Showing posts with label dreams. Show all posts
Showing posts with label dreams. Show all posts

7 March 2015

எனக்குள் ஒருவன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில வருடங்களுக்கு முன் இணையவெளியில் பரபரப்பாக பேசப்பட்ட படம் – லூஸியா (கன்னடம்). பொதுவாக இதுபோல ஊரே சிலாகித்து கொத்து பரோட்டா போட்டுவிடும் படங்களை பார்க்கும் ஆர்வம் மொத்தமாக வடிந்து விடுவதுண்டு. நான் இன்னமும் ‘திருஷ்யம்’ பார்க்கவில்லை. லூஸியாவை தமிழில் எடுக்கிறார்கள் என்பதில் எனக்கிருந்த ஒரேயொரு ஆர்வம் அதன் தமிழ் தலைப்பு. (கமலின் எனக்குள் ஒருவன் சிறுவயதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்களுள் ஒன்று). என்னதான் இருக்கிறது என்று லூஸியாவின் விக்கிபீடியா பக்கத்தை திறந்தேன். சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்று தொடங்கியது. அப்படியே மூடி வைத்துவிட்டேன். அதையே உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்வது உத்தமம்.

-- SPOILER ALERT –-

புராதன கால திரையரங்கு ஒன்றில் பணிபுரியும் கடைநிலை ஊழியன் விக்னேஷ் தூக்கமின்மையால் அவதிப்படுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் லூஸியா என்கிற போதை மாத்திரைகள் அவனுக்கு கிடைக்கிறது. அதனை உட்கொண்டால் நமக்கு விருப்பமான வாழ்க்கையை கனவுலகில் வாழலாம். அப்படி திரையரங்க ஊழியன் திரைப்பட கதாநாயகனாக கனவு காண்கிறான். போதும். கதை சொல்வதை நிறுத்திக்கொள்கிறேன்.

ஆரம்பத்தில் சில நிமிடங்கள் அவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இல்லை. குறிப்பாக, ஜான் விஜய் அரை கிறுக்கன் போல அறிமுகமாகும் காட்சியை பார்த்ததும் எனக்கு எரிச்சலாகிவிட்டது. லூஸியாவை தொட்டதும் தான் நிமிர்ந்து உட்கார முடிகிறது. அங்கிருந்து இரண்டு கிளைகளாக ஒரே சீராக நகரும் கதை இறுதியில் சில ஆச்சர்யங்களுடன் நிறைந்த உணர்வை கொடுக்கிறது.

சித்தார்த்துக்கு இரண்டு பறக்கோடி வேடங்கள். இரண்டிலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களுக்கும் இடையே காட்டும் வித்தியாசம் வியப்பூட்டுகிறது. அதில் சினிமா ஹீரோ வேடம் சித்தார்த்துக்கு ஹோம் கிரவுண்ட் மாதிரி. நிதானமாக அசத்தியிருக்கிறார்.

தீபா சன்னிதிவிற்கு ஒடுங்கிய கன்னங்கள். பார்ப்பதற்கு வெகு சுமாராகவே இருக்கிறார். மேகா படத்தின் கதாநாயகி ஸ்ருஷ்டி சில காட்சிகளில் வருகிறார். முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேனும், (ஆஃபீஸ் புகழ்) உதயபானு மகேஸ்வரனும் கச்சிதம்.

இசை சந்தோஷ் நாராயண்தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. பாடல்கள் அப்படியொன்றும் பிரபலமானதாக தெரியவில்லை. பிரபலமாகவே பாடலும் ஏண்டி இப்படி பாடலும் நன்றாக இருக்கின்றன. மற்றவை உறுத்தாமல் வந்து போகின்றன.

பவன் குமார்
எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் பிரதான அம்சம் அதன் கதை. எல்லாப் புகழும் பவன் குமாருக்கே. ஒரு கனவு எப்படி இருக்கும் என்பதை நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நிஜத்தில் எஜமானராக வருபவர் கனவில் அதற்கு நேர்மாறாக பணியாளராக வருகிறார் (அல்லது வைஸ் வெர்ஸா). ‘பேரடாக்ஸ்’ என்ற சித்தாந்தத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். உணர்வுப்பூர்வமான ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

குறைகள் என்று பார்த்தால் முதலில் வருவது அடிக்கடி டைம் பார்க்க வைக்கும் மெதுவான திரைக்கதை. ஆடுகளம் நரேனின் குடும்பக்கதை எல்லாம் தேவையில்லாதது போல தோன்றியது. கமர்ஷியல் மூவி பப்ஸுகளுக்கு கண்டிப்பாக பிடிக்காது. திரையரங்கம் விட்டு வெளியே வரும்போது நிறைய பேர் சலம்பிக்கொண்டே வெளியேறுவதையும், வற்புறுத்தி அழைத்து வந்த நண்பனை கடிந்துகொண்டதையும் பார்க்க முடிந்தது.

மற்றபடி, நல்ல சினிமாவை தேடுபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம். நம்மவர்கள் அடிக்கடி ‘ஹாலியுட் தரத்தில்’ என்பார்கள். அதாவது தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு. எனக்குள் ஒருவன் அதைவிட ஒரு படி மேலே போய் கதையம்சத்தில் ஹாலியுட் தரத்தில் வெளிவந்திருக்கிறது. தவறவிடாதீர்கள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 March 2015

ஃப்ராய்ட் தந்த முத்தம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதியம் பன்னிரண்டே முக்காலுக்கு சைதாப்பேட்டை நிலையத்தை தாண்டி விரைந்துகொண்டிருக்கும் கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயிலின் ஒரு பெண்கள் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். கண்களில் தூக்கம் தேங்கியிருக்கிறது. கைகளோ சிக்மண்ட் ஃப்ராய்டின் புத்தகமொன்றை தாங்கியிருக்கின்றன. முப்பத்தி ஐந்தாம் பக்கத்தின் வலது மூலையில் உள்ள வரிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...

எல்லா கண்ணியமானவர்களுக்கும் அசிங்கமான...

நிறைந்த வெள்ளிக்கிழமை. மஞ்சள் பூக்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து நிறைந்திருக்கும் சாலை. ஒருபுறம் அரூபமான பாறைகள். மறுபுறம் மரவேலி அமைக்கப்பட்ட அழகழகான தோட்டங்கள். அவற்றில் ஒன்றிலிருந்து பெண் புலியொன்று சிரித்தபடி எட்டிப்பார்க்கிறது. எனது குறி விறைக்கிறது. சுற்றிலும் வீடுகள் எதுவும் தென்படவில்லை. மனிதர்களும், எனக்கு முன்னால் நடந்து கொண்டிருப்பவளைத் தவிர. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட பாடலை பாடியபடி அவள் நடக்கிறாள். நான் தொடர்கிறேன். புட்டங்களில் முரசு கொட்டும் அவள் கூந்தலை கவனிக்கிறேன். கொஞ்ச தூரத்தில் இன்னொரு மனிதன் தென்படுகிறான். கருத்த தேகத்துடன் முக்கால் நிர்வாணமாக நின்றுக்கொண்டிருக்கிறான். எனக்கு முன்பாக நடந்துகொண்டிருப்பவளை பார்த்து ஈஈஈஈ’யென இளிக்கிறான். ஒருவேளை முன்புறமும் முரசு இருக்கிறதோ என்னவோ ? இருந்தாலும் இசை எழுப்ப கூந்தல் இல்லையே. அவன் தடிமனான ஒரு மரக்கிளையை ஜில்லெட் ரேஸர் வைத்து ஷேவ் செய்துகொண்டிருக்கிறான். அதிலிருந்து உதிரும் இலைகள் பச்சையில் இருந்து சிகப்புக்கு மாறுகின்றன. திடீரென முரசொலி கவன ஈர்ப்பு செய்கிறது. நடந்துகொண்டிருந்தவள், சட்டென திரும்பிப் பார்க்கிறாள். பரிட்சயமான முகமாக தெரிகிறது. அவளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. ஒரு படத்தில் நாயகனிடம் மன்னிப்பு கோருவதற்காக கைகளை பறவையின் இறக்கைகளைப் போல விரித்துக் காட்டுவாள். அது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. ஏதோ என்னிடம் ஏற்கனவே எதையோ பேசி தீர்மானித்து வைத்திருப்பது போல ஒரு பார்வையை உமிழ்ந்துவிட்டு மறுபடியும் நடக்கிறாள். பல மைல் தூரம் நடந்திருப்பாள். சலிக்கவில்லை. பத்து மைலுக்கு முன்னால் பார்த்த பார்வை மட்டும் கிடைத்திராவிட்டால் சலித்திருக்கக்கூடும். சாலையின் இடது புறத்தில் பல்வேறு மரங்களின் கிளைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து நீளமான கிளையொன்றை தேர்ந்தெடுக்கிறாள். இதழ்கள் பிரிகின்றன. அந்த மரக்கிளையை நேசிப்பதாக சொல்கிறாள். அது அவளுடைய தோட்டத்திற்கு தேவைப்படுகிறதாம். மரக்கிளையை தோட்டத்திற்கு கொண்டு வந்து போட முடியுமா ? என்கிறாள்.

ஜனத்திரளின் சத்தம் கேட்கிறது. கிண்டியின் நிலையத்தை கிழித்து நுழைந்துக்கொண்டிருக்கிறது ரயில். இன்னும் நிற்கவில்லை. வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஜனத்திரள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

... கனவுகள் வரத்தான் செய்கின்றன ...

அவளும் நானும் நகரத்தின் பிரபலமான ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியிலோ ஐந்தாவது மாடியிலோ நின்று கீழே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அன்றைய தினம் போகி என்பதால் மாலுக்கு நடுவே பிரம்மாண்டமாக அக்கினிக்குண்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. யுவன்களும் யுவதிகளும் ஆடைகளை களைந்து தீயில் வீசிவிட்டு நிர்வாணமாக திரும்பிச் செல்கிறனர். எனக்கு அருகில் நின்றுக்கொண்டிருப்பவளும் ஒரு யுவதிதான். அவள் பக்கமாக திரும்பி நேற்றைய ரயில் பயணத்தில் அவள் என் கனவில் வந்தது பற்றி கூறுகிறேன். என்ன கனவு என்கிறாள். சொல்கிறேன். ஒன்று விடாமல் சொல்லவில்லை. ‘முரசு’ சம்பவத்தை மட்டும் தந்திரமாக சென்ஸார் செய்துவிட்டு மற்றவைகளை சொல்கிறேன். உண்மையில் அந்த முரசு சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை. அவளுக்கு அவ்வளவு நீளமான கூந்தல் இல்லை. முழுக்கனவையும் கேட்டுவிட்டு சுவாரஸ்யமில்லாமல் சிரிக்கிறாள். ஒரு தற்செயலான பொருத்தம் என்ன தெரியுமா ? நான் தற்சமயம் சிக்மண்ட் ஃப்ராய்டை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அதனால் தான் இப்படியெல்லாம் கனவுகள் வருகிறதா ? என்று கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். பெண்களுக்கு கவலையுடன் இருப்பவர்களை பிடிக்கிறது. அப்போதுதானே சமாதானப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அருகில் வந்து என்னை கட்டிபிடித்து அரவணைக்கிறாள். நாவில் பட்ட எக்லேர்ஸ் சாக்லேட் போல உருக்குலைந்து கொண்டிருக்கிறேன். உருக்குலைந்த என்னை உருண்டையாக திரட்டி போகி நெருப்பில் வீசுகிறாள்.

... என்பது ஒரு அழகான உண்மை.

தொப்புள் தெரிய புடவை கட்டிய ஒருத்தி என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். க்ளக் க்ளக் க்ளக். யாரோ பரோட்டாவுக்கு மாவு பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா... இவ்வளவு பலமாகவா அடிப்பது ? அருமையான கனவொன்று கண்டு கொண்டிருக்கின்றேனே அய்யா என்று புலம்புகிறேன். யாரோ என் உச்சந்தலையில் கை வைத்து தம்பி தம்பி என்று அழைப்பது போல தெரிகிறது. அடேய், அரை மணிநேரம் கழித்து வா ஐம்பது பரோட்டா சாப்பிடுகிறேன். இப்போது போய் விடு !

“தம்பி... அக்காவுக்கு காசு கொடுப்பா...”

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment