Showing posts with label rai. Show all posts
Showing posts with label rai. Show all posts

10 March 2013

ஒன்பதுல குரு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அறுபதுகளில் பீச் பார்ட்டி என்கிற அமெரிக்க படம் வெளிவந்து வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அதே சாயலில் சில படங்கள் வெளிவந்தன. தமிழில் வெளிவந்த கோவா கிட்டத்தட்ட அந்த ரகம் என்று கொள்ளலாம். போலவே டீன் ஃப்லிம்ஸ் என்றொரு ஜான்ரா உள்ளது. பதின்பருவ வயதினரை குறி வைத்து எடுக்கப்படும் அத்தகைய படங்கள், முதல் காதல், காம உணர்ச்சிகள், பெற்றோருடன் கலாசார இடைவெளி போன்றவற்றை மையப்படுத்தி அமைந்திருக்கும். கவர்ச்சி தூக்கலாக இருக்கும். ஒன்பதுல குரு விளம்பரங்கள் அந்த படங்களை நினைவூட்டியது. லட்சுமி ராயின் இருப்பு, மந்த்ராவின் மீள்வருகை போன்ற தகவல்களாலும் திரையரங்கிற்கு உந்தப்பட்டேன்.


திரைப்படங்கள் மிக மோசமாக இருக்கும் பட்சத்தில் கதையே இல்லை என்று கிண்டலடிப்பது விமர்சன க்ளிஷே. ஆனால் உண்மையிலேயே ஒன்பதுல குருவில் கதையை மிகவும் சிரமப்பட்டு தேட வேண்டியிருக்கிறது. வாழ்க்கையை கொண்டாடும் சில பேச்சுலர்கள் திருமணத்திற்குப் பின் பேச்சு இல்லாதோராகி விடுகின்றனர். குடும்பத்தை விட்டு விலகி மீண்டும் பேச்சுலராக முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களே ROTS.

ஒன்பதுல குரு ஒரு நகைச்சுவை திரைப்படம் என்று சொல்வது தான் உச்சக்கட்ட நகைச்சுவையாக படுகிறது. நான்கைந்து நல்ல நகைச்சுவைகளை வைத்துக்கொண்டு, ஏராளமான சிரிப்பே வராத பாடாவதி காமெடிகளை சேர்த்து, கோர்வையாக இல்லாமல் பயங்கர மொக்கையாக இருக்கிறது.

பராசக்தியில் நடிகர் திலகம் அறிமுகமானபோது, “மீன்குஞ்சு மாதிரி வாய வாய தொறக்குறான்...” என்று கமெண்ட் அடித்தார்களாம். வினய்யும் அதேபோல அடிக்கடி வாயை திறக்கிறார் என்பதற்காக அவரை சிவாஜியாகவோ, வாயை கோணலாக வைத்துக்கொண்டு இழுத்து இழுத்து பேசுவதால் ரஜினியாகவோ, படத்தில் பில்லா என்ற பெயரை சூட்டிக்கொண்டதற்காக அஜித்தாகவோ கருதிவிட முடியாது. வினய்க்கு பொருந்தாத வேடம். குறிப்பாக பாடல்காட்சிகளில் அவருடைய வாயசைப்பு நாசம்.

சத்யன், ப்ரேம்ஜியின் நடிப்பு எரிச்சலும் இரைச்சலும் கலந்த கூட்டுக்கலவை. அரவிந்த் அகாஷும் உடன் இணைந்து சலம்பாதது ஆறுதலளிக்கிறது. ஒன்பது குருவின் பிரதான வேடங்களில் முதலில் நடிப்பதாக இருந்தவர்கள், நகுல், சிவா, சந்தானம், ப்ரேம்ஜி. ஒப்பீட்டளவில் நல்ல காம்பினேஷன். பவர் ஸ்டாரின் கோமாளித்தனங்களை எல்லாம் ஒருமுறை தான் ரசிக்க முடியும்.


லட்சுமி ராய் - மங்களகரமான பெயர். புத்தம் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் போல பளபளப்பாக இருக்கிறார். மைதா மாவை பிசைந்து செய்யப்பட்ட ஐந்தே முக்கால் அடி சிலை. மனோபாலாவின் மனைவியாக வருபவர் வல்லிய கேரளத்து பெண்குட்டி. சோனா, மந்த்ரா போன்ற டபுள் டக்கர் ஆண்ட்டிகள் வீணடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, லட்சுமி ராய், சாம்ஸ், பவர் ஸ்டார் போன்ற நல்ல ரிசோர்ஸஸ் வீணடிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர், வசனம் எழுதியவர் எல்லாம் பெரிதாக எதுவும் உழைக்கவில்லை. பழைய பாடல்கள், பழைய படங்களின் பிண்ணனி இசை, பிரபலமான வசனங்கள், இதையெல்லாம் கொஞ்சம் டிங்கரிங் செய்தோ செய்யாமலோ சொருகியிருக்கிறார்கள். முதலில் பழைய பாடல்களை பயன்படுத்துவதற்கு தடை கொண்டுவர வேண்டும். ஆல்ரைட், சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் ஆரம்பித்த போது ரசிக்க வைத்தது. ஆனால் அதையே தொடர்ந்து செய்தால் ? ஒரு ரம்மியமான இரவுப்பொழுதில் வா வா அன்பே அன்பே பாடலையோ கடலோர கவிதைகள் பாடலையோ கேட்கும்போது உங்களுக்கு சோனாவும் ப்ரேம்ஜியும் நினைவுக்கு வந்தால் எப்படி இருக்கும் ? மாட்டு சாணம்.

திருமணம் செய்துகொள்பவர்கள் ஒன்பதுல குரு, எட்டுல சனி, மூணுல ராகு என்று ராசி, ஜாதகமெல்லாம் பார்த்து திருமணம் செய்வதை விட, தமக்கு மனதளவில் பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஒன்பதுல குருவின் மையக்கருத்தாக நாமே வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். படக்குழுவினரை பொறுத்தவரையில் மந்த்ரா, சோனா, லட்சுமி ராய், அப்புறம் நிறைய துணை நடிகைகளை பெங்களூருக்கு அழைத்துச் சென்று நன்றாக கூத்தடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நீங்கள்லாம் நல்லா வருவீங்க !

ஒன்பதுல குரு - தேவி திரையரங்கில் பத்து ரூபாய் டிக்கெட் எடுக்கும் சாமர்த்தியம் இருப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment