Showing posts with label kizhakku. Show all posts
Showing posts with label kizhakku. Show all posts

12 January 2015

பிரபல கொலை வழக்குகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

நேற்று இன்று என்ற திரைக்காவியத்தை காண நேர்ந்தது. வீரப்பனின் மரணத்திற்குப்பின் அவர் பதுக்கி வைத்திருந்ததாக நம்பப்படும் பெரும் பொருட்செல்வத்தை தேடி நிறைய பேர் காட்டுக்குள் அலைந்து திரிந்ததாக கேள்விப்பட்டிருப்போம். அதன் அடிப்படையில் ஒரு கதையை புனைந்திருக்கிறார்கள். கதையின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் (நேற்று), தற்கால காட்சிகளும் (இன்று) மாறி மாறி வருகிறது. படத்தின் தலைப்பிற்கு நீதி கற்பித்தல்.

கதையின் இரு தடத்திலும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தை வைத்து சும்மா விளையாடியிருக்கிறார் இயக்குநர். பிட்டு இல்லை தான் என்றாலும் பிட்டு இருப்பது போலவே 'பெப்' ஏற்றும் கலை இயக்குநருக்கு தெரிந்திருக்கிறது. இதுவரை எத்தனை படங்களில் ஹீரோயின் அறிமுகக்காட்சி பார்த்திருப்போம். ஹீரோயினுடைய நவரசங்களையும் க்ளோஸப்பில் ஸ்லோ மோஷனில் காட்டுவார்கள். அதனை ஹீரோ பார்த்து ஃப்ரீஸ் ஆகி நிற்பார் அல்லவா ? நேற்று இன்றில் அருந்ததிக்கு அல்வாத்துண்டு மாதிரி ஒரு அறிமுகக்காட்சி வைத்திருக்கிறார்கள். ஃப்ரெஷ்ஷா இருக்கு. அந்த காட்சிக்குப் பிறகு, படம் முழுவதும் அருந்ததியின் காஸ்டியூம் ஒரேயொரு பனியன் மட்டும்தான். அதுவும் கை வைக்காதது.

எப்படியும் 'தொட்டால் தொடரும்' வெளியானபின் அருந்ததி பிரபலமாகி விடுவார். என்னுடைய சந்தேகமெல்லாம் 'நேற்று இன்று' படத்தை கே.கே.நகர் விஜயாவில் என்ன பெயரில் வெளியிடுவார்கள் என்பதுதான் !

பிரபல கொலை வழக்குகள் - இந்த புத்தகம் என் கைக்கு வந்த கதையே ஒரு தனி எபிசோட். போராடி வாங்கியிருக்கிறேன். அவ்வளவு ஆர்வத்திற்கு காரணம் அதிலுள்ள ஆளவந்தான் கொலை வழக்கு. சில வருடங்களுக்கு முன்பு தினத்தந்தி வரலாற்று சுவடுகளில் ஆளவந்தான் கொலை வழக்கு பற்றி படித்திருக்கிறேன். என்னை ஒருமாதிரி அதிர்ச்சியடைய வைத்த பகுதி அது. அதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளவே பிரபல கொலை வழக்குகளின் மீது இவ்வளவு ஆர்வம். ஆனால் புத்தகத்தில் அந்த கொலை வழக்கினை பற்றி மொத்தமே மூன்று பக்கங்கள் மட்டுமே உள்ளன என்பது வருத்தத்திற்குரியது.

பரவாயில்லை. எதையோ படிக்கப் போய் வேறு சில அற்புதமான விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். முதலில், ஆஷ் கொலை வழக்கு. குறிப்பிட்ட அந்த கொலையை மட்டும் கவர் செய்யாமல் அதைச் சார்ந்த இந்திய சுதந்திரம் தொடர்பான சங்கதிகளையும் கொஞ்சம் விரிவாகவே எழுதியிருக்கிறார் ஆசிரியர். இதை படிக்கும்போது இந்திய சுதந்திர போராட்டத்தின் மீது மரியாதை கூடுகிறது. குறிப்பாக, வ.உ.சி, பாரதியார், வாஞ்சிநாதன் போன்றவர்களின் மீது.

இன்னொரு பெரிய ஆச்சரியம், மர்ம சந்நியாசி வழக்கு. கிட்டத்தட்ட பாதி புத்தகத்தை நிறைத்திருக்கிறது. சுருக்கமாக – சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு சமஸ்தானத்தின் இளவரசர் மர்மமான முறையில் இறக்கிறார். அது அவருடைய மைத்துனரும், மனைவியும் செய்த சதி என்றும் நம்பப்படுகிறது. இறந்தவரை அவசர அவசரமாக தகனம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இறுதி ஊர்வலத்தின் போது மிகக்கடுமையாக மழை பெய்கிறது. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் பிணத்தை அங்கேயே வைத்துவிட்டு மழைக்காக ஒதுங்குகிறார்கள். மழை நிற்கிறது. பிணம் காணவில்லை.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த ஊருக்கு ஒரு சந்நியாசி வருகிறார். அவருடைய தோற்றமும் செயல்பாடுகளும் இறந்துபோன இளவரசரை நினைவூட்டுகிறது. ஒருவேளை அவரேதான் இளவரசரா ? வாய்ப்பு கிடைத்தால் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பிரபல கொலை வழக்குகள்
SP சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்
200 பக்கங்கள் – விலை ரூ.150
புத்தகக் காட்சி அரங்கு எண்: 634

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 January 2014

வாசித்தவை - 1

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புக் மார்க்ஸ்
புத்தகக்காட்சி முடிந்த கையோடு முதலில் துவங்கிய புத்தகம். எழுத்தாளர்களைப் பற்றியும், புத்தகங்களை பற்றியும் சுவாரஸ்யமான துணுக்குகள் அடங்கிய தொகுப்பு. ‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது...?, சீத்தலை சாத்தனார் பெயர்க்காரணம், தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் என நிறைய தகவல்கள், சுவையான நிகழ்வுகள், ஆதாரங்களோடு. சீவக சிந்தாமணியில் வரும் தாமரைக் கண்ணால் பருகினார்கள் என்ற சொற்றொடரைப் பற்றிய பத்தி மாஸ்டர் பீஸ்...!

சில கைவினைப் பொருட்கள் பார்ப்பதற்கு அப்படியொன்றும் சிறப்பாக இருக்காது. ஆனால் அது அதிக உழைப்பில் உருவாகியிருக்கும். அதுபோல புக் மார்க்ஸ் பெரிய ஆரவாரங்கள் ஏதுமில்லாத புத்தகம் என்றாலும் அத்தனை தகவல்களை தொகுக்க என்.சொக்கன் எத்தனை புத்தகங்களை படித்திருப்பார் என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. 

புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

தமிழா! நீ ஒரு இந்துவா?
பொதுவாக எனக்கு பிரசார வகைமை புத்தகங்களின் மீது ஈடுபாடு கிடையாது. நண்பர் ஒருவர் கேட்டிருந்ததால் தமிழா நீ ஒரு இந்துவா என்ற புத்தகத்தை தேடி, அது எங்கேயும் கிடைக்கவில்லை. திடல்லயே இல்லையாம்...! புத்தகக்காட்சிக்கு சென்றிருந்தபோது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தில் இருக்கிறதா என்று ஒரு வார்த்தை கேட்டுப்பார்த்தேன். உடனடியாக கிடைத்துவிட்டது.

சங்ககாலத்திலிருந்து தமிழனின் வழிபாட்டு முறைகள், பிரிவுகள் (சாதிகள் அல்ல), திருமண முறைகள் என்று துவங்கி ஆரியர்களின் வருகை, அவர்களுடைய வளர்ச்சி, தமிழனின் வழிபாட்டு முறைகள் கடவுள் வழிபாடாக மாறியது என்று அறுபத்தைந்து பக்கங்களில் தேவையற்ற தகவல்கள் ஏதுமின்றி நீட்டாக சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் சங்ககால பாடல்களை ஆதாரங்களாகக் கொண்டும் விளக்கியிருக்கிறார். அதன்பிறகு மனுஸ்மிருதியில் உள்ள சமஸ்கிருத வேதங்களை தமிழில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். நான் ஹிந்து தமிழன் என பெருமை பொங்க சொல்லிக்கொள்பவர்கள் படிக்க வேண்டிய நூல்.

தமிழா! நீ ஒரு இந்துவா? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும்
இதுவும் கிட்டத்தட்ட முந்தய புத்தகத்தை போன்றது தான். தமிழர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்திருக்கிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் மிகவும் குறைந்த அளவில் ஆதாரங்களை வைத்துக்கொண்டு, பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், லெமுரியா,  சுமேரியா, மினோயன் நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் எல்லாமே அடிப்படையில் தமிழ் நாகரிகம் தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சமாகிப் போய்விட்டது. கிரேக்க கடவுள்களையும் ஹிந்து கடவுள்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் பகுதி கொஞ்சம் ரசிக்க வைத்தது. சுஜாதா விருது பெற்ற நூல் என்று கேள்விப்பட்டேன். ஒன்றும் சொல்வதற்கில்லை.

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும் – பா.பிரபாகரன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.125 – ஆன்லைனில் வாங்க

கி.பி.2087இல்...
நான் சிறுவனாக இருந்த சமயத்தில் வெளிவந்த சிறுவர்களுக்கான அறிவியல் புனைகதைகள் அடங்கிய நூல். ஒருவேளை நூல் வெளியான சமயத்திலேயே வாசித்திருந்தால் விரும்பியிருக்கக்கூடும். பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் நான்கைந்தை கூட முழுமையாக வாசிக்கவில்லை. 

கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25

திசை கண்டேன் வான் கண்டேன்
வாத்தியாருடைய சயின்ஸ் ஃபிக்ஷன். நோரா என்ற கிரகத்தினர் விண்வெளியில் ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக பூமியை அழிக்க திட்டமிடுகிறார்கள். அது குறித்து பூமியின் தலைமையகத்திற்கு தகவல் சொல்லும்பொருட்டு பாரி என்னும் நோராவாசியும் அவனுடைய வாகனமும் பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு பூமியின் எதிர்ப்பு நடவடிக்கை என்ன...? பூமி அழிந்ததா தப்பித்ததா...? என்பது கதை. மளமளவென வாசிக்க முடிந்தது. எனினும், இயந்திரா, ஜீனோ, சொர்க்கத்தீவு போன்ற அளவிற்கு ஈர்க்கவில்லை.

திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா - கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 25112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இணையவெளியில் மாஸ் ஹீரோ படங்கள் தவிர்த்து இதுபோல பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவருவதை முதன்முறையாக பார்க்கிறேன். இரண்டாம் உலகம் பற்றி தான் சொல்கிறேன். விமர்சனம் என்று எடுத்துக்கொண்டால், அதாவது சினிமா விமர்சனம் மட்டுமல்ல அரசியல் அல்லது whatever, ஒரு விமர்சனம் என்பது அனைவரையும் திருப்தி படுத்திவிட முடியாது. அது டைம்ஸ் ஆப் இந்தியாவாக இருந்தாலும் சரி, டைம்பாஸுக்காக எழுதும் வலைப்பதிவர்களாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிற்கும் அதே விதிதான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங். ஆயிரத்தில் ஒருவன் பிடித்தவருக்கு இரண்டாம் உலகம் பிடிக்காமல் போகலாம் அல்லது வைஸ் வெர்ஸா. சிலருக்கு இரண்டுமே பிடிக்காமல் போகலாம். ஆனால் இணையவெளியில் பொதுவாகவே நிறைய பேர் (என்னையும் சேர்த்து என்று வைத்துக் கொள்ளலாம்) தங்களுடைய விமர்சனத்தை justify செய்வதற்கு எடுக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமானவை. படம் பிடித்தவர்கள் படத்தை விமர்சிப்பதை விட்டுவிட்டு படம் பிடிக்காதவர்களை விமர்சிக்க துவங்கிவிடுகிறார்கள். மறுபடியும் வைஸ் வெர்ஸா. இன்னென்ன திரைப்படங்களை இன்னென்ன வகை ஆட்களுக்கு மட்டுமே பார்க்கத் தகுதியிருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். சில சமயங்களில் அதுவே ரொம்ப சீரியஸாகிப் போய் அந்த படத்தை நல்லாயிருக்கு’ன்னு சொல்பவர்களெல்லாம் மனப்பிறழ்வு ஏற்பட்டவர்கள் என்று சொல்லுமளவிற்கு போய்விட்டது. இதுபோன்ற அக்கப்போர்களை பார்த்துதான் சில மாதங்களுக்கு முன்பே ஒரு தத்ஸ் சொல்லி வைத்தேன் – விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் துவங்குகின்றன.

BTW, இரண்டாம் உலகம் பார்த்து முடித்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. நாம ஏன் கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையணும். எதுக்காக ஹாலியுட்டு படங்களை பார்த்து அங்கெங்கு என தாக்கம், தழுவல் என்று சொல்லி கதை செய்ய வேண்டும். பேசாமல் வாத்தியாரின் நாவல்களில் ஒன்றை ரைட்ஸ் வாங்கி செய்யலாம் இல்லையா...? ஹவ் அபெளட் சொர்க்கத்தீவு...? செல்வராகவன் போன்ற திறமைசாலிகள் கை வைத்தால் அபாரமாக இருக்கும். என்ன ஒன்று, பணம் செலவாகும், தொழில்நுட்பம் தேவைப்படும். அதெல்லாம் ஏற்கனவே தமிழ் சினிமாக்காரர்களிடம் இருக்கிறதே...?


கிழக்கு அதிரடி சேலில் எப்போதோ வாங்கிய சில புத்தகங்களை படிக்க நேரம் கிடைத்தது. முதலில், தத்தக்கா புத்தக்கா. எழுதியவர் ஜே.எஸ்.ராகவன். பாக்கியம் ராமசாமி ஸ்டைல் (பதிவுலகில் சேட்டை...!) நகைச்சுவை கதைகள் / சம்பவங்களின் தொகுப்பு. பாக்.ரா அளவுக்கு சுவாரஸ்யமில்லை. மனிதர் ஆட்டோக்களை பற்றியும் அதன் ஓட்டுனர்களை பற்றியும் நிறைய ஆராய்ந்திருப்பார் போல. மொத்தம் முப்பது கதைகள். அவற்றில் பத்து ஆட்டோ சம்பந்தப்பட்டது. குறிப்பாக ஆட்டோக்காரருக்கும் பயணிக்கும் இடையே நடைபெறும் லொள்ளுத்தனமான உரையாடல்கள். இரண்டாவது, சோம. வள்ளியப்பன் எழுதிய திருமண கைடு. திருமண மேலாண்மை (!) புத்தகம். பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் என்பதால் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். கடைசியாக, டாக்டர். ஷாலினியின் பெண்கள் மனசு. உளவியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை உதாரணங்களோடு சொல்லி, அவற்றிற்கான காரணம், தீர்வுகள் பற்றி எழுதியிருக்கிறார். பெண்கள் மனசு என்பது எனக்கு கொஞ்சம் அவுட் ஆப் ஃபோகஸ் டாபிக் என்றாலும் உளவியல் சம்பந்தப்பட்டது என்பதால் முழுமையாக வாசிக்க முடிந்தது. நல்லவேளையாக இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் முழுத்தொகை கொடுத்து வாங்காமல் சல்லிசு காசில் வாங்கினேன்.

நேற்று டிவியில் எதிர்நீச்சல் பார்த்தேன். விஜய் டிவியில் வாரம் இரண்டு முறை ஒளிபரப்புவார்கள் போலிருக்கிறது. சமகால காமெடி படங்களைப் போலவே தொடங்கி அப்படியே சீரியஸான விஷயங்களை லேசாக உரசி முடித்திருக்கிறார்கள். தடகள வீராங்கனை சாந்தி விவகாரத்தில் கொஞ்சம் கற்பனையை கலந்து சேர்த்திருக்கிறார்கள். இதையெல்லாம் வரவேற்கலாமா என்று குழப்பமாக இருக்கிறது. சினிமாக்காரர்கள் சில கருத்துகளை கோடிகளில் செலவிட்டு செய்யும்போது அதில் ஒரு பத்து சதவிகிதத்தையாவது அதற்கான களப்பணிக்காக பயன்படுத்தலாம். அப்படி செய்திருந்தால் செங்கல் சூளையில் பணிபுரியும் சாந்திக்கு உதவியாக இருந்திருக்கும். சாந்தி அரசு உதவியில் தடகள பயிற்சியாளராக இருப்பதாக கடைசியாக ஏதோவொரு பேட்டியில் படித்த ஞாபகம். உறுதியாக தெரியவில்லை. எதிர்நீச்சலின் க்ளைமேக்ஸ் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் தொடர்பான தமிழ் படங்களில் க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும். சக போட்டியாளர் நாயகனை தோற்கடிக்க சதி வேலைகள் செய்வார். ப்ளேட் வைத்து கீறுவது, காலை வாரிவிடுவது, அவருடைய உணவுப்பொருளில் எதையாவது கலப்பது என்று ஏதாவது. மேலோட்டமாக பார்த்தால் சினிமா சுவாரஸ்யத்திற்காக என்றாலும் இதுபோன்ற காட்சிகள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. சக போட்டியாளரை காலை வாரிவிட்டு ஜெயிக்க வேண்டுமென்று நினைப்பவன் இரண்டாவது இடத்தை கூட பெற முடியாது. இறுதியாக, படம் பெயரில் என்ன இருக்கிறது எல்லாம் வாழ்ந்து காட்டுவதில் தான் என்பது போன்ற மாரலோடு நிறைவடைகிறது. ஆனால் படத்தின் முற்பகுதியில் சில காட்சிகளில் பெயரை வைத்துதான் நகைச்சுவை செய்கிறார்கள் என்பது நகைமுரண்.

பேசாம போறியா ? வாயில கத்திய விட்டு சுத்தவா ?
என்னுடைய திருமணத்திற்கு என்னைப் பெற்றவரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் சில பேனர்கள் வைக்கப்பட்டன. இதுவும் ஒருவகையில் சுயமரியாதை மீறல்தான். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துவிட்டாயிற்று. வேறு வழியில்லை. ஏதோ நடந்து முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...? பொதுபுத்திக்காரர்கள் மத்தியில் அப்படி இருக்க முடியவில்லை. நம் பின்னணி தெரியாத சில நண்பர்களை திருமணத்திற்கு அழைத்து அவர்கள் எப்போதாவது விளையாட்டாக பேசும்போதெல்லாம் உனக்கென்னப்பா உங்கப்பா கட்சியிலெல்லாம் இருக்கிறார். பணத்துக்கு பஞ்சமிருக்காது என்று விளையாட்டாகத்தான் என்றாலும் சீண்டுகிறார்கள். ஒரு வகையில் உண்மை நிலை என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சீண்டிப்பார்ப்பதில் ஒரு சுகம். அல்லது ஒருத்தர் ஒரு கட்சியில், ஏதாவதொரு லெட்டர் பேடு கட்சியில் இருந்தால் கூட அவர் பல சைபர் போட்ட கோடிகளில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பார் என்று நினைக்கிறார்களா என்று புரியவில்லை. அவ்வளவு மக்குகளா...? தமிழக கட்சிகளில் பதவி, அந்தஸ்து கிடைத்து பணம் சம்பாதிப்பவர்களை விட நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல், இன்னும் சொல்வதென்றால் தன்னுடைய கைக்காசை போட்டு போஸ்டர் ஓட்டும் கடைநிலை தொண்டர்கள் தான் அதிகம். என்னைப் பெற்றவரும் அப்படிப்பட்ட ஒருவர்தான். இதுபோலவே, பொதுபுத்திக்காரர்களில் இன்னொரு கோஷ்டி இருக்கிறது. ஆனால் இப்போது வேண்டாம். ஓவர் புலம்பல் ஒடம்புக்கு ஆகாது...!

வ.வா.ச படத்தில் பாக்காத பாக்காத அய்யயோ பாக்காத என்றொரு பாடல். வரிகள் தான் அப்படியே தவிர பாடல் முழுவதும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். பாடலின் இறுதியில் ஸ்ரீதிவ்யா படியேறி முதல் மாடியிலிருக்கும் தன் வீட்டு வாசலில் நிற்கிறார். சிவகார்த்தி கீழிருந்து அவரை வரச்சொல்லி சைகை காட்டுகிறார். அப்போது திவ்யா பதிலுக்கு வரமுடியாது என்று ஒரு சைகை காட்டுகிறார் பாருங்கள். சொத்தை எழுதிவைத்துவிட்டு சந்நியாசியாக போய்விடலாம். நீங்கள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment