12 June 2016

பெங்களூரு தினங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு. புது ஊர், புது மாநிலம், புது வேலை, புது மனிதர்கள். ஒரு பக்கம் பதட்டமாகவும், மறுபக்கம் உற்சாகமாகவும் இருக்கிறது. என்னதான் நடந்துவிடும். வாழ்ந்துதான் பார்த்துவிடுவோமே என்கிற நம்பிக்கையில் தான் பெங்களூருக்கு சென்றிருக்கிறேன்.

பெங்களூரில் நான் தங்கப்போகிற இடத்தின் பெயர் மடிவாளா என்று முகவரி கொடுத்திருந்தார்கள். லேண்ட்மார்க் சந்தியா டிஜிட்டல் தியேட்டர் அருகில். முதலில் ஏனோ எனக்கு இது சினிமா தியேட்டர் என்பது ஸ்ட்ரைக் ஆகவில்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரியாத டாக்ஸி டிரைவரிடம் ஜிப்ரிஷில் வழி சொல்லி சந்தியா தியேட்டர் வாசலில் வந்து இறங்கினேன். நிமிர்ந்து பார்த்தால் சினிமா தியேட்டர் :) அதுவும் காஜல் அகர்வால் படம் (பிரம்மோத்சவம்). ஆனால் இதனை நினைத்து நினைத்து அகமகிழும் மனநிலை அப்போது இல்லை. 

இளைப்பாறிவிட்டு அருகிலிருக்கும் நண்பன் வீட்டைத் தேடியபடி பெங்களூரு தெருக்களில் ஒரு சுற்று வந்தேன். எங்கு பார்த்தாலும் PG for Gents, PG for ladies என்று போர்டுகள் தொங்குகின்றன. முதலில் எனக்கு PGயின் விரிவாக்கம் என்னவென்று தெரியவில்லை. நண்பனிடம் கேட்டு Paying Guest என்று தெரிந்துக்கொண்டேன். ‘மெய்ன் ஹூன் நா’ படத்தில் ஷாருக் தனது கல்லூரி நண்பர் / தம்பி வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குவார். அதாவது பெயருக்கேற்ப அந்த வீட்டில் நம்மை ஒரு விருந்தினர் போல கவனித்துக் கொள்வார்கள். ஆனால் தின்பதற்கும் தூங்குவதற்கும் மட்டும் பணம் கொடுத்துவிட வேண்டும். இது சினிமா :) மெய்ன் ஹூன் நா PGக்கும் பெங்களூரு நிஜ PGகளுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. இது கிட்டத்தட்ட ஒரு ஹாஸ்டல் செட்டப். கொஞ்சம் சுதந்திரமான ஹாஸ்டல். 

PG போர்டுகளுக்கு அடுத்த படியாக அதிகம் தொங்குவது அகலக்கற்றை சேவை விளம்பரங்கள். இதில் பெங்களூருவாசிகளுக்கு நிறைய சாய்ஸ் உள்ளன. இவை தவிர்த்து, ஹேர் லாஸ், வெயிட் லாஸ், யோகா கிளாஸ், பேக்கர்ஸ் & மூவர்ஸ் போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஆசாமிகளுக்கான சேவைகள் குறித்த விளம்பரங்கள். இந்த விளம்பரத்தட்டிகள் நமக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன.

ஒன்று, இது வந்தேறிகளின் நகரம். இரண்டாவது, இந்த வந்தேறிகள் பெரும்பாலும் ஐ.டி துறையினர். சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக சில சமயங்களில் யோசிப்பதுண்டு. பெங்களூரை பார்க்கும்போது அப்படி யோசிப்பதே மகாபாவம் என்று தோன்றுகிறது. இங்கே அலுவலகத்தில் கன்னடர்களை தேட வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

நண்பன் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் கூகுள் மேப்ஸ் திணறியது. தொலைக்காட்சி நாடகமொன்றில் எஸ்.எஸ்.சந்திரனும், கோவை சரளாவும் கே.கே.நகரை தேடியலைவார்கள். கடைசியில் தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் பொங்கலுக்கு செல்வார்கள். நான் முதன்முதலில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் இப்படிப்பட்ட அவஸ்தையை அனுபவித்திருக்கிறேன். அண்ணா நகர் நிறுவன முகவரியை கையில் வைத்துக்கொண்டு ஏறத்தாழ மொத்த ஏரியாவையும் சுற்றிவிட்டேன். யாரைக் கேட்டாலும் ‘எந்த ப்ளாக் ?’ என்று கேட்கிறார்கள். எனக்கென்ன தெரியும். என்னிடமுள்ள முகவரியில் ப்ளாக் எதுவும் குறிப்பிடவில்லை. கிட்டத்தட்ட மதியம் வரை தேடியபின் முகவரியில் டோர் நம்பர் S51 என்று இருப்பதை கவனித்து, எஸ் ப்ளாக்கை தேடி கண்டடைந்தேன். அதன்பிறகு வாழ்க்கையில் நான் அண்ணா நகருக்கே செல்வதில்லை என்று சபதம் ஏற்றுக்கொண்டேன். டிவியில் அண்ணா நகர் முதல் தெரு போட்டால் கூட பார்க்கமாட்டேன். பெங்களூரை பொறுத்தவரையில் எல்லா ஏரியாவும் அண்ணா நகர் தான். 4th க்ராஸ், 2nd மெயின் என்று தாலியருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மேப்பில் பார்க்கும்போது தெருக்கள் எல்லாம் ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல நேர்த்தியாக இருக்கின்றன.

பெங்களூரில் முதல் தினம், நண்பரின் தயவால் அவருடைய இல்லத்தில் தரமான அசைவ உணவுடன் சிறப்பாக கழிந்தது. பொழுது சாய்ந்ததும் எனக்கான கூட்டுக்கு திரும்பினேன். இரவு உணவில் சிக்கன் குழம்பு பரிமாறப்பட்டது. அந்த சிக்கன் குழம்பை அதிலிருந்த கோழி உயிரோடிருந்து பார்த்திருந்தால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும். அடேயப்பா, நான் எப்பர்ப்பட்ட பரம்பரையிலிருந்து வந்தவன் தெரியுமா ? நானெல்லாம் வாரத்தில் எட்டு நாட்கள் (முட்டையை கணக்கிடாமல்) அசைவம் சாப்பிடுபவன் அய்யா. வேறு வழியில்லாமல், அந்த சிக்கன் மசாலா தண்ணீரை சோற்றில் குழைத்து முதல் வாய் வைக்கும்போது என் மாமியார் சமைக்கும் அற்புதமான இறால் பிரியாணியை நினைத்துக்கொண்டேன்.

இந்த துக்கங்களுக்கு மத்தியில் தனிமையும் தன் வேலையைக் காட்டத் துவங்கியது. தனிமை இனிமையானது, அது நாம் தேர்ந்தெடுத்ததாக இருக்கும்போது மட்டும். என் வாழ்வில் பல உன்னதமான தருணங்களை தனிமை எனக்கு கொடுத்திருக்கிறது. (சுய இன்பத்தை பற்றி சொல்லவில்லை). அதே தனிமைதான், இப்போது என்னை வதைக்கிறது. இயல்பில், நான் ஹோம்சிக்கெல்லாம் கிடையாது. நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறேன். ஆனால் இப்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. இந்த காதல், கல்யாணம், மனைவி, குழந்தை போன்ற லெளகீக விஷயங்கள் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்று பாருங்கள். குறிப்பாக நிலாவைப் பற்றி நினைக்கும்போது கண்ணீர் துளிர்த்துவிடும் போல இருந்தது. நிற்க. இத்தனைக்கும் என் பெங்களூர் வாசம் நிரந்தரமில்லை. பெங்களூருக்கும் சென்னைக்கும் ஆறுமணிநேர பயணம். எல்லா வாரயிறுதிகளிலும் சென்னைக்கு வந்துவிடப் போகிறேன். இப்படியெல்லாம் தீர்க்கமான மனநிலையில் இருக்கும் எனக்கே இப்படி இருக்கிறதென்றால் எங்கேயோ அமீரகத்திலோ, மலேசியா, சிங்கப்பூரிலோ எப்போது விடுமுறை கிடைக்கும் எப்போது இந்தியாவுக்கு திரும்புவோம் என்பதே தெரியாமல் மெளனமாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு எப்படி இருக்கும் ? மனதை திடப்படுத்திக்கொண்டு பெங்களூர் தினங்களின் அடுத்த பகுதியை எழுத ஆரம்பிக்கும் முன் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகள் அனைவரையும் மானசீகமாக நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 April 2016

இவன் வேற மாதிரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜ் டிவியில் ‘லாரி டிரைவர் ராஜாகண்ணு’ படத்தை ஒளிபரப்பினால் கூட சேனல் மாற்றாமல் பார்க்கும் சிவாஜி ரசிகர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சிவாஜி ஆதர்ஸம் என்பதற்காக பிரபு நடித்த படம், ராம் குமார் கெளரவத் தோற்றத்தில் நடித்த படம், துஷ்யந்த் நடித்த படம், மச்சி, சிங்கக்குட்டி, சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த படம் என்று ஒன்றையும் விடாமல் பார்க்கும் மனிதரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? நான் அப்படி ஒரு நபரை அடிக்கடி பார்ப்பது மட்டுமில்லாமல் அவருக்கு (மூத்த) மருமகனாகவும் இருக்கிறேன். அப்படிப்பட்ட பொறுப்பில் இருந்துகொண்டு நான் இதுவரையில் ஒரு விக்ரம் பிரபு படத்தைக் கூட திரையரங்கில் பார்த்ததில்லை என்றால் நம்ப முடிகிறதா ?

இன்னொரு விஷயம். ஒவ்வொரு முறை விக்ரம் பிரபு படம் வெளியாகும்போதும் நான் ஒரு ‘மூவி பப்ஸ்’ என்ற முறையில் ‘படம் எப்படி இருக்காம் மாப்ள ?’ என்பார் என் மாமா. அந்த சமயத்தில் நம்மை ஒரு ஜில்மோர் சிவாவாக (கறாரான விமர்சகர்) நினைத்துக்கொண்டு, ‘குப்பையாம் மாமா’ என்றோ, ‘அஞ்சுக்கு 0.75 தானாம் மாமா’ என்றெல்லாம் உண்மையை விளம்பி விடக்கூடாது. என் மாமனார் அந்த காலத்திலேயே ஞாயிறு தவறாமல் சன் டிவியில் மீண்டும் மீண்டும் சிரிப்பு பார்ப்பவர். இப்பொழுதும் கூட ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ பார்க்கிறார். இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆரூர் மூனா பாணியில் (அதாவது ஒரு சி செண்டர் ரசிகனாக) ‘சுமாரா இருக்காம் மாமா’, ‘ஒருமுறை பார்க்கலாமாம்’ என்று சொல்லி வைப்பது உசிதம்.

தற்போது என் ஹார்ட் டிஸ்கில் இடப் பற்றாக்குறை. பேக் லாக்ஸை கிளியர் செய்யும் பொருட்டு எப்போதோ டவுன்லோட் செய்து வைத்த படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் விக்ரம் பிரபுவின் ஐந்து படங்களை (கும்கி தவிர்த்து) அடுத்தடுத்து பார்த்து முடித்திருக்கிறேன். முறையே, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம்.

இவற்றில் முதல் மூன்று படங்கள் ஏறத்தாழ ஒரே பாணி. மூன்று படங்களும் உண்மைச் சம்பவங்களை வைத்து புனையப்பட்டுள்ளன. ஒன்றில் சட்டக்கல்லூரி கலவரங்கள். ஒன்றில் சுனந்தா கொலை வழக்கு, ஒன்றில் ஏ.டி.எம் கொள்ளைகள். மூன்றிலும் சாதாரண மனிதனாக இருக்கும் விக்ரம் பிரபு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். மூன்று படங்களிலும் ஹீரோயின் கடத்தப்படுகிறார். ஹீரோ மீட்கிறார். இந்த மூன்று படங்களின் தலைப்பையும் ஒன்றிற்கு மற்றொன்றுடையது என்று மாற்றி வைத்தால் கூட எந்த பாதகமும் ஆகிவிடாது. பிரதான பொருத்தம்: மூன்று படங்களும் ஆவரேஜ் / அபவ் ஆவரேஜ் கட்டத்திற்குள் பொருந்துவது. மூன்று படங்களையும் வித்தியாசப்படுத்தி நினைவில் வைத்துக்கொள்ள சுலபமான வழி ஹீரோயின்கள்.

இப்படி படங்கள் எல்லாம் ஒரே மாதிரி. ஆனால் தலைப்பு மட்டும் இவன் வேற மாதிரி. வழக்கமாக க்ளைமாக்ஸ் ஷூட் செய்யப்படும் பாதி கட்டிய பில்டிங்கில் படத்தின் பாதி கதை நகர்கிறது. ஒப்பீட்டளவில் சுவாரஸ்யமான படம்தான். ‘வாவ்’ ஃபேக்டர் என்று எதுவும் இல்லாததால் சராசரி படமாகிவிடுகிறது.

அரிமா நம்பி உற்சாகமாக பார்க்கத் துவங்கியதற்கு காரணம் ப்ரியா ஆனந்த். நம் விருப்பத்திற்கேற்ப ப்ரியா ஆனந்துக்கு ரகளையான துவக்கக்காட்சிகள். ஆனால் அதன்பிறகு கதை வேறொரு தளத்தில் பாக்கெட் நாவல் வேகத்தில் செல்கிறது. இப்பொழுதெல்லாம் சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதை அனுகூலமாக எடுத்துக்கொண்டு இஷ்டத்துக்கு எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர்.

சிகரம் தொடு. போலீஸ் ஸ்டோரி. நல்ல வேளையாக ஒரேயடியாக எம்பி குதிக்காமல் அடக்கியே வாசித்திருக்கிறார். இயக்குநர் கெளரவ்வே வில்லனாகவும் நடித்திருக்கிறார். (சமீபத்தில் வெளிவந்த ஆறாது சினம் படத்தின் வில்லன்). படத்தின் எடிட்டருக்கோ, இயக்குநருக்கோ மேட்ச் கட் என்றால் விருப்பம் போல. நாம் நவீன சினிமா யுகத்திற்கு வந்தாயிற்று என்று யாராவது இயக்குநரை தட்டி எழுப்பி சொல்ல வேண்டும்.

வெள்ளைக்கார துரை. இந்த படத்தை பார்த்தபிறகு தான் விக்ரம் பிரபுவின் மற்ற படங்கள் பரவாயில்லை என்ற முடிவுக்கு நான் வர நேர்ந்தது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனையும் அரை கிறுக்கு. என்னடா இது என்றே முழு படத்தையும் பார்த்து முடித்தேன். இறுதிக்காட்சியில் வெடிகுண்டு கொண்ட ஒரு அறையில் சூரி தனித்து விடப்படுகிறார். என்ன எழவாயிருக்கும் என்று நாம் யோசித்துக்கொண்டிருக்கும்போது கூரையை பிய்த்துக்கொண்டு ஒரு ராக்கெட் சூரியையும் சேர்த்துக்கொண்டு பறக்கிறது. அதைப் பார்த்த பிறகுதான் அடடா இத்தனை நேரம் நாம் பார்த்தது ஒரு டார்க் காமெடி படம் என்பதே புரிகிறது. நல்ல ட்விஸ்ட்.

இது என்ன மாயம். அருமையான படம், ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால். இதைப் பார்த்ததும் ஏனோ எனக்கு பிரசாந்த், முரளி, அப்பாஸ் எல்லாம் ஹீரோவாக நடித்த காலகட்டம் மலரும் நினைவுகளாக வந்து போனது. ஒரேயொரு ஆறுதல். கீர்த்தி சுரேஷ். ஹவ் க்யூட் !

படங்கள் காமோ சோமோ என்று இருந்தாலும் ஆறு படங்கள் வரை தம் கட்டிவிட்டார் மனிதர். கைவசம் வேறு இரண்டு படங்கள் உள்ளன. கூடிய விரைவில் விக்ரம் பிரபு படமொன்றை திரையரங்கில் பார்க்கும் ஆர்வம் எனக்கு வாய்க்க வேண்டும். பார்த்துவிட்டு வந்து ‘படம் பட்டைய கெளப்புது மாமா’ என்று சொல்ல வேண்டும் என்றுதான் ஆவலாக காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment