கேனிட்ஸ் ஜீனோடைப்பிங் என்று புரியாத மொழியில் ஏதேதோ எழுதிக்கொண்டே போகும்போது தொடர்வதற்கு சிரமமாக இருக்கிறது. சுஜாதாவும் ஸை-ஃபை எழுதினார். ஆனால், எல்லோருக்கும் புரியும் மொழியில். பாய்ஸ் படத்தில் நிலநடுக்கம் வந்ததும் எல்லோரும் வீதிக்கு வந்து கூடிப் பேசிக்கொள்வார்கள். அங்கே ஜெனிலியாவின் அப்பாவும் ஒரு காமன் மேனும் ‘ரிக்டர்’ அளவை எப்படி கணக்கிடுவார்கள் என்று பேசிக்கொள்வார்கள். சுஜாதாவின் வெர்ஸடைலிட்டிக்கு அது ஒரு நல்ல உதாரணம்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, சுதாகர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் எனக்கு சுத்தமாக ஆர்வமில்லாத சப்ஜெக்ட். அதனாலேயே பல கொட்டாவிகளுக்கு மத்தியில் படிக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் தடையில்லாத வாசிப்புக்கு திரும்ப வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 March 2015

ரசிகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கால்களை படித்து முடித்த கையோடு நான் தொட்ட அடுத்த நாவல் ரசிகன். இதிலிருந்து என்னுடைய மன உறுதியையோ அல்லது நாவலின் மீது வைத்துள்ள நம்பிக்கையையோ உணர்ந்து கொள்ளலாம்.

முன்னுரையில் அபிலாஷ் நாவலை எப்படி எழுதினார் ? என்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொண்டார் ? என்பது குறித்து சுருக்கமாக எழுதியிருக்கிறார். எழுதும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அபிலாஷின் முன்னுரை கட்டாய பாடம்.

இடதுசாரி கொள்கையுடைய எண்பதுகளின் இளைஞனான சாதிக் என்பவனே நாவலின் மைய கதாபாத்திரம். அவனுடைய வாழ்வின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை நாவல் ஒரு பார்வையாளனாக, நண்பனாக உடனிருந்து கவனித்து நமக்கு விவரிக்கிறது.

நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் மாற்று சினிமா, மலையேற்ற சுற்றுலா, சிற்றிதழ் சிந்தனைகள் என்று ஒரு நாடோடியைப் போல அதன் விருப்பத்திற்கேற்ப பயணிக்கிறது. தீவிர இடது சாரி கொள்கை பிடிப்பு கொண்ட சாதிக் வறுமையின் கோர பிடியிலும் கூட ‘செங்கதிர்’ என்ற சிற்றிதழை விடாமல் நடத்தி வருகிறான். அவன் லெளகீக வாழ்க்கையில் ஈடுபாடற்றவனாக செயல்படுகிறான். நாவலின் இரண்டாவது பாகத்தில் அவன் அந்த காலகட்டத்தில் கேரளாவில் பிரபலமாக இருந்த பேரலல் காலேஜில் விரிவுரையாளராக பணிபுரிகிறான். அவனுடைய கொள்கை பிடிப்புகள் சற்று தளர்ந்திருக்கின்றன. ரெஜினா என்கிற பெண்ணை காதலிக்கிறான். காதலுக்காக பல இன்னல்களை சந்திக்கிறான். சிறைக்கு கூட செல்கிறான். மூன்றாவது பாகத்தில், அவனுடைய குணநலன்கள் மொத்தமாகவே மாறிப் போயிருக்கின்றன. அவன் ஒரு தீவிர ரஜினி ரசிகனாக இருக்கிறான். நிறைய குடிக்கிறான். அவனுடைய செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஒரு மனப்பிறழ்வு ஏற்பட்டவனைப் போல இருக்கின்றன.

அபிலாஷின் முந்தைய நாவலுக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் நாகர்கோவில் / கன்னியாகுமரி வட்டார பேச்சு மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் அப்பா காணாமல் போய்விடுகிறார். இரண்டிலும் அடிக்கடி கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யாராவது வெட்டியாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே மிக மொண்ணையான விவாதம் கடவுள் உண்டா இல்லையா என்பதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் உண்டா இல்லையா என்று மணிக்கணக்கில் எந்தவித கன்க்லூஷனும் இல்லாமல் விவாதிப்பதை விட அலகு குத்திக் கொள்வதோ, தீ மிதிப்பதோ கூட பெரிய மூட நம்பிக்கையில்லை.

முக்கியமாக இரண்டு நாவல்களில் உள்ள பொதுவான சிக்கல், கண்டதையும் எழுதி வைத்திருப்பது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். சில நொடிகளில் வெவ்வேறு தலைப்புகளில் எண்ணற்ற விஷயங்களை சிந்திக்கக்கூடிய ஆற்றல் படைத்தது மனித மனம். ஆனால் அப்படி மனித மனம் நினைப்பது அத்தனையையும் ஒன்றுவிடாமல் எழுதிக்கொண்டே வந்தால் நன்றாகவா இருக்கும். இன்னொரு விஷயம், இலக்கியவாதிகள் சும்மா ஒரு கெத்துக்காக முலைகள், யோனி, விரைத்த ஆண்குறி, தேவடியாள் போன்ற வார்த்தைகளை மானே தேனே மாதிரி பயன்படுத்துவது நவநாகரிகமாக மாறிவிட்டது. அது ஒரு எல்லையை மீறிப்போகும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, நாவலின் 139ம் பக்கம் ஒரு கதாபாத்திரத்தை விவரிக்கிறது – அவர் கண்ணை மூடி நமசிவாய நமசிவாய என உதடு குவித்து முணுமுணுத்தார். அப்படிக் குவியும்போது அவர் உதடுகள் பார்க்க நாயின் ஆசனவாய் திறந்து மூடுகிறாற் போல இருந்தன. இதனை படிக்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், எழுத்தாளர் எப்போதோ ஒரு சமயம் நாயின் ஆசனவாயைப் போய் குறுகுறுவென பார்த்திருக்கிறார். அது திறந்து மூடும்போது எப்படி இருக்கிறது என்று தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். பின்னர், பெரியவர் உதடு குவிக்கும்போது அது முன்பு பார்த்த நாயின் ஆசனவாய் போலவே இருக்கிறதா என்று ஒப்பிடுகிறார். நினைத்துப் பார்க்கவே நாராசமாக இருக்கிறது.

சமீபமாக படித்த நாவல்களில் உள்ள பொதுவான ஒரு அம்சம், போகிறபோக்கில் இலைமறை காயாக மற்ற எழுத்தாளர்களை பகடி செய்கிறார்கள். குறிப்பாக, சாரு நிவேதிதாவை அதிகம் சீண்டுகிறார்கள். ஒன்றிரண்டு நாவல் எழுதியிருக்கும் புதிய எழுத்தாளர்கள் இப்படி கிண்டலடிப்பது சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத மிர்ச்சி சிவா ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ராமராஜனை கிண்டலடிப்பதை நினைவூட்டுகிறது.

ரசிகனை பொறுத்தவரையில் அபிலாஷின் முந்தைய நாவலைப் போல போரடிக்கவில்லை. ஆனால் அத்தியாயங்கள் போகப் போக நாவலின் கதாபத்திரங்களுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் அரைகிறுக்கு போல இஷ்டத்துக்கு எதையாவது செய்கிறார்கள். அத்தியாயத்துக்கு ஒரு பிராண்ட் என்று குடிக்கிறார்கள். முதலில் டைரெக்டர்’ஸ் ஸ்பெஷல், அப்புறம் ப்ளாக் லேபிள், பகார்டி லெமன், ஈ & ஜெ, ஓல்ட் மாங்க், மார்பியஸ் என்று டாஸ்மாக் வகையறா அத்தனையும் வந்து போகின்றன. பெண் கதாபாத்திரம் ஒன்று மார்பகங்களை உடைகளுக்கு வெளியே எடுத்து விபத்தில் இறந்த கணவனின் மூளையை நினைத்து உச்சம் அடைகிறது. ம்ஹூம். ரசிகன் என்பது என்ன ஒரு அற்புதமான தலைப்பு என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 March 2015

கால்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வளவு போரிங்கான நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. உண்மையில், நான் அபிலாஷுடைய ரசிகனை வாசிக்க விரும்பினேன். அதனை வாசிப்பதற்கு அவருடைய முதல் நாவல் என்கிற வகையிலும், யுவ புரஸ்கார் விருது பெற்றது என்பதாலும் கால்கள் ஒரு Pre-requisite என்று நானாகவே கருதினேன்.

மொத்தம் 550 பக்கங்கள். நிறைய எழுத்தாளர்கள் எழுத்துரு அளவை பெரிதாக வைத்தோ, வரி வெளி அதிகமாக விட்டோ அல்லது படங்களைச் சேர்த்தோ பக்கங்களை அதிகரிக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் புத்தகம் முழுக்க முழுக்க எழுத்துகளால் நிறைந்திருக்கிறது என்பது முதல்முறை புரட்டும்போதே புரிந்துவிட்டது. ஆனால் உள்ளடக்கம் தான் சற்று சிக்கலானது. நான் பொதுவாக சோகமயமான படைப்புகளை விரும்புவது கிடையாது. கால்களை பொறுத்தவரையில் சோகம் என்று சொல்ல முடியாது. ஒருவிதமான அயர்ச்சியான உணர்வு.

சில நாவல்களை எடுத்து ஐம்பது பக்கம் வரை தாண்டி ஒரு Pleasure of the Text-ம் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் அதைத் தொடர்ந்து படித்து காலத்தை விரயம் ஆக்காமல் மற்றொன்றை ஆரம்பித்தல் என்றுமே சாலச் சிறந்தது என்கிறார் பிரபு காளிதாஸ். ஒவ்வொரு முறை மூடி வைத்துவிடலாமா என்று யோசிக்கும்போதும் யுவ புரஸ்காரை நினைத்துக்கொண்டே தம் கட்டி முடித்துவிட்டேன்.

இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மது என்கிற பருவப்பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது. தட்டையான நாவல் என்பார்களே, அதற்கு கால்கள் ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் வரை (365 பக்கங்கள் !) நாவல் ஒரே தொனியில் பயணிக்கிறது. அதற்குப் பிறகும் கூட பெரிய வித்தியாசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுவின் உணர்வுகள் தான் நாவலின் சாரம் எனும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்க வேண்டும். நாவலில், மது யாரிடமும் எந்த உணர்ச்சியையும் பெரிதாக காட்ட மறுக்கிறாள். அப்பா, அம்மா, வைத்தியர், கார்த்திக் என பல பாத்திரங்கள் வருகின்றன. அவர்களையெல்லாம் மது எந்தவித சலனமும் இல்லாமல் எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறாள், எதிர்கொண்டே இருக்கிறாள், கடைசி வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. மதுவுக்கு யாரைப் பார்த்தாலும் சோர்வாக இருக்கிறது. மற்றொரு எழுத்தாளருக்கு அடிக்கடி துக்கம் தொண்டையை அடைப்பது போல மதுவுக்கு அடிக்கடி சோர்வாக இருக்கிறது. அதை படிக்கும்போது நமக்கும் சோர்வாக இருக்கிறது. வார நாளொன்றின் மதியவேளையில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாதிரியான சவசவ உணர்வு ஏற்படும் அல்லவா ? அந்த உணர்வுதான் நாவல் முழுமைக்கும் கிடைக்கிறது.

ஆரம்ப அத்தியாயங்களில் மது, கார்த்திக் உரையாடல்கள் வருகின்றன. பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போல ஒருமாதிரி லொட லொட. ஒரேயொரு ஆறுதல், நல்லவேளையாக மது ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அதற்கும் சேர்த்து வேறு அழுது வடிந்திருக்கும் நாவல்.

உண்மையாகவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து வருந்திக்கொண்டோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை காலிபர் இல்லாமல் நடந்து கீழே விழுந்து கொண்டோவா இருக்கிறார்கள் ? அல்லது அப்படி இருந்தால் அது ஊக்குவிக்கக் கூடிய விஷயமா ? என்னைப் பொறுத்தவரையில், கால்கள் ஆப்டிமிஸ்டிக் தொனியில் எழுதப்பட்ட ஒரு பெஸ்ஸிமிஸ்டிக் நாவல்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 February 2015

சென்னைக்கு மிக அருகில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜீவ்காந்தி சாலை எழுதிய விநாயக முருகனின் இரண்டாவது நாவல். தயக்கத்துடன்தான் படிக்கத் துவங்கினேன். ஏனென்றால் என்னிடம் உள்ள ஒரு கெட்டபழக்கம், ஒரு புத்தகத்தை பாதி படித்துக்கொண்டிருக்கும்போது பிடிக்காமல் போனால் உடனே தூக்கி கடாசிவிட மாட்டேன். எப்பாடு பட்டாவது அந்த புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட முயற்சி செய்வேன். இது எங்கே போய் முடியும் என்றால் நான்கைந்து நாட்களில் முடித்துவிட வேண்டிய புத்தகம் ஒன்றிரண்டு மாதங்கள் வரை நீளும். தேவையில்லாத மன உளைச்சல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே ராஜீவ் காந்தி சாலை படிக்கும்போது இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டேன் என்பதால் ஏற்பட்ட தயக்கம்.

சென்னைக்கு மிக அருகில் அப்படியில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சித்திரை என்கிற பெரியவர் தான் கதையின் ஹீரோ. சென்னைக்கு மிக அருகில் உள்ள மணிமங்கலம் என்கிற கிராமத்தைச் சுற்றி கதை நகர்கிறது. அக்கிராமத்தில் வசித்துவரும் நில உரிமையாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சித்திரை மட்டும் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க மனம் ஒப்பாமல் சிறிய அளவில் விவசாயம் செய்துவருகிறார். அப்படியொரு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருபவரை இந்த சமூகம் எப்படியெல்லாம் நெருக்குகிறது என்பதுதான் பிரதான கதை.

இதனோடு நூல் பிடித்தாற்போல சில கிளைக்கதைகளும் வருகின்றன. எப்படியென்றால் மணிமங்கலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மருதம் பில்டர்ஸ், அதனுடைய விளம்பரப் படங்கள் ஒளிபரப்பாகும் கேலக்ஸி டிவி, அந்த விளம்பரங்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை, அந்த சின்னத்திரை நடிகைக்கும் ஒரு சாமியாருக்கும் இடையே நடந்த சல்லாபம்... இப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல கிளைக்கதைகள். இதிலுள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், நித்தியானந்தா – ரஞ்சிதா விவகாரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள், பள்ளி பேருந்து விபத்தில் சிறுமி பலியான விவகாரம், ஆழ்துளை கிணற்றில் சிறுவர் / சிறுமியர் விழுந்து பலியாகும் விபத்துகள் உள்ளிட்ட பல உண்மைச் சம்பவங்களை புனைந்து எழுதியிருக்கிறார் விநாயக முருகன்.

முந்தைய நாவலில் காணப்பட்ட குறைகளை கவனமாக களைந்தெடுத்திருக்கிறார் விநாயக முருகன். கூடவே சுவாரஸ்யத்தை சேர்ப்பதற்காக எதை எந்த இடத்தில் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று குறிப்பறிந்து கச்சிதமாக சேர்த்திருக்கிறார். 

எனினும் விநாயக முருகனின் இரண்டு நாவல்களுடைய தொனி மட்டும் ஒன்றுதான் – காலம் கெட்டுப்போய்விட்டது. அதாவது வயதானதும் மனிதர்கள் சமகால மாற்றங்களை சலித்துக்கொள்வார்கள் இல்லையா ? இந்த காலத்து பசங்க பெரியவங்க பேச்சை கேக்குறதில்ல, அரைகுறை துணியை உடுத்திக்கிட்டு திரியுதுங்க, சினிமாவே கதின்னு கெடக்குறாங்க, டிவியில போடுற கண்ட கருமத்தையும் பாக்குறாங்க இப்படி நிறைய. கூடவே, நாங்கள்லாம் அந்த காலத்துல என்று தொடங்கக்கூடிய வியாக்கியானங்கள். இப்படி நாவல் முழுவதும் பழமைவாதம் விரவிக் கிடக்கிறது. இது சில இடங்களில் ஈர்ப்பும் ஏற்பும் உடையதாக இருந்தாலும் பல இடங்களில் எரிச்சலையே தருகிறது. இத்தனைக்கும் நானே ஒரு பழமைவாதி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம், மக்களுக்கு எல்லாமே செய்திதான், இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கத் துவங்கிவிடுவார்கள் என்பது போன்ற வசைகள். இவற்றை படிக்கும்போது ‘உங்கொப்பன் செத்தப்ப எத்தன நாள் அழுத ?’ என்கிற ராஜனின் ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. தயவு செய்து அப்டேட் ஆகுங்கள் விநாயக முருகன்.

விநாயக முருகனின் எழுத்தில் ஆச்சரியமூட்டிய ஒரு விஷயம், இடையிடையே சில இடங்களில் கனவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். தூக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி தான். இதற்கு முன்பு சுஜாதாவின் சில நாவல்களில் இதுபோன்ற கனவுகளை படித்திருக்கிறேன். அவற்றை படிக்கும்போது நிஜமாகவே கனவு காணும் ஓர் உணர்வு ஏற்படும். விநாயக முருகன் எழுதியிருக்கும் கனவுகள் வேறு வகையானது. குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தின் சூழ்நிலையை வாசகர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் பொருட்டோ அல்லது உருவகப்படுத்தி சொல்லும் பொருட்டோ வரும் கனவுகள். மொத்தத்தில், படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

இறுதியாக, சென்னைக்கு மிக அருகில் போரடிக்காமல் படிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு நாவல். ஆனால், அதில் எழுத்தாளர் மிகவும் சீரியஸாக சொல்ல முயன்றிருக்கும் விஷயங்கள் மனதில் சிறிய பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கிறதா ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய சொற்றொடரை ‘என்னளவில்’ என்ற முற்சேர்க்கையுடன் படித்துக்கொள்ளுங்கள். ஐ.டி.யில் பணிபுரியும் சிலர், ‘இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானெல்லாம் வெவசாயம் பார்க்கப் போயிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் வேண்டுமானால் சென்னைக்கு மிக அருகில் நாவலை படித்துவிட்டு தங்கள் வாய்ச்சவடாலுக்கு ஒரு வாய் அவலாக சேர்த்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 February 2015

இரவல் காதலி + கொட்டு மொழக்கு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு விஷயத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்போது ஒரு கட்டத்தில் நம்மையறியாமல் அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. நாட்டின் நிலைமை அறிந்துகொள்ள சிகப்பு நா.....டா ! என்கிற விளம்பரப் பாடல் போல குருத்தோலை, இரவல் காதலி, கொட்டு மொழக்கு, செல்லமுத்து குப்புசாமி போன்ற பதங்கள் பரிட்சயமாகிவிட்டது. எழுத்தாளர் மென்பொருள் துறையில் பணிபுரிபவர் என்பதாலும் ஒரு ஆர்வம். அவருடைய இரண்டு நாவல்களை புத்தகக்காட்சியில் வாங்கினேன்.

முதலில் இரவல் காதலி. கமாக்கதை தளங்களில் விரவிக்கிடக்கும் UNSATISFIED WIFE கதையொன்றில் காதல் மற்றும் பிற உணர்ச்சிகளை சேர்த்து மானே தேனே போட்டு எழுதினால் இரவல் காதலி ரெடி.

முதல் ஐம்பது பக்கங்கள் சும்மா ஜிவ்வென்று பறக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் போரடித்தது. SMS, Gtalk சம்பாஷனைகளை பார்த்ததும் ஒருவேளை ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாக இருக்குமோ என்று பதிப்பிக்கப்பட்ட வருடத்தை அவசரமாக திருப்பிப் பார்த்தேன். புதுசுதான். SMS இடத்தை வாட்ஸப்பும், GTalk இடத்தை ஃபேஸ்புக் சாட்டும் எப்போதோ நிரப்பியாயிற்றே அய்யா. மைக்ரோஸாஃப்ட் வேர்டில் ஸ்மைலி போட்டால் அது J என்று மாறிக்கொள்வதை கவனித்திருப்பீர்கள். அது வினையாகி, சம்பாஷணைகளின் இடையே அடிக்கடி J, L என்று வருகிறது.

ஐ.டி.துறை சார்ந்த நாவல் என்பதால் அதன் வகையைச சேர்ந்த ‘ராஜீவ் காந்தி சாலை’யுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. ராகாசா’வில் பூர்வக்குடி மக்களின் விவசாய நிலங்களை பறித்தது, மாறிவரும் கலாசாரம், ஐடி ஊழியர்களின் வாழ்க்கைமுறை, கேப் டிரைவர்களின் கிளைக்கதைகள் என்று பலவற்றையும் தொட முயற்சி செய்திருப்பார் விநாயக முருகன். நிறைய கதாபாத்திரங்கள். சில சமயங்களில் குழப்பவும் கூட செய்தது. இரவல் காதலியில் அதுபோன்ற சிக்கல்கள் இல்லை. நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்கள். கொஞ்சம் ஐ.டி. கொஞ்சம் விமன் ஸைக்காலஜி. கொஞ்சம் செக்ஸ் என்று பிரமாதமான ப்ளெண்ட்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எழுத்தாளர், “நான் எழுதுவதை எல்லாம் என் மனைவி படிக்க வேண்டும். பாராட்ட வேண்டும்” என்று ஆசைப்படுவதாக கூறினார். நியாயம்தான். என்னதான் ஆடவர்கள் ஆயிரம் பேர் பாராட்டினாலும் கூட பெண்ணின் பாராட்டு என்பது சிலிர்ப்பை தரக்கூடியது. அதுவும் நமக்கு உற்றவளுடைய பாராட்டு என்பது மிகவும் உன்னதமானது. அந்த வகையில் எழுத்தாளருடைய மன உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளரின் மனைவி என்ன சொன்னார் தெரியுமா ? “நான் நான்கு பக்கங்கள் படிப்பதற்குள் தூங்கி விடுவேன்” என்று ஒரே போடாக போட்டார். என்னைக்கேட்டால் அதுவே சாலச் சிறந்தது என்பேன். இரவல் காதலி போன்ற கதையினை எழுத்தாளரின் மனைவி படித்தால் என்ன நடக்கும் என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. நாளடைவில் எழுத்தாளர் எழுதுவதையெல்லாம் மனைவி உட்கார்ந்து மட்டறுத்துக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும் ?

இரண்டாவது கொட்டு மொழக்கு.

கொட்டு மொழக்கின் பின்னட்டை பத்தி இப்படிச் செல்கிறது – கார்ப்பரேட் வாழ்க்கையின் அழுத்தங்களில் மூச்சுத்திணறும் ஒருவன்.... கொட்டு மொழக்கு மட்டுமல்ல. இந்த ஆண்டு வெளியான வேறு சில நாவல்களின் பின்னட்டைகளில் கூட ஏறத்தாழ இதே போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

சமீபத்தில் நடந்த புத்தகக்காட்சியில் ஒரு போட்டோக்கார நண்பர் ஸ்டால்களை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நித்யானந்தா ஸ்டாலில் பலமான வரவேற்பு கிடைத்தது. அங்கே வீற்றிருந்த ரெடிமேட் சாமியார் போட்டோக்கார நண்பரை அமர்த்தி கபாலத்தில் கை வைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை ? என்று கேட்டாராம். உடனே நண்பர் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட சாமியார் ஷாக் ஆகியிருக்கிறார். பின்னட்டை வாசகங்கள் எழுதும் ஆசாமிகளும் அந்த சாமியாரைப் போன்றவர்கள் தான். மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒரு மனக்குறையோடு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களாகவே கற்பிதம் செய்துகொள்கிறார்கள். ரைட்டு.

மரண வீடுகளை எதிர்கொள்ளத் தெரியாத ஒரு நகர நாகரிக மனிதன் என்ற கதைக்கரு பிடித்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாவலின் வட்டார மொழிநடை என்னை விழி பிதுங்க வைத்துவிட்டது. வட்டார மொழிநடை என்பது விருப்பத்திற்குரிய ஒன்றுதான். உரையாடல்கள் வட்டார மொழிநடையிலும், விவரணைகள் எழுத்துத் தமிழிலும் மாறி மாறி வரும்போது படிப்பதற்கு தொய்வில்லாமல் இருக்கும். இந்த நாவலை பொறுத்தவரையில் வட்டார மொழிநடை கொஞ்சம் ஓவர்டோஸ். குறிப்பிட்ட வட்டார மக்கள் விரும்பக்கூடும்.

சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் நாவலின் இடையே யாரோ ஒருவரை குத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் எடிமலை கதாபாத்திரம் எல்லாம் ரிட்டன் ஃபார்மட் சூரி என்றுதான் சொல்ல வேண்டும். முடியல. 

அப்புறம், மரண வீட்டு சடங்குகள் பற்றிய டீடெயிலிங். இதன் பின்னாலுள்ள எழுத்தாளரின் உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது. நிறைய விவரங்களை தேடித் தேடித் தொகுத்திருக்கக்கூடும். சில இடங்களில் ‘எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்கு செய்யுறது தாம்பா’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போவதை எளிமையாக கடந்துபோக முடியவில்லை. எதற்காக ஒரு எழுத்தாளர் சடங்காச்சாரங்களை பற்றியெல்லாம் எழுத வேண்டும் ? அந்த சடங்குகளுக்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை தெளிவு படுத்தினாலன்றி அதனை எழுதுவதால் என்ன பயன் ? என்று புரியவில்லை.

இரண்டு நாவல்களைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்வதென்றால் நகர்புறத்து கதைகளை விரும்புபவர்கள் இரவல் காதலியையும், கிராமத்து கதைகளை விரும்புபவர்கள் கொட்டு மொழக்கினையும் வாசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 January 2015

பிரபல கொலை வழக்குகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

நேற்று இன்று என்ற திரைக்காவியத்தை காண நேர்ந்தது. வீரப்பனின் மரணத்திற்குப்பின் அவர் பதுக்கி வைத்திருந்ததாக நம்பப்படும் பெரும் பொருட்செல்வத்தை தேடி நிறைய பேர் காட்டுக்குள் அலைந்து திரிந்ததாக கேள்விப்பட்டிருப்போம். அதன் அடிப்படையில் ஒரு கதையை புனைந்திருக்கிறார்கள். கதையின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் (நேற்று), தற்கால காட்சிகளும் (இன்று) மாறி மாறி வருகிறது. படத்தின் தலைப்பிற்கு நீதி கற்பித்தல்.

கதையின் இரு தடத்திலும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தை வைத்து சும்மா விளையாடியிருக்கிறார் இயக்குநர். பிட்டு இல்லை தான் என்றாலும் பிட்டு இருப்பது போலவே 'பெப்' ஏற்றும் கலை இயக்குநருக்கு தெரிந்திருக்கிறது. இதுவரை எத்தனை படங்களில் ஹீரோயின் அறிமுகக்காட்சி பார்த்திருப்போம். ஹீரோயினுடைய நவரசங்களையும் க்ளோஸப்பில் ஸ்லோ மோஷனில் காட்டுவார்கள். அதனை ஹீரோ பார்த்து ஃப்ரீஸ் ஆகி நிற்பார் அல்லவா ? நேற்று இன்றில் அருந்ததிக்கு அல்வாத்துண்டு மாதிரி ஒரு அறிமுகக்காட்சி வைத்திருக்கிறார்கள். ஃப்ரெஷ்ஷா இருக்கு. அந்த காட்சிக்குப் பிறகு, படம் முழுவதும் அருந்ததியின் காஸ்டியூம் ஒரேயொரு பனியன் மட்டும்தான். அதுவும் கை வைக்காதது.

எப்படியும் 'தொட்டால் தொடரும்' வெளியானபின் அருந்ததி பிரபலமாகி விடுவார். என்னுடைய சந்தேகமெல்லாம் 'நேற்று இன்று' படத்தை கே.கே.நகர் விஜயாவில் என்ன பெயரில் வெளியிடுவார்கள் என்பதுதான் !

பிரபல கொலை வழக்குகள் - இந்த புத்தகம் என் கைக்கு வந்த கதையே ஒரு தனி எபிசோட். போராடி வாங்கியிருக்கிறேன். அவ்வளவு ஆர்வத்திற்கு காரணம் அதிலுள்ள ஆளவந்தான் கொலை வழக்கு. சில வருடங்களுக்கு முன்பு தினத்தந்தி வரலாற்று சுவடுகளில் ஆளவந்தான் கொலை வழக்கு பற்றி படித்திருக்கிறேன். என்னை ஒருமாதிரி அதிர்ச்சியடைய வைத்த பகுதி அது. அதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளவே பிரபல கொலை வழக்குகளின் மீது இவ்வளவு ஆர்வம். ஆனால் புத்தகத்தில் அந்த கொலை வழக்கினை பற்றி மொத்தமே மூன்று பக்கங்கள் மட்டுமே உள்ளன என்பது வருத்தத்திற்குரியது.

பரவாயில்லை. எதையோ படிக்கப் போய் வேறு சில அற்புதமான விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். முதலில், ஆஷ் கொலை வழக்கு. குறிப்பிட்ட அந்த கொலையை மட்டும் கவர் செய்யாமல் அதைச் சார்ந்த இந்திய சுதந்திரம் தொடர்பான சங்கதிகளையும் கொஞ்சம் விரிவாகவே எழுதியிருக்கிறார் ஆசிரியர். இதை படிக்கும்போது இந்திய சுதந்திர போராட்டத்தின் மீது மரியாதை கூடுகிறது. குறிப்பாக, வ.உ.சி, பாரதியார், வாஞ்சிநாதன் போன்றவர்களின் மீது.

இன்னொரு பெரிய ஆச்சரியம், மர்ம சந்நியாசி வழக்கு. கிட்டத்தட்ட பாதி புத்தகத்தை நிறைத்திருக்கிறது. சுருக்கமாக – சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு சமஸ்தானத்தின் இளவரசர் மர்மமான முறையில் இறக்கிறார். அது அவருடைய மைத்துனரும், மனைவியும் செய்த சதி என்றும் நம்பப்படுகிறது. இறந்தவரை அவசர அவசரமாக தகனம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இறுதி ஊர்வலத்தின் போது மிகக்கடுமையாக மழை பெய்கிறது. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் பிணத்தை அங்கேயே வைத்துவிட்டு மழைக்காக ஒதுங்குகிறார்கள். மழை நிற்கிறது. பிணம் காணவில்லை.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த ஊருக்கு ஒரு சந்நியாசி வருகிறார். அவருடைய தோற்றமும் செயல்பாடுகளும் இறந்துபோன இளவரசரை நினைவூட்டுகிறது. ஒருவேளை அவரேதான் இளவரசரா ? வாய்ப்பு கிடைத்தால் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பிரபல கொலை வழக்குகள்
SP சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்
200 பக்கங்கள் – விலை ரூ.150
புத்தகக் காட்சி அரங்கு எண்: 634

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 December 2014

கந்தன் கருணை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சலூனுக்கும் மருத்துவமனைக்கும் அடிக்கடி செல்வதில்லை. வருடத்தில் ஒன்றிரண்டு முறை 'தலை' காட்டினால் பெரிய விஷயம். எப்போதாவது உடலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும் கூட, 'டாக்டர்கிட்ட போனா ஒரே வாரத்தில் சரியாகிடும். இல்லன்னா ஏழு நாள் நீடிக்கும்’ என்று வியாக்கியானம் பேசக்கூடிய ஆள். என்னைப் பொறுத்தவரையில் டோலோ 650 ஒரு சர்வரோக நிவாரணி. என்ன ஆனாலும் ஒரு டோலோவை விழுங்கிவிட்டு உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று திடமாக நம்புபவன். ஆமாம், ஏழு நாள் வரை பிரச்சனையில்லை. ஆனால் எட்டாவது நாள் ஆகிவிட்டால் உடலில் ஏற்பட்ட கோளாறு மனதிலும் தொற்றிக்கொள்ளும். வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு ஓடுவேன். அப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் செல்ல வேண்டியதாகி விட்டது.

மருத்துவரின் மையத்தில் டோக்கன் ஒழுங்குமுறையெல்லாம் கிடையாது. நாம் போனதும் கடைசியாக வந்தது யாரென்று கேட்டுவிட்டு அமர்ந்துகொள்ள வேண்டும். அந்த கடைசி ஆள் எப்போது செல்வார் என்று காத்திருந்து அவருக்கு அடுத்ததாக உள்ளே செல்ல வேண்டும். ஆனால் நம்முடைய நேரம் எப்படி இருக்கும் என்றால், சரியாக நமக்கு பின்னால் கைக்குழந்தையோடு ஒரு அம்மா வருவார். கொயந்தைக்கு உடம்பு சரியில்லை என்று இறைந்து மன்றாடுவார். சரி போகட்டும் என்று விடுவோம். அடுத்தது ஒரு நடுத்தர வயது பெண்மணி பத்து கிலோமீட்டர் மாரத்தான் ஓடிவிட்டு வந்தது போல மூச்சிரைத்துக் கொண்டே வருவார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா ம்ம்ம்ம்மா முடியலயேம்மா என்று தமக்குள் முனகிக்கொள்வார். உடனே ஒரு சோடாவை வாங்கி புளிச் என்று அவருடைய முகத்தில் அடிக்காவிட்டால் ஏதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்று நமக்கே பயமாக இருக்கும். அவரை சகல மரியாதையோடு நமக்கு முன்பாக அனுப்பி வைப்போம். அதற்குள் நமக்கு அடுத்து போக வேண்டியவர்கள் எல்லாம் நாங்க போன மாசமே வந்து காத்திருக்கிறோம் தெரியுமா ? என்று நம்மை சத்தம் போட ஆரம்பிப்பார்கள். போய்த் தொலைங்க என்று ஒவ்வொருவரையாக அனுப்பிக் கொண்டிருக்கும்போது யாரேனும் ஒரு இறக்க சுபாவி புன்னகையுடன் நீங்க போங்க சார் என்பார். அவர் வேறு யாருமில்லை நம்மைப் போன்ற இன்னொரு ஈனா வானா தான்.

உள்ளே போனால் அங்கே வீற்றிருப்பார் கந்தன். நியாயமாக பார்த்தால் சேவித்துக்கொள்ள வேண்டும். எங்கள் குடும்ப மருத்துவர். எனது தாத்தாவில் துவங்கி எனது மகள் வரை மருத்துவம் பார்த்துவிட்டார். சைல்ட் ஸ்பெஷலிஸ்ட். (இப்போது புரிகிறதா நான் ஏன் அவரிடம் மருத்துவம் பார்க்கிறேன் என்று !). எனது பதின்பருவ வயதில் அவரிடம் செல்லும்போது நானொரு அடல்ட் என்று காட்டிக்கொள்வதற்காகவே தோள்பட்டையில் ஊசி குத்திக்கொள்வேன். இப்பொழுதெல்லாம் யாரும் யாருக்கும் தோள்பட்டையில் ஊசி போடுவதாக தெரியவில்லை. புட்டம்தான். ஜெண்டாமைஸின், கேராமைஸின் என்று (வயது முதிர்ந்த) செவிலியிடம் மருத்துவ மொழியில் ஏதோ சம்பாஷித்தார். அந்த அம்மாள் எனது இரண்டு புட்டங்களையும் பஞ்சர் ஆக்கினார்.

வழக்கமாக என்னுடைய சிகை அலங்காரத்தைப் பற்றி ஏதாவது கோக்கு மாக்காக கேள்வி கேட்பார் கந்தன். நானும் கோக்கு மாக்காக ஏதாவது பதிலளிப்பேன். இந்தமுறை அது இல்லாததால் ‘ப்ளாக்’ பற்றி கேட்டார். அவரும் முன்பொரு காலத்தில் ‘ப்ளாக்’ வைத்திருந்ததாகவும் அதனை பராமரிக்க நேரமில்லை என்றும் கொஞ்சமாக வருத்தப்பட்டுக் கொண்டார். 

இந்த இடத்தில் மருத்துவர் பற்றி கொஞ்சம் முன்னுரை வேண்டும். ஜிகர்தண்டாவில் சங்கிலிமுருகன் குருவம்மா என்றொரு கதை வைத்திருப்பார். அது அந்த காலத்தில் வெளிவந்திருந்தால் பெரிய ஹிட் ஆகியிருக்கும் என்பார். உண்மையிலேயே குருவம்மா என்றொரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது என்று கார்த்திக் சுப்பராஜிற்கு தெரிந்திருக்காது. 2002ல் லிவிங்க்ஸ்டன், தேவயாணி நடிப்பில் வெளிவந்தது. அத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த சொற்ப நபர்களில் அடியேனும் ஒருவன். பிளாட்பார வாசிகளுக்கு வீட்டின் தேவையைப் பற்றி உணர்த்த வந்த படம் அது. அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் மருத்துவர் கந்தன். (இன்னொருவர் தற்சமயம் ச.ம.க சார்பாக நாங்குநேரி ச.ம.உ.வாக பணியாற்றும் எர்ணாவூர் நாராயணன்). அது மட்டுமில்லாமல் அதற்கு முன்பே மருத்துவர் ‘நையாண்டி மேளம்’ என்கிற தமது கவிதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். 

பேச்சு ‘ப்ளாக்’ வரை சென்றுவிட்டதால் மருத்துவரிடம் நையாண்டி மேளம் ஒரு காப்பி கிடைக்குமா ? என்றேன். தற்சமயம் கைவசம் இல்லை. எடுத்து வைக்கிறேன், அடுத்த முறை வரும்போது வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். கிழிந்தது. அடுத்தமுறை நான் அவரிடம் செல்ல மாதங்கள் ஆகக்கூடும். சரி என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.

தற்செயலாக திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்க நூலகத்திற்கு சென்றபோது அங்கே நையாண்டி மேளம் கிடைத்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஒரு மருத்துவர் எழுதிய கவிதைகள் என்பதால் அதனை நியாயத்தராசில் எல்லாம் வைக்க மனம் ஒப்பவில்லை.

மருத்துவர் எழுதிய மருத்துவக் கவிதை ஒன்று :-

உள்ளங்கையில் வெறுமனே
விளையாடிக் கொண்டிருந்தது
இருபத்தைந்து காசு வில்லை

திடீரெனத் தாவிவிட்டது
குழந்தையின் வயிற்றுக்கு

பதைத்துப் போனாள் தாய்
மூக்குத்தியைத் தடவியபடி

‘விழுங்கிவிட்டான் மருத்துவன்
இருபத்தைந்து ரூபாய் !’

இன்னொன்று :-

கருவுற்றாள் மனைவி என்றதுமே
நினைவெல்லாம் அவள் உருவமேயாகி

காலையில் தாமதமாய் கண்விழித்து

நேரத்தே துயில் கொளும்வரை
கண்காணித்து

செலவைக் குறைத்து
சிக்கன உண்டியலில் சேர்த்து

வயிற்றில் வலியென்றதும்
தன் நெஞ்சில் வலி கொண்டு

ஆட்டோ பிடித்து
மருத்துவமனை சேர்த்து

மருந்துக்கலைந்து
மூட்டையாய் வாங்கிக்கொடுத்து

வெளியில் காத்திருந்து
வயிறு காய்ந்து

ஒரு வழியாக
ஒரு வழி யாக

குழந்தை பிறந்ததுமே
நிம்மதி மூச்சுவிட்டு\

மருத்துவமனை
நீங்கும் வேளை

கட்டணப் பணத்தை
பெட்டியோடு கொடுத்திட்டு

தாயையும் சேயையும்
வாடகைக் காரினில் சுமந்து

வீடு திரும்பினால்
வாசலிலே வரவேற்பு

பிரசவம் பெண்ணுக்கு
வேதனை பெண்ணுக்கு மட்டுமா !

மேலதிக தகவல்கள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment