14 February 2026

வீனஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வீனஸ். பா.கண்மணி எழுதியிருக்கும் சிறிய நாவல்.

எழுத்தாளர் பெயரை முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். புதிய புத்தகம். இதுவரை புத்தகம் குறித்து பெரிய அறிமுகங்கள் வெளிவரவில்லை. இருப்பினும் முதல் பார்வையிலேயே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது வீனஸ். இதுகுறித்து சிந்திக்கும்போது ஒரு எழுத்தாளனாக புத்தகத்தின் தலைப்பு, அட்டைப்படம், பின்னட்டை வாசகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறேன்.

வீனஸ் மீது நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

இந்த வருடம் முதல் நாவலாக பீச் வாசித்தேன். இரண்டாவதாக வாசித்திருக்கும் வீனஸ் கிட்டத்த்தட்ட பீச் நாவலின் பெண் வெர்ஷன் என்று சொல்லலாம்.

ரஞ்சனி பெங்களூரில் ஒரு அழகு நிலையம் (அதனுடன் ஜிம் மற்றும் ஸ்பா) வைத்திருக்கிறார். அதையும் அதைச் சார்ந்திருக்கிற சிலரைப் பற்றியும் excerptதான் இந்த நாவல். ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆறு சிறுகதைகள் என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் பெண்களைப் பற்றியது. ஆண்களுக்கு முப்பத்தி மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.

இந்நாவலின் பெரிய ஆச்சர்யம், பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் சொற்கள். நவீன கதைக்களம். பியூட்டி பார்லர், ஜிம், ஸ்பா - இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நிறைய அழகான தமிழ்ச் சொற்களோடு நாவல் எழுதியிருக்கிறார் கண்மணி. தரிப்பிடம், செல்வழி, துவாலை, நகப்பூச்சு, வைப்பறை, வட்டணை, வெளுப்பான், குளிரூட்டி, பசுந்தேநீர், புளகம் இப்படி ஏராளமான சொற்கள். ஒரு கட்டத்தில் இது மொழிபெயர்ப்பு நாவலாக இருக்குமோ என்று சந்தேகமே வந்துவிட்டது. அதே சமயம், தேவைப்படும் இடங்களில் ஆங்கில, வடமொழி சொற்களையும் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்.

வர்ணனைகள் எல்லாம் அப்படியே காட்சியாகக் கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறார் எழுத்தாளர். Absolute pleasure of text ! மொஹிதோ பற்றிய வர்ணனை ஒன்று - மேஜையில் தூளாக்கப்பட்ட புதினாவோடு மொஹீடோ கிளாஸ், மழைக்காடாக வந்து அமர்ந்தது. வெள்ளை ரம் கலந்த சோடாவுக்குள்ளே நீள் சுருளாக நறுக்கப்பட்ட எலுமிச்சங்காய் அனகொண்டாவாக அமிழ்ந்திருந்தது. மேலே ஐஸ் கட்டிப்பாறைகள். அதனுச்சியில் முளைத்து நின்ற புதினாக் கொத்தின் மரம். இதனைக் கூட்டியவன் சிறந்த கலைஞன்தான் என எண்ணிக்கொண்டாள். எடுத்து அருந்திட மனம் திறந்துக்கொண்டது.

அவ்வப்போது எராடிகாவின் வாசனை வருகின்றன. அவை வெறும் வாசனைதான் என்றாலும் அவற்றை ஒரு பெண் எழுதியிருக்கிறார் என்பதால் கூடுதல் கவனம் ஏற்படுகிறது.

ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவின் தாயார் ஜோதிடரிடம், "சாமி, இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் வேற'யாரால பண்ண முடியும்" என்று சிலாகிப்பார். அந்த மாதிரி பெண்களைப் பற்றிய சில விஷயங்களைப் பெண்களால் மட்டுமே எழுத முடியும். உதாரணமாக, நாவலின் ஒரு பகுதி இப்படி போகிறது - ரஞ்சனி மல்லாந்து படுத்து இமைகளின் மேல் கைகளை வைத்துக்கொண்டாள். குளிரூட்டியின் மெல்லொலியும் பச்சிலை வாசமும் ரீங்கரிக்க, துருத்திய முலைக் காம்புகள் குத்திட்டு நின்றன. நிகிக்கு ஒன்றரை வயது வரை இரவில் முலையூட்டுவதை நிறுத்த இயலாததால் வந்த வினை. பேடட் கச்சை அணியாவிடில் மானம் போகும்.

இன்னொரு இடத்தில் சந்தியா என்கிற பணக்கார பெண்மணி. வயது நாற்பத்தைந்து இருக்கலாம், எனினும் இளமை குன்றாதபடி தன்னை கவனித்துக்கொள்பவள். அவள் காரில் போகிறாள். வண்டி சிக்னலில் நிற்கிறது. அப்போது - உள்ளுணர்வு உந்த பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். ஸ்டியரிங்கில் தலை  சாய்த்திருந்த இளைஞன், சந்தியாவையே பார்த்துக்கொண்டிருந்தான். மீசையில்லாத முகத்தில் விரிந்த புன்னகை சந்தியாவையும் தொற்றிக்கொண்டது. துணிச்சல் பெற்ற அவன், ஆள்காட்டி விரலைக் கண்ணின் கீழும், நடுவிரலை மேலுமாக வைத்து மீன் வடிவில் கோடிழுத்துக் காண்பித்தான். அவனுக்குத் தன் மகனின் வயதிருக்கலாம். இதனை எதிர்கொள்ளும் விதத்தை சந்தியா தீர்மானிப்பதற்குள் ஓட்டுநர் வந்தமர, சந்தியா வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். நரம்புகளுக்குள் புளகம் ஓடி விளையாடியது.

அடிக்கோடிடத் தகுந்த ஏராளமான ஒன்லைனர்ஸ் நாவல் முழுக்க விரவிக் கிடக்கின்றன - 

கண்ணியமானவர்களோடு லட்சுமி தங்க மாட்டாள்.

இலையுதிர் காலத்திற்காக எந்த மரமும் வசந்தப் பூக்களை ஒளிப்பதில்லை.

Being a lone wolf is better than being a sheep in a herd.

பசித்த புலிக்குத்தான் வேட்டையில் வேகமிருக்கும். உள்ளே எரியும் நெருப்பானது அணைந்துவிட்டால் சாம்பல்தான் மிஞ்சும்.

பீச் நாவலில், சில விஷயங்களை தமிழில் சொல்லும்போது கொச்சையாகவும் அதே விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்லும்போது அது அந்த உணர்ச்சியை மட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்பட்டிருக்கும். இதிலும் அதே போல ஒரு விஷயம் வருகிறது. நீல் என்கிற நபர் மாடலிங் துறையில் இருக்கும் காதலி நிஷாவுடன் உரையாடுகிறார் - உனக்கு அவுத்துப் போட்டுட்டு ஆடணும். உதடு வரை வந்ததை ஆங்கிலத்தில் நீர்க்கச் செய்த நீல், "You like to exhibit yourself. Is that all ?"

இந்த மாதிரி இன்னும் பல பகுதிகளை இந்நாவலில் இருந்து குறிப்பிட்டு எழுத முடியும். நாவலை படிக்க இருப்பவர்களுக்கான நேரடி அனுபவத்தை கெடுக்காமல் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். சாலார்ஜங்க் மியூசியத்தில் பல அற்புதமான ஆளுயரப் பளிங்குச் சிலைகள் உண்டு. அவற்றில் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பது - இத்தாலிய Veiled Rebecca பெண் சிலையே. மறைக்கப்பட்ட பொருளுக்கு எப்போதுமே ஈர்ப்பதிகம்.

128 பக்கங்கள்
180 ரூபாய்
எதிர் வெளியீடு

என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்

Post Comment

15 January 2026

பீச்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பீச். புத்தாண்டில் வாசித்த முதல் நாவல். ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியது. தலைப்பையும் அட்டைப்படத்தையும் பார்த்ததும் வேறெந்த யோசனையுமின்றி தீர்மானித்து வாங்கிய நாவல்.
நான்கு இளைஞர்கள். இரண்டு ஆண்கள். இரண்டு பெண்கள். ஒருவன் மட்டும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறான். மற்ற மூவரும் ஊடகத்தில். நால்வரும் ஒரே வீட்டில் குடியிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு சிறுபகுதிதான் பீச் !


நேரம் கிடைக்கும்போதெல்லாம் அரை மணிநேரம் என அமர்ந்து, ஆறு சிட்டிங்கில் (சுமார் மூன்று மணிநேரம்) படித்து முடித்துவிட்டேன். சிக்கலில்லாத எளிமையான எழுத்து.

நிறைய இடங்களில் ரசித்துப் படித்தேன். அதே சமயம், நாவல் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் இல்லை. அதற்குக் காரணம், நான் இந்த நாவலின் வெளியீட்டு விழாவிற்கு சென்றதுதான். விழாவில் பேசியவர்கள் பாயாசத்தில் உள்ள முந்திரியை மட்டும் பொறுக்கித் தருவது போல இந்நாவலில் உள்ள நுண்ணுணர்வுகளை தொகுத்து தங்கள் பேச்சில் பட்டியலிட்டுவிட்டார்கள். அது மட்டுமில்லாமல் சில யூடியூப் சேனல்களில் சினிமாக்களில் வரும் குறியீட்டுக் காட்சிகளை டீகோட் செய்து விளக்குவார்கள் இல்லையா. அதுபோல ஏற்கனவே நிறைய விஷயங்களை விளக்கிவிட்டார்கள்.

அதையும் தாண்டி நான் ரசித்த சில விஷயங்களை, எனக்கு தனிப்பட்ட முறையில் கனெக்ட் ஆன சிலவற்றை பகிர்கிறேன். என் பங்குக்கு கொஞ்சம் முந்திரி :)

// இருவரும் தமிழர்கள்தான். ஆனால் அங்கு ஆங்கிலம் ஒரு மூன்றாவது நபரைப் போலப் பயன்பட்டது. எந்த உணர்ச்சியையும் அது சுமந்துகொள்வதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் நின்றபடி சொல்வதற்கு வேற்றுமொழிதான் சிறந்தது //

இதை பணிச்சூழலில் உணரவும் முயலவும் செய்திருக்கிறேன். ஆங்கிலத்தில் பேசும்போது அங்கே இயல்பாகவே ஒரு ஆதிக்கம் கிடைத்துவிடுகிறது. தமிழில் பேசும்போது நம்மை ஏய்க்க முயல்பவர்களால் ஆங்கிலத்தில் பேசும்போது அது எளிதில் முடியவில்லை. இதற்குக் காரணம் நம்மவர்களின் சிந்தனை மொழி ஆங்கிலமில்லை என்பதுதான். ஆங்கிலத்தில் சட்டென கோபமாகப் பேச முடிவதில்லை. கூடுதலாகத் தமிழில் சொல்லும்போது நாராசமாக ஒலிக்கக்கூடிய சில விஷயங்களை ஆங்கிலத்தில் நாசூக்காகக் கடத்த முடிகிறது.

கதையில் வரும் ரோஹிணிக்கு ஒரு எண்ணம். அவள் நள்ளிரவு தூக்கத்திலிருந்து விழிக்கும்போதெல்லாம் அது முழுமையான நேரமாகவே இருக்கிறது. அதாவது 3:30, 4:00 இப்படி. 3:35, 4:10 இப்படி இல்லாமல். நீங்களும் இதுபோல உணர்ந்திருக்கிறீர்களா?

// தூக்கமின்மை எப்போதும், நாம் காயம் பட்ட பழைய நினைவுகளையே கிளர்த்துகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கையில் அவமானப்பட்டது முதல் சென்ற வாரம் எதற்காவது அதிருப்தியடைந்தது வரை கொண்டு வந்து வெளியில் கொட்டுகிறது //

இதைக் கடக்காதவர் யாரும் இருக்க முடியாது.

// நீங்க மட்டும்தான் பொண்ணுங்கள்ல டீ கேக்குறது. மீதி எல்லாரும் காஃபிதான் //

ஒரு பெண் கதைமாந்தரைப் பார்த்து சொல்லப்படுகிற வசனம் இது. யோசித்துப்பார்த்தால் பெண்களில் பெரும்பான்மை காபி பிரியர்களாகவே இருக்கிறார்கள். உடனே எனக்கெல்லாம் டீதான் பிடிக்கும் என்று முண்டியடித்துக் கொண்டு வரக்கூடாது. ஃபேஸ்புக்கில் புழங்கும் பெண்கள் விதிவிலக்குகள்.

மேனேஜர்களை பற்றி சில நுட்பமான விஷயங்கள் இந்நாவலில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் வியக்க வைத்த இரண்டு -

// சில தொழில்நுட்பத் தகவல்களைக் கூட, அதன் அறிமுகத்தை மட்டும் வைத்துக்கொண்டு - அதுவும் செந்தில் சொல்லித்தருவதுதான் - அந்த விவகாரம் தமக்கு முழுக்கவும் தெரியும் என்பதைப் போல அந்தச் சூழலைத் தனது கட்டுக்குள் கொண்டு வரும் அவரது ஆளுமைத்திறனைக் காண செந்திலுக்கு வியப்பாக இருக்கும். எல்லாத் தொழில்நுட்ப விவகாரங்களிலும் தலைமையில் இருப்பவர் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு நுட்பமான விஷயத்தின் முனையை மட்டும் பற்றிக்கொண்டு முழு விவரத்தையும் கிரகித்து அதை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லும் திறன் இருக்க வேண்டும். //

இதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர் கூட அவருக்குத் தெரியாத இன்னொரு தொழில்நுட்பத்தைப் பற்றி பேசும்போது அடக்கி வாசிக்கிறார் அல்லது அவருக்குத் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் உயர் பதவியில் இருக்கும் அ-தொழில்நுட்ப ஆட்களுக்கு தெரியாது என்பதே தெரியாது. மேலோட்டமாக ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டு அதுகுறித்து நிபுணர்கள் போல பேசுவது மேனேஜர்களுக்கே உரித்தான ஒரு ஸ்கில்செட்.

// திவாரிக்கே அலைபேசியில் அழைத்தான். அவன் ஒருமுறை கூட அதைத் தொந்தரவாக எடுத்துக்கொண்டதில்லை. கேட்கும் விஷயங்களுக்கு ஃபோனிலேயே பதில் சொன்னான். ஸ்மோக்கிங் ஷெல்டரில் இருந்து பேசுபவன் போன்ற அதே நிதானம். அலைபேசியில் அவரது குரலை வைத்து, அவர் எங்கேயிருக்கிறார், என்ன மனநிலையில் இருக்கிறார், யாருடன் இருக்கிறார் என்பதையெல்லாம் அனுமானிக்கவே முடியாது. மேலாண்மை என்பதும் மேலாளர் என்பதும் இத்தனை நுட்பமான குணாதிசயங்களை உள்ளடக்கியது //

உள்ளே எத்தனை பிரஷர் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடந்துகொள்வது மேலாளர்களுக்கு அவசியமான பண்பு. மேலே இருந்து எப்படிப்பட்ட வசைகள் வந்தாலும் கீழே அதனை அப்படியே கடத்தாமல், அதே சமயம் சமநிலை தவறாமல் காத்துக்கொள்பவன் நல்ல மேனேஜர்.

இதுபோல நாவல் முழுக்க இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கின்றன. இந்நாவலின் தொனி விநாயக முருகனுக்கும் அராத்துவுக்கும் இடைப்பட்ட ஒரு தொனி.

ஆனால் அராத்துவின் எழுத்தில் எப்போதும் ஒரு அலட்சியம் இருக்கும். நான் எழுதுவதுதான் எழுத்து. படித்தால் படி, இல்லையென்றால் ஓடு என்கிற தொனி. பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல் போகிறபோக்கில் எதையாவது எழுதிவிடுவார். அதை ஒப்புக்கொள்ளாத வாசகர்களுக்கு நுட்பங்களைப் புரிந்துகொள்ளும் திறனில்லை என்று அவராகவே தீர்ப்பு எழுதிவிடுவார். கார்லிடம் அது இல்லை. வாசகர்களை மனதில் வைத்து பொறுப்போடு எழுதியிருக்கிறார்.

280 பக்கங்கள்
399 ரூபாய்
எதிர் வெளியீடு

என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்

Post Comment

மீட்சி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வருடாவருடம் டொமைனை புதுப்பிக்க பத்து அமெரிக்க டாலர்கள் பணம் கட்டுகிறேன். முதன்முதலில் சந்தா செலுத்தியபோது அது இந்திய மதிப்பில் அறுநூறு ரூபாய் பக்கம் இருந்ததாக ஞாபகம். கூகுள் அதன் சந்தா தொகையில் ஒரு பைசா கூட விலையேற்றவில்லை. ஆனால் இம்முறை வரிகள் உட்பட ஆயிரத்து நூறு ரூபாய் அருகில் வந்துவிடும் என நினைக்கிறேன். அவ்வளவு தொகை தந்து சந்தா கட்டி பிளாகில் ஒரு வார்த்தை கூட எழுதுவதில்லை. குற்ற உணர்வை உணர்கிறேன்.

அதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள இனி பிளாகில் சும்மா லாண்டரி கணக்கு எழுதுவதற்காகவாவது பயன்படுத்த வேண்டுமென நினைக்கிறேன்.

எனவே 1787 நாட்கள் கழித்து தத்துபித்துவங்கள் உயிர் பெறுகிறது !

என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன் 

Post Comment

23 February 2021

மியாவ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மியாவ் என்றால் என்ன ? பூனையின் குரல். பூனையின் ஆங்கிலப் பெயர் CAT. இல்லை. அது இல்லை. விவகாரமான இன்னொரு பெயர் – PUSSY. ஆம், அதனுடைய குரல்தான் மியாவ். Voice of Pussies ! 2018ம் ஆண்டு எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் எழுத்தில் வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு!
 
சமீப நாட்களாகத் தொடர்ந்து சில அபுனைவுகளையும், கட்டுரைத் தொகுப்புகளையும் படித்து வந்ததாலோ என்னவோ மியாவை படிக்கத் துவங்கியதும்தான் “ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட்” என்கிற ஒரு விஷயத்தின் இருப்பு குறித்து நினைவுக்கு வந்தது.
 
மொத்தம் ஒன்பது சிறுகதைகள். இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கதைகளைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன். அதற்கு முன்னால் மற்ற கதைகள் பற்றி சுருக்கமாக -

முதல் சிறுகதை – நியூட்டனின் மூன்றாம் விதி. இருபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட அறிவியல் புனைவு. அவளை அணு அணுவாய் காதலிக்கிறேன், அவளை நினைக்கவே ஃப்ரக்டோஸ் ருசித்தது போல இருக்கிறது, அவளை வர்ணிக்கத் தமிழ் போதாது, பைனரியிலும் ஹெக்ஸாடெசிமலிலும் கூட முயன்றுவிட்டேன் என்று சுஜாதாயிஷ் சிறுகதை.

மோகினியாட்டம், அழியாக்கோலம் ஆகிய இரண்டு கதைகள் சமூக வலைதள உறவுகளைப் பற்றியது. இன்பாக்ஸில் யாரிடமும் ஃப்ளிர்ட் செய்து பழக்கமில்லாததால் இவையிரண்டும் கொஞ்சம் அந்நியமாகவே தெரிந்தன. இரண்டும் சாட்டில் வளரும் காதல் பற்றிய கதைகள். ஒன்று, ஃபேஸ்புக் சாட். மற்றொன்று, ட்விட்டர். ட்விட்டரை மையப்படுத்திய கதை அத்தளத்தின் பொற்காலம் என்று சொல்லப்படும் நாட்களை நினைவூட்டியது.

பொதுவாகவே புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையிலும் ஒரு அதிர்ச்சியூட்டக்கூடிய தனிமம் இருக்கிறது.

நான்காம் தோட்டா என்கிற சிறுகதை காந்தியின் கொலையில் கோட்ஸேவின் மூன்று தோட்டாக்கள் தவிர்த்து, நான்காவது தோட்டா (இரண்டாவது ஆள்) என்று ஒன்று இருக்கிறது என்ற கான்ஸ்பிரஸி தியரியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. அணங்கு என்கிற சிறுகதை NEET தேர்வு (சரியாகச் சொல்வதென்றால் அதன் ஒரு பகுதி மட்டுமே) எளிய மனிதர்களின் கனவை எப்படியெல்லாம் சீர்குலைக்கிறது என்பதைப் பற்றியது.

திரைப்படங்களில் ஆந்தாலஜி எடுப்பவர்கள் காதல், காமம், கெளரவக் கொலைகள் என்று ஏதாவது ஒரு தீம் வைத்துக்கொண்டு அது தொடர்பான படங்களை திரட்டுவது போல எழுத்தாளர்கள் சிறுகதைத் தொகுப்புகளில் ஒரே தீம் கொண்ட சிறுகதைகள் எழுதுவது குறித்து பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம், சீரியஸ் கதைகளையும் ஜாலி கதைகளையும் தனித்தனி தொகுப்பாக கொண்டு வர வேண்டும். அடுத்தடுத்து கதைகளை படிக்கும்போது ஏற்படும் “மூட் ஸ்விங்கை” தவிர்ப்பதற்காகச் சொல்கிறேன்.

பெட்டை மற்றும் நீதிக்கதை ஆகிய இரண்டும் நல்ல, அதே சமயம் ஒரு எதிர்மறைத் தொனி கொண்ட கதைகள். இதில் பெட்டை என்கிற சிறுகதை பற்றி எழுத்தாளரே முன்னுரையில் சொல்லியிருக்கிறார். நீதிக்கதை என்பது நீலத்திமிங்கலம் (blue whale) விளையாட்டைப் பற்றியது. இக்கதை எனக்குக் கொடுத்த உணர்வு வேறு மாதிரியானது. இதனை படிக்கும்போது மணி நள்ளிரவு ஒன்று. ஒரு பதின்பருவ வயதினனின் நீலத் திமிங்கல நாட்களை விவரிக்கிறது கதை. படிக்கப் படிக்க ஒரு மெல்லிய பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே செல்கிறது. இம்மாதிரி கதைகள் கம்பி மேல் நடப்பது போன்றது. இவற்றை இளம் பருவத்தினர் படிக்கும்போது அதன் விளைவுகள் எதிர்மறையாகக் கூட அமையலாம்.

சரி, இப்போது எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்.

முதல் கதை, காமத்தாழி. இது ஒரு நல்ல எராடிக்கா ! முதலில் நம் சூழலில் (அதாவது ஒரு எழுத்தாளர் ஏதாவது எழுதினால் அதை எழுத்தாளரின் சொந்த வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி சிந்திக்கக்கூடிய சூழலில்) இப்படி ஒரு கதை எழுதுவதற்கே ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தப்பக்கம் போனால் இது செக்ஸ் கதை. மற்ற கதைகளுக்கு இருப்பது போல செக்ஸ் கதைகளுக்கும் Three Act Structure உண்டு. அவற்றில் முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சுவாரஸ்யம் சேர்த்தால் அதுதான் காமத்தாழி. செக்ஸ் கதைகளில் லஸ்ட் என்ற உணர்வின் கை ஓங்கியிருக்கும். இதில் அதனுடன் காதலும் சேர்வதால் அவற்றிலிருந்து வேறுபடுகிறது. இக்கதையின் ஒரு பகுதியில் அதன் நாயகி மாதொரு பாகன் படிக்கிறார். மாதொரு பாகனை எதிர்த்தவர்கள் கைகளுக்கு இப்புத்தகம் கிடைத்திருந்தால் சிக்கல் ஆகியிருக்கும் !

இரண்டாவது கதை, சகா – சில குறிப்புகள் (கதையின் தலைப்புப்படி மியாவ்).

ஒரு ஆணின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு அவனது பிரஸ்தாபங்களை பேசும் இக்கதையில் அநேக சுவாரஸ்யங்கள். இக்கதையை முழுக்கவே ஒரு புன்னகையுடன் தான் படித்தேன். மீண்டும் மீண்டும் படித்தேன்.

ஸ்கூல் படிக்கும்போது ப்ரேயருடன் சேர்த்து pledge என்று ஒன்று எடுப்போம் நினைவிருக்கிறதா ? அதனிடையே All indians are my brothers and sisters என்ற வாக்கியத்தை சொல்லி முடித்ததும் ரகசியமாக உங்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் except “உங்கள் அப்போதைய காதலியின் பெயர்” என்று சொல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா ? (90ஸ் கிட்ஸுக்கு மட்டுமான கேள்வி).

முன்னொரு காலத்தில், தினசரி காலை வேலைக்கு போகும்போது, பீச் ஸ்டேஷனை கடக்கையில், அங்கே ஒரு கடையின் பதாகையில் சோனி சைபர்ஷாட் விளம்பரத்திற்காக வைத்திருக்கும் தீபிகா படுகோனின் சித்திரத்தை தவறாமல் பார்த்துவிட்டு ஒரு நொடி அகமகிழ்ந்து கொள்வேன். அதனை ஒரு கணம் நினைவூட்டுகிறார் சகா. (டோமளூர் மேம்பாலத்தில் நின்று எந்தப்பக்கம் பார்த்தாலும் தொண்ணூறு தீபிகா படுகோன்கள் !)

நோட் பண்ணுங்கடா, நோட் பண்ணுங்கடா என்று சொல்லக்கூடிய நிறைய குறிப்புகள் இக்கதையில் உண்டு.

எழுத்தாளரின் கன்னித்தீவில் கவனித்த ஒரு விஷயம் இக்கதையிலும் தொடர்கிறது. கதையில் வரும் சின்னச் சின்ன விஷயங்களுக்கு பின்னால் ஒரு சிறிய ஆய்வு செய்திருக்கிறார் எழுத்தாளர், அதன் பின்னால் ஒரு reference இருக்கிறது. எதையுமே போகிறபோக்கில் எழுதிவிடவில்லை.

உதாரணமாக, இக்கதையில் தண்ணீரில் கரையக்கூடிய பிகினி உடையைப் பற்றி ஒரு பகுதி இருக்கிறது. அதுகுறித்து கூகுள் செய்தால் நிஜமாகவே அப்படி ஒரு பிகினி இருக்கிறது. அதைப் பற்றி கதையில் எழுதியிருக்கும் தரவுகள் நிஜத்துடன் ஒத்துப்போகிறது.
 
அதே போல கதையினூடே நிறைய டேட்டா ! ஜப்பானில் உள்ள நயோடைமோரி (NYOTAIMORI) என்கிற உணவுப் பழக்கம் குறித்து எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஜப்பானிய போர்னோ பார்த்துவிட்டு ஜப்பானியர்களுக்கு கலாரசனை சுத்தமாக இல்லை என்ற முடிவை எடுத்திருந்தேன். இதைப் படித்ததும் அதனை மாற்றிக் கொண்டேன்.

இத்தொகுப்பில் கிட்டத்தட்ட இருபது சதவிகிதம் சகாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சகா சில குறிப்புகளை (போலவே மதுமிதா சில குறிப்புகள்) மட்டும் தனியாக ஒரு நாவலாகக் கொண்டு வரலாம். வர வேண்டும் !

மியாவ் அச்சுப்பதிப்பு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. விலை ரூ. 130 (புத்தகம் வாங்க) (தற்சமயம் ஸ்டாக் இல்லை)

மியாவ் மின்பதிப்பு கிண்டிலில் கிடைக்கிறது. விலை ரூ. 65 (புத்தகம் வாங்க)

கூடுதல் தகவல் – எழுத்தாளரின் மற்றொரு புத்தகமான கன்னித்தீவு கிண்டிலில் இன்று ஒருநாள் மட்டும் (நள்ளிரவு வரை) சலுகை விலையில் (ரூ. 49) கிடைக்கிறது. (புத்தகம் வாங்க)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 January 2021

வர்கலா – மது மற்றும் சார்ந்தவை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு:
வடக்கு கடற்கரைகள்

வர்கலா கோவாவைப் போலவே இருக்கும் என்று நினைத்து நான் ஏமாற்றமடைந்த விஷயம் மது. 
 
கடற்கரையில், பூல் பெஞ்சில் லீஷராக கால் நீட்டி அமர்ந்தபடி, ரகம் ரகமாக பியர் குடிக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். முதல் அடி, வர்கலாவில் கோவாவில் அமைந்திருப்பது போல கடற்கரைக்கு நெருக்கமாக குடில் உணவகங்கள் இல்லை. (கீழே கடல்; குன்றின் மேலே உணவகங்கள்). இரண்டாவது அடி, பியரின் ரகங்கள். கடந்த பதிவின் இறுதியில் விஜய் சேதுபதி மாடுலேஷனில் ஒரு அண்ணா, “அங்க இருக்குற எல்லா கடைலயும் கிடைக்கும்டா” என்று சொன்னார் என்று முடித்திருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது – அத்தனை கடைகளும் மது விற்க லைசன்ஸ் இல்லாத கடைகள். லைசன்ஸை விட்டுத் தொலையுங்கள். அத்தனை கடைகளிலும் KF தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை. அதை பழைய இங்க்லீஷ் பேப்பரில் சுற்றிக் கொண்டு வந்து மேஜையின் கீழ் வைக்கிறார்கள். கமுக்கமாக குடித்துக்கொள்ள வேண்டும். விலை மட்டும் இரண்டு மடங்கு. இங்கிருந்து மாநிலம் கடந்து போய் அங்கேயும் ஒரு மனிதனுக்கு KF தான் கிடைக்கும், அதையும் அவன் திருட்டுத்தனமாகத்தான் குடிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அவலம்.
 
வர்கலாவில் குடித்த முதல் பியர்
அன்று மாலையே பெவ்கோவிற்கு கிளம்பினேன். Beverages Corporation என்பதின் சுருக்கம்தான் பெவ்கோ. பெவ்கோ என்பது கேரளாவின் டாஸ்மாக். ஆனால் டாஸ்மாக் மாதிரி கலீஜாக இருக்காது. கேரள பெவ்கோக்களில் பார் வசதி கிடையாது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போய்தான் குடிக்க வேண்டும். அதே சமயம் யாரும் அங்கேயே வாங்கி முட்டுச்சந்துகளில் நின்று குடிப்பதில்லை. அப்படியென்றால் கேரளர்கள் எங்கே போய்தான் குடிக்கிறார்கள் ? அநேகமாக, கேரளர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே குடிக்கும் சுதந்திரம் இருக்கும் என்று நினைக்கிறேன். மலையாள சினிமாக்களில் வரும் மது அருந்தும் காட்சிகளைப் பார்க்கும்போது இதனை நம்மால் யூகிக்க முடிகிறது.

வர்கலாவில் ஒரேயொரு பெவ்கோ, டவுன் பகுதியில் உள்ளது. அதாவது கடற்கரை பகுதியில் இருந்து 2 – 3 கி.மீ. வெளியே வர வேண்டும். அங்கே ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அமைந்திருக்கிறது பெவ்கோ. நான் சென்றபோது கீழே படிக்கட்டு வரை வரிசையில் ஆட்கள் நின்றுக்கொண்டிருந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்துக்கொண்டிருக்க, சில பேர் மட்டும் வரிசையில் நிற்காமல் கடந்து சென்றபடி இருந்தனர். அதே சமயம் எனக்கு முன்னால், பின்னால் நின்றிருந்த யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்திருந்து, எனக்கு முன்னால் நின்றிருந்தவரிடம் கேட்டுவிட்டேன். அதாவது அந்த மதுக்கடைக்கு அந்தப்பக்கம் இன்னொரு கதவு இருக்கிறதாம். ப்ரீமியம் செக்ஷன். அங்கே நாமாகவே உள்ளே சென்று நமக்கு வேண்டியதை பார்த்து எடுத்துக்கொள்ளலாமாம். அங்கே செல்கிறவர்கள் தான் எங்களைக் கடந்து அதற்குரிய வரிசையில் போய் நின்றிருக்கிறார்கள். இதைக் கேட்டதும் நான் உடனடியாக அந்த வரிசையில் இருந்து விலகி நாமே பார்த்து எடுத்துக் கொள்ளக்கூடிய பிரிவுக்கு நகர்ந்தேன். நம்முடைய சாதாரண டாஸ்மாக், எலைட் டாஸ்மாக் மாதிரியான வேறுபாடு இது. ப்ரீமியம் செக்ஷனில் குவார்ட்டர் / ஹாஃப் கிடையாது. அதனால் தினசரி மதுப்பிரியர்களின் கூட்டம் சாதாரண பிரிவில் அம்முகிறது. 

பெவ்கோவில் வாங்கியவை
ப்ரீமியம் செக்ஷனில் கூட்டம் குறைவு. வரிசை வேகமாக நகர்கிறது. நான்கு நான்கு பேராக கடைக்குள் அனுப்புகிறார்கள். (நான் சென்றது கோவிட் கட்டுப்பாடுகளுக்கு முந்தைய காலகட்டம்). நம் எலைட்டில் இருப்பது போலவே ஃபுல் பாட்டில்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள். பியர் வைத்திருக்கும் ஃப்ரிட்ஜ் மட்டும் ஒரு ஊழியரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் எது வேண்டும் என்று கேட்கிறோமோ அதை அவர் எடுத்துத் தருகிறார். ப்ரோ கோட் (Bro Code) என்கிற Brut இங்கு கிடைக்கிறது. Brut என்பது பியரையும் வைனையும் கச்சிதமான விகிதத்தில் மிக்ஸ் செய்த பானம். அல்கஹால் அளவு பதினைந்து சதவிகிதம் வரை இருக்கும். அதிலேயே ரியோ என்கிற உள்ளூர் தயாரிப்பும் கிடைக்கிறது. அவை தவிர, பீரா, சிம்பா உட்பட அனைத்து பிரபலமான பியர் வகைகளும் கிடைக்கின்றன.

ஆச்சர்யமாக பில் கவுண்டரில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். நம்புங்கள் அங்கே இருந்த ஊழியர் ஒரு பெண் என்பதால் எனக்கு எந்த நெருடலும் ஏற்படவில்லை. அந்த அறையின் சூழல் அப்படி அமைந்திருந்தது. இதுவே டாஸ்மாக் கவுண்டரில் ஒரு பெண் இருந்தால் அவர் எப்படி நடத்தப்படுவார் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அங்கே அந்தப் பெண்ணிடம் பணம் செலுத்தி பாட்டில்களைப் பெற்றபோது எனக்கு ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரியிடம் ஃபைலில் கையெழுத்து வாங்கியது போலதான் இருந்தது.கடையை விட்டு வெளியேறியதும் ஒரு அலமாரியில் பழைய செய்தித்தாள்கள் வைத்திருக்கிறார்கள். அதை வைத்து பாட்டிலை சுற்றி எடுத்துச் செல்ல வேண்டியதுதான்.

வர்கலா கடற்கரையில் அதிகாரப்பூர்வமாக லைசன்ஸ் பெற்ற பார் ஒன்றே ஒன்று (ஹெலிபேட் அருகே உள்ள SS பார் மற்றும் உணவகம்) மட்டும்தான் உள்ளது. அதுவும் குளிரூட்டப்பட்ட கதவடைத்த பார். அதில் உட்கார்ந்துக் கொண்டு குடிப்பது என்பது சென்னையில் ஈகிள் பாரில் உட்கார்ந்து குடிப்பதற்கு சமம். ஒரு நல்ல விஷயம் அங்குமட்டும் பியரில் மற்ற பிராண்டுகளும், ப்ரோகோடும் கிடைக்கிறது.

கள்ளு விஷயத்திலும் ஏமாற்றம்தான். ஏற்கனவே காந்தளூரில் கள்ளு குடித்து அது மிகவும் பிடித்திருந்ததால் கண்டிப்பாக கள்ளு குடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வர்கலாவில் கள்ளுக்கடைகள் இல்லை. கள்ளு வேண்டுமென்றால் வர்கலாவிலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவில் வெளிச்சக்கடவு என்கிற ஊருக்கு செல்ல வேண்டும். முதலில் நான் என் பயணத்தை ப்ளான் செய்தபோது ஒன்பது கி.மீ. என்பது எனக்கு சாதாரணமாகத் தெரிந்தது. கண்டிப்பாக போக வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். ஆனால் அங்கு சென்ற முதல் நாள் அந்திப் பொழுதில் ஏற்பட்ட திகில் அனுபவத்தின் காரணமாக அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். இங்கிருந்து போகும்போது பிரச்சனையில்லை. மனதில் கள்ளை நினைத்துக்கொண்டே சந்தோஷமாக சைக்கிளை மிதித்துவிடலாம். திரும்பி வருகையில் ? அதனால் கள்ளு திட்டம் கைவிடப்பட்டது. இது தனிப்பயணத்தின் பாதகங்களில் ஒன்று. என்னுடன் துணைக்கு ஒருவர் இருந்திருந்தால் கூட நான் நிச்சயம் கள்ளுக்கடைக்கு சென்றிருப்பேன்.

பீஃப் மோமோஸுடன்

வர்கலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர். அதுவும் லாங்-டெர்ம் பயணிகள். இந்தியர்களுக்கு மேலை நாட்டினர் மீது சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் இரண்டாவது பெரிய மூடநம்பிக்கை – மேலை நாட்டினர் அனைவரும் பணக்காரர்கள் என்று நினைப்பது. நீங்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்துகொண்டு உலகிலேயே மலிவான (லிவிங் காஸ்ட் அடிப்படையில்) நாடு என்று தேடினால் இந்தியா என்று பதில் வரும். பெரும்பாலும் இந்தியாவுக்கு பயணம் வருபவர்கள் இதன் அடிப்படையில் வருபவர்களே. குறிப்பிட வேண்டிய விஷயம் – வர்கலாவிற்கு வரும் மேலைநாட்டினர் யாரும் இவ்வுணவகங்களில் திருட்டு பியர் குடிப்பதை நான் பார்க்கவில்லை. பொதுவாக இவர்கள் ஒரு ஸ்மூத்தியை வாங்கி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் கதை பேசுகிறார்கள். பியரின் மீது இவர்களின் கவனம் இல்லை. அப்படியெனில் இவர்களுடைய அஜெண்டா ? இங்கு வரும் வெளிநாட்டினர் பலர் ரஷ்யர்கள். இவர்கள் அங்குள்ள கடும்குளிரிலிருந்து சிலகாலம் இளைப்பாற இங்கு வந்து சேர்கிறார்கள். இவர்களைக் குறி வைத்து வர்கலாவில் யோகா வகுப்புகள், ஸர்ஃபிங் பயிற்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

இவர்களுடைய போதைக்கு ? கிட்டத்தட்ட கோவாவின் கர்லீஸ் கதைதான். அதைப் பற்றி சற்று விரிவாக அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அடுத்த பதிவு: லாஸ்ட் ஹாஸ்டல்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 January 2021

காந்தளூரும் கள்ளுக்கடையும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,
 
வர்கலாவைப் பற்றி எழுதிக்கொண்டே வரும்போது இடையில் எங்களுடைய  காந்தளூர் பயணம் பற்றி எழுதாமல் வர்கலாவின் சில பகுதிகளை எழுத முடியாது என்று தோன்றியதால் இந்த இடைச்செருகல் !

உடுமலைப்பேட்டையில் இருந்து அறுபது கி.மீ. தொலைவில், தமிழக – கேரள எல்லையில், கேரளாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது காந்தளூர். ஏதாவது ஆஃப்-பீட் தளத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து காந்தளூரைத் தேர்வு செய்திருந்தோம். சில்லென்ற தட்பநிலை. டூரிஸ்ட் கூட்டமில்லாத பகுதி.
 
2019 இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடந்துக்கொண்டிருந்தபோது நாங்கள் காந்தளூர் சென்றுவந்தோம். மிகச்சரியாக சொல்வதென்றால் தமிழ்நாட்டில் ஓட்டு போட்டுவிட்டு ஈர மையுடன் கிளம்பிச் சென்றோம். அப்போது கேரளாவில் தேர்தல் நாளுக்கு சில நாட்கள் எஞ்சியிருந்தன. 
 
தேர்தல் பரப்புரை ஊர்வலம்
காந்தளூர் என்பது இடுக்கி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அங்கே கடைசிகட்ட தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் வேட்பாளரின் முகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள். ஆனால் மேற்பார்வைக்கு அத்தனையும் ஒரே முகம் போலவே இருந்ததால், போஸ்டர்களை கூர்ந்து கவனித்தேன். நான் நினைத்தது போல இல்லை. மூன்று வெவ்வேறு வேட்பாளர்களே. இயல்பில் கேரள பெண்களைப் போலவே கேரள ஆண்களும் ஒரே சாயல் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மூவரும் ஒரே மாதிரியான மீசை வைத்திருந்தார்கள்.

கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் பிரதான கட்சிகள். கிட்டத்தட்ட 2016க்கு முந்தைய தி.மு.க. – அ.தி.மு.க.வைப் போல. குறிப்பாக கம்யூனிஸ்டை தி.மு.க.வோடு ஒப்பிடலாம். பாரம்பரியமிக்க கட்சி, அதே சமயம் முன்பைப் போல இல்லை என்கிற சலசலப்புகள் கொண்ட கட்சி. மூன்றாவதாக பி.ஜே.பி – ஒப்புக்கு.

கேரள அரசியலை கவனிக்கும்போது ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க,விற்கும் இடையே சில தொழில் உறவுகள் உண்டு. ஆனால் களத்தில் இருவரும் எதிரிகள். ஒருவரை ஒருவர் தேர்தலில் வீழ்த்த, கொள்கை சமரசங்களுடன் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். கேரளாவில் அப்படியில்லாமல் கம்யூனிஸ்டுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு புரிந்துகொள்ளுணர்வு இருக்கிறது என்று யூகிக்கிறேன். இவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை வைத்துக்கொண்டு மதவாத சக்திகள் கேரளாவில் காலூன்ற முடியாமல் செய்வதாகத் தோன்றுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கேரளத் தலைவர்கள் ஒரே விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் என்ற செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போதும் கூட கம்யூனிஸ – காங்கிரஸ் தலைவர்கள் தான் ஒன்றாக வந்தார்களே ஒழிய பி.ஜே.பி. கோமாளிகள் அல்ல.

2019 இடுக்கி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக அவர்களுடைய ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் (சிட்டிங் எம்.பி.) போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தமிழக முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் அதே ஆர்வத்துடன் இடுக்கி தொகுதி நிலவரத்தை தேடினேன். ஒன்றரை லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார். 

*************************

நாங்கள் காந்தளூர் சென்றிருந்த சமயத்தில் இடைப்பட்ட ஒருநாள் மட்டும்தான் மதுக்கடை இயங்கியது. முன்பும் பின்பும் தேர்தல் விதிகள் காரணமாக இயங்கவில்லை. கள்ளுக்கடைகளும் அவ்விதமே. இடைப்பட்ட அந்த ஒருநாளில் கள்ளுக்கடைக்கு படையெடுத்தோம். நான் அதற்கு முன்புவரை கள்ளு குடித்ததில்லை. ஒரேயொரு முறை கல்லூரியில் படிக்கும்போது அதற்கான வாய்ப்பு வந்தபோது, உடன் பயின்றவர்கள் புதிதாக குடிப்பவர்களுக்கு கள்ளு தூக்கி விட்டுவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதால் அந்த ஆசையை கைவிட்டுவிட்டேன். இப்போது சூழல் கூடி வந்ததால் கள்ளு குடித்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன். 

காந்தளூர் கள்ளுக்கடை
கிட்டத்தட்ட ஊருக்கு ஒதுக்குப்புறமாக, குடியிருப்புகள் அற்ற பகுதியில் அமைந்திருந்தது காந்தளூர் கள்ளுக்கடை. ஒரு வயதான அம்மாளும் அவரது மகனும்தான் அக்கடையை நிர்வகித்து வருகின்றனர்.

கள்ளு - கப்பை - கடலைக்கறி

கள்ளுடன் சாப்பிட கப்பையும், பீஃப் கறியும் இருப்பதாகச் சொன்னார்கள். கப்பை என்றால் என்னவென்றே அப்போது தெரியாததால் அதனை ஒரு பிளேட் வாங்கி, அது மரவள்ளிக்கிழங்கு என்று தெரிந்து, அதனை கைவிட்டோம். அதன்பிறகு பீஃப் கறி வாங்கி அது சில பல ப்ளேட் ரீப்பீட்டில் சென்றது. கள்ளின் ஒருவகையான புளிப்புச்சுவை, அதிலிருந்த ஃபிஸ் போன்றவை மிகவும் பிடித்துப்போய்விட்டது.

தேர்தல் சமயம் என்பதால் கடையை நிர்வகித்து வந்த அம்மாள் அரசியல் குறித்து பேசத் துவங்கினார். அவருடைய பேச்சில் இருந்து அவருக்கு மற்றும் பொதுவாக அத்தொகுதி மக்களுக்கு ஸ்டாலின் மீது ஒரு ஸாஃப்ட் கார்னர் இருப்பது தெரிய வந்தது. அவரது முதலமைச்சர் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போகிறது என்பது மாதிரியான ஸாஃப்ட் கார்னர். மேலும் முன்பொரு முறை அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து நீண்ட முதல் மற்றும் ஒரே உதவிக்கரம் ஸ்டாலினுடையது என்றார்.

இதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மகன் இடைமறித்து, நான் ஒரு தகவல் சொல்கிறேன் அதைப் போய் உன் மாநில மக்களிடம் சொல் என்பது மாதிரி ஒரு விஷயத்தைச் சொன்னார். அங்கே மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நேரடியாக அலைபேசியில் தகவல் தெரிவிப்பார்களாம். ச.ம.உ.வும் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பாராம். ஒருவேளை அப்படி வராவிட்டால் அடுத்தநாள் ஊரே ச.ம.உ. வீட்டுவாசலில் நிற்குமாம். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் தமிழத்தில் இந்நிகழ்வில் ஒரு பத்து சதவிகிதத்தைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.

கேரளாவில் மட்டும் இது எப்படி சாத்தியம் ? கேரளாவில் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதில்லை. மாறாக பணம் பெறுகிறார்கள். அதாவது மக்கள் அவரவர் சார்ந்த இயக்கங்களுக்கு தங்கள் ஒருநாள் ஊதியத்தை தேர்தல் செலவுகளுக்காக தருகிறார்கள். உதாரணமாக அந்த கள்ளுக்கடை உரிமையாளர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அதனால் அவரது ஒருநாள் வருமானத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக வழங்கியிருக்கிறார். அதனால் அவர்களால் உரிமைக்குரல் எழுப்ப முடிகிறது.

கேரளாவும் தமிழகமும் இந்தியாவின் முன்னோடி மாநிலங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் நாம் இன்னும் கேரளாவை விட பல படிகள் பின்தங்கியே இருக்கிறோம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 December 2020

வர்கலா – வடக்கு கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: ஆதாமிண்ட ஸ்வர்க்கம் 

வர்கலா பயணத்தின் அடுத்த பகுதிக்கு போகும் முன் என் பயணத்துணைகளாக வந்த இரண்டு அஃறிணை நண்பர்களைப் பற்றி குறிப்பிட்டுவிடுகிறேன்.
 
முதல் நண்பன் – சைக்கிள்: எனக்கு பைக் – ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்பதால் பயணத் திட்டத்தின் போது சைக்கிள் வாடகைக்கு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். சில இடங்களில் மெளன்டைன் பைக் என்று சொல்லப்படும் மலையேற்றத்திற்கான சைக்கிள் கிடைத்தது. கியர் வைத்த 21 ஸ்பீட் சைக்கிள் அது. நாளொன்றிற்கு வாடகை முன்னூற்றி ஐம்பது ரூபாய். நான் தேடியதோ மிதித்தால் ஒரே வேகத்தில் போகக் கூடிய சாதாரண சைக்கிள். பின்னர் கூகுள் மேப் வழியாக உன்னிக்கண்ணன் என்பவரிடம் சைக்கிள் வாடகைக்கு கிடைப்பதாக அறிந்தேன். கியர் வைத்தது தான், ஆனாலும் அந்த சைக்கிள் பழையது போல தோன்றியதால் ஒரு அணுக்கம் உண்டானது. தினசரி வாடகை நூற்றி ஐம்பது. வர்கலா சென்றதும் நேராக ஹெலிபேட் போய் இறங்கினேன் இல்லையா. அங்கு முதல் வேலையாக உன்னிக்கண்ணனை சந்தித்து சைக்கிளைப் பெற்றுக்கொண்டேன். உன்னிக்கண்ணன் ஒரு சிறிய ஹோம்ஸ்டே வைத்து நடத்துகிறார். டிராவல்ஸும் நடத்துகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் வாடகை சைக்கிளை பொறுத்தவரையில் அவர் அதனை தொழில்ரீதியாக செய்யவில்லை. அவரது சொந்த பயன்பாட்டிற்காக ஒரே ஒரு சைக்கிள் வைத்திருக்கிறார். அதைத்தான் உபரி சமயங்களில் வாடகைக்கு விடுகிறார். ப்ரொஃபஷனல் இல்லை என்பதால் உன்னிக்கண்ணனின் சைக்கிளில் பெல் இல்லை, பிரேக்கை கோபம் கொண்டு அழுத்தினால் பெருத்த ஒலியுடன் லேசாக வேலை செய்யும். ஆனாலும் எனது தேவைக்கு அது போதுமானதாக இருந்தது.

வாடகை சைக்கிள்
இரண்டாவது நண்பன் – மொபைல் ஸ்டாண்ட்: சுய புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை என்றாலும் ஒரு ட்ரிப் முழுக்க புகைப்படங்கள் எடுக்காமல் இருக்க முடியாது அல்லவா. அது மட்டுமில்லாமல் அரபிக்கடலில் சூரியன் மறைவதை டைம் லாப்ஸ் வீடியோ எல்லாம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இங்கிருந்து போகும்போதே மொபைல் போனுக்கான ட்ரைபாட் ஒன்றை வாங்கியிருந்தேன். அமெச்சூர் பொருள்தான். ஆனாலும் தேவையை பூர்த்தி செய்தது. அமேசானில் கிடைக்கிறது. விலை நானூறு. கூடவே ஒரு சிறிய ப்ளூடூத் ரிமோட்டும் கிடைக்கிறது. போனை ஸ்டாண்டில் செட் செய்துவிட்டு வந்து ரிமோட் பட்டனை அழுத்தினால் புகைப்படம் எடுக்கும். இந்த ட்ரிப் முழுக்க என்னை புகைப்படம் எடுத்துக் கொடுத்தவர் இவர்தான். எதிரில் நண்பர் இருந்து நம்மை புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் கூட நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இவரிடம் அப்படி எந்த தயக்கமும் இல்லை.

வர்கலா பயணத்தை வடக்கு, தெற்கு என்று பிரித்திருந்தேன் அல்லவா. முதலிரண்டு தினங்கள் வடக்கு. விடுதியில் போய் இறங்கி குளித்து முடித்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிய இடம் ஆழியிறக்கம் கடற்கரை. விடுதியின் பின்புறம் தான் கடற்கரை. கிட்டத்தட்ட பிரைவேட் கடற்கரை மாதிரி தான். விடுதியிலிருந்து செங்குத்தாக இறங்கும் படிக்கட்டுகள் வழியாக கடற்கரையை அடைந்துவிடலாம். ஆனால் சாலை வழியாக முக்கால் கி.மீ. நான் சாலை வழியைத் தேர்வு செய்தேன். சரிவான பாதையில் ப்ரேக் இல்லாத என் சைக்கிள் தறிகெட்டு ஓட, ஒரு கட்டத்தில் முதல் நாளே சில்லறை வேண்டாம் என்று இறங்கி தள்ளிக் கொண்டே போய்விட்டேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 1
குன்றின் இறக்கத்தில் கடற்கரை அமைந்திருப்பதால் ஆழியிறக்கம் என்கிற பெயர் அமைந்திருக்கக்கூடும். ஆஃப் பீட் கடற்கரை. அக்கம் பக்கம் ஒரு கடை, ஒரு வீடு எதுவும் கிடையாது. நான் சென்றபோது நான் ஒருவன் மட்டும் கடற்கரையில் மொட்டை வெயிலில் நின்றுக் கொண்டிருந்தேன். டைம் லாப்ஸ் எடுத்துப் பார்க்கும் ஆர்வத்தில் மொபைல் ஸ்டாண்டை செட் செய்தேன். அதற்குள் சில உள்ளூர் சிறுவர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். பருந்துகள் வேறு மிகத் தாழ்வாக பறந்துக் கொண்டிருந்தன. சூழல் எனக்கு ஒரு மாதிரி பதற்றமூட்டுவதாக அமைந்திருந்ததால் அதிக நேரம் அக்கடற்கரையில் செலவிட இயலாமல் கிளம்பினேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 2
அடுத்தது, அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் கடற்கரை. இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும், அஸ்தியை கரைக்கும் பழக்கம் இங்கிருக்கிறது என்று நினைக்கிறேன். கடற்கரையில் பத்தடிக்கு ஒரு பார்ப்பனர் குடை, போர்டு வைத்து கடை போட்டிருக்கிறார்கள். இந்த ப்ராஸஸுக்கு தேவையான துண்டு, வேட்டி, பூஜை சாமான்கள் போன்றவற்றின் விற்பனை ஒரு பக்கம் பரபரவென நடந்துக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் இவற்றையெல்லாம் விநோதமாகப் பார்த்துக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் கடக்கிறார்கள். எனக்கு இதிலெல்லாம் மனம் ஒட்டவில்லை. நான் வர்கலா சென்று இறங்கியதிலிருந்து அந்த நிமிடம் வரை ஒரு மிடறு மது கூட அருந்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 1
பாபநாசம் கடற்கரையை ஒட்டிய சாலையில் வரிசையாக உணவகங்கள் இருந்தன. ஒவ்வொரு உணவகத்தின் வாசலிலும் ஒரு ஸ்டாண்ட் அமைத்து அதில் மெனு புத்தகத்தை வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கிறேன். ஒன்றில் கூட மதுவின் விலைப்பட்டியல் இல்லை. ஒரு உணவகத்தில் கூட மது கிடைக்கும் என்கிற அறிவிப்பு இல்லை. அதிலும் ஒரு உணவகத்தின் மெனுவில் காழ்ப்புணர்வை தூண்டும் வகையில் “ஹாட் ட்ரிங்க்ஸ்” என்று காஃபி, டீ, பூஸ்ட், ராகிமால்ட் போன்றவற்றை பட்டியலிட்டிருந்தார்கள். எனக்கு படபடப்பாக ஆகிவிட்டது. 
 
பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 2
ஒரு கடைக்குள் நுழைந்து காண்டம் கேள் என்றால் சத்தமாகக் கேட்பேன். ஆனால் பியர் இருக்கிறதா என்று, அதுவும் வேற்றூரில், வேற்று மொழி ஆட்களிடம் கேட்க சங்கடமாக இருந்தது. யோசித்தபடி பாபநாசம் கடற்கரை மணலில் நடந்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு கீற்றுப் பந்தல் அமைத்து ஆபத்துதவிக்காக இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி மாதிரியே இருந்தார். அவரைக் கண்டதும் ஒரு அணுக்கம். அவருக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கும் என்று உள்ளுணர்வு சொன்னதால், அண்ணா, இங்க எங்கே பியர் கிடைக்குமா என்று தமிழிலேயே கேட்டேன். அதற்கு அந்த வி.சே. அண்ணா நான் கடந்து வந்த உணவகங்களைக் காட்டி “அங்க இருக்குற எல்லா கடைலயும் கெடைக்கும்டா” என்று அச்சு அசலாக வி.சே. மாடுலேஷனிலேயே சொன்னார். 
 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 November 2020

வர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: தொடக்கம்

வர்கலா பயணத்தில் உண்ண, உறங்க, உற்சாக பானம் அருந்த என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சமயம். ஏற்கனவே வர்கலா சென்று வந்த சில நண்பர்களிடம் தகவல்கள் கேட்டிருந்தேன். அதில் ஒரு அண்ணன் செளத் வேணாம் நார்த் போ, கீழே இருக்காதே மேலே போயிடு என்று சில சங்கேத குறிப்புகள் கொடுத்தார். எனக்குப் புரியவில்லை. நான் கீழே மேலே பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை. மகிழ்ச்சிதான் முக்கியம். பின்னர், வர்கலாவின் புவியியலை ஆராயும்போது தான் அண்ணன் சொன்னது புரிய வந்தது.

கோவாவைப் போலவே வர்கலாவையும் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கலாம். அதே போல வடக்கு ஆரவாரமானது, தெற்கு அமைதியானது. இரண்டுக்கும் மத்தியில் வர்கலா ஹெலிபேட். வர்கலாவைப் பற்றி கூறும்போது க்ளிஃப் (cliff) என்று குறிப்பிடுகிறார்கள். Cliff என்றால் செங்குத்தாக இருக்கக்கூடிய சிறிய குன்று (குறிப்பாக கடற்கரைக்கு அருகில்) என்று பொருள். மேலே குன்று, கீழே கடல். அண்ணன் சொன்னது இதுதான் !

நான் எனது நான்கு நாள் பயணத்தை இரண்டாக வகுத்துக் கொண்டேன். முதலிரு நாட்கள் தெற்கு, அடுத்த இரு நாட்கள் வடக்கு. தெற்கில் நான் சல்லடை போட்டு தேடிச் சலித்து முன்பதிவு செய்த விடுதியின் பெயர் ஆதாமிண்ட ஸ்வர்க்கம் (Adam’s Paradise). எனக்காகவே பிரத்யேகமாக தயார் செய்தது போலிருந்தது அவ்விடுதி !
 
விடுதி கட்டிடம்
ஹெலிபேடில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில், கிட்டத்தட்ட வர்கலாவின் தென்மூலையில், ஒரு அமைதியான தெருவில் அமைந்திருக்கிறது விடுதி. தனிப்பயணி என்பதால் ஒருவர் மட்டும் தங்கும் சிறிய அறையை பதிவு செய்திருந்தேன். வாடகை நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய். 
 
நீச்சல் குளம்
குன்றின் உச்சியில் விடுதி, முதல் மாடியில் அறை, கீழே நீச்சல் குளம், அதையொட்டி சிறிய லான், அங்கிருந்து கீழே பார்த்தால் பிரம்மாண்டமான அரபிக்கடல், விடுதியிலிருந்து கடற்கரைக்கு இறங்க இரும்பால் செய்யப்பட்ட படிக்கட்டுக்கள். நல்ல வாரநாட்களாக பார்த்து பயணம் செய்ததால் இதையெல்லாம் அனுபவிக்க விடுதியில் என்னைத் தவிர வேறு விருந்தினர்கள் யாருமில்லை !

லானிலிருந்து கடல் !
அறையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் ஒரு கனவு அறை இருக்குமல்லவா. என்னுடைய கனவு அறை என்பது ஒருவர் மட்டும் படுக்கும் சிறிய கட்டில், ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு அலமாரி, சுத்தமான குளியலறை, கழிப்பறை. அது அத்தனையும் கச்சிதமாக அமைந்திருந்தது அந்த அறையில். தொலைக்காட்சி மட்டும் இருந்திருந்தால் பரிபூரணம் ! 

அறையில் மேஜை நாற்காலி
இந்த கோவிட், கீவிட் எல்லாம் வந்தபிறகு, தீவிரமாக WFH செய்துக் கொண்டிருந்த சமயத்தில் வர்கலாவில் நான் தங்கிய அந்த அறையை நினைத்துக் கொள்வேன். நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய் வாடகை. மொத்தமாக நீண்ட நாட்களுக்கு வாடகைக்குப் பிடிப்பதென்றால் இன்னும் குறைவான தொகைக்குக் கூட கிடைக்கும். மேஜை, நாற்காலி, நல்ல காற்று, கடற்கரை, கேரள உணவு. BEVCO சரக்கு, அப்படியே வைக்கம் முகம்மது பஷீரைப் படித்துக்கொண்டு, வாரம் ஒருநாள் ஃபஹத் ஃபாஸில் படமோ, பார்வதி படமோ பார்த்துக்கொண்டு மீதமிருக்கும் காலத்தை நிம்மதியாகக் கழித்திருக்கலாம் என்று தோன்றும்.

அந்த விடுதியில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் ஏதோ அந்தப்புரத்தில் தங்கியிருந்தது போல ஒரு அணுக்கம். கட்டோடு குழலாட ஆட என்று ரிலாக்ஸ்டாக நீச்சல் குளத்தில் மிதப்பது, லானில் அமர்ந்து அரபிக்கடலை ரசிப்பது, இரவில் மதுவுடன் லானில் அமர்ந்து கடலில் சின்னச் சின்ன படகுகளில் தெரியும் வெளிச்சப் புள்ளிகளின் தொகுப்பைப் பார்ப்பது என்று ரம்மியமாகக் கடந்தன அந்நாட்கள்.

இரவு நேரத்து கடல்

குறைகள் என்று பார்த்தால் நீச்சல் குளத்தில் இலைகள் மிதக்கும். லக்ஸுரியை விரும்பும் ஆட்களுக்கு ஒத்து வராது. இரவு நேரத்தில் வெளியே பூச்சிகள் தொந்தரவு (அநேகமாக இது எல்லா விடுதிகளிலும் உண்டு). நான் ஒரே ஒரு கெஸ்ட் என்பதால் விடுதியில் உள்ள உணவகத்தில் சமைக்கவில்லை. நல்ல உணவகம் வேண்டுமென்றால் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள டவுனுக்கு செல்ல வேண்டும் அல்லது அதே அளவு தொலைவில் உள்ள வடக்கு வர்கலாவுக்கு செல்ல வேண்டும்.

முதல் நாள் மாலை. சுமார் ஆறரை மணி இருக்கும். சைக்கிளை எடுத்துக் கொண்டு வர்கலா டவுனுக்கு கிளம்பினேன். BEVCO சென்று மது வாங்க வேண்டும், மதுவுடன் சாப்பிட பழங்கள் மற்றும் இரவு உணவு வாங்க வேண்டும். நிதானமாக ஒவ்வொன்றையும் வாங்கி முடிப்பதற்குள் இருட்டிவிட்டது. ஒரு அரை கி.மீ. வரை டவுன் கடைகளும் வெளிச்சங்களும் உதவின. அதன் பிறகு வெறும் இருட்டும் காடும் தான். ஆளரவமற்ற குறுகிய சாலைகள். திடீர் திடீரென ஒளியை பாய்ச்சியபடி கடந்து செல்லும் வாகனங்கள். ஒரு மாதிரி ஹாண்டட் அனுபவமாகிவிட்டது.

அடுத்த நாள் அதே தவறை செய்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். விடுதியில் இருந்து சுமார் முக்கால் கி.மீ. தூரத்தில் ஒரு உணவகம் இருப்பதை பகலிலேயே குறித்து வைத்துக்கொண்டேன். பக்கத்தில் தானே என்று எட்டு மணி வரைக்கும் விடுதியில் இருந்து உ.பா. அருந்திவிட்டு சாவகாசமாகக் கிளம்பினேன். நடைதொலைவு என்பதால் சைக்கிள் எடுத்துச் செல்லவில்லை. ஊர் ஓய்ந்துவிட்டது. ஆள் நடமாட்டமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளில் மட்டும் வெளிச்சம் தெரிகிறது. யோசித்துப் பாருங்கள், இருள் சூழ்ந்த சாலை, தூரத்தில் ஒரே ஒரு வீடு, அதிலிருந்து வரும் வெளிச்சம், அங்கிருந்து கேட்கும் தொலைக்காட்சி சத்தம் ஒரு மனிதனை எவ்வளவு தொந்தரவு செய்யும். இது போதாதென்று தெரு நாய்கள் வேறு. இத்தனையையும் கடந்து உணவகத்திற்கு சென்றால் அதன் வாயிலுக்கும் உணவகம் இருக்கும் பகுதிக்குமே முன்னூறு மீட்டர் இருள் பாதை. ஆக, அன்றைய இரவும் திகிலாகவே கழிந்தது.

இவையெல்லாம் தனிப்பயணத்தின் சாதகங்களா பாதகங்களா என்றால் இரண்டும் தான் ! தனியாகச் சென்றதால் தான் இவ்வளவு த்ரில் கிடைத்தது. ஆனால் நண்பர்களுடன் சென்றிருந்தால் இது அப்படியே வேறு மாதிரி உற்சாகமான நிகழ்வாக மாறியிருக்கும்.

முக்கால் கி.மீ. நடந்து சென்றடைந்த அந்த உணவகத்தில் மூன்று மேல்நாட்டு சீமாட்டிகள் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கிட்டாரோ ஏதோ இசைத்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் பஃபலோ சோல்ஜர் பாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஏனோ தேனிசைத் தென்றல் தேவாவும், கெளசல்யாவும் நினைவுக்கு வந்து போனார்கள்.

அடுத்த பதிவு: வடக்கு கடற்கரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 November 2020

வர்கலா – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

ஒரு திரைப்படமோ, ஒரு புத்தகமோ மனதுக்கு பிடித்துவிட்டால் அதன் இயக்குநரின் / எழுத்தாளரின் மற்ற படைப்புகளை தேடுவோமில்லையா. அது போல கோவா சென்றுவந்த பிறகு இந்தியாவில் கோவாவைப் போல என்னென்ன ஐட்டங்கள் இருக்கின்றன என்று தேடத் துவங்கினேன். அத்தேடல்கள் அனைத்தும் இரண்டு ஊர்களை மீண்டும் மீண்டும் பரிந்துரைத்துக் கொண்டே இருந்தன. 


ஆம், கோவாவிற்கு இரண்டு தங்கைகள். ஒன்று, கோகர்னா. மற்றொன்று வர்கலா ! 

இரண்டில் ஒன்று என்றெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்ளவில்லை. இரண்டும் வேண்டும். ஆனால் எது முதலில் என்ற கேள்வி வந்தபோது இரண்டு அங்குலம் முன்னால் வந்து நின்றது வர்கலா. ஏனெனில் அது கேரளா ! மென்சோகம் இழையோடும் சாலைகள், இருமருங்கே நீண்டு வளர்ந்த தென்னைகள், கட்டஞ்சாயா, கள்ளு, பீஃப் கறி இவையெல்லாம் தாண்டி கேரளா என்பது ஒரு உணர்வு !

வர்கலா செழிப்பான கடற்கரை ஸ்தலம் மட்டுமில்லாமல் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமும் கூட. அரபிக்கடலின் முத்து, தென்னகத்து காசி போன்றவை வர்கலா பெற்ற பெயர்கள். பாண்டிய மன்னனின் பாவம் போக பிரம்மன் கோவில் கட்டச் சொன்ன இடம், நாரதர் வீசிய வல்கலம் (மரப்பட்டை) வந்து விழுந்த இடம் என்று புராணமும் அதன் பங்குக்கு வர்கலா பற்றி கதைகள் சொல்கின்றன. இங்குள்ள அஞ்செங்கோ (அஞ்சு தேங்காய் என்பதின் வழுவல்) கோட்டை பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயே அரசால் நிர்மாணிக்கப்பட்டது. அரசுக்கு பாதுகாப்பு அரணாகவும், அதே சமயம் வணிகப் தொடர்புக்கு பயன்படுபவதாகவும் இருந்திருக்கிறது இந்தக் கோட்டை. ஆன்மிகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு வர்கலாவைச் சேர்ந்தவர். இவர் அமைத்த சிவகிரி மடம் இன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.
 
எனது இந்தப் பயணம் ஒரு சோலோ பயணம். Solo travel / traveller என்கிற சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களாக தனிப்பயணம் / தனிப்பயணி என்பவற்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் கவிஞர் மனுஷி. இனி நாமும் அவற்றையே பயன்படுத்துவோம். சில தவிர்க்க முடியாத / எழுத்தில் கொண்டு வர முடியாத காரணங்களுக்காக எனது பயணத்துணைகள் என்னோடு தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அதனால் நான் தனிப்பயணியானேன் ! 

உண்மையில் தனிப்பயணங்களில் சம அளவில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. சாதகங்களில் பிரதானமானது - சர்வாதிகாரம். அந்த இடத்திற்கு போனால் எனக்கு சளி பிடித்துவிடும், அவ்வளவு தூரம் உட்கார்ந்து வர முடியாது – எனக்கு பைல்ஸ், அலுவலகத்தில் லீவ் தர மாட்டார்கள் (பொய்), அந்த தேதியில் தான் வீட்டில் தலுவை போடுகிறார்கள் போன்ற விவாதங்களுக்கு வேலையில்லை. உங்கள் தேதி, உங்கள் தேர்வு. நீங்கள் திருமணமாகாதவர் என்றால் உங்கள் மேனேஜர் ஒருவரை மட்டும் சமாளித்தால் போதும், திருமணமானவர்களுக்கு இரண்டு. அவ்வளவுதான் ! 

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், சுயமறிதல் போன்ற சில சாதகங்களும் தனிப்பயணங்களில் உண்டு. இவை தவிர, தனிப் பயணங்களில் புது நண்பர்கள் கிடைப்பார்கள் என்பது பொது நம்பிக்கை. Introvert என்பதால் அதுகுறித்த கள நிலவரத்தை என்னால் கண்டறிய முடியவில்லை. 

பாதகங்களில் பிரதானம் ஒரு நல்ல புகைப்படம் எடுத்துத் தரக்கூட யாரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான். நம்முடன் நண்பர்கள் இருக்கும்போது கிடைக்கக்கூடிய ஒரு கூடுதல் தைரியம் தனிப்பயணங்களில் சாத்தியமில்லை. மாலை வேளைகளில் ஒருவிதமான வெறுமையுணர்வு தோன்றும்.

இன்னும் case specific சாதக பாதகங்களை இத்தொடரின் இடையிடையே தெரிந்துகொள்வீர்கள். 

திருவனந்தபுரம் மெயில்

தரை மற்றும் வான் மார்க்கங்களில் மிக எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது வர்கலா. சென்னை மத்திய ரயில் நிலையத்திலிருந்து வர்கலாவிற்கு தினசரி ரயில் செல்கிறது (திருவனந்தபுரம் மெயில் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்). எக்மோரிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வர்கலா ரயில் நிலையத்திலிருந்து சில கி.மீ. தூரத்தில் சுற்றுலா தளத்தின் மத்திய பகுதி. ஆட்டோவில் நூறு ரூபாய். ஒருவேளை வர்கலா ரயில் நிலையம் சாத்தியமில்லை என்றால் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ, திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஐம்பது கி.மீ. வான்வழி செல்வதென்றால் ஐம்பது கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம். அங்கிருந்து கேரள அரசு பேருந்துகள் வர்கலாவிற்கு இயக்கப்படுகின்றன. 
 
பழம்பொரி
என்னிடம் கைவசம் நாட்கள் தாராளமாக இருந்ததால், போக வர இரண்டுக்கும் திருவனந்தபுரம் மெயிலில் டிக்கட் எடுத்திருந்தேன். முதல்நாள் இரவு 7:45க்கு சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் சேலம், ஈரோடு, கோயமுத்தூர் வழியாக அதிகாலையில் கேரளா மாநில பாலக்காடு ரயில் நிலையத்தை கடக்கிறது. டீ, காபி, வடையுடன் பழம்பொரியும் விற்கப்படுவது கேரள வருகையை உறுதிப்படுத்துகிறது. அதன்பிறகு ரயிலில் தினசரி பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை 10.50க்கு ரயில் வர்கலாவை சென்றடைகிறது. 

வர்கலா ரயில் நிலையம்
ஆர்ப்பாட்டமில்லாத சிறிய ரயில் நிலையம். அருகிலேயே நான் நீ என்று போட்டி போடாத ஆட்டோ ஸ்டாண்ட். வர்கலா ஹெலிபேட் என்று கேட்டு வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தேன். ரயில் நிலையத்திலிருந்து சரியாக மூன்றரை கி.மீ. வர்கலா ஹெலிபேட் என்பது ஒரு மலை முகட்டில் அமைந்துள்ள பிரம்மாண்டமான சமதளம். ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்குவதற்கான அமைப்பு. அதன் மத்தியில் என்னை இறக்கிவிட்டுச் சென்றார் ஆட்டோ ஓட்டுநர்.   

இருவர் படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜ் மோகன்லாலை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்வார். மெல்ல மொட்டை மாடியின் விளிம்பிற்கு செல்லும் மோகன்லால் கீழே அவருக்காக ஆரவாரம் செய்துக் கொண்டிருக்கும் மக்களைக் காண்பார். அதுபோல நான் அந்த ஹெலிபேடின் மத்திய பகுதியிலிருந்து மலை முகட்டிற்கு மெதுவாக நடந்து செல்கிறேன். 

கீழே வர்கலா கடற்கரையின் பிரம்மாண்டமான எழில்தோற்றம் தோன்றுகிறது. “இருவர்” மோகன்லால் அடைந்ததை விட பரவசமான அனுபவம் அது !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 May 2020

நள்ளிரவின் நடனங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஊரடங்கிற்கு முன் ஒரு மாலைப்பொழுதில், ஒரு பேருந்து பயணத்தில், கிண்டிலில் நள்ளிரவின் நடனங்கள் புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். முதல் கதையே கோவா செல்லும் திருமணமான நான்கு பேச்சுலர்களைப் பற்றியது. இரண்டாவது கதை ஊட்டியில் தொடங்கியது. ஒரு நிமிஷம். இது பயணத்தில் படிப்பதற்கு உகந்த புத்தகம் போலிருக்கிறதே என்று எடுத்து கமுக்கமாக உள்ளே வைத்துக் கொண்டேன்.

அத்துடன் வர்கலாவில் ஒரு சிம்பாவையும், ஒரு பீராவையும் உள்ளே சாத்தியிருந்த ஒரு நள்ளிரவில் நடனங்களைத் தொடங்கினேன்.

மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். எழுத்தாளருடைய சுருக்கமான, அடக்கமான முன்னுரை. வீம்புக்காக ஒரு குழந்தை எழுதிய கதைகள் என்று தனது முன்னுரையில் எழுதியிருக்கிறார் அராத்து. மேலும் முன்னுரையில் புது முயற்சி, தனித்துவம் போன்ற சில குறிச்சொற்களையும் கவனித்தேன்.

வழக்கமாக அராத்துவின் புத்தகங்களில் சாருவின் முன்னுரை இருக்குமில்லையா ! அது இந்த புத்தகத்தில் இல்லை. அதனால் மனதில் எந்த சஞ்சலமும் இல்லாமல் புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க முடிந்தது. 

பெரும்பான்மை கதைகள் நவீன உலகின் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. அப்பர்-மிடில் கிளாஸ் வாழ்க்கை முறையைப் பேசுகிறது. அவ்வளவு கதைகளும் டிராவல் சம்பந்தப்பட்டவை இல்லை என்றாலும் கோவா, ஊட்டி, புவனேஷ்வர், லங்காவி, புக்கட் என்று பயணிக்கின்றன. பயணத்தில் படிப்பதற்கு உகந்த புத்தகம் என்ற கருத்தில் மாற்றமில்லை.

பொதுவாக தமிழ் புனைவுகளில் உவமைகளுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் வைத்திருப்பார்கள். அவற்றை மொத்தமாக காலி செய்து, முற்றிலும் வேறொரு கோணத்தில் உள்ளது அராத்தின் உவமைகள். சில உதாரணங்கள் - தெலுங்கு சினிமாவின் பாடல் காட்சியில் முதல் வரிசையில் ஆடுபவளைப் போல் இருந்த ஒருத்தி – மாபெரும் லேடீஸ் ஹாஸ்டலில் அழகிய இளம்பெண்கள் அனைவரும் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டதைப் போல கூடுதல் பச்சையுடன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன செடிகள்.

அதே போல சின்னச் சின்னச் கிண்டல்கள். வேலைக்காரி, வேலைக்காரி என்று தொடர்ந்து சொல்ல வேண்டாம். பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் ஆசாமிகள் படையெடுப்புக்கு ஆளாக வேண்டி வரும் – ஃபில்டர் காஃபி குடிக்க வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனாலும் கிரீன் டீ. குடித்துக் கொண்டும் புகைத்துக் கொண்டும் இருப்பதால் மற்ற அனைத்திலும் ஹெல்த்தியாக இருந்தாக வேண்டி இருக்கிறது – இலக்கியம் என்றால் டி.ராஜேந்தர் பொண்ணுதானே என்று கேட்கும் அளவுக்கு சமர்த்தனாக தன்னை வளர்த்தெடுத்து இருந்தான். ஒரு சிறுகதைக்குள் குட்டிக்கதையாக வரும் நவ் ஹீன் முழுக்கவே பட்டாசு.

இந்திய நடுத்தர வர்க்க மனோபாவத்தைப் பற்றிய ஒரு மெல்லிய நையாண்டி அராத்துவின் கதைகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. ஒரு இடத்தில் கோவாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் பற்றிய வர்ணனை வருகிறது. எண்பது சதவிகிதம் வெளிநாட்டினரால் நிரம்பி வழியும் ரெஸ்டாரண்ட் அது. ஒவ்வொருவரும் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுதிக்கொண்டே வருகிறார். சில ரஷ்யர்கள் கஞ்சாவோ ஏதோ புகைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கிடார் வாசித்துக்கொண்டிருந்தான். இரண்டு பெண்கள் மினி ஸ்கர்ட்டில் மெலிதாக இடுப்பை ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர் என்று நீளும் அந்த வர்ணனை கடைசியாக ஒரு இந்தியன் ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டு இருந்தான் என்று முடிகிறது.

அதே சிறுகதையில் இன்னொரு இடத்தில் வகதூர் பீச்சில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொப்பைக் கூட்டம் தனியே வாந்தி எடுத்தபடி கிடந்தது. வாந்திக்கு நடுவில் ஒரு தொப்பை கர்ம சிரத்தையாக செந்தமிழ் தேன்மொழியாள் என சீரியஸாக பாடியபடியே ஆடிக்கொண்டிருந்தது என்று வருகிறது.

அராத்துவின் ஒரு சில கதைகளில் ஒரு பிரபல எழுத்தாளரின் சாயல் தெரிவதாக யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென எழுத்தாளரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. ம்ஹும். சார்லஸ் புக்கொவ்ஸ்கி, ழார் பத்தாயெல்லாம் இல்லை. அவர்களை நான் படித்தது இல்லை என்பதால் அராத்து, அவர்களின் சாயலில் எழுதுகிறாரா அல்லது அவர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டாரா என்பது குறித்து என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. நான் கவனித்தது வாமு கோமுவின் சாயல். குறிப்பாக வெடுக் ராஜா, அபாயம் ஆகிய இரண்டு கதைகளும் வாமு கோமு ஸ்டைல். வெடுக் ராஜா கதையை படிக்கும்போது களவாணி விமல் நினைவுக்கு வந்தார்.

இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை எழுத்தாளரின் சொந்த மற்றும் நண்பர்களுடைய அனுபவங்களில் இருந்து எழுதப்பட்டவை என்று உணர முடிகிறது. உறைவிடப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது பற்றிய கதை ஒரு உதாரணம். இன்னொரு கதையில் ஹீரோ ஒரு பீச் ரெசார்ட் பார்ட்டிக்கு போகிறான். அந்தப் பார்ட்டியைப் பற்றி குறிப்பிடுகையில் – கண்டிப்பாக மறக்காமல் அவசியம் தங்களுக்கான மதுவை தாங்களே எடுத்து வாருங்கள் என காலில் விழாத குறையாக அந்தக் குழுவின் அட்மின் பல போஸ்ட்டுகள் மூலம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் என்று எழுதியிருக்கிறார். 

ஆங்காங்கே சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார். அதில் முக்கியமான பரிசோதனை புக்கட் என்கிற சிறுகதை. மல்டிபிள் பர்ஸன் நரேடிவ் முறையில் பயணிக்கிறது இக்கதை. ஒரு தாய்லாந்து லோக்கல் ஆள், ஒரு விலைமகள், ஒரு இந்திய இளைஞன். ஒருவருக்கொருவர் அதிகம் அறிமுகமில்லை. அக்கதையில் ஒரு கட்டம் இப்படிப் போகிறது –

அவளை அழைத்து இந்திய நண்பனிடம் கை காட்டினேன். அவள் இயல்பாக அவனுடன் ஒட்டிக்கொண்டாள். லவ் யூ டார்லிங்க்என்றாள். 

லவ் யூ டார்லிங்க்என்று சொல்லி அவனை இயல்பாக்க முயற்சித்தேன். அவன் இதய துடிப்பை உணர முடிந்தது. அளவுக்கு அதிகமாக இருந்தது. 

லவ் யூ டார்லிங்க்என்று அவள் சொன்னது எனக்கு இதமாக இருந்தது. ஒரு ஒட்டுதல் வந்தது. இவள் அழகாகவும் ஸ்டைலாகவும் இருந்தாள்.

ஒரு சின்ன சம்பவம். அதனை மூவரும் அவரவர் பார்வையில் சொல்கிறார்கள். இக்கதை வாசகர்களுக்கு ஒரு சிறிய சவாலையும், வாசிப்பின்பத்தையும் வழங்குகிறது.

முன்னுரையில் எழுதியிருப்பது போலவே புது முயற்சியும், தனித்துவமும் அராத்துவின் கதைகளில் நிரம்பியிருக்கின்றன. அதே சமயம் ஒருவித அலட்சியமும் தென்படுகிறது. அராத்து தன்னுடைய கதைகளை ரொம்ப கேஷுவலாகவும், சில சமயம் வாய்ஸ் டைப்பிங் மூலம் எழுதுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளன் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது தான். அதே சமயம் எழுத்தாளனுக்கு டிலிஜென்ஸ் மிக மிக அவசியம். எழுத்தாளர் கூடுதலாகக் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இதே புத்தகத்தை இன்னும் மேம்பட்ட வடிவில் தந்திருக்கலாம்.

கடைசியாகத்தான் கவனித்தேன். சாருவின் சுருக்கமான ஒரு முன்னுரை பின்னட்டையில் இருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 April 2020

கன்னித்தீவு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கன்னித்தீவு – மனதிற்கு நெருக்கமான நாவல்.

2004ம் ஆண்டு. சுனாமி வந்து சில நாட்களுக்குப் பிறகு “தி ஹிந்து” நாளிதழின் முகப்புப் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. சுனாமிக்குப் பிறகு அந்தமானை சுற்றியுள்ள தீவுகளை மேற்பார்வையிட, இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து சென்றிருக்கிறார்கள். அப்போது வடக்கு சென்டினல் தீவை கடக்கையில் அங்கிருந்த ஒரு பழங்குடி தனது ஈட்டி போன்ற ஆயுதத்துடன் ஹெலிகாப்டரை குறிபார்த்து ஓடிவரும் புகைப்படம் அது. தனிப்பட்ட முறையில் எனக்கு வியப்பையும் நிறைய அதிர்ச்சியையும் கொடுத்த புகைப்படம் அது.

© இந்திய கடற்படை
இதுகுறித்து ப்ளாகில் ஒன்றிரண்டு முறை எழுதவும் செய்திருக்கிறேன். அதன்பிறகு, குறிப்பாக 2012ல் நான் அந்தமான் சென்றுவந்த பிறகு வடக்கு சென்டினல் மக்களைப் பற்றி நிறைய தகவல்களைத் தேடித் தேடி படித்திருக்கிறேன். சென்டினிலியர்களைப் பற்றி படிப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. இதுதான், இப்படித்தான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக இல்லாமல் கொஞ்சம் ரகசியமாக உள்ள விஷயங்களுக்கே உரித்தான கவர்ச்சி. ராமாவரம் சம்பவத்தையோ, ஆட்டோ சங்கர் வரலாறில் உள்ள நடிகைகளின் பெயர்களையோ, ஜெயலலிதாவின் மரண ரகசியத்தையோ தெரிந்துகொள்ள விழைவதற்கு இணையான கிக் அது. ஒருவேளை நீங்கள் இதனை நம்பாமல் கூட போகலாம். புனைவு எழுதும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால் அதில் வடக்கு சென்டினிலியர்களை எங்கேனும் புகுத்த வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். சி.எஸ்.கே முந்திக்கொண்டார்.

நாவலின் அட்டைப்படமே ஒரு பரிபூரண உணர்வைத் தருகிறது. ஒரு முன்னூறு பக்க நாவலின் உயிரைக் குழைத்து அப்படியொரு ஓவியத்தை வரைந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். 

நாவலின் கதை இதுதான் என்று ஓரளவிற்கு யூகித்து வைத்திருந்தேன். In fact, யாராக இருந்தாலும் யூகித்துவிடலாம். வெளியீட்டு விழாவிற்கு வேறு சென்று வந்திருந்தேன். இருந்தாலும் முதல் பர்வம் ஒரு இனிய வியப்பு. அது எங்கள் முதல் கர்ப்ப காலத்தை நினைவூட்டியது. Intimate விஷயங்களை பொதுவில் எழுத வேண்டாம் என்று யோசிக்கிறேன். சில பகுதிகள் அச்சு அசலாக எங்களுடன் பொருந்திப் போனது. அநேகமாக எல்லா மகிழ்ச்சியான தம்பதிகளுக்கும் கன்னித்தீவு சில நினைவுகளை மீட்டெடுக்கும்.

எனது மனைவி ஒரு budding reader. அவர் தனது முதல் வாசிப்பை  தன்னிச்சையாக தேர்ந்தெடுத்தார் (பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்). அதனை படித்து முடித்ததும் அத்தோடு விடாமல் தொடர்ந்து புத்தகம் வாசிக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். பார்வதி பற்ற வைத்த நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னிடம் வந்தது போலிருந்தது. அவர் வாசிப்பதற்கான இரண்டாவது நாவலாக கன்னித்தீவை நான்தான் தேர்ந்தெடுத்தேன். எனது தேர்வு நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும், திருப்திகரமாகவும் அமைந்தது.

நாவலில் உள்ள தர்க்கப்பிழைகளை வைத்து நிறைய எழுதிவிட்டார்கள். நிறைமாத கர்ப்பிணியை தேர்தல் பணிக்கு அனுப்ப மாட்டார்கள், பார்வதி எப்படி நாள் முழுக்க கடல்நீரில் மிதக்கிறாள், எப்படி சாகசங்கள் செய்கிறாள் என. திரைக்கதையில் மூன்று அங்க அமைப்பு என்பார்கள். அதன் முதல் பகுதி செட் அப். ஒரு குறிப்பிட்ட சூழலை நோக்கி கதையை நகர்த்திச் செல்வது செட் அப் பகுதியின் வேலை. டைட்டானிக் கப்பலின் மாலுமிகள் ஜாக்கும் ரோஸும் ரொமான்ஸ் செய்வதை பராக்கு பார்க்காமல் ஒழுங்காக கப்பலை செலுத்தியிருந்தால் அது பனிப்பாறையில் மோதாமல் இருந்திருக்கும் இல்லையா ? ஆனால் அப்படி அவர்கள் சூதானமாக நடந்திருந்தால் டைட்டானிக் படம் சாத்தியமில்லை. பிரகாஷ் ராஜ் சுவலட்சுமியை அடைய விரும்பினால் தான் ஆசை. விஜய் ஜோதிகாவின் இடுப்பைப் பார்த்தால் தான் குஷி ! 

சி.எஸ்.கே.விடம் நான் வியந்து ரசிக்கும் விஷயம் பெரியப் பெரிய விஷயங்களை ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிடுவது. இந்நாவலின் இடையே இப்படியொரு வரி வருகிறது – கல்பனா-1 ஏவப்பட்ட அதே நாளில் பார்வதியின் அப்பா அவள் ஜாதகத்தைக் கையில் எடுத்தார். எவ்வளவு சுருக்கம் பாருங்கள். ஒரு பக்கம் நாடு விண்வெளிக்கு செயற்கைக்கோளை ஏவும் அளவிற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணியில் பங்காற்றிக்கொண்டிருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட கதாநாயகன். இன்னொரு பக்கம் அதே விண்வெளியில் உள்ள கோள்களின் மீது மூடநம்பிக்கை கொண்ட கதாநாயகியின் அப்பா. இதே மாதிரி நாவல் முழுக்க நிறைய சுவையான, சுருக்கமான வாக்கியங்கள். சில உதாரணங்கள் - காமத்தை விட மனிதனுக்கு உத்வேகமூட்டக்கூடிய ஒன்று இருக்குமானால் அது உயிராசை தான் - பெண்களும் காதலும் இல்லாவிடில், பூமி நிர்வாணமாகவே இருந்திருக்கும் - கொதித்துப் பேசும் கணவன் தலையணையில் அடங்குவது போல் - ஓர் ஆண் யோனியிலிருந்து ஜனித்த கணம் முதல் அவன் போராடுவதெல்லாம் மீண்டும் ஒரு யோனிக்குள் புகுவதற்குத்தான்.

அந்தமானின் புவியியல் அமைப்பு, போர்ட் ப்ளேர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அந்தமானின் பழங்குடியின மக்கள், இந்தியாவின் தென்முனை குமரி அல்ல, இந்திரா முனை, அடல் பிஹாரி வாஜ்பாய் அறிவித்த நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் என்று ஏராளமான தகவல்கள். நிறைய உழைத்திருக்கிறார் எழுத்தாளர். 2004 லோக்சபா தேர்தலில் இந்த வாக்குச்சாவடியில் இரண்டு ஓங்கே இன மக்கள் வந்து வாக்களித்திருந்தார்கள். ஒரு 75 வயதுக் கிழவரும், ஒரு 32 வயதுப் பெண்ணும் - என்று போகிறபோக்கில் எழுதிவிடவில்லை. அது ஐம்பது சதவிகித உண்மைச்செய்தி. கதைக்காகவும், அதன் புவியியலுக்காகவும் பாதித் தகவலை மாற்றியிருக்கிறார். பார்வதியின் கதாபாத்திரமே கூட கால்வாசி உண்மைதான். படிக்க. அதே சமயம் சென்டினிலியர்கள் என்றே நேரடியாக எழுதாமல் ஏன் லெமூரியர்கள் என்கிற புனைவு பழங்குடியினத்தை தேர்வு செய்தார் என்பது புரியவில்லை. எப்படியும் சென்டினிலியர்கள் அவதூறு வழக்கு போட மாட்டார்கள், எழுத்தாளர் அவர்களை மதம் மாற்றும் நோக்கில் அங்கே பயணிக்காத பட்சத்தில் உயிருக்கும் ஆபத்தில்லை. அப்புறம் ஏன் ? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் ஒரு விமர்சனத்தில் இந்த புத்தகத்தைப் படித்ததால் தெரிந்துகொண்ட தகவல்கள் என்று கீழே லெமூரியர்களை அந்தமான் பழங்குடியினர் என்று பட்டியலிட்டுள்ளார்கள்.

பொதுவாக படைப்பாளிகள் தங்களுடைய படைப்புகளில் தங்களையே ஒரு கதாபாத்திரமாக சிருஷ்டித்துக் கொள்வதுண்டு. பாய்ஸ் ஐவரில் யார் ஷங்கர் என்ற கேள்வியைக் அவரிடம் கேட்டபோது ஐவரிடமும் நான் கொஞ்சம் இருக்கிறேன் என்றார். மிஷ்கின் படத்தில் எல்லோரும் மிஷ்கின் என்று ஒரு வரி இந்நாவலிலேயே வருகிறது. தமிழ் நாவல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கணேஷ் – வசந்த் துவங்கி பிரபாகரன் வரை எழுத்தாளரின் சாயலை பரவலாகப் பார்க்கலாம். ஆனால் இந்நாவலோ ஒரு பெண்ணைப் பற்றியது. எழுத்தாளர் ஆண். இருப்பினும் எழுத்தாளர் விடுவாரில்லை. பார்வதி அவளது கணவனைப் பற்றி நினைப்பதாக, தன்னைப்பற்றியே நிறைய எழுதித் தீர்த்துவிட்டார். முருகன் இருந்திருந்தால் அப்படி செய்திருப்பான், முருகன் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பான், முருகன் அது, முருகன் இது, முருகன் ஒரு திருட்டுப்பயல், முருகன் ஒரு முரடன், முருகன் ஒரு பொறுக்கி இப்படி நீள்கிறது. ஒரு கட்டத்தில் எழுத்தாளரே மறந்துவிட்டால் கூட ச்சே முருகன் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பான்ல என்று நமக்கே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.

கன்னித்தீவு நாவலை படிப்பவர்கள் அதன் கடைசி அத்தியாயத்தை மட்டும் படிக்காமல் விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். அது மட்டும் எனக்கு பிடிக்காமல் போயிற்று. அல்லது புரியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கதையின் இறுதிப்பகுதி என்பதால் அதுகுறித்து இன்னும் விரிவாக எழுதுவதை தவிர்க்கிறேன். மனைவியிடம் என்ன கடைசியில் இப்படி முடிந்துவிட்டது என்றேன். அவருக்கும் அந்த முடிவு பிடிக்கவில்லை. சினிமாக்களில் எல்லாம் இறுதியாக ஒரு ட்விஸ்ட் அல்லது இரண்டாம் பாகத்திற்கென ஒரு நுனியை வைப்பார்கள் இல்லையா அது மாதிரி போலிருக்கிறது. பார்வதி பற்ற வைத்த தீ ! 

இதில் இன்னொரு கோணமும் உண்டு. தற்போது வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தோற்று மனிதர்களுக்கு எப்படி முதன்முதலில் தொற்றியது என்று இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. வவ்வால்கள் மற்றும் பாங்கோலின்கள் என்று சொல்லப்படும் எறும்புத்தின்னிகள் மூலம் அவை பரவியிருக்கலாம் என்கிறார்கள். லெமூரியர்களோ பாரபட்சமின்றி சகல விலங்குகளையும் வேட்டையாடி உண்பதாக சொல்லப்படுகிறது. ஆக, கன்னித்தீவின் கடைசி அத்தியாயத்திலிருந்தே ஒரு புதிய நாவலை துவங்குவதற்கான சாத்தியங்கள் பிரகாசமாக உள்ளன.

கன்னித்தீவு
சி.சரவண கார்த்திகேயன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 276
விலை: ரூ.280

தொடர்புடைய சுட்டி: அந்தமான் பழங்குடியினர்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment