Showing posts with label sujatha. Show all posts
Showing posts with label sujatha. Show all posts

5 April 2014

ரத்தம் ஒரே நிறம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சுஜாதா நாவல்களை விரும்பி வாசிக்கிறேன் என்பதையும், ரத்தம் ஒரே நிறம் படித்ததில்லை என்பதையும் தெரிந்துகொண்ட நண்பர் செந்தில்குமார் (ஆரூர் மூனா அல்ல !) அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். முதற்கண் நன்றி செந்தில்குமாருக்கு. அவர் அனுப்பிய சமயத்தில் தற்செயலாக சீனு ரத்தம் ஒரே நிறத்தை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இருக்கலாம். ஆனால் இது என்னுடைய சிலபஸ் கிடையாது. நான் கொஞ்சம் ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், த்ரில்லர் போன்றவை வாசிக்க விரும்பும் ஆசாமி. ரத்தம் ஒரே நிறத்தின் கதைக்கரு என்னவென்று தெரிந்தபோதே எனக்கு அசுவாரஸ்யமாக ஆகிவிட்டது. புத்தகம் வேறு முன்னூறு பக்கங்களுக்கு மேல். பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டாயிற்று. 

புத்தகம் கையில் கிடைத்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் கழித்து மெதுவாக மனமுவந்து புத்தகத்தை பிரித்தேன். வடிவமைப்பை பொறுத்தவரையில் சுஜாதா புத்தகங்களில் மாஸ்டர்பீஸ் என்பதில் சந்தேகமே இல்லை. புக்மார்க் தான் கொஞ்சம் நைந்து போயிருந்தது. எனக்கெல்லாம் சரித்திர கதை என்றாலே மன்னர் கால கதை என்றுதான் எண்ணம். சுஜாதா அவ்வளவு தூரம் செல்லவில்லை. 1857ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தை அடிப்படையாக கொண்டு அதனோடு ஒரு தமிழ் சினிமா பாணி பழி வாங்கல் கதையையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில், ஆலப்பாக்கத்தில் வசிக்கும் முத்துக்குமரன் என்பவனுடைய தந்தையை ஆங்கிலேய லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி என்பவன் கொன்றுவிடுகிறான். முத்துக்குமரன் மக்கின்ஸியை பழி வாங்கத் திட்டமிடுகிறான். அங்கிருந்து கதை துவங்குகிறது. ஒரு பெண் ஒரு நல்மனம் படைத்த ஆண் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் அசம்பாவிதமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாக்கப்படுகிறாள். இதையே இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். ஒன்றுமில்லை, முத்துக்குமரன் – பூஞ்சோலை – ராக்கன், ஆஷ்லி – எமிலி – மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே மாதிரியாகவே பயணிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்கள் வரை இவர்களுடைய காதல் கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதன்பிறகு சிப்பாய் கலகத்திற்குள் மெதுவாக நுழைகிறது கதை. அதாகப்பட்ட சிப்பாய்க் கலகம் என்பது என்னவென்றால் ஆங்கிலேயர்களின் என்ஃபீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பை பயன்படுத்தினார்கள். இதனை உபயோகிக்கும் பொருட்டு கடிக்க வேண்டும் போல தெரிகிறது. இயல்பில் புலால் மறுக்கும் பிராமண சிப்பாய்களும், பன்றி இறைச்சி உட்கொள்வதை பாவமாக நினைக்கும் இஸ்லாமிய சிப்பாய்களும் எதிர்க்கிறார்கள். அதாவது பன்றி கொழுப்பை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.

ஒரு கதை அல்லது நாவலை படிக்கும்போது அதன் கதை மாந்தர்களுக்கென ஒரு உருவத்தை நம் மனம் தானாகவே வரைந்துகொள்ளும் இல்லையா...? முத்துக்குமரன் என்ற கதையின் நாயகன் பெயரை படித்ததும் சட்டென ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் கண்களில் தெரிகிறார். அடுத்து எமிலி. சந்தேகமே இல்லாமல் எமி ஜாக்சனை நினைவூட்டுகிறார். சில காட்சிகள் மதராஸபட்டினத்தை நினைவூட்டுகிறது. பைராகி ஏனோ பிரேமானந்தாவாக தெரிகிறார். 

நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போல செல்கிறது ரத்தம் ஒரே நிறம். கதையின் நாயகன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். நம்பமுடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். பூஞ்சோலை ஆண் வேடமணிகிறாள். பைராகி என்கிற சித்தர் கதாபாத்திரம் வேறு.

ஏராளமாக உழைத்திருக்கிறார் சுஜாதா. கூகுள் பரிட்சயமில்லாத கால கட்டத்திலேயே நிறைய தகவல்களை திரட்டி எழுதியிருக்கிறார். படிக்கும்போது சாதாரணமாக தெரியக்கூடிய ஒரு பத்தியை எழுதுவதற்கு கூட நிறைய உழைப்பை செலவிட்டிருக்கிறார். முட்டை நடனம் என்ற ஒன்றை கூத்து கலைஞர்கள் செய்வதாய் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. அது பற்றிய விவரணையாக ஆங்கில புத்தகம் ஒன்றின் பெயரை கடைசி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் குமார் எனக்கு அனுப்பி வைத்த பிரதியின் முதல் பக்கத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஒருவர் நமக்கு பரிசளித்த பொருளை நாம் மற்றவருக்கு பரிசளிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த புத்தகம் ஒரு தவறான கைகளுக்கு கிடைத்திருப்பதில் எனக்கு வருத்தம் உள்ளது. இந்த நாவலை என்னிடமிருந்து இரவலாக பெற்று யாரேனும் படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

ரத்தம் ஒரே நிறம்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
342 பக்கங்கள்
ரூ.260

என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

12 March 2014

வாசித்தவை – 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,


பத்து செகண்ட் முத்தம்
ரசி என்கிற தமிழரசி ஒரு ஓட்டப்பந்தயக்காரி. நூறு மீ தூரத்தை 9.58 நொடிகளில் கடந்திருப்பது தற்போதைய உலக சாதனை. செய்திருப்பவர் உசேன் போல்ட். பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஃப்ளாரென்ஸின் 10.49 உலக சாதனை. பெண்கள் யாரும் பத்து நொடிக்கு குறைவான நேரத்தில் ஓடியதில்லை. அதுதான் நாயகி ரசியின் லட்சியமாக இருக்கிறது. அவளுடைய மாமனும் பயிற்சியாளருமான ராஜ் மோகன் அவளை அப்படித்தான் வளர்த்திருக்கிறான். அதற்காக சராசரி பதின்பருவ பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய சந்தோஷங்களை எல்லாம் பறித்து வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் காதல் ரசியின் லட்சியத்திலிருந்து அவளை திசை மாற வைக்கிறது. பத்து செகண்ட் முத்தத்தை பூர்த்தி செய்தாளா ரசி...?

சுமார் நூறு பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். நாவல் முழுக்க ரசிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு தொற்றிக்கொண்டே வருகிறது. இங்க்லீஷ்காரன் என்ற திரைப்படத்தில் வரும் சத்யராஜ், நமீதா பகுதி கிளைக்கதையை ப.செ.மு.விலிருந்து உருவியிருக்கக்கூடும். ரசி க்ளைமாக்ஸில் திருந்தும் வில்லன் போல கடைசி பக்கத்தில் திருந்துவது அப்படி ஒன்றும் ஏற்புடையதாக இல்லை.

பத்து செகண்ட் முத்தம் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.80 – ஆன்லைனில் வாங்க

காதல் விதிகள்
ரிச்சர்ட் டெம்ப்ளர் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் வேலை விதிகள், காதல் விதிகள், செல்வம் சேர்க்கும் விதிகள் போன்ற தலைப்புகள் உட்பட சில சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை கிழக்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. அந்த நூல்களை எப்போதோ ஒரு சமயம் ஆர்வக்கோளாரில் வாங்கி வைத்திருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு கிளான்ஸ் புரட்டிப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு என்பதாலேயே இருபது பக்கங்களை தாண்ட முடியவில்லை. யோகா சாமியார்களை போல பொத்தாம் பொதுவாக காதலுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

உண்மையில் காதல் என்பதற்கு பொதுவான விதிகள் எல்லாம் வகுக்க முடியாது என்பது என்னுடைய அபிப்ராயம். அது ஒரு கஸ்டமைஸ்ட் உணர்வு. காதலிப்பவர், காதலிக்கப்படுபவர், அவர்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து காதலின் தன்மையும் அதற்கான விதிகளும் வேறுபடுகின்றன.

காதல் விதிகள் - ரிச்சர்ட் டெம்ப்ளர் - கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

கிளியோபாட்ரா
நான் அபுனைவு புத்தகங்களை அவ்வளவாக விரும்புவது கிடையாது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. பத்து பக்கங்களை தாண்டுவதற்குள் நித்திராதேவி வந்து என்னை கட்டி அணைத்துக் கொள்வாள். ஆனால் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என்றால் ஒரு ஆர்வக்கோளாரில் வாங்கிவிடுவேன். குறிப்பாக அய்யா இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, தோழர் அனில் அம்பானி, பில் கேட்ஸு போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே எனக்கு நரம்பெல்லாம் புடைத்துக் கொள்ளும். வாங்கி அடுத்தநாளே படித்து கிழித்து அவர்களைப் போலவே பெரிய ஆட்களாகி விட வேண்டுமென்ற உத்வேகம். ஆனால் வாங்கியபிறகு அவற்றை பிரித்து அரை பக்கம் கூட படித்ததில்லை.

கிளியோபாட்ரா அப்படியில்லை. சிறுவயதிலிருந்தே கிளியோபாட்ரா என்றால் ஒரு மதிமயக்கம். இருப்பினும் ஆங்காங்கே படித்த செய்தி துணுக்குகளை தவிர கிளியோபாட்ரா பற்றிய நூல்களை படித்தோ, திரைப்படங்களை பார்த்ததோ இல்லை. சில மாதங்களுக்கு முன்பு சீமாட்டி வெலிங்கடன் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சியின் போது கிழக்கு வெளியீடான கிளியோபாட்ராவை வாங்கியிருந்தேன்.

முதல் இரண்டு அத்தியாயங்கள் முறையே ஒன்றாம், பன்னிரண்டாம் டாலெமிகளைப் பற்றி சொல்கிறது. அதன்பின் கிளியோபாட்ரா அறிமுகமாகி நூல் பிடித்தாற்போல அவருடைய மரணம் வரை செல்கிறது. ரோமப் பேரரசுகளான ஜூலியஸ் சீசரையும், மார்க் ஆண்டனியையும் காதலில் வீழித்தியவள். நிச்சயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியது கிளியோபாட்ராவின் வரலாறு...!

கிளியோபாட்ரா – முகில் – கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

60 அமெரிக்க நாட்கள்
சுஜாதா மூன்றாவது முறையாக அமெரிக்க சென்றபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பை படித்துவிட்டு வழக்கமான பயணக்கட்டுரைகள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஒருவகையில் பயணக்கட்டுரை தான். ஆனால் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றியோ டிஸ்னிலேன்ட் சென்றுவந்த அனுபவத்தையோ எழுதிவிடவில்லை. 

பொதுவாக அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையையும் அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் நிலையையும் அலசுகிறது நூல். தவிர அமெரிக்க அரசியல், தொழில்நுட்பம் என்று ஏனைய விஷயங்களையும் எழுதியிருக்கிறார். இறுதியில் முத்தாய்ப்பாக அமெரிக்காவில் குடிபெயர விரும்பும் இந்தியர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லியிருக்கிறார். எப்போதோ எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை தற்சமயம் படிக்கும்போது சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்றே தோன்றுகிறது.

60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை – ரூ.65 – ஆன்லைனில் வாங்க

மனிதனும் மர்மங்களும்
ஆவிகள், பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக வாசிகள், இன்னபிற ஆமானுஷ்யங்களை பற்றி எழுதியிருக்கிறார் மதன். ஆரம்பத்தில் இதையெல்லாம் உண்மையிலேயே மதன் தான் எழுதினாரா சுத்த பேத்தலாக இருக்கிறதே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புத்தகம் தனக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

குறிப்பாக, மார்கன் ராபர்ட்ஸன் பற்றிய தகவல். அவர் ஒரு எழுத்தாளர். 1898ல் கப்பல் விபத்து சம்பந்தமாக கற்பனையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார், கற்பனை கப்பலின் பெயர் டைட்டன். அவர் எழுதிய பல விஷயங்கள் 1912ல் விபத்தை சந்தித்த டைட்டானிக்குடன் ஒத்துப்போகிறது. இறுதியில், வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து மனிதனின் விந்தணு, கருமுட்டை மாதிரிகளை சேகரித்து செல்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

எனினும் இவற்றையெல்லாம் மதன் புனைவாக எழுதியிருந்தால் பட்டைய கெளப்பியிருக்கும் என்பது என் எண்ணம்...!

மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140 – ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 February 2014

வாசித்தவை – 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,


ஜாலியா தமிழ் இலக்கணம்
சென்ற புத்தகக்காட்சியிலேயே வாங்கியிருக்க வேண்டிய புத்தகம். இது அட்டையிலிருந்து அட்டை வரை ஒரே அமர்வில் படிக்கக்கூடிய புத்தகமில்லை. தினசரி கொஞ்சம் கொஞ்சமாக படித்து, கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம். சொல்லப்போனால் தமிழில் எழுதுபவர்கள் ஒரு குறிப்புக்காக எப்போதும் மேஜையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம். வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள், ர-ற வேறுபாடு, ன-ண வேறுபாடு என எழுதும்போது திடீரென தோன்றி தொலைக்கும் சந்தேகங்களை உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார்கள்.

‘ஜாலியா’ என்பது தான் புத்தகத்தில் பிரதானம். தமிழ் என்றால் பிணக்கு என்பவர்களுக்கு பயன்படக்கூடும். மற்றவர்கள் ஜாலி பாகத்தை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பிரிவிலும் பிற்பகுதியில் செய்திக்கூறுகளை மட்டும் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். விஷயம் மட்டும் போதும் என்பவர்கள் அதை மட்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வாங்கி பத்திரப்படுத்த வேண்டிய புத்தகம். அடுத்த பதிப்பின் அட்டையில் இலியானா அல்லது நயன்தாரா படத்தை போடலாம் என்பது எனது ஆலோசனை.

ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் – கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்
இது எனக்கான தேநீர் கோப்பை அல்ல. உண்மையில் இது நண்பருக்காக வாங்கிய புத்தகம். அவரிடம் கொடுப்பதற்கு முன்பு கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். முப்பத்தைந்து பக்கங்களை தாண்ட முடியவில்லை. அதன்பிறகு சீரின்றி சில பக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.

உலகின் பண்டை நாகரிகங்களின் கடவுள்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். கிட்டத்தட்ட கடந்த பதிவில் பார்த்த குமரிக்கண்டமா...? சுமேரியமா...? புத்தகத்தை போன்றது. ஆனால் அந்த புத்தகம் தமிழர்களின் வரலாற்றை ஒட்டியே எழுதப்பட்டிருந்தமையால் உண்மை, பொய் என்ற நிலையைத் தாண்டி சுவாரஸ்யமாக இருந்தது. இது அப்படியில்லை. அபோஃபிஸ், எனுமா எலிஷ், கில்காமேஷ் காவியம், ரஸ்ஷம்ரா என நிறைய பிதற்றொலிகள். புத்தகத்தின் இறுதியில் ரோம், கிரீஸ், ஹிந்து கடவுள்களை ஒப்பிட்டு அவற்றிலுள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வரலாறு குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145 – ஆன்லைனில் வாங்க

பாம்புத் தைலம்
பேயோன் என்பவர் யாரென்று எழுத்துலகில் நீண்டகாலமாக ஒரு குழப்பம் நிலவி வருவதாக அறிகிறேன். இருக்கட்டும். அது எனக்கு தேவையில்லாத விஷயம்.

நான் ஏற்கனவே பேயோனின் திசைகாட்டிப்பறவை படித்திருக்கிறேன். இன்னதென்று வகைப்படுத்த முடியாமல் ஆழ்மனது போகிற போக்கில் போகும் அவருடைய எழுத்தில் ஒரு கிக் இருக்கிறது. பாம்புத்தைலமும் அப்படித்தான் இருக்கிறது. பேயோன் ஒரு சட்டையர் வாத்தியார். பின்னியெடுத்திருக்கிறார். வரும் புத்தகக்காட்சியில் எனது நூல்கள் என நூற்றியெட்டு தலைப்புகளை பட்டியலிட்டிருக்கிறார். அத்தனையும் வி.வி.சி ரகம். ரஜினி என்னும் சினிமா நடிகர் என்று ஒரு கட்டுரை வாழைப்பழ ஊசி மாதிரியான பகடி.

பாம்புத் தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100

ஆ..!
குரல் மருட்சி குறித்த கதை என்றதும் அபாரமான ஆர்வம் வந்து தொற்றிக்கொண்டது. என்னுடைய பிரச்சனை என்னவென்றால் என்னிடம் இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக செலவிட்டு ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து முடிக்கும் அளவிற்கு நேரம் கிடையாது. கிடைக்கும் இடைவெளிகளில் பத்து, இருபது நிமிடங்கள் என கொஞ்சம் கொஞ்சமாகவே படிப்பேன். அப்படி படித்ததாலேயே ஆ’வின் சிலிர்ப்பை முழுமையாக அனுபவிக்க முடிந்தது. வாத்தியார் வேறு எங்கே எவ்வளவு ரகசியத்தை அவிழ்க்க வேண்டுமோ அவ்வளவை மட்டும் கச்சிதமாக அவிழ்க்கிறார். யாரு இந்த ஜெயலட்சுமி...? யாரு கோபாலன்...? என்று அடுத்த நாள் புத்தகத்தை தொடும் வரையில் உள அலைவு படுத்தியெடுத்துவிட்டது.

சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி அவருடைய கண்களுக்கு மட்டும் தெரியும் ஷாலுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பார். அதைக் கேட்கும் சிம்ஹா, என்ன பண்ணா பாஸ் இந்த வியாதி வரும்...? என்று கேட்பார். அதுபோல ஒரு கட்டத்தில் நமக்கும் குரல்கள் கேட்காதா...? ஜயலட்சுமியை பார்க்க முடியாதா...? என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் ‘ஆ’ என்ற எழுத்தோடு முடித்திருக்கிறார். இந்த கதை தொடராக வெளிவந்தபோது வாசகர்கள் நிறைய பேருக்கு குரல் மருட்சி அனுபவம் கிடைத்திருக்கிறது.

ஆ..! – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.135 – ஆன்லைனில் வாங்க

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் !
காமிக்ஸை எனக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும்பொருட்டு கப்பல், கடல், தீவு, ஆதிவாசிகள் என என் விருப்பமான விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருந்த பயங்கரப் புயலை வாங்கினேன்.

கேப்டன் பிரின்ஸும் நண்பர்களும் ஒரு உல்லாசத்தீவிற்கு செல்கிறார்கள். அங்கு மற்றொரு நண்பன் செய்த வினையால் போலீஸ் துரத்துகிறது. எல்லோருமாக சேர்ந்து அருகிலிருக்கும் இன்னொரு தீவுக்கு செல்கிறார்கள். அங்கே காட்டுவாசிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் ஒரு குழுவால் ஆபத்து நேர்கிறது. கூடவே இயற்கை சீற்றமும், கடலில் வாழும் ஒரு ராட்சத மீனும். நெருக்கடியை பிரின்ஸும் நண்பர்களும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

எப்பொழுதும் புதிய புத்தகங்களை படிக்க துவங்குவதற்கு முன்பு ஒரு முறை வாசம் பிடிப்பேன். அது ஒரு ராஜ போதை. பயங்கரப் புயல் காமிக்ஸ் ஒசத்தியான தாளில் அச்சாகியிருக்கிறது. அப்படியொரு மணம்...! படக்கதை விறுவிறுவென ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே முடிந்தது தான் வருத்தமாகி போய்விட்டது.

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் ! – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 10022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் ஆசீர்வாதம். பெயரே அதுதான். கடவுள் மறுப்பாளர். என்னை செதுக்கியதில் அவருக்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு. படித்து முடித்தபிறகு எல்லா வாத்தியார்களோடும் தொடர்பு விட்டுப் போயிற்று. அதாவது நான் விடுபட்டுக் கொண்டேன். பொதுவாகவே எனக்கு வாத்தியார்கள் மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் கூட அதனைவிட பயம் சற்று கூடுதலாக இருக்கும். வாத்தியார்கள் யாரேனும் பெயரைச் சொல்லி அழைத்தாலே கை, காலெல்லாம் உதற ஆரம்பித்துவிடும். அது மட்டுமில்லாமல் இன்னும் நீ கழிசடையாத்தான் இருக்கியா...? என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது. அதனால் வாத்தியார்களை எல்லாம் சந்தித்து பேசுவதோ, தொடர்பிலிருப்பதோ கிடையாது. ஆனால் மனதளவில் என்றும் தொடர்பிலிருப்பேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆசீர்வாதம் வாத்தியாரைப் பற்றி கூட ஏற்கனவே என்னுடைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். தற்சமயம் ஃபேஸ்புக் வந்துவிட்டதால் பழைய வாத்தியார்களை தேடிப் பார்த்தேன் ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தார். ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதர் அந்த காலத்திலேயே, அதாவது சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே ‘பென் ஃப்ரெண்ட்’ என்ற பதத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர், படிப்பு தாண்டி சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய பேசுவார். நட்பு கோரினேன், ஏற்றுக்கொண்டார். அவருடைய ஃபேஸ்புக் பயன்பாடு அப்படியொன்றும் எதிர்பார்த்த வகையில் இல்லை. தமிங்கிலத்தில் வேறு எழுதிக்கொண்டிருந்தார். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென சாட்டுக்கு வந்து ‘என்னை நினைவிருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்தது. தற்சமயம் நான் ஒரு தமிழ் வலைப்பதிவர் என்று பெருமையாக சொல்லிக்கொண்டேன். அவருக்கு அது புரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. நான் அவருக்கு கொஞ்சம் சிரமப்பட்டு விளக்கிக் கொண்டிருக்கும்போதே ‘விருப்பப்பட்டால் தொடர்பு கொள்ளவும்’ என போன் நம்பரை அனுப்பி விட்டார். எனக்கு அப்போது வழக்கம்போல உதறல் தொடங்கிவிட்டது. சங்கடமான சூழ்நிலை. அழைப்பதற்கு பயம். அழைக்காமல் விட்டாலும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும். சிறிது நேர மனப்போராட்டத்திற்கு பிறகு அழைத்தேன். அவருக்கு என்னை அவ்வளவாக நினைவில்லை. என்னுடைய தந்தையின் பெயர், அவரிடம் தனிவகுப்பு படித்தது, அவர் என்னிடம் ஆசிரியரைப் பற்றி கேட்டு நான் பள்ளிக்கூட ஆசரியர் என்று புரிந்துகொண்டது எல்லாம் சொன்னபிறகு நினைவுக்கு கொண்டு வந்தார். இணையத்தில் தமிழில் எழுதத் தெரியவில்லை என்றார். அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை என்று வழிமுறைகளை கூறினேன். ஒரு வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதியைப் போல அவருடைய கணினியில் கூகுள் ட்ரான்ஸ்லிட்ரெட் மென்பொருளை நிறுவ படிப்படியாக சொல்லிக்கொடுத்தேன். சிறிது நேரத்தில் தமிழ் டைப்பிங் கற்றுக் கொடுத்தாயிற்று. எனக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு நான் சொல்லிக்கொடுப்பது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அது மட்டுமில்லை. இன்னொரு பெருமையும் எனக்காக காத்திருக்கிறது. அவர் இரண்டு கவிதை புத்தகங்கள் எழுதியிருப்பதாகச் சொல்லி அதனை மின்புத்தக வடிவில் மாற்றித் தரும்படி கேட்டிருக்கிறார். அவர் எழுதிய கவிதை புத்தகங்கள் கவியாழித்தனமாக இருக்கும் என்பது எனக்கு திண்ணமாக தெரியும். இருக்கட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. ஆனால் அவருக்காக அதையும் செய்து தர போகிறேன். ஆசீர்வதிக்கப்பட்டதை போல உணர்கிறேன்...!
*
ஆசீர்வாதம் வாத்தியார் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்வத்தை புனைந்து ஏற்கனவே ஒருமுறை எழுதியிருந்தேன். அது மீள் பிரசுரமாக :- வாத்தியார் ஒருநாள் மாணவர்களிடம் தன் கவலையை புலம்பிக்கொண்டிருந்தார். லீவு அன்னைக்காவது டிவியில் ஏதாவது உருப்படியாக பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். என் மனைவியின் சர்வாதிகாரத்தில் ரிமோட் அவளுடைய கைகளுக்கு மாறிவிட்டது. புதுப்படம் போடுறாங்க பேசாம பாருங்க என்று மனதை திருடிவிட்டாய் என்ற படத்தை வைத்தார். அதில் சம்பந்தமே இல்லாமல் திடீர்ன்னு மஞ்சக்காட்டு மைனான்னு ஒரு பாட்டு வருது (தலையில் அடித்தபடி) விதியே என்று பார்த்துக்கொண்டிருந்தபோது பாடலின் இடையில் தெரியாத்தனமாக கவிஞர் அருமையா ஒருவரி எழுதியிருக்குறான் பாருங்க... பூக்கள் பொதுக்குழு கூட்டும்... உன்னை தலைமை தாங்கக்கேட்கும்...என்று லைட்டாக ரொமாண்டிக் மூடுக்கு தாவினார். உடனே நம்மாளு ஒருத்தன் எழுந்து சார் அதே பாட்டுல இன்னொரு வரிகூட நல்லாயிருக்கும்ன்னு சொன்னான். ஆர்வத்துடன் அவன் சொன்னதை கேட்ட வாத்தியார் அடுத்த நொடியே வன்முறை மூடுக்கு மாறி அவனுடைய முதுகில் கொத்துபரோட்டா போட்டுவிட்டார். அவன் குறிப்பிட்ட வரிகள் - கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு...”.
*
படவா... கடைசி ரெண்டு போஸ்டுல ஐஸ்வர்யாவைப் பத்தி ஜொள்ளு விட்டிருக்குற... இப்ப என்னடான்னா வாத்தியாரு, மஞ்சக்காட்டு மைனா'ன்னு மொக்கை போட்டுக்கிட்டு இருக்குற... நான் ஒருத்தி இருக்குறதே உனக்கு மறந்து போச்சுல்ல...!
*
Freaks படம் பற்றியும், அதில் காட்டப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அதுகுறித்து மேலும் சில வரிகள். அப்படத்தில் ஜோஸஃபீன் ஜோஸப் என்றொரு கதாபாத்திரம். இவர் ஒரு இருபாலின உடலி. (Hermaphrodite என்ற பதத்தை தோராயமாக மொழி பெயர்த்தேன். தவறென்றால் மன்னிக்கவும்). அதாவது இவருடைய உடலை செங்குத்தாக பகுத்தால் ஒரு புறம் பெண்ணாகவும், மறுபுறம் ஆணாகவும் இருப்பார். ஆனால் ஜோ.ஜோ உண்மையாகவே இருபாலின உடலி என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

சில சமயங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டும்பொருட்டு ஆண்களே இருபாலின உடலிகளாக சித்தரிக்கப்படுவார்கள். அதாவது ஒரு புறத்தில் மட்டும் ரோமங்களை மழித்து, உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்கோப்பாகவும், மறுபுறம் தொள தொளவென பெண்ணின் மார்பகத்தை போல வளரவிட்டு, ஒருபுறம் ஆணின் ஆடைகளையும் மறுபுறம் பெண்ணின் ஆடைகளையும் அணிந்துக்கொள்வார்களாம். ஜோஸஃபீன் ஜோஸப்ப்பும் அந்த மாதிரி ஒருவராக இருக்கலாம். 

Freaks படத்தின் ஒரு காட்சியில் ஜோஸஃபீன் ஒரு ஆடவரை குறுகுறுவென பார்த்தபடி கடந்துசெல்வார். உடனே அந்த ஆடவருக்கு அருகிலிருப்பவர், ஒருவேளை அவளுக்கு உன்னை பிடிக்கிறது ஆனால் அவனுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்று கமெண்ட் அடிப்பார்.
*
அடிக்கடி சுஜாதா நாவல்களைப் பற்றி எழுதுவதை பார்த்துவிட்டு நண்பர் செந்தில்குமார் சாட்டில் வந்து ரத்தம் ஒரே நிறம் படித்திருக்கிறீர்களா...? என்று கேட்டார். படித்ததில்லை என்று சொன்னதுதான் தாமதம். கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று சொல்லி என்னுடைய விலாசத்தை வாங்கி புத்தகத்தை அனுப்பவே செய்துவிட்டார். அவர் அனுப்பிய புத்தகங்கள் கையில் கிடைத்த நேரத்தில் ஒத்திசைவாக சீனு அதனை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று எழுதிய கட்டுரை படிக்கக் கிடைத்தது. சரித்திர நாவல் என்று தெரிகிறது. சுஜாதா – சரித்திரம் என்ற சேர்க்கையே ஆர்வத்தீயை கிளப்பிவிட்டாலும் அர்பணித்து படிக்க தொடர்ச்சியான சில மணிநேரங்கள் தேவைப்படுகின்றன. தற்சமயம் செந்தில்குமார் அனுப்பிய மற்றொரு சுஜாதா நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பெயர் – ஆ...!
*
யாரோ ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் சுரேஷ் பீட்டர்ஸை பற்றி நல்லவிதமாக எழுதி கீழ்காணும் பாடலை பகிர்ந்திருந்தார். அப்படியென்ன இருக்கிறது என்று எட்டிப்பார்த்தேன். அவ்வளவுதான், பாடல் தனக்குள் என்னை வசமாக இழுத்துக் கொண்டது. வித்தியாசமான இசை, நடனம், உடைகள், அதனுடன் ஸ்வர்ணலதாவின் குரல், மீனா எல்லாமுமாக சேர்ந்து காணொளியாகவே தரவிறக்கி அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாடலின் இறுதியில் வரும் நாதஸ்வர இசையை கத்தரித்து என்னுடைய மொபைலில் ரிங்டோனாக வைத்துக்கொண்டேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 02122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சிங்கம் 2 அவ்வப்போது பிட்டு பிட்டாக பார்த்ததை முன்னிட்டு சில வரிகள். இப்பொழுதெல்லாம் முனுக்குன்னா ஏதாவதொரு அமைப்பு கேஸ் போட்டுவிடுகிறார்களே. அதனை தவிர்க்க ஹரி எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டிருக்கிறார் என்று பார்ப்போம். ஒரு வில்லனை இஸ்லாமியராக சித்தரித்ததை சரி கட்டுவதற்காக மன்சூர் அலிகான் கதாபாத்திரம். ஒரு கிறிஸ்தவ தலித் ராஜேந்திரனுக்கு பதிலாக சந்தானம் கதாபாத்திரம். மன்சூர் அலிகானை உருவத்தை முன்னிட்டு ‘காட்டெருமை’ என்று அழைக்கவேண்டிய வசனத்தை வேண்டுமென்றே ‘பைசன்’ என்று மாற்றியிருக்கிறார். இன்னொரு காட்சியில் ‘பொட்டை’ என்று வரவேண்டிய வசனம் ‘பேடி’ என்று மாற்றப்பட்டுள்ளது. நிஜவாழ்க்கையில் யாராவது கோபத்தில் இருக்கும்போது ‘பேடி’ என்று திட்டி பார்த்திருக்கிறீர்களா...? எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தவர்கள் டேனி விஷயத்தில் மட்டும் கவனக்குறைவாக விட்டிருக்கிறார்கள். சூர்யா ஒரு காட்சியில் டேனியை ‘African Animal’ என்று திட்டுகிறார். ஒருவேளை ஆப்பிரிக்கர்கள் தமிழ் படம் பார்த்து கேசெல்லாம் போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ...?

பழைய தமிழ் சினிமாக்களில் மெயின் ஹீரோயின் ஒருவர் இருக்கும்போது இரண்டாவதாக ஒருவர் ஹீரோவை ஒருதலையாக காதலிப்பார். ஹீரோவுடன் ஒரு கனவுப்பாடலில் ‘திறமை’ காட்டுவார். ஹீரோவுக்கு உதவிகள் செய்து, படம் முடியும் தருவாயில் அற்பாயுசில் போய்ச் சேர்ந்துவிடுவார். அந்தமாதிரி ஒரு வேடம் ஹன்சிகாவுக்கு. சித்தப்பாவின் ஐபோன் பாஸ்வேர்ட் பயன்படுத்தி சூர்யாவிற்கு தகவல் கொடுக்கிறார். ஹன்சிகாவுக்கு பாஸ்வேர்ட் தெரிந்துவிட்டது என்ற காரணத்திற்காக குடும்பத்திலேயே அவரை விஷம் வைத்து கொன்றுவிடுகிறார்கள். அடப்பாவிகளா...! ஐபோன் பாஸ்வேர்ட் தெரிஞ்சிடுச்சு’ன்னா மாத்திக்க வேண்டியது தானே. அதுக்கு ஏன்டா ஹன்சிகாவை போட்டீங்க...? பச்ச மண்ணுடா அது...!

மறுபடியும் சுஜாதாவிடமே திரும்பியாயிற்று. முதலில், கொலை அரங்கம். அப்புறம், ஒரு நடுப்பகல் மரணம். இரண்டும் க்ரைம் த்ரில்லர்கள். முதலாவதில் கணேஷ் – வசந்த் வருகிறார்கள். ஒரு சொத்து, நான்கு வாரிசுகள். ஒருவர் மட்டும் சொத்தை முழுமையாக அபகரிக்க முயற்சிக்கிறார். அது யாரென்பதை சஸ்பென்ஸ் கலந்து, எண்பதுகளில் நடைபெற்ற இலங்கைத்தமிழர் போராட்டத்தை லேசாக உரசி சொல்லியிருக்கிறார். கணேஷ் – வசந்தை படிக்கும்போது ‘அந்த’ இரட்டையர்கள் நினைவுக்கு வந்தார்கள். குறிப்பாக வசந்த் கணேஷை ‘பாஸு’ என்று விளிப்பதும், ஃபிகர்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்காக இருப்பதும் பைலட்டை நினைவூட்டியது. உண்மையில் எல்லோருக்குள்ளும் ஒரு கணேஷும் ஒரு வசந்த்தும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொஞ்சம் இண்டலிஜென்ஸ், கொஞ்சம் ஜொள்ளு, கொஞ்சம் பொறுப்பு, கொஞ்சம் விளையாட்டுத்தனம் எல்லாம் கலந்தவன் தானே மனிதன். ஒரு நடுப்பகல் மரணம் அதைவிட சுவாரஸ்யமான கதை. புதுமண ஜோடியொன்று தேனிலவுக்கு செல்கிறது. கணவன் கொல்லப்படுகிறான். வழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு முன்னூறு பக்கங்களில் க்ளைமாக்ஸை எட்டுகிறது. 

க்ரைம் த்ரில்லர் நாவல், க்ரைம் த்ரில்லர் சினிமா என்றெல்லாம் பார்க்கும்போது நாம் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் என்று சலிப்பாக இருக்கிறது. யாரும் நம்மை டாட்டா சுமோவில் அரிவாளோடு துரத்துவதில்லை...? யாரும் நம்மை கடத்திக்கொண்டு போய் அறையில் அடைத்து வைப்பதில்லை...? ஒரு போலீஸ் விசாரனையில்லை. ஒரு கோர்ட், கேஸ் இல்லை. தூங்கி விழிப்பது, சாப்பிடுவது, அலுவலகம் செல்வது. ச்சே என்ன வாழ்க்கை இது...?

6174 நாவலுடன் தொடர்புடைய மிங்குன் ஆலயம்
அலுவலகத்தில் தோழி ஒருவர், அவரிடம் யவன ராணி முதல் பாகம் மட்டும் இல்லையென்று ஆன்லைனில் ஆர்டர் செய்துக்கொண்டிருந்தார். புத்தகத்தின் விலை 210ரூ. 250க்கு மேல் வாங்கினால் இலவச டோர் டெலிவரி. என்ன செய்வது என்று யோசித்தவரிடம் 6174 என்ற நாவலைப் பற்றி நான் கேள்விப்பட்ட அருமை பெருமைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி வாங்க வைத்துவிட்டேன். வேறெதற்கு...? இரவல் வாங்கி படிக்கத்தான். புத்தகம் தற்போது என் கைவசம்...!

இரவல் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சாட்டில் அறிமுகமானார். பரஸ்பர நலம் விசாரிப்புகள் கடந்து, ‘நீங்க நிறைய புத்தகங்கள் படிப்பீர்களா...?’ என்றொரு கேள்வியை கேட்டார். எனக்கு புரியவில்லை. ‘ஏன் கேட்கிறீர்கள்...?’ என்றேன். ‘இரவல் வாங்கி படிக்கத்தான்...!’ என்று பதிலளித்தார். எனக்கு பக்’கென்று ஆகிவிட்டது. அத்துடன் அவருடனான தொடர்பை நிறுத்திக்கொண்டேன். சென்ற வாரத்தில் ஒருநாள் ராஜ் குமார் என்ற வாசகர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் ‘உங்களிடம் நிறைய புக்ஸ் இருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். அதே ‘பக்’. அதெல்லாம் இல்லைங்க. ரீடிங்கில் நானொரு பிகினர் என்று சொல்லிவிட்டேன். என்னுடைய புத்தகங்களை நான் இரவல் கொடுப்பதில்லை. கூடாது என்றில்லை. இரவல் வாங்கும் 99.9 சதவிகிதக்காரர்கள் அதனை திருப்பிக்கொடுப்பதில்லை. அதுகூட பிரச்சனையில்லை. கொடுத்து சிலநாள் கழித்து புத்தகத்தை கேட்டால் அதுவா..? அது இங்கதான் எங்கேயோ இருந்துச்சு... தெரியல மச்சான்... என்று அலட்சியமாக பதில் வரும். அட்லீஸ்ட் படிச்சியா...? என்று கேட்டால் எங்க மாப்ள...? வண்டி கழுவுறதுக்கு கூட நேரமில்லை என்று சலித்துக்கொள்வார்கள். அப்புறம் என்ன மா’ன்னாவுக்குடா புக்கை வாங்கின’ன்னு கடுங்கோபம் வரும். இப்படித்தான் சென்ற புத்தகக்காட்சியில் சிங்கம் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்த மூன்று புத்தகங்களை வாங்கினார். அதை இரவல் வாங்கி படித்துவிட வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்குள் அவருடைய நண்பர் யாரோ முந்திவிட்டார். இப்ப புக்கு எங்கடா’ன்னா என் சின்னாத்தாளோட மாமியா பொண்ணு கட்டிக்கிட்ட பையனோட சித்தப்பன் வீட்டுல இருக்குங்குறார். எங்க போய் முட்டிக்கிறது...? புஸ்தகம் வனிதா விருத்தம் பர ஹஸ்தே கதம் கதம்...!

நீ மட்டும் இரவல் வாங்கலாமா...? என்று கேட்கலாம். இரவல் வாங்குவதில் நான் மற்றவர்களிடம் என்ன மாதிரியான டீசன்ஸியை எதிர்பார்க்கிறேனோ அதையே மற்றவர்களிடமும் பின்பற்றுகிறேன். இரவல் வாங்கிய புத்தகத்திற்கு ப்ரையாரிட்டி கொடுத்து படித்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவேன். ஆரூர் மூனா வீட்டிலிருந்து பத்து, பதினைந்து புத்தகங்கள் எடுத்து வந்திருப்பேன். அவற்றில் இன்னும் இரண்டு புத்தகங்கள் மட்டும்தான் பாக்கி. முடித்ததும் வீடு தேடிச்சென்று கொடுத்துவிடுவேன். அதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. திரும்பக் கொடுத்தால் தான் அடுத்த செட்டு புத்தகங்கள் இரவல் கிடைக்கும்.

தீபிகாவுக்காக சில சமயங்களில் யூடியூபில் பார்க்கிற பாடல். அப்படியொரு முறை பார்த்துக் கொண்டிருந்தபோது பாடலின் மீதான ஈர்ப்பிற்கு பாடகியும் ஒரு காரணம் என்று புரிந்தது. கணீரென்ற குரல். யாரென்று கூகுள் செய்தேன். சுநிதி செளஹான். தமிழில் கூட சில பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் எதுவும் ‘டில்லி வாலி’ போல வசீகரிக்கவில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 25112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இணையவெளியில் மாஸ் ஹீரோ படங்கள் தவிர்த்து இதுபோல பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவருவதை முதன்முறையாக பார்க்கிறேன். இரண்டாம் உலகம் பற்றி தான் சொல்கிறேன். விமர்சனம் என்று எடுத்துக்கொண்டால், அதாவது சினிமா விமர்சனம் மட்டுமல்ல அரசியல் அல்லது whatever, ஒரு விமர்சனம் என்பது அனைவரையும் திருப்தி படுத்திவிட முடியாது. அது டைம்ஸ் ஆப் இந்தியாவாக இருந்தாலும் சரி, டைம்பாஸுக்காக எழுதும் வலைப்பதிவர்களாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிற்கும் அதே விதிதான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங். ஆயிரத்தில் ஒருவன் பிடித்தவருக்கு இரண்டாம் உலகம் பிடிக்காமல் போகலாம் அல்லது வைஸ் வெர்ஸா. சிலருக்கு இரண்டுமே பிடிக்காமல் போகலாம். ஆனால் இணையவெளியில் பொதுவாகவே நிறைய பேர் (என்னையும் சேர்த்து என்று வைத்துக் கொள்ளலாம்) தங்களுடைய விமர்சனத்தை justify செய்வதற்கு எடுக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமானவை. படம் பிடித்தவர்கள் படத்தை விமர்சிப்பதை விட்டுவிட்டு படம் பிடிக்காதவர்களை விமர்சிக்க துவங்கிவிடுகிறார்கள். மறுபடியும் வைஸ் வெர்ஸா. இன்னென்ன திரைப்படங்களை இன்னென்ன வகை ஆட்களுக்கு மட்டுமே பார்க்கத் தகுதியிருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். சில சமயங்களில் அதுவே ரொம்ப சீரியஸாகிப் போய் அந்த படத்தை நல்லாயிருக்கு’ன்னு சொல்பவர்களெல்லாம் மனப்பிறழ்வு ஏற்பட்டவர்கள் என்று சொல்லுமளவிற்கு போய்விட்டது. இதுபோன்ற அக்கப்போர்களை பார்த்துதான் சில மாதங்களுக்கு முன்பே ஒரு தத்ஸ் சொல்லி வைத்தேன் – விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் துவங்குகின்றன.

BTW, இரண்டாம் உலகம் பார்த்து முடித்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. நாம ஏன் கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையணும். எதுக்காக ஹாலியுட்டு படங்களை பார்த்து அங்கெங்கு என தாக்கம், தழுவல் என்று சொல்லி கதை செய்ய வேண்டும். பேசாமல் வாத்தியாரின் நாவல்களில் ஒன்றை ரைட்ஸ் வாங்கி செய்யலாம் இல்லையா...? ஹவ் அபெளட் சொர்க்கத்தீவு...? செல்வராகவன் போன்ற திறமைசாலிகள் கை வைத்தால் அபாரமாக இருக்கும். என்ன ஒன்று, பணம் செலவாகும், தொழில்நுட்பம் தேவைப்படும். அதெல்லாம் ஏற்கனவே தமிழ் சினிமாக்காரர்களிடம் இருக்கிறதே...?


கிழக்கு அதிரடி சேலில் எப்போதோ வாங்கிய சில புத்தகங்களை படிக்க நேரம் கிடைத்தது. முதலில், தத்தக்கா புத்தக்கா. எழுதியவர் ஜே.எஸ்.ராகவன். பாக்கியம் ராமசாமி ஸ்டைல் (பதிவுலகில் சேட்டை...!) நகைச்சுவை கதைகள் / சம்பவங்களின் தொகுப்பு. பாக்.ரா அளவுக்கு சுவாரஸ்யமில்லை. மனிதர் ஆட்டோக்களை பற்றியும் அதன் ஓட்டுனர்களை பற்றியும் நிறைய ஆராய்ந்திருப்பார் போல. மொத்தம் முப்பது கதைகள். அவற்றில் பத்து ஆட்டோ சம்பந்தப்பட்டது. குறிப்பாக ஆட்டோக்காரருக்கும் பயணிக்கும் இடையே நடைபெறும் லொள்ளுத்தனமான உரையாடல்கள். இரண்டாவது, சோம. வள்ளியப்பன் எழுதிய திருமண கைடு. திருமண மேலாண்மை (!) புத்தகம். பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் என்பதால் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். கடைசியாக, டாக்டர். ஷாலினியின் பெண்கள் மனசு. உளவியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை உதாரணங்களோடு சொல்லி, அவற்றிற்கான காரணம், தீர்வுகள் பற்றி எழுதியிருக்கிறார். பெண்கள் மனசு என்பது எனக்கு கொஞ்சம் அவுட் ஆப் ஃபோகஸ் டாபிக் என்றாலும் உளவியல் சம்பந்தப்பட்டது என்பதால் முழுமையாக வாசிக்க முடிந்தது. நல்லவேளையாக இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் முழுத்தொகை கொடுத்து வாங்காமல் சல்லிசு காசில் வாங்கினேன்.

நேற்று டிவியில் எதிர்நீச்சல் பார்த்தேன். விஜய் டிவியில் வாரம் இரண்டு முறை ஒளிபரப்புவார்கள் போலிருக்கிறது. சமகால காமெடி படங்களைப் போலவே தொடங்கி அப்படியே சீரியஸான விஷயங்களை லேசாக உரசி முடித்திருக்கிறார்கள். தடகள வீராங்கனை சாந்தி விவகாரத்தில் கொஞ்சம் கற்பனையை கலந்து சேர்த்திருக்கிறார்கள். இதையெல்லாம் வரவேற்கலாமா என்று குழப்பமாக இருக்கிறது. சினிமாக்காரர்கள் சில கருத்துகளை கோடிகளில் செலவிட்டு செய்யும்போது அதில் ஒரு பத்து சதவிகிதத்தையாவது அதற்கான களப்பணிக்காக பயன்படுத்தலாம். அப்படி செய்திருந்தால் செங்கல் சூளையில் பணிபுரியும் சாந்திக்கு உதவியாக இருந்திருக்கும். சாந்தி அரசு உதவியில் தடகள பயிற்சியாளராக இருப்பதாக கடைசியாக ஏதோவொரு பேட்டியில் படித்த ஞாபகம். உறுதியாக தெரியவில்லை. எதிர்நீச்சலின் க்ளைமேக்ஸ் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் தொடர்பான தமிழ் படங்களில் க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும். சக போட்டியாளர் நாயகனை தோற்கடிக்க சதி வேலைகள் செய்வார். ப்ளேட் வைத்து கீறுவது, காலை வாரிவிடுவது, அவருடைய உணவுப்பொருளில் எதையாவது கலப்பது என்று ஏதாவது. மேலோட்டமாக பார்த்தால் சினிமா சுவாரஸ்யத்திற்காக என்றாலும் இதுபோன்ற காட்சிகள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. சக போட்டியாளரை காலை வாரிவிட்டு ஜெயிக்க வேண்டுமென்று நினைப்பவன் இரண்டாவது இடத்தை கூட பெற முடியாது. இறுதியாக, படம் பெயரில் என்ன இருக்கிறது எல்லாம் வாழ்ந்து காட்டுவதில் தான் என்பது போன்ற மாரலோடு நிறைவடைகிறது. ஆனால் படத்தின் முற்பகுதியில் சில காட்சிகளில் பெயரை வைத்துதான் நகைச்சுவை செய்கிறார்கள் என்பது நகைமுரண்.

பேசாம போறியா ? வாயில கத்திய விட்டு சுத்தவா ?
என்னுடைய திருமணத்திற்கு என்னைப் பெற்றவரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் சில பேனர்கள் வைக்கப்பட்டன. இதுவும் ஒருவகையில் சுயமரியாதை மீறல்தான். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துவிட்டாயிற்று. வேறு வழியில்லை. ஏதோ நடந்து முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...? பொதுபுத்திக்காரர்கள் மத்தியில் அப்படி இருக்க முடியவில்லை. நம் பின்னணி தெரியாத சில நண்பர்களை திருமணத்திற்கு அழைத்து அவர்கள் எப்போதாவது விளையாட்டாக பேசும்போதெல்லாம் உனக்கென்னப்பா உங்கப்பா கட்சியிலெல்லாம் இருக்கிறார். பணத்துக்கு பஞ்சமிருக்காது என்று விளையாட்டாகத்தான் என்றாலும் சீண்டுகிறார்கள். ஒரு வகையில் உண்மை நிலை என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சீண்டிப்பார்ப்பதில் ஒரு சுகம். அல்லது ஒருத்தர் ஒரு கட்சியில், ஏதாவதொரு லெட்டர் பேடு கட்சியில் இருந்தால் கூட அவர் பல சைபர் போட்ட கோடிகளில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பார் என்று நினைக்கிறார்களா என்று புரியவில்லை. அவ்வளவு மக்குகளா...? தமிழக கட்சிகளில் பதவி, அந்தஸ்து கிடைத்து பணம் சம்பாதிப்பவர்களை விட நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல், இன்னும் சொல்வதென்றால் தன்னுடைய கைக்காசை போட்டு போஸ்டர் ஓட்டும் கடைநிலை தொண்டர்கள் தான் அதிகம். என்னைப் பெற்றவரும் அப்படிப்பட்ட ஒருவர்தான். இதுபோலவே, பொதுபுத்திக்காரர்களில் இன்னொரு கோஷ்டி இருக்கிறது. ஆனால் இப்போது வேண்டாம். ஓவர் புலம்பல் ஒடம்புக்கு ஆகாது...!

வ.வா.ச படத்தில் பாக்காத பாக்காத அய்யயோ பாக்காத என்றொரு பாடல். வரிகள் தான் அப்படியே தவிர பாடல் முழுவதும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். பாடலின் இறுதியில் ஸ்ரீதிவ்யா படியேறி முதல் மாடியிலிருக்கும் தன் வீட்டு வாசலில் நிற்கிறார். சிவகார்த்தி கீழிருந்து அவரை வரச்சொல்லி சைகை காட்டுகிறார். அப்போது திவ்யா பதிலுக்கு வரமுடியாது என்று ஒரு சைகை காட்டுகிறார் பாருங்கள். சொத்தை எழுதிவைத்துவிட்டு சந்நியாசியாக போய்விடலாம். நீங்கள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 11112013


அன்புள்ள வலைப்பூவிற்கு,  

ஆரம்பம் படத்தினை மீண்டுமொரு முறை திரையரங்கில் பார்த்து தன்யனானேன். சில புதிய விஷயங்களை கவனிக்க முடிந்தது. ‘குட்கா முகேஷ்’ செய்திப்படம் காட்டவில்லை. அதாவது படத்தில் புகை, மது காட்சிகள் இல்லை. படக்குழுவினருக்கு சல்யூட். ஆனால், இஸ்திரி பொட்டி காட்சி உட்பட சில ராவான வன்முறைக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சுமா ரங்கநாத் சுமார் தான் என்றாலும் ஆளை பார்த்தால் நாற்பது வயது போலவா தெரிகிறது. ம்ம்ம். தீவிரவாத இயக்கத்தின் பெயர் ‘லயன்ஸ் லிபரேஷன்’. வேறொரு இயக்கத்தின் பெயரை நினைவூட்டுகிறது அல்லவா ? விஷ்ணுவர்தன், உமக்கு எதற்கு இந்த குறிக்கொழுப்பு வேலை ? முடியாது’ன்னு சொல்ல முடியாது பாடல் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கென்னவோ இரண்டாம் பாதியை விட முதல் பாதி பிடித்திருக்கிறது.

சுஜாதாவின் ஜே.கே படித்தேன். நாவலின் வயது 43. ஜே.கே ஒரு பைலட். அரசு சார்பாக விவசாய நிலங்களுக்கு விமானம் மூலம் மருந்து அடிப்பவன். ஒரு குழு அவனிடம் பணம் கொடுத்து ஏதோ ஆராய்ச்சி என்று சொல்லி ஒரு பெட்டியை விமானத்தில் எடுத்துவரச் சொல்கிறது. அது போதைப் பொருள் என்று அறியாமல் செய்கிறான். கைது செய்யப்படுகிறான். வி.ஐ.பி ஒருவரின் தலையீட்டால் விடுவிக்கப்படுகிறான். காவல்துறையின் பிடியிலிருக்கும் வி.ஐ.பியின் மகளை மீட்டு வரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. மீட்டு வருகிறான், ஒப்படைப்பதற்குள் தப்பிவிடுகிறாள். அவளை துப்பறிய போக, அவளைப் பற்றியும் அவளுடைய குழுவின் திட்டமும் தெரிய வருகிறது. அது என்ன திட்டம் ? நிறைவேறியதா என்பது க்ளைமேக்ஸ். சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது ஜே.கே நாவலின் மூலம் நிரூபணமாகிறது. படிக்கும்போது சத்யராஜ் நடித்த ஏர்போர்ட் என்ற திரைப்படம் நினைவுக்கு வந்தது. அடுத்ததாக படிக்க சில சுஜாதா நாவல்கள் வரிசையில் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காக பழம்பெரும் மனிதவள ஆய்வாளர் பிலோ.இருதயநாத் எழுதிய ‘கேரள ஆதிவாசிகள்’ படிக்க இருக்கிறேன்.

தீபாவளிக்கு முந்தய நாள் மாலையில் நண்பர் ஒருவர் போனில் அழைத்து ‘தல தீபாவளி’ வாழ்த்து சொன்னார். அவரும் நானும் சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறோம். அப்போதிலிருந்தே என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வருடாவருடம் வாழ்த்துவார். எனக்கு ஒரு மாதிரியாக ‘சங்கடமாக’ இருக்கும். எனக்கு மட்டுமல்ல யாருடனாவது ஓரிரு வாரங்கள் மட்டும் பழகியிருந்தால் கூட அவர்களுடைய பிறந்தநாளை குறித்து வைத்து வாழ்த்து சொல்லும் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது அவருடைய நண்பர்கள் வட்டத்தில் யாருக்கெல்லாம் ‘தல தீபாவளி’ என்று லிஸ்ட் எடுத்து ஒவ்வொருவராக வாழ்த்து சொல்லிவருவதாக கூறினார். அவரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கெல்லாம் என் குடும்பத்தினரை தவிர வேறு யாருடைய பிறந்தநாளும் தெரியாது. அதுவே கூட சமயங்களில் ஜூன் பதினான்கா, ஜூலை பதினான்கா ? என்று குழம்பும். இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும் நண்பருக்கு அவருடைய வாழ்வில் மேன்மையடைய உதவும். உதவியிருக்கும்.

சுட்ட கதை படத்தை வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் கண்டேன். அடுத்த வாரத்திலேயே புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்கள். அதுவும் விளம்பர இடைவேளை இல்லாமல். நல்ல பல்பு. இனி வேந்தர் சம்பந்தப்பட்ட படங்களை திரையரங்கில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். போலவே, விஜய் டிவியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு நண்பர் நல்ல படம் திரையரங்கில் ஓடாமல் டிவியில் ஓடுகிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அவருடைய எண்ணத்தின் படி மிஷ்கின் வேடத்தை வேறு யாராவது மாஸ் நடிகர்கள் செய்திருந்தால் படம் அபாரமாக வசூலை குவித்திருக்கும். அதாவது அஜித் போன்ற ஒரு நடிகர். ஓ.ஆவில் அஜித் நடித்திருந்தால் ? மிஷ்கின் வேடம் உண்மையில் அஜித்திற்கு நன்றாகவே பொருந்தும். ஆனால் படத்தின் உயிர்நாடி காட்சியொன்று இருக்கிறது. கல்லறையில் வைத்து கதை சொல்லும் காட்சி. அதை அஜித் மட்டுமல்ல, சமகால கதாநாயகர்கள் யாராலும் செய்திருக்க முடியாது. Kamal may be an exceptional case !

கமல் என்றதும் பட்டிமன்றம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உண்மையில் கமல் உலக நாயகன் தான் ! அவரை மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது. சம்பவத்தை ஒட்டி சில நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று, இந்தியன் படத்தில் சந்துரு என்ற மானஸ்தனை தேடும் காட்சி. இரண்டு, நாடோடிகள் பரணி இருபுறம் பல்பு வாங்கி அப்ப நான்தான் அவுட்டா என்று புலம்பும் காட்சி. மூன்று, விவேக் போலீஸ் ஸ்டேஷன் – அவனாவது கேஸ் விஷயமா பேசிக்கிட்டு இருக்கேன்னு சொன்னான், ஆனா நீ கேஸ் கூடவே பேசிக்கிட்டு இருக்கியே ! ரஜினி’ன்னு ஒரு மனுஷன் இந்தா வாரேன் இந்தா வாரேன்’ன்னு சொல்லியே நம்மாட்களுக்கு கிறுக்கு பிடிக்க வைத்தார். கமலின் சந்தர்ப்பவாதம், துரோகம், எச்சச்ச எச்சச்சாக்கு முன்னால் ரஜினி எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. கமல் இன்னமும் அக்ரஹாரத்து பிள்ளையாகவே இருக்கிறார்.

பாண்டிய நாடு படத்தில் Fy Fy Fy, அப்படின்னு ஒரு பாட்டு. என்னடா இது எல்லாரும் முனுமுனுக்குறாங்களே’ன்னு தேடிக் கண்டுபிடிச்சு கேட்டேன். நல்ல பாட்டு. லட்சுமி மேனனையெல்லாம் ரசிக்கும் சமூகத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. முக்கியமான விஷயம், பாடலை பாடியவர் மூக்கு & முழியழகி ரம்யா நம்பீசன் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 October 2013

பிரபா ஒயின்ஷாப் – 28102013


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கலவை இடுகை என்பது எழுதுவது நின்றுபோய் விடக்கூடாது என்பதற்காக நானாகவே ஏற்படுத்திக்கொண்ட கமிட்மென்ட். எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும் கூட டைரி எழுதுவது போல எதையாவது பதிந்து வைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அதையும் மீறி கடந்த வாரம் எழுத முடியாத அளவிற்கு அலுவலகத்தில் ஆணி. ரிவெட் என்றுகூட சொல்லலாம். வாரத்துவக்கத்தில் இரண்டு நாட்கள் காலையிலிருந்து இரவு வரை பன்னிரண்டு மணிநேரம் பணிபுரிய வேண்டிய சூழல். பன்னிரண்டு மணிநேரம் என்பதில் சிக்கல் இல்லை. போக வர பயண நேரத்தையும் சேர்த்தால் பதினாறு மணிநேரம். ஆனால் இந்த இரண்டு நாட்களில், பீக் அவர்ஸில் அலுவலகம் நோக்கி பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உணர முடிந்தது. மூட்டு வலி, முதுகு வலி போன்ற சங்கடம் உள்ளவர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்தால் பூரண குணமாகிவிடும். அவை இல்லாதவர்கள் பயணம் செய்தால் எல்லா வலியும் வந்து சேர்ந்துவிடும். பேச்சிலர் ரூம்களில் இருக்கும் டூத்பேஸ்டை போல பிதுக்கிவிடுகிறார்கள். கிண்டி சுரங்கப்பாதை அருகில் நடந்து செல்பவர்களிடையே கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும், சில கூறு கெட்ட குக்கர்கள் முண்டியடிக்கும் நோக்கில் எதிரில் வருபவர்களுக்கான பாதையில் புகுந்து அட்ராசிட்டி செய்கிறார்கள். நடந்து செல்பவர்களை ட்ராபிக் போலீஸ் மடக்கி லைசென்ஸ் இருக்கா ? என்று கேள்வி கேட்கப்போகிற நாள் வந்தாலும் வரலாம்.

ஆரூரார் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் முதலாவதாக சுஜாதாவின் வண்ணத்துப்பூச்சி வேட்டையை துவங்கினேன். ரேகா மணவயதை அடைந்த ஆர்த்தோடாக்ஸ் குடும்பத்து பெண். மணமகன் தேடுதல் நடைபெறுகிறது. கை நிறைய சம்பளம் வாங்கும், கெட்ட பழக்கங்களில்லாத என்று சொல்லப்படும் அர்ஜுனுக்கு மணமுடித்து வைக்கப்படுகிறாள். அர்ஜுன் மேலைநாட்டு நாகரிகத்துடன் வாழ்பவன். அவனுக்கு சீட்டாட்ட, சிகரெட், மது, மாது பழக்கங்கள் இருப்பது ஒவ்வொன்றாக ரேகாவுக்கு தெரிய வருகிறது. அர்ஜுனின் நடத்தைகளால் நிம்மதியின்றி தவிக்கிறாள் ரேகா. இறுதியில் விவாகரத்து என்னும் புரட்சிகரமான முடிவை எடுக்கிறாள். இருபது வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை. அப்போதைய காலகட்டத்திற்கு விவாகரத்து என்பதே புரட்சியானதாக இருந்திருக்கலாம். சமகாலத்தோடு ஒப்பிட்டால் ரேகாவின் விவாகரத்து முடிவை இயற்கையான எதிரொலிப்பு என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். வேண்டுமானால் ரஞ்சனி செய்ததை புரட்சியென எடுத்துக்கொள்ளலாம். அடுத்து படிக்க வேண்டிய லிஸ்டில் இருப்பவை :- ஜே.கே, ஒரு நடுப்பகல் மரணம், கொலை அரங்கம், நிர்வாண நகரம். பரிசீலனைகள் வரவேற்கப்படுகின்றன.

கலிபோர்னியாவில் புதியதாக ஒரு ரெஸ்டாரென்ட் துவங்கப்பட்டுள்ளது. சரி அதற்கென்ன என்கிறீர்களா ? உணவகம் கழிவறையுடன் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வெஸ்டர்ன் டாய்லெட் வடிவமைப்பில் இருக்கைகள், Golden Poop Rice, Smells like Poop, Bloody Number Two போன்ற உணவுவகைகள். பதறாதீர்கள் உணவுவகைகளின் பெயர் மட்டும்தான் இப்படி. உதாரணத்திற்கு Black Poop என்கிற பெயர் கொண்டது உண்மையில் Chocolate Sundae என்ற சுவையான ஐஸ்க்ரீம் ! உணவுகளும் ஒரு மினியேச்சர் டாய்லெட் பவுல் வடிவில் உள்ள ப்ளேட்டில் படைக்கப்படுகின்றன. தைவான், ஜப்பான் உட்பட பன்னிரண்டு நாடுகளில் ஏற்கனவே பிரபலமான கழிவறை கான்செப்ட் தான் இப்போது அமெரிக்காவில் என்ட்ரி அடித்திருக்கிறது. நம்மூரில் இப்படியெல்லாம் வராதா என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள் ? கவலை வேண்டாம். இங்கே சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஏராளமான உணவகங்கள் உள்ளன. அங்கு சாப்பிட்டால் கழிவறையில் அமர்ந்து சாப்பிடுகிற உணர்வு தாராளமாக கிடைக்கும். புகைப்படங்கள்.

மூடர் கூடம் பார்க்கக் கிடைத்தது. அபவ் ஆவரேஜ் என்று சொல்லலாம். கதாபத்திரங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள், ஆங்காங்கே சிறுசிறு காட்சிகள் என ரசிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்த படத்தில் ஒரு பத்து வசனங்கள் க்ளாப்ஸ் அடிக்க வைக்கிற ரகம். அவை தவிர நிறைய சலிப்பூட்டுகின்றன. எனினும் படத்தில் சிந்திக்க வைக்கிற விஷயங்கள் சில இருக்கின்றன, நேரமில்லை. ஓவியாவின் தங்கையாக வரும் குட்டியை பிடித்துவிட்டது. இன்னும் நான்கே வருடங்களில் அட்டகாசமான ஹீரோயினாக வருவார் பாருங்கள். டவுன்லோட் செய்த வெர்ஷனில் ஃபஸானா போர்ஷன் வரவில்லை. 

வார இறுதியில் சுட்ட கதை படம் பார்த்தேன். நேரம் கிடைப்பின் தனி இடுகை எழுதுகிறேன். ஆரம்பம் படத்திற்கு FDFS டிக்கெட் எடுத்தாயிற்று !

Hunt for Hint விளையாடிய அனுபவத்தை சொல்லியாக வேண்டும். முதல் ஆண்டு அந்த பக்கமே போகவில்லை. இரண்டாம் ஆண்டு விவரம் தெரியாமல் மெதுவா விளையாடிக்கலாம் என்று ரெஜிஸ்டர் மட்டும் செய்துவிட்டு சோம்பேறித்தனமாக இருந்துவிட்டேன். இந்த ஆண்டு, தேதிக்காக காத்திருந்து விளையாடத் துவங்கினேன். சில லெவல்கள் கடந்தபின்பு தான் புலி வாலை பிடித்துவிட்டதை உணர்ந்தேன். இரண்டு நாட்கள் கணினியை விட்டு எங்கேயும் நகரவில்லை / நகர முடியவில்லை. அப்படி இப்படியென போராடி இருபது லெவல்களை தாண்டியிருந்தபோது இரண்டு விஷயங்கள் நிகழ்ந்திருந்தன. ஒன்று, திங்கட்கிழமை விடிந்து அலுவலகத்திற்கு அழைத்தது. இரண்டு, ஒரு கட்டத்திற்கு மேல் மூளை சரிவர வேலை செய்யாமல் போனது. குடும்ப நலன் கருதி அத்துடன் விளையாட்டை நிறுத்திக்கொண்டு இனி வரும் வருடங்களில் ஹண்ட் ஃபார் ஹிண்ட் விளையாடுவதாக இருந்தால் அலுவலகத்திற்கு நான்கு நாட்கள் விடுமுறை சொல்லிவிட்டு, தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டபடி ஹாயாக விளையாட வேண்டும். HFHஐ தயார் செய்த குழுவினருக்கும், வெற்றி பெற்ற மூளைக்காரர்களுக்கும் வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment