25 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 25112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இணையவெளியில் மாஸ் ஹீரோ படங்கள் தவிர்த்து இதுபோல பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவருவதை முதன்முறையாக பார்க்கிறேன். இரண்டாம் உலகம் பற்றி தான் சொல்கிறேன். விமர்சனம் என்று எடுத்துக்கொண்டால், அதாவது சினிமா விமர்சனம் மட்டுமல்ல அரசியல் அல்லது whatever, ஒரு விமர்சனம் என்பது அனைவரையும் திருப்தி படுத்திவிட முடியாது. அது டைம்ஸ் ஆப் இந்தியாவாக இருந்தாலும் சரி, டைம்பாஸுக்காக எழுதும் வலைப்பதிவர்களாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிற்கும் அதே விதிதான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங். ஆயிரத்தில் ஒருவன் பிடித்தவருக்கு இரண்டாம் உலகம் பிடிக்காமல் போகலாம் அல்லது வைஸ் வெர்ஸா. சிலருக்கு இரண்டுமே பிடிக்காமல் போகலாம். ஆனால் இணையவெளியில் பொதுவாகவே நிறைய பேர் (என்னையும் சேர்த்து என்று வைத்துக் கொள்ளலாம்) தங்களுடைய விமர்சனத்தை justify செய்வதற்கு எடுக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமானவை. படம் பிடித்தவர்கள் படத்தை விமர்சிப்பதை விட்டுவிட்டு படம் பிடிக்காதவர்களை விமர்சிக்க துவங்கிவிடுகிறார்கள். மறுபடியும் வைஸ் வெர்ஸா. இன்னென்ன திரைப்படங்களை இன்னென்ன வகை ஆட்களுக்கு மட்டுமே பார்க்கத் தகுதியிருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். சில சமயங்களில் அதுவே ரொம்ப சீரியஸாகிப் போய் அந்த படத்தை நல்லாயிருக்கு’ன்னு சொல்பவர்களெல்லாம் மனப்பிறழ்வு ஏற்பட்டவர்கள் என்று சொல்லுமளவிற்கு போய்விட்டது. இதுபோன்ற அக்கப்போர்களை பார்த்துதான் சில மாதங்களுக்கு முன்பே ஒரு தத்ஸ் சொல்லி வைத்தேன் – விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் துவங்குகின்றன.

BTW, இரண்டாம் உலகம் பார்த்து முடித்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. நாம ஏன் கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையணும். எதுக்காக ஹாலியுட்டு படங்களை பார்த்து அங்கெங்கு என தாக்கம், தழுவல் என்று சொல்லி கதை செய்ய வேண்டும். பேசாமல் வாத்தியாரின் நாவல்களில் ஒன்றை ரைட்ஸ் வாங்கி செய்யலாம் இல்லையா...? ஹவ் அபெளட் சொர்க்கத்தீவு...? செல்வராகவன் போன்ற திறமைசாலிகள் கை வைத்தால் அபாரமாக இருக்கும். என்ன ஒன்று, பணம் செலவாகும், தொழில்நுட்பம் தேவைப்படும். அதெல்லாம் ஏற்கனவே தமிழ் சினிமாக்காரர்களிடம் இருக்கிறதே...?


கிழக்கு அதிரடி சேலில் எப்போதோ வாங்கிய சில புத்தகங்களை படிக்க நேரம் கிடைத்தது. முதலில், தத்தக்கா புத்தக்கா. எழுதியவர் ஜே.எஸ்.ராகவன். பாக்கியம் ராமசாமி ஸ்டைல் (பதிவுலகில் சேட்டை...!) நகைச்சுவை கதைகள் / சம்பவங்களின் தொகுப்பு. பாக்.ரா அளவுக்கு சுவாரஸ்யமில்லை. மனிதர் ஆட்டோக்களை பற்றியும் அதன் ஓட்டுனர்களை பற்றியும் நிறைய ஆராய்ந்திருப்பார் போல. மொத்தம் முப்பது கதைகள். அவற்றில் பத்து ஆட்டோ சம்பந்தப்பட்டது. குறிப்பாக ஆட்டோக்காரருக்கும் பயணிக்கும் இடையே நடைபெறும் லொள்ளுத்தனமான உரையாடல்கள். இரண்டாவது, சோம. வள்ளியப்பன் எழுதிய திருமண கைடு. திருமண மேலாண்மை (!) புத்தகம். பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் என்பதால் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். கடைசியாக, டாக்டர். ஷாலினியின் பெண்கள் மனசு. உளவியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை உதாரணங்களோடு சொல்லி, அவற்றிற்கான காரணம், தீர்வுகள் பற்றி எழுதியிருக்கிறார். பெண்கள் மனசு என்பது எனக்கு கொஞ்சம் அவுட் ஆப் ஃபோகஸ் டாபிக் என்றாலும் உளவியல் சம்பந்தப்பட்டது என்பதால் முழுமையாக வாசிக்க முடிந்தது. நல்லவேளையாக இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் முழுத்தொகை கொடுத்து வாங்காமல் சல்லிசு காசில் வாங்கினேன்.

நேற்று டிவியில் எதிர்நீச்சல் பார்த்தேன். விஜய் டிவியில் வாரம் இரண்டு முறை ஒளிபரப்புவார்கள் போலிருக்கிறது. சமகால காமெடி படங்களைப் போலவே தொடங்கி அப்படியே சீரியஸான விஷயங்களை லேசாக உரசி முடித்திருக்கிறார்கள். தடகள வீராங்கனை சாந்தி விவகாரத்தில் கொஞ்சம் கற்பனையை கலந்து சேர்த்திருக்கிறார்கள். இதையெல்லாம் வரவேற்கலாமா என்று குழப்பமாக இருக்கிறது. சினிமாக்காரர்கள் சில கருத்துகளை கோடிகளில் செலவிட்டு செய்யும்போது அதில் ஒரு பத்து சதவிகிதத்தையாவது அதற்கான களப்பணிக்காக பயன்படுத்தலாம். அப்படி செய்திருந்தால் செங்கல் சூளையில் பணிபுரியும் சாந்திக்கு உதவியாக இருந்திருக்கும். சாந்தி அரசு உதவியில் தடகள பயிற்சியாளராக இருப்பதாக கடைசியாக ஏதோவொரு பேட்டியில் படித்த ஞாபகம். உறுதியாக தெரியவில்லை. எதிர்நீச்சலின் க்ளைமேக்ஸ் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் தொடர்பான தமிழ் படங்களில் க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும். சக போட்டியாளர் நாயகனை தோற்கடிக்க சதி வேலைகள் செய்வார். ப்ளேட் வைத்து கீறுவது, காலை வாரிவிடுவது, அவருடைய உணவுப்பொருளில் எதையாவது கலப்பது என்று ஏதாவது. மேலோட்டமாக பார்த்தால் சினிமா சுவாரஸ்யத்திற்காக என்றாலும் இதுபோன்ற காட்சிகள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. சக போட்டியாளரை காலை வாரிவிட்டு ஜெயிக்க வேண்டுமென்று நினைப்பவன் இரண்டாவது இடத்தை கூட பெற முடியாது. இறுதியாக, படம் பெயரில் என்ன இருக்கிறது எல்லாம் வாழ்ந்து காட்டுவதில் தான் என்பது போன்ற மாரலோடு நிறைவடைகிறது. ஆனால் படத்தின் முற்பகுதியில் சில காட்சிகளில் பெயரை வைத்துதான் நகைச்சுவை செய்கிறார்கள் என்பது நகைமுரண்.

பேசாம போறியா ? வாயில கத்திய விட்டு சுத்தவா ?
என்னுடைய திருமணத்திற்கு என்னைப் பெற்றவரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் சில பேனர்கள் வைக்கப்பட்டன. இதுவும் ஒருவகையில் சுயமரியாதை மீறல்தான். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துவிட்டாயிற்று. வேறு வழியில்லை. ஏதோ நடந்து முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...? பொதுபுத்திக்காரர்கள் மத்தியில் அப்படி இருக்க முடியவில்லை. நம் பின்னணி தெரியாத சில நண்பர்களை திருமணத்திற்கு அழைத்து அவர்கள் எப்போதாவது விளையாட்டாக பேசும்போதெல்லாம் உனக்கென்னப்பா உங்கப்பா கட்சியிலெல்லாம் இருக்கிறார். பணத்துக்கு பஞ்சமிருக்காது என்று விளையாட்டாகத்தான் என்றாலும் சீண்டுகிறார்கள். ஒரு வகையில் உண்மை நிலை என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சீண்டிப்பார்ப்பதில் ஒரு சுகம். அல்லது ஒருத்தர் ஒரு கட்சியில், ஏதாவதொரு லெட்டர் பேடு கட்சியில் இருந்தால் கூட அவர் பல சைபர் போட்ட கோடிகளில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பார் என்று நினைக்கிறார்களா என்று புரியவில்லை. அவ்வளவு மக்குகளா...? தமிழக கட்சிகளில் பதவி, அந்தஸ்து கிடைத்து பணம் சம்பாதிப்பவர்களை விட நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல், இன்னும் சொல்வதென்றால் தன்னுடைய கைக்காசை போட்டு போஸ்டர் ஓட்டும் கடைநிலை தொண்டர்கள் தான் அதிகம். என்னைப் பெற்றவரும் அப்படிப்பட்ட ஒருவர்தான். இதுபோலவே, பொதுபுத்திக்காரர்களில் இன்னொரு கோஷ்டி இருக்கிறது. ஆனால் இப்போது வேண்டாம். ஓவர் புலம்பல் ஒடம்புக்கு ஆகாது...!

வ.வா.ச படத்தில் பாக்காத பாக்காத அய்யயோ பாக்காத என்றொரு பாடல். வரிகள் தான் அப்படியே தவிர பாடல் முழுவதும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். பாடலின் இறுதியில் ஸ்ரீதிவ்யா படியேறி முதல் மாடியிலிருக்கும் தன் வீட்டு வாசலில் நிற்கிறார். சிவகார்த்தி கீழிருந்து அவரை வரச்சொல்லி சைகை காட்டுகிறார். அப்போது திவ்யா பதிலுக்கு வரமுடியாது என்று ஒரு சைகை காட்டுகிறார் பாருங்கள். சொத்தை எழுதிவைத்துவிட்டு சந்நியாசியாக போய்விடலாம். நீங்கள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 comments:

தனிமரம் said...

பலவிடயம் பேசினாலும் நம் நாவல்கள் படமானால் பல நாவல் இன்னும் உயிர் வாழும் ஆங்கிலத்தழுவல் இல்லாமல்!

Ponmahes said...

// பாக்கியம் ராமசாமி ஸ்டைல் (பதிவுலகில் சேட்டை...!) நகைச்சுவை கதைகள் / சம்பவங்களின் தொகுப்பு. பாக்.ரா அளவுக்கு


பாக்.ரா வா ..இல்ல பார்க்கிறவா????


பதிவு அருமை...வாழ்த்துக்கள்....



//தமிழக கட்சிகளில் பதிவு,


பதிவா இல்ல பதவியா????

scenecreator said...

ஆமாம் பிரபா சென்ற வாரம் படித்த 2 பதிவுகள் அப்படிதான் இருந்தன.மற்றொருவர் இரண்டாம் உலகம் பிடிகாதவர்கள் மன பிழ்ர்வு கொண்டவர்கள் என்று எழுடீருந்தார்.இதெல்லாம் எங்க போய் முடியுமோ? ஓரிருவருக்கு பிடிக்காமல் அநேகம் பேருக்கு பிடித்திருந்தால் ஓகே.ஆனால் அநேகம் பேர் தூக்கி எரியும் படத்தை ஒருவர் கொண்டாடினால் யாருக்கு மன பிழற்வு ?

r.v.saravanan said...

விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் துவங்குகின்றன.

சரி தான் பிரபா

சுஜாதாவின் பல நாவல்களை படிக்கும்
போது இதெல்லாம் சினிமா வானால் எப்படி இருக்கும் என்று ஆசை பட்டிருக்கிறேன் சரியானவர் கையில் சிக்க வேண்டும்

பார்க்காதே பாடல் பார்க்க பார்க்க பிடிக்குது

வவ்வால் said...

பிரபா,

//வாத்தியாரின் நாவல்களில் ஒன்றை ரைட்ஸ் வாங்கி செய்யலாம் இல்லையா...? ஹவ் அபெளட் சொர்க்கத்தீவு...? செல்வராகவன் போன்ற திறமைசாலிகள் கை வைத்தால் அபாரமாக இருக்கும். என்ன ஒன்று, பணம் செலவாகும், தொழில்நுட்பம் தேவைப்படும். அதெல்லாம் ஏற்கனவே தமிழ் சினிமாக்காரர்களிடம் இருக்கிறதே...?//

இப்படி நினைச்சிட்டு இருப்பதும் பொதுப்புத்தியே அவ்வ்!

சுஜாதாக் கதைகள் பலவும் படமாக்கப்பட்டப்போது தோல்வியே அடைந்துள்ளன, எனவே அவரோட கதைகள் "சினிமாவுக்கு" ஏற்றதல்லனு ஓரங்க்கட்டப்பட்டு, பின்னர் வசனக்கர்த்தாவக்த்தான் திரையுலகில் பேர் வாங்கினார் "என்பதை" பொதுப்புத்தி சுஜாதா ரசிகர்கள் உணர்வதேயில்லை அவ்வ்!

# //இதுபோன்ற அக்கப்போர்களை பார்த்துதான் சில மாதங்களுக்கு முன்பே ஒரு தத்ஸ் சொல்லி வைத்தேன் – விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் துவங்குகின்றன.//

உண்மையில் வலைப்பதிவில் எழுதுபவர்கள் யாருக்கும் விமர்சனமே எழுத தெரிவதில்லை என்பதே நிதர்சனம் :-))

விமர்சனம் எழுதுபவர்களை விமர்சிப்பது பிரச்சினைகளை துவக்குகிறது என்றால், விமர்சனம் எழுதுபவர்கள் பெரும்பாலும் " பார்வையாளனின்" ரசனையை தானே விமர்சனம் செய்கிறான்.

பெரும்பாலான வலைவிமர்சனங்களில் இப்படியான கூற்றினை காணலாம்,

"இது போன்ற உலகப்படத்தினை தமிழாட்டில் புரிந்துக்கொள்ள மாட்டார்கள், இப்படியா நல்லப்படத்தினை மக்கள் பார்த்து ஆதரிக்கனும்,இல்லைனா எப்படி நல்ல படம் வரும்? என்ற ரீதியில் விமர்சனங்கள் போகும் அவ்வ்!

விமர்சனம் என்றப்பெயரில் அவர்கள் செய்வது "புரோமோ வேலை" :-))

வலைவிமர்சகர்கள் பெரும்பாலும் "ஏதேனும் ஒரு ரசிக மனப்பான்மையில்" குதிக்கிட்டு எழுதுறாங்க, அப்புறம் எங்கே இருந்து விமர்சனமா வரும் அவ்வ்.

மேலும் படத்தோட " நிறை குறைகளை சொல்லாமல்" பார்க்கிறவனோட ரசனை என்னனு எடைப்போட்டுக்கிட்டு இருந்தால் பதிலுக்கு அவனும் விமர்சனம் எழுதினவனோட ரசனை எடை போடத்தான் செய்வான், இது ஒன்றும் அச்சு ஊடகம் இல்லையே ,எழுதிட்டு மறைஞ்சிக்க ,எனவே எதிர் வினை வரத்தான் செய்யும்.

அச்சு ஊடக விமர்சனங்கள் எல்லாமே படத்தை தான் விமர்சனம் செய்யும் , பார்க்கலைனா ரசனை இல்லைனு மக்களுக்கு முத்திரைக்குத்த முயலாது.

எனவே விமர்சனம் எப்படி எழுதுவதுனு தெரிஞ்சுக்கிட்டு எழுத முயலலாம், இல்லைனா சமூக ஊடகங்களீல் எதிர்வினை வந்தால் அமைதிக்காத்துவீட்டு போவதே நன்று.

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

சுஜாதா கதைகள் சினிமாவிற்கு ஏற்றதல்ல என்று சொல்வதைவிட சுஜாதா கதைகளை சினிமாவாக்க சினிமாவில் ஏற்றவர்கள் இல்லை என்று சொல்வது தான் சரியாக இருக்கும்...

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

விமர்சனம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ஒரே குழப்பமாக இருக்கிறது... எந்தப்பக்கம் ஸ்டாண்ட் எடுக்கிறீர்கள் என்று புரியவில்லை...

என்னளவில், விமர்சனங்களை மூன்று விதங்களாக பிரிக்கிறேன்...

1. கழுகுப்பார்வை பார்த்து படத்தை விமர்சிப்பவர்கள். ஆனந்த விகடன் போன்ற பொதுஜன பத்திரிகைகள். பதிவுலகில் மோகன் குமார் போன்றவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். ஆரூர் மூனா, சிபி போன்றவர்கள் இது சி கிளாஸ் ரசிகர்களுக்கு பிடிக்கும், ஏ கிளாஸ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று வகை படுத்துகிறார்களே இவையெல்லாம் கழுகுபார்வை விமர்சனத்திற்கு கீழ் வரும்.

2. தம்முடைய ரசனையைக் கொண்டு விமர்சிப்பவர்கள். பதிவுலகில் பெரும்பாலும் இந்த ரகம் தான். நீங்கள் சொல்வது போல இன்னாருடைய ரசிகர் என்பதால் தூக்கி எழுதுவது போன்ற வேலைகள் இவர்கள் திட்டமிடாமல் தானாகவே நடக்கும்.

3. இவர்கள் தான் விமர்சிப்பவர்களை விமர்சிப்பவர்கள். அதாவது ஒரு படத்தை எல்லாரும் கழுவி ஊத்தும்போது, அவர்களை கழுவி ஊத்தி விமர்சனம் செய்பவர். பதிவுலகில் ஜாக்கி போன்றவர்களை இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.

இவற்றில் பார்வையாளரின் ரசனையை விமர்சிப்பவன் முதல் கோஷ்டியில் வருகிறான். அவன் கூட பொதுவாக பார்வையாளர்களின் ரசனையைத் தான் விமர்சிக்கிறானே தவிர தனிப்பட்ட பார்வையாளனை அல்ல. அதாவது, இந்த படத்தினை இந்த வர்க்கத்தினர் அதிகம் ரசிக்கக்கூடும் என்பது போல சொல்கிறானே தவிர. இந்த படத்தினை ரசிப்பவர்கள் இப்படித்தான் என்று விமர்சிக்க மாட்டான்.

ஜீவன் சுப்பு said...

திருமண கைடு & பெண்கள் மனசு - மேற்கூறிய ரெண்டும் , வீட்டுல திருமணப்பேச்சு ஆரம்பித்திருக்கும்போது வாங்கியிருப்பீர் னு நினைக்குறேன் :).

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு டைப் புஸ்தகங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் . வாங்கி படிச்சு முடிச்ச பொறகு , வாங்காமே இருந்துருக்கலாம்னோ இல்ல படிக்காமே இருந்துருக்கலாம்னோ தோணும் .

//பார்க்காத //

எனகென்னமோ சைகைக்கு பிற்பாடு வர்ற சைலன்ட் டயலாக்கும் , சிரிப்பும் புடிச்சுருக்கு . சந்தியாசி –You mean நித்தி டைப் ...?

வவ்வால் said...

பிரபா,

//சுஜாதா கதைகளை சினிமாவாக்க சினிமாவில் ஏற்றவர்கள் இல்லை என்று சொல்வது தான் சரியாக இருக்கும்...//

பாலு மகேந்திரா, மகேந்திரன், பாலச்சந்தர், ஷங்கர், மணிரத்ணம், என யாருக்குமே படம் எடுக்க தெரியாமல் இத்தனைக்காலம் இருக்காங்களா? இல்லை அவர்களுடன் பணியாற்றிய சுஜாதாவால் அவரோட கதையின் சிறப்பை சொல்லி படமாக்க முடியாம போச்சா?

சுஜாதாவின் கதைகளில் 'அகமன உரையாடலாகத்தான்" பெரும்பாலான நிகழ்வுகள் போயிடும், அடுத்தது கணேஷ் -வசந்த் போன்றோரின் உரையாடல் மூலமே கதை நகரும். காட்சிப்படுத்தினால் ரெண்டு பேரு பேசிக்கிட்டு இருக்கணும் இல்லைனா "வாய்ஸ் ஓவரில்" கதை சொல்லனும். கதையில சம்பவங்களின் தொகுப்பு ரொம்ப கம்மியாக இருக்கும்.

கதை வாசிப்பது என்பது ஒரு தனிநபர் அனுபவம் , வாசிப்பவருக்கு ஏற்கனவே ஒரு அபிப்ராயம் உருவாகி இருக்கும், எனவே வாசிப்பவர் , கதாசிரியரின் அலைவரிசைக்கு தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு "வாசிப்பனுவத்தினை அடைய முடியும்.

திரைப்படம் காண்பதென்பது ஒரு கூட்டு அனுபவம் , பலதரப்பட்ட மக்கள் வருவாங்க, வரவங்க எல்லாம் கதாசிரியரின் ரசனையின் படியே இருக்க மாட்டார்கள்,எனவே பார்ப்பவர்கள் எல்லாம் கதாசிரியரின் அலைவரிசையில் இருக்க மாட்டாங்க, எனவே படத்தின் கதை தான் அவர்களை "திரை அனுபவத்திற்கு' தயார்ப்படுத்தனும், அப்படி செய்யாத திரைப்படங்கள் தோல்வி அடையும்.

சுஜாதாக்கதைகள் பெரும்பாலும் திரைவடிவில் " பரபரப்பாக' இல்லாத நிலையை அடையக்கூடியவை, எனவே பார்வையாளர்களைகளை வசிகரிக்க வாய்ப்பில்லை.

சினிமா திரைவடிவம் என்பது 20-20 ,அல்லது 50-50 கிரிக்கெட் போல ஓடனும், டெஸ்ட் மேட்ச் போல ஓடினால் என்னாவது. டெஸ்ட் மேட்ச் எவ்ளோ தான் நல்லா இருந்தாலும் கூட்டம் கம்மியாத்தானே இருக்கும் :-))

வவ்வால் said...

பிரபா,

//விமர்சனம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ஒரே குழப்பமாக இருக்கிறது... எந்தப்பக்கம் ஸ்டாண்ட் எடுக்கிறீர்கள் என்று புரியவில்லை...
//

ஹி..ஹி நான் ஒரு பார்வையாளனாக , மூன்று வகை விமர்சனங்களையும் நேர்த்தியாக இல்லைனு சொல்லி இருக்கேன் அஃதே!

இதில் மிக மோசமான விமர்சன அனுமுறை மூன்றாவது வகை, அதெல்லாம் விமர்சனங்களே அல்ல , நாலு பேரு தங்களுக்குள் சினிமா பத்தி பேசும் போது காரசாரமாக சொல்லும் கருத்துப்போல ,எனவே அவற்றை நேர்த்தியான "ஊடக விமர்சனம்" போல கருத தேவையே இல்லை.

அத விடக்கொடுமை ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதும் போதே உலக சினிமானு சொல்லுறது அவ்வ்.

உலக சினிமா என ஒரு சினிமா தயாரிக்கப்படுவதேயில்லை, ஒரு படம் நில ,மொழி எல்லைக்களுக்கு அப்பாலும் கடந்து வரவேற்பு பெருமெனில் அதுவே உலக சினிமா ஆகும்.

ரஜினியின் முத்து படம் தான் தமிழின் முதல் உலக சினிமா எனச்சொன்னால் தப்பேயில்லை.

போர்னோகிராபி படங்கள் எல்லாமே உலக சினிமாக்களே அவ்வ்!

சகிலா ஒரு உலகநாயகி :-))

ஆஸ்கார் அவார்டுக்கோ, கேன்ஸுக்கோ ஜேம்ஸ் பான்ட் படங்களும் போகின்றன என்பதை மறக்க வேண்டாம்.

ஆனால் நம்ம ஊரு மேதாவி சனங்களோ , சோகத்தை பிழியும், துன்பியல் படங்களோ அல்லது ஜனரஞ்சகமற்ற படங்களையோ தான் நல்ல சினிமானு நம்பிட்டு இருக்காங்க :-))

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் ஒயின்ஷாப்...
அருமை.